Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Volker_Turk_1200px_25_06_20-1000x600-1.j

மனித உரிமைகள் ஆணையாளருடைய இறுதி செய்யப்படாத அறிக்கை! நிலாந்தன்.

மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையின் முதல் வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதை போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கம் அந்த அறிக்கையில் உண்டு. மூன்று இனங்களுடையதும் ஆணையைப் பெற்று வந்திருக்கும் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் “இறந்த காலத்தில் இருந்து உடைத்துக்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்த வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பதாகத் தெரிகிறது. அது ஐநாவின் எதிர்பார்ப்புத்தான். நிச்சயமாக யதார்த்தமல்ல.

இது ஏறக்குறைய 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் வந்த நிலைமையை நினைவுபடுத்துவது.2015 ஆட்சி மாற்றத்தின் போதும் மூவினங்களும் இணைந்து ரணில் மைத்திரி அரசாங்கத்தை கொண்டு வந்தன.எனவே புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை கொடுக்கும் நோக்கத்தோடு ஜெனிவா கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதுவரையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை அரசாங்கங்களுக்கு எதிரானவை.எனவே இலங்கை அரசாங்கங்களும் அதன் நட்பு நாடுகளும் அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துவந்தன. ஆனால் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான ,அதாவது நிலை மாறு கால நீதிக்கான தீர்மானம் எனப்படுவது இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் அது.அந்த தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் நிலைமாறு கால நீதியை இலங்கைத் தீவில் ஸ்தாபிப்பதற்கு ஒப்புக்கொண்டது. அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக மாறி அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக உழைத்தது.

இது பழைய கதை. இப்பொழுது அதே கதை திரும்பி வருகிறது. ஆனால் அரசாங்கம் வித்தியாசமானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பகை நிலைக்கு தள்ளாத விதத்தில் மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவை நகர்வுகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. இது அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போனபோது ஊகிக்கப்பட்டது.அவர் தன்னுடைய இலங்கைப் பயணத்தின் முடிவில் தெரிவித்த கருத்துக்களில் இருந்து அதை உணரக்கூடியதாக இருந்தது.

இப்பொழுது அவருடைய வருகைக்குப் பின்னரான திருத்தப்படாத அறிக்கை வெளிவந்திருக்கிறது.அந்த அறிக்கையின்படி புதிய அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பது தெரிகிறது. அந்த அடிப்படையில்தான் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரிலும் முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதனை இப்பொழுதே ஊகிக்கத்தக்கதாக உள்ளது.

இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம் ரில்க்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பின்போது அதாவது ஐநாவுக்கு கடிதம் எழுதுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பின்போது இது சுட்டிக்காட்டப்பட்டது. ஐநா பல விடயங்களை ஏற்கனவே இறுதி செய்து விட்டது. அதன்படி புதிய அரசாங்கத்திற்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கம் ஐநாவிடம் உண்டு என்ற விளக்கம் அந்த சந்திப்பில் இருந்தது.

ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதனால் அதற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஐநா சிந்திக்கின்றதா?ஆனால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கைகள் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் முழுமையாக பொறுப்பு கூறவில்லை என்பதுதான் அது.அவ்வாறு இலங்கையின் சிங்கள பௌத்த அரசாங்கங்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்புக் கூறத் தவறியிருக்கும் ஒரு வரலாற்று பின்னணியில், புதிய அரசாங்கம் மட்டும் பொறுப்பு கூறும் என்று ஐநா எப்படி எதிர்பார்க்கலாம்?

ஏற்கனவே 2015 இல் இருந்து 18 வரையிலும் ரணில் மைத்திரி அரசாங்கம் பொறுப்புக் கூறும் என்று ஐநா எதிர்பார்த்தது. ஆனால் அந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பங்காளியாக இருந்து பொறுப்பு கூறுவதற்காக உழைத்த சுமந்திரன் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின் வவுனியாவில் வைத்துச் சொன்னார்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று. அதாவது ஆட்சி மாற்றத்தின் மூலம் அரசு கட்டமைப்பில் மாற்றம் வரும் என்ற கருதுகோள்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சுமந்திரன் கூறுகிறார் அது தோல்வியுற்ற பரிசோதனை என்று.

இப்பொழுது அதே தோல்விகண்ட பரிசோதனையை மற்றொரு புதிய அரசாங்கத்தோடு இணைந்து முன்னெடுக்க ஐநா தயாராகி வருகிறதா? ஏற்கனவே ரணில் மைத்திரி அரசாங்கத்துக்கு அதாவது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஐ நா வாய்ப்புகளை வழங்கியது.ஆனால் அந்த வாய்ப்புகளை நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே தோற்கடித்தார். இப்பொழுது மீண்டும் ஒரு தடவை தேசிய மக்கள் சக்திக்கு ஐநா வாய்ப்பை வழங்கக் கூடுமா?

நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிய ஒரு பின்னணிக்குள்தான் 46/1 தீர்மானம் 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.அத் தீர்மானத்தின் பிரகாரம் ஸ்ரீலங்காவை பொறுப்புக் கூற வைப்பதற்கான அலுவலகம் என்ற பெயரில் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.அதேசமயம்,அந்த அலுவலகம் அமைந்திருக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் பொறுப்பதிகாரியான மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கைக்கு வர விசா வழங்கப்பட்டதால் அவர் அண்மையில் இங்கு வந்து சென்றிருக்கிறார். இப்படித்தான் இருக்கிறது ஐநா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் எப்படி நிறைவேற்றுகிறது மதிக்கிறது என்று அனுபவம்.இப்படிப்பட்டதோர் பின்னணியில் புதிய அரசாங்கத்துக்கு ஐநா வாய்ப்புகளை வழங்க கூடுமா?

கடந்த 16 ஆண்டு கால ஐநா அனுபவத்தை தொகுத்து பார்க்கும் பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கின்றது. அதன்படி இலங்கையை எதிர் நிலைக்குத் தள்ளும் விதத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ அல்லது இலங்கையை பாதிக்கக்கூடிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கோ ஐநா தயார் இல்லை. மாறாக ஆட்சி மாற்றங்களின் போது ஏற்படக்கூடிய புதிய வாய்ப்புகளை கையாண்டு எப்படி புதிய இலங்கை அரசாங்கத்தை ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைக்கு கடப்பாடு உடையதாக மாற்றலாம் என்றுதான் ஐநா முயற்சித்து வருகின்றது. அதாவது ஆட்சி மாற்றங்களின் மூலம் தமக்கு சாதகமான அரசியல் சூழல்கள் உருவாக்கும் பொழுது அவற்றைக் கையாள்வது. 2015-லும் அதைத்தான் செய்தார்கள்.இப்பொழுது 2025லும் அதைத்தான் செய்ய முயற்சிக்கின்றார்களா?

அதாவது அரசாங்கங்கள் மாறும் பொழுது பொறுப்பு கூறுவதற்கான வாய்ப்புகள் மாறும் என்று ஐநா நம்புகிறதா? மேற்கு நாடுகள் நம்புகின்றனவா? ஆனால் இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறாமை என்பது அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அல்ல. அது சிங்கள பௌத்த அரசுக் கொள்கை. தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல யார் அங்கே பொறுப்பில் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார்கள். பொறுப்புக் கூறுமாறு மூன்றாவது தரப்பு ஒன்று கடுமையான பயன் பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகித்தால் தவிர சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே முழுமையாகப் பொறுப்புக் கூறாது.

இப்போது இருக்கும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் முழு அளவுக்கு பொறுப்பு கூறாது என்பதற்கு இரண்டு நடைமுறை உதாரணங்களைக் காட்டலாம். முதலாவது, அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு அசோசியேட்டட் நியூஸ் பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியது. “பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையை கண்டறிவதற்குத்தான் விரும்புகிறார்கள். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை” என்ற பொருள்பட அந்த பேட்டியில் அவர் கூறுகிறார்.அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிக்க மாட்டார். இதைத்தான் முன்னைய அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த விஜய்தாச ராஜபக்சவும் வேறு வார்த்தைகளில் சொன்னார். நீதி விசாரணையும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் சமாந்தரமாகச் செல்ல முடியாது என்று.

இரண்டாவது எடுத்துக்காட்டு, அனுரவின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த ஐநா கூட்டத் தொடரில் என்ன சொன்னார் என்பது. அங்கே அவர் பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்துப் பேசியிருந்தார். ஏன் அதிகம் போவான்? ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையிலும் இலங்கை என்னென்ன விடயங்களில் ஐநா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே ஐநா தீர்மானங்களில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளாத, ஐநாவில் இயங்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்குள் வரவிடாத ஓர் அரசியல் ராஜதந்திரப் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஐநா கருதுகின்றதா?

ஐநா இந்த விடயத்தில் தன்னை பெருக்கடிக்கு உள்ளாக்காது என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தெரிகிறது.உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொண்டிருப்பது தனக்குச் சாதகமானது என்று அனுர கருதுகிறார்.எனவே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு எப்படி அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கலாம் என்றுதான் அவர் சிந்திக்கின்றார். ஏறக்குறைய ரணில் சிந்தித்தது போல. அந்த அடிப்படையில் தான் செம்மணி விவகாரத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறது.

மேலும் ஊழலுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் ஐநாவின் ஆர்வத்தை தூண்டக்கூடியவை. முன்னாள் கடற்படை தளபதி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் உள்நாட்டு நீதியின் மதிப்பை கூட்டும் முயற்சிகள்தான்.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் படைப்பிரதானிகளுக்கு எதிராகவும் எதுவரை போகலாம் என்பதில் அரசாங்கத்துக்கு வரையறைகள் உண்டு. சிங்கள பௌத்த உயர் குழாமானது ஒரு கட்டத்துக்கு மேல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நகர விடாது. அதுபோலவே யுத்த வெற்றி நாயகர்கள் ஆகிய படைத்தரப்பையும் ஒரு கட்டத்துக்கு மேல் விசாரிக்க விடாது. அப்படி விசாரித்தாலும் தண்டிப்பதற்கு அனுரவே தயாராக இல்லை. எனவே பொறுப்புக் கூறல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ன செய்யலாம் என்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. கடந்த 16 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அதைத் தொகுத்துக் கண்டுபிடிப்பது ஐநாவுக்கு கடினமான விடயம் அல்ல. ஆனாலும் ஐநா இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் பொழுது குறிப்பாக புதிய அரசாங்கம் ஐநாவை அனுசரித்துப் போவதான ஒரு தோற்றத்தை காட்டும் பொழுது அந்த அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஏன்?

புதிய அரசாங்கம் ஏதாவது மாற்றத்தை காட்டும்; பொறுப்புக் கூறும் என்ற நம்பிக்கையினாலா? எதிர்பார்ப்பினாலா? இரண்டுமே இல்லை. முழுக்க முழுக்க புவிசார் அரசியல் நிலைப்பாடு அது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வர இருந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இதயமாக கருதப்படுபவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா சீனாவுக்கு போயிருந்தார். சீன சார்பு இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது இலகுவாக சீனாவின் செல்வாக்குக்குள் விழுந்து விடலாம் என்ற பயம் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததும் வடக்குக்கு முதலில் வந்த தூதுவர் சீன தூதுவர்தான்.தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி வழங்கிய ஆதரவை அவர் சிலாகித்துப் பாராட்டி இருந்தார். எனவே சீனா தெளிவான செய்தியை ஐநாவுக்கும் இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஏற்கனவே வழங்கி விட்டது. சீனாவை நோக்கி இலகுவாகச் சாயக்கூடிய, சீன இடது சாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசாங்கத்தை அதிகம் பகை நிலைக்குத் தள்ளக் கூடாது என்று மேற்கும் ஐநாவும் இந்தியாவும் சிந்திக்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் நிர்பந்தித்தால் தேசிய மக்கள் சக்தி சீனாவை நோக்கி அதிகமாகப் போய்விடும். எனவே ஐநா இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு கூறுமாறு நிர்பந்தித்தால்,நெருக்கினால் சீனா இலங்கை அரசாங்கத்தைத் தத்தெடுத்து விடும் என்ற பயம் அவர்களுக்கு உண்டு. இதுதான் பிரச்சினை. இதுதான் பிரதான காரணம்.

பொறுப்புக் கூறலை இலங்கை அரசுக் கட்டமைப்பின் தலைக்கு மேல் நிரந்தரமாகத் தொங்கும் ஒரு கத்தி போல வைத்திருப்பதன் மூலம், ஏற்கனவே சீனாவின் செல்வாக்கு வலையத்துக்குள் சென்றுவிட்ட இச்சிறிய தீவின் மீது தமது பிடியை உறுதிப்படுத்துவதுதான் மேற்கத்திய,ஐ நா வியூகங்களின் நோக்கம். இந்தியாவின் நோக்கமும் அதுதான். இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் இந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி அல்ல எந்த புரட்சிகரமான அரசாங்கம் வந்தாலும் இதுதான் நடக்கும். அதாவது பொறுப்பு கூறல் என்ற விடயம் ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறிவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை.

https://athavannews.com/2025/1443298

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.