Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“உனக்கு காம இச்சை வந்தால் உன் தாயிடமோ, சகோதரிிடமோ, மகளிடமோ தீர்த்துக்கொள் என்று சொன்ன பெரியார், பெண் விடுதலையைப் பேசியவரா?’’, ’’தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார்.’’

- இப்படியெல்லாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை கடுமையாக விமர்சித்து பேசி இருப்பது, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. மாநிலம் முழுக்க போராட்டங்கள், காவல்நிலையங்களில் புகார்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு என பரபரப்புக் கிளம்பியுள்ளது.

`பெரியார் சொல்லியதாக சீமான் சொல்வது வெறு அவதூறு மட்டுமே' என்று, திராவிடர் கழகம் மற்றும் பெரியாரிய கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

``பெரியார் அப்படிச் சொல்லியிருந்தால், அதற்கான ஆதாரத்தை சீமான் கொடுக்க வேண்டும்’’ என்று அவர்கள் கேட்க,

``வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கி வைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடைமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன்” என்று பதில் கொடுத்துள்ளார் சீமான்.

பரப்பப்படும் செய்தி... உண்மையா, பொய்யா?

பொதுவாகவே பெரியார் `அதைச் சொன்னார்... இதைச் சொன்னார்' என்று பல்லாண்டுகளாகவே பற்பல விஷயங்களும் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே அவையெல்லாம் பெரியார் சொன்னவை அல்ல என்கிற மறுப்புகளும் சுழலத்தான் செய்கின்றன. அப்படி, காமம் குறித்து சொன்னதாகப் பரப்பப்படும் மேலே குறிப்பிட்டுள்ள செய்தி, 2017-ம் ஆண்டிலிருந்தே சில குழுக்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதைக் குறிப்பிடும் ஒரு செய்தித் தாள் துண்டுச்சீட்டு, `விடுதலை ஏடு:11.5.1953’ என்று தேதியிட்டுள்ளது. இப்போது சீமானும் அதை மேற்கோள் காட்டி பேசியிருக்கும் நிலையில், குறிப்பிட்ட தேதியிட்ட விடுதலை நாளேட்டை நாம் ஆராய்ந்தோம்.

அன்றைய தினம் வெளியான, நான்கு பக்கங்களைக் கொண்ட விடுதலை நாளேட்டில், தென் சென்னை திராவிட கழக மாவட்ட மாநாடு பற்றிய செய்திதான் முதல் பக்க தலைப்புச் செய்தி. அதை தொடர்ந்து இன்னும் பல செய்திகள் இடம்பெற்றிருக்கும் அந்த நாளேட்டில், சுற்றலில் இருக்கும் செய்தி எதுவும் இடம்பெறவில்லை. ஆக, இந்தப் படம் உண்மை அல்ல.

 
``பெண்களுக்கும் தமிழுக்கும் எதிரி பெரியார்!'' - சீமான் பரப்புவது பொய்ச் செய்தியா...
 
 

அது பெரியார் கருத்தல்ல... சனாதன கருத்து!

இதுகுறித்து தந்தைப் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் கேட்டபோது, ``பெரியார் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி, ஒரு புராணக்கதை. பிரம்மா, தன் மகள் சரஸ்வதி யையே மணந்தவர். இந்த விஷயத்தைப் பற்றிய புராணக் கதையில்தான் `தாயென்ன, மகளென்ன...' எனப் பேசப்பட்டிருக்கிறது. இதைத்தான் பெரியார் மேற்கோள் காட்டி னாரே தவிர, இது அவருடைய கருத்தல்ல.

11.5.53 தேதியிட்ட `விடுதலை' நாளிதழில் பெரியார் இப்படி கூறியுள்ளதாக, இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல காலமாகக் கூறி வருகின்றனர். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அந்தக் குறிப்பிட்ட தேதியில் வெளியான விடுதலை நாளிதழை வெளி யிட்டு, அத்தனையும் பொய் என்று நிரூபித்துவிட்டோம். இப்போது, தங்கள் சீடன் சீமானை வைத்து அதே வேலையை செய்கிறது இந்துத்துவா’’ என்றார் கொளத்தூர் மணி காட்டமாக.

 

`தமிழ், காட்டுமிராண்டி மொழி...' - இதனால்தான் சொன்னார் பெரியார்!

`தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று குறிப்பிட்ட பெரியார் எப்படித் தமிழ் இனத்தின் தலைவராக முடியும்?’ என்று சீமான் கேட்டுள்ளது குறித்து, திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர், `விடுதலை’ ராஜேந்திரனிடம் கேட்டபோது,

``பெரியார் தமிழ் மொழியை அறிவியல் மொழியாக்க விரும்பினார். அதன் பொருட்டுதான் ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்கிற கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையின் முடிவில் பின் குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார். `நான் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கு தமிழறிஞர்கள் என் மீது கோபப்படுவார்கள். அதற்காகத்தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். கோபப்படுகிறவர்கள் பகுத்தறிவு மற்றும் சமூக சிந்தனை கொண்ட இலக்கியங்களை எழுதுவார்கள் என்றால், அதை நானே அச்சுக்கோத்து பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். பகுத்தறிவு சிந்தனை கொண்ட எழுத்துகள் நம் மொழியில் பிறக்க வேண்டும் என்கிற நோக்கோடுதான் பெரியார் அப்படி எழுதினாரே தவிர, தமிழை சிறுமைப்படுத்தும் நோக்கோடு அவர் எழுதவில்லை.

உலகப்பொதுமறையான திருக்குறளுக்கு மாநாடு நடத்தியவர் பெரியார்தான். திருக்குறளை அனைவரும் சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்ளும்படியாக சிறிய பதிப்பை வெளியிட்டவரும் பெரியார்தான். அவர் தமிழ் எழுத்துத் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். சம்ஸ்கிருதத்தை நிராகரித்து தமிழ் மொழியில் உறுதியேற்றுக் கொண்டு நிகழ்த்தப்படும் சுயமரியாதைத் திருமணத்தை நடைமுறைப்படுத்தினார். அப்படிப்பட்டவரை தமிழுக்கு எதிரானவர் எனச் சொல்வது ஏற்புடையதல்ல'' என்று சொன்ன ராஜேந்திரன்,

``பெரியாரின் நூல்களை யார் வேண்டு மானாலும் பதிப்பிக்கலாம் என்று நீதிமன்றத்தின் மூலமாக உத்தரவு பெற்றுள்ளோம். அதைத் தொடர்ந்து பலரும் பதிப்பித்து வருகின்றனர். இணையதளங்களிலும் அவருடைய நூல்கள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, நாட்டுடமை ஆக்குங்கள்... ஆதாரம் தருகிறேன் என் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்றும் விளக்கினார்.

 
``பெண்களுக்கும் தமிழுக்கும் எதிரி பெரியார்!'' - சீமான் பரப்புவது பொய்ச் செய்தியா...
 
 

பெரியார் முரண்களின் மூட்டை!

`சீமான் சொன்னது தவறான செய்தி என்பது விடுதலை நாளிதழ் ஆவணங்களை பரிசீலித்தபோது தெரிகிறதே... பெரியாரின் நூல்களை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்கிறபோது, நாட்டுடமை என்கிற கேள்விக்கே இடமில்லையே...' என்பது உள்ளிட்ட கேள்விகளை, சீமானின் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் கேட்டபோது,

``பெரியார் காமம் குறித்து அப்படித்தான் கூறினார் என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறோம். எங்கள் முன்னோர்கள் அதைப் படித்து விட்டு செவி வழியில் சொன்னதைக் கொண்டுதான் பேசுகிறோம். ஆதாரம் வேண்டுமென்றால் விடுதலை நாளிதழை அரசு உடைமையாக்கி பெரியார் வாழ்ந்த காலம் வரை வெளியான அனைத்து இதழ்களையும் வெளியிட வேண்டும். அப்படி செய்தால் எல்லா இதழ்களையும் அலசி ஆராயலாம். அப்படி ஆராய்ந்த பிறகு இல்லையென்றால், அதைப் பற்றிப் பேசலாம்.

தமிழ்ச் சமூகத்துக்குப் பங்காற்றியவர்களில் பெரியாரும் ஒருவர் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், `பெரியார் மட்டுமே எல்லாவற்றையும் செய்தார். இது பெரியார் மண்’ என்று சொல்லி மற்றவர்களது பங்களிப்பையும், போராட்டத்தையும், உழைப்பையும் மூடி மறைத்துவிட்டு பெரியாரை முழு முதல் முகமாக நிறுத்திய பிம்ப அரசியலைத்தான் எதிர்க்கிறோம்.

பெரியார் முரண்களின் மூட்டை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தே இயங்கியவர். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற் போல தனது கருத்தை மாற்றிக் கொண்டவர். அவரது இரட்டை நிலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக பல உதாரணங்களைச் சொல்ல முடியும். உலகப்பொதுமறை தந்த தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கிறது. பெரியாரை தமிழின் தந்தையாக்கி அதைச் சுருக்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம்'' என்கிறார் இடும்பாவனம் கார்த்திக்.

விஜய் வருகையால் மாறும் சீமானின் அரசியல் கணக்குகள்!

இந்த விஷயங்கள் குறித்துபேசும் தமிழக அரசியல் நோக்கர்கள் சிலர், ``பெரியார் மீதான எதிர்ப்பை பொதுவாக இந்துத்துவா அமைப்பினர்தான் முன்வைப்பார்கள். இப்போது, சாதிய இந்துக்களில் பலரும் அம்பேத்கரியர்களில் ஒரு சிலரும்கூட பெரியாரை மறுக்கின்றனர். இப்போது, தமிழ்நாட்டில் கருத்தியல் ரீதியிலான முரண்பாடுகள் பல வகைகளில் பெருகியிருக்கின்றன.

பிறப்பின் அடிப்படையில் பெரியார் ஒரு தமிழரல்ல என்பதாலேயே அவர் முன்னிறுத்துகிற திராவிடம் என்கிற கருத்தின் மீது ஏற்பில்லாதவர்கள், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அவரை எதிர்க்கின்றனர். தமிழக ஓட்டு அரசியல் சூழலில் இந்துத்துவ எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு என எல்லாவற்றையும் திராவிடக் கட்சிகள் பேசி வருகின்றன. இதற்கு எதிர்க்கோட்டில் பா.ஜ.க போன்ற இந்துத்துவக் கட்சிகள், மத அரசியலை தீவிரமாக முன்னெடுக்கின்றன. இப்படியான அரசியல் சூழலில் தனக்கான தனியொரு பாதையை கட்டமைக்க வேண்டுமென்றால், தமிழ்த் தேசியம் மட்டும்தான் தேவை என்பதை சீமான் அரசியலுக்கு வரும்போதே உணர்ந்து விட்டார்.

 

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சீமான் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்த வேளையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இளம்தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜய்யின் வருகை சீமான் தரப்பை சேதத்துக்குள்ளாக்குமோ என்கிற பேச்சுகள் எழுந்துள்ளன. இச்சூழலில்தான், பெரியார் எதிர்ப்பை சீமான் இன்னும் அழுத்தமாக முன் வைக்க வேண்டிய தேவை உண்டாகியுள்ளது. விஜய் கட்சியும், கொள்கை வழிகாட்டியாக பெரியாரை அறிவித்திருக்க, பெரியார் எதிர்ப்பை அக்கட்சியின் மீதும் திருப்புவது சீமானின் நோக்கமாக உள்ளது'' என்கின்றனர்.

``பெரியார், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?'' என்று கேட்டால், ``நிச்சயமாக இல்லை. அது கருத்தியல் ரீதியிலான முரணாக இல்லாமல், பெரிதளவு தனிப்பட்ட சீண்டலாகவே இருப்பதுதான் பிரச்னை. நியாயமான விமர்சனம் வையுங்கள், அதுகுறித்து உரையாடலாம். ஆனால், கீழ்த்தரமான அவதூறுகளைப் பரப்பக் கூடாது’' என்கின்றனர் திராவிட கழகத்தினர்.

இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னைப் பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறார் பெரியார்.

தத்துவங்களுக்கு ஏது மரணம்?!

 

Vikatan Plus - 19 January 2025 - ``பெண்களுக்கும் தமிழுக்கும் எதிரி பெரியார்!'' - சீமான் பரப்புவது பொய்ச் செய்தியா... - Vikatan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.