Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

adminFebruary 22, 2026

Gtn2-1-2.png?fit=900%2C1200&ssl=1

மெக்சிகோவின் (Mexico) மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடற்கரை சுற்றுலா நகரமான Puerto Vallartaவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ இராணுவம் நடத்திய விசேட நடவடிக்கையில் Jalisco New Generation Cartel (CJNG) அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஆயுததாரிகள் நகரின் பல பகுதிகளையும் சர்வதேச விமான நிலையத்தையும் முற்றுகையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்குப் பின்னர் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வாகனங்கள் தீவைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக Puerto Vallarta International Airport நோக்கிச் செல்லும் முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு படைகள் கூடுதல் வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CJNG அமைப்பு, மெக்சிகோவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறைக்கு பெயர் பெற்ற போதைப்பொருள் கும்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கை, குறித்த அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு தரப்பில் இருந்து சுற்றுலா பயணிகள் அமைதியாக இருக்குமாறு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தால் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாகும் போது புதுப்பிக்கப்படும்.

https://globaltamilnews.net/2026/229597/

  • கருத்துக்கள உறவுகள்

1771806824707.webp?resize=750%2C375&ssl=

நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை.

மெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளியும் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) குழுவின் தலைவருமான நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொல்லப்பட்டார்.

மெக்சிக்கோ பாதுகாப்பு படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் இவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் காவல்துறை அதிகாரியான எல்க் மென்சோவைப் பிடிக்க அமெரிக்கா 15 மில்லியன் டொலர் வெகுமதி அறிவித்திருந்ததோடு இந்த நடவடிக்கைக்கு தேவையான முக்கிய தகவல்களை வழங்கி உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கொல்லப்பட்டதையடுத்து, மெக்சிக்கோவின் 8 மாநிலங்களில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் குழுவினர் பேருந்துகளை எரித்தும், வீதிகளை மறித்தும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து மெக்சிக்கோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பார்டோ மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

https://athavannews.com/2026/1465949

  • கருத்துக்கள உறவுகள்

மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் தலைவர் கொல்லப்பட்டதால் வன்முறை - விமானங்கள் ரத்து

எல் மெஞ்சோ, மெக்சிகோ, அமெரிக்கா, பிரிட்டன், விமானங்கள் ரத்து

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,எல் மெஞ்சோவை பிடிப்பதற்கான தகவலை வழங்குபவர்களுக்கு அமெரிக்க வெளியுறவு துறை 15 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது.

கட்டுரை தகவல்

  • ஒட்டிலி மிட்செல்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்ட நபரான போதைப்பொருள் கும்பல் தலைவர் "எல் மெஞ்சோ", கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இந்த நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறையும் ஈடுபட்டிருந்தது. அவர் கொல்லப்பட்டதையடுத்து, மெக்சிகோவில் பரவலாக வன்முறை வெடித்துள்ளது.

மெக்சிகோவில் மிகவும் அஞ்சப்படும் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் (CJNG) எனப்படும் போதைப்பொருள் கும்பலின் தலைவர் "எல் மெஞ்சோ" என அறியப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ். ஞாயிற்றுக்கிழமை அவருடைய ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையிலான மோதலில் படுகாயமடைந்த "எல் மெஞ்சோ" உயிரிழந்தார்.

மெக்சிகோவின் மத்திய-மேற்கு ஜலிஸ்கோ மாநிலத்தில்(state) உள்ள தபல்பா நகரத்தில் நடைபெற்ற நடவடிக்கையின்போது ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் (CJNG) உறுப்பினர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதில் ராணுவத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்ததாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்துள்ளது.

"எல் மெஞ்சோ" கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அந்த போதைப்பொருள் கடத்த கும்பல் பல இடங்களில் சாலைகளை மறித்ததுடன், வாகனங்களையும் எரித்தது. இந்த வன்முறை பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஜலிஸ்கோ மற்றும் மற்ற பகுதிகளில் தெருக்களில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வலம் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபிஃபா உலகக் கோப்பை நடக்கும் நகரங்களில் ஒன்றான குவாடாலாஜரா உட்பட பல நகரங்களில் இருந்து புகை கிளம்பியதை நேரில் கண்டவர்கள் வீடியோக்களாக எடுத்துள்ளனர்.

ஜலிஸ்கோ ஆளுநர் பாப்லோ லெமுஸ் நவரோ பொது போக்குவரத்து நிறுத்தம், பெருந்திரளானோர் கூடும் வகையிலான நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி வகுப்புகளை ரத்து செய்வதற்கான உத்தரவை (code red) வெளியிட்டுள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சுற்றுலா பயணிகள், ஜலிஸ்கோவில் உள்ள ரிசார்ட்டுகளின் நகரமான புவெர்டோ வல்லார்டா (Puerto Vallarta) "போர் மண்டலமாக" காட்சியளிப்பதாக தெரிவித்தனர்.

இந்த வன்முறையின் போது நாடு முழுவதும் 250 இடங்களில் சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வன்முறையில் ஈடுப்பட்டதாக 11 பேரும் சூறையாடல் மற்றும் கொள்ளை குற்றச்சாட்டின் கீழ் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

வன்முறையின் போது கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் சுமார் 20 வங்கி கிளைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

எல் மெஞ்சோ, மெக்சிகோ, அமெரிக்கா, பிரிட்டன், விமானங்கள் ரத்து

பட மூலாதாரம்,Shutterstock

படக்குறிப்பு,புவெர்டோ வல்லார்டா கடற்கரையில் புகை மூட்டங்கள் எழுந்தன.

வன்முறைக்கு எதிர்வினையாற்றுவது தொடர்பாக மாநில (state) மற்றும் பெடரல் அதிகாரிகள் இடையே "முழு ஒத்துழைபபு" இருப்பதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பௌம் தெரிவித்துள்ளார். மக்கள் "அமைதி காத்து, விழிப்புடன் இருக்குமாறும்" அவர் வலியுறுத்தியுள்ளார்.

"நாட்டின் பல பகுதிகளில் அனைத்தும் வழக்கம் போலவே செயல்படுவதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

ஏர் கனடா, யுனைடட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் ஜலிஸ்கோவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.

ஜலிஸ்கோ, தமாலிபாஸ் மற்றும் மிசோகன், குவெர்ரெரோ மற்றும் நுவெ லியோனின் சில பகுதிகளில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அதேபோன்று, ஜலிஸ்கோவில் "தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவங்கள்" நடந்திருப்பதாக தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கம், "மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் எனவும் தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "ஃபென்டனைலை நம் நாட்டுக்குள் கடத்தி வருபவர்களில் முக்கிய நபரான எல் மெஞ்சோ மெக்சிகோ மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு முக்கிய இலக்காக இருந்தார்" என தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின்போது போதைப்பொருள் கும்பலை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உளவுத்தகவலை வழங்கியுள்ளது.

59 வயதான காவல்துறை முன்னாள் அதிகாரியான எல் மெஞ்சோ, அதிகளவிலான கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஃபென்டனைல் ஆகியவற்றை கடத்தும் குற்றப் பின்னணி கொண்ட பெரிய கும்பலை நடத்திவந்தார்.

எல் மெஞ்சோவை பிடிப்பதற்கான தகவலை வழங்குபவர்களுக்கு அமெரிக்க வெளியுறவு துறை 15 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்திருந்தது.

நாட்டின் சிறப்புப் படையினரால் இந்த நடவடிக்கை "திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாக" மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3v7dgw4zewo

  • கருத்துக்கள உறவுகள்

download-1-5.jpg?resize=259%2C194&ssl=1

தென்மேற்கு மெக்ஸிகோவில் வலுக்கும் வன்முறைகள் – கனடாவின் பல பகுதிகளுக்கும் வீதி தடை!

வன்முறை அதிகரித்து வருவதால், தென்மேற்கு மெக்ஸிகோ முழுவதும் பல நகரங்களில் குற்றவியல் குழுக்கள் சாலைத் தடைகளை அமைத்துள்ளதாக குளோபல் அஃபேர்ஸ் கனடா எச்சரித்துள்ளது.

புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் ஒரு தங்குமிடம் ஒழுங்காக உள்ளது, அங்கு கனடியர்கள் குறைந்த சுயவிவரத்தை வைத்திருக்கவும், ஊடக அறிக்கைகளைக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார், மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு ஒத்துழைப்புடன் இருப்பதாகவும் கூறுகிறார்.

ஜாலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல்லின் தலைவரான ‘எல் மென்சோ’ இன்று இராணுவ சிறப்புப் படைகளுடனான மோதலின் போது கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை தூண்டப்பட்டது.

மத்திய அரசு நிலைமையை ‘உற்று கண்காணித்து வருகிறது’ என்று வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கனடாவிலிருந்து புவேர்ட்டோ வல்லார்ட்டா செல்லும் பல விமானங்கள் பயணத்தின் நடுவில் திரும்பிவிட்டதாக ஒரு ஆன்லைன் விமான கண்காணிப்பு காட்டுகிறது.

https://athavannews.com/2026/1465967

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளம் காதலியால் சரிந்த பேரரசு

image_602341a217.jpg

லத்தீன் அமெரிக்கப் பிராந்தியம் உலகின் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலின் முக்கிய மையமாக உள்ளது என்பது ரகசியமல்ல. உலகின் பெரும்பாலான கொக்கைன் உற்பத்தி கொலம்பியா, பெரு மற்றும் பொலிவியாவை மையமாகக் கொண்டு நடக்கிறது. மெக்சிகோவை மையமாகக் கொண்டு ஹெரோயின் மற்றும் செயற்கைப் போதைப்பொருட்களான 'ஐஸ்' (Ice) மற்றும் ஃபெண்டானில் உற்பத்தி அதிகரித்துள்ளது. இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வன்முறை கும்பல்கள் கட்டுப்படுத்துகின்றன. இவை 'கார்டெல்' (Cartel) என்று அழைக்கப்படுகின்றன.

மெக்சிகோவில் இத்தகைய கும்பல்கள் சட்டத்திற்கு அஞ்சுவதில்லை. பொலிஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்களைப் பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் அவர்கள் கொன்று குவிக்கின்றனர். கடத்தல், கப்பம் கோருதல் மற்றும் ஆள் கடத்தல் ஆகியவற்றிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். சில நகரங்கள் மட்டுமல்ல, முழு மாகாணங்களே இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மெக்சிகோவில் 'சினலோவா கார்டெல்' மற்றும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) ஆகிய இரண்டு முக்கிய கும்பல்கள் உள்ளன.

மெக்சிகோவில் பரவிய பீதி

கடந்த சில நாட்களாக மெக்சிகோ போர்க்களமாக மாறியுள்ளது. பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல மாகாணங்களில் பயங்கரவாதம் பரவியது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது, இந்தியாவும் மெக்சிகோவில் உள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியது.

இதற்குக் காரணம், ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் அமைப்பின் ஆயுதமேந்திய தலைவர் நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ் அல்லது 'எல் மென்ச்சோ'வை மெக்சிகோ இராணுவம் சுட்டுக் கொன்றதாகும். பல தசாப்தங்களாகச் சட்டத்திலிருந்து தப்பித் தலைமறைவாக இருந்து, கொடூரமான குற்றங்களைச் செய்து வந்த 'எல் மென்ச்சோ' இறுதியில் ஒரு பெண்ணால் சிக்கினான்.

யார் இந்த இளம்பெண்?

ஜாலிஸ்கோ மலைப்பகுதியில் மறைந்திருந்த 'எல் மென்ச்சோ'வைத் தேடும் பணியில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருந்தன. அவன் இருக்கும் இடத்தை அறிய அவனது நெருக்கமானவர்களைப் புலனாய்வுத் துறையினர் கண்காணித்தனர். அப்போதுதான் அவனது இளம் காதலி குறித்த விபரங்கள் கிடைத்தன.

அரசாங்கம் அந்தப் பெண்ணின் பெயரைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றாலும், ஊடகத் தகவல்களின்படி அவர் மரியா ஜூலிசா (Maria Julissa) எனத் தெரியவந்துள்ளது. 25 வயதான இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு மாடல் அழகி. அவருக்கு 35 இலட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். கடந்த வார இறுதியில் அவர் 'எல் மென்ச்சோ'வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் மூலமாகவே 'எல் மென்ச்சோ' இருக்கும் இடத்தை இராணுவம் துல்லியமாகக் கண்டறிந்தது. தற்போது ஜூலிசாவுக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன. தனக்கும் 'எல் மென்ச்சோ'வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் மறுத்தாலும், அவர் மூலமே இரகசியத் தகவல் கசிந்ததாகக் கூறப்படுகிறது.

இறுதி வேட்டை

பிப்ரவரி 22-ஆம் தேதி, மெக்சிகோ இராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி 'எல் மென்ச்சோ' மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டது. கார்டெல் உறுப்பினர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 22 பாதுகாப்புப் படை வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட கும்பல் உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

சண்டையின்போது பலத்த காயமடைந்த 'எல் மென்ச்சோ', மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். அவனது மரணச் செய்தி கேட்டதும் அவனது கும்பல் ஆவேசமடைந்து நகரங்களில் வன்முறையில் ஈடுபட்டது. மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

அடுத்த தலைவர் யார்?

'எல் மென்ச்சோ'வின் மரணத்திற்குப் பிறகு அந்த கும்பலுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. அவனது மகள் ஜெசிகா ஜோனா ஒசெகுவேரா (குற்ற உலகின் ராணி என அழைக்கப்படுபவர்) அடுத்த தலைவராக வரக்கூடும் எனப் பேசப்படுகிறது. அதே நேரத்தில், எதிரி கும்பலான 'சினலோவா கார்டெல்' இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இடங்களைக் கைப்பற்ற முயல்கிறது.

யார் இந்த எல் மென்ச்சோ? 1966-இல் பிறந்த இவன், சிறுவயதில் வறுமை காரணமாக போதைப்பொருள் தோட்டங்களில் வேலை செய்தான். ஒரு காலத்தில் மெக்சிகோவில் பொலிஸ் அதிகாரியாகவும் பணியாற்றினான். பின்னர் போதைப்பொருள் உலகிற்குள் நுழைந்து தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அவனது தலைக்கு அமெரிக்கா 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

image_0c371cdc43.jpg

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இளம்-காதலியால்-சரிந்த-பேரரசு/50-373063

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.