Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்'

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில், முல்லைத்தீவு ஒரு சிதைந்த நிலமாக, ஆனால் இன்னும் நம்பிக்கையின் கல்லறையாக இருந்தது. பசி குண்டுகளை விட சத்தமாக அலறியது. என்றாலும் சரியான உணவின்றி, ஆனால் இன்னும் நம்பிக்கையில் உயிர் வாழும் மக்கள் அங்கு நிறைந்து இருந்தனர். மருந்தின்றி துடிக்கும் குழந்தைகள், குண்டுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட நஞ்சு கலந்த காற்றினாலும் மக்களுக்கு பயம் கலந்து இருந்தது. வீடுகளும் நிலங்களும் எரிந்தன. குழந்தைகள் பால் இல்லாமல் அழுதனர். வயதான பெண்கள் மருந்து இல்லாமல் மயக்கமடைந்தனர். மௌனம் கூட பயமாகத் தோன்றியது. அங்கே விழுந்து கிடந்த பிணங்களை அகற்றவோ அல்லது யார் எவர் என்று அடையாளம் காணவோ அல்லது எத்தனை என்று எண்ணுவதற்கோ அங்கு ஒருவரையும் காண முடியவில்லை. இரதம் நீர்போல் ஓடிக்கொண்டு இருந்தது. பொதுமக்கள் பதுங்கு குழிகளில் ஒழிந்து, வேகவைத்த இலைகளையும் பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொண்டனர். அப்படியான அந்தச் சிதைந்த மண்ணில், ஒரு இளம் பெண் போராளி – மதி – படுகாயமடைந்து, ஒரு தற்காலிக மருத்துவமனைக்குள் தடுமாறி நுழைந்தாள். அவள் முகத்தில் சோர்வு தெரிந்தது, ஆனால் அவள் கண்கள் அமைதியான உறுதியைக் கொண்டிருந்தன.

அங்கு 28 வயதான டாக்டர் கஜன், எஞ்சிய மருந்துகளால் உயிர்களை காக்க முயன்று கொண்டு இருந்தார். அவர் சோர்வடைந்த மனதுடன் கைகளை பிசைந்து கொண்டு உட்கார்ந்து இருந்த பொழுது, எந்த வித சலனமும் இன்றி மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த மதியின் கோலத்தைக் கண்டு அவன் திகைத்து விட்டான். என்றாலும் அவள் கண்களும் அவன் கண்களும், அந்த சூழலிலும் சல்லாப்பித்துக் கொண்டன. மதியின் கண்ண்களில், அந்த வேதனையிலும் ஒரு அசைக்க முடியாத உறுதி நிலைத்து இருந்தது. கஜன் அதில் ஒரு மின்னலை உணர்ந்தார். ஆனால் அவன் தன கடமையை மறக்கவில்லை. உடனடியாக அவர் அவளுடைய காயங்களை மெதுவாக சுத்தம் செய்தார்.

“உன் பேர் என்ன?” என்று மெதுவாகக் கேட்டான்.

“மதி,” அவள் வேதனையிலும் கிசுகிசுத்தாள்.

“நீ தோட்டாக்களையும் நம்பிக்கையையும் சுமந்து சென்றாயா?”

அவள் லேசாகச் சிரித்தாள். “தோட்டாவை விட நம்பிக்கையை அதிகமாக நான் என்றும் சுமப்பேன்" தள்ளாடும் நிலையிலும் திமிராகப் பதிலளித்தாள்.

அவன் சிகிச்சை அளிக்கும் பொழுது, அவனது கண்கள் எனோ அவளையே ரசித்துக்கொண்டு இருந்தது. அவள் சிரித்தாள்: "மூச்சுக்கே இடமில்லாத போர்க்களத்தில் நிஜமான காதல் முளைக்குமா?". ஆனால் அவன் மெதுவாக அவள் காதில் குனிந்து சொன்னான், "மீள முடியாத இடத்தில்தான் பாசம் பிறக்கிறது."

முதலில், மெளனத்தில் வந்த பார்வைகள். பின்னர் ஒரு புன்னகை. பின் சில வார்த்தைகள். உடைந்த தங்குமிடத்தில், இரவுகள் குண்டுகளால் சூழப்பட்டன, விடியல்கள் விரக்தியுடன் வந்தன. ஆனாலும் காதல் மலர்ந்தது - மென்மையாகவும் ரகசியமாகவும். அவர்கள் கிசுகிசுப்பாகப் பேசினார்கள், திருடப்பட்ட புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.

ஒரு நாள் அந்த தற்காலிக மருத்துவமனையின் சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது. தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது அது ஒரு மூடர் கூட்டத்தின் இரத்த வெறி கொண்டாட்டம்.

அப்பொழுது மதி மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தபடி, “நாம் வேறொரு காலத்தில் பிறந்திருந்தால்...” என்று அவள் தொடங்கினாள்.

“நீ இன்னும் என் வாழ்க்கையில் நுழைவாய்,” என்று அவன் பதிலை முடித்தான்.

வெளியே, அரசாங்கப் படைகள் தங்கள் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தன. உணவு லாரிகள் தடுக்கப்பட்டன. பொதுமக்கள் கடத்தப்பட்டனர். பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். வாழ்க்கைக்கு பாதுகாப்பான ஒரு இடமும் காணவில்லை, ஏன் தாயின் கருப்பை கூட பாதுகாப்பாக இல்லாத காலம் அது! அவள் அவனை ஒரு முறை கிண்டல் செய்தாள்:

“நான் போர்முனைக்குத் திரும்பிய பிறகு, உன் அன்பான இந்த நோயாளியை நீ மிஸ் பண்ணுவாயா?”

"நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், உன்னுடன் இருக்க ஒரு டாக்டராக என்னிடம் உள்ள அனைத்தையும் நான் விட்டுவிடுவேன்,” என்று அவன் அதற்க்கு பதிலளித்தான்.

போரின் இருளில் அவர்களின் இதயங்கள் தொட்டன. மதிக்கு காயங்கள் மட்டுமல்ல, உள்ளத்தின் பயமும் இருந்தது. கஜன் அவற்றையெல்லாம் பொறுமையுடன் சிகிச்சையளித்தார். காயங்களை மட்டும் அல்லாது, உறவின் வெதுவெதுப்பையும் சேர்த்து அளித்தார்.

கட்டிலில் படுத்தபடி அங்கு சுற்றிலும் நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்தாள் அவள். அவளின் பதினாறு நாள் காதலுக்கு கிடைக்க போகும் பரிசை எண்ணி மட்டும் திக்குமுக்காடி போய் இருந்தாள்.

அவள் கண்களும் அவன் கண்களும், குண்டுகளின் சொற்ப நேர அமைதிகளுக்கிடையில், அந்த சொற்ப இடைவெளியில், சல்லாப்பித்து கொண்டிருந்தன. முகத்தில் வியர்வை துளிகள் வழிய இதழில் காதல் கசிந்து கொண்டிருந்தது. அவன் வலது கை அவள் கன்னங்களை வருடி கொண்டிருந்தது அவன் இடக்கையோ அவள் இடுப்பின் அளவினை அளந்து கொண்டிருந்தது. அவள் இரு கைகளும் அவன் பின்னந்தலையில் பின்னப்பட்டிருந்தது!

மக்கள் பட்டினியில் வாடினர். ஒரு தேயிலை சாயமும், ஒரு பசியும், ஒரு கண்ணீரும் மட்டும் இருந்தது. அரசுப் படைகள் அனுதாபம் காட்டவில்லை. உதவிகளைத் தடுத்தனர். பெண்கள் இழிவுகளுக்கு ஆளாகினர். இளைஞர்கள் காணாமல் போனார்கள்.

அந்த சூழலில் தான் அவள் இன்னும் மருத்துவ முகாமில் கொஞ்சம் பாதுகாப்பாக, முழுமையாக குணமடைவதற்காக இருந்தாள். அங்கே அவள் சிரிப்பும், கஜனின் இதயமும் நெருக்கமாக மாறியது. அவள் மேலும் அவனை ஈர்த்தாள். அது அவள் வசிகரமா அல்லது அவன் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி.

அவனும் அவளும், கொஞ்சம் போர் ஓய்ந்த நேரத்தில், ஒரு சாயங்காலம் குளத்தங்கரைக்கு குளிப்பதற்காக சென்றார்கள். அங்கே குளக்கரைக்கு பக்கத்தில் 'பங்களா'வென்று ஒரு காலத்தில் மரியாதையாக கூறியது, இப்போது அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பாதுகாப்பு" அல்லது "காவலாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த அந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. அவனும் அவளும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் மதி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று. "கஜன் ! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே?" என்று கேட்டாள். "அதை வெட்டி விறகாக்கி விட்டார்கள்?" என்றான் கஜன்.

அவனின் வகிடு எடுத்து [முடியை பிரித்து] வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் நெடி வீசும் அந்த சூழலிலும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் மதி. அவனும் அவளை ஏறெடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவனை அவள் கண்கள் சுற்றி சுற்றி வந்தது. காதல் அனுக்கள் கசிந்து இருவரையும் கிளர்ச்சி அடையச் செய்தது.

'தடாகத்தில் மீனிரண்டு காமத்தில் தடுமாறி

தாமரைப்பூமீது விழுந்தனவோ?!

இதைக்கண்ட வேகத்தில், பிரம்மனும் மோகத்தில்

படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ?!

காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு

கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்..

ஜதி என்னும் மழையினிலே

ரதியிவள் நனைந்திடவே,

அதில் பரதம்தான் துளிர்விட்டு

பூப்போலப் பூத்தாட..

மனமெங்கும் மணம் வீசுது – எந்தன்

மனமெங்கும் மணம் வீசுது'

["ஜதி என்னும் மழையில்" அல்லது "இசையின் மழையில்"]

என்று அவன் முணுமுணுத்துக்கொண்டு இருந்தான்.

என்றாலும் அவளுக்கு காதலை விட கடமை பெரிதாக இருந்தது. "நான் இனி உடனடியாக போர்க்கழகத்துக்கு திரும்பணும், கஜன்." என்றாள் மதி. ஆனால் கஜனோ: "மதி, நீயில்லாமல் இந்த முகாமே வீணாகிவிடும். என் வலிமை, என் நம்பிக்கை எல்லாம் நீதான் " என்றான். "நான் போராளி. என் காதலுக்கும் எல்லை இருக்கு டாக்டர்." அவள் மறுத்தாள்

அவர்களின் அந்த குறுகிய கால உறவு இருவருக்கும் சங்க இலக்கியக் காதலை நினைவுபடுத்தியது. "அர்ஜுனனின் மகன் அபிமன்யு விராடனின் மகள் உத்தராவை மணக்கிறான் என்றாலும், அபிமன்யு போரில் இறப்பதால், அவர்களின் காதல் விரைவில் முடிவடைந்து விட்டது, டாக்டர் கஜன், நானும் ஒரு போராளி, அது தான் தூர விலக விரும்புகிறேன். இங்கே உங்கள் முன் இருந்தால், ஒரு வேளை இன்று மாதிரி நான் தடுமாறிவிடுவேன். நீங்கள் வாழவேண்டியவர், என்னை விட்டுவிடுங்கள்" என்றாள் மதி. ஆனால் கஜன் குழம்பி இருந்தான்.

எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன

குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்

முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்

பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை

ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி

காமற் கடந்த வாய்மையள் என்றே

தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப (5: 12-18)

அந்த குழப்பத்தில் அவனுக்கு உதயகுமாரன், மணிமேகலை ஞாபகம் வந்தது. மணிமேகலை தவநெறி புகுந்தவள் என்பதால், அதற்கு இடையூறாக இருக்கும் உதயகுமாரனின் காதலை, அவனின் தகுதி செல்வாக்கு போன்றவற்றைக்கூட பார்க்காமல், அவனை, அவனின் காதலை தூக்கி எறிந்தாள். இன்று மதியும் அப்படியே!

"உன்னை சொல்லி குற்றமில்லை

என்னை சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

மயங்க வைத்த கன்னியர்க்கு

மணம் முடிக்க இதயமில்லை

நினைக்க வைத்த கடவுளுக்கு

முடித்து வைக்க நேரமில்லை"

அவன் மனம் மௌனமாக பாடியது! அவளுடைய இறுதிக் காலைப் பொழுதில், கஜன் அவளுக்கு பாதி பிஸ்கட்டை - அவன் பாக்கெட்டில் இருந்த கடைசி பிஸ்கட்டையும் கொடுத்தான். மற்றும் படி உப்பில்லா காஞ்சி இன்னும் அங்கு இருந்துகொண்டு தான் இருந்தது.

“உன்னுடைய மீட்பு சிற்றுண்டி,” என்று அவன் நகைச்சுவையாகச் சொன்னான். அவள் முதல் முறையாக - முழுமையாக, அழகாக - சிரித்தாள். அந்த நொடியே வான்வெடி தாக்கியது. குண்டு விழுந்தது. பூமி பிளந்தது. மதி சிதைந்தாள். புகை நீங்கியதும், எஞ்சியிருப்பது சிவப்பு மண், இடிபாடுகள் மற்றும் அமைதியின் கசப்பான சுவை மட்டுமே. மதி போய்விட்டாள். கஜன் மட்டும் உயிரோடு!

கஜன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார், ஆனால் மீண்டும் ஒருபோதும் முழுமையாக இல்லை. அவளுடைய இரத்தம் அவன் நினைவுகளைக் கறைபடுத்தியது, அவளுடைய சிரிப்பு ஒவ்வொரு அமைதியான மணி நேரத்திலும் எதிரொலித்தது.

அவர்களின் காதல் இறக்கவில்லை.

அமைதியிலும், மண்ணிலும், பல கதைகளைப் புதைத்த ஒரு போரின் வடுக்களிலும் அது நிலைத்திருந்தது!!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

........................................................................................

சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்' [200 வார்த்தைகளில்]

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்காலத்தில், முல்லைத்தீவு சிதைந்த நிலமாக இருந்தது — பட்டினி, பீரங்கி தாக்குதல்கள், பயம் நிரம்பிய நாட்கள். அந்தப் பூமியில் காயமடைந்த இளம் பெண் போராளி மதி, ஒரு தற்காலிக மருத்துவமனைக்குள் தடுமாறி நுழைந்தாள்.

அங்கே, 28 வயதான டாக்டர் கஜன், குறைந்த மருந்துகளுடனும் துடிப்பான மனதுடனும் உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருந்தார். மதியின் கண்களில் அவர் வீரத்தையும் வேதனையையும் பார்த்தார். மௌனத்தில் ஏதோ மின்னி இருவரையும் ஈர்த்தது. அதில் ஒரு காதல் தீபம் ஒளிர்ந்தது.

இரவும் பகலும் வெடிப்புகளால் அச்சமுற்றிருந்தன. ஆனால், காயங்களுக்கு மருந்து போடுவதற்கும் மரணத்தைத் தவிர்ப்பதற்கும் இடையில், அவர்கள் திருடப்பட்ட அரவணைப்பு தருணங்களை மறக்கவில்லை. ஒரு விடியற்காலை, பிஸ்கட்டை அவளிடம் ஒப்படைத்த அந்த நிமிடத்தில், வான்வழித் தாக்குதல் பூமியையே பிளந்தது. புகை நீங்கியபோது, இரத்தத்தில் மதியின் உடல் துண்டு துண்டாக கிடந்தது.

கஜன் உயிர் தப்பினார் — அந்த காதல் மரணிக்கவில்லை — அது மண்ணில், மெளனத்தில், அவன் விழிகளில் வாழ்ந்துகொண்டே இருந்தது!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

துளி/DROP: 1830 [சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்']

/ எனது அறிவார்ந்த தேடல்: 1248

https://www.facebook.com/groups/978753388866632/posts/30719807144334530/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.