Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் காது கேளாதோரால் விமர்சிக்கப்படுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் காது கேளாதோரால் விமர்சிக்கப்படுவது ஏன்?

கிரஹாம் பெல் 1847ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு குடியேறினார்; மேலும், அவருக்கு 30 வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே, அவரைப் புகழ்பெற்றவராக்கவிருந்த தொலைபேசியை அவர் உருவாக்கியிருந்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கிரஹாம் பெல் 1847ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு குடியேறினார்; மேலும், அவருக்கு 30 வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே, அவரைப் புகழ்பெற்றவராக்கவிருந்த தொலைபேசியை அவர் உருவாக்கியிருந்தார்.

கட்டுரை தகவல்

  • டாலியா வென்ச்சுரா

  • பிபிசி நியூஸ் முண்டோ

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

பிரிட்டிஷ்-அமெரிக்க விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்ததற்காகப் பரவலாக அறியப்படுகிறார். இருப்பினும் உலகின் காது கேளாதோர் சமூகத்தின் பெரும்பகுதியினருக்கு அவரது பெயர் போற்றுதலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட உணர்வைத் தருகிறது.

கண்டுபிடிப்புகளின் வரலாற்றைப் பற்றிய கவர்ச்சிகரமான விஷயங்களில் ஒன்று, ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இலக்கை நோக்கி எத்தனை முறை பணியாற்றியுள்ளனர் என்பதுதான்.

இது அத்தகைய நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், அந்த இலக்கு தொலைபேசி இல்லை என்பதுதான் சுவாரஸ்யம்.

கடந்த 1870களில், மின்சாரத் தந்தி ஏற்கெனவே மக்கள் ஒளியின் வேகத்தில் உலகளவில் தொடர்புகொள்வதைச் சாத்தியமாக்கி இருந்தது. இதுவொரு பெரிய திருப்புமுனையாக இருந்தாலும், அதில் சில அடிப்படை குறைபாடுகள் இருந்தன. அது விலை உயர்ந்ததாகவும், ஒரு நேரத்திற்கு ஒரு செய்தியை மட்டுமே அனுப்ப முடியும் என்பதுமே அந்தக் குறைபாடுகள்.

அப்போது ஒரே நேரத்தில் பல செய்திகளை அனுப்புவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. மேலும், அதற்கான வெகுமதி சிறப்பாக இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

கிரஹாம் பெல் 1871இல் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அவர் ஏற்கெனவே தந்தி மற்றும் கண்முன் இருந்த சவாலால் ஈர்க்கப்பட்டார். அதற்கும் மேலாக, அவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். அந்தப் பெண்ணின் தந்தை பல செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பும் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்ய முன்வந்தார். ஏனெனில், அவர் அதைச் சாத்தியமாக்கினால் அதன்மூலம் தான் நிதிரீதியாகப் பலனடைய முடியும் என்று அவர் கருதினார்.

கிரஹாம் பெல் ஒரு பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் அல்ல, மேலும் மின்சாரம் பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும், அவருக்கு வேறு அறிவும் பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற விருப்பமும் இருந்தது.

ஆனால், அதே விஷயத்தை அடைய முயன்று கொண்டிருந்த மற்ற பலரும் இருந்தனர். சிலர் அந்தப் பணிக்கு மிகவும் தகுதியானவர்களாக இருந்தனர்.

அவருக்கு மிக முக்கியமான போட்டியாளராக இருந்தவர் எலிஷா கிரே என்ற தொழில்முறை கண்டுபிடிப்பாளர். அவர் அந்தத் துறையில் மதிக்கப்பட்டார். அதோடு, இருமுறை தந்தியின் மேம்பாடுகளை உருவாக்கினார்.

இருவரும் ஒருவருக்கொருவர் முன்னேற்றம் மட்டுமின்றி, பிறரின் சாதனைகளையும் அறிந்திருந்தனர். இதில் இத்தாலிய குடியேறியான அன்டோனியோ மியூசி, 2002இல் அமெரிக்க நாடாளுமன்றத்தால் தொலைபேசியின் உண்மையான கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டவர். ஏனெனில், 1860இல் நியூயார்க்கில் அவர் உருவாக்கிய "டெலிட்ரோஃபோனோ" அவரை இந்த சர்ச்சைக்குரிய பட்டத்திற்குத் தகுதியுடையவராக்கியதாக அவர்கள் கருதினர்.

ஆனால், 19ஆம் நூற்றாண்டில், சர்ச்சையின் மையத்தில் மியூசி இருக்கவில்லை.

அதேநேரத்தில், அவர்கள் பல செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பும் தந்தியைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது, கிரஹாம் பெல் மற்றும் கிரே, குரல் மூலம் செய்திகளை அனுப்பும் சாத்தியத்தைக் கண்டுபிடித்திருந்தனர்.

இருவருமே இதனால் கவரப்பட்டாலும், கிரே தொலைபேசியைவிட தந்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்தார். இதன் மூலம் அவரால் செல்வம் ஈட்ட முடியுமென உறுதியாக நம்பினார்.

அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் தந்தித் தொழில்நுட்பக் காப்புரிமை வரைபடம், மார்ச் 7, 1876.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் தந்தித் தொழில்நுட்பக் காப்புரிமை வரைபடம், மார்ச் 7, 1876.

அதே காரணத்திற்காக, கிரஹாம் பெல்லின் மாமனார் அவரையும் அதையே செய்யும்படி அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவரால் பெல்லின் சோதனையை எதிர்க்க முடியவில்லை. காதலர் தினமான பிப்ரவரி 14, 1876 அன்று, தொலைபேசிக்கான காப்புரிமைக்கான விண்ணப்பத்தை பெல் தாக்கல் செய்தார்.

அவருக்குத் தெரியாமல், இரண்டு மணிநேரம் கழித்து, கிரே தனது சொந்த யோசனையை காப்புரிமை அலுவலகத்தில் தாக்கல் செய்தார். ஆனால், அவர் மிகவும் தாமதமாகச் செய்தார்.

மார்ச் 7, 1876 அன்று, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்று, அதன் கண்டுபிடிப்புக்கான உரிமைகளைப் பெற்றார்.

உண்மையான நோக்கம்

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் என்ற தலைப்பு இன்னும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. ஆனாலும், பெரும்பாலானோர் அத்தகைய சாதனங்களை "நேரடி நடைமுறை பயன்பாடு" இல்லாமல் "ஓர் அறிவியல் ஆர்வம்" என்று மட்டும் கருதியபோது, கிரஹாம் பெல் ஒன்றை உருவாக்கியது மட்டுமின்றி, அதன் திறனைக் கண்டறிந்து, அதை நிரூபிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். (தி டெலிகிராஃபர், 1869).

அவரது அடிப்படைக் கண்டுபிடிப்பு விரைவில் உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்து பெருகியது. இன்று கிட்டத்தட்ட 9 பில்லியன் மொபைல் போன்கள் உள்ளன. அசலுடன் ஒப்பிடும்போது அவை முற்றிலும் வேறுபட்டவை என்றாலும், இன்னும் அதே கொள்கையை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. இதன்மூலம் அவரது பெயர் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கண்டுபிடிப்பு, விமானப் போக்குவரத்து, வழிசெலுத்தல் மற்றும் ஒளி மூலம் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் அவர் உருவாக்கிய பிற கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், அவற்றைவிட இது நிலைத்து நின்றது.

கடந்த 1875ஆம் ஆண்டில், தொலைபேசிக்கு வழிவகுக்கும் சோதனைகளில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இயந்திரங்களைக் கண்டுபிடிப்பது தனது உண்மையான நோக்கம் இல்லையென்று பெல் வலியுறுத்தினார்.

"ஒவ்வொரு நாளும் நான் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்: காது கேளாதோர் மீதான என் ஆர்வம் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும். நான் இந்த வேலையை (ஓர் ஆசிரியராக) ஒருபோதும் கைவிட மாட்டேன். மேலும் வாழ்வில் நான் எவ்வளவு வெற்றிகளைப் பெற்றாலும், உனது கணவர் எப்போதும் காது கேளாதோருக்கான ஆசிரியராக அறியப்படுவார் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று பெல் வலியுறுத்தினார்.

பின்னர், தொலைபேசி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததற்கு வருத்தப்பட்டு, அவர் தனது காதலிக்கு எழுதினார்:

"காது கேளாதோருக்கு கல்வி கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் குழுவை உருவாக்க முடிந்தால், என் கண்டுபிடிப்பு வழங்கக்கூடிய அனைத்து மரியாதைகளையும் பெற்றதைவிட நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பேன்."

அவரது தொழில், ஒரு வகையில், மரபுரிமையாக வந்தது. ஒரு கட்டத்தில் அவரது குடும்பம் அவருக்கு ஒரு வித்தியாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்திருந்தாலும், அவரது சிறு வயதில் இருந்தே, அவரைச் சுற்றியிருந்த விஷயங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள உதவுவதில் தன்னை அர்ப்பணிக்க அவரை ஊக்குவித்தன.

அவரது தாத்தாவும் தந்தையும் சொற்பொழிவு, உச்சரிப்பு ஆகியவற்றைக் கற்பிப்பதில் புகழ்பெற்ற ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். தனது தாயிடம் இருந்து, இசை மீதான பற்றை அவர் வளர்த்துக் கொண்டார். அவரது தாயார் ஏறக்குறைய செவித்திறனை இழந்திருந்தபோதிலும், தனது செவி கேட்கும் கருவியின் குழாயை பியானோவுடன் ஒட்டி வைத்துக்கொள்வதன் மூலம், பியானோ வாசிப்பதை அவரால் கேட்க முடிந்தது.

பெல்லின் தாயார், எலிசா கிரேஸ் சைமண்ட்ஸ் பெல். ஒரு திறமையான பியானோ கலைஞரான அவர் காது கேளாதவராக ஆனார். நீண்ட காலமாக, அவர் தொடர்பு கொள்ள ஒரு கேட்கும் கருவியைப் பயன்படுத்தினார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பெல்லின் தாயார், எலிசா கிரேஸ் சைமண்ட்ஸ் பெல். ஒரு திறமையான பியானோ கலைஞரான அவர் காது கேளாதவராக ஆனார். நீண்ட காலமாக, அவர் தொடர்புகொள்ள ஒரு கேட்கும் கருவியைப் பயன்படுத்தினார்.

அந்தக் காலகட்டத்தில் தாமே அறியாமலேயே, ஒலியை எவ்வாறு அதிக சத்தமாக மாற்றலாம் என்பதற்கான அடிப்படைத் தத்துவத்தை அவர் கற்றுக்கொண்டிருந்தார். இது 'ஒலிப்பெருக்கம்' (Amplification) என்று அழைக்கப்படுகிறது.

அவரது வாழ்வின் நோக்கம் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டது: அதாவது அவரது தாயைப் போன்றவர்கள் பேச உதவுவது.

தனது 16 வயதில், அவர் ஏற்கெனவே பேச்சின் இயக்கவியலை ஆராய்ந்து கொண்டிருந்தார். 18 வயதில், அவர் கற்பிக்கவும், பேச்சு நுட்பங்களை ஆழமாக ஆராயவும் தொடங்கினார். அனால், அவரது இரண்டு சகோதரர்களின் மரணத்திற்குப் பிறகு, அவரது பெற்றோர் தங்கள் மீதமுள்ள ஒரே மகனுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதை உறுதி செய்வதற்காக ஸ்காட்லாந்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர முடிவு செய்தனர்.

அவர்கள் 1870இல் அங்கு சென்றடைந்தனர். அடுத்த ஆண்டு கிரஹாம் பெல் அமெரிக்காவின் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் காது கேளாதோருக்கான பாஸ்டன் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினார்.

அங்குதான் அவர் தன்னைக் கவர்ந்த பெண்ணைச் சந்தித்தார். புத்திசாலியும் துடிப்பிமிக்கவருமான மேபல், ஐந்து வயதில் கேட்கும் திறனை இழந்திருந்தார். மேலும் 1877இல் அவர் பெல்லின் மனைவியானார். அவரது தொழில் காது கேளாதோர் சமூகத்திற்கு ஒரு நீடித்த மரபாக மாறியது அமெரிக்காவில்தான்.

காது கேட்காமல் பேசுதல்

தொலைபேசியின் வெற்றியுடன், கிரஹாம் பெல்லின் நற்பெயரும் புகழும் அவரை மிகவும் மதிக்கப்படும் நபராக மாற்றியது. அவர் தனது உண்மையான ஆர்வமான காது கேளாதோர் கல்வியில் தனது வருவாயை முதலீடு செய்தார். ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயம் இருந்தது.

அவர்களின் பார்வையில், அவர்களுடைய சமூக மற்றும் தொழில்முறை ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி பேச்சு மூலமானது மட்டுமே. இந்த யோசனை திடீரென வரவில்லை. குரல் மற்றும் பேச்சு பற்றிய ஆய்வு மற்றும் அவரது சொந்த குடும்பத்தில் காது கேளாமையின் அனுபவத்தால் ஆழமாகத் தாக்கம் செலுத்தப்பட்ட சூழலில் பெல் வளர்ந்தார்.

அவரது தாயார் பல ஆண்டுகளாகத் தனது செவித்திறனை இழந்திருந்தார். ஆனால் அவர் பேசும் திறனைத் தக்கவைத்துக் கொண்டார். கிரஹாம் பெல்லை பொறுத்தவரை, பேச்சு ஒரு குறிப்பிட்ட சுயாட்சியையும் தனிப்பட்ட ஆற்றலையும் பாதுகாக்கும் என்பதை இது நிரூபிப்பதாகத் தோன்றியது.

பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான கேட்டி பூத், தி இன்வென்ஷன் ஆஃப் மிராக்கிள்ஸ்: லாங்குவேஜ், பவர் அண்ட் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்'ஸ் க்வெஸ்ட் டு எண்ட் டெஃப்னெஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். அவரது கூற்றுப்படி, பெல் தான் உண்மையில் உதவுவதாக நம்பினார்.

"காது கேளாதோருக்கு பேச்சு அதிகாரம் அளிக்கும் என்று அவர் கருதினார்" என்று கேட்டி பூத் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

அவரது கல்வி முன்மொழிவு, காது கேளாத குழந்தைகளுக்குப் பேசவும் உதட்டசைவுகள் மூலம் புரிந்துகொள்ளவும் (lip reading) கற்றுக் கொடுப்பது, சைகை மொழியை பயன்படுத்துவதைக் குறைப்பது அல்லது நீக்குவதாக இருந்தது.

இதில் பிரச்னை என்னவெனில், இந்த முறை மிகப்பெரிய வரம்புகளைக் கொண்டிருந்தது. பெல் சில காது கேளாதோருக்கு பேசக் கற்றுக் கொடுப்பதில் விதிவிலக்கான திறமையைக் கொண்டிருப்பவராகத் தோன்றினார். ஆனால், கிட்டத்தட்ட யாராலும் அவரை நகலெடுக்க முடியவில்லை என்று பூத் சுட்டிக்காட்டுகிறார்.

"அவர் மிகவும் திறமையான ஆசிரியர். ஆனால், அவரது முறையை பிறர் பின்பற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. அவரது சொந்த ஆசிரியர்களுக்குக்கூட அதைக் கற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, ஒலிகளைக் கேட்காமல் பேசக் கற்றுக்கொள்வது அசாதாரணமானது. "ஒலி ஒருபோதும் உங்கள் உலகின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றால், அதை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது," என்று அவர் விளக்குகிறார்.

பெல் ஒரு காது கேளாத பெண்ணுக்கு பேசக் கற்றுக்கொடுக்கிறார். 1872ஆம் ஆண்டில், குறிப்பாக காது கேளாத மாணவர்களுக்கு உச்சரிப்பு முறைகளைக் கற்பிப்பதற்காக பாஸ்டனில் குரல் உடலியல் மற்றும் பேச்சு இயக்கவியல் பள்ளியைத் திறந்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பெல் ஒரு காது கேளாத பெண்ணுக்கு பேசக் கற்றுக்கொடுக்கிறார். 1872ஆம் ஆண்டில், குறிப்பாக காது கேளாத மாணவர்களுக்கு உச்சரிப்பு முறைகளைக் கற்பிப்பதற்காக பாஸ்டனில் குரல் உடலியல் மற்றும் பேச்சு இயக்கவியல் பள்ளியைத் திறந்தார்.

அப்படியிருந்தும், கிரஹாம் பெல்லின் மகத்தான பொது நற்பெயர் இந்த முறையை மேம்படுத்தியது. இது உலகளாவிய கல்வி உலகில் ஏற்கெனவே பரவி வந்த ஒரு விஷயமாகும். மேலும் அது பல தசாப்தங்களாக காது கேளாதோருக்கான கற்பித்தலில் ஆதிக்கம் செலுத்தியது.

அவரது கருத்துகள் அவரது காலத்தின் பரந்த போக்குகளுடன் எதிரொலித்தன என்பதன் தாக்கத்தால் இது நிகழ்ந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அமெரிக்கா ஒரு தீவிரமான சமூக மாற்றத்திற்கு உட்பட்டது.

திரளாக வந்த குடியேறிகளால் புதிதாக இணைக்கப்பட்ட பிரதேசங்கள், ஏற்கெனவே நிறுவப்பட்ட மக்களை, பூர்வீகவாசிகள், மெக்சிகன்கள் மற்றும் பிற சமூகங்களை ஒருங்கிணைத்தபோது, 'அமெரிக்கராக இருப்பது' என்றால் என்ன என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டது.

ஆதிக்க ரீதியிலான பதில் சீரான தன்மையை நோக்கிச் சென்றது. ஆங்கிலத்தைப் பொதுவான மொழியாகக் கொண்டு, அனைவரும் ஒரே கலாசாரம் மற்றும் மொழியியல் மாதிரிக்கு ஏற்ப மாற வேண்டுமென்ற கருத்து ஊக்குவிக்கப்பட்டது. அந்தச் சூழலில் சைகை மொழி பெரும்பாலும் சரிசெய்யப்பட வேண்டிய ஒரு வேறுபாடாகக் காணப்பட்டது.

அதே நேரத்தில், யுஜெனிக்ஸ் போன்ற இயக்கங்கள் சமூக சிந்தனையில் தாக்கம் செலுத்தின. மேலும், கல்வி, உடல் மற்றும் மனதைக் கட்டுப்படுத்துவது காது கேளாதோர் உள்பட சில குழுக்களை "மேம்படுத்த முடியும்" என்ற நம்பிக்கையைத் தூண்டின.

"அமெரிக்க சமூகம் ஏற்கெனவே வித்தியாசத்தைப் பற்றிய பெரும் அச்சத்தைக் கொண்டிருந்தது. அது இயல்புநிலை என்ற எண்ணத்தினுடைய வெறித்தனமான சகாப்தம்," என்று பூத் சுட்டிக்காட்டுகிறார்.

உண்மையில், அந்தக் காலகட்டத்தில்தான் 'இயல்பு' என்ற சொல் ஒரு கணிதச் சொல்லாக இல்லாமல் மக்களுடைய பொதுப் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கிரஹாம் பெல்லின் புதிய வாய்மொழி, அந்த கலாசார சூழலுக்கு சரியாகப் பொருந்துகிறது: காது கேளாதோரை பெரும்பான்மையினரின் தொடர்பு மாதிரிக்கு இயன்றவரை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கு அந்த முறை விரும்பியது.

ஆனால் விஷயங்கள் ஒருபோதும் அவ்வளவு எளிமையாக இருந்ததில்லை.

கிரஹாம் பெல்லின் முயற்சிக்கு வந்த எதிர்ப்புகள்

கிரஹாம் பெல்லின் காலத்திலும்கூட, அவரது இந்தப் பார்வையை எதிர்க்கும் குரல்கள் எழுந்தன. காது கேளாத கல்வியாளர்களும் தலைவர்களும் சைகை மொழியைப் பாதுகாத்துப் பேசி, அதை நீக்குவது ஆழமான தீங்கு விளைவிக்கும் செயல் என்று எச்சரித்தனர்.

"பெல் அவரது கால மனிதர் என்பது உண்மைதான். ஆனால், அவரது காலத்தில் காது கேளாதோர்கள் இருந்தார்கள் என்பதும் உண்மை. அவரது முன்மொழிவு அனைவரிடமும் வேலை செய்யவில்லை என்றும் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் அவருக்கு அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்," என்கிறார் பூத்.

எடுத்துக்காட்டாக, 1869ஆம் ஆண்டில், ஹார்ட்ஃபோர்டில் உள்ள அமெரிக்க காது கேளாதோர் பள்ளியின் இயக்குநர், "கடவுள் கண்ணை நோக்கி இயக்கப்பட்ட ஒரு மொழியை வழங்கியுள்ளார். காது கேளாதவர்களுக்கு, அதுதான் இயல்பான மொழி. அது மட்டுமே ஒரே இயல்பான மொழி," என்று எழுதினார்.

இந்த மோதல் ஆழமானது.

சுமார் 1875ஆம் ஆண்டில் வாஷிங்டன் டி.சி.யில் வெளியிடப்பட்ட, இந்த ஒரு பெரிய கல் அச்சு அட்டையில் இடம்பெற்றுள்ள — அமெரிக்காவின் தேசிய காது கேளாதோர் கல்லூரியைச் சேர்ந்த — சைகை மொழி எழுத்துகளின் விளக்கப்படம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவின் தேசிய காது கேளாதோர் கல்லூரியைச் சேர்ந்த — சைகை மொழி எழுத்துகளின் விளக்கப்படம்

சைகைமுறையை ஆதரிப்போருக்கு, சைகை மொழி ஒரு தாழ்ந்த மொழி அல்ல, மாறாக ஒரு முழுமையான மொழி. வாய்மொழிவாதத்தை ஆதரிப்போருக்கு, பேச்சு என்பது மனித தொடர்புக்கான "சாதாரண", "உலகளாவிய" வடிவத்தைக் குறிக்கிறது.

காலப்போக்கில், மேற்கத்திய உலகின் பெரும்பகுதியில் பெல்லின் வாய்மொழி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக, 1880ஆம் ஆண்டு மிலன் நாடாளுமன்றத்திற்குப் பிறகு, காது கேளாதோருக்கான கல்வியாளர்கள் கற்பித்தல் பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இதன் விளைவுகள் ஆழமானதாகவும் நீடித்ததாகவும் இருந்தது. மேலும் தனது அன்புக்குரியவர்களின் வாழ்க்கையில் அவை பிரதிபலிப்பதை பூத் கண்டார்.

அவரது தாத்தா சைகை மொழி தெரியாத குடும்பத்தில் காது கேளாதவராகப் பிறந்தார். அவர் புரிந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ள அனுமதிக்கும் வகையிலோ மொழி இல்லாமல் வளர்ந்தார்.

அவரது குழந்தைப் பருவம், அமைதியாகக் கழிந்தது. அவரைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வதற்கான மிக அடிப்படையான திறவுகோல் இல்லாமல் அவர் இருந்ததை பூத் நினைவுகூர்ந்தார்.

இறுதியாக அவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டபோது, அவர்கள் அவருக்கு சைகை மொழியை கற்றுக் கொடுக்கவில்லை. சைகை மொழியைக் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர் பேச முயல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

"அவருக்குக் கட்டமைத்துக்கொள்ள எதுவும் இல்லை. மேலும் அவர் தொடர்புகொள்ள ஒரு மொழி இல்லாமல் பள்ளியை முடித்தார்," என்கிறார் பூத்.

'Picture Post' இதழின் முகப்புப் பக்கம், ஏப்ரல் 3, 1948. அக்காலகட்டத்தில் நிலவிய 'வாய்மொழி கற்பித்தல்' அணுகுமுறையின் முக்கியத்துவத்திற்கு இணங்க, காது கேளாத ஒரு குழந்தை பேசக் கற்றுக்கொள்வதை, இடர்களைக் கடந்து வெல்லும் ஒரு வெற்றிக் கதையாகச் சித்தரிக்கும் புகைப்படக் கட்டுரையை இது காட்சிப்படுத்தியிருந்தது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,'Picture Post' இதழின் முகப்புப் பக்கம், ஏப்ரல் 3, 1948. அக்காலகட்டத்தில் நிலவிய 'வாய்மொழி கற்பித்தல்' அணுகுமுறையின் முக்கியத்துவத்திற்கு இணங்க, காது கேளாத ஒரு குழந்தை பேசக் கற்றுக்கொள்வதை, இடர்களைக் கடந்து வெல்லும் ஒரு வெற்றிக் கதையாகச் சித்தரிக்கும் புகைப்படக் கட்டுரையை இது காட்சிப்படுத்தியிருந்தது.

இந்த நிகழ்வுக்கு ஒரு பெயர் உண்டு: மொழி இழப்பு. ஒரு குழந்தை எந்த மொழியையும் சீக்கிரமே அணுகாமல் வளரும்போது, சில அறிவாற்றல் திறன்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம்.

"காது கேட்பவர்களின் உலகில் இது மிகவும் அரிதானது. ஆனால் காது கேளாதோர் உலகில் இது பல தசாப்தங்களாக மிகவும் பொதுவாக நடந்து வருகிறது," என்கிறார் பூத்.

அவருடைய பாட்டியின் கதை இதிலிருந்து வேறுபட்டது, ஆனால் சிறப்பானதாக இருக்கவில்லை.

அவர் ஒரு காது கேளாதோர் இருந்த குடும்பத்தில் வளர்ந்தார். சிறு வயதில் இருந்தே சைகை மொழியைக் கற்றுக்கொண்டார். இருப்பினும், அவர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, அவர் அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் தண்டிக்கப்பட்டார்.

"அவர்களுக்கு மொழியை அணுகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது மட்டுமல்ல. தங்கள் இயல்பான தகவல் தொடர்பு முறை அவமானகரமானது, தாழ்வானது என்றும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது," என்று விளக்குகிறார் பூத்.

தலைமுறை தலைமுறையாக, செவித்திறன் குறைபாடுடைய பல மாணவர்கள் இந்த இரு அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சந்தித்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பெல்லினுடைய சிந்தனையில் நுணுக்கங்கள் இருந்தன. ஆரம்பத்தில், சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டினார். ஆனால், காலப்போக்கில் அவர் காது கேளாதோர் சமூகத்தில் இருந்தும் அதன் விமர்சனங்களில் இருந்தும் அதிகளவில் விலகிக் கொண்டார்.

"அவரது மனதை மாற்றும்படி, அவரை நம்ப வைக்க, காது கேளாதோர் முயன்றனர். அவரது சொந்தப் பள்ளியிலேயேகூட, இந்த அமைப்பு செயல்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அவருக்கு முன்பாக இருந்தன. ஆனாலும் அவர் அதைத் தொடர்ந்தார்," என்கிறார் பூத்.

மேலும் அவர், "காது கேளாதோர் கலாசாரம் பற்றிய அறிவை அவர் வேண்டுமென்றே புறக்கணித்து, இறுதியில் அதை நசுக்கும் ஓர் இயக்கத்தை ஊக்குவிக்க உதவினார் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்," என்றும் குறிப்பிட்டார்.

காது கேளாமை பற்றிய ஆதிக்கக் கருத்து மாற கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் ஆனது. நீண்ட காலமாக இதுவொரு சரிசெய்யப்பட வேண்டிய மருத்துவக் குறைபாடாகக் கருதப்பட்டது.

ஆனால் 1960களில், மொழியியலாளர் வில்லியம் ஸ்டோகோ, பலர் ஒப்புக்கொள்ள மறுத்ததை நிரூபித்தார்: சைகை மொழி ஒரு சிக்கலான மற்றும் முழுமையான இலக்கண அமைப்பைக் கொண்டிருந்தது. அதுவொரு மொழி.

அறிவியல் சான்றுகளுடன் அதை நிறுவுவதன் மூலம், அவரது பணி காது கேளாமை ஆய்வுத் துறையை மாற்றத் தொடங்கியது மற்றும் அதுகுறித்த பார்வையில் ஆழமான மாற்றத்திற்குப் பங்களித்தது.

காது கேளாதோர் மறுவாழ்வு தேவைப்படும் நோயாளிகளாக அல்ல, மாறாக அவர்களின் சொந்த மொழி மற்றும் கூட்டு அடையாளத்துடன் கூடிய மொழியியல் மற்றும் கலாசார சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்படத் தொடங்கினர்.

இன்று, காது கேளாதோர் கலாசாரம் என்று அழைக்கப்படுவது அதன் சொந்த மரபுகள், மதிப்புகள் மற்றும் தொடர்பு வடிவங்களைக் கொண்ட ஒரு சமூகமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மேலும் அந்த மாற்றம் பெல்லின் மரபை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் இன்னும் போற்றத்தக்கவை. ஆனால் பலருக்கு, அவரது கல்விச் சிந்தனைகளின் விளைவுகள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு ஆழமான அடையாளத்தை விட்டுச் சென்றன.

பூத் சொல்வது போல: வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொள்வது அவசியம், ஆனால் அவை அவரை இந்த விமர்சனத்தில் இருந்து விடுவிக்கப் போதுமானதாக இல்லை.

"எதுவுமே அவரை மன்னிக்கவில்லை."

https://www.bbc.com/tamil/articles/c1781rvdy8yo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.