Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நாசா ஃபிஷன் பரப்பு ஆற்றல் திட்டத்தின் மாதிரி புகைப்படம்

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரானார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 7 ஆகஸ்ட் 2025, 02:11 GMT

நாசா நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நிலவில் மனித குடியேற்றத்துக்கான அடிப்படையாக இது பார்க்கப்படும் நிலையில் வல்லரசு நாடுகளில் போட்டிகளமாக நிலவு மாறிவிடுமோ என ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் இதே போன்றதொரு அறிவிப்பை ரஷ்யாவும் சீனாவும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு நிரந்தர தளத்தை உருவாக்குவது அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது.

மறுபுறம் சீனாவும், ரஷ்யாவும் நிலவில் மனிதர்கள் வாழும் நிரந்தர தளங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாசாவின் செயல் தலைவர் பொலிடிகோ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த நாடுகள் நிலவில் 'தடைசெய்யப்பட்ட மண்டலம்' ஒன்றை அறிவிக்கக்கூடும் என்றும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சமீபத்தில் நாசாவுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த இலக்கும் காலக்கெடுவும் நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியமானது என்பது பற்றிய கேள்விகள் இன்னும் உள்ளன.

மேலும், இந்தத் திட்டங்கள் புவிசார் அரசியல் நோக்கங்களால் தூண்டப்படுகின்றன என்று சில விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிலவின் மேற்பரப்பை ஆராய விரைந்து செயல்படுகின்றன. அதேபோல் அங்கு நிரந்தர மனித குடியிருப்புகளை உருவாக்கவும் சில நாடுகள் திட்டமிடுகின்றன.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி

"எதிர்கால நிலவு பொருளாதாரத்தையும், செவ்வாயில் அதிக ஆற்றல் உற்பத்தியையும், விண்வெளியில் அமெரிக்காவின் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டுமெனில், இந்த முக்கிய தொழில்நுட்பத்தை விரைவாக மேம்படுத்த வேண்டும்," என நாசாவுக்கு அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி எழுதியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரை நாசாவின் தற்காலிக தலைவராக நியமித்துள்ளார்.

குறைந்தபட்சமாக, 100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அணு உலையை உருவாக்கும் வகையிலான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு வணிக நிறுவனங்களுக்கு டஃபி அழைப்பு விடுத்துள்ளார்.

இது ஒப்பீட்டளவில், குறைந்த அளவிலான ஆற்றல்தான். ஒரு வழக்கமான கரையோர காற்றாலை 2 முதல் 3 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

ஆனால், சந்திரனில் மின்சாரத்துக்காக அணு உலையைக் கட்டும் யோசனை என்பது புதிதல்ல. 2022இல், அணு உலையின் வடிவமைப்புக்காக நாசா மூன்று நிறுவனங்களுக்கு தலா 5 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தங்களை வழங்கியது.

2035-க்குள் நிலவில் தானியங்கி அணு மின் நிலையம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தன.

நிலவின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகவோ அல்லது ஒரே வழியாகவோ இது இருக்கலாம் எனப் பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு நிலவு நாள் என்பது பூமியில் நான்கு வாரங்களுக்கு சமம். இதில் இரண்டு வாரங்களுக்கு சூரிய ஒளி கிடைக்கும், மற்ற இரண்டு வாரங்கள் இருள்சூழ்ந்து இருக்கும். அதனால் சூரிய சக்தியை மட்டும் நம்பி இயங்குவது மிகவும் கடினமாகிறது.

"ஒரு சிறிய குழுவினரை தங்க வைக்கும் வகையில், சாதாரணமான ஒரு இருப்பிடத்தைக் கட்டுவதற்குக் கூட மெகாவாட் அளவிலான மின்சாரம் தேவைப்படும். சூரிய மின்கலங்கள் மற்றும் பேட்டரிகளால் மட்டுமே இந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியாது" என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு மற்றும் கருவிகள் துறையின் மூத்த விரிவுரையாளரான முனைவர் சங்வூ லிம்.

"அணுசக்தி விரும்பத்தக்க ஒன்றாக மட்டுமில்லாமல் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது" என்றும் அவர் கூறுகிறார்.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், CNSA/CLEP

படக்குறிப்பு, 2020-இல் சான்ஜ்-இ திட்டத்தில் சீனா தனது கொடியை நிலவில் நிறுவியது.

லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பூமி மற்றும் கோள் அறிவியல் பேராசிரியராக உள்ள லியோனல் வில்சனைப் பொருத்தவரை, "போதுமான நிதி ஒதுக்கப்பட்டால்" 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலைகளை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது ஒன்று தான்.

வில்சனின் கூற்றுப்படி, சிறிய அணு உலைகளுக்கான வடிவமைப்புகள் ஏற்கெனவே உள்ளன.

"அந்த நேரத்துக்குள் நிலவில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு, நாசா போதுமான 'ஆர்ட்டெமிஸ்' ஏவுதல்களைச் செய்தால் அது முடியும்," என்கிறார்.

ஆர்ட்டெமிஸ் என்பது நாசா செயல்படுத்தும் சந்திரவெளிப் பயண திட்டம். இது மனிதர்களையும், உபகரணங்களையும் நிலவுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால் இவ்வகை அணு உலை ஏவுதல்களில் பாதுகாப்பு குறித்தும் சில கேள்விகள் எழுகின்றன.

"பூமியின் வளிமண்டலம் வழியாக கதிரியக்கப் பொருட்களை விண்ணுக்கு அனுப்புவது பாதுகாப்பு பிரச்னைகளை எழுப்புகிறது. அதற்கு சிறப்பு உரிமம் தேவை, ஆனால் அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை," என்கிறார் ஓபன் பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் நிபுணரான முனைவர் சிமியோன் பார்பர்.

2026ஆம் ஆண்டில் நாசாவின் நிதி ஒதுக்கீட்டில் 24% குறைக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்த பிறகு, நாசாவில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து டஃபியின் உத்தரவு எதிர்பாராதவிதமாக வந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து பூமிக்கு மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 'மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்' போன்ற பல முக்கியமான அறிவியல் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவை அடைவதற்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இந்த முடிவு அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள், சீனா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் நிலவு ஆராய்ச்சி

"விண்வெளிக்குச் செல்வதில் போட்டி நிலவிய பழைய காலத்துக்கு, நாம் மீண்டும் திரும்புவது போல் தெரிகிறது. இது அறிவியல் ரீதியாக சற்று ஏமாற்றத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது," என முனைவர் பார்பர் கூறுகிறார்.

"போட்டி, புதுமைகளை உருவாக்கலாம். ஆனால் தேசிய நலன்கள் மற்றும் உரிமையை நிலைநாட்டுவது என்கிற குறுகிய நோக்கம் இருந்தால், சூரிய மண்டலம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பகுதிகளை ஆராயும் பெரிய நோக்கத்தை நீங்கள் மறந்து விடுவீர்கள்," என்றும் தெரிவித்தார்.

சீனாவும் ரஷ்யாவும், சந்திரனில் "ஒரு தடை மண்டலத்தை அறிவிக்க" வாய்ப்புள்ளது என்பது குறித்த டஃபியின் கருத்துக்கள், ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

2020 ஆம் ஆண்டில், நிலவின் மேற்பரப்பில் நாடுகள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்த கொள்கைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஏழு நாடுகள் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தில், நாடுகள் நிலவில் உருவாக்கும் தளங்கள் மற்றும் சொத்துக்களைச் சுற்றி 'பாதுகாப்பு மண்டலங்கள்' அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நீங்கள் சந்திரனில் ஒரு அணு உலையையோ அல்லது வேறு எந்த தளத்தையோ கட்டினால், அதைச் சுற்றி பாதுகாப்பு மண்டலம் இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு உங்களுடைய உபகரணங்கள் இருக்கும்," என்கிறார் முனைவர் பார்பர்.

"சிலருக்கு இது, 'நாங்கள் நிலவின் இந்தப் பகுதியை சொந்தமாக வைத்திருக்கிறோம். இங்கே நாங்கள் செயல்படப் போகிறோம், நீங்கள் வர முடியாது' என்று சொல்வதற்கு சமமாகத் தோன்றும்," என்றும் அவர் விளக்குகிறார்.

மனிதர்கள் பயன்படுத்தும் நோக்கில் நிலவில் அணு உலை அமைப்பதற்கு முன் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும் என்று முனைவர் பார்பர் குறிப்பிடுகிறார்.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 3 திட்டம் 2027 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது பல தடைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு தளத்திற்கு அணுசக்தி இருந்தாலும், அங்கு மனிதர்களையும் உபகரணங்களையும் கொண்டு செல்ல வழியில்லை என்றால், அது பயனுள்ளதாக இருக்காது என்று கூறிய பார்பர், தற்போது இந்த திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் நடப்பதாக தோன்றுவில்லை என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crm4301jp79o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.