Everything posted by ஏராளன்
-
சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளது - இ.முரளிதரன்
07 JUL, 2025 | 10:41 AM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய சொந்தக்காணிகள் கடற்படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கு இருந்த ஒரு சில மக்கள் கடற்படை இடம் கேள்வி எழுப்பிய போது உங்களுடைய காணி என்றால் அனுமதி பத்திரத்தை காட்டுமாறு தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர். சுண்டிக்குள பகுதியில் காணப்படும் அதிகளவான காணிகள் அரசகாணிகளாக காணப்படுகிறது. அங்கே வசித்த மக்களின் காணிகளுக்கு உறுதி இருக்காது. மக்கள் காலா காலம் அந்த காணியில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காணியை தற்பொழுது சுவீகரிப்பதற்காக கடற்படை முயற்சிக்கின்றது. அந்த பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வீடுகள், கிணறுகள், அங்கே மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் இருக்கின்றன. இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படாமல் அளவீடு முன்னெடுக்கப்பட்டது. ஒரு பிரதேசத்தில் ஒரு காணியை அளவீடு செய்ய வேண்டும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மீனவ சங்கம், பிரதேச செயலர், கிராம அலுவலர், காணிக் கிளையினர் ஆகிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் மிக இரகசியமாக இந்த காணிகளை அளவீடு செய்துள்ளார்கள். காலப்போக்கில் இந்த பகுதியில் கடல் தொழில் செய்கின்ற மக்கள் கடல் தொழில் செய்ய முடியாத நிலைமை உருவாகப் போகின்றது. சுண்டிக்குள பகுதியில் கடற் படையின் தளங்கள் விஸ்தரிக்கப்பட போகின்றது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் மக்களை ஒருங்கிணைத்து இந்த காணிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களை செய்யப் போவதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219364
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்! Published By: DIGITAL DESK 2 06 JUL, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219333
-
அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்காக விசேட உணவு வேலைத்திட்டம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Published By: VISHNU 07 JUL, 2025 | 01:36 AM (செ.சுபதர்ஷனி) அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த சிறப்புத் திட்டத்திற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய தேசிய புற்றுநோய் மருத்துவமனையின் பணிப்பாளர், நிர்வாகம் மற்றும் இந்த விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்களின் கல்வி கலாசாலை, ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பிறரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில், அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக சுகாதார அமைச்சகம் ஆண்டுதோறும் பெரும் தொகையான பணத்தை செலவிடுகிறது. எனினும் அந்தப்பணம் நியாயமான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மருத்துவமனை வழங்கும் உணவால் நோயாளி திருப்தி அடைகிறாரா ?இல்லையா? என்பதை கூட எவரும் நோயாளியிடம் கேட்பதில்லை. அவ்வாறான நிலையில் தற்போது வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. ஆகையால் அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் முறை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். நோயாளர்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவை வழங்குவது அவசியம். மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குழம்பு மற்றும் காய்கறிகள் கொண்ட ஒற்றை தட்டு இந்த திட்டத்தின் முக்கிய அம்சம். மீன், இறைச்சி போன்றவற்றுடன் கூடிய தட்டுக்குப் பதிலாக சோறு, காய்கறிகள், இறைச்சி அல்லது மீன் என பிரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட தட்டில் நோயாளிக்கான உணவு வழங்கப்படும். மேலும், எதிர்காலத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த, மருத்துவமனைகளின் சமையலறைகள் நவீனமயமாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள எரிவாயு அடுப்புகளுக்குப் பதிலாக நீராவியால் இயங்கும் அடுப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதும் அவசியம். மருத்துவமனைகளில் உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்குவதற்கான ஏலம் மிகக் குறைந்த விலையை வழங்கும் நபருக்கே வழங்கப்படுகிறது. மேலும் மிகக் குறைந்த விலையை வழங்கும் நபரால் மருத்துவமனைக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களின் தரம் குறித்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மசாலாப் பொருட்களின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/219349
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து பட மூலாதாரம்,PHOTO BY STU FORSTER/GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்று தொடரை சமன் செய்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்திருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷுப்மன் கில் சதமடிக்க (161 ரன்கள்) 427 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது இந்திய அணி. 25 நிமிடங்களில் திருப்புமுனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக் 4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் இருந்தது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஏற்கெனவே ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களை தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் அலறவிட்ட நிலையில் அவர்களின் துல்லியமான லென்த்தில் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீ்ச்சு இன்று காலையும் தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய 25 நிமிடங்களுக்குள் ஆகாஷ் தீப் இரு அருமையான பந்துகளால் இரு விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணியை நெருக்கடிக்குள் தள்ளினார். முதலாவதாக ஆட்டம் தொடங்கி 4வது ஓவரில் ஆலி போப்பிற்கு இன் கட்டரில் பந்துவீசி க்ளீன் போல்டாக்கினார் ஆகாஷ் தீப். ஏற்கெனவே திணறிக்கொண்டிருந்த போப் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார். போப் ஆட்டமிழந்த அடுத்த 2 ஓவர்களில் ஹேரி ப்ரூக் விக்கெட்டுக்கு ஆகாஷ் குறிவைத்தார். பேட்டர் ஆடமுடியாத வகையில் இன்ஸ்விங்கில் பந்தை வீசி ஹேரி ப்ரூக்கை நிலைகுலையச் செய்து கால்காப்பில் வாங்கவைத்தார் ஆகாஷ். ப்ரூக் கால்காப்பில் வாங்கியதும் ஆகாஷ் அப்பீல் செய்தவுடனே நடுவர் மறுபேச்சு இன்றி கையை உயர்த்தி அவுட் வழங்கினார். டிஆர்எஸ் முறையீட்டுக்கு வாய்ப்பின்றி துல்லியமான எல்பிடபிள்யு என்பதால், ப்ரூக்கும் முறையீடு செய்யாமல் வெளியேறினார். இந்த இரு விக்கெட்டுகளும், இங்கிலந்து அணி சேஸிங் கனவிலிருந்து சற்று பின்னோக்கி தள்ளச் செய்தது. சேஸ் செய்துவிடலாம் என எண்ணி களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் பின்னடைவைச் சந்தித்தனர். 4வது நாள் முடிவில் 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, இன்று காலை ஆட்டம் தொடங்கி, 19 ரன்களைச் சேர்பதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஸ்டோக்ஸ், ஸ்மித் நங்கூரம் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம் ஸ்மித் இருவரும் 7வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பந்து தேய்ந்து, மென்மையாக மாறிவிட்டதால், எதிர்பார்த்த ஸ்விங்கும், வேகமும் கிடைக்காததால் பேட்டர்கள் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்ததால், ரன்களை இங்கிலாந்து பேட்டர்கள் வேகமாகச் சேர்த்தனர்.மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது. ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்ய சுந்தர், ஜடேஜாவை மாறி, மாறி கேப்டன் கில் பயன்படுத்தினார். இதில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் இருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை கில் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது. ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பிவிடுவார் என்பதால் இவருக்கு குறிவைத்து கில் செயல்பட்டு பந்துவீச்சை உணவு இடைவேளைக்குப்பின் மாற்றினார். வாஷிங்டன் திருப்புமுனை பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES படக்குறிப்பு, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார் உணவு இடைவேளை முடிந்துவந்தபின், மீண்டும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் 33 ரன்கள் சேர்த்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டு ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு திரும்பியது. 7-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வோக்ஸ் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 பந்துகளில் அரைசதம் அடித்தபின் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுன்ஸராக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டபோது, அது சிராஜிடம் கேட்சானது. வோக்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்கமே ஆட்டம் மொத்தமும் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித், கார்ஸ் களத்தில் இருந்தனர். ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஆகாஷ் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் சற்று ஸ்லோவர் பந்தாக ஆப்சைடு விலக்கி வீசினார். இதை கணிக்காத ஸ்மித் தூக்கிஅடிக்கவே, பேக்வார்ட் ஸ்குயரில் நின்றிருந்த சுந்தரிடம் கேட்ச் கொடுத்து 88 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 8வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆகாஷ் தீப் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையாக இருந்தார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGE படக்குறிப்பு, ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித் சிராஜின் அற்புதமான கேட்ச் இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. கார்ஸ், டங் இருவரும் களத்தில் இருந்தனர். பிரசித், ஜடேஜா மாறி, மாறி பந்துவீசியும் இருவரும் சளைக்காமல் ஆடினார். ஒரு கட்டத்தில்பேட்டர்களுக்கு நெருக்கடி தரும்வகையில் ஸ்லிப்பில், மிட்விக்கெட்டில் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தி ஜடேஜா பந்துவீசினார். ஜடேஜாவின் வியூகத்துக்கு பலன் கிடைத்து. ஜடேஜாவீசிய பந்தை டங் தட்டிவிட, மிட்விக்கெட்டில் நின்றிருந்த சிராஜ், அற்புதமாக டைவ் செய்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது. அடுத்ததாக பஷீர் களமிறங்கி, கார்ஸுடன் சேர்ந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்த ஆகாஷ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் பந்துவீச்சில் சற்று திணறிய கார்ஸ், திடீரென பெரிய ஷாட்டுக்கு முயன்று பந்தை தூக்கி அடித்தார். ஆனால் சிராஜ் பந்தை பிடிக்கும் முயற்சியில் தவறாக கணித்ததால் கேட்சை தவறவிட்டார். வெற்றிக்கான கேட்ச் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் ஜடேஜா அடுத்து பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா பந்துவீச்சில் பஷீர் கால்காப்பில் வாங்கிய பந்தை கேட்ச்பிடித்தபோது நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் டிஆர்எஸ் முறையீட்டில் பந்து பேட்டில் படவில்லை, கால்காப்பில் மட்டுமே பட்டது எனத் தெரியவந்ததால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதன்பின்பும், ஜடேஜா, ஆகாஷ் இருவரும் மாறி மாறி பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக ஆகாஷ் தீப் வீசிய 64வது ஓவரில் அந்த வெற்றி விக்கெட் விழுந்தது. ஆகாஷ் வீசிய பந்தை கார்ஸ் தூக்கிஅடிக்க கேப்டன் கில் கேட்ச் பிடிக்கவே இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. வெற்றியின் நாயகர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அரைசதம், ஷுப்மன் கில் இரட்டை சதம், ஜடேஜா அரைசதம், 2வது இன்னிங்ஸில் ராகுலின் அரைசதம், கில்லின் 2வது சதம், ரிஷப்பந்த் அரைசதம், ஜடேஜாவின் 2வது அரைசதம் என பேட்டிங்கில் முடிந்தவரை பங்களிப்பு செய்தனர். பந்துவீச்சில் பும்ரா இல்லாத நிலையில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது உண்மையில் பாராட்டுக்குரியது. முதல் இன்னிங்ஸில் சிராஜ் எடுத்த இங்கிலாந்து மண்ணில் முதல் 5 விக்கெட், ஆகாஷ் தீப்பின் 4 விக்கெட். 2வது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் எடுத்த முதல் 6 விக்கெட், சிராஜ், வாஷிங்டன் விக்கெட் ஆகியவை வெற்றிக்கு துணையாக இருந்தன. 39 ஆண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES அதிலும் ஆகாஷ் தீப் வெற்றிக்கான திருப்புமுனையை இரு இன்னிங்ஸிலும் வழங்கினார் என்பதை மறுக்க இயலாது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் பெற்றார். 1986ம் ஆண்டு இதே பிர்மிங்ஹாம் மைதானத்தில் சேத்தன் சர்மா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்குப்பின் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். அன்று காபா, இன்று பிர்மிங்ஹாம் 2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் முதல்முறையாக இந்திய அணி வரலாற்று பெற்றி பெற ஷுப்மன் கில், ரிஷப் பந்த், சிராஜ் ஆகிய 3 பேரும் முக்கிய காரணமாக இருந்தனர். இன்று எட்ஜ்பாஸ்டனில் புதிய சரித்திரத்தை எழுதவும் இந்த 3 வீரர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப்பின் முதல்முறை 6 விக்கெட், ஒட்டுமொத்த 10 விக்கெட் முக்கியமாக இருந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 2வது போட்டியிலேயே அந்நிய மண்ணில் கில் வெற்றி தேடித்தந்துள்ளார். இதில் கேப்டன் கில்லின் பேட்டிங் பங்களிப்பு இரு டெஸ்ட் போட்டிகளிலும் மகத்தானது. முதல் போட்டியில் சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், சதம் என 430 ரன்கள் குவித்து முழுமையான உழைப்பை வழங்கினார். அதேபோல ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், 2வது இன்னிங்ஸில் விரைவாக அடித்த அரைசதம், சிராஜ் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மண்ணில் எடுத்த 6 விக்கெட், 2வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் என 7 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் சரித்திரம் படைக்க உதவினர். பிர்மிங்ஹாமில் புதிய வரலாறு பிர்மிங்ஹாமில் இதுவரை 8 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் பிர்மிங்ஹாமில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது. நூறாண்டுகளாக பிர்மிங்ஹாமில் கிரிக்கெட் விளையாடியும் முதல் வெற்றிக்காக தவம் கிடந்த நிலையில் நூறாண்டுகளுக்குப்பின் கிடைத்த முதல் வரலாற்று வெற்றி, கொண்டாடப்பட வேண்டிய வெற்றியாகும். இந்த நாள் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக அமைந்திருக்கிறது. சீனியர்கள் இல்லாமல் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இளம் வீரர்கள் வரலாற்று வெற்றி தேடித்தந்துள்ளனர். இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்குள் இருக்கும் இளம் வீரர்கள், 50 டெஸ்ட் போட்டியில்கூட ஆடாத அனுபவம் குறைந்தவர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் வென்றது உண்மையில் வரலாற்று வெற்றியாகும், கில் கேப்டன்ஷிப் ஏற்று கிடைக்கும் முதல் வெற்றியாகும். இங்கிலாந்துக்கு மரணஅடி பாஸ் பால் உத்தியைக் கையாண்டு விளையாடியது முதல், இங்கிலாந்து அணி டிரா என்றாலே என்ன என்று கேள்வி கேட்கும் விதத்தில் ஆடியது. 23 டெஸ்ட்களில் 15 போட்டிகளை வென்றிருந்தது, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், பாஸ் பால் ஆட்டத்தை ஆடும் முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இளம் இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். டாஸ் வென்று முதல் டெஸ்டில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்த டெஸ்டிலும் 2வதுமுறையாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஸ்டோக்ஸின் முடிவு தவறானது, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பாது என்பதை இளம் இந்திய அணி நிரூபித்துள்ளது. சமநிலையில் தொடர் இதன் மூலம் சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி வரலாற்று சிறப்பு மிகுந்த லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3r9jyxxl99o
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
நிகிதா புகாருடன் முரண்படும் முதல் தகவல் அறிக்கை - காவலாளி வழக்கில் என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பெயரில் மாவட்ட நீதிபதியின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், வரும் 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது வரை யாரெல்லாம் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்? படக்குறிப்பு, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முதல் மூன்று நாட்கள் நடந்த விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார். இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடமும் விசாரணை நடத்தினார். முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது? படக்குறிப்பு,திருப்புவனம் காவல் நிலையம் நிகிதாவின் புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக அஜித் குமார் உட்பட ஐந்து இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்தது தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நேரமும் வேறு வேறாக உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், " முதல் தகவல் அறிக்கையில் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா கொடுத்த புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்." 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை சாத்தான்குளம் முதல் திருப்புவனம் வரை - காவல் அத்துமீறல்கள் ஏற்படுத்தும் அரசியல் எதிரொலி '44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன? முதல் தகவல் அறிக்கையில் குளறுபடிகளா? படக்குறிப்பு, அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. நிகிதா 27ம் தேதி இரவு அளித்த பேட்டியில். காவலாளி சீருடையில் இருந்த அஜித் குமார் , தனது தாய்க்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தற்காக ரூ.500 கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்ததாகவும், கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் காரில் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நிகிதா அளித்த புகார் மனுவில் உயிரிழந்த அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்படவில்லை என்கிறார் கார்த்திக் ராஜா. தொடர்ந்து பேசிய அவர். "நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் புகார் மனு அளித்துள்ளார்." "எனவே முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் அஜித் குமார் கொல்லப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்புவனம் காவல்துறையினரால் தாமதமாக அவசரகதியில் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையாக இதனை நான் பார்க்கிறேன்." என்று கூறினார். இந்த வழக்கில் நிகிதாவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். "உயிரிழந்த அஜித் குமார் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் குற்ற பின்னணி இல்லை, ஆனால் புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அஜித்குமார் மரணத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாற்றி எதிரியாக நிகிதாவை சேர்க்க வேண்டும்" என்றார். சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துள்ளனரா? பட மூலாதாரம்,HENRI TIPHAGNE படக்குறிப்பு, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர். "நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும் அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது." "முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அஜித் குமாரை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றிருக்கிறார்." "காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்." என்று தெரிவித்தார் நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறிய டிஎஸ்பி பட மூலாதாரம்,NIKITHA படக்குறிப்பு, நிகிதா திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மானாமதுரை டி.எஸ்.பி சிறப்பு தனிப்படை போலீசாரை அழைத்து அஜித் குமாரை விசாரிக்குமாறு ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட அஜித் குமாரை காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் பிரதாப் விடுப்பில் இருந்தால் தனிப்படை தலைமைக் காவலர் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை அழைத்து அஜித் குமார் தொடர்பாக தகவல்களை அளித்ததாக அஜித் குமார் இறப்பு தொடர்பாக தனிப்படை தலைமைக் காவலர் கண்ணன் அளித்துள்ள புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி அஜித் குமாரை விசாரிக்க அனுமதி அளித்தன் அடிப்படையில் அஜித்குமாரை 27ஆம் தேதி இரவு கடுமையாக தாக்கியுள்ளனர் என்கிறார் ஹென்றி திபென் அஜித் குமார் நகையை தான் திருடவில்லை எனச் சொல்வதாக தலைமை காவலர் மீண்டும் டிஎஸ்பியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம் அஜித் குமாரை "நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறியுள்ளார்". தொடர்ந்து பேசிய அவர், "டி.எஸ்.பி உத்தரவின் பெயரில் சம்மன் அளிக்காமல் அருண்குமார், அஜித் குமார் மற்றும் அவரின் தம்பி நவீன் குமாரையும் விசாரணைக்கு அழைத்து வந்து கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் 28ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நிகிதா கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது." "அப்படியெனில் சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே நிகிதாவின் முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது." என்றார். "காவல் அதிகாரிகளை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை?" ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்ட திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது" என அவர் விவரித்தார். உடற்கூராய்வுக்கு அனுப்ப ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 29ஆம் தேதி மாலை வரை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது" என்றார். "2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை" என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939xwd2z69o
-
தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
Published By: DIGITAL DESK 2 06 JUL, 2025 | 05:51 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால திட்டமிடல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசியலமைப்பினால் உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக செயற்படுகிறோம். 09 மாத காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் என்று மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தி முடித்தோம். இந்த தேர்தல்களில் ஒருசில குறைபாடுகளை அவதானித்துள்ளோம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள், மற்றும் அமைச்சரவை உப குழுக்களிடம் வலியுறுத்தி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். தேர்தல் முறைமையில் நாட்டு மக்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடக்கிறது. வாக்களித்து விட்டோம் என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலானவர்கள் உள்ளதை அவதானிக்க முடிகிறது. தேர்தல் முறைமையில் மக்கள் தொடர்ச்சியாக அவதானம் செலுத்த வேண்டும். அப்போது தான் சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் என்றார். https://www.virakesari.lk/article/219336
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை : இனியபாரதி, தவசீலன் ஆகிய இருவர் சிஜடியினரால் கைது Published By: VISHNU 06 JUL, 2025 | 10:25 PM அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் திருக்கோவில் வைத்தும் அவரது சகாவான சசீதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் இருவரையும் கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்று திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த 2007-6-28 ம் திகதி விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பிரயாணித்த போது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவியார் படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த விசாரணை கடந்தகால அரசாங்கத்தினால் கிடப்பில் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்து முறைப்பாடு தொடர்பாக அவரது மனைவியர் சிஜடி யினரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர்கள் விசாரணையினை மேற்கொண்டுவந்த நிலையில் இதனுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இனிய பாரதியை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவில் அவரது வீட்டில் வைத்து கைது செய்ததுடன் அவருடைய சகாவான மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சசீதரன் தவசீலன் சந்திவெளியில் அவரது வீட்டில் வைத்து சிஜடி மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டிவருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219343
-
உலகில் முதல் நாடாக ஆப்கனில் தாலிபன் அரசுக்கு ரஷ்யா அங்கீகாரம் - இந்தியா என்ன செய்யப் போகிறது?
பட மூலாதாரம்,RUSSIAN FOREIGN MINISTRY/HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக செயல்படும் அமிர் கான் முட்டாகி கட்டுரை தகவல் அபே குமார் சிங் பிபிசி செய்தியாளர் 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசை அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது ரஷ்யா தாலிபன் காபூலைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பிறகான நான்கு வருடங்களில் இது அவர்களது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் நகர்வு, இதுவரை தாலிபன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புவதாக ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தெரிவித்தார். ரஷ்யாவின் முடிவை துணிச்சலான முடிவு என அவர் விவரித்தார். இந்த முடிவால், "எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் கட்டமைப்பு" ஆகியவற்றில் ஆதாயம் இருப்பதாக கருதுவதாகவும். பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. "இதைப் போன்ற நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் மக்களை மட்டுமல்லாது, மொத்த உலகின் பாதுகாப்பை அபாயத்திற்கு உள்ளாக்குகிறது," என ஆப்கானிஸ்தான் முன்னாள் எம்.பி. ஃபௌசியா கூஃபி தெரிவித்தார். அதே நேரம், 'இது சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அரசை அங்கீகரிக்கிறது. இந்த ஆட்சி பெண்களுக்கு எதிரானது மட்டுமல்லாது தொடர்ந்து பொது உரிமைகளை நீக்கிவருகிறது,' என ஆப்கான் வுமென் பொலிடிக்கல் பார்டிசிபேசன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது. பெண்கள் உரிமைகளை மதிப்பதாக தாலிபன் அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த உரிமைகள் ஆப்கான் பண்பாடு மற்றும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றிய அவர்களது சொந்த விளக்கத்தை பொறுத்தது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்கள் பெரும்பாலான பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. கூடுதலாக பெண்கள் தனியாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் உள்ளன; அவர்கள் ஒரு ஆண் உறவினர் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பட மூலாதாரம்,SEFA KARACAN/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்ட பின்னர், மாஸ்கோவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தாலிபன் இடைக்கால அரசின் கொடி பறந்தது. (ஜூலை 4, 2025) இப்போதுவரை சர்வதேச அரங்கில் தாலிபன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சர்வதேச அளவில் உருவாகியிருக்கும் ஒத்த கருத்தில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு பிரிவை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தாலிபனுக்கு முறைப்படியான அங்கீகாரம் அளிக்காமல், குறுகிய அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் ஒருவருக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இதுவரை இருந்தது. ஆனால் நேரடி அங்கீகாரம் அளித்ததன் மூலம் ரஷ்யா இந்த சிந்தனைக்கு சவால் விடுத்துள்ளது. வாஷிங்டனை சேர்ந்த சிந்தனைக்குழுவான வில்சன் மையத்தைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர் மைக்கேல் கூகல்மேன், "ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா இருக்கிறது. சீனா அடுத்ததாக இருக்கலாம். இப்போது வரை நாடுகள் தங்களது சொந்த நலனுக்காக தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் ஒரு அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சர்வதேச ஒருமித்த கருத்தாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கருத்து தற்போது உடைந்து வருவதாக தெரிகிறது." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. "ஆப்கானிஸ்தான் எங்களது அண்டை நாடு மற்றும் பாரம்பரிய நட்பு நாடு. ஆப்கானிஸ்தான் சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதை சீனா எப்போதும் நம்பி வந்திருக்கிறது," என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இருக்கும் ராஜதந்திர சவால் பட மூலாதாரம்,WAKIL KOHSAR/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, 2021 முதல் ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் பல வேலைகளை செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ரஷ்யாவின் இந்த முடிவை புரிந்துகொள்ள நாம் முதலில் ரஷ்யா மற்றும் சீனா இடையேயான தொடர்பை பார்க்கவேண்டும் என்கிறார் சர்வதேச உறவுகள் விவகார நிபுணர் ஸ்வஸ்தி ராவ். "சீனா ஏற்கனவே தாலிபனுடன் நேரடித் தொடர்பில் உள்ளது. அதற்கு அங்கு பல முதலீடுகள் உள்ளன. இப்போது முறையான அங்கீகாரம் அளித்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. இது ஒரு உத்தி மாற்றம் ஆகும்." என அவர் தெரிவித்தார். 1979ஆம் ஆண்டில், ரஷ்யா ராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானில் தலையிட்டு, பல பத்தாண்டுகள் அந்த நாட்டை உள்நாட்டு போர் மற்றும் நிலையற்றதன்மையில் சிக்கவைத்தது. ஆனால் மூஜாஹிதீன் போராட்டக்காரர்களுடன் சோவியத் யூனியன் தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா போன்ற நாடுகள் இந்த போராட்டக்காரர்களுக்கு பெரிய அளவில் பொருளாதார மற்றும் ராணுவ உதவி அளித்தன. ஆனால் 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்கா அளித்த ஸ்டிங்கர் ஏவுகணைகள் காரணமாக சோவியத்தின் வான் ஆற்றல் பலவீனமடைந்து, ராணுவத்தை திரும்பப் பெறுவது கோர்பசேவின் தலைமையில் 1988ஆம் ஆண்டு தொடங்கியது. 2021ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறிய பின்னர், தாலிபன் ஆட்சியை மீண்டும் பிடித்தது. இந்த முறை சர்வதேச சூழல் மாறிவிட்டது. இப்போது ரஷ்யா தாலிபனை தனது 'பயங்கரவாத பட்டியலில்' இருந்து நீக்கிவிட்டது. இருநாடுகளிடையேயான வர்த்தக மற்றும் ராஜாங்க உறவுகளைத் தீவிரப்படுத்தியது. "ஐஎஸ் கோரசனை (சன்னி முஸ்லிம் கடும்போக்கு பிரிவு ) கட்டுப்பாட்டுக்குள் வைக்க ரஷ்யா பல்வேறு வகையான அழுத்தங்களை அளிக்கிறது, ஆனால் தாலிபனுடன் நேரடியாக பேசுவதும் அவசியம். இதில் பயங்கரவாத எதிர்ப்புக் கோணமும் உள்ளது." என்கிறார் ஸ்வஸ்தி ராவ். "காவ்கசஸில் (கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவை உள்ளடக்கிய பகுதியை குறிக்கும் சொல்) ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்துள்ளது. இரானும் பலவீனமாக உள்ளதுடன், சிரிய தளமும் அபாயத்தில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் ரஷ்யாவுக்கு ஒரு வலுவான தளமாக மாறலாம்." யுக்ரேன் போர் காரணமாக ரஷ்யாவின் சர்வதேச அந்தஸ்து வலுவிழந்திருப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா புதிய தளங்களை பார்ப்பதாக அவர் நம்புகிறார். இதில் "யுக்ரேன் போருக்குப் பின் ரஷ்யா, சீனாவை விட சிறிய பங்காளியாகிவிட்டதால் ரஷ்யாவுக்கு சீனாவின் ஆதரவும் கிடைக்கும்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என்கிறார் அனுராதா சினாய் ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடிஸின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமானவர் அனுராதா சினாய், "தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு" என்கிறார். மேலும் பேசிய அவர், "ரஷ்யா போன்ற நாடுகள் ஏன் அங்கீகாரம் அளிக்கின்றனர்? தாலிபன்தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என அவர்களுக்கு தெரியும். உங்களால் அவர்களை வெளியிலிருந்து மாற்றமுடியாது. அது உள்ளேயிருந்து ஒரு விவாதம் அல்லது இயக்கம் ஏற்பட்டால்தான் மாறமுடியும்." என்றார் அவர் மேலும் அவர், "இதனால்தான் தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவரகளது உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாமல் இருக்கவும் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விரும்புகின்றன. இதுதான் அவர்களது கொள்கை" எனத் தெரிவித்தார். தாலிபனுடனான ரஷ்யாவின் நட்பு, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் ஏற்பட வாய்ப்புள்ள நிலையற்றதன்மையிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி என அவர் நம்புகிறார். அதே போல் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானுக்கு குறுக்கே குழாய் அமைப்பது அல்லது வேறு ஏதேனும் பிராந்திய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அதில் தாங்கள் பங்கேற்பதை உறுதி செய்ய ரஷ்யர்கள் விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவிக்கிறார். இந்தியா தாலிபானுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கவில்லை. இதுவே இந்தியாவின் பாரம்பரிய கொள்கையாக இருந்துள்ளது என விவரிக்கிறார் ஸ்வஸ்தி ராவ். "இதுவே உலகம் முழுவதும் இந்தியாவின் பாணியாக எப்போதும் இருந்திருக்கிறது. எனவே அது எப்படி திடீரென தாலிபனுக்கு ராஜ்ஜிய அங்கீகாரத்தை வழங்கும்? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவைவும் பராமரிக்க விரும்புவதால் இந்தியா இதைச் செய்யாது," என அவர் தெரிவித்தார். இந்தியாவின் இந்த முன்னெச்சரிக்கையின் பின், மேற்கத்திய நாடுகளுடன் அதற்கு இருக்கும் விரிவான வர்த்தக மற்றும் ராஜாங்க நலன்கள் உள்ளன. "அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் அதன் உறவுகளை பராமரிக்க விரும்புவதால், இந்தியா சற்று தயங்குகிறது." என்கிறார் அனுராதா சினாய். இந்தியா அதிகாரப்பூர்வமாக தாலிபனை அங்கீகரிக்காவிட்டாலும், ஆப்கானிஸ்தானுடன் 'அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு கொள்வது' என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சர் தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசி அது தொடர்பாக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதது இது முதல்முறை. அந்த தொலைபேசி அழைப்பின் போது, பஹல்காம் தாக்குதலுக்கு முட்டாகி கண்டனம் தெரிவித்ததை எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இரு நாடுகளும் ஒரு அறிக்கையை வெளியிட்டன. " இந்தப் பேச்சுவார்த்தையில், ஆப்கான் மக்களுடனான எங்களது பாரம்பரிய நட்பு மற்றும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவைகளுக்கு எங்களுடைய தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை குறிப்பிடப்பட்டன. இந்த ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிகள் மற்றும் ஆதாரங்கள் விவாதிக்கப்பட்டன." அதே நேரம், "ஆப்கானிஸ்தான் குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெளலவி அமிர் கான் முட்டாகி மற்றும் இந்திய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் ராஜாங்க உறவுகள் ஆகியவற்றின் மீது இந்த உரையாடல் கவனம் செலுத்தியது," என ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு உருவாக்கப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்தியா மற்றும் தாலிபன் இடையே தொடர்புகள் அண்மை மாதங்களில் அதிகரித்துள்ளது. ஜனவரியில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமிர் கான் முட்டாகியை துபையில் சந்தித்தார். "அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு வைத்துக்கொள்வது என்ற கொள்கையை எதிர்காலத்திலும் இந்தியா தொடர்ந்து பின்பற்றலாம். ஆம் இந்த தொடர்புகள் ஆழமாவதை அது நிச்சயம் உறுதிசெய்யும்." என்று இந்த முன்னேற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் ஸ்வஸ்தி ராவ். ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு ஏன் முக்கியமானது? 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தாலிபன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியபோது, அது ராஜாங்க மற்றும் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது இந்தியா, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பல பில்லியன் டாலர்கள் அனைத்தும் வீணாகிவிடும் என தோன்றியது. சாலைகள், எரிசக்தி, அணைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட ஆப்கானிஸ்தானில் 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் இந்தியா கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்தியா, ஆப்கான் ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சி அளித்தது, ஆயிரக்கணகான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்ததுடன், அங்கு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது. ஆனால், "இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு சேவை அதிகாரி ஒருவர் மூலமாக தாலிபன்களுடனான தொடர்ப்பில் இருக்கிறது." என ஆப்கானிஸ்தானுக்கான இந்திய முன்னாள் தூதர் ஜெயந்த் பிரசாத் கடந்த ஆண்டு ஜனவரியில் பிபிசி செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸிடம் தெரிவித்திருந்தார். "ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு அதன் மூலோபாய ஆழம் தேவை. இந்தியா பல வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் இந்தியாவால் கட்டப்பட்டது. இந்தியாவின் இணை இணைப்புத் திட்டங்கள் பாகிஸ்தானை தவிர்த்துவிட்டுத்தான் முன்னோக்கி செல்லமுடியும் என்பதால் இந்தச் சூழ்நிலை முக்கியமானது," என விளக்குகிறார் ஸ்வஸ்தி ராவ். பல விவகாரங்களில் குறிப்பாக தெரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) விஷயத்தில் பாகிஸ்தானுடன் தாலிபன் ஒத்துப்போவதில்லை என்று கூறியவர், "இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இந்தியா முயற்சித்து வந்திருக்கிறது." என்றும் தெரிவித்தார். "ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு எப்போதுமே நலன் சார்ந்த முரண் இருந்ததில்லை. பல வளர்ச்சி திட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியுள்ளது." என்று தெரிவிக்கிறார் அனுராதா சினாய். அவரின் கூற்றுப்படி, "தாலிபன் அரசும் ஒப்பீடு அளவில் இந்தியாவுடன் மென்மையாக இருந்திருக்கிறது. ஆப்கான் குடிமக்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவிற்கு வருகின்றனர். இதுவும் இரண்டு நாடுகளிலும் ஒரு நேர்மறையான தோற்றத்தைப் பராமரிக்கிறது." இதைப் போன்ற ஒரு சூழலில், ராஜாங்கம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என மூன்று கோணங்களிலும் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு முக்கியமானது என நிபுணர்கள் நம்புகின்றனர். இப்போது என்ன? பட மூலாதாரம்,MONEY SHARMA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இந்தியாவின் யுக்தி மிகவும் யோசனையுடனும், மெதுவாகவும் நகரும் என நிபுணர்கள் நம்புகின்றனர் ரஷ்யா தாலிபனை அங்கீகரித்து, சீனாவும் ஏற்கனவே தாலிபனுடன் ஆழமான வணிக மற்றும் அரசியல் உறவுகளை கட்டமைத்து வரும் சூழ்நிலையில் இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். ஒன்று அங்கீகரிக்காமல் தொடர்பு கொள்ளும் கொள்கையை மேலும் சிறிது காலம் தொடரவேண்டும், அல்லது முறையான அங்கீகாரம் வழங்குவதை நோக்கி மெதுவாக நகரவேண்டும். ஸ்வஸ்தி ராவ் இதைப்பற்றி கூறுகையில், "முழுமையான தூதரக அங்கீகாரம் அளிக்கும் நாளில் இந்தியா தன்னையே ஒரு பெட்டியில் பூட்டிக்கொள்ளும்" எனத் தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி, அனைத்து வாய்ப்புகளையும் திறந்து வைத்திருப்பதுதான் இந்தியாவின் கொள்கையாக இருக்கும். "சமநிலைப்படுத்துவதுதான் இந்தியா எடுக்கக்கூடிய அடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். அதாவது சீனாவும், பாகிஸ்தானும் அங்கு முழு ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக இந்தியா தாலிபனுடன் தனது தொடர்பை அதிகரிக்கும், ஆனால் அது உடனடியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது," என்கிறார் ஸ்வஸ்தி ராவ். "இந்தியா தனது உத்தியை சார்பற்றதாக வைத்திருக்கவேண்டும். பாகிஸ்தான் இதைச் செய்தால் இந்தியா இதை செய்யவேண்டும் என்பதாகவோ, ஐரோப்பா அழுத்தம் தருவதால் இந்தியா இதைச் செய்யவேண்டும் என்பதாகவோ இருக்கக் கூடாது." என்கிறார் அனுராதா சினாய். இந்தியா தாலிபனுடன் பேச்சுவார்த்தையை படிப்படியாக அதிகரிக்கவேண்டும் என்பதுடன் அங்கு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியா பெரிய பங்காற்றவேண்டும் என்றால் ஒருநாள் அது அங்கீகாரம் அளிக்கவேண்டியிருக்கும் என அவர் நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c36x48rzd8no
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி ரயில், நாளை (7) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி ரயில் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு முன்பு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கான யாழ் தேவி ரயிலின் புதிதாக புறப்படும் நேரத்தை காலை 6.40 மணியாக மாற்றியமைக்க வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmcrj0vuv00tjqp4k7zqtg8ob
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி கைது பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவிலில் வைத்து கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இந்த நிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இனியபாரதியை குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவதினமான இன்று காலை திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்து அம்பாறைக்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmcrhrjg100thqp4kfp26hu6f
-
அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு Published By: DIGITAL DESK 3 06 JUL, 2025 | 01:05 PM அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. அதனுடன் பலத்த காற்றுடன் கூடிய புயலும் வீசி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் பலியானார்கள் இதனையடுத்து ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 51 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 15 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. 27 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என டெக்சாஸ் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை துறையின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார். இதுவரை 850 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, நானும் மெலனியாவும், இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய குடும்பத்தினர் அனைவருக்காகவும் வேண்டி கொள்கிறோம் என அவருடைய சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார். எனினும், கனமழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஜேசன் ருன்யென் கூறியுள்ளார். அது நேற்றிரவு மட்டுமின்றி இன்று காலையும் தொடரும் என அவர் கூறியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பொறுப்பு படையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219304
-
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
06 JUL, 2025 | 04:20 PM யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை. அங்கு தாயினதும், சேயினதும், இளைஞர் - யுவதிகளதும் பெரியவர்களினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பாடசாலை செல்கின்ற சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் புதைக்கப்பட்டிருக்கின்றான். இவை அனைத்தும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற செயல். இந்த செயல்களை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கே இந்த பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும். இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த விடயமாக கொண்டு செல்லப்பட்டு சரியான நீதி கிடைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/219318
-
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்
06 JUL, 2025 | 04:23 PM செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகளும் இணைந்து பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும். ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொண்ட நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமைந்தது. செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள 100 க்கு மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/219319
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக் கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு Published By: VISHNU 06 JUL, 2025 | 08:07 PM செம்மணியில் ஞாயிற்றுக்கிழமை (06) மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (6) மதியம் வரையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (06) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 47 எலும்பு கூட்டு தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் 02 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219339
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 06 JUL, 2025 | 03:45 PM செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (06) முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன. குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (04) தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை (06) ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதிலும் எலும்புகள் காண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/219308
-
இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
திருகோணமலையில் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 06 JUL, 2025 | 12:30 PM இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க . செல்வராஜா (சுப்ரா) கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/219297
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
Published By: DIGITAL DESK 3 06 JUL, 2025 | 12:23 PM கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அந்தவகையில், இன்று அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர். குறித்த கவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219298
-
நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா
“புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” - தலாய் லாமா 06 JUL, 2025 | 10:14 AM தர்மசாலா: புத்த மதத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்தின் புத்த மத தலைவரான தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் நாளை( ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா, “அவலோகிதேஸ்வராவின் ஆசிகளை நான் பெற்றதாகவே உணர்கிறேன். இதுவரை நான் எனது பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். நாம் மேலும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தைப் பருவம் முதலே எனக்கு அவலோகிதேஸ்வராவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. பவுத்தத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன. புதிய தலாய் லாமா சலசலப்பு - திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்" என தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு , “அடுத்த தலாய் லாமா யார் என்பதை அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவை பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும் நடைமுறை மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதை தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜு-வின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது” என்று தெரிவித்தது. https://www.virakesari.lk/article/219274
-
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது உண்மையா? ஒரு வரலாற்று ஆய்வு
பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, ரைட் சகோதரர்கள், சாண்டோஸ் டுமோன்ட் மற்றும் 14-பிஸ் விமானத்தின் புகைப்படம். கட்டுரை தகவல் கமிலா வெராஸ் ப்ளும்ப் பிபிசி நியூஸ் பிரேசில் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பது மிகவும் எளிமையான கேள்வியாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதற்கான பதிலைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல. விமானத்தை கண்டுபிடித்தது உண்மையில் யார் என்கிற கேள்வி நூறு ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பழைய சர்ச்சையின் வேர். சைக்கிள் மெக்கானிக்குகளாகவும் சுயமாகக் கற்றுக்கொண்ட பொறியாளர்களாகவும் இருந்த ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோரை விமானப் பயணத்தின் உண்மையான 'தந்தையர்' எனப் பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர். 1903 ஆம் ஆண்டில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவர்கள் ரைட் சகோதரர்கள். ஆனால் முதலில் விமானத்தை இயக்கியவர்கள் என்பதற்கான உண்மையான பெருமை, ஆல்பர்டோ சாண்டோஸ் டுமாண்டுக்குச் செல்ல வேண்டும் என்று பல பிரேசிலியர்கள் கூறுகிறார்கள். ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சாண்டோஸ், 1906 இல் பாரிஸில் முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். இது சர்வதேச விமானக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. அப்படியானால் எது உண்மை? பட மூலாதாரம்,NATIONAL LIBRARY OF FRANCE படக்குறிப்பு, சாண்டோஸ் டுமாண்ட் தனது 14-பிஸ் விமானத்தில் பாரிஸில் பறந்தார். சாண்டோஸ் டுமாண்ட்: மக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட முதல் விமானப் பயணம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு இயந்திரத்தை உருவாக்க பலரும் தீவிரமாக முயற்சி செய்தனர். அந்தக் காலகட்டத்தில், விமானங்களை உருவாக்குவதற்கு நம்பிக்கையளிக்கும் நகரமாக பாரிஸ் மாறியது. அங்கு நல்ல பொறியியல் கல்லூரிகள் இருந்தன. உலோகவியல், இயந்திரங்கள், இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பணமும் எளிதாகக் கிடைத்தது. "அந்த நேரத்தில், அது விரைவில் நடந்தேறக்கூடிய ஒன்றாகத் தான் தெரிந்தது," என்று பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜீன்-பியர் பிளே கூறுகிறார். அதேபோல், முதல் விமானமாக எதைக் கருதுவது என்பதை விமான நிபுணர்கள் முடிவு செய்தனர். எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல் (கவண் போன்ற சாதனங்கள் இல்லாமல்) விமானம் பறக்க வேண்டும் என்றும், மக்கள் அதை தங்கள் கண்களால் நேரில் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்தனர். 1906 நவம்பர் 12 அன்று, சாண்டோஸ் டுமாண்ட் இவை அனைத்தையும் செய்தார். பாரிஸில் ஒரு கூட்டத்தின் முன்னிலையில் தனது 14-பிஸ் விமானத்தை 220 மீட்டர் தூரம் பறக்கவிட்டார். அடுத்த ஆண்டு, அவர் 'டெமோயிசெல்லே' என்ற மற்றொரு புதிய விமானத்தை வடிவமைத்தார். இது தான் உலகின் முதல் இலகுரக மற்றும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட விமானம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் விமானம் டெமோயிசெல். ஆதாரங்களை மாற்றுதல் ஆனால் 1908 ஆம் ஆண்டில், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, முதன்முதலில் தாங்கள் விமானத்தில் பறந்ததாக ரைட் சகோதரர்கள் கூறினர். இதைக் கேட்டு பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பறக்கும் கிளப்புகளுக்கு இடையே கடிதங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பு இருந்து வந்தது. தரையிலிருந்து நீண்ட தூரம் பறக்கக்கூடிய முதல் விமானத்தை உருவாக்க ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் ரைட் சகோதரர்களைப் பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், தங்களது காப்புரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகக் காத்திருந்ததாகவும், தங்கள் யோசனையை யாராவது திருடிவிடுவார்கள் என்று பயந்ததாகவும் ரைட் சகோதரர்கள் கூறினர். ஆனால் உண்மையில், 1903-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் அவர்களது ஃப்ளையர் பறப்பதை ஐந்து பேர் மட்டுமே பார்த்தார்கள். ஒரு தந்தி செய்தி, சில புகைப்படங்கள் மற்றும் ஆர்வில் ரைட்டின் நாட்குறிப்பு போன்ற மிகக் குறைந்த ஆதாரங்கள் மட்டுமே அதனைக் குறிப்பிட்டுள்ளன. ஆர்வில் தனது நாட்குறிப்பில் அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் இருந்தது என்று எழுதியுள்ளார். அதாவது, அந்த அளவுக்கு காற்று இருந்ததால், விமானத்தால் என்ஜின் இல்லாமல்கூட பறக்க முடிந்திருக்கலாம் என்று பிரேசிலின் வானியல் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரான ஹென்ரிக் லின்ஸ் டி பாரோஸ் போன்ற சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது, இயந்திரம் இல்லாமல் கூட தானாகவே விமானம் பறக்கக்கூடிய அளவுக்கு காற்று பலமாக வீசியது. இருப்பினும், ரைட் சகோதரர்களின் ஆதரவாளர்கள் இதை ஏற்கவில்லை. 14-பிஸ் பாரிஸில் பறப்பதற்கு முன்பே, ரைட் சகோதரர்கள் 1904-05 ஆம் ஆண்டில் விமானத்தின் சிறந்த மாதிரிகளை உருவாக்கிவிட்டதாக அவர்கள் வாதிடுகிறார்கள். பட மூலாதாரம்,LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் முதன்முதலில் 1903 இல் பறக்க முயன்றது. "அன்று காலை (டிசம்பர் 17, 1903) ரைட் சகோதரர்கள், முதல் முறையாக மிகவும் சிறப்பாக பறந்தனர். அதன் மூலம், பிரச்னையைத் தீர்த்துவிட்டதாக அவர்களே உறுதியாக நம்பினர்" என்று கூறுகிறார் ஸ்மித்சோனியனின் தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் பணியாற்றியவரும், ரைட் சகோதரர்களைப் பற்றி பல புத்தகங்களை எழுதியவருமான வரலாற்றாசிரியர் டாம் க்ரூச். "அவர்கள் இன்னும் சில மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது, ஆனாலும் அவர்களது விமானம் கட்டமைக்கப்பட்டு ஏற்கெனவே பறந்து விட்டது," என்றும் அவர் கூறுகிறார். 1908ஆம் ஆண்டு, ரைட் சகோதரர்கள் தாங்கள் தான் முதலில் விமானத்தில் பறந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஒரு பிரசாரத்தைத் தொடங்கும் வரை, இவை அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டதாகத் தோன்றியது. ரைட் சகோதரர்கள் ஐரோப்பாவுக்குச் சென்று, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் 200க்கும் மேற்பட்ட மாதிரி பயணங்களை நிகழ்த்தினர். அதில் ஒரு முறை அவர்கள் 124 கிலோமீட்டர் வரை பயணம் செய்தனர். "அந்த நேரத்தில், ஐரோப்பாவின் அரச குடும்பங்கள் வில்பருடன் விமானத்தில் அமர விரும்பினர். இது ஒரு பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது," என்று பேராசிரியர் பிளே விளக்குகிறார். அதே நேரத்தில், விமானங்கள் குறித்த பிரெஞ்சு ஆரம்பகால நிபுணரான ஃபெர்டினாண்ட் ஃபர்பர் போன்றவர்களும் ரைட் சகோதரர்கள் தான் முதன்மையானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டனர். இவ்வளவு நல்ல கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு விமானத்தை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது என்று அவர்கள் கூறினர். பட மூலாதாரம்,LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரைட் சகோதரர்களின் விமானப் பயணம் பற்றிய செய்தி பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தது. கவண் பயன்பாடு பற்றி எழுந்த விவாதம் ஐரோப்பாவில் காட்டப்பட்ட ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் விமானம் சக்கரங்கள் இல்லாமல் இருந்தது. அதனால், அது பறக்க ஒரு கவணின் (catapult) உதவி தேவைப்பட்டது (இது விமானம் பறக்க உதவுகிறது). இது ஒரு பெரிய விவாதத்துக்குரிய விஷயமாக மாறியது. விமானத்தின் இயந்திரம் போதுமான சக்தி வாய்ந்ததாக இல்லை என்றும், கவண் இருந்ததால் மட்டுமே அது பறக்க முடிந்தது என்றும் விமர்சகர்கள் கூறினர். சிலர், எந்த வகையான தரையிலிருந்தும் விமானம் புறப்படக்கூடிய வகையில் ரைட் சகோதரர்கள் கவணைப் பொருத்தியதாகக் கூறுகின்றனர். சாண்டோஸ் டுமாண்ட், ரைட் சகோதரர்கள் மட்டுமின்றி வேறு சிலரும் தாங்களே முதன் முதலில் விமானப் பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளனர் என்பது தான் இந்தக் கதையின் முக்கியத் திருப்பம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் வசிக்கும் ஜெர்மானியர் குஸ்டாவ் வெய்ஸ்கோப், விமானப் பயணத்தின் ஆரம்பகால முன்னோடியாகவும் இருந்தார். அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மனியைச் சேர்ந்த குஸ்டாவ் வெய்ஸ்கோப் என்பவர் 1901ம் ஆண்டிலேயே விமானப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸும் மார்ச் 1903 இல் விமானம் ஒன்றை ஓட்டியதாக நம்பப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் ஹோவிக் நகருக்கு அருகில், ஜான் குட்மேன் மற்றும் அவரது குடும்பத்தினர் 1871ஆம் ஆண்டு ஒரு கிளைடர் மூலம் மனிதர்களை ஏற்றிச் சென்று, உலகின் முதல் விமானப் பயணத்தை முயற்சி செய்ததாகக் கூறப்படும் சில சான்றுகளும் உள்ளன. அதுவும் எந்த இயந்திர சக்தியும் இல்லாமல், வெறும் கிளைடரிலேயே சென்றதாகக் கூறப்படுகிறது. இன்றும் கூட, அந்த கிளைடரின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் உள்ளது. அதனால்தான் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பதைப் பற்றிய விவாதம் பயனற்றது என்று பல விமான வல்லுநர்கள் நம்புகிறார்கள். "யாரோ ஒருவர் ஒரு நாள் எழுந்து, ஒரு அமைப்பை வரைந்து, 'இது பறக்கும் விமானம்!' என்று சொன்னதால் அது நடக்கவில்லை" என்று ஜேன்'ஸ் ஆல் தி வேர்ல்ட்ஸ் ஏர்கிராஃப்ட்டின் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பால் ஜாக்சன் கூறுகிறார். "டஜன்கணக்கானவர்களின் கூட்டு உழைப்பால் மட்டுமல்ல, மாறாக நூற்றுக்கணக்கானவர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் அது சாத்தியமானது," என்றும் அவர் கூறுகிறார். அங்கீகாரத்தின் கதை சாண்டோஸ் டுமோண்ட், வெய்ஸ்கோப் மற்றும் பல ஆரம்பகால விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பால் ஜாக்சன் கருதுகிறார். "இறுதியில், மதிப்புமிக்க வழக்கறிஞர்களைக் கொண்டவர்கள் தான் பெயர் பெற்றவர்களாக மாறுகிறார்கள்" என்று பால் ஜாக்சன் கூறுகிறார். "சோகமான விஷயம் என்னவென்றால், 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான கண்டுபிடிப்புகளைப் பார்த்தால், அவற்றுக்கான பெருமை பெரும்பாலும் தவறான நபர்களுக்கே வழங்கப்பட்டது," என்கிறார் பால் ஜாக்சன். தொலைபேசியைக் கண்டுபிடித்த பெருமைக்குரிய ஸ்காட்டிஷ் விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் உதாரணத்தை அவர் தருகிறார். இருப்பினும், அது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. உண்மையில், பெல் காப்புரிமை பெற்றிருந்தாலும், உண்மையான கண்டுபிடிப்பு இத்தாலியர் அன்டோனியோ மேயுச்சி (Antonio Meucci) என்பவரால் செய்யப்பட்டதாக அமெரிக்க நாடாளுமன்றம் 2002ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டது. இத்தாலியைச் சேர்ந்த அவர், வறுமையில் வாடியதாகவும், கிரஹாம் பெல்லுடன் ஒரே பட்டறையில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரைட் சகோதரர்களால் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு விமானி க்ளென் ஹாமண்ட் கர்டிஸ். அமெரிக்க விமான வரலாற்றில் முக்கியமான முன்னோடியாகக் கருதப்படும் க்ளென் ஹாமண்ட் கர்ட்டிஸின் உறவினர் தான் மார்சியா கம்மிங்ஸ் என்பவர். 1909ஆம் ஆண்டு, தங்கள் காப்புரிமையை மீறியதாகக் கூறி கர்ட்டிஸ் மீது ரைட் சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இன்று, ரைட் சகோதரர்களின் கதையின் உண்மைத்தன்மையை ஆராயும் ஒரு வலைப்பதிவை நடத்துகிறார் மார்சியா கம்மிங்ஸ். கர்ட்டிஸ் போன்றவர்களை வரலாற்றிலிருந்து அழிக்க ரைட் சகோதரர்கள் வேண்டுமென்றே முயன்றதாக அவர் நம்புகிறார். மறுபுறம், ஆர்வில் மற்றும் வில்பரின் கொள்ளுப் பேத்தி அமண்டா ரைட் லேன், அவர்களின் பணியைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் இந்தக் குற்றச்சாட்டை நம்பவில்லை. "ஆர்விலை எனக்குத் தெரியும். அவர் யாரையும் வேண்டுமென்றே குறிவைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை," என்று அமண்டா கூறுகிறார். "ஆம், ஆனால் தானும் வில்பரும் செய்ததைப் பற்றிய உண்மையை பாதுகாப்பதை அவர் உறுதி செய்தார்," என்கிறார் அமண்டா ரைட் லேன். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvj6d6y26zo
-
இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் இரா.சம்மந்தன்; ச.குகதாசன் எம்.பி 06 JUL, 2025 | 02:48 PM இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். மறைந்த பெருந் தலைவர் இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன் 1933 பெப்ரவரி 05ல் இராஜவரோதயனுக்கு இரண்டாவது மகனாக பிறந்த இரா.சம்மந்தன் ஆரம்ப கல்வி திருகோணமலை புனித மரியால் கல்லூரியில் கற்றார். இதனை தொடர்ந்து சூசையப்பர் கல்லூரி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பாடசாலைகளில் கற்று சட்டக் கல்லூரிக்கு 1956 களில் நுழைந்தார். திருகோணமலை மாவட்டத்தில் அப்போது புகழ் பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர் 1977தொகுதி வாரியான தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். மொத்தமாக கடந்த 32 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளதுடன் இன பிரச்சினைகளை தீர்க்க இலங்கை குடியரசின் முன்னால் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் சுமூகமாக ஈடுபட்டுள்ளதுடன் இந்திய நாட்டு தலைவர்களுடனும் திறம்பட பேச்சுவார்தையில் ஈடுபட்டார் என்பதுடன் திருகோணமலை என்றால் அது சம்மந்தன் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இவர் 2015-2018 வரை இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 1987இலங்கை இந்திய மாகாண சபை ஒப்பந்தம் வடகிழக்கு தொடர்பிலான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தனது பதவி காலத்தில் இந்தியாவுடன் சுமூகமான முறையில் தொடர்புபட்டவருமாவார் என்றார். https://www.virakesari.lk/article/219309
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
நாங்களும் மறக்கவில்லை அண்ணை!
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்; சூத்திரதாரியை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் பின்னடைவு - பாராளுமன்றில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்
06 JUL, 2025 | 09:36 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தம் பின்னடைவுகளை சந்தித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இவ்வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. புதன்கிழமை (09) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த விவாதம் இதற்கு முன்னரும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட போதிலும், பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட சூத்திரதாரிகள் குறித்து எந்த வெளிப்பாடுகளையும் அரசாங்கம் கூற வில்லை. எனவே புதன்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு விவாதத்தின் போது, உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் பின்னும், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்துவோம் என்று அநுரகுமார திசாநாயக்கவும் அவரது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் உறுதியளித்திருந்தனர். ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட பல சந்தர்ப்பங்களில் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக அரசாங்கம் கூறியது. குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாகியிருந்த நிலையில், அன்றைய தினம் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனினும் அவ்வாறு வெளிப்படுத்தப்பட வில்லை. ஆகவே பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுப்படவுள்ளது. இதேவேளை, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் திருநிலைப்படுத்தலின் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாளை திங்கட்கிழமை, பேராயர் இல்லத்தில் சிறப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219267
-
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் - அமைச்சர் விஜித்த ஹேரத் 06 JUL, 2025 | 09:33 AM (எம்.வை.எம்.சியாம்) பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கம் எமதாகும். இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றும் அவசியமாகும். எனவே இந்த புதிய சட்டத்தை மூன்று மாதங்களில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 1978 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கமே எமதாகும். இந்த சட்டத்தின் ஊடாக ஏற்படக்கூடிய ஆபத்தக்கள் தொடர்பில் நாம் நன்கறிவோம். இந்த சட்டம் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இந்த சட்டம் மூலம் தொடர்பில் செயற்பட்டு வருகிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு தற்போது அமைச்சரவையினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தற்போது தொடர்ந்தும் கூடுகிறது. எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, தற்போது நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமாகும். இந்த சட்டத்தில் உள்ள சில விடயங்களை புதிய சட்டத்தில் கொண்டு வர வேண்டும். மூன்று மாதங்களில் இந்த சட்டத்தில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும். ஆகஸ்ட் மாத இறுதிப் பகுதி அல்லது செப்டம்பர் மாத ஆரம்பகுதியில் இந்த செயற்பாடுகளை நிறைவு செய்து வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/219266
-
வடக்கு மாகாணத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - ஜெகதீஸ்வரன் எம்.பி.
05 JUL, 2025 | 07:45 PM புதிய சுற்று நிருபத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களுக்கான போட்டிப் பரீட்சையின் போது மாவட்ட ரீதியில் தேவைக்கு ஏற்ப வெட்டுப் புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் உலக வங்கி பிரதிநிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் எங்களது அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி வடக்கு - கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவுள்ளது. அந்தவகையில் இதனூடாக வடக்கு - கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மக்களது பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது, கிராமிய பொருளாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல், வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற செயற்பாடுகளை செய்ய இருக்கின்றோம். அதுமட்டுமல்லாது வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நீண்டகாலமாக குளங்கள், புனரமைக்கப்படாமலும், தூர் வாராமலும், பழுதடைந்தும் காணப்படுகின்றது. இதனை திருத்தியமைக்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது. விசேடமாக இந்த நிதியத்தின் மூலம் இதை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகன்றது. விவசாயத்திலும் நெற்பயிற்செய்கை பிரதான இடத்தை பெறுகின்றது. சிறுபோக நெற் செய்கைக்கு மக்கள் அவதிப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளும் நிலத்தின் அளவு குறைவாகவுள்ளது. அதற்கு குளத்து நீர் போதாமை காரணமாகும். குளங்கள் புனரமைப்பு செய்வதன் மூலம் சிறுபோக நெற் செய்கையை அதிகரிக்க முடியும். விவசாயிகள் பொருளாதாரத்தில் மட்டுமன்றி எமது பிரதேச அரிசி தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். கிராமிய வீதிகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தவிர, கல்வியில் இடமாற்றங்கள் பூதாகரப் பிரசசனையாகவுள்ளது. வடமாகாணத்தில் இடம்பெற்ற வலயங்களுக்கு இடையிலான இடமாற்றத்தில் மடு, வவுனியா வடக்கு, மன்னார், துணுக்காய் போன்ற வலயங்களில் இருந்து செல்ல வேணடிய ஆசிரியர்களில் 99 வீதமானவர்கள் இடமாற்றத்தை ஏற்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை, அந்த வலயங்களுக்கு வரவேண்டிய ஆசிரியர்கள் முழுமையாக வருகை தரவில்லை. மடு வலயத்தில் 29 ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றமாகி சென்றுள்ளார்கள். 4 ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளும் போது மாகாண கல்வித் திணைககளம் கரிசனையோடு கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது இடமாற்றம் சிலவற்றில பிழைகள் இருக்கிறது. தெரிவுகளில் தவறுகள் உள்ளது. எதிர்வரும் காலத்தில் துல்லியமான தகவல்களப் பெற்று ஆசிரியர்களுக்கு அநீதி இடம்பெறாத வகையில் இடமாற்றம் வழங்க வேண்டும். வடக்கு மாகாணத்தில் 3517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அரசாங்கத்தின் சுற்று நிருபம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சுற்று நிருபத்தில் பல பிழைகள் உள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதனால் பட்டதாரிகளின் வேண்டு கோளுக்கு இணங்க அந்த சுற்று நிருபம் நிறுத்தப்பட்டுளது. புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சுற்று நிருபத்தில் 1756 ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். பற்றாக்குறையில் 50 வீதம் உள்வாங்கப்படவுள்ளார்கள். இதன் மூலம் கணிசமான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க முடியும். ஆனாலும் அதில் ஒரு தடை உள்ளது. ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கையும் விரைவாக முடித்து இந்த வருடத்திற்குள் ஆசிரிய நியமனத்தை வழங்க எண்ணியுள்ளோம். பொதுவான வெட்டுப் புள்ளியை நிறுத்தி மாவட்டத்திற்கு தனித் தனியான வெட்டுப் புள்ளிகளை வழங்கி மாவட்டத்திற்கு தேவையான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலம் இடமாற்றப் பிரச்சனையையும் தீர்க்க முடியும். இது தொடர்பில் ஆளுனருடன் பேசியுள்ளோம். எம்மைப் பொறுத்தவரை வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. எமது காலத்தில் அதனை ஏனைய மாகாணங்களை போல முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதை நோக்கி எமது பயணம் இருக்கிறது. எமக்கு கட்சி பேதம் கிடையாது. உள்ளூராட்சி மன்றங்களில பல்வேறு கட்சிகள் ஆடசி அமைத்துள்ளன. அவை எம்மோடு இணைந்து பணியாற்றினால் வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியலுக்கு அப்பால் நாம் செயற்பட தயராகவுள்ளோம் அதற்கு அவர்களது ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/219248
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
சாதனைமேல் சாதனை படைத்த சுப்மன் கில், பிராட்மேனை முந்த வாய்ப்பு - வெற்றியை நோக்கி இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் 2வதுடெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 608 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 427 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் கேப்டன் கில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். சாதனைமேல் சாதனை படைத்த கில், கிரிக்கெட் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் டான் பிராட்மேனின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இமாலய இலக்குடன் களம் புகுந்த இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் போராடி வருகிறது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணிக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன. ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கருண் நாயருக்கு 'செக்' வைத்த ஸ்டோக்ஸ் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிமிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்களுடன் இருந்தது. கருண் நாயர்(7), ராகுல் 28) ரன்களுடன் 4வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கருண் நாயர் பவுன்ஸருக்கும், பேக்ஆஃப் லென்த் பந்துக்கும் சிரமப்படுகிறார், அதுபோன்ற பந்துகளை வீசும்போது ஷாட்களை ஆடவும், டிபென்ஸ் செய்யவும் திணறுகிறார் என்பதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிந்து கொண்டார். கருண் நாயருக்கு கட்டம் கட்டிய ஸ்டோக்ஸ், கார்ஸ், டங் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் பவுன்ஸர்களை கருண் நாயருக்கு வீசச் செய்தார். கருண் நாயருக்கு தொடர்ந்து பவுன்ஸர் நெருக்கடியை அளித்து ஒரு கட்டத்தில் கார்ஸ் பந்துவீ்ச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 26 ரன்னில் கருண் வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல் கிளீன் போல்ட் அடுத்து கேப்டன் கில் களமிறங்கி, ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்து 55 ரன்களில் டங்க் பந்துவீச்சில் கிளீஙன போல்டானார். டங்க் வீசிய இந்த பந்து அற்புதமானது, பேட்டர் விளையாட முடியாத அளவில் திடீரென இன் ஸ்விங்காகியதால், ராகுலால் சமாளிக்க முடியாமல் போல்டாகினார். அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, கில்லுடன் இணைந்தார். உணவு இடைவேளைக்கு செல்லும் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்ள் சேர்த்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஷப் பந்த் அதிரடி 2வது செஷன் தொடங்கியதிலிருந்து ரிஷப் பந்த், கில் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். அதிலும் ரிஷப் பந்த் டி20 போட்டியைப் போன்று பேட் செய்யத் தொடங்கி, பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டு 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மான் கில் 57 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். டங்க் பந்துவீச்சில் விளாசிய கில் தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி அரைசதத்தை எட்டினார். ரிஷப் பந்த் பெரிய ஷாட்களை ஆடுவதைப் பார்த்த கேப்டன் ஸ்டோக்ஸ் சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு அதிக ஓவர்களை வழங்கினார். அவர் கணித்தபடியே, பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்ற ரிஷப் பந்த் லாங்ஆன் திசையில் டக்கெட்டிடம் கேட்ச் கொடுத்து 65 ரன்னில் (3 சிக்ஸர், 8பவுண்டரி) வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் கூட்டணி 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கில் இரண்டாவது சதம் அடுத்து ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கில் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, மாலை தேநீர் இடைவேளைக்கு முன்பாக 129 பந்துகளில் சதத்தை எட்டினார். தேநீர் இடைவேளைக்குப்பின் வோக்ஸ் வீசிய பந்தில் கில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தை அதிகப்படுத்தினார். ஜடேஜாவும் அதிரடிக்கு மாறத் தொடங்கி, வேகமாக ரன்களை சேர்த்தார். பஷீர் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசி தனது ஸ்கோரை உயர்த்தி 94 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மான் கில்லின் அதிரடி ஆட்டத்தால் 156 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 129 பந்துகளில் சதம் அடித்த கில் அடுத்த 27 பந்துகளில் 50 ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். இந்திய அணி 400 ரன்களை எட்டிய நிலையில் கில் 161 ரன்களில் பஷீர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் கணக்கில் 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும். நிதிஷ் குமார் ரெட்டி இந்த இன்னிங்ஸிலும் ஒரு ரன்னில் ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னிலும்,ஜடேஜா 69 ரன்னில் இருந்த போது, அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்களை எட்டியது. அப்போது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல்முறையாக 1000 ரன்கள் இந்த டெஸ்டில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1014 ரன்கள் சேர்த்து, உலகளவில் டெஸ்டில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு டெஸ்டில் ஆயிரம் ரன்களை எட்டுவதும், கடப்பதும் இந்திய அணிக்கு இது முதல்முறையாகும். உலகளவில் டெஸ்டில் 6வது முறையாக டெஸ்டில் ஒரு அணி 1000 ரன்களைக் கடந்தது. இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் 2004ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 916 ரன்கள் குவித்ததுதான் இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி மாபெரும் ஸ்கோரை எட்டுவதற்கு கேப்டன் சுப்மான் கில் தொடர்ந்து 2வது இன்னிங்ஸிலும் சதம் அடித்து 158 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது தவிர ரிஷப் பந்த்(65), ராகுல்(55) ஜடேஜா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவினர். ஆகாஷ் அசத்தல் 608 ரன் என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை முகமது சிராஜ் டக்அவுட் ஆக்கினார். மறுபுறம் அதிரடி காட்டிய பென் டக்கெட் 15 பந்துகளில் 25 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இதனால், 30 ரன்களிலேயே இங்கிலாந்து ஆணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இக்கட்டான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி பெரிதும் நம்பியிருந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஏமாற்றினார். வெறும் 6 ரன்களில் அவரை ஆகாஷ்தீப் கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதிலும் பென் டக்கெட், ரூட்டை போல்டாக்கிய ஆகாஷ் தீப் வீசிய பந்து அற்புதத்திலும் அருமையான பந்துவீச்சாகும். ஒரு சாதாரன பேட்டரால் விளையாட முடியாத வகையில் வீசப்பட்ட ஆகச்சிறந்த பந்துவீச்சாக இருந்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுக்காவிட்டாலும் சரியான அளவில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மதில்மேல் பூனையாக இங்கிலாந்து இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை மதில்மேல் நிற்கும் பூனையாக இருக்கிறது. வெற்றிக்கு இன்னும் 536 ரன்கள் தேவைப்படும் நிலையில் அதை அடைவது என்பது கடினமான இலக்காக இருக்கும். இதில் களத்தில் இருக்கும் ஆலி போப், ஹேரி ப்ரூக்கைத் தவிர்த்து கேப்டன் ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவர் மட்டுமே பேட்டர்கள். இங்கிலாந்து அணி இன்னும் 2 விக்கெட்டுகளை இழந்தாலே தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டுவிடும். பாஸ்பால் உத்தியைக் கையாண்டு பல வெற்றிகளைப் பெற்றுவரும் இங்கிலாந்து அணி, கடந்த 3 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே அதுவும் கடைசி நாளில் மழை காரணமாக, டிரா செய்தது. பெரும்பாலும் அதிரடியாக சேஸ் செய்வது அல்லது விக்கெட்டுகளை இழந்து தோற்பது என்ற ரீதியில்தான் இங்கிலாந்து அணி விளையாடி வந்துள்ளது. ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் வெற்றிக்காக முயல்வார்களா அல்லது டிரா செய்யும் நோக்கில் ஆட்டத்தை கொண்டு செல்லப் போகிறார்களா என்பது தெரியவில்லை. கடைசி நாளில் ஆடுகளத்தில் பிளவுகள், வெடிப்புகள் அதிகமாகும். இதனால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சில் எதிர்பாராத பவுன்ஸர்கள், ஸ்விங்குகள் வெடிப்புகளில் பந்துபட்டவுடன் எகிறும் என்பதால், பேட்டர்கள் பேட் செய்வது கடினமாக இருக்கும், ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்துவதைவிட விக்கெட்டுகளை காப்பாற்றவே முயற்சிக்கலாம். இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்க நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES கில் சாதனைமேல் சாதனை - பிராட்மேன் முந்துவாரா? இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றபின் சுப்மான் கில்லின் ஆட்டத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இங்கிலாந்து தொடருக்கு வருவதற்கு முன் கில்லின் டெஸ்ட் சராசரி 35 ரன்களாக இருந்தது. ஆனால், முதல் டெஸ்டில் அடித்த சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், 150 ரன்களுக்கு மேல் குவித்ததைத் தொடர்ந்து கில்லின் டெஸ்ட் சராசரி 42 ரன்களாக உயர்ந்துவிட்டது. டெஸ்ட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற கவாஸ்கரின் 54 ஆண்டு கால சாதனையை கில் முறியடித்துள்ளார். 1971-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற டெஸ்டில் கவாஸ்கர் 344 ரன்களை குவித்திருந்தார். தற்போது இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 430 ரன்களை சேர்த்ததன் மூலம் கவாஸ்கர் சாதனையை கில் தகர்த்துள்ளார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் அதிக ரன்களைக் குவித்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். ஒரு டெஸ்டில் 430 ரன்களுடன் சுப்மான் கில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 456 ரன்களுடன் உள்ளார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் தொடர்ந்து இரு 150 ரன்களைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிராக 1980ம் ஆண்டில் ஒரு டெஸ்டில் இரு 150 ரன்களை அடித்திருந்தார். மேலும் ஒரு டெஸ்டில் இரட்டை மற்றும் சதம் அடித்த உலகளவில் 9 பேட்டர்களில் ஒருவராகவும், இந்திய அளவில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தார்போல் கில் இடம் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அளவில் கேப்டன் பொறுப்பேற்று தொடர்ந்து இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தவர்களில் இதற்கு முன் சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் மட்டுமே இருந்த நிலையில் அந்தப் பட்டியலில் இப்போது கில்லும் இணைந்துவிட்டார். இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த வீரர்களில் ரிஷப் பந்த்துக்கு அடுத்தார்போல் கில்லும் இணைந்தார். முதல் இன்னிங்ஸில் கில், ஜடேஜா கூட்டணி 200 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து, 2வது இன்னிங்ஸலும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் ஒரு டெஸ்டில் இரட்டை சதம், சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒரே ஜோடி என்ற பெருமையை கில், ஜடேஜா பெற்றனர். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 4 சதம் பார்ட்னர்ஷிப்பை இந்தியா எட்டியுள்ளதில் அனைத்திலும் கில்லின் பங்களிப்பு இருக்கிறது. ஒரு டெஸ்டில் 4 சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களில் இந்திய அளவில் முதல் பேட்டராகவும், உலகளவில் 5வது பேட்டராகவும் கில் இருக்கிறார். இதற்கு முன் ஹனிப் முகமது, கிரஹாம் கூச், மார்க் டெய்லர், ஜோ ரூட் ஆகியோர் இதுபோன்று 4 சதங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியிருந்தனர். சுப்மான் கில் இங்கிலாந்து தொடரில் இரு டெஸ்ட்களிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 585 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் ஒரே தொடரில் 974 ரன்களைக் குவித்ததே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தொடரில் வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்களாக நீடிக்கிறது. இந்த தொடரில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியிருப்பதால் அதனை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் அடித்த 3வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் கில்லுக்கு 8-வது டெஸ்ட் சதமாகவும் அமைந்தது. 4வது நாள் ஆட்டத்தில் கில் சேர்த்த ரன்களில் பெரும்பகுதி இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் வந்தது. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்திடாத சாதனையை கில் படைத்துளளார். ஒரே டெஸ்டில் இரட்டை சதமும், 150 ரன்களும் சேர்த்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு சுப்மன் கில் சொந்தக்காரராகியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20l0zj4g3o