Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கல் திருநாள்

Featured Replies

புலம் பெயர்ந்த தமிழர்கள்

பொங்கல் திருநாள்

-முகிலன்

கடலோடிகளான பாரம்பரிய அறிவைப்பெற்ற மூத்த இனம் தமிழர் என்றால் மிகையில்லை.

"திரைகடலோடியும் திரவியம் தேடு" என எம்மவரிடம் புளங்கும் பழமொழியும் -

எட்டுத்திங்கும் சென்று கலைச் செல்வம் கொணர்ந்திடுவீர் எனக் கனவைச் சொன்ன பாரதியும்-

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனப் பகன்ற கவிஞன் பூங்குன்றனின் வார்த்தையையும் -இருபதாம் நூற்றாண்டுக் கடைக்கூறுகளிலிருந்து புலம் பெயர்ந்த ஈழத்தமிழன் வாழ்வாக்கிக் கொண்டுள்ளான். விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்ட இந்தப் புலப்பெயர்வின் மூன்றாவது தசாப்த காலத்தில் கற்பதும் பெறுவதும் பலப்பல…

இன்று, பூமிப்பந்தின் பல்வேறு பகுதிகளிலும் தடம்பதித்த தமிழனின் அடுத்த தலைமுறை தலையெடுக்கத் தொடங்கியுள்ள இருபத்தொராம் நூற்றாண்டின் முற்பகுதியில் தன் அடையாளத்தேடலில் - மூலத்தேடலில் மையம் கொண்டதாகவே இக்கட்டுரை வரைவுபெறுகிறது.

மூலமறியும் தேடலில் விருத்தியானதுதான் மனித அறிவு. விஞ்ஞானங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் - பிரபஞ்சத்தின் எல்லைகளை அறியும் தேடற்பதிவுகள் மனிதனின் சாதனைகள். ஆனாலும் அறிவும்- அறிவுசார் நம்பிக்கைகளும் ஒருபுறமாகவும்;, வெறுமையான எண்ணக் கருதுகோள்களும்- இதனுடன் கூடிய மூடநம்பிக்கைகளும் மறுபுறமாகவும் மனிதவிலங்கினம் பயணித்துக் கொண்டிருக்கிறது.

காலனியாக்க காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழர்களின் புலப்பெயர்வு நான்காவது, ஐந்தாவது தலைமுறையில் வேறொரு பரிமாணத்தில் நிற்பதைக்கண்ட இந்தப் புதிய புலப்பெயர்வுத் தமிழன் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கியதில் வியப்பில்லை. இது « தமிழால் ஒன்றுபடுவோம்! » என்ற கோசமாகியுள்ளது.

நீண்ட காலனியாதிக்கத்தின் கீழ் தொடர்ந்த அவலத்தில் "மறத்தமிழன்" "வீரத்தமிழன்" என்ற சொற்களுக்கான விபரணங்களை அகராதிகளில் தேடும் நிலையிலேயே இருந்தது. இதனால் வெண்திரையில் கதாநாயகர்களின் சலன விம்பங்களில் தன்னை இழந்து இலயித்துப் போனவர்களாகக் காணப்பட்டனர்.

இதன் அடுத்த கட்டத்தில் வாய்ச்சவடாலர்களும், சினிமாக் கலைக் கதாநாயகர்களும் ஒரு சுற்று வந்துபோனார்கள். இலங்கைத் தீவில், வைட் கொலர் சீமான்களும் கறுத்த கோட்டணிந்த அப்புகாத்துகளும் கலக்கிவிட்டுப்போனார்கள்.

நாம்பெற்ற பட்டறிவால் எமது கால்களில், எமதுபலத்தில் நாம் நிமிர்ந்தெழும் இக்காலகட்டத்தில் தமிழால் ஒன்றுபடும் கருதுகோளைச் சாத்தியமாக்கும் முன்மொழிவாக இக்கட்டுரை வரையப்பெறுகிறது.

புலம் பெயர்வாழ்வில் நான் யார்? -என்ற கேள்வி எம்மால் விட்டுச் செல்லும் புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் பிரதான வினாவாகவிருக்கும். நாம் வாழும் பல் இனக்குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே நடமாடப்போகிறார்கள் எமது சந்ததியினர். இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்பூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாது, எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யவேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்குண்டு.

கலை- கலாச்சார நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு இதமாக இசைவாகின்றன. இவை,

1. குடும்ப நிகழ்வுகள் (பிறந்தநாள், மணநாள், இன்ன பிற)

2. பொது நிகழ்வுகள் (சங்கங்கள்- அமைப்புகளின் ஆண்டுவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இன்ன பிற)

இதில் தமிழால் ஒன்றுபடக்கூடியதான குறைந்த பட்ச நிலையிலுள்ள நிகழ்வாகத் தெரியப்படக்கூடியது பொங்கல் நாளாகும். இந்நாள் வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருக்கிறது. இந்நாளுக்கும் மதத்திற்கும் சம்மந்தங்களேதுமில்லை. தமிழர்கள் கூடும் இடமெல்லாம் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பது சாதாரண நிகழ்வு. அப்படியிருக்கும்போது தை முதலாம் நாளை ஏன் பொங்கல் நாளாகக்குறித்தான் தமிழன்? இந்நாளில் வாழ்வு இயங்கியல் நியதியான "பழையன களைந்து புதியன புகல்" வழமையையும், வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் "தை பிறந்தால் வழிபிறக்கும்" - வாசகப் பிரயோகமும் ஏன் தொடர்கின்றன ? தமிழுடன் கூடிய வீர விளையாட்டுகளும், மனிதனுடன் இணைந்துள்ள மிருகங்களுடன் அன்பைப் பொழியும் - தன்வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசித்த இந்த விழுமியம் எம்மிடம் காணப்படும் வரலாற்றுப் பொக்கிசம். இந்த உயரிய பண்பாலேயே இந்நிகழ்வு குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது.

இதனால்தான் கூறுபட்டுக்கிடக்கும் தமிழ்ப்பேசும் மக்களது நெஞ்கங்களில் பதிவுற்றிருக்கும் தமிழின் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் நாளாகவும் - தமிழர்களின் புத்தாண்டாகவும் தமிழ் அறிஞர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக மிகத்தெளிவாக தமிழுக்காக ஒரு நாள் இருக்கிறதென்றால் அது தமிழர் திருநாள் - பொங்கல் நாளாகும். இன்று பிரதேசங்களால் - நாடுகளால் - மதங்களால் - சாதியங்களால் எனப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடிய நாள் இந்தப் பொங்கல் நாள்.

அமெரிக்காவில் பெயர்ந்த கறுப்பர்கள் தங்களது அடையாளத் தேடலில் பத்து நாட்களைக் கொண்ட பெரிய அடையாள மீட்புக் கலாச்சார ஒன்றுகூடலை நடைமுறைப்படுத்துகிறார்கள். உலகமெங்கும் விரவியுள்ள சீனர்கள் தங்களுக்கான தனித்துவமிக்க புதுவருட நிழ்வை எல்லோரும் அறியச் செய்துள்ளார்கள். இவ்வேளையில் இங்குள்ள சிறப்பு பல்பொருளங்காடிகள் சீன வாரத்தைக் கொண்டாடுவதைக்காண்கிறோம். இந்த வகையில் நாமும் தமிழ் வாரத்தை (பொங்கல் தினம் வரும்) வருடம்தோறும் பிரகடனப்படுத்தி தமிழர் திருநாளை அடையாள தினமாக்க வேண்டும். இதற்கு உலகளாவிய தமிழாவலர்களும், தமிழ்த் தாராளர்களும் இவர்களை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பாளர்களும் களமிறங்கிடும் தருணமிது.

காலங்கள் கரைய ஐரோப்பாவிலும், அமெரிக்க- அவுஸ்திரேலியக் கண்டங்களிலும் புதிய ஒன்றுகூடலை நிகழ்த்தத் தொடங்கி உலகத்தின் பார்வையைப் பெறவைத்தவர்கள் புலம்பெயர் ஈழத்தமிழர். இதில் இன்றைய புதிய கலாச்சாரமாகியுள்ள 'மாவீரர் தினம்' முக்கிய சான்றாகும். வீரமறவர்களை வணங்கும் தமிழர்களின் தொல்மரபை மீண்டும் தொடரத்தொடங்கியது தமிழரின் முதுகெலும்பு நிமிரும் படிமுறையாகியது. இதன் தொடராக மூலத்தேடலும் புத்துயிர்பூட்டலுமான சுயஅடையாளத்தை தக்கவைக்கும் நிகழ்வுகள் இணையத்தொடங்கின.

பிரதேச மற்றும் மத நிகழ்வுகளாகவும், சடங்குகளாகவும் குறுகிப் பிளவுண்டுள்ள தமிழர்களுக்கு தமிழால் ஒன்றிணையும் முக்கிய நிகழ்வாவது "தமிழர் திருநாள்" எனப்படும் தைப்பொங்கல் தினமாகும். இரண்டாவது தமிழரின் வீரமரபைப் பேணும் நிகழ்வாக அமையும் ஆடிப்பிறப்பாகும்.. இதையொட்டி உலகெங்கிலும் ஆரோக்கிய விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறுவதையும் காண்கிறோம்.

தமிழர்களின் தனிப்பெரும் நாளும், தமிழால் ஒன்றுபடும் நாளுமாகிய தைப்பொங்கல் நாள் - தமிழர் நாள் - ஒன்றுகூடலை பிரமாண்டமாக ஒருங்கிணைத்து செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

…………

பெற்றோர் இல்லாதவன் அனாதை - சுயஅடையாளத்தை இழக்கும் இனம் முகமற்ற மனிதக் கூட்டம் போன்றது. எமக்குப் பின்னான தலைமுறையினரின் மூலத்தேடலுக்கு நாம் விட்டுச் செல்லவேண்டியவை பலவுண்டு.

பாரிஸில் நடந்த கூட்டமொன்றில் பேசிய தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் "மிக மிக நீண்ட பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை முதுசங்களாகக் கொண்டவர்கள் தமிழராகிய நாங்கள்….." என நாத்தழுதழுக்கக் கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

தமிழ் ஆண்டு

தமிழருக்கு தமிழில் ஆண்டு இல்லாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 இல் சென்னையில் கூடி ஆராய்ந்த போது இயேசுவுக்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்றும் அவர் பெயரில் "திருவள்ளுவர் ஆண்டு" பின்பற்றுவதென்றும் இதையே தமிழாண்டு எனக் கொள்வதென்றும் தீர்மானித்தார்கள்.

இந்த திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல்மாதம் "தை" - இறுதிமாதம் "மார்கழி" : அதாவது தை முதலாம் நாள் புத்தாண்டு.

இந்த வள்ளுவராண்டு முறைமையை தமிழ்நாடு அரசு 1971 இல் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது. படிமுறை வளர்ச்சியில் தமிழ்ப் பேசும் உலகமும் இதனைப் பின்பற்றி வருகின்றது.

இந்த வகையில் வரும் தை 1-ம் நாள் : வள்ளுவராண்டு 2037 - தமிழருக்கான புத்தாண்டு நாள்.

நன்றி: அப்பால் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சிங்கையிலே தைப் பொங்கல் நாளில் "தமிழ் முரசு"(14/01/2006) பத்திரிகையில் எண்ணற்ற விளம்பரங்கள்...அதில் பல கோயில்களினது...அதில் பயனுறுதியான "தகவல்" தந்த ஒரே விளம்பரமாக எனக்குப் பட்ட [b]"அருள்மிகு செண்பக விநாயகர் ஆலய"த்தின் "பொங்கல் வாழ்த்து தைப் பொங்கல் என்பதை இவ் விளம்பரத்தகவல் மூலம் மேலும் உறுதிப்படுத்திக்கொண்டேன்....

பொங்கலோ பொங்கல்-தமிழர் திருநாளில் ஒரு சிந்தனை

பொங்கல் திருநாள் மார்கழி மாதம் தொடங்கி திருவாதிரை வழிபாட்டினைட்ள்தோடர்ந்து தை முதல் நாளில் தமிழினம் கொண்டாடும் முதன்மைத் திருநாள்.தமிழ் மக்கள் வாழ்வியல் முறைமையின் இயற்கை வளம் போற்றி செய் தொழில் பொங்க-தொன்று தொட்டு வரும் தமிழ்க்கலையொழுக்கப் பண்பாட்டின் தோன்றிய திருநாள்.ஞாயிறு ஒளி உலகச் சுற்றின் வடக்கு நோக்கி வலம் வரத் தொடங்கும் தை முதல் நாளில் வருவதும் தமிழரின் பொழுது அறிதிறனுக்கு முதலாகும்.

உழவு-உழப்பு-உழைப்பு

பண்டைத் தமிழகத்தில் உழவுத் தொழிலே மக்கள் நாகரீக வாழ்வின் முதன்மையாகவும் உழைப்பிற்கெல்லாம் தலைமையாகவும் விளங்கியது.அதனால்தான் திருவள்ளுவரும்,"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்" எனக் கூறினார்."உழவு" என்பது செய்வினை.உழப்பு என்பது செயப்பாட்டுவினை."உழப்பு" மருவி "உழைப்பு" என்றானது.

வயலிலே களை எடுத்து,விதை விதைது தண்ணீர் பாய்ச்சி நெற்பயிரை அறுவடை செய்து முதற்காரணமாகிய அருளொளிச்சுடர் அமைந்த கதிர்க்குக் காட்டி மகிழும் தமிழர் பண்பாட்டைத் திருமுறை ஆசிரியர்களில் ஒருவரான பட்டினத்தடிகள் பதினோராம் திருமுறையில் தமிழரின் அகவழிபாட்டினை உழவின் பொருந்த "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!"எனும் பாடலில் அழகாக விளக்குகிறார்.

"நெஞ்சமாகிய நிலத்தில் வஞ்சனையை வேரோடு அழித்துப் போக்கி,ஏர்ருர்ந்து.அன்பெனும் பாத்தி கோலி,மெய்யென்னும் எருவிட்டு,அறிவோடு பக்தி நட்டு நாள் தோறும் தெண்ணீர் பாய்ச்சி(பூசனை செய்து) அட்ங்காமல் துன்பம் செய்யும் ஐம்புலன்களுக்கு அஞ்சி உள்ளத்தினுள்ளே இறையருள் சார்ந்து,அமைதி வேலியிட்ட பின்னர் கருணை இளந்தளிர் காட்ட,புண்ணியப் பலனாய் "அஞ்செழுத்து" வாயில் உரைக்க முக்கண்ணும் நான்கு தோள்களும்,ஐந்து முகமும் பவளமேனியில் பால்வெண்ணீறுபூசிய மருத மாணிக்கத் தீங்கனியெனும்(சிவபிரான்) நெற்பயிர் மெல்ல மெல்ல பழுத்து கைவர...."

என சைவத் தமிழரின் சிவபூசைச் சிறப்பை அழகாக வெளிப்படுத்துகிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.