Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தன்னை காப்பாற்றிக் கொண்டு, ஈழத் தமிழர்களை கைவிட்டது மத்திய அரசு!

Featured Replies

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், மக்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சிகளை மிக அழகாக தட்டிக் கழித்துத் தனது அரசைக் காப்பாற்றிக்கொண்டு, அல்லலுறும் ஈழத் தமிழர்களை தத்தளிக்க விட்டுவிட்டது மன்மோகன் அரசு.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதான் தனது கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றி, அதனை பிரதமருக்கு அனுப்பியதாக இம்மாதம் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

அதன்பிறகு, இம்மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், “தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தி, அங்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்” என்று மத்திய அரசை வலியுறுத்தியது மட்டுமின்றி, அதனை இரண்டு வார காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று காலக்கெடுவும் நிர்ணயித்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தியே 24ஆம் தேதி சென்னையில் இருந்து செங்கற்பட்டுவரை கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டது.

ஆனால் இவ்வளவு பெரிய அளவிற்கு தமிழகமே ஒன்றுபட்டு, இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தப்பின்னரும், கிடைத்தது ஏமாற்றமுமே.

தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவால் ஆபத்தின்றி ஆட்சியை நடத்திவரும் மன்மோகன் சிங் அரசு, ஒட்டுமொத்தத் தமிழர்களின் ஆதங்கத்தில் வடித்தெடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல், மிக அழகாக அந்தப் பொறுப்பை, யாரை எதிர்த்து தமிழினம் போராடிக்கொண்டிருக்கிறதோ, அந்த ஓநாய்களிடமே ஒப்படைத்துவிட்டு, தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி பெற்றதாக நாடாகமாடி ஏமாற்றியுள்ளது.

தங்கள் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்திவிட வேண்டாம் என்பதை கெஞ்சிக் கேட்டுக்கொள்ளத்தான் அயலுறவு அமைச்சர் சென்னை வந்தார் போலும். அந்த உறுதிமொழியை சற்றும் நோகாமல் தமிழக முதலமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டு, தமிழர்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில்தான் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று அழகாக போக்குகாட்டிவிட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக்கொண்டு பறந்துவிட்டார்.

அரசியல் ரீதியாக தமிழகமே ஒன்று திரண்டு எழுப்பிய இப்பிரச்சனையில் வென்றது, தமிழர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்க அரசும், தமிழர்களின் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி செய்யும் மன்மோகன் அரசும்தான்.

சிறிலங்க படைகளின் தொடர் தாக்குதலிற்கு ஆளாகி மூச்சித் திணறிவரும் தமிழர்களுக்கு நமது முயற்சியால் கிடைத்தது - 71 டன் உணவும் (அதுவும் ஐ.நா.வின் உதவியால்), இதற்குமேல் கிடைக்கப்போவது (அது நேர்மையாக கொண்டு செல்லப்பட்டால்) 800 டன் உணவுப் பொருட்களும்தான்.

எவ்வளவு லாவகமாக நம்மை மத்திய அரசு ஏமாற்றிவிட்டது! இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளும் நடைமுறையில் இருந்து முறிந்துபோன போர் நிறுத்தத்திற்கும் நமக்கும் - அதாவது இந்தியாவிற்கும் - எந்த சம்மந்தமும் இல்லையாம். எனவே நாம் இடையில் புகுந்து போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்து என்று கூற முடியாதாம், சொல்லியுள்ளார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் கூறியதென்ன? அங்கு நடைபெறும் தாக்குதல் நிறுத்தப்படவேண்டும் என்பதுதானே? தாக்குதலை நிறுத்து என்று கூறுவதற்கு போர் நிறுத்த ஒப்பந்தம் தேவையா?

உனது நாட்டில் நீ தாக்குதல் நடத்தும் மக்களோடு ரத்த உறவு கொண்ட எங்கள் நாட்டு மக்களின் கோரிக்கையை நியாயமானதென நாங்கள் நினைக்கிறோம், எனவே தாக்குதலை நிறுத்து என்று கூற முடியாதா? கூறினால் சிறலங்க அரசு கேட்காதா? கேட்வில்லையென்றால்தான் இந்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாதா?

அப்படியானால், ஈழத் தமிழர்கள் மீது இன்று நடப்பதுபோல 1986ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தப்பட்டு தமிழ்நாடு கொந்தளித்தபோது, பாதிப்பிற்குள்ளான தமிழர்களுக்கு உதவ இந்திய விமானப்படை விமானங்கள் உணவுப் பொட்டலங்களை வீசி விட்டு வந்தனவே, அதையே ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக அன்றையப் பிரதமர் இராஜீவ் காந்தி மேற்கொண்டாரே? அது எப்படி சாத்தியமானது?

தமிழ்நாடு கொடுக்கும் அழுத்தத்தில் அப்படி இந்திய அரசு செய்தாலும் செய்யும் என்ற அச்சத்தின் காரணமாகத்தானே, தனது தம்பியை புதுடெல்லிக்கு அனுப்புகிறார் ராஜபக்ச. ஆனால், தமிழர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை விட, சிறிலங்காவின் நட்பை பெரிதாக நினைக்கும் மன்மோகன் அரசு, எந்தவிதமான அழுத்தத்தையும் தரவில்லை.

இலங்கைத் தமிழர்களின் நலனை காப்பாற்றும் பொறுப்பை, அவர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்துவரும், சிறிலங்க அரசிடமே மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனால்தான், இனச் சிக்கலிற்கு விரைவில் அரசியல் தீர்வு காணுங்கள் என்று பசில் ராஜபக்சவிடம் மேம்போக்காக வலியுறுத்துகிறது மத்திய அரசு.

தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை மத்திய அரசு. அவர்கள் பாதிக்கப்படாமல் இராணுவத் தாக்குதல் தொடரட்டும் என்றுதான் என்று சொல்லாமல் சொல்லியுள்ளது. அதன் விளைவுதான், அமைச்சர் பிரணாப் முகர்ஜி இங்கே தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய அதே நேரத்தில் அங்கே மருத்துவமனை மீது சிறிலங்க விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. நேற்று மாணவர்களை தங்கியுள்ள (நல்லவேளையாக 1200 மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டப்பிறகு) விடுதியின் மீது குண்டுவீச்சு நடத்தியுள்ளது சிறிலங்க விமானப்படை.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களும், பள்ளிக்கூட மாணவர்களும் குறி வைத்து தாக்கப்படுவதேன்? அங்கு போராடுவதற்குக்கூட ஒருவரும் உயிருடன் இருக்கக்கூடாது என்பதற்குத்தானே? இதெல்லாம் தமிழர்களுக்கு புரியாது என்றெ‌ண்‌ணி மத்திய அரசு நடந்துகொண்டுள்ளது.

சிறிலங்க அதிபர் ராஜபக்சவி்ன் தூதராக டெல்லி வந்து அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பசில் ராஜபக்ச, வெற்றிப் புண்ணகையுடன் நாடு திரும்பினார். தங்கள் நடவடிக்கை அனைத்திற்கும் இந்தியாவின் முழுமையான ஆதரவு உள்ளதென்பதை உறுதிசெய்துகொண்டு அவர் நாடு திரும்பியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியும், பசில் ராசபக்சவும் விடுத்த கூட்டறிக்கையும், செய்தியாளர்களிடம் பேசும்போது பிரணாப் அளித்த பதில்களும் மத்திய அரசு, தமிழர்களின் நலனைவிட சிறிலங்க அரசின் உறவையே அதிகம் நேசிக்கிறது என்பதை நன்கு புரிந்துகொள்வதற்கு உதவுகிறது.

இலங்கைப் பிரச்சனையில் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டப் பிறகும் கூட மத்திய அரசின் போக்கில், அதன் சிந்தனையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழக மீனவர்களைக் காக்க, சிறிலங்க அரசிடமிருந்து உறுதிமொழி பெறப்பட்டுள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இப்படிப்பட்ட உறுதிமொழிகள் பல காலகட்டங்களில் வழங்கப்பட்டு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது பிரணாப் முகர்ஜி அறியாததாக இருக்கலாம், ஆனால் தமிழர்களுக்கு தெரியாதது அல்ல.

ஒரு மாத காலமாக தமிழகத்தின் தமிழர் நலன் நாடும் அரசியல் கட்சிகளும், ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க குரல் கொடுத்த அமைப்புக்களும், தமிழக அரசும், டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆபத்தின்றி நீடிக்க ஆதரவு தந்த தமிழ்நாட்டு மக்களும் மன்மோகன் அரசால் மிக லாவகமாக ஏமாற்றப்பட்டு நிற்கின்றனர்.

ஈழத் தமிழர்களோடு தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஏமாந்து நிற்கின்றனர்.

நன்றி வெப்துனியா தமிழ்

Edited by thamizhanpan

தமிழர்களைக் கைவிடுவது தமிழர்களால்தான் முடியும். இந்தியாவால் அது முடியாது. இந்தியாவினால் முடியாமலே போய்விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.