Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய மொந்தையில் புளித்த கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மொந்தையில் புளித்த கள்

-மறவன்புலவு க. சச்சிதானந்தன்

1935இல் இந்திய அரசுச் சட்டத்தைப் பிரித்தானிய அரசு நிறைவேற்றியது. இந்தியத் தேசியவாதிகளுக்கு அந்தச் சட்டம் எட்டிக் காயானது. இந்தியா மீதான மேலாதிக்கத்துக்கு மேலும் வலுவூட்டும் சட்டம் எனக் கூறினர்; ஏற்க மறுத்தனர். தன் மேலாதிக்க நோக்கை நிறைவேற்றவும் நீடிக்கவும் அரசியல் அடிமைகளாக இந்திய மக்களைத் தொடர்ந்து வைத்திருக்கவும் இத்தகைய சட்டங்கள் பிரித்தானிய அரசுக்குச் தேவை என இந்தியத் தேசியவாதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

1978இன் இலங்கை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை 1987 கார்த்திகையில் இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய பொழுது, தமிழர் மீதான சிங்கள மேலாதிக்கத்தை நீடிக்க உதவும் திருத்தம் எனத் தமிழ்த் தேசியவாதிகள் கூறினர்.

அந்தத் திருத்தத்தை ஆதரித்து, விளைவாக எழுந்த மாகாண அவையில் 1988 கார்த்திகையில் முதலமைச்சர் ஆனவர் வரதராசப் பெருமாள். அவரும் சார்ந்தவர்களும், 1990 பங்குனியில் நடைபெற்ற வடகிழக்கு மாகாண அவையின் இறுதிக் கூட்டத்தில் இயற்றிய தீர்மானம், தமிழ் ஈழம் அமைப்பதே தமிழரும் சிங்களவரும் அமைதியாக வாழ்வதற்கு உரிய வழி என்பதாகும்.

13ஆவது திருத்தத்தை ஆதரித்துப் பதவியில் இருந்து, கொழும்பு அரசிடம் எவ்வித அதிகாரப் பகிர்வையும் பெறமுடியாத நிலையில், தமிழ் ஈழம் அமைப்பதே தீர்வு என்ற முடிவுக்கு வந்து, 13ஆவது திருத்தத்தைத் தமிழர் சார்பில் புதைகுழிக்குள் போட்டனர்.

1987 -1990 காலப் பகுதியில் அனைத்துத் தரப்புத் தமிழரும் தூக்கி எறிந்த 13ஆவது திருத்தத்தைத் தமிழர் நிலத்தில் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருமாறு, 2005 ஆனி முதலாகக் கலந்துரையாடிய அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் அமைச்சர் தீசர் விதாரணை 23.1.2008 அன்று இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராசபட்சாவிடம் கொடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில்:

1) 1987ஆம் ஆண்டின் இலங்கை இந்திய உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அப்பொழுது இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அந்த 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

2) தமிழரின் மரபு வழித் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை 1987ஆம் ஆண்டின் இலங்கை இந்திய உடன்பாட்டுக்கு அமைய இணைத்து ஒரே மாகாணமாக்கியமை சட்ட வலுவற்றது என இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தனித் தனி மாகாணங்களாகக் கருதி இரு மாகாண அவைகளை அமைக்குமாறு அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

3) கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தக்கூடிய அமைதிச் சூழ்நிலை இருப்பதால், உடனடியாகக் கிழக்கு மாகாண அவைத் தேர்தலை நடத்துமாறு அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

4) வடக்கு மாகாணத்தில் அமைதிச் சூழ்நிலை இல்லையாதலால், பாராபட்சமற்ற முறையில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லாத சூழ்நிலையில், அந்த மாகாணத்தை நன்றாக அறிந்தோர் கொண்ட இடைக்கால ஆட்சி அவை ஒன்றைக் குடியரசுத் தலைவர் அமைக்கவும் அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

5) சட்டவாக்கம், ஆட்சி என்பனவற்றில் அதிகாரங்களை 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண அவைகளுக்குப் முழுமையாகக் கொடுக்கவும், போதுமான நிதி ஆதாரங்களை வழங்கவும், மாகாணத் துறைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை அந்தந்த அவைகளே முழுமையாகச் செலவு செய்யவும் ஆட்சி மொழியாக் தமிழை நடைமுறைக்குக் கொண்டுவரவும், தமிழ்மொழி தெரிந்த காவலர், நீதிமன்றங்களில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் போன்ற பதவிகளைத் தேவைக்கேற்ப ஏற்படுத்தியும் நிரப்பியும் தமிழர் உரிமைகளைப் பேணுவதுடன் தமிழ்ப் பகுதியில் வாழும் சிங்களவரின் மொழி உரிமைகளையும் பேணவேண்டும் என அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

அனைத்துக் கடசிக் குழுவா?

கடந்த 18 மாதங்களாக இயங்கிவந்த அனைத்துக் கட்சிக் குழுவில், 14 கட்சிகளே இறுதிவரை பங்குபற்றின.

சிங்களப் பொதுவுடைமைக் கட்சிகள் 23இல், 3 கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே பங்குபற்றினர்.

முக்கிய எதிர்க் கட்சியான இரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்தும் பங்குபற்றவில்லை.

மகிந்த இராசபட்சாவுக்கு நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர்களுடன் ஆதரவு கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணியை (ஜேவிபி) அழைத்தும் பங்குபற்றவில்லை.

புத்த பிக்குகளின் கட்சி பங்குபற்றியது.

முஸ்லிம் கட்சிகளுள் இரு கட்சிகளே பங்குபற்றின.

மலையகத் தமிழர் கட்சிகளுள் 4 கட்சிகளே பங்குபற்றின.

தமிழர் கட்சிகள் பலவுள், 17 நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பைப் பங்குபற்ற அழைக்கவுமில்லை, கருத்துக் கேட்கவுமில்லை. விடுதலைப் புலிகளுடன் ஒத்துப்போகிற அவர்கள் தாமாகப் பங்குபற்றவுமில்லை, வெளியிலிருந்து கருத்துச் சொல்லவுமில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிர்முகாமில் உள்ள தமிழர் கட்சிகள் பலவுள், நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட ஈழ மக்களாட்சிக் கட்சி (டக்ளஸ் தோவானந்தா) மட்டும் பங்குபற்றியது. தமிழர் விடுதலைக் கூட்டணியோ (ஆனந்தசங்கரி), தமிழீழ விடுதலைக் கழகமோ (சித்தார்த்தன்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோ (ஷ்ரீதரன், வரதராசப்பெருமாள்) பங்குபற்றவில்லை.

கலந்து கொண்ட 14 கட்சிகளும் ஏதோ ஒருவகையில் ஆளும் கட்சியைச் சார்ந்திருப்பன, ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுப்பன.

எனவே, இந்தக் குழு அனைத்துக் கட்சிக் குழு என்பதைவிட, ஆளும் கட்சிக் குழு என்பதே பொருத்தமானது.

புளித்த கள் புதிய மொந்தையில்...

புதிதாக எதையும் இக்குழு 23.1.2008 அன்று பரிந்துரைக்கவில்லை.

ஏற்கெனவே சிங்களப் பகுதிகளில் ஏழு மாகாணங்களில் நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு விதிகளை, 1990 பங்குனி முதலாக இந்நாள் வரை தமிழ்ப் பகுதிகளில் நடைமுறையில் இல்லாத 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் சேர்த்துத் தமிழ்ப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துமாறு பரிந்துரைத்திருப்பது வேடிக்கை.

இந்திய - இலங்கை 1987 உடன்பாட்டிலுள்ள வட - கிழக்கு இணைப்பை மீள ஏற்படுத்துமாறு இக்குழு பரிந்துரைக்கவில்லை.

1987இலேயே 13ஆவது திருத்தம் போதுமான அரசியல் ஏற்பாடல்ல எனக் கூறிய விடுதலைப் புலிகள், இன்றுவரை அந்த நிலையிலிருந்து மாறவில்லை. அதனால்தான், தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளைத் தம் ஒரே அரசியல் பிரதிநிதியாகத் தமிழீழத்தில் சிங்கள அரசு நடத்திய கடந்த மூன்று தேர்தல்களிலும் உறுதி செய்தனர். தமிழீழ மக்கள் தொடர்ந்து ஏற்க மறுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையே தமிழ் மக்கள் மீது இக்குழுவின் பரிந்துரைகள் திணித்துள்ளன. குழு அறிக்கை வந்த (23.1.2008 அன்றே) உடனேயே இப்பரிந்துகைள் ஏற்புடையன அல்ல என விடுதலைப் புலிகளும் தமிழ்ப் பகுதிகளில் தேர்வான 17 நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பும் கூறியுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆனந்தசங்கரியின் கட்சி, சித்தார்த்தனின் கட்சி, சிறீதரனின் கட்சி, வரதராசப் பெருமாளின் கட்சி, பரந்தன் இராசனின் கட்சி, விக்கினேசுவரனின் கட்சி யாவும் ஒரே குரலில் இந்தப் பரிந்துரைகளை ஏற்க மறுத்ததுடன், இப்பரிந்துரைகளின் அடிப்படையில் எழும் அமைப்புகளில் பங்குபற்ற மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டன.

தந்தை செல்வா, ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆகியோர் காலத்தவரான ஆனந்தசங்கரி இப்பரிந்துரைகளைப் பற்றிக் குடியரசுத் தலைவர் மகிந்தாவிடம் 23.1.2008 அன்று கூறியவை கருத்தாழம் உள்ளவை. வெட்டுக் காயப் புண்ணாகச் சிங்களவர் தமிழர் பிரச்சினை இருந்த காலத்தில் 13ஆவது திருத்தம் ஆறுதல் மருந்தாக இருந்திருக்கலாம். இப்பொழுதோ நோய்முற்றி, புற்றுநோய் போலத் தெரியும் நிலை வந்த பின், அந்த மருந்து எதற்கும் பயன்படாது என்றார் ஆனந்தசங்கரி.

தமிழர் தரப்பில் டக்ளஸ் தேவானந்தாவைத் தவிர யாவரும் இந்தப் பரிந்துரைகள் அமைதியை நோக்கியன என்பதை ஏற்க மறுத்துள்ளனர். சிங்களவர் தரப்பில் ஆளும் கட்சியைச் சார்ந்தொழுகும் கட்சிகள் மட்டுமே இப்பரிந்துரைகளுக்கு ஆதரவாக உள்ளன.

1987இல் இலங்கை இந்திய உடன்பாட்டை வன்மையாக எதிர்த்த சுதந்திரக் கட்சி, இப்பொழுது ஆளும் கட்சியானதும் கருத்தை மாற்றியதன் அரசியல் நோக்கம் கேள்விக்குறியானது என்கிறார், இப்பொழுது எதிர்க் கட்சியில் உள்ள இரணில். உலக நெருக்குவாரத்துக்குச் சப்பைக் கட்டுக் கட்டவே ஆட்சியினர் ஒத்தூதுவதாகவும் வித்தை காட்டுவதாகவும் இரணில் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக - புதுவை மக்களின் கருத்தாகுமா?

உலக நாடுகள் எதுவும் இதுவரை இப்பரிந்துரைகளைப் பற்றிக் கருத்துரை சொல்லாத நிலையில், இந்த முயற்சியை வரவேற்பதாக இந்திய அரசு கூறியிப்பது கடுமையான ஏமாற்றத்தைத் தருகிறது.

இன்றைய இந்திய அரசானது தமிழ்நாட்டின் 40 நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்புடன் செயற்படும் அரசு. இந்திய அரசு தெரிவிக்கும் கருத்தானது இந்த 40 நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தையும் உள்ளடக்கியதாகவே கொள்ளப்படும். இலங்கையில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வுக்கு 23.1.2008இன் பரிந்துரைகளை டக்ளஸ் தேவானந்தா தவிர வேறு எந்தத் தமிழீழக் கட்சியும் ஏற்காத நிலையில், உலகத் தமிழர் எவரும் ஏற்பார்களா? இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களின் கருத்தாக இந்திய அரசின் கருத்தைச் சிங்கள அரசு கருத இடமுண்டல்லவா?

சிங்கள அரசின் மேலாதிக்க நோக்கை நிறைவேற்றவும் நீடிக்கவும் அரசியல் அடிமைகளாகத் தமிழ் மக்களைத் தொடர்ந்து வைத்திருக்கவும், தமிழின அழிப்பைத் தொடரவும், தமிழகம் - புதுவை மக்கள் சிங்களவருக்கு ஆதரவு தருவதாக இந்திய அரசின் கருத்தைக் கொள்ளவும் இடமுண்டு.

மறவன்புலவு க. சச்சிதானந்தன் - தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினர்

- சிஃபி - மாசி 8, 2008

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.