Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் வளைகுடா வாழ்க்கை

Featured Replies

மன்னார் வளைகுடா வாழ்க்கை

மன்னார் வளைகுடா கிராம வலைப்பூக்கள்

இந்த வலை தளத்தின் ஊடாக தமிழகத்தின் கடலோர கிராமங்கள் பலவற்றின் தகவல்களை இணைக்கவுள்ளோம் அது தொடர்பான தகவல்களை இதன் ஊடாக பார்வையிடலாம்.

http://gomannar.blogspot.com/p/blog-page.html'>http://gomannar.blogspot.com/p/blog-page.html

மீனவர்களுக்கு எதிரான அரசுக் கொள்கைகள்

1. கடற்கரையை சுற்றுலாத் தளமாக மாற்றுதல்

2. கடற்கரையில் அணு/அனல் மின்நிலையங்கள் அமைத்தல், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தருதல்

3. கடற்கரையை பல்நோக்குத் துறைமுகங்களாக மாற்றுதல்

4. ஆற்று முகத்துவாரங்கள் சரியாக பரமரிக்கப்படாமை

5. மணற்கொள்ளைக்கு அனுமதி வழங்குதல்

6. தீவுகளைச் சுற்றி போயா (மிதவை) போடுதல்

7. சேது சமுத்திரத்திட்டம்

8. கடலட்டை பிடிக்கத் தடை

9. கடலுக்கடியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்தல்

10. கடலோர ஆய்வுகளை மீனவர்களிடம் அறிவிக்காமல் செய்தல்

11. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களைத் தடை செய்யாதிருத்தல்

12. மீனவ நல வாரியம் தொழிலாளர் நல வாரியத்துடன் இல்லாதிருத்தல்

13. சுற்றுலத்தலாமாக்குவதால் மணல் மேடுகள் அழிக்கப்பட்டு கடல் அரிப்பு ஏற்படுதல்

14. மீனவர்கள் கடலில் இறந்துவிட்டால் அந்த உடலைப் பார்த்தால் மட்டுமே நிவாரண நிதி வழங்குதல்

15. தொழிற்சாலைக் கழிவுகளை கடலில் கலக்க வைத்தல்

http://gomannar.blogspot.com/

  • தொடங்கியவர்

தமிழக மீனவர் படுகொலை – விடிவே இல்லையா? - புலவர் அஞ்சான்

நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கிறது. தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல்கள் தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் மிக இழிந்த போக்காக உள்ளது.

கடந்த ஏப்பிரல் 2ஆம் தேதி இராமேசுவரத்தி லிருந்து மீன் பிடிக்கச் சென்ற விக்டர், மாரிமுத்து, அந்தோணிராஜ், ஜான்பால் ஆகிய நால்வரையும் பல நாட்களாகக் காணவில்லை. அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிரிகெட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் மோதின. இந்த ஆட்டத்தைக் காண இலங்கை அதிபர் இராசபக்சே இந்தியாவின் விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தார். காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவிலும் அவர் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்றிருந்தார். கிரிக்கெட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி தோற்றது. ஏற்கெனவே இலங்கை அரசு இந்தியாவின் மீது மறைமுகமாய்ப் பகை கக்கி வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டில் இந்தியாவிடம் இலங்கை தோற்ற எரிச்சலில் வழக்கம்போல் மீன் பிடிக்கப் போன தமிழக மீனர்வர்கள் நால்வரையும் இலங்கைக் கடற்படையினர் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்துள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டிப் பரப்புரையாற்றிட சென்னை வந்த சோனியா காந்தி, தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்காக முதலைக் கண்ணீர் வடித்தார். இனி இதுபோன்ற கொடுமைகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று பம்மாத்துப் பேசினார். அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றினாரா? இல்லை.

கடந்த 18-04-2011 அன்று ‘இலங்கைக் கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்துத் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார். அவருக்கோ, அவர் சார்ந்துள்ள கட்சிக்கோ, அக்கட்சியின் தலைவி சோனியா காந்திக்கோ துளியே னும் மானம், வெட்கம் உள்ளதா? கொட்டைப் பாக்கு அளவுள்ள ஒரு சின்னஞ் சிறிய நாடு, உலகின் மிகப் பெரிய வல்லரசாகத் துடிக்கும் இன்னொரு நாட்டைப் பார்த்து வாலாட்டுகிறதே! ஏன்? இலங்கைக்கு யார் கொடுத்தது இந்தத் துணிச்சலை? எல்லாம் சோனியா காந்தியின் – மன்மோகன் சிங்கின் இரட்டை வேடந் தான்!

பக்கத்தில் உள்ள நாடு பாக்கிஸ்தான். உள்ளூரில் சின்னதோர் ஊசிப் பட்டாசு வெடித்தாலும் எல்லை கடந்த பயங்கரவாதம், இசுலாமியத் தீவிரவாதிகளின் சதி என்றெல்லாம் கூச்சல்போடும் கூறுகெட்ட இந்தியா, 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களைச் சாகடித் துள்ள இலங்கையை ஏனென்றே கேட்பதில்லை. காரணம் இனவெறி படித்த சிங்கள அரசுக்கு இணை யாக, இந்திய அரசு தமிழகத் தமிழர்கள் மீது இனப் பகை பாராட்டுகிறது.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. அரசினால் முதல் தகவல் அறிக்கையும், கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றங்களின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்ட தில்லை.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வரும் முன்வரை ‘தமிழக மீனவர்களை நாங்கள் கொல்வ தில்லை, புலிகள்தான் கொன்றுவிடுகிறார்கள். அப்படிக் கொன்றுவிட்டுப் பழியை எங்கள் மேல் போட்டு விடுகிறார்கள்’ என்று இலங்கை அரசு பிதற்றி வந்தது. இப்போது அப்படிச் சொல்ல வழியில்லை. மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தச் சொல்லவேண்டும் என்ற பெயரில் இலங்கைக்கு அனுப் பப்பட்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் தெறித்து விழுந்த தோட்டாக்கள் இலங்கைக் கடற்படைக் குரியவை என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஆனால் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற தன்மையில் இந்திய அரசு எப்போதும் பேசுவதில்லை. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்வதுதான் எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம். எனவே எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று நமக்கே குழிவெட்டி னால் இலங்கைக்காரன் எப்படி அஞ்சுவான்? இங்குள்ள ‘இந்து’ராம் இராசபக்சேவின் உற்ற நண்பர். போரால் மிகவும் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இப்போதுதான் மீன்பிடி தொழிலைத் தொடங்கி யுள்ளனர். ஆனால் தமிழக மீனவர்கள்தான் எப்போதும் எல்லை தாண்டி வந்து டிராலிங் முறையில் மீன் பிடித்து அவர்கள் பிழைப்பில் மண் போடுகிறார்கள் என்று இந்து ஏடு கூசாமல் புளுகுகிறது. பார்ப்பன நரி எப்போதும் இராசபக்சே கூட்டத்தின் மீது ஒருபடி கூடுதல் பாசங்காட்டுகிறது.

இந்நிலையில் இராசபக்சேவைப் போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும் இலங்கைக்கு இந்தியா அளித்துவரும் உதவிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் கிருட்டிணமூர்த்தி என்கிற இளைஞர் 18.04.2011 அன்று தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வந்த கிருட்டிணமூர்த்தி தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலையொட்டி வாக்களிப் பதற்காகத் தன் சொந்த ஊருக்கு வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றித் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டு இறந்தார். இறப்புக்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், இலங்கையில் சிங்களவரின் இனவெறித் தாக்குதலால் துன்புற்றுவரும் தமிழர்க்கு உதவிடல் வேண்டும். இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனிநாடு பெற வேண்டும். அதுவரை தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கக் கூடாது. ஈழத் தமிழர்க்காகப் போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

2009 மே மாதத்தில், மானுட இனமே வெட்கித் தலைக்குனியும் வண்ணமான ஒரு மாபெரும் இன அழிப்புப் போரை ஈழமண்ணில் இலங்கை அரசு நிகழ்த்தியது. உலக நாடுகள் பலவும் சிங்கள வெறியன் இராசபக்சேவுக்கு எதிராக ஒரு சொல்லும் பேசவில்லை. அப்போது ஐ.நா.சபையும் ஒப்புக்கு ஒரு சில நடவடிக் கைகளை மேற்கொண்டது. முள்ளிவாய்க்கால் அவலம், நந்திக் கடலில் புலிகளுக்கு எதிரான கொடும் போர், மறுவாழ்வு என்ற பெயரில் அகதிகள்படும் அளவிட முடியாத துன்பம் என்ற எதையுமே ஐ.நா.மன்றம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

மனச்சான்றுள்ள சில உலகநாடுகளின் ஓயாத வற்புறுத் தலை ஏற்று, போர் முடிந்து 13 மாதங்களுக்குப் பிறகு ஐ.நா. அவை இந்தோனேசிய முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி தாரூஸ்மன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தக் குழுவும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு ஆலோசனைகள் மட்டும் வழங்குமே தவிர எந்த வகையிலும் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தாது.

இக்குழுவின் அறிக்கை இப்போது ஊடகங்களில் கசிந்துள்ளது. சர்வதேச மனிதநலச் சட்டத்தையும், மனித உரிமைச் சட்டத்தையும் இலங்கை அரசு மீறியுள்ளதாக இக்குழுவின் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. வன்னிப் பகுதியில் படிப்படியாய் முன்னேறிச் சென்ற சிங்கள இராணுவம் மிக அதிக அளவில் இரசாயனக் குண்டுகளை வீசி எண்ணிலடங்காத அப்பாவி மக்களை அழித்துள்ளது. பொதுமக்களைக் கொல்வதை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இலங்கை அரசால் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ‘வெள்ளை ஊர்தி’களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராகச் செயல் பட்டவர்கள் கடத்திக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். போரின் போது பாதுகாப்பு வலையப் பகுதிக்குச் சென்றுவிடுமாறு அரசே பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. அப்படி அந்த இடங்களில் திரண்ட மக்கள் மீது கொடுந்தாக் குதல் நடத்திக் கொன்றுள்ளது. இந்தத் தாக்குதலில் இருந்து உணவு வழங்கச் சென்ற ஐ.நா. மையமும் செஞ்சிலுவைச் சங்கமும் கூடத் தப்பவில்லை. மருத்துவ மனைகள், பள்ளிகள் மீதும் குண்டு வீச்சு தொடர்ந் துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்காவண்ணம் இராணுவம் ஈவிரக்கமின்றித் தடுத்துவிட்டது.

இதேபோன்ற சில குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தியுள்ளது. இப்படி ஆயிரம் அறிக்கைகள் ஐ.நா. மன்றத்திடம் அளிக்கப் பட்டாலும் இலங்கை அரசு அவற்றைக் கண்டு அஞ்சப் போவதில்லை. இந்திய அரசும், இங்குள்ள ஆளும் வர்க்கங்களும் இலங்கை அரசுக்குத் துணையாக இருக்கும் வரை இராசபக்சே கழுத்தில் தொங்குங் தோள்துண்டைக்கூட யாராலும் தொட முடியாது. இலங் கையில் இனஅழிப்புப் போரை நடத்தியதும், எல்லா வகையான உதவிகள் செய்ததும் இந்தியாதான் என்று இராசபக்சே உலகறிய போர்முடிந்த கையோடு ஓங்கிச் சொல்லிவிட்டார்.

மனமறிந்து பொய் சொல்லும் மன்மோகன் அரசையும், மாயக்காரி போலச் செயல்படும் சோனியா காந்தி யையும், இலங்கையின் வர்த்தகச் சந்தையைக் குறி வைத்து இலாபவேட்டைக்கு அலையும் ஆளும் வர்க்க ஓநாய்களையும் ஒழிக்காதவரை ஈழத் தமிழர்களுக்கும் வாழ்வில்லை. இங்குள்ள தமிழர்களுக்கும் விடிவில்லை!

-புலவர் அஞ்சான்

http://rste.org/2011/05/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மீனவர் படுகொலை குமுதம் ரிப்போர்ட்டருக்கான எனது மூலக்கட்டுரை -திருமுருகன் காந்தி.

மாற்றம் வருமா?

திருமுருகன் காந்தி

மீனவர் படுகொலை

இலங்கையின் பயங்கரவாதமும்

இந்தியாவின் ஆதரவும்

ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா என ஏக்கத்தோடு காத்திருப்பவர்கள் தமிழக மீனவர்கள் தான். இலங்கை கடற்படை குருவிகளை போல் மீனவர்களை சுட்டுத்தள்ளும்போது, இந்திய அரசு அதை கண்டுகொள்வதே இல்லை. இலங்கையில் போர் நடைபெறும் காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நிறுத்தப்படவில்லை. வெறும் கடிதங்களோடும், மவுனங்களோடும் அந்த மரணங்களை கடந்து போனது கடந்த அரசு.

தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு பகை நாடுகளாக இருக்கும் ஈரான், ஈராக், குவைத் நாடுகளின் கடல் எல்லை மிகக் குறுகியது. கடலிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு கூட சவால் விடக்கூடியது. ஈராக் போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்தின் ராயல் கடற்படையின் சிறப்புப் பிரிவினர் ஈரானிய கடல்படையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கடற்படை வீரர்கள் எல்லை தாண்டியதாக ஈரான் குற்றம் சாட்டியது.

மிக பதட்டமான சூழ்நிலையில்,. ‘‘மிகக்குறுகிய கடல் பகுதியில் எல்லை கண்டுபிடிக்க முடியாமல் தவறு நடந்து விட்டது’’ என இங்கிலாந்து அறிவித்தது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சகல சாடிலைட் வசதிகளும் கொண்டிருந்த உலகின் வலிமை வாய்ந்த ஒரு கடற்படையின் வீரர்கள் தவறுதலாக அடுத்த நாட்டின் கடல் பகுதியில் செல்வது குற்றமாக பார்க்கப்படவில்லை. ஈரானை பகை நாடாக கருதும் இங்கிலாந்தின் கடற்படை வீரர்களை ஈரான் சகல மரியாதைகளுடன் நடத்தியது. எந்த ஒரு நாகரீகமடைந்த நாடும் இவ்வாறே சக மனிதர்களை நடத்துகிறது. இலங்கையைத் தவிர!

தமக்கான எல்லையை எந்த ஒரு நாடும் விட்டுக் கொடுப்பதில்லை, இன்று வரை மக்மகான் எல்லை வரையரையை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. புழு, பூச்சி கூட வசிக்க முடியாத சியாச்சின் மலைப்பகுதிக்காக இந்தியா பெரும் பொருட்செலவையும், உயிர் சேதத்தையும் தாங்கி வருகிறது. ஆனால், நாட்டிற்கு பெரும் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் தருகிற மீனவர்களின் பாரம்பரிய சொந்த நிலமான கச்சத்தீவை அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிராக சட்டவிரோதமாக இந்தியா தாரை வார்த்தது. இதன்மூலம் மீனவர் படுகொலைக்கான அடிப்படையை இந்தியா தொடர்ந்து காத்து வருகிறது.

செயற்கைக்கோள் உதவியுடன் கூடிய நீண்ட தூர தடம் அறியும் சாதனங்கள் (எல்.ஆர்.ஐ.டி.), சென்சார் கருவிகள், ஏரேஸ்டட்ஸ் சாதனங்கள், ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை கடலோர காவல் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்தும் இருந்தும் மிகக் குறுகிய கடல் பகுதியில் நடக்கும் மீனவர் படுகொலையை தடுக்க இந்தியக் கடற்படை முயற்சிப்பது இல்லை. இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு காயமடைந்த, உயிருக்கு போராடும் மீனவர்களை காப்பாற்ற இந்தியக் கடற்படை உதவுவதும் இல்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழக மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டனர். ஒன்றுக்கும் மேற்பட்ட இலங்கை கடற்படை படகுகளால் சூழப்பட்ட மீனவர்களின் கை வெட்டித் துண்டிக்கப்பட்டும், நகக்கண்கள் ஊசியால் குத்தப்பட்டும், தலை அறுத்துத் துண்டிக்கப்பட்டும், ஒரு மீனவரின் ஆணுறுப்பு வெட்டி எடுக்கப்பட்டும்... என ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக இந்த சித்திரவதை கடலில் நிகழ்த்தப்பட்டது. இந்த நீண்ட நேரத்தின் போது கூட இந்திய கடலோரக் காவல்படை அந்தப் பகுதிக்கு வரவில்லை. மேலும், இந்த படுகொலைகளை மறைக்க இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் இந்தியா கண்டுகொள்ளவில்லை.

கொலை செய்யப்பட்ட மீனவர்களை பிரேத பரிசோதனை செய்து உண்மையை எழுதிய யாழ்ப்பாண மருத்துவர் சிவரூபன் காணாமல் போனதும், தொடர்ந்து கொலை மிரட்டலுக்கு ஆளாவது பற்றியும் இந்திய அரசு மௌனம் காக்கிறது. இறந்த மீனவர்களின் உடலை பெற்றுக்கொள்ள யாழ்ப்பாணம் சென்ற மீனவர்களின் உறவினர்கள் மிரட்டப்பட்டு மீனவர்களின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இறந்த மீனவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்வதற்காக, தமிழே தெரியாத அதிகாரிகள் தான் இந்திய தூதரகத்தால் அனுப்பப்படுகின்றனர். இதே போல இந்திய பகுதியில் மீனவர் மனித உரிமை என்கிற பெயரில் இலங்கைக்கு உளவு சொல்லும், ஒட்டுக்குழு நபர்களே மீனவர் போராட்டம் எனும் பெயரில் மீனவர்களை மட்டுப்படுத்துகின்றனர்.

”இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்’’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்..கிருஷ்ணா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதை அன்றைய தமிழக அரசு கண்டிக்க மறந்தது. புதிய தமிழக சட்டசபை தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் முன்வைக்க வேண்டும்.

எல்லை கடந்து சட்ட விரோதமாக அமெரிக்க நாட்டில் படிக்கச் சென்ற இந்தியர்களை, காக்க இந்திய அரசு உறுதியாய் நின்றது போல் மீனவர்கள் பக்கம் ஏன் நிற்பதில்லை என்பது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளது. மீனவர்கள் கடல் எல்லையை கடந்தாலும் அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளே. மேலும், ‘‘உலகெங்கிலும் மீனவர்களுக்கு கடலில் எல்லை கிடையாது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதை சட்ட நோக்கிலன்றி மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்’’ என்பது ஐ.நாவின் அறிவுரை. மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மறுப்பது தமது கடமையை செய்ய மறுப்பதற்கு ஒப்பாகும்.

மீனவர்கள் படுகொலைகளின் ஆணிவேர் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தான் தொடங்குகிறது. கச்சத்தீவை திரும்பப் பெறுவது சாத்தியமான ஒன்றுதான். சட்டத்திற்கு புறம்பான ஒப்பந்தத்தை கிழித்தெறிவதில் இந்திய அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

‘‘கச்சத்தீவை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும்’’ என்று ஒரு வழக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டது. இதற்கு முன்னால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலையும், மூன்றில் ஒரு பங்கு உள்ள இந்திய சட்டமன்றங்களின் ஒப்புதலையும் பெறவில்லை என்பதால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

அதேபோல கச்சத்தீவு ஒப்பந்தமும் இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவையும், மூன்றில் ஒரு பங்கு சட்ட மன்றங்களின் ஒப்புதலையும் பெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. ஆக, இது சட்டவிரோத ஒப்பந்தமே! இந்த உண்மையை இரு அரசுகளும் அறியும்.

தமிழக மீனவர்களை எந்தக் கடல் எல்லையில் வைத்து கொலை செய்தாலும் அது நியாயமாகாது. போலீஸ் பிடியில் இருக்கும் ஒரு கைதி அடித்துக் கொல்லப்பட்டால், போலீஸை எப்படி கொலையாளிகள் என வரையறுக்கிறோமோ அதே போலத்தான் இந்த படுகொலைகளும். இலங்கை அரசின் ஜெயவர்த்தனா முதல் ராசபக்ஷே வரையிலான இலங்கை அதிபர்களை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்த முடியும். மீனவர்கள் படுகொலைகளின் பின்னணியில் இப்போது புதிதாக பல கதைகள் சொல்லப்படுகின்றன. கட்டவிழ்த்து விடப்படும் கதைகளை புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசும் நம்பிவிடக் கூடாது.

“இழுவைப் படகுகளை வைத்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதால் இலங்கையின் மீன்வளம் அழிகிறது. அதுவே அனைத்து பிரச்சனைகளின் மையம்’’ என்னும் பொய்யை இலங்கை அரசும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். அந்த பொய்யை இந்திய அளவில் கொண்டு செல்ல சென்னையில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவர்களின் மீனவர் விரோத பிரசாரத்தை, திசைதிருப்பலை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்.

ஏனெனில் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவருமே பாரம்பரிய மீன்பிடித்தலை செய்பவர்கள். கடல் வளத்திற்கு ஊறு விளைவிக்காதவர்கள். இழுவலை மீன்பிடி உரிமையாளர்களை இலங்கை கடற்படை கொல்வது இல்லை.

மீனவர்கள் படுகொலைகளை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணியில் வேறு பல காரணங்களும் உள்ளன. உலக வர்த்தக ஒப்பந்தப்படி தமிழக கடல் மீன்வளங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது அதில் முக்கியமானது. இந்த ஒப்பந்தத்திற்கு மீனவர்கள் இடையூறாக இருப்பார்கள் என்பதால், மீன்பிடித் தொழிலை ஆபத்தான ஒன்றாக அரசு மாற்ற விரும்புகிறது.

மேலும் கடலோரத்தில் இருக்கும் மீனவர்கள் அப்புறப்படுத்தப் பட்டால் தான் கடற்கரையை, நட்சத்திர விடுதிகளுக்கும், தீம் பார்க்குகளுக்குமான ரியல் எஸ்டேட் தொழிலாக மாற்ற முடியும்.

கடல் வளத்தையும், மீனவர்களையும் பாதுகாக்க இருக்கும் கடற்கரை ஒழுங்கு பகுதி அரசாணையை மாற்ற சுற்றுசூழல் அமைச்சகத்தால் செய்யப்படும் சதியினை தமிழக அரசு எதிர்கொண்டு தடுக்க வேண்டும். இந்த நோக்கத்திற்கு உதவவே கிழக்கு கடற்கரை சாலைகள் தமிழக கடற்கரையை ஒட்டி விரிவுபடுத்தப்பட்டன என்பதை உணர்ந்து இது போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது மக்களிடத்தில் எதிர்ப்பையே உருவாக்கும்.

மீனவர்களை மீன்பிடித்தொழிலில் இருந்து வெளியேற்றி அவர்களை மறுசீரமைப்பது என்கிற போர்வையில், கடல்சார் ஆராய்ச்சி என்கிற பெயரில் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை அகற்றி பாரம்பரிய மீன்பிடித்தலுக்கான அனைத்து உதவிகளையும் அரசே வழங்கிடல் அவசியம். செபா எனப்படும் இருதரப்பு பெரு வணிக ஒப்பந்தத்தை இலங்கை அரசு கையோப்பமிடாமல் 4 வருடங்களாக தவிர்த்து வருவதை, பற்றி புதிய அரசு கேள்வி கேட்க வேண்டும்.

எந்த ஒரு அரசாலும் சாதிக்க முடியாமல் இருக்கும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தால் தமிழக அரசின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இதை நிறைவேற்றிட பெரும்பான்மை பலத்துடன் அமைந்துள்ள புதிய அரசு சட்டசபையில்

பின்வரும் தீர்மானங்களை இயற்றுதல் அவசியம்.

- கச்சத்தீவு தமிழக தமிழருக்கு சொந்தமானது. கச்சத்தீவு ஒப்பந்தம் 1974, 1976 சட்டவிரோதமானது, செல்லுபடியாகாது --

-இழுவைப்படகு மீன்பிடி ஒழுங்கமைக்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடித்தலையும், கடல் வளத்தினையும் அழிக்காமல் காக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் இருகரைகளில் உள்ள மீன்பிடிச் சமூகங்களான தமிழக மீனவர், தமிழீழ மீனவர், சிங்கள மீனவர் உள்ளடக்கிய மீனவ உழைப்பாளர்களின் வாழ்வியல் மீன்பிடி உரிமைகள், பண்பாட்டு உரிமைகள் காக்கப்படுதல் அவசியம்.

‘மீனவர் மனித உரிமை, மீனவர் மறுவாழ்வு’ என்கிற பெயரில் தமிழக மீனவர்களுக்கு ஆதரவான செயல்களை வெளியிடுவது போல சிலர் செயல்படுகிறார்கள். குறிப்பாக, தென்னிந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விவேகானந்தன் அய்யர், நிரபராதி மீனவர் சங்கம், பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் லெப்.ஜென் வி. ஆர்.ராகவன், தெற்காசிய ஆராய்ச்சி குழுமத்தின் பேரா.சூரியநாராயண், எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி பவுண்டேஷன், காலச்சுவடு போன்ற அரசு சார்பு தொண்டு நிறுவனங்கள் மீனவர்களிடத்தில் அக்கறை செலுத்துவது போன்று நடந்து கொள்கின்றன.

ஆனால் இவர்கள் பரப்பும் கருத்துக்கள் இலங்கை அரசை காப்பது போலவும், இலங்கை அரசின் மறைமுகத் திட்டத்திற்கு உதவுவது போலவுமே தொடர்ந்து இருக்கிறது. மீனவர்களுக்காக பேசும் இவர்கள் அனைவரும் மீன்பிடி சமூகத்தில் இருந்து வராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படும் போது மேலும் பல உண்மைகள் வெளிவரும். இந்த சவாலை மேற்கொள்ளும் மன உறுதி புதிய அரசுக்கு இருக்குமா என்பதே மக்களின் கவலை.

மீனவர்களை காப்பதற்காக எந்த செயலையும் செய்யும் வலிமை தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசிற்கு இருக்கிறது. அரசு அதை செய்யும் என மீனவர் சமுதாயம் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம்.தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது,தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி.அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான்.ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

“மாரி... யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க...” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல,அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா...” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம்,இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன்.அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை,அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன.ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு,ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்தபெற்றுவந்த மாரிச்செல்வம், +1 சேருவது தொடர்பாக நிறுவனத்திற்கு வந்தபோது மாரிச்செல்வத்தை சந்தித்து பேசியதிலிருந்து அவனது சாதனையின் பின்னிருந்த பல வேதனையான சம்பவங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. .

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர்.எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான்.அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க... நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார்.அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன.தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.

ஐந்து பெண் குழந்தைகள்,இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது.கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு”என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார்.முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா,அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார்.முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.

தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது.முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி,ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை,“நாளைக்குப் பரீட்சை எழுதணும்...நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி.பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.

அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98.சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம்.அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி.வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல் ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான்.அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும்,தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்...

http://gomannar.blogspot.com/

  • 2 months later...
  • தொடங்கியவர்

வடக்கு மீனவர்களின் பிரச்சனை தொடர்வதாக விசனம்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் உள்ள சுமார் 8000 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் மீன்பிடி தொழிலில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் ஊடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோதும் தீர்வுகள் கிடைக்கவில்லை என மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றார்கள்.

இந்தப் பிரச்சினைகளை தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் மீன்பிடிப்பதற்கு மீண்டும் பாஸ்நடைமுறை வந்துள்ளது. இதனால் மன்னார் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது முன்னரைவிட அதிகரித்துள்ளது, இதனால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பெரும் சிரமங்களையும் கஸ்டங்களையும் எதிர்நோக்கியிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, பாஸ் நடைமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி மன்னார் கடற்பரப்பில் பிரவேசித்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதனாலும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு கஸ்டங்கள் அதிகரித்திருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு பிரதேச இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் சுட்டிக்காட்டினார்.

http://www.bbc.co.uk/tamil/sport/2011/09/110910_mannarfishermen.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.