Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு ... கே. பாலமுருகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்

balamurugan-big.jpg

பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல அமைப்புகளும் நாடுகளும் இணைந்து தமிழ் இனத்தை அழிப்பதில் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக்திகளாக உருவாகின. இவர்கள் கூட்டாகச் சேர்ந்து தமிழீழப் போருக்கு எதிராக உருவாகிய அனைத்தும் வன்மையானவை. சர்வதேச அளவில் பேசித் தீர்மானிக்கப்பட்ட பயங்கரவாதம். இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவியைச் செய்ததோடு மட்டுமல்லாமல் பக்கப்பலமாகவும் இருந்து புலிகளைத் துடைத்தெறிய பங்காற்றியதில் இந்தியாவும் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசுக்கு எதிராக இயங்குவதுதான் பயங்கரவாதம் எனச் சொல்லப்படுகையில், அரசே பயங்கரவாத இயக்கமாகச் செயல்படுவதை எப்படி அழைக்கலாம்? உள்ளுக்குள் சகல பாதுகாப்புடனும் வளர்க்கப்படும் மிருகம்தான் அரசால் கையாளப்படும் பாசிசம்.

balamurugan.jpg

ஓர் அரசின் பாசிசத்தைப் பற்றி சொல்லும்போது அது தனக்குக் கீழாக இருக்கக்கூடிய சிறுபான்மை சமூகத்தை அடக்கியது முதல் அவர்களுக்கான வாழ்வாதார உரிமைகளைக் கொடுப்பதில் பெரும் தடைகளை ஏற்படுத்தியதுவரை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தும் எப்படி ஒரு போராளி உருவாகி தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறான்? அது வெறுமனே புகழ்ச்சியை நோக்கிய செயலோ அல்லது தன்னை ஓர் எதிர்வினையாகக் கட்டமைத்து அதன் மூலம் தன் பிம்பத்தை வியாபாரப்படுத்தும் செயலோ அல்ல என்பது உறுதி. அரசின் அணுகுமுறையின் மீதான வெறுப்புணர்வு ஆழ்மனத்தில் தீ மூட்டுகிறது. ஒவ்வொரு கணமும் அவனை இம்சிக்கிறது. இலங்கை தமிழர்களின் ஆழ்மனம் இப்படிப்பட்ட வெறுப்புணர்வால் ஒரு எதிர்வினையை வெளிப்படுத்துகிறது. பிறகந்த எதிர்வினை ஓர் அமைப்பாக/இயக்கமாக மாறி வளர்கிறது. பிரபாகரன் இன்னும் அக்காலக்கட்டத்தில் உருவான இளைஞர்கள் கூட்டம் என அனைத்துமே ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உருவான மனநிலையிருந்து வளர்க்கப்பட்டு களமிறங்கியவர்களே.

யோ.கர்ணன் போரில் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டு பல இழப்புகளைச் சந்தித்தவர். ஒரு போராளியின் இழப்பை தமிழில் எப்படி உணர்ச்சிவசப்படாமல் விவரிப்பது என்ற தயக்கம் இருக்கிறது. அழித்தொழிக்கபட்ட ஒரு நிலப்பரப்பின் ஆழ்மனக் குரல் யோ.கர்ணன் என அவரின் கதைகளின் வழி புரிந்துகொள்ள முடிகிறது. ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ எனும் அவருடைய சிறுகதை தொகுப்பில் மொத்தம் 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் பேசும் விசயத்திலிருந்து தனித்துவமான கதைச்சொல்லல் முறைமையைக் கடைப்பிடித்திருக்கின்றது. இந்தச் சிறுகதை விமர்சனத்தை எழுதுவதற்கு முன்பே யோ.கர்ணனுடன் அவரது சிறுகதைகள் குறித்து ஓர் உரையாடலை நிகழ்த்திவிட்டிருப்பதால் தொடர்ந்து விமர்சனம் சார்ந்து அவருடைய பிரதிகளை அணுகுவதில் விசாலமான ஒரு பார்வை கிடைத்திருக்கிறது. நாம் எப்படி ஒரு கதையைப் புரிந்துகொண்டோம், நம்முடைய புரிதலிலிருந்து பிறர் எப்படி ஒரு பிரதி சார்ந்து மாற்றுப் பார்வை கொள்கிறார்கள் எனக் கவனிப்பது ஒரு விமர்சகனுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் அதனையே அவன் முதன்மைப்படுத்தி தன் விமர்சனத்தைச் செம்மைப்படுத்தி உருவாக்குவது செயற்கையான ஒன்றாகிவிடும்.

யோ.கர்ணன் எனும் போராளி

தமிழீழம் என்ற ஒரு போராட்டம் நடந்தது என்பதையே ஒரு புனைவு வரலாறாக மாற்ற எல்லா அழித்தொழிப்பு வேலைகளையும் அடையாள மறைத்தல்களையும் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக தன் கதைகளின் வழி தமிழீழப் போரையும் அதனைச் சார்ந்த உணர்வுகளையும் மறுகட்டமைப்பு செய்து போரின் அவலக் குரலை மீள்பதிவு செய்கிறார். இதுதான் யோ.கர்ணன் எனும் கதைச்சொல்லியின் உன்னத செயல்பாடு. தன் கதைகளின் வழி அவரை அவரே இன்னமும் சோர்ந்துபோகாத ஒரு போராளியாக மறுகண்டுபிடிப்பு செய்து கொள்கிறார்.

அவருடைய குறிப்பிட்ட சில கதைகளின் வழி யோ.கர்ணன் நம்பும் அரசியல், அவருடைய போர்ச்சூழல், இயக்கம் சார்ந்த அவருடைய மன உணர்வுகள், போர்ச்சூழல் குறித்த மறு விசாரணை, போருக்குப் பிந்தைய சமூக மாற்றம் எனப் பலவற்றை தொட்டுச் செல்கிறார். அவர் கதைகளின் வழி நாம் அடையக்கூடிய அனுபவம் மிகவும் ஆபத்தானதும் கூட. மிகவும் கவனமாக அவருடைய கதைவெளிக்குள் பிரவேசிக்க வேண்டியிருக்கிறது. நிலமெங்கும் கன்னி வெடிகளும் குண்டுகளும் புதைக்கப்பட்டிருப்பதைப் போல அவருடைய கதைப்பாத்திரங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் முதல் கதை இது. இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் சிங்கள இராணுவத்தினரைக் காட்டுக்குள் முன்னேறவிடாமல் அவர்களைத் தடுத்து விரட்டியடிப்பது அல்லது போர்ச்செய்து கொல்வது எனும் இயக்கத்தின் நடவடிக்கையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இலங்கை போர் குறித்து வெறும் செய்திதாளைப் புரட்டி விவரம் அறிந்துகொள்ளும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய அனைத்து வல்லமையும் பொருந்திய கதை இது.

இக்கதையின் மூலம் இயக்கத்தில் அடிக்கடி உபயோகிக்கப்படும் சில இராணுவ/போர்ச் சொற்களையும் ஆயுதத் தளவாடப் பொருள்களின் பெயரையும் அறிவதோடு கதையாசிரியர் அதற்குக் குறிப்பும் விளக்கமும் ஆங்காங்கே கொடுத்துள்ளார். இராணுவத்தின் ஆயுதத் திட்டங்கள், முறியடிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை முதலிலேயே தெரிந்துகொள்வதன் மூலமே அங்கு நிலவி வரும் பல்லாண்டுகாலப் போரைப் பற்றி ஓர் அறிமுகம் கிடைக்கும் என நினைக்கிறேன். அந்த வகையில் ஆதிரை இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு இயக்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காகக் காட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறாள்.

ஆதிரை என்பவள் யார்? அவள் அனுப்பிவைக்கப்பட்ட அந்த இயக்கத்தின் நடவடிக்கை என்ன? போர் ஆதிரைக்கு என்ன கொடுத்தது? இதுதான் கதையின் முக்கியமான பகுதிகள். ஆதிரை எனும் ஒரு இளம் போராளியின் உணர்வலைகள் இப்பகுதிகளில் காட்சிகளை நிரப்பி ஆக்கிரமிப்பு செய்கின்றன. ஆரம்பக்காலத்தில் முல்லிவாய்க்காலில் இருக்கும்போது இயக்கத்தினர் போட்ட தெருக்கூத்தைப் பார்த்து அதன் மூலம் கவரப்பட்டவள்தான் ஆதிரை. கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்து தெருக்கூத்தைத் தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கருதி அதில் ஆழ்ந்து உண்மையாகி போகிறாள். தனக்கும் தன் சமூகத்திற்கும் நிகழ்ந்த கொடூரங்களின் மீது அவளுக்கொரு புரட்சி மனப்பான்மை எழுகிறது. அதன் பிறகே அவள் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று போராளியாகிறாள்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவெனில் இயக்கம் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்துக் கொண்டு போய் பயிற்சி கொடுத்திருக்கிறது என்ற ஒரு குற்றச்சாற்றை நான் ஒரு சிலரின் கட்டுரையில் வாசித்திருக்கிறேன். தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டும் கிராமத்தில் குடும்பங்களில் வசித்த ஆண்களைக் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் இணைக்கும் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு புனிதமான செயலாகவும் கருதப்பட்டது. ஆனால் யோ.கர்ணன் தன் கதையில் வரும் ஆதிரையை அவளாகவே போராட்டம் குணமுடையவளாக மாறி இயக்கத்தில் சேர்வதாகக் காட்டியிருக்கிறார். போராளி வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டதில்லை என்பதே உண்மை. ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் ஒரு பக்கம் நிகழ்ந்திருந்தாலும், ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து ஒரு போராளி தன்னை அர்ப்பணித்து போராட்டத்தில் ஈடுபட முன்வருவது மிகவும் சாத்தியமான நியாயமான ஒரு விசயமாகவே கருத முடிகிறது. வரலாறும் இதைத்தான் கற்பிக்கிறது.

யோ.கர்ணன் ஒரு ஆயுதப் போராளி

யோ.கர்ணன் ஒரு ஆயுதப் போராளியாவார். போரில் ஈடுபட்டு தன் ஒரு காலையும் இன்னும் பல இழப்புகளையும் சந்தித்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உருவான ஒரு போராளி என்றே முதலில் அவரை நாம் அணுக வேண்டியுள்ளது. ஒரு போராளி உலகச் சமூகத்துடன் பேசும் வார்த்தைகள்தான் அவரால் படைக்கப்பட்ட கதைகள் என நான் நம்புகிறேன். இயக்கத்தில் ஈடுபட்டு போர் செய்து தமிழீழத்தை மீட்கும் பணியில் கர்ணனுக்கு அமைந்த அனுபவங்கள் எண்ணிலடங்காதவை. அதைப் பற்றி அவரே உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு விடுதலை இயக்கத்திலிருந்து வெளியேறியவர் யோ.கர்ணன். அது குறித்து அவரிடம் கேட்டிருந்தேன். அவருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான முரண்கள் என்ன என்பதாக என் கேள்வி அமைந்திருந்தது. புலிகளிற்குள் நிலவிய ஜனநாயகமற்ற தன்மை காரணமாக அவரால் அங்குத் தொடர்ந்து தங்கியிருக்க முடியவில்லை எனக் கூறினார். அமைப்பு ரீதியாக சேர்ந்தியங்க முடியாவிட்டாலும், அதன் மீது விமர்சனங்களுடன் கூடிய ஆதரவாளனாகவே அவர் இருந்து வந்திருக்கிறார். ஏனெனில் அவர்களுக்கு அதனிலும் முக்கிய தேவையிருந்தது. அவர்கள் எல்லோரது பொது எதிரியை வெற்றி கொள்ள வேண்டியிருந்தது. புலிகள் அமைப்பக்களிற்குள் நிலவியதை விட ஆயிரம் மடங்கு மோசமான சூழலையே அரசு தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தி வைத்திருந்தது எனக் கூறிய கர்ணன், ஆயிரம் விமர்சனங்களிருந்த போதும் அது எங்கள் இயக்கம் என்ற மனோநிலையுடனேயேயிருந்தேன் எனவும் குறிப்பிடுகிறார். அவருடைய நண்பர்களில் பெரும்பாலனவர்கள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள்தான். தொடர்ச்சியான விமர்சன செயற்பாட்டின் மூலம் அமைப்புக்கள் நிலவிய குறைபாடுகளை சீர் செய்யலாம் என நம்பியிருந்திருக்கிறார். ஓரு கட்டத்தில் அவருக்கு நன்றாக புரிந்த விட்டது தமது முயற்சிகள் பலனற்று போகின்றன என. சதாம் உசைன் மீதான மரணதண்டனை தீர்ப்பளித்த நாளிலேயே “அமைப்பு இதே விதமான செயற்பாட்டையே தொடர்ந்தால். அது போன்றதொரு –சொந்த மக்களே அஞ்சலி செலுத்த முடியாத ஒரு சாவு வரலாமென்று” என அவர்ப் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்.

இலங்கையில் சமாதான சூழல் நிலவிய காலக்கட்டத்தையும் அதன் தீவிரமான பாதிப்புகளையும் பற்றியும்கூட யோ.கர்ணன் தன் கதைகளின் வழி முன்னெடுக்கிறார். போர், போருக்குப் பிந்தைய வாழ்வு, போர் குறித்துத் தீர்மானிக்கப்பட்ட சமாதானப் பேச்சு, சமாதானத்தின் மூலம் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என அனைத்தையுமே தன் கதைகளின் மூலம் கவனப்படுத்துகிறார். சமாதானப் பேச்சுத் தொடங்கப்பட்டு சில காலம் அது தொடர்ச்சியான ஒரு சூழலை உருவாக்கியப்போது, அடையாளம் தெரியாத நபர்களால் பல கொலைகள் அங்கு நடக்கத்துவங்கியதை, ‘மன்னிக்கப்பட்டவனின் கைத்தொலைப்பேசி எனும் கதையின் மூலம் கர்ணன் குறிப்பிடுகிறார். இனம் தெரியாத சிலரால் தொடர்ந்து பல இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது புலிகளால் செய்யப்பட்ட கொலையா அல்லது அரசினால் செய்யப்பட்ட கொலைகளா எனும் சந்தேகம் எழுவதைக் கர்ணன் மறுக்கிறார். அதைப் புரிந்துகொள்வ்தற்கு அக்காலக்கட்டத்திய அரசியலை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் சொல்கிறார். யோ.கர்ணன் கூற்றுப்படி அன்றைய சூழலைப் புரிந்துகொண்டவர்களால் இது அரசினால் செய்யப்படும் கொலைகள் என ஊகித்திருக்க முடியும் என்கிறார்.

மேலும் இயக்கத்திலிருந்து வெளியேறிய இளைஞர்களை இயக்கம்தான் கொலை செய்திருக்கக்கூடும் என நினைப்பது ஓர் ஆழமான புரிதல் கிடையாது என்கிறார். போராட்ட இயக்கங்களில் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இளவயதானவர்கள். அவர்கள் படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள். இயக்கங்களில் இருந்து வெளியேறியவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அதிகமும் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. யாருக்கும் அது பற்றிய அக்கறையுமிருக்கவில்லை. வெளியேறியவர்களில் வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளிற்குச் சென்று விட்டனர். எஞ்சியவர்கள் அடிமாடுகளாயினர். மக்களிற்கும் அது பற்றிய அக்கறை அல்லது விழிப்பு இருக்கவில்லை. அதையும் மீறி இது பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் சுலபமாகத் தப்பித்து கொள்ள ‘துரோகி’ எனும் வசனத்தைக் கைவசம் வைத்திருந்தனர். இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாதவர்கள் பலர் அரசுடன் ஒட்டிக் கொண்டனர். அரசின் அரசியல் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக, உளவாளிகளாக அவர்கள் பாத்திரமிருந்தது. இந்தப் பிரச்சனை முகத்திலறைந்தாற் போல் கிளம்பியது, புலிகளின் தோல்விக்கு பின். உண்மையில் வெட்கப்பட வேண்டியது, எந்த மக்களிற்காக அவர்கள் போராட புறப்பட்டார்களோ அந்த மக்களினாலேயே அவர்கள் கைவிடப்பட்டனர். தாம் கொண்டாடிய அமைப்பிலிருந்து தோல்வியின் பின் வீடு திரும்பும் ஆண்களை பிச்சைக்காரர்களாகவும் பெண்களை விபச்சாரிகளாகவுமே அந்தச் சமூகம் வைத்திருக்கிறது எனத் தீர்க்கமாகக் கூறுகிறார் யோ.கர்ணன் எனும் படைப்பாளி.

ஆதிரையும் போர் நடவடிக்கைகளும்

யோ.கர்ணன் தன் கதையில் காட்டும் ஆதிரையும் இராணுவ நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் காட்டுக்குள் குழுவோடு குழுவாக அனுப்பி வைக்கப்படுகிறாள். ஒன்றரை வருடம் நீடித்த ஜெயசிக்குறூ எனச் சொல்லப்படும் வன்னியை இரண்டாகப் பிளப்பதற்காக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இயக்கத்தால் முறியடிக்கப்பட்டப்போது, இராணுவம் அடுத்தத்தாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைத்தான் ‘றிவிபல ஓப்பெரேசன்’ என்பதாகும். இந்த இராணுவ நடவடிக்கையை உடைப்பதற்காக இயக்கத்தைச் சேர்ந்த பல குழுக்கள் அம்பகாமம் காட்டுக்குள் செல்கிறார்கள். அந்த ஒரு குழுவில் ஆதிரையும் உடன் அனுப்பப்படுகிறாள்.

18 நாட்கள் காட்டில் முகாமிட்டு காத்திருக்கிறார்கள். பதினெட்டாம் நாள் மேலிடத்திலிருந்து இராணுவம் காட்டுக்குள் முன்னேறத் தொடங்கியுள்ளனர் எனும் தகவல் வந்து சேர்கிறது. எல்லாம் குழுக்களும் வெவ்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அமர்த்தப்படுகின்றனர். ஒரு குழுவைக் கொன்று இராணுவம் முன்னேறினாலும் அவர்களைத் தடுக்க அடுத்தக் குழு போரிடத் தயாராக இருக்கும் என்பதே அவர்களின் ஒப்பரேசன். அதன்படி ஆதிரை தனக்கு வழங்கப்பட்ட முகாமில் கையில் 120 ரவுண்ஸ் வகை துப்பாக்கி ரவையுடன் காத்திருக்கிறாள். ஆமிக்காரர்களின் துப்பாக்கி வெடி மெல்ல கேட்கத் துவங்குகிறது. உடனே ஆள் இருக்கும் இடம் தெரியாமல் சுடுவது ஆயுதத் தந்திரம் கிடையாது. குறைந்தபட்சம் அவர்கள் முன்னேறி வரும் திசையைச் சரியாகக் கணிக்க முடிந்தாலும் துப்பாக்கியைத் தயார்ப்படுத்தலாம். ஆகையால் ஆதிரை துப்பாக்கி வெடியை நோக்கி காதுகளைக் கூர்மையாக்குகிறாள். இந்தக் காட்சிகளும் கணங்களும் சராசரி ஒரு வாசகனின் மனதைப் பெரும் பதற்றத்திற்குள்ளாக்குகிறது. வாசகனான நம்மை நோக்கி இராணுவப் படை வருவது போன்ற ஓர் உணர்வை வழங்குவதில் கதையாசிரியர் மிகவும் துல்லியமாக கதைக்கான காட்சிகளைப் படைத்திருக்கிறார்.

பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆமிக்காரர்கள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வந்துகொண்டிருப்பதை உணர்கிறாள். ஆதிரை இருக்கும் இடத்தை இராணுவத்தினர் பொக்ஸ் அடித்ததும் சூழல் மேலும் பரப்பரப்புக்குள்ளாகின்றது. பொக்ஸ் என்றால் நாலா பக்கமும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலை. ஆமிக்காரனிடம் உயிருடன் பிடிப்படுவது புலிகளின் கொள்கையல்ல. ஆமிக்காரன் பெண்களைப் பிடித்துச் சென்றானென்றால் அவர்களைச் சீர்குலைத்துவிடுவான். ஆகையால் நாலாப்பக்கமும் சுற்றி வளைக்கப்பட்ட ஆதிரையுடன் பிற மூவரும் அங்கேயே போராடிப் பார்க்கலாம் இல்லையென்றால் இறந்துவிடலாம் என முடிவெடுத்தனர். எல்லா குண்டுகளும் தீர்ந்து கடைசியில் ஒரு குண்டு மட்டும் எஞ்சியிருக்க இராணுவம் மேலும் அவர்களை நெருங்கி வந்துவிட்டிருந்தது. வேறு வழியில்லாமல் அந்த ஒரு குண்டின் மூலம் நால்வரும் வீர மரணத்தை எய்துவதாக முடிவெடுக்கின்றனர்.

ஆதிரை குண்டைக் கையிலெடுத்து அதன் கிளிப்பைக் கழற்ற தயாராக இருக்கிறாள். அவர்களின் தலைவி வாக்கிடோக்கியில் தாங்கள் தற்கொலை செய்யவிருப்பதாகத் தகவல் சொல்லிவிட கிளிப் கழற்றி நால்வருக்கும் மத்தியில் போடப்படுகிறது. ஒரு கணம் வாசகனின் மனம் பீதியடைகிறது. கதைக்குள் அந்த நால்வருடன் சேர்ந்து நாமும் குண்டு வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறப்போவதைப் போன்ற ஒரு படப்படப்பு உருவாகுவதைத் தடுக்க முடியவில்லை. மறுமுனையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி அணி நெருங்கிவிட்டதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அவர்களைக் காப்பாற்றப்போவதாகும் அறிவிப்பு வருகிறது. அதனைக் கேட்ட நால்வரும் குண்டு வெடிப்பதற்கு எத்தனையோ விநாடிகள் மட்டுமே இருக்கும் இடைவெளியில் அதிர்ச்சியில் உறைகின்றனர். சட்டென தாமதிக்காமல் ஆதிரைக் குண்டின் மீது பாய்ந்து உடல் சிதறி வெடித்து மடிகிறாள். மற்ற மூவரும் காப்பற்றப்படுகின்றனர்.

யோ.கர்ணனின் இக்கதையின் முடிவு எந்தக் கவித்துவமான சாயலையும் கொண்டிருக்கவில்லை. அதிர்ச்சியில் உறைய வைக்கும் ஒரு முடிவை ஆதிரை எடுப்பதாகச் சொல்லி நிறைவடைகிறது. இது ஒருவகையில் திருப்பத்தைக் கொடுப்பதாக நினைக்கப்பட்டாலும் பல்லாண்டுகால மரணமும் வீரமும் நாம் விதிக்கும் புனைவு விதிகளுக்குக் கட்டுப்படாத ஒரு மீறலையே நிகழ்த்திக் காட்டுகின்றன. இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆதிரைப் போல ஆயிரம் கணக்கில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படியொரு மரணத்தின் முன் நம்மைக் கொண்டு போய் நிறுத்துகிறார் கதையாசிரியர். அந்த வீரத்தைக் கண்டு மிரள்வதா அல்லது பீதியடைவதா அல்லது கவலைப்படுவதா என உலகிலுள்ள மாறுப்பட்ட பல வாசகர்கள் தடுமாறக்கூடும். பேராசிரியர் தமிழவன் குறிப்பிடுவது போல எல்லா சூழலிலும் தமிழர்களின் மூலப்படிம உணர்வென்பது செயல்படக்கூடியதே. அது எப்படி ஒரு குவிமயமாக மாறும் என்பதைக் கவனிக்க முடியாவிட்டாலும் வரலாறுதோறும் அப்படியொரு மையப்படுத்தப்பட்ட உணர்வு ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் மூலப்படிமமாக உருவகித்திருக்கும். இக்கதையை வாசித்து முடிக்கும் எந்தத் தமிழனுக்கும் தன்னுடைய இனம் இப்படித்தான் கொன்றொழிக்கப்படுகிறது என்றும் போராளிகள் இப்படித்தான் வீர மரணத்தை அடைகிறார்கள் என்ற கொந்தளிப்பும் உருவாகவே செய்யும்.

இக்கதையில் வரும் ஆதிரையை உணரும்போது எனக்கு சந்தோஷ் சிவன் இயக்கிய “தீவிரவாதி” எனும் படத்தின் ஞாபகம் வருகிறது. மனித வெடிக்குண்டாகப் பயிற்சி எடுத்து அதற்குத் தேர்வாகும் ஒரு பெண், புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு நாள் உரையாடி, உணவருந்திச் செல்ல அனுமதிக்கப்படுகிறாள். அதன் பிறகு அவர்களின் திட்டப்படி ஒரு வயதான பிராமணனின் வீட்டிற்கு வாடகை விருந்தாளியாக அனுப்பப்படுகிறாள். இன்னும் சில நாட்களில் மனிதக் குண்டாக மாறி மரணிக்கப்போகும் அந்தப் பெண் அங்குத் தங்கியிருக்கும் காலக்கட்டத்தில் உயிர் வாழ்தலுக்கான நியாயங்களையும் வாழ்வின் இரசிக்கத்தக்க பகுதிகளையும் கண்டுணர்ந்து அவளுடைய நோக்கத்தின் பால் பலவீனமடைகிறாள். தான் பயிற்சியளிகப்பட்ட மனித வெடிகுண்டு மட்டுமல்ல தனக்குள் ஒரு பெண் இருக்கிறாள் என்ற உணர்வை அடைகிறாள். ஒரு போராளியாகச் சாவதற்கும் அல்லது ஒரு பெண்ணாக வாழ்வதற்கும் மத்தியில் அவள் பெரும் தர்க்கம் செய்து உணர்வு போராட்டத்திற்கு ஆளாகுவதை மிகத்திறமையாகக் காட்சிப்படுத்தியிருப்பார் சந்தோஷ் சிவன்.

யோ.கர்ணம் காட்டும் இடம் போர்க்களம். இரண்டு மூன்று விநாடியில் ஆதிரையால் ஒரு வீரமிக்க முடிவை எடுக்க முடிகிறது என்றால் அவள் வீரத்தை வெறும் கிளர்ச்சிக்காக உருவாக்கியவள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்றும் ஒவ்வொரு இலங்கை தமிழருக்குள்ளும் விதைக்கப்பட்டிருப்பது இந்த வீரம் மட்டுமே. இது வரலாறு அவர்களுக்கு அளித்த வழி. இதனை எப்படிக் கேள்வியெழுப்பது? அல்லது கேள்வி எழுப்ப முடியும்? ஆதிரையின் அந்த மரணத்திற்கு விலையே இல்லை. யோ.கர்ணன் இப்படிப் பல கதைகளின் வழி அழித்தொழிக்கப்பட்ட இலங்கை போர் பூமியை மீட்டெடுக்கவே செய்கிறார்.

http://www.vallinam....alamurugan.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 2

கே. பாலமுருகன்

ஆற்றல் மிகு கரத்தில் – கே. டானியல்

அறிமுகம்: யாழ்ப்பாணத்தில் 1927-இல் பிறந்தவர் டானியல். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் இருந்தவர். தஞ்சையில் மார்ச்சு 1986-இல் மரணமடைந்தார். ஈழத்து பஞ்சமர் மக்களுக்காகத் தோழர் டானியல் தன் இலக்கிய இயக்கப் பணிகளை அர்ப்பணித்தவர். தமிழ் இலக்கியத் துறைக்கு நாவல், குறுநாவல், சிறுகதை என பல வடிவங்களில் தம் பங்களிப்பைச் செய்துள்ளார்.

கே. டானியல் எனும் கதைச்சொல்லி

கே. டானியல் என்ற பெயரை 'பஞ்சமர்' நாவல் பற்றிய அதிகமான பேச்சுக்களின் வழியே அறிந்திருக்கிறேன். 'பஞ்சமர்' நாவலை மையப்படுத்தி நாவலின் முக்கியத்துவம் குறித்து நிறைய விமர்சகர் சொல்லவும் கேட்டதுண்டு. தமிழ் இலக்கியச் சூழலில் ஒடுக்கப்பட்ட போர் சமூகத்தின் மனசாட்சியை இலக்கியமாக்கியதில் கே.டானியலின் பங்கு மிக முக்கியமானதாகும். ஈழ இலக்கியம் என்ற உரையாடலை கே.டானியலை நீக்கிவிட்டு நம்மால் தொடர முடியாத அளவிற்கு ஈழத்துத் தலித் இலக்கியத்திற்குப் பெரிதும் பங்காற்றிய கதையாசிரியர். ஈழ தலித் இலக்கியத்தின் முன்னோடியாகவே கே.டானியல் கருதப்படுகிறார்.

அ.மார்க்ஸ் முன்னுரையுடன் தொக்குக்கப்பட்ட ஈழத்துத் தலித் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து வாசிக்க நேர்ந்த 'ஆற்றல் மிகு கரத்தில்' எனும் சிறுகதையின் மறுபார்வை இது. சமீபத்தில் ரியாஸ் குறானாவை வல்லினத்துக்காக நேர்காணல் செய்தபோது, தமிழில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நல்ல விமர்சகர்கள் இருந்தும் ஏன் கே.டானியலின் 'பஞ்சமர்' நாவல் தொடர்ந்து கவனிக்கப்படவில்லை என்ற கேள்வியை முன்வைத்திருந்தோம். ஒரு நாவல் ஒரு சமூகத்தில் எப்படியெல்லாம் வாசிக்கப்பட்டிருக்கக்கூடும்? எந்தக் காலக்கட்டத்தில் ஒரு பிரதியின் மீது நிகழ்த்தப்பட்ட வாசிப்பு அப்பிரதியின் முக்கியத்துவங்களை மீட்டுணர்ந்திருக்கும் என விரிவாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ரியாஸ் குறிப்பிட்டிருப்பதைப் போல அனைத்துப் பிரதிகளையும் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஒரு வாசகநிலை 'பஞ்சமர்' நாவல் வந்த காலக்கட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளுக்குப் பிறகுத்தான் தலித் இலக்கியம் என்ற ஒரு பிரக்ஞை தமிழ் இலக்கிய சூழலுக்குள் வலுப்பெறத் துவங்குகிறது. இதை அ.மார்க்ஸ் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, தலித் இலக்கியமே தாமதமாகத்தான் தலித் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டின் மூலம் பெற்ற உந்துததால் தமிழுக்குள் வருகிறது. அதனைச் சார்ந்த விமர்சனமும் கவனமும் பரவலாகப் போய்ச்சேர மேலும் காலம் பிடித்திருக்கும். இந்தக் கால வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், ஏன் ஈழ இலக்கியம் பஞ்சமர் நாவல் வந்த காலக்கட்டத்தில்கூட சரியான கவனம் பெறவில்லை என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

‘ஆற்றல் மிகு கரத்தில்’ – கதை பின்புலம்

இக்கதை வேலன் என்ற இளைஞனின் அடிமை வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. வேலன் கமக்காரன் எனும் கிராம முதலாளிக்கு அடிமையாக ஒப்படைக்கப்படுகிறான். கமக்காரனும் கமகாரச்சியும் அவனை வீட்டில் ஒரு வேலைக்காரனாக வளர்க்கிறார்கள். அடித்தட்டு நிலையில் சோற்றுக்காகப் போராட வேண்டிய நிலை இந்தப் சாதிய பொருளாதார சமூகத்தால் தலித் மக்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். அல்லது சாதிய ரீதியில் அடிமையாக முதலாளிக்குக் கீழ் ஒடுக்கப்பட்டிருப்பார்கள். இதுதான் தலித் அனுபவிக்கக்கூடிய வாழ்க்கை. அவர்களுக்கு அளிக்கப்படும் இடம். இந்த சமூக அரசியல் இன்று பலதரப்பட்ட கருத்தியல் தளங்களில் வைத்து விவாதிக்கப்பட்டாலும் கே.டானியல் இக்கதையை எழுதியக் காலக்கட்டத்தில் தலித் சமூகத்தின் அவலங்களைப் பதிவு செய்ததில் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

வேலன் என்ற தலித் சிறுவயதில் தன் அம்மாவால் அங்கு வந்து ஒப்படைக்கப்படுகிறான். கதையின் துவக்கத்தில் அம்மாவை டானியல் சித்தரித்திருப்பது வித்தியாசமான பகுதியாகும். ‘அறிவு என்ற ஒன்று தெரிந்த பருவத்தில் கந்தப்புக் கமக்காரன் வீட்டில், ‘தாய்’ என்ற ஒரு உருவம் அவனை இட்டுச் சென்றதாக ஞாபகம்.’ மிகச் சுருக்கமாகத் தலித் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையால் தாய், குடும்பம் போன்ற மேல்தட்டு புனித வியாக்கியானங்கள் பொருட்படுத்தாத ஒரு சூழலை அடைந்திருக்கின்றன. தாய் என்பவளை வழிப்படும் ஒரு பிம்பமாகக் கருதப்படும் ஒரு காலக்கட்டத்தில் அவளை ஒரு உருவமாக மட்டும் பாவித்திருப்பது, தலித் வாழ்க்கை எப்படிச் சமக்காலத்திய புனிதங்களையும் கொண்டாட்டங்களையும் தவிர்த்திருக்கிறது எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

கமக்காரனும் கமக்காரச்சியும் அவனைத் தொடர்ந்து கொடுமைப்படுத்துவது கதையில் சொல்லப்படுகிறது. கமக்காரன் பிடரியில் அடிப்பான் என்றும் கமக்காரச்சி முதுகில் குத்துவாள் என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறது. உடல் ரீதியில் கொடுமைப்படுத்தப்படுவதே அடிமையின் மீதான அதிகாரமாக முதலாளிய சமூகம் நிறுவியிருக்கிறது. சுடுத்தண்ணீர் ஊற்றி வேலைக்காரிகள் கொடுமைப்படுத்தப்படுவது மலேசியா போன்ற நாட்டிலும் நடக்கின்றது. இஸ்த்திரி பெட்டியைக் கொண்டு உடலில் சூடு வைப்பது, கட்டையால் அடித்துத் துன்புறுத்துவது, சூடான எண்ணையை மேலே ஊற்றிக் காயப்படுத்துவது, பழைய உணவைக் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது என வேலைக்காரர்கள் மீது முதலாளிகள் நடத்தும் கொடுமைகள் எல்லாம் நாடுகளிலும் வன்மையானவையாகும்.

வேலனை கமக்காரனின் பிள்ளைகள், முகத்தில் எச்சில் துப்பி அவமானப்படுத்துகிறார்கள். அந்த வீட்டின் குழந்தை குட்டிகள் என அனைவரும் அவனை ஆளுக்கொருப் பக்கம் கொடுமைப்படுத்துகிறார்கள். அதிகாரங்களின் பலத்திற்கேற்ப அவன் அவதிக்குள்ளாகுகின்றான். பிறகு கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பித்து ஓடப்பார்க்கிறான். ஆனால் ஊர் மக்களாலேயே மீண்டும் பிடித்து கமக்காரனிடம் ஒப்படைக்கப்படுகிறான். இதுதான் அடிமை வாழ்க்கை என்பது. அடிமைகளால் தப்பிக்கவே முடியாது. குறிப்பாக வேலைனைப் போன்ற தலித்துகள் இறுதிவரை ஒரு வேலைக்காரனாகவும் தீண்டத்தகாதவனாகவும் வாழ்ந்து சாக வேண்டும் எனும் ஒரு கொடூரத்தைக் கதையாசிரியர் காட்டுகிறார்.

கமக்காரன் வீட்டில் இல்லாதபோது கமக்காரியின் கள்ள உறவைப் பற்றி வேலன் அறிந்துவிடுகிறான். அவனை அங்கிருந்து கமக்காரி தப்பிக்க உதவி செய்கிறாள். கமக்காரனின் வேட்டி சட்டைகள் சிலவற்றையும் 10 ரூபாயையும் கொடுத்தனுப்புகிறாள். அங்கிருந்து தப்பித்து வேலன் சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்கிறான். கதையின் பின்பகுதியில் கிராமம் எப்படிச் சாதிய ரீதியில் தளம் பிரித்துப் பாதுகாக்கப்படுகிறது என்பதை விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. வேலன் ஒரு பள்ளன் என்பதைக் கதையிலேயே குறிப்பிடுவதன் மூலம் அக்கிராமத்தில் பள்ளர்கள் மிகவும் மோசமாக அடக்குமுறைகளுக்கு ஆளாகி அடிப்பணிந்து வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

வேட்டியைக் கட்டிக்கொண்டு அலையும் வேலைனை மேல்சாதிக்காரர்கள் அசூசையுடன் பார்க்கிறார்கள். அவனுடைய தோற்றத்தைக் கண்டு வெறுக்கிறார்கள். தலித் மக்களின் மீது எந்த நேரத்திலும் எப்படியும் அதிகாரத்தையும் வன்முறையையும் அவிழ்த்துவிடலாம் என்பதை, அந்த மேல்சாதிக்காரர்கள் வேலனை அடித்து அவனுடைய வேட்டியை அவிழ்த்து நிர்வாணமாக்குவதன் மூலம் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு சிறு நடவடிக்கை மட்டுமே. மேல்தட்டு சாதிய முதலாளிகளின் அதிகாரத்தின் வேர்கள் அடர்த்தியாகச் சமூகத்தைப் பின்னியிருக்கின்றன.

அதன் பிறகு வேலனைப் பலவகைகளில் எல்லோரும் சிறுமைப்படுத்துகிறார்கள். அடித்துத் துன்புறுத்துகிறார்கள். தலித்துகளின் இருப்பை எப்படியெல்லாம் துயரத்துக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதை வேலன் எனும் கதைப்பாத்திரத்தின் வாயிலாக டானியல் முன்வைக்கிறார். சமூகத்திற்குள் ஒரு தலித்தின் இருப்பின் முக்கியத்துவம் எக்காலக்கட்டத்திலும் கவனப்படுத்தப்படவில்லை என்பதே இந்தத் தலைமுறையின் சாபம்.

ஆதவன் தீட்சண்யா நேர்காணலில் குறிப்பிட்டிருப்பதைப் போல, இந்து மதம் என்பதே சாதியக் கட்டமைப்பால் உருவானது. சாதியின் மூலன் ஒரு குழுசார் மக்களை ஒடுக்கி ஆள்வதற்கு எல்லாம் வசதிகளையும் அளிக்கக்கூடியவையாக இந்து மதத்தைக் குறிப்பிடலாம்.

தன் மீதான கொடுமைகளைப் பொறுக்கமுடியாத வேலன் தன்னுடைய அனைத்துச் சொந்தகளும் காலமானதற்குப் பிறகு சுடுக்காட்டுப் பக்கமாக இருக்கும் ஆலடி வயிரவன் கோவிலுக்கு வந்து சேர்கிறான். ஒரு தலித்தின் கடைசி இயலாமையாக இதைக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வயிரவன் கோவிலில் உருண்டு புரண்டு கண்ணீர்விட்டு அழுகிறான் வேலன். இந்தச் சமூகத்திலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதன் அவலத்தைச் சொல்லியும், தன்னை மேல்தட்டு வர்க்கம் துன்புறுத்தியதன் வலியை வெளிப்படுத்தியும் புலம்புகிறான். அது ஒரு ஈன பேரோசையாகக் கோவில் முழுக்க ஒலிக்கிறது.

வயிரவன் சாமி கோவில் சுடுக்காட்டுப் பக்கமாக இருப்பதாகச் சொல்லும் இடத்திலேயே டானியல் சிறுதெய்வமும் ஒருவகையில் ஒடுக்கப்பட்ட நிலையில்தான் அங்கு அமர்த்தப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார்.

வேலன் இறுதியில் அவன் மீதான எல்லாம்விதமான புறக்கணிப்புகளையும் எதிர்க்கொள்ள அசாத்தியமான சக்தியை வயிரவன் கோவிலில் வைத்துப் பெறுகிறான். இது ஒரு வகையான எதிர்ப்புணர்வின் மூலம் உருவாகும் உந்துதல். கோவிலை விட்டு வெளியேறுபவன் ஆக்ரோஷமாகக் காணப்படுகிறான். தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு திமிருடன் நடந்து வருகிறான். அவனை துன்புறுத்த வருபவர்களை திருப்பியடித்து ஒரு சண்டியராக மாறுகிறான். வன்முறைக்கு வன்முறையே சரியானது என உணர்ந்து அதன் வழியே தன்னுடைய அதிகாரத்தை எதிர்க்கும் அதிகாரத்தைக் கண்டடைகிறான்.

சாதியம்: உடலின் மீதான பாசிசம்

பிற உடலை ஒடுக்குவது அடக்குவது என்பது போர் காலத்திய ஒரு பாரம்பரிய கொடுமையாகவே அடையாளப்படுத்த முடிகிறது. போரில் தோற்றவர்களை உடல் ரீதியில் இம்சைப்படுத்தி எதிரியின் ஆளுமையைக் காட்டுவது ஒரு மரபாகும். இன்று இலங்கையில் போரில் தோல்வியுற்ற ஒரு சமூகமாக இராணுவத்திடம் சிக்கிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் உடல் ரீதியில் அடக்கப்படுகிறார்கள். அவர்களை வெளியிலிருந்து யாரும் சந்திக்க முடியாது. அவர்களின் உடல் அந்த எல்லையைக் கடந்து வெளியேற முடியாது. வன்கொடுமை, பசி, கொலைகள் என அவர்களின் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், இராணுவத்தின் உடல் வதை செயலாகும். இன்று போர் சமூகங்களாக, போரினால் பாதிக்கப்பட்டவர்களாக, அதே இராணுவ வதைகளை மீளுருவாக்கம் செய்து பிரயோகிக்கும் ஒரு சூழலுக்கு நம் சமூகங்கள் ஆளாகியுள்ளன.

வரலாற்றின் வழி இராணுவத்திடமிருந்து பெற்றுக்கொண்டு பாசிச உணர்வை இன்றைய சமூகங்கள் பிரதியெடுத்து அமல்படுத்துகின்றன. சாதியத்தின் அடிப்படையில் குடியியல் பெருமையை அடையும் ஓர் குழு, அந்தச் சமூகத்தில் இராணுவ நடவடிக்கைகளைத் தலித் மக்கள் மீது பாவிக்கின்றன. அவர்களின் உடலை வதைக்கின்றன. அவர்களின் உடலைத் தன் முதலாளிய தன்மைகளுக்குப் பலியாக்கின்றன. தனக்குக் கீழான சாதியைச் சேர்ந்த மக்களின் உடலை இம்சைப்படுத்துவதன் மூலமும் அந்த உடலைத் தன் ஆளுமைக்கு உட்பட்டவையாக மாற்றியும் அல்லது அவ்வுடல்களை ஆட்சி செய்யும் அதிகாரமாக உருவெடுத்தும் ஒரு சாதி சார்ந்த முதலாளிய அமைப்பு தன்னைப் பாசிச உறுப்பினராக மாற்றிக்கொள்கிறது.

தலித்துகளை ஒடுக்கியும் அவர்களை இம்சித்தும் தன்னுடைய மேட்டுக்குடி பெருமைகளை நிருபித்துக்காட்டிய அனைத்தையுமே எளிய மக்களின் உடல்களின் மீதான அதிகாரமாகவே பார்க்கிறேன். இதுவொரு இராணுவ மரபார்ந்த செயல்களாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அடிமையின் அரசியல்

அடிமை என்றதும் எனக்கு இரண்டு விசயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று அடிமை தான் அடிமையாக இருப்பதில் கடமைப்பட்டிருப்பதாகக் கருதி பணியாற்றுவதும், விசுவாசமாக இருப்பதும் என இயங்குவான். அல்லது வற்புறுத்தி அடிமையாக்கப்பட்டிருப்பான். தலித் சமூகத்தின் பெரும்பாலான பகுதியினர் இப்படி வற்புறுத்தி அடிமையானவர்களே. உத்தபுரம் தொடர்பான பிரச்சனை இதற்கு ஓர் உதாரணமாகும். உத்தப்புர சுவர் தலித்துகளுக்கு என்றுமே தடையாக இருந்தது. அது அவர்களைச் சிறுமைப்படுத்துவதாகவே உணர்ந்தார்கள். ஆகையால் அதற்கு எதிராக தலித்துகள் போராட்டம் நடத்தினார்கள். இதுவே பெரும் அரசியல் மாற்றுக்கருத்துகளை உருவாக்கின. இக்கதையில் கே.டானியல் உருவாக்கும் வேலனும் வற்புறுத்தி அடிமையாக்கப்பட்டவனே. அவனால் தன் எதிர்ப்புணர்வைக் காட்ட முடிகிறது. கதையின் இறுதியின் தன்னைத் தானே மீட்டுக்கொள்ள அடிமை சிந்தனையிலிருந்து வெளியேறுகிறான். அடிமைக்குள்ளிருந்து வெளிப்பட்டவன் ஒரு பாசிட்டிவ் அதிகாரமாக மாறி கடும் எதிர்வினை ஆற்றுகிறான்.

இதுடான் கே.டானியலின் தலித் அரசியல். தன் புனைவுகளின் மூலம் அவர் நிறுவும் அரசியல் கருத்துகளுக்கான ஒரு நல்ல உதாரணம் இக்கதை. தலித்துகளின் மீதான அனைத்துவிதமான சுரண்டலுக்கும் எதிர்வன்முறை மட்டுமே சரியான வழிமுறை என டானியல் முன்வைக்கிறார். அதனால் அவருடைய வேலன் கதைமாந்தர் ஒரு வலுப்பெற்று தன் முரண் உணர்வை வெளிப்படுத்துகிறார்.

கே. டானியலின் மீட்பும் பெருங்கனவும்

தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் இக்கதையின் இறுதியின் வேலனின் கோபமும் எதிர்ப்புணர்வும் ஓர் இயக்கமாக மாறுவதாகச் சொல்லியிருப்பார். ஒட்டுமொத்த இலங்கை உரிமை போராட்டம் எப்படி இயக்கங்களாக மாறுகின்றன என்பதை விவரிக்கும் வகையிலான ஓர் அனுபவத்தைப் பெற முடிந்தது. தனிமனிதர்கள் கூட்டுச் சக்தியாக ஒன்றிணைந்து ஓர் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகத்தான் ஈழத் தலித் சமூகத்தை அதிகாரத்தின் பிடியிலிருந்து மீட்க முடியும், அதற்கு இயக்கம் அவசியம் எனும் அரசியல் புரிதலை வலுவாகக் கொண்டிருக்கிறார் டானியல். அதன் தொடர்பாகத்தான் கதைகளும் அதே வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன.

இயக்கம் உருவாக்கம், மாற்றுப் பாசிச எதிர்ப்புணர்வு என அனைத்தையுமே நியாயப்படுத்தும் ஒரு வாழ்க்கை டானியல் வாழ்ந்திருக்கக்கூடும். அதன் வழியே தன் கதைகளைப் படைக்கிறார். வேலன் இலங்கையில் உருவான போராளிகளின் குறியீடு. வேலனை முன்வைத்து இலங்கையின் பாசிசத்திற்கு எதிரான உருவான முக்கியமான பிம்பங்களையெல்லாம் நினைவுப்படுத்திக்கொள்ள முடிகிறது. டானியல் சிறுகதைகளைவிட நாவல்(பஞ்சமர்) அனைவராலும் பேசப்பட்டவை. இக்கதையிலும் கூட கதை இறுதியை நோக்கி நகர நகர கதையின் மீதுள்ள பிடிப்பை இழந்து வருவதாகத் தோன்றியது. கடைசியில் கதையை அவசரமாக முடித்ததாகத் தெரிந்தது.

கே. டானியல் எழுதத் துவங்கிய காலக்கட்டத்தில் அவருடைய இலக்கியச் செயல்பாடுகள் வலுவான அரசியல் கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தன. அதைக் கொண்டு அவரால் ஒரு படைப்புலகை அரசியல் நிலத்துடன் சிருஷ்டித்துக்கொள்ள முடிந்தது.

http://www.vallinam.com.my/issue37/balamurugan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.