Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எஸ்.சி.ஓ உச்சி மாநாடு, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத்
  • பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்
  • 16 அக்டோபர் 2024, 09:43 GMT
    புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய சாலைகள் மற்றும் கட்டடங்கள் ஜொலித்து வருகின்றன.

பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மரங்களை வெட்டி சீரமைத்தல், சாலை விளக்குகள் அமைத்தல், ஓவியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்தல் போன்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மிகவும் பாதுகாப்பான பகுதியான நாடாளுமன்றத்திற்கு முன் பூக்களால் செய்யப்பட்ட மயில் போன்ற அழகிய மலர் அலங்காரங்கள் காணப்படுகின்றன.

இந்த அலங்காரங்கள் எந்த ஒரு தேசிய விழாவிற்காகவும் அல்ல, இது ஒரு சர்வதேச கூட்டதிற்கு தயாராவதற்காக நடந்து வரும் ஏற்பாடுகள். இந்த வாரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23வது உச்சி மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமை தாங்குகிறார்.

 

இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் இரான் துணை அதிபர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

பார்வையாளராக மங்கோலியாவின் பிரதமரும், சிறப்பு விருந்தினராக துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்ரும் கலந்துகொள்கின்றனர்.

இந்த 2 நாள் மாநாட்டிற்காக இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 17 ஆம் தேதி வரை அந்நகரின் பாதுகாப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தின் இரட்டை நகரம் என்று அழைக்கப்படும் ராவல்பிண்டிக்கும் மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரின் வணிக மையங்களும் நீதிமன்றங்களும் இந்த நேரத்தில் மூடப்பட்டு இருக்கும்.

 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன?

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளால் 2001 ஆம் ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது. தற்போது கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் இரான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.

மக்கள் தொகை அடிப்படையில் இரண்டு பெரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் 40% கொண்ட அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளது.

2005 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் இந்த அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்து பெற்றிருந்தது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முறையாக உறுப்பினராக இணைந்தது.

இந்த அமைப்பு ரஷ்யா, சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யூரேசிய(ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள்) பாதுகாப்பு அமைப்பாக தொடங்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டில், இந்த அமைப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானைத் தொடர்ந்து பார்வையாளர் நாடாக இருந்த ஆப்கானிஸ்தானும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு, இரானுக்கும் இந்த அமைப்பின் முறையான உறுப்பினருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுகின்றது.

அதன் தொடக்கத்தில் இருந்து தற்போது நடந்த விரிவாக்கம் வரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் அமைப்பான நேட்டோவிற்கு இணையான அமைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.

ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உண்மையில் நேட்டோவைப் போல வலுப்பெற்றுவிட்டதா?

 
எஸ்.சி.ஓ உச்சி மாநாடு, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த கூட்டமைப்பின் 23வது உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.

எஸ்சிஓ அமைப்பு நேட்டோவுக்கு இணையாக வலுப்பெறுமா?

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளை உறுப்பினர்களாக கொண்டிருப்பதால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒரு பெரிய அமைப்பாக இருக்கின்றது. மேலும் இது உலகின் 40 சதவீத பரப்பளவைக் கொண்டுள்ளது.

அதன் அமைப்பு நேட்டோவிலிருந்து வேறுபட்டது என்றும் அதன் போர்த்திறன் சற்று குறைவாக இருக்கிறது என்றும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ஒரு நன்மைதான் என்றும் ஆய்வாளர் அமீர் ஜியா கூறுகிறார்.

"ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கம் மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்புடன் போட்டியிடுவது அல்ல. ஆனால் அது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைத்து சமநிலையை உருவாக்கும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்ற வாய்ப்பை வழங்க வேண்டும்", என்றும் அவர் தெரிவித்தார்.

உலகில் தற்போது பொருளாதார அல்லது பாதுகாப்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள பல அமைப்புகள் உள்ளன என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இதில் ஜி-7, ஜி-20, குவாட், நேட்டோ மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பெரிய அமைப்புகளும் அடங்கும்.

ஜி-7 மற்றும் ஜி-20 ஆகியன அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் அரசியல் ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருளாதார கூட்டமைப்புகள் ஆகும்.

ஆனால், நேட்டோ என்பது 32 நாடுகளின் ராணுவக் கூட்டணி ஆகும். அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே கூட்டு பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு இயங்குகின்றது. இங்கு ஒரு உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல் அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படுகிறது.

இரான் விவகாரங்கள் தொடர்பான சர்வதேச விவகார நிபுணரான சஹ்ரா ஜைதி போன்ற விமர்சகர்கள், இந்த கூட்டமைப்பை மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு மட்டுமே உதவும் ஒன்றாகவும், மேற்கத்திய செல்வாக்கைத் தக்கவைப்பதற்கான ஆயுதமாகவும் கருதுகின்றனர்.

மறுபுறம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கம் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது போன்றவற்றை சார்ந்தே உள்ளன.

ஆனால் குறைவான ராணுவத்திறன் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உள்நாட்டு பிரச்னைகள் ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதன் நோக்கத்தில் தோல்வியடைந்துள்ளதா?

 
எஸ்.சி.ஓ உச்சி மாநாடு, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் இந்த படம் ஜூன் 2019 இல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதா?

இந்த அமைப்பு அதன் நோக்கங்களையும் இலக்குகளையும் அடைந்ததா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் எழலாம். ஆனால், இதுபோன்ற அமைப்புகள் அல்லது கூட்டணிகள் இருப்பது ஒரு சாதகமான விஷயம் என்று ஆய்வாளர் அமீர் ஜியா கருதுகிறார்.

"ஆரம்பத்தில் பலவீனமாகத் தோன்றிய இந்த அமைப்பு, தற்போது வலுவடைந்து வருகிறது", என்று இரானில் இருந்து பிபிசியிடம் பேசிய ஆய்வாளர் சஹ்ரா ஜைதி கூறுகிறார்.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து உருவான நாடுகள் பல விஷயங்களில் பலவீனமாக இருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

"அவர்களுக்கு ஆதரவு தேவைப்பட்டது. இந்த அமைப்பு உருவான போது, அந்த நாடுகள் இந்த அமைப்பிற்கு ஒத்துழைப்பை வழங்கினால் தாங்கள் சிறந்து விளங்க முடியும் என்றும் இது அந்நாட்டின் மீதான வெளிநாட்டு செல்வாக்கையும் அகற்றும் என்பதை உணர்ந்தனர்", என்றும் அவர் கூறினார்.

"மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது கிழக்கு நாடுகளின் இந்தக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் பலவீனமாக தோன்றினாலும் இப்போது அதன் பலம் ஓரளவு அதிகரித்திருக்கிறது. இரான் உறுப்பினரானதால் இந்த அமைப்பு வலுப்பெற்றுள்ளது".

இது குறித்து பிபிசியிடம் பேசிய மூத்த இந்திய பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பல பிரச்னைகளை விவாதிப்பதற்கான முக்கிய தளமாக மாறியுள்ளது என்றார்.

"இது யூரேசியாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு அதன் பல நோக்கங்களை அடைய முடியவில்லை, இதற்கு ஒரே காரணம் குறிக்கோள்களும் இலக்குகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருப்பதுதான்", என்று அவர் கூறுகிறார்.

 
எஸ்.சி.ஓ உச்சி மாநாடு, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள். இந்த மாநாட்டிற்கு முன்பு நகரை பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“இது இருதரப்பு மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு மன்றமாக இல்லாவிட்டாலும், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பொதுவான பிரச்னைகள் குறித்து விவாதிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாடு உறுப்பு நாடுகள் கூடுவதற்கான ஒரு வாய்ப்பே தவிர வேறொன்றுமில்லை என்பது எனது கருத்து".

"உச்சிமாநாட்டில் வழக்கமான நிகழ்ச்சிகளைத் தவிர பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், வருகை தரும் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார்", என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மட்டுமே பாகிஸ்தானிற்கு பயணம் செய்வதாகவும், அந்நாட்டுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் உருவாகும் கூட்டமைப்புகள் மிக மெதுவாகவே செயல்படும் என்கிறார் அமீர் ஜியா.

“தற்போது உலகில் பல கூட்டமைப்புகள் உள்ளன, ஒரு நாடு ஒரே கூட்டமைப்பில் மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் பல கூட்டமைப்புகளிலும், சில நேரங்களில் எதிரான கருத்தியல்கள் கொண்ட கூட்டமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கலாம். உதாரணமாக, இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ளது மற்றும் அதில் உள்ள நாடுகளுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பான குவாட்டிலும் உறுப்பினராக உள்ளது." என்று அவர் கூறுகிறார்.

உறுப்பு நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அத்தகைய முரண்பாடுகளை ஒதுக்கி, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பிற்கு சாத்தியமான விஷயங்களை உறுப்பு நாடுகள் கருத்தில் கொள்வதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

 
எஸ்.சி.ஓ உச்சி மாநாடு, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஒத்துழைப்பிற்கான புதிய பாதை

சர்வதேச அளவில் பல நாடுகள் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள ரஷ்யா மற்றும் இரான் போன்ற நாடுகள் சர்வதேச அளவில் நேரடியாகவோ அல்லது வேறு வகையிலோ மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது மற்றும் இது ஒரு பெரிய மேடையாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த உச்சிமாநாட்டின் போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுமா? இந்த மாநாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக இரான் ஏதேனும் கடுமையான முன்மொழிவு செய்யுமா? ரஷ்யா - யுக்ரேன் போரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ரஷ்யாவிற்கு முழு ஆதரவை தெரிவிக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

மிகப்பெரிய அல்லது வலுவான கருத்துகளை கூறுவது என்பது கடினம் என்று சுஹாசினி ஹைதர் கூறுகிறார்.

“பாகிஸ்தானில் கூடும் இந்த மன்றம், இந்த கூட்டமைப்பின் முக்கிய மாநாடாக இருக்காது. எனவே, இங்கு மிகப்பெரிய அல்லது வலுவான கருத்துகள் கூறப்படும் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் கூறினார்.

 

ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடான இரான், இந்த மாநாட்டில் அந்த பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவான கருத்தை தெரிவிக்கும் என்று நம்பப்படுகின்றது என்று ஆய்வாளர் சஹ்ரா ஜைதி கூறினார்.

கடந்த ஆண்டுதான் இரான் இந்த கூட்டமைப்பின் முறையான உறுப்பினரானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த மாநாட்டில் இரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கலந்துகொள்ளும் வேளையில் இங்கு இரான் செல்வாக்கு செலுத்துவதை நிரூபிக்க முடியும் என்றும் சஹ்ரா ஜைதி கூறினார்.

இஸ்ரேலில் நடக்கும் போர் மற்றும் இரானில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து வலுவான கருத்துகள் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும் என்று இரான் நம்பி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

"இந்த கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் வெளிநாட்டு சக்திகளின் பிடியில் இருந்து கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்ளும் நிலை இருக்கக் கூடாது என்று விரும்புகின்றன. பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் வலுவாக இருப்பது முக்கியம். இந்த கூட்டமைப்பு அதன் உறுப்பு நாடுகளை கைவிட்டுவிடாது என்பதும் முக்கியம். இரான் இதனை நம்புகின்றது" என்கிறார் அவர்.

"மத்திய கிழக்கு பகுதியில் மோசமடைந்து வரும் நிலைமை மற்றும் இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமீபத்திய பதற்றம் காரணமாக, இரான் இந்த மாநாட்டை விரும்புகின்றது. ஆனால் இந்த சந்திப்பில் இருந்து வலுவான கருத்துகள் தெரிவிப்பது என்பது கடினம் என்பதை ஆய்வாளர் அமீர் ஜியா புரிந்துகொண்டுள்ளார்", என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உலகில் ஒருபுறம் போர் நடந்து வரும் சூழலில், இந்த மாநாட்டினால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த முடியுமா?

 
எஸ்.சி.ஓ உச்சி மாநாடு, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ஜூலை 2024 இல் அஸ்தானாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்படுமா?

இந்த மாநாட்டின் முக்கிய சந்திப்பிற்கு பிறகு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் முக்கியமான இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுததுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறுபுறம், இருநாட்டு விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனத்தில் இருதரப்பு விவகாரங்கள் குறித்த பேச்சுகள் குறித்து எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்றாலும், உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"சர்வதேச மாநாடுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பும் ஒரு காலத்தில் நடந்தது. அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் விமர்சிப்பதற்கான களமாக இந்த மாநாடு மாறிவிட்டதாக தெரிகின்றது", என்று சுஹாசினி ஹைதர் கூறினார்.

அமீர் ஜியா கூறுகையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு காரணமாக, இந்த சந்திப்பின் போது லேசான பதற்றம் இருக்கலாம், என்றார்.

“பயங்கரவாதம் என்று வரும்போது, இந்தியா பாகிஸ்தானை குற்றம்சாட்டும், பாகிஸ்தான் பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டும். தற்போது இந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் எந்த ஒத்துழைப்பும் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அறையில் இருக்கும் போது , அங்கு லேசான பதற்றம் இருக்கும்", என்று அவர் கூறினார்.

 

“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு விருப்பம் இருக்கலாம், ஆனால் காஷ்மீர் விஷயத்தில், 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுபோன்ற எந்த ஒப்பந்தமும் பாகிஸ்தானுக்கு இழப்பாக மாறிவிடும் நிலையும் உள்ளது. அதன் விளைவு பாகிஸ்தானின் அரசியலுக்கும் ராணுவத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தும்", என்று அமீர் ஜியா கூறுகிறார்.

இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கும் முன், பாகிஸ்தான் தனது பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

சர்வதேச விவகாரங்கள் ஒரு டி20 போட்டி போல அல்ல, இந்த கூட்டமைப்புகள் மெதுவாகவே செயல்படுவதில் அமீர் ஜியா போன்ற ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் இரான் ஆய்வாளர் சஹ்ரா ஜைதி நடைமுறைக்கு தேவையுள்ள நடவடிக்கைகள் எடுப்பதே அவசியம் என்று கருதுகிறார்.

"உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கவில்லை அல்லது ஒத்துழைக்காவிட்டால், மற்ற அமைப்புகளைப் போலவே இதுவும் பெயருக்கு மட்டுமே உள்ள ஒரு அமைப்பாக இருக்கும்", என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.