Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு வளையத்தில் கொன்று குவிக்கும் ராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வளையத்தில் கொன்று குவிக்கும் ராணுவம்

வியாழக்கிழமை, மே 7, 2009, 16:16 [iST]

சென்னை: வன்னி பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர், எப்படி அப்பாவி மக்களை சரமாரியாகக் கொன்று குவித்து வருகின்றனர் என்பதை கண்ணீர் மல்க, இதயம் துடிதுடிக்க இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அகதிகள் விவரித்துள்ளனர்.

ஆந்திர மாநில கடற் பகுதிக்கு 9 நாட்களுக்கு முன்பு இலங்கை அகதிகள் சிலர் படகில் வந்தனர். மொத்தம் 21 பேர் படகில் வந்தனர். இவர்களில் நான்கு வயது குழந்தை உள்பட 10 பேர் நடு வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தப்பி வந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மனித உரிமை அமைப்பு ஒன்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மருத்துவமனையில் சேர்த்தது.

அவர்கள், இலங்கையில் நடந்து வரும் அக்கிரமமான இனப்படுகொலை குறித்து விவரித்துள்ளனர்.

இந்திரகுமார் என்ற அகதி கூறுகையில், எனது குடும்பத்தினர் புதுமாத்தளன் பகுதிக்கு சென்றபோது அங்கு ராணுவம் சரமாரியாக பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதுபோலத்தான் தொடர்ந்து நடந்து வருகிறது.

பயத்துக்கு மத்தியில்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். தொடர்ந்து பீரங்கிகளால் தாக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

ஏப்ரல் 5ம் தேதியோ அல்லது 6ம் தேதியோ இருக்கும், நாங்கள் பதுங்கியிருந்த பதுங்கு குழிக்குள் வந்து ஒரு பீரங்கிக் குண்டு வெடித்தது. அதில் பத்து பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் பின்னர் இறந்து விட்டனர். யாருக்குமே மருந்து கிடைப்பதில்லை, சிகிச்சை கிடைப்பதில்லை. காயத்தால் இறந்தவர்கள்தான் அதிகம்.

அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மயக்க மருந்து கூட கொடுப்பதில்லை. காரணம் அவை ஸ்டாக் இல்லை. ஒரு சிறுமியின் காயமடைந்த கையை, மயக்க மருந்தே கொடுக்காமல் டாக்டர்கள் துண்டிக்க நேரிட்டது. அதைப் பார்த்து எனது மகள் கதறி அழுதாள், பயந்து போய்க் காணப்பட்டாள்.

இனியும் இங்கு இருக்க வேண்டாம். இந்தியாவுக்குப் போய் விடலாம் என நான் அப்போதுதான் முடிவு செய்தேன் என்றார் இன்னும் பீதி விலகாமல்.

ராணுவம் ஒரு பக்கம் பீரங்கிகளால் சுட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலில் ஈடுபட இரு தரப்புக்கும் மத்தியில் சிக்கி பதுங்கு குழிகளிலேயே வாழ்ந்து வருகின்றனராம் தமிழர்கள். அங்கும் கூட உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை.

இன்னொரு தமிழர் கூறுகையில், நாங்கள் பாதுகாப்பு வளையப் பகுதிக்கு வருவதற்கு முன்பு ஒரு மருத்துவமனை இருந்தது. அங்கு எனது மனைவிக்கு பிரசவம் நடந்தது. ஆனால் தேவையான மருந்து மருத்துவமனையில் இல்லை. மருந்துக்காக நான் ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குடில்கள் அமைக்க தேவையான பொருட்களைத் தருகிறது. ஆனால் அவை போதுமானதாக இல்லை. தென்னை ஓலைகளை வைத்து நாங்கள் குடிசை போட்டு தங்கியிருந்தோம். ஒரு முறை கன மழை பெய்தபோது அங்கு இருக்க முடியாமல் பதுங்கு குழிக்குள் போய் இருந்தோம் என்றார். இவரது மனைவியும், நான்கு குழந்தைகளும் ராணுவத் தாக்குதலி்ல் உயிரிழந்து விட்டனர்.

சிவதாச ஜெகதீஸ்வரன் கூறுகையில், சாப்பாடு சரியாக கிடைப்பதில்லை. ஒரு நாள் சாப்பாட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தபோது ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. நான் அங்கிருந்து தப்பி ஓடினேன். அந்த சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர் என்றார்.

இந்தியாவுக்கு தப்பி வரும் வழியில் படகிலேயே இவரது மனைவியும், மாமனாரும் இறந்து விட்டனர்.

அகதிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த மனித உரிமை கண்காணிப்பகத்தின் மீனாட்சி கங்குலி கூறுகையில், இலங்கையில் நாம் நினைப்பதை விட பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுவதிலிருந்து தெரிகிறது என்றார்.

அமைதிக்காக வெற்றுடம்புடன் தேர் இழுத்த தமிழர்கள்..

இதற்கிடையே, கொழும்பு பேட்டையில் உள்ள விஷ்ணு கோவிலில் நேற்று நடந்த வருடாந்திர விழாவில் வெற்றுடம்புடன், விஷ்ணு பகவானின் சிலை அடங்கிய தேரை இழுத்துச் சென்றனர். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும், போர் ஓய வேண்டும் என்று வேண்டி இந்த தேரோட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட தேரில் விஷ்ணுவின் சிலை வைத்திருக்க தேரின் இரு மருங்கிலும் ஏராளமான தமிழர்கள் வரிசையில் நின்று தேரை இழுத்துச் சென்றனர்.

இதுகுறித்து கோவில் அறங்காவலர்களில் ஒருவரான விக்னேஷ் கூறுகையில், நாங்கள் அமைதிக்காக பிரார்த்திக்கிறோம் என்றார்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த தேருக்கு மக்கள் வழியெடுகிலும் கூடி நின்று வரவேற்பு அளித்து கடவுளை வழிபட்டனர்.

கொழும்பு நகரைச் சேர்ந்த தமிழ் வர்த்தகரான ராஜா கூறுகையில், போர் முடிந்தால்தான் நாட்டில் நல்லது நடக்கும். நாடு வளம் பெறும். அரசியல் தீர்வை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

புலிகளின் மண் தடுப்பரண் முறியடிப்பு

இந்த நிலையில், கரையாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மண் தடுப்பரணை ராணுவம் கைப்பற்றி தகர்த்துள்ளது.

இப்பகுதியில் 3 விடுதலைப் புலிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

புலிகளின் ஆயுதங்கள் - மலைத்துப் போன ராணுவம்

இதற்கிடையே விடுதலைப் புலிகளிடமிருந்து இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்களைப் பார்த்து ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்துள்ளனர். காரணம், அவை அனைத்தும் அதி நவீனமானவை, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலானவை என்பதால்.

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை கிளிநொச்சியில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் காட்சிக்கு வைத்துள்ளனர். பீரங்கித் துப்பாக்கிகள், மார்ட்டர்கள், 4000 குண்டுகள், தாக்குதல் துப்பாக்கிகள், 6000க்கும் மேற்பட்ட கையெறி குண்டுகள், 3000க்கும் மேற்பட்ட ஐஇடிக்கள், கவச வாகனங்கள், ஒரு டாங்க் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது புலிகளிடமிருந்து கிடைத்த ஆயுதங்களின் ஒரு பிரிவுதானாம். இது பல ஆயிரம் டாலர் மதிப்பிலானவை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளிடமிருந்து 1 லட்சம் சிறு ஆயுதங்கள், பத்து லட்சம் சுற்று வெடிபொருட்கள், 30 ஆயிரம் கண்ணிவெடிகளை மீட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

புலிகள் வசம் இருந்த அத்தனை ஆயுதங்களுமே அதி நவீனமானவை, வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை. இதன் காரணமாகவே இலங்கை ராணுவத்தால், இத்தனை காலமாக புலிகளை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்று ராணுவ அதிகாரிகளே கூறியுள்ளனர்.

இதுகுறித்து 58வது பிரிவு கமாண்டர் சிவேந்திர சில்வா கூறுகையில், பல்வேறு நாடுகளில் இருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைத்துள்ளன. ஆனால் எந்த நாட்டிலிருந்து கிடைத்தன என்பதை குறிப்பிட்டுச் சொல்வது கடினம்.

இதற்குக் காரணம், தங்களது கைக்கு ஆயுதங்கள் வந்ததும், அதில் உள்ள நாடுகளின் அடையாளம், தயாரிப்பு நிறுவனம் ஆகியவை குறித்த அடையாளங்களை புலிகள் அழித்து விடுவது வழக்கம்.

மேலும் தாங்கள் வாங்கும் நாட்டிலிருந்து நேரடியாக ஆயுதங்களைப் பெறுவதில்லை புலிகள். அந்த நாட்டிலிருந்து இன்னொரு நாடு, அங்கிருந்து வேறு நாடு என்று மாறி மாறி போய் கடைசியில் புலிகள் கைக்கு ஆயுதங்கள் வருவது வழக்கமாம். எனவே எந்த நாட்டிலிருந்து ஆயுதம் வந்தது என்பதை குறிப்பிட்டுச் சொல்வது கடினம்.

சில வகை ஆயுதங்களை விடுதலைப் புலிகள் உள்ளுரிலேயே தயாரித்துள்ளனர் என்றார் சில்வா.

இருப்பினும் கம்போடியா, கிரீஸ், தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, துருக்கி, வடகொரியா, உக்ரைன், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல்..

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தங்கள் வசம் உள்ள மிச்சப் பகுதியையும் காப்பாற்றிக் கொள்ள தற்கொலைப் படைத் தாக்குதல்களில் ஈடுபடுவதாக ராணுவம் கூறியுள்ளது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், முன்னேறி வரும் படையினருக்கு இடையூறாக தற்கொலைப் படை வீரர்களை ஏவி விட்டுள்ளது விடுதலைப் புலிகள் இயக்கம். இதனால் ராணுவத்தின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்றார்.

தற்ஸ்தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.