Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"விடியலுக்கு காத்திருக்கிறேன்"


இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை  வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால்,  1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற  சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை!


சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆனால் இன்னும் விடியல் கிடைக்காமல், முன்னையதைவிட கேவலமாக இன்று இருக்கும் இந்த சூழ்நிலையில் தான், நானும் ஒரு தமிழனாக, இலங்கையின் பழம் குடிகளின் ஒருவனாக, தலை நிமிர்ந்து, என் சொந்த மண்ணில் வாழ, விடியலுக்காக காத்திருக்கிறேன்! 
பத்தாம் வகுப்பில் நான் படித்த, எமிலி டிக்கின்ஸன் [Emily Dickinson] என்ற கவிஞரின் பாடல் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.


"I many times thought Peace had come
When Peace was far away —
As Wrecked Men — deem they sight the Land —
At Centre of the Sea —
And struggle slacker — but to prove
As hopelessly as I —
How many the fictitious Shores —
Before the Harbour be"


"தூரத்தில் விடியல் [சமாதானம்] இருக்கும் பொழுது
பலதடவை விடியல் வருமென்று எண்ணினேன்!
கடலின் மையத்தில், குழம்பிய மனிதனாக  
நிலத்தை, கரையை பார்ப்பதாக நினைத்தேன்! 
ஆனால், அவை எல்லாம் பொய் 
நம்பிக்கை அற்றது, ஏமாற்று வித்தை! 
உண்மையான விடியலுக்கு, [துறைமுகத்திற்கு] முன், 
எத்தனை கற்பனைக்கரைகள் இன்னும் காண்பேன்!"


ஆமாம், தூரத்தில் விடியல் தெரிவது போல, வானில் 4 ஜூன் 1987 இல் பூமாலை என்ற ஒரு செயல் திட்டத்தின் கீழ், இந்தியா விமானப் படை, யாழ்ப்பாணத்தின் மேல் பறந்து, அங்கு உணவுக்காக வாடிக்கொண்டு இருந்த மக்களுக்கு, என்னையும் உட்பட, 25 தொன் [tons] எடையளவு உணவு பொதிகளை போட்டது. அதை தொடர்ந்து, இலங்கை - இந்தியா ஒப்பந்தம்  29 ஜூலை 1987 கைச்சாத்திடப்பட்டது, ஒரு உண்மையான கரையை காட்டுவது போல அன்று எனக்கு இருந்தது. என்றாலும் எமிலி டிக்கின்ஸனின் பாடலை நான் மறக்கவில்லை.       


உச்சத்தில் கிட்ட தட்ட 80,000 ஆட்பலம் கொண்ட  இந்திய அமைதி காக்கும் படை 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அப்பொழுது நான் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்துகொண்டு இருந்த காலம். எனவே நானும் என் குடும்பமும், அமைதி பிறந்து விட்டது என்ற நம்பிக்கையில், 270 கிலோ மீட்டர் பயணமாக யாழ் புறப்பட்டோம். இருண்ட குகைக்குள் வெளிச்சம் வந்ததுபோல, ஒரு விடியல் அண்மையில் தெரிவது போன்ற மகிழ்வுடன், நாம் பேருந்தில்  சென்றுகொண்டு இருந்தோம். நாம் 221 கிலோ மீட்டர் கடந்து, ஆனையிறவு பாலம் வரும் வரை அமைதியாக இருந்த எம் பயணம், திடீரென ஒரு குழப்பத்தில் முடிந்தது. அங்கு முகாமிட்டு காவலுக்கு நின்ற அமைதி படை, எம் பேருந்தை சூழ்ந்து சோதனை செய்ததுடன், ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகுது என்றும், உடனடியாக கெதியாக யாழ் சென்று, வீடு செல்லும் படியும் எச்சரித்து அனுப்பினர். 

    
எமக்கு ஒரே திகைப்பும் பெரும் ஆச்சரியமும். என்ன நடந்தது? எமக்கு ஒன்றுமே புரியவில்லை?. நாம் எதிர்பார்த்தது அமைதியும், சம உரிமையுடன் ஒரு மனிதனாக தலை நிமிர்ந்து தமிழனாக, தமிழ் பண்பாட்டுடன் வாழ்வது மட்டுமே? ஆனால், மீண்டும் ஓட்டமும், பதுங்கு குழியும், தமிழன் என்று தலை குனிந்து ஒழிந்து திரியவல்ல? என்றாலும், இப்ப யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் வந்துவிட்டதால், இனி திரும்பவும் முடியாது. ஆகவே, நடப்பது நடக்கட்டும் என்று சில நம்பிக்கைகளுடன் மிகுதி பயணத்தை தொடர்ந்தோம்


நாம் யாழ் நகரை அண்மிக்கும் முன்பே சண்டை ஆரம்பித்துவிட்டது. எம்முடன் எம் குழந்தைகளும் பயணிப்பதால், நாம் கலங்கி, எமிலி டிக்கின்ஸன் [As Wrecked Men] கூறியது போல சிதைத்த மனிதனாக இருந்தாலும், எம்முடைய முன்னைய அனுபவங்கள் எமக்கு தைரியம் தந்தன. ஒருவாறு அவசரம் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக, குழந்தை ஒன்றை தூக்கிக் கொண்டும் சென்றோம். அப்பொழுது யாழ் கோட்டையில் இருந்து ஷெல் அடிக்க தொடங்கிவிட்டார்கள். அதில் சில எமது தலைக்கு  மேலாக போவதையும், வெடித்து சிதறும் சத்தமும் ஒரு பீதியை உண்டாக்கினாலும், ஒருவாறு சமாளித்துக்கொண்டு வீடு சேர்ந்தோம். என்றாலும் குழந்தைகளின் அழுகையும் பயமும் எமக்கு மேலும் கவலை அளித்தது. அன்று இரவு ஏறக்குறைய முழுநேரமும் நாம் பதுங்கு குழிக்குள் தான் இருக்கவேண்டி இருந்தது. பயண களைப்போ , நித்திரையோ எம்மிடம் இருந்து தூர விலகிவிட்டது. அது மட்டும் அல்ல, எந்த விடியலை எதிர்பார்த்தமோ, அது இப்ப பின்னோக்கி நகருவதைத் தான் நாம் உணர்ந்தோம். ஆமாம்  இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்து கொண்டு இருந்தது! பிரித்தானியாவிடம் இருந்து கிடைக்காதது, இலங்கை அரசிடம் இருந்ததும் கிடைக்காதது, இப்ப இந்தியா அமைதி படையிடம் இருந்தும் கிடைக்காமல் விலகுவது நன்கு தெரிந்தது. இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்ததுதான் எனோ ? 


"மனிதனே உனக்கேன் அலட்சியம்; விதையுங்கள் மனதில் நல்லெண்ணம் என்னும் விதையை; தூவுங்கள் இரக்கம் என்னும் கருணையை; பிறக்கட்டும் மனிதம் மீது கண்ணியம்; பொழியட்டும் அன்பென்னும் பெருமழை; வளரட்டும் மனித நேயம், அங்கே விடியட்டும் விடியல்;  பிறக்கட்டும் உதயம்; வடியட்டும் சோகங்கள்; முடியட்டும் குரோதங்கள்; தொடரட்டும் உறவுகள்; தொழுவட்டும் விடியலை எம் கரங்களும்;  மரம் செடி கொடிகள் போன்று மணக்கட்டும் மண்ணில் சமதருமம்!"


என் மனம், பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டும் தன் பாட்டில் இப்படி முழங்கிக் கொண்டு இருந்தது. அந்த நேரம் அது ஒரு ஆறுதலாகவும் இருந்தது உண்மையே! இந்தியா இலங்கை பேச்சு வார்த்தையின் பொழுது, கைக்கு எட்டுவது போல இருந்த விடியல், விடியாமலே, மேலும்  கடும் இருட்டாக மாறி, இன்றுவரை எம்மை, எம் இருப்பை குழப்பத்தில்  மூழ்கடித்துக்கொண்டு தான் இருக்கிறது. என்றாலும் என் நம்பிக்கை குறையவில்லை!      


ஏறத்தாழ முப்பத்தி ஐந்து அல்லது முப்பத்தி நாலு ஆண்டுகள் கழித்து, மார்ச்சு மாதம் 31 திகதி, 2022 ஆண்டு சிங்கள இளைஞர்கள் சனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு தமது வரலாறு காணாத போராட்டத்தை தொடங்கினர். அவர்கள், இன, மத வேறுபாட்டை  தாண்டி, தமிழர்களின் புரையோடி இருக்கும் சில பிரச்சனைகளையும் உள்வாங்கி, கடந்த 74 ஆண்டுகளாக, இனத்துவேசத்தை வளர்த்து, தமது இருப்பையும், அதே நேரத்தில் சரியான பொருளாதார திட்டம் இல்லாமல், நாட்டை குட்டிச் சுவராக்கி, தம் வளத்தை பெருக்கியவர்களை இனம் காட்டி துரத்தும் தமது போராட்டத்தை அரசுக்கு எதிராக மூன்றாவது மாதமாகவும் தொடர்கிறார்கள். இது உண்மையில் நல்ல ஒரு அடையாளமே!. 


என்றாலும் இன்று கூட  குருந்தூர் மலை பிரச்சனை தமிழர்களை வேதனை படுத்திக்கொண்டு இருக்கிறது. மக்கள் சாப்பாட்டுக்கும், எரிபொருளுக்கும் வரிசையில் நின்று, இதுவரை 11 பேர் இறந்த நிலையிலும், இனவாதம் பேசும் சில புத்த பிக்குகள் மற்றும் கும்பல்கள் ராணுவ உதவியுடன் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை நிறுவவும், அதை சாட்டாக வைத்து, காணிகள் பறிக்கவும், குடியேறவும் வரிசையில் நிற்பது வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது? இதை காலிமுக இளைஞர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்ற நோக்கில், விடியலை நோக்கி அவர்கள் செல்லும் பயணத்தில், இன்று நானும் சேர்ந்து எமது விடியலுக்கு காத்திருக்கிறேன்!


பரிபாடல் 19 கூறியது போல, பசும்பிடி மலர் இளந் தளிர்களுடனும், ஆம்பல் மலர் விரிந்த வாயுடனும், காந்தள் மலர் கைவிரல் போலவும், எருவை மலர் மணக்கும் மடலுடனும், வேங்கை மலர் எரியும் தீ போலவும், தோன்றி மலர் உருவ அழகுடனும், நறவம் மலர் நீண்ட காம்புகளுடனும், கோங்கம் மலர் பருவம் தோன்றா நிலையிலும், இலவம் மலர் பகைவர் போல் சிவந்த நிலையிலும், தனித்தனியேயும், கோத்துக்கொண்டும், பின்னிக்கொண்டும் மலை எங்கிலும் மீன் பூத்த வானம் போல், இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பூத்துக் கிடந்தன என விரைவில் வரலாறு கூறட்டும்! 


"பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,        
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,
எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,
பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;
நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க    
மணந்தவை, போல, வரை மலை எல்லாம்
நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;
விடியல் வியல் வானம் போலப் பொலியும்
நெடியாய்! நின் குன்றின்மிசை."
[பரிபாடல்19]


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.