Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித நேயப் பணிகளுக்கான தடையும் போருக்கான ஆயுதக் கொள்வனவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித நேயப் பணிகளுக்கான தடையும் போருக்கான ஆயுதக் கொள்வனவும்

[25 - November - 2007]

* பாதுகாப்பு நிலைவரம்

-விதுரன்-

இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பெரும் நெருக்கடிகளேற்பட்டுள்ளன. புலிகளுக்கெதிரான போரெனக் கூறி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கும் கடத்தப்பட்டு காணாமல் போவதற்குமெதிராக குரலெழுப்புவோருக்கு எதிராக தெற்கில் தோன்றிய கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் அமைப்புக்களை தடை செய்வதிலும் அவர்களை வெளியேற்றுவதிலும் அரசு தீவிரம் காட்டுகிறது.

யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு மக்களை அனைவரும் கைவிட்ட நிலையில் அவர்களுக்கு உதவியது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டுமே. அவர்களது சேவை உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்புப் பெற்றபோது, கடல்கோள் அனர்த்த காலத்தில் அவர்களுக்கு பெருமளவு உதவிகள் கிடைத்தன. இதன் மூலம் அவர்களது பணி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டது.

இதனால் சினமுற்ற இலங்கை அரசு இதற்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. வடக்கு - கிழக்கில் இதன் செயற்பாட்டை முடக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பில் துணைப் படைகளால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்கள் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொழும்பில் அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டன.

புலிகளுக்கு நிதிசேகரிப்பதாகவும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதாகவும் புனர்வாழ்வுக் கழகம் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது, அதன் சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வந்த மறுகணமே இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடைசெய்துள்ளது.

இதனால், திருப்தியடையாத இலங்கை அரசு தற்போது ஐ.நா. அமைப்பான `யுனிசெவ்' பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளது. அதன் செயற்பாடுகள் குறித்து கேள்வியெழுப்புவதுடன் அதன் மனிதாபிமானச் செயற்பாடுகளை முடக்குவதற்காக அவர்களையும் புலிகளுடன் சம்பந்தப்படுத்துவதன் மூலம் வடக்கு - கிழக்கிற்கு கிடைக்கும் மிகக் கொஞ்ச மனிதாபிமான உதவிகளும் கிட்டாது போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் குறித்தோ அல்லது மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்தோ அரசு கவலைப்படும் நிலையிலில்லை. இனப்பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுக்களூடாக தீர்வு காணப்பட வேண்டுமெனத் தினமும் வலியுறுத்தும் சர்வதேச சமூகம், அந்தச் சமாதானப் பேச்சுக்குரிய புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது மௌனம் சாதித்தமை, இலங்கை பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை கண்டுவிட முடியுமெனக் கருதும் இலங்கை அரசின் நிலைப்பாட்டிற்கு உத்வேகமளிப்பதாகவேயுள்ளது.

இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவும் இந்தியாவும் இரட்டை வேடம் பூணுவது இன்று வெளிப்படை. அமெரிக்கா தனது சொந்த நலன்கருதியும் தனது வல்லாதிக்கத்தை உலகளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் நோக்கிலும் இந்தப் பிராந்தியத்தினுள் இலங்கையின் உதவியுடன் நுழைந்து விடலாமென்ற நோக்கில் செயற்படுகிறது. ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் ஒன்றென்பதை உலகளாவிய ரீதியில் அமெரிக்கா இன்று செயல்மூலம் நிரூபித்து வருகிறது.

அதேநேரம், இந்தியா இன்றும் ஈழத் தமிழர்களுக்கு துரோகமிழைப்பது மத்திய அரசின் முடிவாலேயே என்பதை தமிழ்நாடு உணரவேண்டும்.பக்கத்து நாட்டில் தனது இனம் அழிந்து கொண்டிருக்கையில் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழகம், தனது மாநிலத்தில் தலைவரொருவரை நியமிப்பதற்குக் கூட டில்லியில் கையேந்தும் நிலையிலுள்ளது.

இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வாக்கினால், கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு மாதங்களில் இரு முதல்வர்கள் பதவியேற்றும் இல்லாத ஜனநாயகத்தை காப்பாற்ற இன்று அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்ட நிலைதான் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வாகக் கிட்டும்.

எந்த நேரத்திலும் மாநில அரசுகளின் தலைமேல் கத்தி தொங்குவதுதான் இந்திய ஜனநாயகமென்றால், இந்தளவுக்கு உயர்த்தியாகங்களின் பின்னரும் தலைமேல் தொங்கும் கத்தியொன்றுக்காக ஈழத் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை இடைநடுவில் நிறுத்த வேண்டுமென நினைப்பது இந்திய ஜனநாயகமாகும்.

ஈழத் தமிழரை அழிப்பதற்காக இந்தியா மட்டுமல்ல, அமெரிக்காவுடன் ஈரானும் பாகிஸ்தானும் போட்டி போடுகின்றன. இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதில் முன்னணியில் நிற்பதில் நீயா, நானா என இவை போட்டி போடுகின்றன. வன்னியில் போடும் ஒவ்வொரு விமானக் குண்டுகளையும் ஏவும் விமானப் படையின் விமானிகளாக இன்று செயற்படுவது பாகிஸ்தான் விமானப் படையை சேர்ந்தவர்களென இந்திய புலனாய்வுத் துறை கூறுகிறது.

அமெரிக்க ராடர்கள், புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் கண்டுபிடிக்க அமெரிக்க கப்பல்கள் (நவீனரக படகுகள்) அதனையும் மீறினால் மிக நவீன உளவு விமானங்களையும் அமெரிக்கா வழங்குவதும் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை அளிப்பதும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கோ அல்லது இனப் பிரச்சினைக்கோ சமாதானத் தீர்வைக் காணவல்ல, இராணுவத் தீர்வைக் காணுங்கள், முடியாவிட்டால் சமாதானத் தீர்வையாவது காணுங்கள் என்பதற்காகத்தான்.

இந்தியாவுக்கு இன்று பாகிஸ்தான் எதிரி. அமெரிக்காவுக்கு இன்று ஈரான் எதிரி. ஆனால், எதிரிக்கு எதிரி நண்பனென்று இந்த எல்லா நாடுகளிடமிருந்தும் இலங்கை ஆயுதங்களையும் போர்த் தளபாடங்களையும் வாங்கிக் குவிக்கிறது. வடக்கில் யுத்தத்தை தீவிரப்படுத்துவதற்காக இந்த நாடுகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பாரிய இராணுவ உதவிகள் கிடைக்கிறது. அடிக்கடி கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வரும் இந்திய விமானங்கள் பெருமளவு ஆயுதங்களை இறக்குவது இரகசியமல்ல. ஆயுத உதவிகளை மட்டுமல்ல புலனாய்வுத் தகவல்களையும் இந்தியா வழங்கிவருகிறது. இந்தியப் படையினர் புலனாய்வுத் தகவல்களை வழங்காவிட்டால் இலங்கைக் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாதென்பது இலங்கை அரசின் தகவல்களல்ல, இந்தியாவே இதனைக் கூறியுள்ளது.

ஈழத் தமிழர்களை 25 வருடங்களாக இலங்கை விமானப் படை கொன்றொழித்த போது கைகட்டி, வாய்மூடி மௌனம் சாதித்த இந்தியா, விடுதலைப் புலிகளின் விமானங்கள் பறந்தபோது, அது சர்வதேசத்திற்கே ஆபத்தென்றது.

இலங்கையில் கூட பொதுமக்களின் இலக்குகளை புலிகளின் விமானங்கள் தொடாத போதிலும் புலிகளின் விமானங்கள் சர்வதேசத்திற்கு ஆபத்தென இந்தியா பதறுகிறது.

இதனால்தான் ராடர்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்பவற்றுடன் நின்றுவிடாது, இலங்கை விமானப் படை இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது உலகெங்கிலுமிருந்தும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை குறைந்த வட்டிக்கு வழங்கியுள்ளது. இவற்றைக் கூட ஈழத்தமிழர் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் காண்பதற்காக வழங்கப்படும் உதவியெனக் கூட இந்தியா கூறக்கூடும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்வது எல்லைப் புறங்களில் மட்டுமே. ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவ்விரு நாடுகளும் கைகோர்த்தே நிற்கின்றன. இதனால்தான் இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவிகள் வழங்கும்போது பாகிஸ்தானும், பாகிஸ்தான் உதவும் போது இந்தியாவும் மௌனம் சாதிக்கின்றன.

இதற்கு ஒருபடி மேல் சென்றுள்ள இந்தியா, இலங்கையை மிரட்டியும் ஆயுதங்களை விற்க முயல்கிறது. சீனாவிடமிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமிருந்தோ ஆயுதங்களை கொள்வனவு செய்யக்கூடாதென மறைமுகமாக எச்சரிக்கிறது. ஈழத்தமிழர்களைக் காப்பாற்றவே இந்தியா இவ்வாறு செய்கிறதென எவராவது எண்ணிவிட்டால் அது சுத்த முட்டாள்தனம். ஈழத்தமிழர்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களும் போர்த் தளபாடங்களும் எங்களிடமிருக்கையில், ஏன் எங்களை விட்டு சீனாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் இவ்வாறான ஆயுதங்களை வாக்குகிறீர்களென்பது தான் இந்தியாவின் கோபமாகும்.

அல்லல்பட்டு, உயிர்களையிழந்து அகதிகளாகி, ஆதரவற்ற தமிழ் மக்களை முழு உலகமும் கைவிட்டபோது ஓடி வந்து உதவிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுக்கள் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டுமெனக் கூறிய அமெரிக்கா, அந்த சமாதானப் பேச்சுக்குரிய தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட ஓரிரு தினங்களில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை அள்ளி வழங்கியது.

ஈழத் தமிழர்களுக்கு உதவும் நிறுவனங்களை முடக்குவதுடன், மனித உரிமைகளை மிக மோசமாக மீறும் நாடென சர்தேச சமூகத்தால் வர்ணிக்கப்படும் இலங்கைக்கு இராணுவ ரீதியில் பேராதரவை வழங்கியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளார். தங்களுக்கெதிராக மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குரல் கொடுக்கையில் அந்த மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா போராயுதங்களை வழங்கியமை இலங்கை அரசை உச்சிகுளிரச் செய்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே. இலங்கை விடயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்போதுமே தோல்வியடைந்துள்ளது. இதனால்தான் இலங்கைப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை காணும் விதத்தில் இலங்கையை மிரட்டியோ அல்லது ராஜதந்திர ரீதியிலோ பணியவைக்க முடியவில்லை. இவற்றுக்கு மாறாக ஏனைய நாடுகளுடன் போட்டி போட்டு தானும் ஆயுதங்களை விற்று வருகிறது.

தனது மோசமான நடவடிக்கைகளாலும் தவறான வெளியுறவுக் கொள்கையாலும் தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகள் அனைத்துமே (இலங்கை உட்பட) தனக்கெதிராக இருக்கையில், தனது ஆதரவுக்காக ஏங்கும் ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைப்பதை இந்தியா இன்று தலையாய கடமையாகக் கொண்டுள்ளது.

இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியாவிலிருந்து புலிகளின் கப்பல்கள் வருவதாக புலனாய்வுத் தகவல்களை வழங்கும் இந்தியாவுக்கு, இலங்கை விமானப் படையினரின் விமானங்களை செலுத்துவது பாகிஸ்தான் விமானப்படையினர்தானெனத் தெரியாமல் போனது, வானிலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணுக்கு தனது கண்ணிமை மட்டும் தெரியாமல் போனதென்ற கதையாகிவிட்டது.

இந்த நிலையில்தான் ஈரானுடன் 1400 கோடி ரூபா ஆயுதக் கொள்வனவில் இலங்கை அரசு ஈடுபடவுள்ளது. அடுத்த சில தினங்களில் ஈரான் செல்வவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த ஆயுதக் கொள்வனவு குறித்தும் முடிவெடுக்கவுள்ளார். இதன்மூலம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட முப்படையினருக்கும் பெருமளவு போர்த் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இவ்வாறு இலங்கை அரசு சர்வதேசமெங்கும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு பெரும் போரில் ஈடுபட்டு வருகையில் புலிகளின் நடவடிக்கைகளும் விரிவடைந்ததாகவே இருக்கக்கூடும். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கி ஈழத்தில் மனிதாபிமானப் பணிகளை முடக்கிய அமெரிக்கா, இலங்கைக்கு இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்வதன் மூலம் மனிதப் பேரழிவுகளுக்கு வழிகோலியுள்ளது.

அமெரிக்காவினதும் இந்தியாவினதும் செயற்பாடுகள் ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு துணைபோகப்போகின்றன. அதேநேரம், வடக்கே பேரழிவுகளை ஏற்படுத்த இலங்கை அரசு முனையும்போது அதன் பதில் நடவடிக்கை எப்படியிருக்குமென்பதை எவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மனித உரிமைகளை இந்த அரசு அறவே மீறிவிட்ட நிலையில் புலிகள் மட்டுமே மனித உரிமைகளை மதிக்க வேண்டுமென ஆயுதங்களை வழங்கும் நாடுகள் வலியுறுத்த முனைகின்றன.

நாளை மறுதினம் மாவீரர் தின உரையில் இவை குறித்தெல்லாம் விடுதலைப்புலிகளின் தலைவர் விளக்கமளிப்பார். இந்த அரசின் சமாதான முயற்சிகளுக்கு தாங்கள் வழங்கிய கால அவகாசம் முடிந்துவிட்டதென்பதை அவர் தெளிவுபடுத்துவார். இனிமேல் போர்தான் முடிவு என அவர் கூறவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பெரும் போர் நடைபெற்றுவருகிறது.

இதனால், புலிகளின் தலைவர் ஈழத் தமிழர்களுக்கான தனி அரசை உருவாக்கும் சாத்தியம் தொடர்பாக எதையாவது சுட்டிக்காட்டுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கே எவ்வேளையிலும் புலிகள் பெரும் தாக்குதல்களை நடத்திவிடலாமென்ற அச்சத்தில் தினமும் தாக்குதல்களை நடத்திவரும் படையினர், புலிகளை தாக்குதல் நிலையிலிருந்து தற்காப்பு நிலையில் வைத்திருக்கவே முயல்கின்றனர்.

மாவீரர் தினம் முடிவடைந்ததும் வடக்கே பாரிய தாக்குதல்களை நடத்தும் விதத்தில் தற்போது படையினர் செயற்பட்டு வருகின்றனர். இதனால், மாவீரர் தினம் முடிவடைந்ததும் மற்றொரு பாரிய தாக்குதலை படையினர் நடத்தும் சாத்தியமுள்ளது

http://www.thinakkural.com/news/2007/11/25...s_page40998.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.