Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தேசம் பௌத்த பூமியாகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தேசம் பௌத்த பூமியாகிறதா? ஜிரிஎன் இற்காக ஞான. கௌதமன்

25 மே 2011

இலங்கையில் சிங்கள மக்களால் பின்பற்றப்படும் பௌத்த மதமும் அதன் கடவுளரான புத்தரின் சிலையும் ஈழத் தமிழர்களின் நிலப்பகுதியை அதிகமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இலங்கையில் அறுபதாண்டு அறவழிப் போரும் முப்பாதாண்டு ஆயதப் போரும் ஒரு நெருக்கடியான கால கட்டத்தை அடைந்துள்ள இன்றைய நிலையில் தமிழர்களின் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் பௌத்த மதத்தை பரப்பும் நடவடிக்கைகளில் இலங்கை அரசும் இலங்கை இராணுவத்தினரும் வெளிப்படையாக ஈடுபட்டு வருகின்றனர். ஈழத் தமிழர்கள் ஒரு ஆபத்தான எதிர்காலத்தை அடைவதற்காகவே இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு மேற் கொள்ளப்படுகின்றன என்று பரவலாக மக்கள் மத்தியில் பதற்ற நிலமைகள் உருவாகியுள்ளன.

பௌத்த மதம் கிறிஸ்துவுக்குப் பின்னர் 566-486 காலப்பகுதியில் இந்தியாவில் தோன்றியதாகக் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. பௌத்தம் என்பது போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமயமாகவும் தத்துவமாகவும் முக்கியம் பெறுகிறது. இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம் பின்னர் மத்திய ஆசியா, இலங்கை, திபெத், ஜப்பான், கொரியா, மங்கொலியா போன்ற நாடுகளுக்கும் பரவியது. பௌத்தம் நற்செய்கைகளை வலியுறுத்தி கெட்ட செய்கைகளை விலக்குகின்ற போதனைகளின் அடிப்படையில் ஞானமடைகின்ற மார்க்கத்தினை வலியுறுத்துகின்றது.

இலங்கையில் சிங்களவர்களிடம் புத்தர் சிக்கியதால் சிங்கள பௌத்தமாக அதுவே பெரும் வெறியாக மாறியிருக்கிறது. புத்தரின் போதனைகளை பரப்புவதாகவும் அவரின் கருத்துக்களை விதைப்பதாகவும் அவரின் கருத்துக்களின் அடிப்படையில் செயற்படுவதாகவும் சொல்லிக் கொண்டே இலங்கையின் அரசும் அதனுடைய படைகளும் செயற்படுகின்றன. சிங்களவர்கள் பௌத்தத்தை பின்பற்றியதினைத் தொடர்ந்து இலங்கை பௌத்த பூமியாகிவிட்டது. அதேவேளை தமிழர்களின் தாயக நிலப்பகுதியான வடக்கு கிழக்கிலும் பௌத்த மயம் திணிக்கப்படுகிறது. முற்றிலும் பௌத்தத்திற்கும் அதன் சிந்நதனைகளுக்கும் எதிராகச் செயற்படும் சிங்களவர்களின் பூர்வீகமான ஒரே மதமாக இன்று பௌத்தம் கொண்டாடப்படுகின்றது.

சிங்களவர்கள் தமது தாயகப் பகுதி எங்கும் புத்தர் சிலைகளை வைத்து விகாரைகளை அமைத்து வழிபட்டு வருகிறார்கள். புத்தரில் மிகவும் பக்தியுடன் வழிபட்டு வருகிறார்கள். ஜனாதிபதி முதல் அனைத்துத் தலைவர்களும் புத்தரின் சிந்தனையின் அடிப்படையிலேயே செயற்படுவதாகச் சொல்லுகிறார்கள். இதனால் சிங்கள மக்கள் வாழும் நிலப் பகுதி என்பது புத்தர் சிலைகள் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றன. யுத்த நடவடிக்கைளினால் தமிழர்களின் நிலப்பகுதியை ஆக்கரமித்துள்ள இராணுவத்தினர் தமது வழிபாடுகளின் நிமித்தம் புத்தர் சிலைகளையும் சிறிய விகாரைகளையும் நடப்படுவதாக கூறப்பட்டது.

எனினும் கால ஓட்டத்தில் தமிழர்களின் நகரங்களிலும் வாழிடங்களிலும் இராணுவத்தினர் புத்தர் சிலைகளை பெருக்கும் நடவடிக்கையில் இறங்கினர். யுத்தம் முடிவடைந்த இன்றைய காலப்பகுதியில் புத்தர் சிலைகளை பெருக்குவதையம் வெள்ளரசு மரங்களை நடுவதையும் தமது முக்கிய கடமைகளாக படைகள் செய்கிறார்கள். அதேவேளை கடும் யுத்தகால நெருக்கடிகளின் மத்தியிலும் முரண்பாடுகளின் மத்தியிலும் கூட இந்தக் கடமைகளை படையினர் செய்யத் தவறுவதில்லை. எடுத்துக் காட்டாக சமாதான காலத்தில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையால் முரண்பாடு வலுத்ததைக் குறிப்படலாம். நாடாளுமன்ற மற்றும் இராணுவ அரசியல் அதிகாரத்துடன் குறித்த புத்தர்சிலை பாதுகாக்கப்பட்டது. இன்று அது ஐந்தாண்டு பழமையை அடைந்து விட்டது.

யுத்தம் காரணமாக தமிழர்களின் நிலம் முழுவதும் நிலை கொண்டுள்ள படையினர் பரவலாக புத்தர் சிலைகளை வைத்துள்ளனர். வன்னியிலும் கிழக்கிலும் பெருமளவான புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி நகரின் மத்தியிலும் மாங்குளம் நகரின் மத்தியிலும் பெரும் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. தவிரவும் அரச மரங்களை காணும் இடமெல்லாம் புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கிழக்கில் திருகோணமலையில் அதிகளவான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கிழக்கில் சிங்களப் பிரதேசமாக குடியேற்றப்பட்ட இடங்கள் முழுவதும் புத்தர் சிலைகளின் மயத்தில் இருக்கின்றன. இராணுவ முகாங்களின் உள்ளேயும் புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

புத்தர் பெருமான் பற்றிய குறியீடு தமிழர்களிடத்தில் ஆக்கரமிப்பின் குறியீடாகவே இருக்கிறது. புத்தரின் பெயரால் அல்லது அவரது பெயரைச் சொல்லிக் கொண்டே தமிழர்களின் நிலத்தில் நடத்தப்பட்ட அநீதிகள், புத்தர் தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை உருவாக்கியுள்ளன. 1983இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட பொழுது தமிழ் பேசும் முஸ்லீம் கவிஞர் நுஃமான் லட்சக்கணக்கான புத்தகங்களை புத்தரின் போதனைப் புத்தகத்துடன் எரித்த பொழுது புத்தரை எரித்து கொலை செய்ததாக எழுதியிருந்தார். தமிழ்ச் சூழலில் புத்தர் தொடர்பான விபரிப்புக்கள் மிகுந்த விமர்சனத்துடனேயே கையாளப்பட்;டுள்ளன.

புத்தர் சிலைகள் ஆக்கிரமிப்பின் குறியீடாகவும் புத்தரின் மௌனம் அழிவின் பயங்கரத்தில் உறைந்த மௌனத்தைப் போலவும் விமர்சனமாகின்றன. தமிழர்களின் நிலப் பகுதியை நோக்கி நகரும் புத்தர் சிலைகள் நில அபகரிப்பு இராணுவப் படைகளுக்கு ஒப்பிடப்படுகின்றன. தமிழர் நிலத்தில் எதிர்காலத்தில் வன்முறைகளையும் நில அபகரிப்புக்களையும் உருவாக்கும் விதை பொருட்களாகவும் கருதப்படுகின்றன. இத்தனைக்கும் புத்தர் போதித்த போதனைகளும் அவரடைந்த ஞானமும் இந்த குறியீடுகளுக்கு அப்பால்ப்பட்டவை. ஆனால் சிங்கள மக்களாலும் அரசாலும் இராணுவத்தாலும் புத்தர்சிலைகள் பயன்படுத்தப்படும் போக்குகளால் புத்தர் தமிழர்களிடத்தில் ஒரு எதிரியாகவே தெரிகிறார்.

புத்தரை பார்க்கும் தமிழர்களின் அவரின் ஞானத்தையோ அவரின் போதனைகளையோ பற்றி சிந்திக்க மாட்டார்கள். அவர் குந்தியிருக்கும் நிலத்திற்கு நேரப் போகும் ஆபத்தைப் பற்றியே சிந்திப்பார்கள். அதனால் எதிர்காலத்து தலைமுறை எதிர்கொள்ளப் போகும் அபாயங்களைப் பற்றியே சிந்திப்பார்கள். இந்த விளைவுகளையும் விமர்சனங்களையும் உருவாக்கிய பொறுப்பு இலங்கையில் பௌத்தத்தைப் பின்பற்றிய சிங்கள சமூகத்திற்குரியது.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு புதிதாக 28 புத்தர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. புத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கொண்டு வரப்பட்ட அந்தப் புத்தர்சிலைகள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துரசிங்க தலமையில் வைக்கப்பட்டன. அதேவேளை அந்த நிகழ்வில் இராணுவத்தினரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்தார்கள். புத்தரின் வௌ;வேறான ஞான நிலை பெறும் வடிவங்களையுடைய அந்தச் சிலைகள் பலாலி இராணுவ முகாமை சுற்றி வைப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பலாலி இராணுவ முகாமில் உள்ள அரச மரம் ஒன்றில் கீழாக வைக்கப்பட்டுள்ளன.

இதைப் போல காணிகளில் பௌத்த விகாரை அமைக்க இடமளித்தால் வீடு கட்ட நிதி தருகிறோம் என்றும் சில நாட்களின் முன்பு தெரிவித்தார்கள். யாழ்ப்பாணம் நகரில் உள்ள நாக விகாரை அமைப்பும் இராணுவத்தினரும் சேர்ந்து இந்த நடவடிக்கையை அறிவித்திருந்தார்கள். இதைவிடக் கொடுமை என்ன இருக்க முடியும்? தமிழர்களிடம் பெரும் அதிரச்சியை அந்தச் செய்தி தந்தது. யுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் வீடின்றித் தவிக்கும் மக்களின் காணிகளை அபகரித்து பௌத்த விகாரை அமைத்து அரசியல் செய்யப் பாக்கிறார்கள்.

யாழில் பௌத்த பேரவை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழுகிற பூமியில் எதற்கு பௌத்த பேரவை? புத்தரின் ஞானத்தை போதனைகளை பரப்பவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்தப் பேரவையை அமைப்பதாக சின்னையா இராமச்சந்திரன் என்ற குறித்த அமைப்பின் இணைப்பாளர் தெரிவித்தார். பௌத்த பேரவையை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஹெல உறுமயக் கட்சியின் தலைருமான அத்துலியஇரத்தினதேரர் கலந்து கொண்டார். தொல்லியல் ரீதியான ஆதாரங்கள் நிறைந்த தமிழர்களின் பூர்வீக நிலத்தை பௌத்த நிலம் என்றும் புத்தரின் நிலம் என்றும் சிங்களவர்களின் நிலம் என்றும் அத்துலியஇரத்தினதேரர் தொடர்ந்து குறிப்பிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருபவர்.

இவர்கள் மிகத் திட்டமிட்ட வகையிலேயே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். பௌத்த பேரவையின் இணைப்பாளர் சின்னையா இராமச்சந்திரன் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இருக்கிறார். ஜனாதிபதியின் தலமையின் கீழ் ஒன்று திரண்டே இப்படி பௌத்தத்தின் போதனைகளை பரப்புவதற்கு அவர் அழைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்கவும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீயும் அதிதீகளாக கலந்து கொண்டிருக்கிறார்கள். எந்த வேலைகளுக்காக ஜனாதிபதியால் அவர்கள் அமர்த்தப்பட்டார்களோ அந்த வேலையை அவர்கள் செய்கிறார்கள். அது அவர்களின் கடமை.

ஆனால் யாழ்பல்கலைக்கழக கல்விமான்கள் எனப்படும் 'மான்கள்' ஏன் அங்கு போனார்கள்? யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோயில் என்ற ஆலயத்திற்கே செல்லாதவர்கள் கூட பௌத்த பேரவை அமைப்பு விழாவுக்கு சென்றிருக்கிறார்கள். தமிழ் மக்களின் கல்விக் கூடம் என்று சொல்லப்பட்டு வந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இனத்தையும் மொழியையும் பண்பாட்டையும் அடையாளங்களையும் விற்றுப் பதவிகளையும் அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் நடத்திய வலி தந்த வாரம், மௌனப்பிரார்த்னை போன்றவைகளுக்கு செல்லாதவர்கள்கூட இங்கு வந்திருக்கிறார்கள். இதைப் பார்த்த ஒரு மாணவன் விரிவுரைக்கு வராத விரிவுரையாளர்கள் கூட பௌத்த பேரவை திறப்பு விழாவுக்கு வந்திருப்பதாக சொன்னார். நல்ல பொறுப்போடுதான் பல்கலைக்கழகம் செயற்படுகிறது.

இந்தப் புத்திசீவிகள் யாழ்ப்பாணத்தில் இந்துப் பண்பாட்டுடன் பௌத்தப் பண்பாட்டையும் இணைத்து வளர்க்கிற நோக்கம் கொண்ட பௌத்த பண்பாட்டுப் பேரவை அமைப்பது மற்றும் புத்தரின் போதனைகளை பரப்புவது, ஞானமடைவது தொடர்பில் இடம்பெற்ற உரையாடல் நிகழ்விலும் கலந்து கொண்டிருக்கிறார்கள். புத்தரின் போதனைகளை பரப்பும் ஞானமடையும் மார்க்கத்திற்கு தமது ஆக்க பூர்வமான அபிப்பிராயங்களை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஞானமளித்த புத்தருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

கந்தரோடையிலும் யாழ் கோட்டையிலும் தொல்லியல் அமைச்சும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தொல்லியில் மாணவர்களும் இணைந்து ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் நோக்கில் குறித்த இடங்களின் பாதுகாப்புக்கள் உறுதி செய்யப்பட்டு அவற்றை பேணுவது முக்கியமான நோக்கமாக உள்ளது. இங்கு கண்டு பிடிக்கப்படும் தொல்லியில் சான்றுகள் தொடர்பில் இரண்டு தரப்புக்களும் இணைந்த நிலையில் அறிக்கைகளை வெளியிடுவது என்று ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இனத்தின் நல்லிணக்கம் குலைந்து விடாத வகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆய்வு இடம்பெறும் இடங்களில் பணியாற்றும் தமிழ் ஆய்வு உதவியாளர்களுடன் பேசும் சிங்கள ஆய்வு உதவியாளர்களும் பிக்குகளும் ஆய்வுக்கு முன்னதாக பல கதைகளை சிங்கள இனவாத நோக்கில் பேசுகின்றனர். இதைவிட அண்மையில் சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு ஆய்வு நடவடிக்கையில் முக்கியம் வகிக்கும் ஆய்வாளர் ஒருவர் கந்தரோடையில் பண்டைய சிங்கள பௌத்தத்திற்குரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் யாழ்ப்பாணத்தில் சர்ச்சை எழுந்தது. ஒப்பந்தத்தை மீறிக் கருத்து வெளியிட்டமை குறித்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

சிங்களவர்களுக்கு முற்பட்ட காலத்தில் தமிழர்கள் பின்பற்றிய தமிழ் பௌத்த சான்றுகள் கந்தரோடையில் உள்ளன எனப் பல ஆயவாளர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் கூறியுள்ள நிலையில் குறித்த கருத்து ஆய்வில் இருந்த திட்டமிட்ட சதியை வெளிப்படுத்தியது. இதனை குறித்து யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் கலாநிதி பரமு புஸ்பரட்ணம் தனது வியப்பை யாழ் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார். யாழ் பத்திரிகைக்கு தெரிவிப்பதன் வாயிலாக யாழ் மக்களை மட்டுமே திருப்திப்படுத்த முடியும். ஆனால் தெற்கிற்கோ கொழும்பிற்கோ அந்தப் பதில் சென்றடைய வேண்டும். அதிலும் அவர் வியப்பை வெளியிட வேண்டியதைவிடவும் கருத்தை வெளியிட வேண்டும். அதை அதே சிங்களப் பத்திரிகைக்கோ ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கோ தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கப்படும் பட்சத்திலேயே உரிய தரப்பை செய்தி சென்றடையும்.

தவிரவும், கலாநிதி பரமு புஸ்பரட்ணம் அவர்களின் வியப்பு என்பதும் தொல்லியல் பேராசிரியர் என்ற ஒருவரது மட்டுமே. ஏனைய பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் பௌத்த பேரவையை அமைக்க அணிதிரளும் பொழுது இந்த விடயங்களில் எப்படி கவனம் செலுத்த முடியும்? எப்படி தமது சொந்த அபிப்பிராயங்களை சொல்ல முடியும்? ஆய்வு செய்து தமது அபிப்பிராயத்தை வெளியிட முடியும்? புதிதாகப் பதவியேற்ற துணைவேந்தர் செய்த நற்காரியங்களில் ஒன்றாக பௌத்த மாணவர் அமைப்பு திறக்கப்பட்டுள்ளது. பௌத்த மாணவர சங்கத்தை திறந்த வரலாற்றுப் பெருமை அவரையே சாரும். சிங்கள மாணவர்கள் கடந்த புத்த ஜெயந்தி தினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

எங்களது ஆய்வாளர்கள் தொல்லியல் அமைச்சுடன் இணைந்து 'ஜனநாத மங்களம்' என அழைக்கப்பட்ட பொலனறுவையும் தமிழர்கள் வாழ்ந்து வந்த புத்தளம், குருநாகல் போன்ற பல பகுதிகளையும் ஆய்வு செய்யப் புறப்பட வேண்டும். சிங்கள ஆய்வாளர்கள் சிலரும் அத்துலிய இரத்தினதேரர், எல்லாவல மேதானந்த தேரர் போன்ற தேரர்களும் வன்னியும் யாழ்ப்பாணமும் சிங்களவர்களின் பூமி அங்கு பண்டை சிங்கள பௌத்த புத்தர் சிலைகள் புதைந்து கிடக்கின்றன என்று சொல்லிக் கொண்டு ஆய்வுகளை நடத்துங்கள் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த ஆய்வுகளில் மிகவும் கனவமாக இயங்கி பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியது ஆய்வு என்று இறங்குபவர்களின் கடமை.

புத்தர் சிலைகளை வைப்பது, பௌத்த பேரவைகளை உருவாக்குவது, வீடுகளில் விகாரைகளை அமைக்க முயல்வது, பல்கலைக்கழகத்தில் பௌத்த மாணவர் அமைப்பை உருவாக்க முயல்வது, ஆய்வுகளில் சிங்கள பௌத்த கதைகளை திணிப்பது எல்லாமே தமிழர்களின் பூர்வீக தேசத்தை பௌத்த மயமாக்குகிற நடவடிக்கைகள்தான். பின்பு ஒரு காலத்தில் இவை சிங்கள பௌத்த எச்சங்களாகும் அப்பொழுது இது பௌத்த சிங்கள பூமி என எளிதாக கதை சொல்லப்படும். இதனால் ஈழத்து மக்களின் எதிர்காலச் சந்ததிகள்தான் பெரும் ஆபத்தான பிரச்சினைகளை அடையப் போகிறார்கள். இந்த விடயத்தில் எமது தொல்லியலாளர்களும் கல்விச் சமூகமும் அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

source:GTN.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.