Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேறியுள்ள மக்களின் குமுறல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீள்குடியேறியுள்ள மக்களின் குமுறல்கள்!

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகின்றன. எனினும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் மீள்குடியேற்றப்பகுதிகள் அனைத்திலும் சீராக நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அடிப்படை வசதிகளின்றி மீள்குடியேறிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் அளவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் அந்த மக்கள் அனுபவிக்கும் கஸ்டங்கள் அனைத்தும் வெளியில் தெரிவதில்லை. இருப்பினும் இந்தக் கஸ்டங்களின் கோர முகத்தைக் காட்டும் வகையில் வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளத்தில் பத்து வயது பாலகி ஒருவர் குடி தண்ணீர் எடுப்பதற்காகப் பாழடைந்த கிணற்றுக்குச் சென்றபோது அங்கு தவறி விழுந்து உயிரிழந்து போனார்.

மனதை உலுக்கும் இந்தச் சம்பவம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட கங்கன்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் உரிய நேரத்தில் செய்து கொடுக்கப்படாத காரணத்தினாலேயே ஏற்பட்டுள்ளதாக அந்த ஊர்வாசிகள் கூறுகின்றனர்.

யுத்த மோதல்கள் காரணமாக இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த ஊர் மக்கள் தமது ஊரைவிட்டு இடம்பெயர்ந்து சென்றார்கள். இவர்கள் தமது சொந்த ஊரில் அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போது, அங்கு செல்வதற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றார்கள்.

மீள்குடியேறுவதற்காக காணிகளைப் பார்த்து, அவற்றைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டபோது, அங்கு அடிப்படையில் தேவையான குடிநீர்வசதி செய்யப்பட்டிருந்தால் இந்த பத்து வயது சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் அல்லவா என்பதுதான் அவர்களின் கேள்வியாக இருக்கின்றது.

‘இருபது வருஷங்களாகக் கவனிப்பாரின்றி காடுகள் வளர்ந்து, பாழடைந்து கிடந்த ஊருக்குள்ள போவதற்குத் தேவையான பாதையைக் கூட எவரும் திருத்திக் கொடுக்கேல்ல. நாங்களே கூலிக்கு டோசர் பிடிச்சு அவரவர் காணிக்கு நேராகக் காடழிச்சு ரோட்டைத் துப்பரவு செய்தோம். அதுக்குப் பிறகுதான் எங்களின்ர காணியில காடுவெட்டி கொட்டில் போடுறதுக்குத் தேவையான இடத்தைத் துப்பரவு செய்து கொட்டில் போட்டிருக்கிறம். இதுக்கே மூண்டு மாதங்களுக்கு மேலாயிற்று. ஆக எங்களுக்கு ரேஷனும், 12 தகரமும் மட்டும்தான் தந்தாங்கள். வேற உதவிகள் எண்டு எதுவுமே கிடையாது’ என்று கந்தன்குளம்வாசிகள் ஒரே குரலில் கூறுகின்றார்கள்.

ஊருக்குள் சென்று மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதும், காடடர்ந்து கிடந்த ஊர்மனைக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தரவேண்டும் என்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் தமது பகுதிக்குரிய பிரதேச சபையினரிடம் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர்கள் கவலையோடு தெரிவித்தார்கள்.

வவுனியா – மன்னார் வீதியில் பூரவசங்குளம் சந்தியில் இருந்து மன்னார் பக்கமாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வலதுபக்கமாக கந்தன்குளம் கிராமம் அமைந்திருக்கின்றது. மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பங்களே இந்தப் பகுதியில் காடு வெட்டி காணிகளை கழனிகளாக்கி மண்குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தார்கள்.

யுத்தமோதல்களின்போது ஏற்பட்ட ஷெல் வீச்சுக்கள் சண்டைகள் காரணமாக ஊரில் இருக்கமுடியாத நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இந்த மக்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து மடு தேவாலயப்பகுதியில் சென்று தஞ்சமடைந்தார்கள். பின்னர் இடத்திற்கு இடம் இடம்பெயர்ந்து சிதம்பரபுரம் முகாமுக்குச் சென்று அங்கிருந்த பூவரசங்குளம் பகுதிக்கு அண்மித்த தாலிக்குளம் கிராமத்தி;ன் பொதுக்காணியொன்றில் இந்த ஊர் மக்கள் தங்கியிருந்திருந்தார்கள். ஒரு சில குடும்பங்கள் தெரிந்தவர்கள், நண்பர்களது காணிகளில் கொட்டில்களைப் போட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

தாலிக்குளத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் தங்களது ஊர் அமைந்திருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஊருக்குள் மக்கள் மீள்குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் எப்போது அனுமதி கிடைக்கும் என்பது தெரியாமல் நிச்சயமற்ற நிலையில் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைமைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.

‘மீள்குடியேற்றத்திற்குப் போகலாம் எண்டதும், அங்க போய் பார்த்தால் ஊரைக் காணவில்லை வெறும் காடுதான் தெரிஞ்சது. காணிகளைத் தேடிக்கண்டு பிடிக்கிறதே கஷ்டமா இருந்தது. பற்றை வளர்ந்து மரங்களும் செடிகளுமா காடா கிடந்த இடத்தில காணிகளைக் கண்டு பிடிக்கிறது லேசான காரியமா இருக்கேல்ல. மீள்குடியேற்றம் செய்யும்போது காடு வெட்டுறதுக்கான கத்தி, மண்வெட்டி குப்பைவாரி எண்டு ஆயுதப் பொதியொண்டு தருவாங்கள். அது எங்களுக்கு கிடைக்கேல்ல. 12 தகரங்களும், ரேஷனும் மட்டும்தான் தந்தவங்கள்’ என அவர்கள் கூறுகின்றார்கள்.

கந்தன்குளத்தில் காணிகள் தோறும் கிணறுகள் தோண்டப்பட்டு தோட்டங்கள் மற்றும் விவசாய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் இருபது வருடங்கள் ஆள் நடமாட்டமும் பராமரிப்பும் இல்லாத காரணத்தினால் கிணறுகளும் பாழடைந்து மரங்கள் செடிகளினால் மூடப்பட்டுக் கிடந்தன. மீள்குடியேற்றத்தில் சென்றவர்கள் இந்தக் காடுகளை வெட்டித் துப்பரவு செய்திருக்கின்றார்கள். ஆனாலும் கிணற்று நீரை இறைத்து சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

‘இருக்கிற இடத்தில இருந்து ஊருக்கு ஒவ்வொருநாளும் போய் காடு வெட்டி காணிகளைத் துப்பரவு செய்யிறது வழக்கம். வேலை செய்யும்போது குடிக்கிறதுக்குத் தேவையான குடி தண்ணிய பூவரசங்குளத்தில இருந்துதான் கொண்டு போகணும். ஊரில உடைஞ்ச நிலையில ஒரு குழாய் கிணறு இருக்குது. அத திருத்தியிருந்தால் அதில குடிதண்ணி எடுக்க வசதிய இருந்திருக்கும். அல்லது ஒண்டிரண்டு பெரிய கிணற்றை இறைச்சு சுத்தம் செய்திருந்தாலாவது குடி தண்ணிக்குப் பயன்படுத்தலாம் எண்டு பார்த்தால் அதுக்கும் வழியில்ல. என்ன செய்யிறது காலையில கொண்டு வார குடி தண்ணி இப்ப அடிக்கிற நெருப்பு வெய்யிலில வேலை செய்யிற எங்களுக்கு ரெண்டு தரம் மூண்டு தரம் குடிக்கிறதக்கே காணாது. குடிதண்ணி முடிஞ்ச பிறகு என்ன செய்யிறது பாழடைந்த கிணத்துத் தண்ணிதான் எங்கட தாகத்திற்குத் தஞ்சம். இப்பிடி பாழடைஞ்ச கிணத்தில இருந்து குடிதண்ணி எடுக்கப் பொனபோதுதான் அந்தப் பத்து வயது பிள்ள கிணத்துக்குள்ள விழுந்து செத்துப்போச்சுது’ என்றார் கந்தன்குளத்தைச் சேர்ந்த சுப்பன் ஆறுமுகம் என்ற வயோதிபர்.

கடந்த 1969 ஆம் ஆண்டு இந்தப் பகுதிக்கு வந்த சில குடும்பங்கள் இங்கிருந்த காடுகளை வெட்டி குடியேறி வசிக்கத் தொடங்கினார்கள். இந்தச் சில குடும்பங்களின் எண்ணிக்கை பின்னர் 90 ஆக உயர்ந்தது. இடப்பெயர்வின் பின்னர் இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருந்த காணிகள் இப்போது இந்தக் குடும்பங்களுக்குப் போதாது என்ற கவலையும் இப்போது புதிதாக இவர்கள் மத்தியில் முளைத்திருக்கின்றது.

ஆயினும் ஏற்கனவே குடியேறிய இந்தக் குடும்பங்களுக்கு இந்தக் காணிகள் இன்னும் முறையாக வழங்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

காலையில் காணிகளுக்குச் செல்கின்ற இந்தக்குடும்பங்கள் மாலை வரையில் வேலை செய்துவிட்டு இரவில் தாங்கள் ஏற்கனவே தங்கியிருக்கின்ற இடங்களுக்குச் சென்று விடுவார்கள். பகலில் அவரவர் தத்தமது காணிகளில் வேலை செய்தாலும், காணிகளுக்கிடையில் உள்ள தூரம் காரணமாக பகல் வேளையிலும் பாதுகாப்பு குறித்து இவர்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகின்றது. இந்தப் பகுதியில் காணப்படுகின்ற காட்டு மிருகங்களின் நடமாட்டமே இதற்குக் காரணமாகும்.

‘எங்கட காணிகளுக்குப் பின்னால பெரிய காடு. அந்தக் காட்டில இப்போ யானை நிக்குது. அதுமட்டுமில்ல. சிறுத்தைப் புலியின் நடமாட்டமும் இருக்குது. இதனால் இரவில இங்க தங்குறதக்கு எங்களுக்குப் பயமா கிடக்கு. காட்டுக்குள்ள தடிகள் வெட்ட போன சிலர் இந்த சிறுத்தைப் புலியைக் கண்டிருக்கினம். இந்த சிறுத்தைப் புலிய கண்டதில இருந்து காட்டுக்குள்ள தடிவெட்டப் போறதுக்கும் பயமா கிடக்கு. பின்னேரம் ஐந்து ஐந்தரை மணியானா போதும். யானைகள் காட்டுக்குள்ள இருந்து வெளியில் வந்திரும். அதுக்கப்புறம் காணிகளில நிக்கிறதுக்கு எங்களுக்குத் துணிவு கிடையாது. இதால சில வேளையில நாங்கள் நாலு மணிக்கே காணியில இருந்து வெளிக்கிட்டு போய்விடுவோம்’ என கூறினார் சுப்பையா செல்வம்.

காட்டு மிருகங்களின் அச்சம் ஒருபக்கம். அடிப்படை வசதிகளற்ற கஸ்டம் ஒருபக்கம். இதற்கிடையில் தான் தமது காணிகளத் துப்பரவு செய்வதிலும், கொட்டில்களை அமைப்பதிலும் துப்பரவு செய்யப்பட்டுள்ள காணிக்கு வேலி அமைப்பதிலும் இந்த ஊர் மக்கள் முழு முயற்சியோடு ஈடுபட்டிருக்கின்றார்கள்.

‘வசதிகள் செய்து தரேல்ல எண்டதுக்காக காணிய துப்பரவு செய்யாமல், கொட்டில் போடாமல் எங்களால இருக்க முடியாது. எப்படியாவது காணிகளைத் துப்பரவு செய்து அங்கு குடியேறினால்தான் மீள்குடியேற்றத்தில வாழ்க்கைய ஒரு மாதிரி ஆரம்பிக்க முடியும். ஏதாவது பயர் பச்சைய உண்டாக்கி வயிற்றுப்பாட்டுக்கு உழைக்க முடியும்’ எனக் கூறிய நாகலிங்கம் போதனைச்செல்வி என்ற பெண்மணி,

‘முதலில எங்களுக்குக் குடிநீர் வசதி செய்துதர வேணும், அடுத்ததாக இந்த ரோட்டுகளத் திருத்தி பயமில்லாம ஊருக்கு வந்து போற மாதிரி வசதி செய்ய வேணும். இந்தக் காட்டு மிருகங்களால ஏற்பட்டிருக்கிற பயத்த போக்கிறதுக்கும் நடவடிக்கை எடுக்க வேணும் ஏதோ மீள்குடியேற்றத்தில தாற உதவிகள செய்தால் நாங்கள் எப்படியும் சொந்த உழைப்பில வாழ்க்கையில முன்னேற முடியும். உதவிகள சரியான நேரத்தி;ற்கு செய்யாட்டில் குடிதண்ணி எடுக்கப் போன இடத்தில உயிர விட்ட அந்த சின்ன பிள்ளைக்கு நேர்ந்த மாதிரியான கஸ்டங்கள தவிர்க்க ஏலாம போயிடும். தேவiயான நேரத்தில அவசியமான உதவிகள அதிகாரிகள் செய்து தரணும். காலந்தாழ்த்தி செய்யிற உதவிகளால எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போறதில்ல’ என்றும் தெரிவித்தார்.

இந்த ஊர் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ராஜா சுபா என்ற பத்து வயது சிறுமியின் அகால மரணத்தையடுத்து, இந்தக் கிராமத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன், இந்தக் கிராமத்து மக்களின் நிலைமைகள் குறித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அத்துடன் அந்தக் கி;ராமத்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்ட வவுனியா பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரன், முதலில் குடிநீர் வழங்குவதற்குரிய தண்ணீர்தொட்டியொன்றை அங்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குடிநீர் விநியேகம் ஆரம்பிக்கப்படும் என அந்த ஊர் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அதற்கமைய உடனடியாக தண்ணீர் தொட்டி அனுப்பப்பட்டு பிரதேச சபையின் ஊடாகக் குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

குடிநீர் எடுக்கச் சென்று கிணற்றுக்குப் பலியாகிப் போன சிறுமியின் மரணத்தையடுத்தே தமது ஊருக்கு அதிகாரிகள் உட்பட பலதரப்பட்டவர்களும் வந்து செல்லத்தொடங்கிருப்பதாக கந்தன்குளம் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலதரப்பினராலும் பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் இந்த வலியுறுத்தலும், வற்புறுத்தலும் உரிய கவனத்தைப் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலைமையானது மீள்குடியேறச் செல்கின்ற மக்களின் நம்பிக்கையை அதிகாரிகளும் அரசாங்கமும் பெறமுடியாத துர்ப்பாக்கியமான நிலைமைக்கே இட்டுச்செல்கின்றது.

மீள்குடியேற்றப்பகுதிகளுக்கான வீதிகளைப் புனரமைத்து சீரமைப்பது தொடக்கம் பொது வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது வரையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகத் தொடர்ச்சியாக மக்கள் குறை தெரிவித்து வருகின்றார்கள். அதுமட்டுமன்றி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் கால தாமதமும், இழுத்தடிப்பும் நிலவுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகிவிட்ட போதிலும், மீள்குடியேற்றப்பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தரப்பாள் கொட்டில்களிலேயே வசித்து வருவதும், அவர்களுக்கான தற்காலிக வீடுகளை அமைப்பதற்கான பொருட்களை வழங்குவதில் தாமதமும், அடுத்த கட்டமான நிரந்தர வீட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்படாதிருப்பதும் வடபகுதி மாவட்டங்களின் மீள்குடியேற்றப்பிரதேச மக்களினால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

போரினால் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாகி மனிக்பாம் இடைத்தங்கல் முகாமிலும், ஏனைய இடைத்தங்கல் முகாம்களிலும் பல துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையோடு இருக்கின்ற மீள்குடியேற்றப்பிரதேசத்து மக்களின் மனங்களில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அதிகாரிகளும் அரசாங்கமும் உறுதியான சீரான நடவடிக்கைகளின் மூலம் ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும்.

மீள்குடியேற்றப்பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் தமது வாழ்க்கையை ஓரளவு ஸ்திரப்படுத்தி வருகின்ற போதிலும் பல பிரதேசங்களில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட அதி;காரிகளும் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் ஏனைய பொது நிறுவனங்களும் இன்னும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் போர் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகின்றன. இன்னும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்ற நிலையில் இடம்பெயர்ந்த மக்களை வைத்திருப்பது எவருக்கும் நன்மை பயக்கும் விடயமாக இருக்க மாட்டாது.

Short URL: http://meenakam.com/?p=25272

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.