Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக விதிகளின் கீழ்தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கிடைத்த தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக, இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.

ஏப்ரல் 21, 2019 அன்று , சஹாரான் ஹாஷிம் தலைமையிலான மிருகத்தனமான குழு நாடு முழுவதும் 8 இடங்களில் 10 தாக்குதல்களை நடத்தி 273 பேரைக் கொன்றது.

பின்னர், தொடர்புடைய தொடர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டன, மேலும் நாடாளுமன்ற சிறப்புக் குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணையம் மூலமாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

நேரடி தொடர்பு

அந்த விசாரணைகள் அனைத்திலும் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்த நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு தற்போது தினசரி விசாரிக்கப்பட்டு வருகிறது.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

இந்தச் சூழலில், தாக்குதலுக்குப் பின்னால் ஒரு அரசியல் கை இருப்பதாக சில தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டினர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையில், பிரித்தானியாவின் சேனல் ஃபோர் ஒளிபரப்பிய SRI LANKA'S EASTER BOMBINGS; DISPATCHES என்ற ஆவணப்பட நிகழ்ச்சியின் மூலம், முன்னாள் இராணுவ புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஒரு கூட்டம், ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக நாட்டில் பாதுகாப்பின்மை சூழ்நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது ஒரு காலத்தில் பிள்ளையானின் ஊடக செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி, இப்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கும் அசாத் மௌலானாவின் அறிக்கையுடன் இணைந்து கூறப்பட்டது.

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய இரகசிய விசாரணை தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் கூடுதல் தகவல்களை வழங்கியிருந்தது.

இந்த நிலையிலேயே, புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, இன்று காலை பேலியகொட பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று முன்னெடுக்கப்பட்ட சுரேஸ் சாலேயின் கைதின் பின்னர் இந்த வாதங்கள் எழுந்துள்ளன.

சுரேஸ் சாலே

வெளிநாடுகளில் இருந்து வெளியான அறிக்கைகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த கருத்துகள் ஆகியவை இந்த விவகாரத்தை புதிய கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன.

சுரேஸ் சாலே மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது கைது செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

மேலும் இந்த கைது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு ஆலேசகரான ரொஹான் குணவர்த்தன பக்கமும் திரும்பியுள்ளது.

ரொஹான் குணவர்த்தன 03.05.2021 அன்று தேசிய பாதுகாப்பு நிறுவன இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஒருவராவார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிகம் பேசப்பட்டவர்களுல் ரொஹான் குணவர்த்தனவும் ஒருவராவார்.

ரொஹான் குணவர்த்தன ஒரு பயங்கரவாத ஆய்வாளர் மற்றும் பாதுகாப்பு நிபுணர். அவர் குறிப்பாக 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

ரொஹான் குணவர்த்தன இந்த தாக்குதல் சர்வதேச தீவிரவாத வலையமைப்புகளுடன் தொடர்புடையது என்று அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் குழு மட்டும் அல்லாது, வெளிநாட்டு ஆதரவு மற்றும் பயிற்சி இருந்திருக்கலாம் என்றார். பாதுகாப்பு அமைப்புகளின் தகவல் பகிர்வு தோல்வி தாக்குதலைத் தடுக்க முடியாமல் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில் எதிர்காலத்தில் அவரிடமும் விசாரணை செய்யப்படலாம் என எதிர்வுகூறல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் முக்கிய கைதுகள் தலைப்பு செய்திகளாக வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

ரொஹான் குணவர்த்தன

இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சாலேயும் பின்னாளில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ரொஹான் குணவர்த்தனவும் பிள்ளையானை கை காட்டுவார்களா என்பதே.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

இந்நிலையில் சுரேஸ் சாலே தாக்குதல் நடைபெற்ற நாளில் நாட்டில் இல்லை என வாதிட்டு வந்தாலும், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சில சாட்சியங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு முரண்பட்ட தகவல்களை முன்வைக்கின்றன.

அவ்வாறென்றால் இந்த விசாரணை எங்கிருந்து ஆரம்பமாகபோகின்றன? 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தாக்குதலுக்கு பின்னராக சர்வதேச ரீதியில் திரும்பி பார்க்க வைத்த விடயம் chanal 4 ஆவணப்படம்.

அதில் சுரேஸ் சாலே முதல் பல்வேறு தரப்பினர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களையும் பின்னணியையும் வெளியிட்டவர் பிள்ளையானின் பிரத்தியேக செயலாளராக கருதப்படும் அசாத் மௌலான.

ஆக இந்த விசாரணைகள் அசாத் வெளியிட்ட கருத்துக்களை வைத்தே நகரப்போகிறது.

அசாத் மௌலானா சுவிட்சர்லாந்திலிருந்து வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கை இந்த விவகாரத்தின் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

2023 ஒகஸ்ட் 12 அன்று வெளியிடப்படவிருந்த தகவல்கள் பின்னர் வெளியானது.

அவரது சாட்சியங்களின் அடிப்படையில் ஐரோப்பிய புலனாய்வு பிரிவுகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுவரை 24 சந்தேகநபர்கள் விசாரணை வளையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிரதான காரணம்

இங்கு ரொஹான் குணவர்த்தன தனது ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளில், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிரதான காரணம் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவும், இலங்கையில் செயல்பட்டதாகக் கூறப்படும் Islamic State (ISIS) அமைப்பின் உள்ளூர் கிளையும் என வாதிட்டுள்ளார்.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

அவரது கருத்துப்படி, மூளையாக யாரும் செயற்படவில்லை. அவ்வாறு வேறு யாரும் அல்ல. சஹ்ரான் குழுவே இதற்குப் பின்னணி என்றார்.

ஆனால் இந்தக் கருத்துக்கள், முன்னாள் உயர் காவல்துறை அதிகாரிகள் சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த உச்ச நீதிமன்றப் பிரமாணப் பத்திரங்களுடன் முரண்படுவதாக கூறப்பட்டது.

மேலும், ரொஹான் வெளியிட்ட அறிக்கையில், “அபுவிந்த்” என்ற நபர் தென்னிந்திய இரகசியப் புலனாய்வு அமைப்பால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் என கூறப்பட்டுள்ளது. இந்த கூற்று கூடுதல் சர்ச்சையை உருவாக்கிய ஒன்று.

கோட்டாபய காலத்தில் இருந்து நிலுவையில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு அநுர ஆட்சியில் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பின்னணியிலும் தற்போது சூடுபிடித்துள்ள நிலையிலும், சந்தேகநபர்களுக்கு சார்பான பல சட்டத்தரணிகள் விலகியுள்ளதாக சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக பிள்ளையான் மற்றும் ISIS தொடர்பான 2018 ஆம் ஆண்டுக் குற்றச்சாட்டு சந்திப்பு குறித்து வெளிவந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாதவையாக உள்ளன.

ஆனால் ரொஹான் குணவர்த்தன பதவியில் இருந்த காலத்தில், அவர் மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானைச் சந்தித்திருந்தார்.

இந்த விவகாரம் அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் உட்புற தொடர்புகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

இவ்வாறான பின்னணியில் இன்று இடம்பெற்ற காவல்துறை ஊடக சந்திப்பில் முக்கிய சில கேள்விகள் எழுப்பப்பட்டன.

சாரா எங்கே

அதில் குறிப்பாக சுரேஸ் சாலே பிள்ளையானுக்கு அப்பாற்பட்டு முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்... | New Suspect In Easter Sunday Attack

முன்பிருந்தே சாராவின் டி.என்.ஏ பரிசோதனை தொடர்பில் கேள்விகள் காணப்படுகின்றன. இவர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் முக்கிய சந்தேகநபராக கருதப்பட்டவர். இந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்ததாக முந்தைய பரிசோதனை அறிக்கைகள் விவரித்தன.

எனினும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் “சாரா” என அடையாளம் காணப்பட்ட நபர் தொடர்பில் மூன்றாவது டி.என்.ஏ பரிசோதனை குறித்த விவாதம் எழுந்து.

சில தரப்புகள் அவர் உயிருடன் இருக்கலாம் எனக் கூறிவந்தனர். குறிப்பாக அவர் இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையிலேயே அமைச்சர் ஆனந்த விஜேபால அவர் உயிருடன் இருக்கின்றார். ஆனால் இந்தியாவில் இல்லை என திடம்பட கூறியிருந்தார்.

இதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கேள்விகளுக்கு விடை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மை இன்னும் முழுமையாக வெளிச்சமிடப்படாத பின்னணியில் சுரேஸ் சாலே கைதானது பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இதன்மூலம் சாரா தொடர்பில் ஏதேனும் தகவல் வெளிவந்தால் அது திரைமறையில் உள்ள ஏதேனும் ரகசியங்களை அம்பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக இந்த தாக்குதலில் மூளையாக செயற்பட்டவர் யார்?

இதில் சர்வதேச தொடர்புகள் இருந்ததா?

மேலும் அரசியல் விசுவாசிகள் பாதுகாக்கப்பட்டார்களா?

அல்லது இது முழுமையாக சஹரான் தலைமையிலான தீவிரவாதத் திட்டமா? என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமாகிறது.  

https://ibctamil.com/article/new-suspect-in-easter-sunday-attack-1772011689

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் சாலே நடத்திய ரகசிய சந்திப்பு! தொலைபேசி மூலம் இணைந்த ரணில் - எழுந்துள்ள புதிய சர்ச்சை

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த தொடர்பான சில ஆதாரங்கள் அல் ஜசீரா வெளியிட்ட காணொளி அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.

ரகசிய சந்திப்பு

ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்த இரண்டு விசாரணைக் குழுக்கள், சுரேஷ் சாலே மற்றும் மூத்த டிஐஜி நிலந்த ஜெயவர்தன ஆகியோர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சுரேஷ் சாலே மற்றும் பிள்ளையானின் முன்னாள் ஊடக செயலாளர் அசாத் மௌலானா ஆகியோர் புத்தளத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் ரகசியமாக சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரேஷ் சாலே நடத்திய ரகசிய சந்திப்பு! தொலைபேசி மூலம் இணைந்த ரணில் - எழுந்துள்ள புதிய சர்ச்சை | Suresh Salle Arrested Revealed New Details

அந்த சந்திப்பில், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவிற்கு தாக்குதலை மேற்கொள்ள தேவையான பின்னணி ஆதரவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜமீல் என்பவருடன் சாலே நீண்டகாலமாக தொடர்பில் இருந்ததாக தொலைபேசி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க

மேலும், தாக்குதலுக்கு முன்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து வெளியேறிய ஜமீலுக்கு, தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து சுரேஷ் சாலே தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும் சட்டமா அதிபர் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு, இந்த விசாரணை அறிக்கைகளை அழிக்கும்படி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரேஷ் சாலே நடத்திய ரகசிய சந்திப்பு! தொலைபேசி மூலம் இணைந்த ரணில் - எழுந்துள்ள புதிய சர்ச்சை | Suresh Salle Arrested Revealed New Details

அறிக்கைகள் காணாமல் போவதற்கு முன்பு, கொழும்பில் உள்ள சாகல ரத்நாயக்கவின் இல்லத்தில் சுரேஷ் சாலே மற்றும் நிலந்த ஜெயவர்தன ஆகியோருடன் ரகசிய கலந்துரையாடல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன அறிக்கைகளில் சேனல் 4 வெளியீடு தொடர்பான விசாரணை அறிக்கையும், முன்னாள் நீதிபதி அல்விஸ் தலைமையிலான குழு அறிக்கையும் அடங்கும் என கூறப்படுகிறது.

புதிய சர்ச்சை

தற்போது, கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட பல தரப்புகள், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்த அறிக்கைகளை வெளியிடுமாறு வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில், கொழும்பில் உள்ள ஒரு உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய ஆவணம் ஒன்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் சாலே நடத்திய ரகசிய சந்திப்பு! தொலைபேசி மூலம் இணைந்த ரணில் - எழுந்துள்ள புதிய சர்ச்சை | Suresh Salle Arrested Revealed New Details

அதில், சுரேஷ் சாலே தலைமையில் தேசிய புலனாய்வு துறையிலிருந்து 85 பேர் ரகசியமாக சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பட்டியலில் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், யூடியூபர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளிலிருந்து தங்களை பாதுகாக்கவும், சமூக கருத்தை மாற்றவும் பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் 

மேலும், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் சுரேஷ் சாலே இடையிலான தொடர்பு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலிருந்தே இருந்ததாக வெளிநாட்டு உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி பகுதியில் சந்திப்பு நடைபெற்றதாகவும், பின்னர் மலேசியாவில் முக்கிய கலந்துரையாடல்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சுரேஷ் சாலே நடத்திய ரகசிய சந்திப்பு! தொலைபேசி மூலம் இணைந்த ரணில் - எழுந்துள்ள புதிய சர்ச்சை | Suresh Salle Arrested Revealed New Details

இந்நிலையில், இளம் பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் தரிந்து ஜெயவர்தனவை குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரை கைது செய்ய சதி முயற்சி நடைபெறுகிறது என அவர் பதில் ஐஜிபியிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

https://tamilwin.com/article/suresh-salle-arrested-revealed-new-details-1772068141

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல ஆதாரங்களுடன் சிக்கிய சுரேஷ் சாலே: அச்சத்தில் ராஜபக்‌சர்கள் - அடுத்த முக்கிய இலக்கு...!

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே என்பவர், வெறும் ஒரு புலனாய்வு அதிகாரி மட்டுமல்லஅவர் ராஜபக்ச குடும்பத்தின், குறிப்பாகக் கோட்டாபய ராஜபக்சவின் மிக நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நிழல் அதிகாரியாகவே பார்க்கப்பட்டார்.

தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளமை, ராஜபக்சக்கள் மீதான ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைத் தாண்டி உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் அரசியல் சதித்திட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளது.

இது ராஜபக்சக்களுக்குப் பாரிய அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மற்றும் அவரது குழுவினருக்கும், சுரேஷ் சாலே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் இருந்த மர்மமான தொடர்புகள் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரியவை.

இது குறித்துப் பிள்ளையானின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா, சர்வதேச ஊடகமான செனல்-4 (Channel 4) இல் வழங்கிய சாட்சியத்தின்படி, தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையிலான சந்திப்புகளை ஒருங்கிணைத்ததில் பிள்ளையான் தரப்புக்கும் சாலேக்கும் முக்கிய பங்கு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தப் பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்ற கேள்விக்கு விடை தேடும் பயணத்தில், சுரேஷ் சாலே ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.

இதுமட்டுமன்றி, தர்கா நகரில் நடந்த தாக்குதல்கள் மற்றும் வவுணத்தீவில் காவல்துறையினரைக் கொலை செய்தமை போன்ற விடயங்களிலும் சுரேஷ் சாலேவின் தலையீடு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ராஜபக்சர்களை ஆட்சிபீடம் ஏற்றவேண்டிய ஒரு கட்டாய சூழலில் அவர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தற்போது அவரது கைது இடம்பெற்றிருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாகவும், உண்மைகளை வெளிக்கொணரும் முக்கிய கருவியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இது ராஜபக்சர்களின் அரசியல் செல்வாக்கிற்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு அவர்களின் அரசியல் எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனடிப்படையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகள் யார்?

திரைமறைவில் அரங்கேற்றப்பட்ட அந்தப் பயங்கரமான அரசியல் சதித்திட்டங்கள் என்ன?

சுரேஷ் சாலேயின் கைதுக்குப் பிறகு விசாரணை வளையத்திற்குள் சிக்கப்போகும் அந்த அடுத்தடுத்த அரசியல் புள்ளிகள் யார்?

இந்தக் கொடூரத் தாக்குதல் விவகாரத்தின் ஆரம்பகட்டத் திட்டமிடல் முதல், தற்போது சுரேஷ் சாலே பிடிபட்டிருக்கும் பரபரப்பான நிலவரம் வரை அனைத்தையும் விரிவாகத் தொகுத்து வழங்குகிறது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி.....

https://ibctamil.com/article/suresh-salley-arrested-easter-attack-investigation-1772063038

  • கருத்துக்கள உறவுகள்

இவரைத்தொடர்ந்து பல இராணுவ அதிகாரிகள், அரசியல் தலைகள் உருளும்போலுள்ளதே. அதற்கிடையில் சுரேஷ் சலே மேலே போகவைக்க முயற்சிகளும் இடம்பெறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி கைது ஏன்?

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,ITJP

27 பிப்ரவரி 2026, 11:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, 72 மணிநேரம் தடுத்து வைக்கப்படும் உத்தரவு மூலம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில், 72 மணிநேர விசாரணைக்கு பின்னர் எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

''கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யும் அதிகாரம் பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு காணப்படுகின்றது, அதன்பின்னர் தேவையேற்படும் பட்சத்தில் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தும் நீதிமன்ற அதிமதியை பெற்று 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடியும். அப்படியில்லை என்றால், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரை விடுவிக்க முடியும்'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு - சுரேஷ் சலே கைது

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் நடமாடும் முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

'தெளிவான சாட்சியத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைது'

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஊடக சந்திப்பு கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது.

''காலை 7.50 மணிக்கு பேலியகொடை போலீஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் வைத்து அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டார்'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

''ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் பெறுபேறுகளுக்கு அமைய வெளியான தெளிவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்' எனவும் அவர் கூறுகின்றார்.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் சஞ்ஜீவ மெதவத்தவிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டமைக்கான முழுமையான காரணத்தை வெளியிட முடியாது எனவும், விசாரணைகளின் பின்னரே அதனை கூறும் இயலுமை உள்ளது எனவும் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் பதிலளித்தார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு - சுரேஷ் சலே கைது

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2019 ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் நினைவாக 2022-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மக்கள் பதாகைகளை ஏந்தி நின்றனர்

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியா?

இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பெயர் கூறப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டமையானது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகவா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.

''இவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அவரா பிரதான சூத்திரதாரி அல்லது வேறு யாரும் இருக்கின்றார்களா என்பது வெளியாகும்'' என சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் சஞ்ஜீவ மெதவத்த தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே தடுத்து வைக்கப்படுவாரா?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக சரத்துக்களுக்கு அமைய அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக பிரதி போலீஸ் மாஅதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

''சட்டப்படி கைது செய்யப்படும் பட்சத்தில் 3 நாட்கள் தடுத்து வைக்க முடியும். போலீஸ் அத்தியட்சகர் ஒருவரினாலேயே கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்''

''இந்த காலப் பகுதியில் வெளியாகும் சாட்சியங்களின் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்படுமாயின், சட்டத்திலுள்ள சரத்துக்களுக்கு அமைய தடுத்து வைத்து விசாரணை நடத்தும் உத்தரவை பெற்றுக்கொள்ள வேண்டும்'' என அவர் தெளிவுப்படுத்தினார்.

விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என பிரதி போலீஸ் மாஅதிபர் நம்பிக்கையை வெளியிட்டார்.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து பல்வேறு வகையில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பிய போதிலும் அவர் கைது செய்யப்பட்டமையை தவிர வேறு எந்தவித தகவல்களையும் உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடவில்லை.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு - சுரேஷ் சலே கைது

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள் என்பதுடன், தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

சட்டத்தரணி அலி சப்ரி கண்டனம்

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக சட்டத்தரணி அலி சப்ரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்ஜாமீன் கோரி ராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் உறுப்பினரான கெலும் மத்துமகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே சட்டத்தரணி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரோஹன்ன அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாரிய சேவையாற்றிய ஒருவர் எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான தமிழ் செல்வத்தை அழிப்பதற்காக அவர் முன்னின்று செயற்பட்ட ஒருவர் எனவும் சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலி அமைப்பின் மற்றுமொரு தலைவரான குமரன் பத்மநாதனை மலேசியாவிற்கு சென்று இந்த நாட்டிற்கு அழைத்து வந்தது சுரேஷ் சலேதான் என கூறிய சட்டத்தரணி, தேசிய பாதுகாப்புடன் விளையாடுவது தகுதியற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

வவுணத்தீவு பகுதியில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறான வழியில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தனது தரப்பிற்கு எதிரான குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவ்வாறான விசாரணைகள் நடத்துவதற்கு எந்தவித சாட்சியங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளின் ஊடாக தனது தரப்பிற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

அசாத் மௌலானா என்ற அரசியல் புகலிட கோரிக்கையாளரினால் பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கப்பட்ட நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனூடாக பிரதிவாதிகளுக்கு எந்தவித நியாயமும் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு மாத்திரமன்றி, இலங்கை புலனாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை தவிர்த்துக்கொள்ள போலீஸார் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறியதை அடுத்தே இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சட்டத்தரணி அலி சப்ரியின் அன்றைய வாதங்கள் முடிவுற்ற நிலையில், மேலதிக வாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் தேதி வரை நீதிபதிகள் குழாமினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

செனல் 4 சர்ச்சைக்குள்ளான வீடியோ

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ''அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக 269 பேர் கொலை செய்யப்பட்டார்களா?'' என கேள்வி எழுப்பி 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செனல் 4 தொலைக்காட்சியினால் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது.

சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) முன்னாள் ஊடக செயலாளராக கடமையாற்றிய ஹன்சீர் அசாத் மௌலானா, இந்த வீடியோவின் பிரதான சாட்சியாளராக இருந்தார்.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் ராணுவ புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத குழுவுடன் ரகசிய சந்திப்பு இடம்பெற்றதா என இந்த வீடியோவில் கேள்வி எழுப்பப்பட்டது.

இஸ்லாமிய அடிப்படைவாத குழுவிற்கும், சுரேஷ் சலேவிற்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துக் கொடுக்குமாறு 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் விளக்கமறியலில் இருந்த பிள்ளையான் தனக்கு ஆலோசனை வழங்கியதாக அசாத் மௌலானா செனல் 4 தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் அப்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையானினால் தனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் ஷைனி மௌலவி உள்ளிட்ட சிலருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும், அந்த குழுவிற்கும் சுரேஷ் சலேவிற்கும் இடையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தார்

புத்தளம் - கரடிபுவல் என்ற பிரதேசத்திற்கு அந்த குழுவை வருகைத் தருமாறு தான் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தான் அந்த இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் சுரேஷ் சலே வருகைத் தந்திருந்ததாகவும், அதன்பின்னர் வெள்ளை நிற வேனில் சயின் மௌலவி மற்றும் அவரது சகோதரரான சஹாரான் உள்ளிட்ட 6 பேர் வருகைத் தந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடல் மிக நீண்ட நேரம் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

''இலங்கையில் பாதுகாப்பற்ற நிலைமையொன்றை ஏற்படுத்தும் தேவை ராஜபக்ஷக்களுக்கு உள்ளது. அதுவே கோட்டாபயவிற்கு ஜனாதிபதியாகுவதற்கு உள்ள ஒரே வழியாகும்.'' என சுரேஷ் சலே கலந்துரையாடலின் பின்னர் தன்னிடம் கூறியதாகவும் செனல் 4 தொலைக்காட்சிக்கு அசாத் மௌலானா கூறினார்.

சுரேஷ் சலேவை வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்சதான் என இந்த வீடியோவில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு - சுரேஷ் சலே கைது

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கொழும்பு புனித அந்தோணியார் தேவாலயத்தில், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நினைவுப் பலகை அமைக்கப்பட்டுள்ளது

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்

செனல் 4 வீடியோ தயாரிக்கப்பட்டு வெளியிடுவதற்கு முன்னர் அந்த தயாரிப்பு நிறுவனம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கடிதமொன்றின் ஊடாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் 4 குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக பதில் கோரியிருந்தனர்.

இந்த கடிதத்திற்கு பதில் வழங்கிய சுரேஷ் சலே, இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக கூறப்படும் காலப் பகுதியில் தான் நாட்டை விட்டு வெளியேறியிருந்ததாகவும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த காலப் பகுதியில் தான் மலேசியா உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றியதாகவும், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதி வரை தான் இந்தியாவின் பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி செயலமர்வில் கலந்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மலேசியா மற்றும் இந்தியா அதிகாரிகளிடம் ஆராய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் நடமாடும் முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள் என்பதுடன், தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

சுரேஷ் சலே என்பவர் யார்?

மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே 1987ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி இலங்கை ராணுவத்தில் இணைந்துக்கொண்டார்.

அதன்பின்னர் பல மொழி அறிவுகளை கற்றுக்கொண்டமையை அடுத்து, 1993ம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவிற்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாரிஸ் நகரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சுரேஷ் சலே 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை முதல் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

அவர் மீண்டும் நட்டை வந்தடைந்ததன் பின்னர் 2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்படும் வரை, பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு புலனாய்வு தொடர்பாளராக கடமையாற்றியிருந்தார்.

அதன்பின்னர் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மலேசியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஆலோசகரான கடமையாற்றியிருந்தார்.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நம்பர் மாதம் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தேசிய பாதுகாப்பு பாடத்திட்டமொன்றை தொடர்ந்ததாக அவரின் சட்டத்தரணி பசுன் வீரசிங்க, செனல் 4 நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

2019ம் ஆணடு டிசம்பர் மாதம் முதல் அவர் இலங்கை அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

2024ம் ஆண்டு அவர் அரச புலனாய்வு பிரிவின் தலைமை பொறுப்பிலிருந்து விலகியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி கைது ஏன்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.