Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, பிரிட்டன், சூயஸ் நெருக்கடி

பட மூலாதாரம்,BBC/Getty images

கட்டுரை தகவல்

  • நிக் எரிக்சன்

  • பிபிசி உலக சேவை

  • 30 மார்ச் 2026, 05:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒரு மாதத்திற்கு முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தூண்டப்பட்ட போர், கணிக்க முடியாத தன்மையிலிருந்து கணிக்க முடிவதாக மாறியுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக ஊடகப் பதிவுகள், குறுகிய காலத்திற்காவது, குழப்பத்தை அதிகப்படுத்தி உலகளாவிய சந்தைகளை உலுக்குவதாகத் தோன்றுவதும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால், இந்தப் போரின் போக்கைத் தீர்மானிப்பதில் டிரம்பின் கருத்துகள் மட்டுமே ஒரு காரணியாக இருக்கவில்லை - வரலாறும் ஒரு காரணியாகத் தெரிகிறது.

மோதல் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். பல வரலாற்று நிகழ்வுகளில், மூன்று முக்கிய அத்தியாயங்கள் தனித்து நிற்கின்றன.

சூயஸ்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, பிரிட்டன், சூயஸ் நெருக்கடி

பட மூலாதாரம்,Hulton-Deutsch/Hulton-Deutsch Collection/Corbis via Getty Images

படக்குறிப்பு,ஆங்கிலோ-பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலை முறியடிப்பதற்காக, சூயஸ் கால்வாயை மறிப்பதன் செயல்திறனை எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் உணர்ந்திருந்தார்.

இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, முதல்முறையாக இரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதிகள் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் இருந்து, இந்த மோதலில் ஒரு புதிய முனைப்பு உருவாகியுள்ளது.

இந்த மோதலில் சக்தி வாய்ந்த இரானிய ஆதரவுக் குழுவின் (proxy) நுழைவு, உலகப் பொருளாதாரத்தில் மேலும் சீர்குலைவுகள் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. ஏனெனில், அந்த ஆயுதக் குழு செங்கடலில், குறிப்பாக சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் திறன் கொண்டது.

உலகளாவிய சரக்கு போக்குவரத்தில் 30% மற்றும் அனைத்துப் பொருட்களின் மொத்த உலகளாவிய வர்த்தகத்தில் ஏறத்தாழ 15% வழக்கமாகப் பயணிக்கும் அந்த முக்கிய நீர்வழியை ஹூத்தி குழுவால் உண்மையில் மறிக்க முடியாது, ஆனால் அதனால் கால்வாய்க்கான அணுகலைக் கடுமையாகச் சீர்குலைக்க முடியும். இவற்றுடன், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையில் இரான் ஏற்படுத்தி வரும் இடர்பாட்டையும் சேர்த்தால், உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவை அனைத்தின் பின்னணியில், மத்திய கிழக்கில் இன்றைய போரின் பெரும் பின்விளைவுகள் குறித்த ஒரு பாடத்திற்காக, 70 ஆண்டுகளுக்கு முந்தைய சூயஸ் நெருக்கடியை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1956-ல் எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர், சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கியபோது, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடங்களில் ஒன்றின் கட்டுப்பாட்டை அவர் கைப்பற்றினார். இதற்குப் பதிலடியாக, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அதை மீண்டும் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, பிரிட்டன், சூயஸ் நெருக்கடி

பட மூலாதாரம்,Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Images

படக்குறிப்பு,சூயஸ் நெருக்கடியை கையாண்ட விதத்துக்காக எகிப்து அதிபர் கமால் நாசர் அந்த பிராந்தியத்தில் ஒரு நாயகனாக பார்க்கப்பட்டார்

டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு, வரலாறு இதுகுறித்த சில சிந்திக்க வைக்கும் பாடங்களை வழங்குகிறது.

"மற்ற எதையும் விட, ஒரு உலக வல்லரசாக பிரிட்டனின் காலம் முற்றிலுமாக முடிந்துவிட்டது என்பதையே அது (சூயஸ் நெருக்கடி) குறித்தது," என்கிறார் பிபிசியின் சர்வதேசப் பிரிவு ஆசிரியர் ஜெர்மி போவன்.

"முதலாம் உலகப் போரிலிருந்து பிரிட்டன் மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தைக் கொண்டிருந்தது, அதன் முடிவின் தொடக்கமாகவும் சூயஸ் நெருக்கடி அமைந்தது."

உலகப் பொருளாதாரத்தின் இன்றியமையாத பொருளாதார வழித்தடங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் வகையில், தெஹ்ரானும் ஹூத்திகளும் தற்போது கையாண்டுவரும் தந்திரங்கள், கமால் நாசரின் பதிலடியை ஒத்திருக்கின்றன.

சூயஸ் கால்வாயின் வடமுனையில் ஆங்கிலோ-பிரெஞ்சுப் படைகள் கரைக்கு வந்திறங்குவதற்குள், நாசர் டஜன்கணக்கான கப்பல்களை மூழ்கடித்து, கால்வாயைத் தடுத்து, பாரசீக வளைகுடாவில் உள்ள ஐரோப்பாவின் எண்ணெய் வயல்களுக்கான உயிர்நாடியை திறம்படத் துண்டித்திருந்தார் என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆல்ஃபிரட் டபிள்யூ. மெக்காய் சுட்டிக்காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்துடனான பனிப்போரில் ஒரு விரிவடைந்து வரும் அபாயகரமான மோதல் தளம் உருவாவது குறித்துக் கவலை கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் பிரிட்டனையும் பிரான்சையும் பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தினார்.

"இதற்குள்... பிரிட்டன் மீது ஐக்கிய நாடுகள் சபையில் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன, அதன் நாணயம் சரிவின் விளிம்பில் இருந்தது, அதன் ஏகாதிபத்திய அதிகாரத்தின் பொலிவு மங்கிவிட்டது. அதன் உலகளாவிய பேரரசு அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது," என்று மெக்காய் எழுதுகிறார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, பிரிட்டன், சூயஸ் நெருக்கடி

பட மூலாதாரம்,Smith Collection/Gado/Getty Images

படக்குறிப்பு,1973-ம் ஆண்டில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி அமெரிக்க மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் ஒரு தசாப்தத்திற்கு நீடித்தது.

இருப்பினும், இன்றைய மோதலுடனான ஒப்புமைகள் துல்லியமானவை அல்ல என்கிறார் போவன். "தற்போதைய அமெரிக்காவின் வலிமையை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிரிட்டனின் வலிமையுடன் நான் ஒப்பிடவில்லை; ஆனால், சக்தி வாய்ந்த நாடுகள் அனைத்தும் எழுச்சியும் வீழ்ச்சியும் அடையும் என்பதே நான் கூற வருவது. அமெரிக்கா சீனாவின் எழுச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மக்கள் அமெரிக்காவின் வீழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினால், அது வரலாற்றாசிரியர்களால் அந்தப் பாதையில் ஒரு இடைநிலை கட்டமாக எழுதப்படலாம்; விளைவுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் தொடங்கப்பட்ட ஒரு போர்."

ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் புரிந்துகொள்ள, கடந்த 70 ஆண்டுகளில் வரலாறு வழங்கிய மேலதிகப் பாடங்களை ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...   https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

1973 - எண்ணெய் நெருக்கடி

அதைத் தொடர்ந்த பத்தாண்டுகளில், அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் முக்கியப் பொருளாதார வழித்தடங்களைத் தடுக்கும் செயல் மீண்டும் நிகழ்ந்துள்ளது. எனவே இது இன்று முற்றிலும் கணிக்கக்கூடியதாகவே இருந்தது என்கின்றனர் இவ்விவகாரத்தை உற்றுநோக்குபவர்கள்.

பேரழிவை ஏற்படுத்திய சூயஸ் கால்வாய் நடவடிக்கைக்குச் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கான மிகத் தெளிவான எடுத்துக்காட்டுகளில் ஒன்று வெளிப்பட்டது.

"1973-ல் இஸ்ரேல், எகிப்து மற்றும் சிரியா இடையே ஒரு போர் நடந்தது. அது எகிப்தியர்கள் மற்றும் சிரியர்களால் [இஸ்ரேல் மீது] நடத்தப்பட்ட ஒரு திடீர் தாக்குதல் - யோம் கிப்பூர் போர் என்று அழைக்கப்பட்டது. அமெரிக்கர்கள் இஸ்ரேலுக்குள் ஆயுதங்களைக் குவித்தனர்," என்கிறார் போவன்.

அதன்பிறகு, அரபு நாடுகள் ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்து பதிலடி கொடுத்தன. அது எண்ணெய் விலையை பெருமளவில் உயர்த்தியதுடன், மேற்கு ஐரோப்பாவில் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

சௌதி அரேபியாவின் அப்போதைய எண்ணெய் அமைச்சரான ஷேக் அகமது ஸாகி யமானி, 1973-ஆம் ஆண்டில், உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் போன்ற வளங்களை எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்பது குறித்துத் தெளிவாகக் கூறினார். உற்பத்தியின் மீது அரபு நாடுகளுக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டை, உலகப் பொருளாதாரங்களை விரைவாக "சரிவடையச்" செய்யக்கூடிய ஒரு "எண்ணெய் ஆயுதம்" என்று அவர் விவரித்தார்.

இந்தத் தடை ஐந்து மாதங்கள் நீடித்தது, ஆனால் அதன் தாக்கம் ஒரு தசாப்த காலமாக உணரப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, அமெரிக்காவிலும், தங்கள் உற்பத்திக்கு எண்ணெயைப் பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகளிலும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நாடுகளின் நாடுகளின் மத்திய வங்கிகள் போராடியதால், அதனுடன் வட்டி விகிதங்களும் உயர்ந்தன.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, பிரிட்டன், சூயஸ் நெருக்கடி

பட மூலாதாரம்,Hulton Archive/Getty Images

படக்குறிப்பு,1973 ஆம் ஆண்டு யோம் கிப்பூர் போர், போர்க்களத்தில் மட்டுமல்ல, சர்வதேச எண்ணெய் சந்தைகளிலும் நடைபெற்றது.

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல, ஒரு சரக்காக எண்ணெய் தற்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும், உலகளாவிய தேவையின் பங்கு அக்காலத்தை விடக் குறைவாக இருந்தாலும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், மேலும் பல்வகைப்பட்ட எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு இப்போது வளர்ந்து வந்தாலும், அது இன்னமும் ஒரு முக்கியமான வளமாகவே உள்ளது. 1973 மற்றும் அதற்குப் பிறகான நிகழ்வுகள் டிரம்புக்கு முக்கியப் பாடங்களை வழங்குகின்றன.

அரை நூற்றாண்டுக்கு முன்பு போலன்றி, அமெரிக்கா இப்போது தனது நுகர்வை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்தாலும், அது இன்னும் கணிசமான அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது மற்றும் உலகச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெயின் விலையால் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது. இது இறுதியில் அமெரிக்க நுகர்வோரைப் பாதிக்கும்.

ஆசியாவில் உள்ள அதன் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் மீதான அழுத்தங்கள் மூலமாகவும் அந்நாடு மறைமுகமாகப் பாதிக்கப்படலாம் - ஏனெனில், அந்நாடுகளிடம் பன்முகப்படுத்தப்பட்ட எரிசக்தி விநியோகம் இல்லை. தற்போதைய எண்ணெய் பற்றாக்குறையால் அந்நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

"சௌதி அரேபியாவும், எமிரேட்ஸும் மற்றும் பிற நாடுகளும் ஐரோப்பாவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெயை விற்கப் போவதில்லை என்று சொல்வதல்ல (இப்போது நடப்பது)," என்கிறார் போவன். "ஆனால் இரானும், ஒருவேளை ஹூத்திகளும் கூட, அந்நாடுகள் தங்கள் சந்தையை அணுகுவதை மிகவும் கடினமாக்குகின்றன. எண்ணெய் மிகவும் முக்கியமானது. அந்த விநியோகத்தை துண்டித்தால், அது பெரும் உலகளாவிய சீர்குலைவை ஏற்படுத்தும்."

இரான் - இராக் போர்

1980-களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த இரான்-இராக் போர், வாஷிங்டனின் எதிரிகள் முக்கியப் பொருளாதார உள்கட்டமைப்புகளை எவ்வாறு தடுக்க முடியும் என்பதற்கு, டிரம்புக்கு மிகவும் சமீபத்திய மற்றும் வலுவான வரலாற்று உதாரணங்களை வழங்குகிறது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

அந்தப் போரின் பிற்பகுதியில், உலகின் வல்லரசுகளை மோதலுக்குள் இழுக்கும் முயற்சியாக, ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல் போக்குவரத்தை இரானும் இராக்கும் குறிவைத்தன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1980-களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதிக்குள், தாக்குதல்கள் மிகவும் தீவிரமடைந்ததால், குவைத் தனது கப்பல்களை அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செலுத்துவதற்கு சர்வதேச உதவியைக் கோரியது. தனது பனிப்போர் எதிரியான சோவியத் ஒன்றியம் முந்துவதை விரும்பாத அமெரிக்கா அதற்கு ஒப்புக்கொண்டது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, பிரிட்டன், சூயஸ் நெருக்கடி

பட மூலாதாரம்,Barry Iverson/Getty Images

படக்குறிப்பு,இரான்-இராக் போரின் போது மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் ஏர்னஸ்ட் வில்', ஹோர்மூஸ் நீரிணையில் நிலவிய பகைமைச் சூழல்களைக் கையாள்வதில் அமெரிக்காவின் சில குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

'ஆபரேஷன் ஏர்னஸ்ட் வில்' என்று அழைக்கப்பட்ட, எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணி 1987 ஜூலையில் தொடங்கியது. அதனால் பாதுகாக்கப்பட வேண்டிய கப்பலான பிரிட்ஜ்டன், குவைத்திற்குச் செல்லும் வழியில் இரானியக் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதால் இப்பணி விரைவில் அமெரிக்காவுக்கு ஒரு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம், நீரிணையில் அமெரிக்காவின் கண்ணிவெடி அகற்றும் திறன்கள் எவ்வளவு போதுமானதாக இல்லை என்பதை எடுத்துக்காட்டியது என்றும், இந்தப் பிரச்னை அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பாதித்து வந்தது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றைய மோதலையும், ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்த நிலையில் வைத்திருக்க கடற்படைப் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் பிற நாடுகளிடமிருந்து செயல்பாட்டு ஆதரவைக் கோரிய டிரம்பின் சமீபத்திய அழைப்பையும் பார்க்கும்போது, இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள் தெளிவாகத் தெரிகின்றன.

ஆனால், போர்க் கருவிகள் விரிவடைந்து, உதாரணமாக, டிரோன்களையும் உள்ளடக்கியிருப்பதாலும், இரான் இராக்குடன் ஒரு நீண்டகாலப் போரில் இல்லை என்பதாலும் அமெரிக்காவுக்கு இன்றைய சவால் இன்னும் பெரிதாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்கில் தற்போது நடக்கும் போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அதன் முக்கிய கதாபாத்திரங்களுக்கு, வரலாறு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. அவர்கள் இந்தப் பாடங்களை எந்த அளவுக்கு உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பது, இந்த உலகளாவிய கொந்தளிப்பின் போக்கையும் போர் நீடிக்கும் கால அளவையும் பாதிக்கக்கூடும்.

பிரச்னைகளை பேசுவோம்

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

Contact form

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn78xg5vy16o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.