Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போன கடற்படை சிப்பாய்கள்! அவிழும் மர்ம முடிச்சு

Featured Replies

இலங்கை இந்தியத் தரப்புக்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆளாளுக்குக் கறுவிக் கொண்டு நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கையில் மறு புறத்தில் சிப்பாய்கள் காணாமற்போன விடயத்தில் மர்ம முடிச்சு அவிழும் சூழல் ஏற்பட்டிருப்பதாக இப்போது தெரியவருகின்றது.

இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் முல்லைத்தீவுக் கடலில் திடீரென மாயமாக மறைந்தமை, அதன் பின்னர் சில தினங்கள் கழித்து இராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே காணாமற்போனமை போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த பரபரப்பான செய்திகளாக அடிபட்ட போதிலும், தமிழகத் தேர்தல் சுட்டுக்கு மத்தியில் அந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கித்தான் போயின.

ஆனாலும், இந்த மர்ம மறைவுக்குப் பின்னால் கட்டவிழும் மிகப்பெரும் இராஜதந்திர நெருக்கடி அப்படி ஒன்றும் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். ஒருபுறம், இலங்கை இந்திய கடற்படைகள் திருகோணமலைக் கடற்பிராந்தியத்தில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கூட்டுக்கடற்படை ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தயாராகின்ற அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்திசைவு இருப்பதாகக் காட்டப்படுகின்ற போதிலும், திரைமறைவில் இடம்பெறுகின்ற சம்பவங்களும் அரங்கேறும் நிகழ்ச்சிகளும் இரு தரப்பினருக்கும் இடையில் பெரும் பனிப்போர் தீவிரமடைந்து வருவதையே காட்டுகின்றன என்கின்றனர் விடயமறிந்த தரப்பினர். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்து, அவர்களுக்கு எதிராக அடாவடித்தனமான வன்முறைப் போக்கை இலங்கை க்கடற்படை தொடர்ந்து கடைபிடிக்கத் தொடங்கியமையை அடுத்து, கடல் எல்லை விவகாரம் தொடர்பாக இலங்கை இந்திய அதிகாரத்தரப்புகளுக்கு இடையில் தீவிரமடையத் தொடங்கிய பூசல் இப்போது உச்சக்கட்டத்தைத் தொட்டிருக்கின்றது.

கடந்த மார்ச் 29ஆம் திகதி முல்லைத்தீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம், கடற்படைத்தளத்திலிருந்து வழக்கம்போல டிங்கி படகு ஒன்றில் இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் ரோந்து நடவடிக்கை களுக்காகப் புறப்பட்டுச் சென்றனர் என அந்தக் கடற்படைப் பதிவுகள் கூறுகின்றன. அந்தச் சமயத்தில், முன்னிரவு வேளையில் அத்தளத்தின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் விக்கிரம குணரத்ன என்ற கடற்படை அதிகாரிதளத்திலேயே இருந்திருக்கின்றார். அவர் முகாமில் உள்ள தமது விடுதியில் அன்று இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக்கிண்ணக் கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் ரசித்துக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகின்றது. எல்லாம் வழக்கம்போல நடைபெற்றிருக்குமானால் அடுத்த நாள் 30ஆம் திகதி விடிவதற்கு முன்னராக அந்த நான்கு கடற்படைச் சிப்பாய்களும் ரோந்து முடித்து தமது டிங்கிப் படகுடன் முகாம் திரும்பியிருக்க வேண்டும். அவர்கள் திரும்பவுமில்லை. அவர்களிடமிருந்து இன்று வரை எந்தத் தகவலுமில்லை. அதற்கு அடுத்த நாள் மாலையில் சிப்பாய்கள் இல்லாமல் அவர்கள் பயணித்த டிங்கிப்படகு மட்டும் சுண்டிக்குளத்துக்கு அப்பால் கரை ஒதுங்கியிருக்கின்றது. நான்கு சிப்பாய்கள் வசமும் இருந்த நான்கு ரி56ரக இயந்திரத்துப்பாக்கிகளில் மூன்று டிங்கிக்குள் அப்படியே காணப்பட்டன. ஒன்றை மாத்திரம் காண வில்லை. அதே\மயம் அந்த டிங்கிப் படகில் பொருத் தப்பட்டிருந்த "அவுட்போட்' மோட்டரும் படகுக்குள் மேலதிகமாக ஒரு பரலில் வைக்கப்பட்டிருந்த இரு நூறு லீற்றருக்கும் அதிகமான டீசலும் கூடக் காணாமற் போயிருந்தன.

சிப்பாய்கள் மர்மமாக மறைந்தமையை அடுத்து இலங்கைத் தரப்பில் இருந்து இரண்டு விதமான வெளிப்பாடுகள் உடனடியாக வெளிப்பட்டன. முல்லைத்தீவுப் பிரதேசத்தை அண்டிய நிலப்பரப்பில் இராணுவத்தினர் சுற்றிவளைத்துத் தேடுதல்களைத் தீவிரப்படுத்தினர். ஒவ்வொரு பிரதேசத்தையும் துருவித் துருவிச் சோதனையிட்டனர். அகப்பட்ட தமிழ் இளைஞர்களை நோண்டி நுங்கெடுக்கவும் ஆரம்பித்தார்கள். இது யுத்தத்தின் பின் எஞ்சியிருக்கக்கூடியவர்கள் எனக் கருதப்படும் கடற்புலிகளின் கைவரிசையாலேயே சிப்பாய்கள் காணாமற்போயிருக்கலாம் என்ற சந்தேகம் பாதுகாப்பு அதிகார பீடத்துக்கு எழுந்ததை வெளிப்படுத்தும் விடயமாக அமைந்தது. அதேசமயம், சிப்பாய்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில் கொழும்பில் சிங்கள ஊடகங்களுக்குத் தகவல் கசியவிட்ட இலங்கைப் பாதுகாப்பு அதிகார வர்க்கம், அந்த விவகாரத்தில் இந்தியாவின் மறைமுகச் செயற்பாடு சம்பந்தப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தைக் கிளப்பவும் தயங்கவில்லை. அதன் விளைவாகத்தான் ஏற்கனவே காணாமற் போன இலங்கையின் நான்கு கடற்படையினருக்கும் சமமான எண்ணிக்கையுடைய இராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவுக்கு அருகே மர்மமாக மறையச் செய்யும் நடவடிக்கை அடுத்த சில தினங்களில் எடுக்கப்பட்டிருக்கலாம் என இந்தியப் புலனாய்வாளர்கள் இப்போது சந்தேகப்படுகின்றனர். இப்படி இப்பிரதேசத்தில் இலங்கை இந்தியத் தரப்புக்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆளாளுக்குக்கறுவிக் கொண்டு நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கையில் மறுபுறத்தில் சிப்பாய்கள் காணாமற்போன விடயத்தில் மர்ம முடிச்சு அவிழும் சுழல் ஏற்பட்டிருப்பதாக இப்போது தெரியவருகின்றது.

சம்பந்தப்பட்ட நான்கு சிப்பாய்களும் அவர்களது படகை நெருங்கி வந்த மற்றொரு படகில் ஏறியதை சில இந்திய மீனவர்கள் கவனித்திருக்கின்றனர் என்ற ஒரு தகவலும் வெளியாகியிருக்கின்றது.

அதேவேளை சிப்பாய்கள் பயணித்த அந்த டிங்கிப் படகில் மோதல்கள் இடம் பெற்றமைக் கான அடையாளம் ஏதுமில்லை. அத்தோடு இருநூறு லீற்றருக்கும் அதிகமான டீசல் கொண்ட பரலை டிங்கிப் படகில் இருந்து இன்னொரு படகுக்கு தூக்கி, ஏற்றி, மாற்றுவது என்பது இழுபறி, மோதல்களுக்கு மத்தியில் இலகுவானதல்ல. ஒரு துளி டீசல் கூட சிந்தாமல், முட்டி மோதாமல் டீசல் பரல் ஏற்றப்பட் டிருக்கின்றது. அவுட்போட் மோட்டார் கழற்றி எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் ரி 56 இயந்திரத் துப்பாக்கிகள் எடுத்துச் செல்லப்படவில்லை. அந்தப் படகுக்கு வந்த வேற்று ஆள்களுக்கு அந்த துப்பாக்கிகள் தேவையற்றவை என்பதையே காட்டு வதாகப் புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த விஷயங்களை நுணுக்கமாக ஆராய்ந்த விசாரணையாளர்களுக்கு மற்றொரு தகவலும் மூக்கில் வியர்க்க வைத்திருக்கிறது. இந்தக் கடற்படைச் சிப்பாய்கள் காணாமல் போன விடயத்தை மேற்படி சுண்டிக்குளம் கடற்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி 24 மணி நேரம் கழித்துத்தான் மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றார் என்பதுதான் அது. இதனையடுத்து அந்தக் கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு திருகோணமலைக் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். உரிய முறையில், இரகசியமான வகையில் அவர் விசாரிக்கப்படுகின்றார் என்று கூறப்படுகின்றது. முல்லைத்தீவுக் கடலில் மிகப் பெரிய கடத்தல் காவியம் ஒன்று கடற்படையின் சில அதிகாரிகளின் அனுசரணையோடு தொடர்ந்து வெற்றிகரமாக அரங்கேறி வந்ததாகவும், அதுபற்றிய உண்மைகளை வெளியே தெரிய விடக்கூடாது என்று அவற்றை அறிந்திருந்த நான்கு சிப்பாய்களும் கூண்டோடு காணாமற் போகச் செய்யப்பட்டனர் என்றும் இப்போது தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் சில முக்கிய புள்ளிகளுக்கும் இந்தக் கடத்தல் வலைப்பின்னலுடன் தொடர்புகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இத்தகைய மறைமுகக் கைங்கரியங்களுக்கு அவ்வப்போது இடைஞ்சலாக வரும் அப்பாவி இந்திய மீனவர்களே இடையிடையே பலிக்கடாக்களாக்கப்படுகின்றனர் என்றும் இந்தியப் புலனாய்வுத் தரப்புக்கள் இப்போது கருதுகின்றன. இந்த "ஹைகிளாஸ்" கடத்தல் நடவடிக்கையின்போது என்னென்ன பொருள்கள் கடத்தப் படுகின்றன? எங்கிருந்து அவை எங்கு போகின்றன? என்ற விடயங்கள் எல்லாம் இனிமேல் தான் அம்பலத்துக்கு வரும். எது எப்படியோ, அப்பாவி இந்திய மீனவர்களின் உயிருடன் விளையாடிக் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு என்ற வேடத்தில் கடத்தல் போன்ற அட்டூழியங்களில் ஈடுபடுவது மன்னிக்கப்படவே முடியாத குற்றம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நன்றி: சூரியகதிர்

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=140

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.