'இரான் ஆட்சியின் தலைவரை' கொன்றதாக கூறும் இஸ்ரேல் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அலி லரிஜானி 17 மார்ச் 2026, 10:28 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை இரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுகுறித்த புதிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரானின் துணை ராணுவப் படையான பசிஜ் பிரிவின் தளபதியை தனது விமானப்படை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பசிஜ் பிரிவின் தளபதி திங்கட்கிழமை அன்று டெலகிராமில் வெளியிட்ட பதிவில், பசிஜ் பிரிவின் தளபதி கொலாம்ரெசா சொலெய்மானியை இலக்கு வைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஆயுதக் குழுவை இவர் தலைமை தாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இரானிய ஊடகங்களில் எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. மூத்த ராணுவ அதிகாரி லரிஜானியிடமிருந்து விரைவில் செய்தி ஒன்று வரும் என இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தஸ்னிம் மற்றும் மெஹ்ர் என்கிற இரண்டு இரானிய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அலி லரிஜானி "இரானில் உள்ள பயங்கரவாத மற்றும் ஒடுக்குமுறை அரசின் தலைமையை தொடர்ந்து இலக்கு வைக்குமாறு இஸ்ரேலிய ராணுவத்திற்கு பிரதமரும் நானும் அறிவுறுத்தியுள்ளோம்'' என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். லரிஜானி மற்றும் சொலெய்மானி கொல்லப்பட்டதாக பரவும் செய்திக்கு இரான் தற்போது வரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இஸ்ரேல் மீது கூடுதல் ஏவுகணைகளை இரான் செலுத்தியுள்ளதாகக் கூறும் இஸ்ரேல் ராணுவம், அதன் பாதுகாப்பு அமைப்பு அவற்றை இடைமறித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே "ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை" நோக்கி இரானிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவிக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, கடந்த மாத இறுதியில் கொல்லப்பட்டார். ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, இரான் ஆட்சியின் தலைவராக அலி லரிஜானி செயல்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இஸ்ரேலும் அண்டை நாடுகளுக்கும் எதிரான மோதலை அவர் வழிநடத்தினார் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. யார் இந்த அலி லரிஜானி? இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செல்வாக்கு மிக்க செயலாளர்தான் அலி லரிஜானி 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் அதிபர் மசூத் பெசெஷ்கியனால் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும், அதி உயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயியின் கவுன்சில் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். மறைந்த அதி உயர் தலைவருக்கு ஆலோசகராகவும் இவர் இருந்தார் என இரானிய ஊடகங்களில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. மே 2008 முதல் மே 2020 வரை 12 ஆண்டுகள் இரானிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராகவும் இருந்துள்ளார். அவைத் தலைவராக ஆவதற்கு முன்பு 2005 முதல் 2007 வரை இரானின் முதன்மை அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக அவர் இருந்துள்ளார். இவரின் சகோதரர் சாதெக் லரிஜானி இஸ்லாமியக் குடியரசில் மற்றுமொரு செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். லரிஜானியின் 'செய்தியை' வெளியிட்ட இரானிய ஊடகங்கள் இரானிய செய்தி ஊடகங்கள் மற்றும் அலி லரிஜானியின் டெலகிராம் மற்றும் எக்ஸ் கணக்குகளில், அவர் கைப்பட எழுதியதாக கூறப்படும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அந்நாட்டின் அரசு ஊடகங்கள் அவை இன்று வெளியானது எனத் தெரிவிக்கின்றன. அந்தச் செய்தி இரான் இஸ்லாமியக் குடியரசின் கடற்படை வீரர்களை புகழ்கிறது. முன்னதாக இரான் கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா போர்க்கப்பலில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. "இரானியர்களுக்கு அரசை நீக்குவதற்கான வாய்ப்பு" - நெதன்யாகு இரானிய அரசை நீக்குவதற்கான வாய்ப்பை இரானிய மக்களுக்கு வழங்கும் நம்பிக்கையில், அதனை இஸ்ரேல் பலவீனப்படுத்தி வருவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இரானிய அரசின் முக்கிய நபரான அலி லரிஜானி கொல்லப்பட்டதாகக் கூறி அவர் வெளியிட்ட காணொளியில் இந்தச் செய்தியை தெரிவித்திருந்தார். "அது ஒரே நேரத்தில் நடக்காது, அது எளிதாகவும் நடக்காது. ஆனால் நாம் நிலைத்திருந்தால், அவர்களின் விதியை அவர்கள் தங்களின் சொந்த கரங்களில் எடுப்பதற்கான வாய்ப்பை நாம் வழங்குவோம்," என தனது உரையில் அவர் கூறியிருந்தார். முன்னதாக, லரிஜானி மற்றும் சொலெய்மானி இல்லாமல் "இரானியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்திருந்தார். இந்தச் செய்திகளை இரான் தற்போது வரை உறுதி செய்யவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgj2y41kq9o
By
ஏராளன் · 14 minutes ago 14 min