Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அரசியலில் சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ponguthamil.com/thedal/thedalcontent.asp?sectionid=8&contentid={5E923FB4-0B0C-4546-B409-1B16F96F0452}

இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – மகிரிஷி' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள்

சர்வதேச நாடுகளைக் கையாளும் இராஜதந்திரத்தில் சிங்களத் தலைவர்கள் மிகச் சிறப்பான தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஈழத்தமிழரது நீண்ட தோல்விகளின் வரலாறானது அவர்களிடம் காணப்பட்ட பிழையான சர்வதேசப் பார்வையினால் உருவானது. குறிப்பாக சர்வதேச அரசியலைப் புரிந்து கொள்ளுதல், கையாளுதல் எனும் விடயங்களை 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே தமிழ்த் தலைவர்கள் கொண்டிருக்கவில்லை. இதில் ஓர் அப்பாவித்தனமும், அறிவியல் மறுப்பும் தமிழ் தலைமைகளிடம் இருந்துள்ளது. அதற்கான ஒரு வரலாற்றுப் பார்வையே இக் கட்டுரையாகும்.

இந்தியாவின் மீதான தமது ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான சமுத்திரத் திட்டத்தின் (Oceanic Theory) மையப் புள்ளியாக இலங்கைத் தீவைப் பிரித்தானியர் பேணிக்கொண்டனர். 500 க்கு மேற்பட்ட இந்திய அரசுகளை ஒன்றாக இணைத்த பிரித்தானியர், இலங்கையை இந்தியாவுடன் இணைக்காது பேணியதற்கு குறுங்கால மற்றும் நீண்டகால நோக்கங்கள் இருந்தன.

பிரித்தானியரின் பார்வையில் இலங்கைத் தீவானது இந்தியாவைப் பாதுகாப்பதற்கான ஓர் இராணுவ முகாம்தான். பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் அளவால் சிறிய இனங்களை அணைத்து அளவால் பெரிய இனத்தை ஆட்சி செய்வதே பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தினது அடிப்படையாகும். ஆரம்பத்தில் இதனையே பிரித்தானியர் இலங்கையில் கைக்கொண்டனர்.

1920ஆம் ஆண்டுகளின் மத்திவரை அளவால் பெரிய சிங்கள இனத்திற்கு எதிராக அளவால் சிறிய தமிழினத்திற்கு சலுகைகளைக் காட்டி தமது நிர்வாகத்தை இலகுவாக்கும் போக்கை பிரித்தானியர் கைக்கொண்டனர். ஆனால் 1920ஆம் ஆண்டுகளின் மத்திக்குப் பின் இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

அமெரிக்க மிஷன் வடபகுதியான வட்டுக்கோட்டையில் அமைந்த போதிலும், அது தன்னை தென்னிந்திய திருச்சபை எனவே பெயரிட்டுக் கொண்டது. உண்மையில் அதன் நோக்கம் தென்னிந்தியாவை இலக்கு வைப்பதாகவே இருந்தது. அதாவது இந்தியாவிற்கான ஒரு வாசலாகவே அதனை அவர்கள் கருதினர். ஆரம்பத்தில் பிரித்தானியர் தென்னிந்தியத் திருச்சபை மீது அச்ச உணர்வைக் கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து நடந்து கொண்டமைக்கு இதுவே காரணமாகும்.

இத் தென்னிந்தியத் திருச்சபையால் நடாத்தப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரி நவீன சிந்தனையை தமிழ் மக்களிடம் விதைக்கத் தொடங்கியது. இதனை மையமாகக் கொண்டெழுந்த இளைஞர்கள் ஜனநாயகம், விடுதலை போன்ற எண்ணங்களினால் உருத்திரண்டு யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என அமைப்புகளை உருவாக்கக் காரணமாய் அமைந்தது. இவர்கள் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தம்மை இனங்காட்டத் தொடங்கினர்.

1920ஆம் ஆண்டுகளின் மத்தியில் எழுந்த இந்த அமைப்பு இந்தியத் தேசிய விடுதலைத் தலைவர்களை யாழ்ப்பாணம் வரவழைப்பதிலும், இந்தியப் பாணியில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதிலும் அக்கறை காட்டினர். குறிப்பாக, யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸினர் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கையை இணைத்து விடுவர் என்ற அச்சம் பிரித்தானியரிடம் 1920ஆம் ஆண்டுகளின் மத்தியில் தோன்றத் தொடங்கியது.

இவ்வமைப்பினர் தென்னிலங்கை வாழ் சிங்கள இடதுசாரிகளையும், விடுதலை விரும்பிகளையும் தம்முடன் இணைக்கும் நடைமுறைச் செயற்பாடுகளைக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைக்கும் முயற்சியில் காங்கிரஸினர் ஈடுபட்டனர். இப்பின்னணியில் தான் அரசியல் யாப்பு திருத்தம் செய்வதற்கென டொனமூர்க் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக திட்டமிடப்படுகின்றது.

மகாத்மா காந்தியின் இலங்கைக்கான விஜயம் பிரித்தானியரின் மனதை பெரிதும் பாதிக்க ஏதுவாய் அமைந்திருக்கும். டொனமூர்க் குழுவினர் இலங்கையில் காலடி வைத்த நாளும், மகாத்மா காந்தி காலடி வைத்த நாளும் ஒன்றாகவே இருந்தது. 1927ஆம் ஆண்டு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்தான் மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது. அப்போது மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க இளைஞர் காங்கிரஸ் அன்றைய நிலையில் 1,00,000 ரூபா திரட்டி இந்திய தேசிய போராட்டத்திற்கான நிதியாகக் கையளித்தது.

1920ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஏற்பட்டு வந்த இத்தகைய போக்கைக் கண்ட பிரித்தானியர் தமது பிரித்தாளும் கொள்கையில் ஓர் அடிப்படை மாற்றத்தைச் செய்யத் தொடங்கினர். இதுவரை காலமும் அளவால் பெரிய இனத்தை ஆள்வதற்கு அளவால் சிறிய இனங்களை அணைக்கும் போக்கை கைக்கொண்டு வந்த பிரித்தானியர் இப்போது அளவால் பெரிய சிங்கள இனத்தை அணைத்து இந்தியாவிற்கு எதிரான மனப்பாங்கை சிங்களவரிடம் வளர்க்கவும், இந்திய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கையை இணையவிடாது தடுக்கவும் திட்டமிட்டனர். இதற்காக தமிழருக்கு எதிராக சிங்களவர்களைத் திருப்திப்படுத்தும் அரசியல் திட்ட ஏற்பாடுகளைச் செய்ய பிரித்தானியர் ஆரம்பித்தனர்.

இதன் முதற்புள்ளியே 1931ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர் யாப்பாகும். சர்வஜன வாக்குரிமை என்பதன் பெயரில் எண்ணிக்கையால் பெரிய சிங்கள இனத்தின் கையில் இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தமிழ் பேசும் இனத்திற்கு எதிராக பிரித்தானியர் தாரை வார்த்துக் கொடுக்கத் தொடங்கினர். ஆனால் இதற்கான இந்து சமுத்திரம் தழுவிய பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைப் பின்னணியை தமிழ்த் தலைவர்கள் யாரும் விளங்கி இருக்கவில்லை. சேர் பொன்.இராமநாதன், வைத்திலிங்கம் துரைசுவாமி, ஹன்டி பேரின்பநாயகம் போன்ற எத்தலைவர்களும் இந்து சமுத்திரம் சார்ந்த பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைப் பின்னணியை சிறிதும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இதுவரை இலங்கைத் தீவில் பெரிய இனமாகக் கருதப்பட்டு வந்த சிங்கள இனத்தவரை இந்தியாவுடன் இணைத்துப் பார்த்து சிறிய இனமாகவும், சிறிய இனமான தமிழரை தென்னிந்தியாவுடன் இணைத்துப் பார்த்து பெரிய இனமாகவும் கருதும் சூழல் உருவானது. அளவால் பெரிய சிங்கள இனத்தை சிறிய இனமாகவும், அளவால் சிறிய தமிழினத்தை பெரிய இனமாகவும் பார்த்த ஒரு முரண் நிலையிலிருந்தே தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறையை பிரித்தானியர் செய்தனர்.

இது சிங்கள இனத்திற்கு முற்றிலும் சார்பானதாக அமைந்து, எதிர்காலத்தில் தமிழனத்தின் மீது சிங்கள இனம் புரியக் கூடிய அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் வழிகோலிக் கொடுத்த விதமாய் அமைந்தது. தமிழினத்தை இந்தியாவுடன் சார்ப்புபடுத்தி பார்த்ததன் விளைவே தமிழினம் மீதான அனைத்து வகை ஒடுக்குமுறைகளுக்கும் அடிப்படையாய் அமைந்தன.

இதன்பின்பு பிரித்தானியரால் உருவாக்கப்பட்டு 1947ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் யாப்பு இன்னொரு படி மேற்சென்று தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான யாப்பை உருவாக்கி சிங்களத் தலைவர்களிடம் கையளித்தது.

1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடையப் போகும் பின்னணியில் இந்த யாப்பு 1945 - 1946ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவை நவகாலனித்துவ தேவையின் பொருட்டு கட்டுப்படுத்துவதற்கு இலங்கையில் இராணுவ, கடற்படைத் தளங்களை அமைக்க பிரித்தானியா திட்டமிட்டது.

திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத் தளத்தையும், கட்டுநாயக்காவில் விமானப்படைத் தளத்தையும் அமைப்பதற்காக சிங்கள இனத்திற்கு முற்றிலும் சார்பான அரசியல் யாப்பை அமைக்க பிரித்தானியா முடிவெடுத்தது. மேற்படி இவ்விரு தளங்களையும் சிங்களத் தலைவர்களிடம் இருந்து பெறுவதற்காக தமிழ் மக்களின் நலன்களை தாரை வார்க்கும் அரசியல் யாப்பை டி.எஸ்.செனநாயக்கா உடனான இரகசிய உடன்பாட்டின் மூலம் சோல்பரிக் குழுவினர் உருவாக்கினர்.

சோல்பரிப் பிரபு, பிரித்தானியரான பேராசியர் ஐவர் ஜெனிங்ஸ் என்போர் ஒரு பக்கமாகவும், டி.எஸ்.செனநாயக்க, ஒலிவர் குணதிலக என்போர் மறு பக்கமாகவும் நின்று தமிழருக்கு எதிரான இந்த சூழ்ச்சி யாப்பை 1947ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். ஒருபுறம் ஐவர் ஜெனிங்ஸூம் மறுபுறம் ஒலிவர் குணதிலகவும் இச்சூழ்ச்சி நாடகத்தின் பிரதான சூத்திரதாரிகளாக இருந்தனர். சோல்பரியும், டி.எஸ்.செனநாயக்காவும் உத்தியோக முறையற்ற சந்திப்பின் மூலம் இந்நாடகம் இறுதி செய்யப்பட்டது.

ஆனால், தமிழ்த் தலைவர்கள் இதனை சிறிதும் புரிந்திருக்கவில்லை. முதலாவதாக தமிழ்த் தலைவர்களிடம் வெளியுறவுக் கண்ணோட்டம், சர்வதேசக் கண்ணோட்டம் என்பன சிறிதும் இருந்திருக்கவில்லை. மாறாக பிரித்தானிய எஜமான்களை நீதிமான்களாகக் கருதி சிங்களவருக்கு எதிரான தமது முறைப்பாடுகளை மன்றாட்டமாக அப்பிரித்தானிய எஜமானர்களிடம் முன்வைத்தனர். எய்தவனிடம் போய் அம்பைக் குறை சொல்லி முறையிடும் நிலையில் தான் தமிழ் தலைவர்களின் அரசியல் கண்ணோட்டம் இருந்தது. இங்கு மீண்டும் இந்தியாவுடன் தொடர்புபடுத்தியே அப்பாவித் தமிழினம் பலியிடப்பட்டது.

அதேவேளை, ஒரு தசாப்தத்திற்குள் இதில் இன்னொரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி சிங்களத் தலைவர்கள் மேலும் ஒரு படி வெற்றியைச் சம்பாதித்தனர். பிரித்தானியாவுக்கு இலங்கையில் தளங்கள் வழங்கும் ஒப்பந்தத்தை டி.எஸ்.செனநாயக்கா செய்த போது அவரது அரசாங்கத்தில் இரண்டாவது ஸ்தானத்தில் இருந்தவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா ஆவார். எனவே பண்டாரநாயக்காவின் நடைமுறை ஆசியுடன் தான் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது.

ஆனால் டி.எஸ்.செனநாயக்காவிற்கு பின் அவரது மகன் டட்லி செனநாயக்கா தான் அடுத்த பிரதமர் என்ற இரகசிய ஒப்பந்தம் சோல்பரிக்கும், டி.எஸ்.செனநாயக்காவிற்கும் இடையில் செய்யப்பட்டிருந்தமை பண்டாரநாயக்காவுக்கு தெரிய வரவே, பண்டாரநாயக்கா அரசாங்கத்தைவிட்டு வெளியேறி 1951ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சி எனும் புதிய கட்சியை ஆரம்பித்தார்.

பிரதமர் டி.எஸ்.செனநாயக்கா விபத்தில் இறந்த போது இலங்கையின் மகாதேசாதிபதியான சோல்பரி விடுப்பில் இங்கிலாந்தில் இருந்தார். எனவே அவர் டட்லியை பிரதமராக்குவதான தனது இரகசிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக தனது விடுப்பை இரத்துச் செய்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு திரும்பினார். அப்போது தான் வரும்வரை பிரதமராக யாரையும் நியமிக்க வேண்டாமென பதில் மகாதேசாதிபதிக்கு அறிவித்துவிட்டு இலங்கை திரும்பிய சோல்பரி பல மூத்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் இருக்கின்ற போது அவர்களைத் தவிர்த்து இளையவரான டட்லி செனநாயக்காவை பிரதமராக நியமித்தார்.

அப்போது கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த சேர்.ஜோன்.கொத்தலாவல தானே பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பில் முற்றிலும் மண்ணைத் தூவியது போல சோல்பரி - டி.எஸ். செனநாயக்கா இரகசிய ஒப்பந்தம் செயற்பட்டது. இதன்பின்பு கொத்தலாவல போர்க்கொடி தூக்கியது வேறு கதை.

இப்பின்னணியில் வைத்து பிரித்தானியரையும், அவர்களது தளங்களையும் பார்த்த பண்டாரநாயக்கா வேறு விதமாக யோசிக்கலானார். அதாவது செனநாயக்க குடும்பத்தின் பலமாக இத்தளங்கள் இருப்பதையும், இத்தளங்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பதன் மூலம் ஒரு புறம் செனநாயக்க குடும்பத்தைப் பலவீனப்படுத்தவும், மறுபுறம் இந்தியாவை திருப்திப்படுத்தவும் இவை உதவும் என நம்பினார்.

இந்த வகையில் பிரித்தானியத் தளங்களை அகற்றுவதற்கான கோரிக்கையை முன்வைத்து இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றார். அதேவேளை இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றதன் மூலம் தமிழருக்கு எதிரான சட்டங்களையும் மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் இலகுவாக செய்யலாம் என நம்பினார். இதன் மூலம் 1956 ஆம்ஆண்டு பிரதமாரான பண்டாரநாயக்கா ஒரு புறம் பிரித்தானிய தளங்களை அகற்றவும், மறுபுறம் தனிச்சிங்கள சட்டத்தை நிறைவேற்றவும் தலைப்பட்டார். தொடர்ந்து தமிழருக்கு எதிரான அரசியல் மற்றும் 1958ஆம் ஆண்டு இனப்படுகொலைகள் என்பவற்றிலும் ஈடுபட்டார்.

இப்போதுகூட தமிழ் தலைவர்கள் இத்தளங்கள் அகற்றல் தொடர்பான சர்வதேச அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை. மாறாக பிரித்தானியத் தளங்களை அகற்ற வேண்டாமென சி.சுந்தரலிங்கம் பிரித்தானிய மகாராணியருக்கு தந்தி அனுப்பினார். இந்த இடத்தில் தமிழ்த் தலைவர்கள் பலரும் அப்பாவித்தனமாக பிரித்தானியாவுக்கு அனுதாபமாகவே செயற்பட்டனர்.

ஒரு சிங்களத் தலைவன் தளத்தை அமைக்கும் ஒப்பந்தந்தின் வாயிலாக தமிழருக்கு எதிரான அரசியல் யாப்பை பிரித்தானியரிடம் பெற்றார். இன்னொரு சிங்களத் தலைவன் தளத்தை அகற்றுவதன் வாயிலாக இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்று தமிழருக்கு எதிரான தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும், மேற்கொண்டு ஒடுக்குமுறைகளைப் புரிவதிலும் வெற்றி கண்டார். அதாவது தளத்தை அமைத்ததன் வாயிலாகவும் தமிழர் தலைகளை சிங்களத் தலைவர்கள் கொய்தார்கள். அதேவேளை தளத்தை அகற்றியதன் வாயிலாகவும் தமிழர் தலை கொய்யப்படுதலை இலகுவாக்கினார்கள்.

அதேவேளை இங்கு தமிழ்த் தலைவர்கள் இந்தியா மீது பற்றுக் கொண்டவர்களாய் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமது அறியாமையினால் பிரித்தானியர்களை பாதுகாவலர்களாகவும் நினைத்தார்கள். இத்தலைவர்களின் பிற்கால நடவடிக்கைகள் இதனைத் தெளிவாக உணர்த்தும். இந்தியாவுக்கும், அதன் பகைமை நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு யுத்தங்களிலும் தமிழ்த் தலைவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் தீவிர ஆதரவாளர்களாகவே செயற்பட்டனர்.

உதாரணமாக, 1962ஆம் ஆண்டு இந்தோ - சீன யுத்தம் நிகழ்ந்த போது தமிழ் மக்களது பெரும் தலைவராக இருந்த தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தனது ஆதரவுத் தந்தியை அனுப்பிவிட்டு, இந்திய யுத்த வீரர்களுக்கென நிதியும் திரட்டி அனுப்பினார். அத்துடன் ஒரு தொண்டர் படையை திரட்டும் முயற்சியிலும் ஆர்வம் காட்டினார்.

இக்காலத்தில் இலங்கையின் பிரதமராய் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வெளிப்படை அர்த்தத்தில் நடுநிலைமை என்று கூறிக்கொண்டார். அத்துடன் 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தோ - பாகிஸ்தான் யுத்தத்தின் போது பாகிஸ்தானியப் படையினரை இலங்கைக் கூடாக பங்காளதேசுக்கு செல்ல அனுமதித்தார். பின்பு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் மூலமே இது நிறுத்தப்பட்டது.

பொதுவாக சிங்களத் தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அடிமனதில் இந்திய எதிர்ப்புவாதிகளாகவே உள்ளனர். இந்தியாவின் பகைமை நாடுகளுடன் தம் நல்லுறவைப் பேணும் அதேவேளை, இந்தியாவின் காலகட்ட நெருக்கடிகளைப் பயன்படுத்தி இந்தியாவை கையாளும் தந்திரத்தை சிங்களத் தலைவர்கள் எப்போதும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சிங்களத் தலைவர்கள் தேர்ந்த சர்வதேசக் கண்ணோட்டத்துடனும், மதிநுட்பம் மிக்க சூழியல் அறிவுடனும் சர்வதேச அரசுகளைக் கையாளும் அதேவேளை, தமிழ்த் தலைவர்கள் வெறுமனே உணர்ச்சி வசப்பட்டவர்களாயும் - சரியான சர்வதேசக் கண்ணோட்டம் அற்றவர்களாயும் - அரசுகளுக்கு இடையேயான சூழியலைக் கையாளும் திறனற்றவர்களாயும் விட்டில் பூச்சி அணுகுமுறையை சர்வதேச அரசியலில் பின்பற்றும் பரிதாபம் வரலாற்றில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

4/16/2010 3:47:13 PM

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.