Everything posted by ஏராளன்
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
விமானத்தின் குறைபாட்டை 7 ஆண்டுக்கு முன்பே சுட்டிக்காட்டிய அமெரிக்காவின் எஃப்ஏஏ - நிபுணர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத் விமான விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஜூலை 12-ஆம் தேதி இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் விமானத்தின் இரு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட் ஆஃப் நிலைக்குச் சென்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக 2018 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் பரிந்துரை செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்ன பரிந்துரை? ஆமதாபாத் விமான விபத்துக்கு அதுதான் காரணமா? முதற்கட்ட அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஏர் இந்தியா ஏஐ 171 விமானத்தின் கேப்டன் சுமித் சபர்வால் (இடது), இணை விமானி க்ளைவ் குந்தர் (வலது) குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ 171 விமானம், பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தின் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 241 பேர் உள்பட கிட்டத்தட்ட 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்ற பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் உயிர் பிழைத்தார். விபத்து நடந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், இயக்க (RUN) என்ற நிலையில் இருந்து கட் ஆஃப் (CutOff) நிலைக்குச் சென்றதால், இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்வது தடைப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இரு என்ஜின்களும் செயல்படாமல் போனதாக முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான விபத்து பிற்பகல் 1.40 மணியளவில் நடந்துள்ள நிலையில், காலை 11.17 மணியில் இருந்து என்ன நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானம் கிளம்புவதற்கு முன்பு விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் தகுதியானவர்களா என்பதற்கான சோதனைகள் நடத்தப்பட்டன. சுவாசப் பகுப்பாய்வு சோதனையில், அவர்கள் விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தின் எரிபொருள் மாதிரிகளும் திருப்திகரமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமானிகளின் அறையில், 'ஏன் துண்டித்தீர்கள்? (எரிபொருள் சுவிட்ச்)' என விமானி கேட்ட போது, 'நான் அணைக்கவில்லை' என்று மற்றொரு விமானி கூறியுள்ளார். ஆனால், அடுத்த சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம, கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் இரண்டு என்ஜின்களின் கட் ஆஃப் நேரத்துக்கு இடையில் ஒரு விநாடி நேரம் இருந்துள்ளது. எரிபொருள் விநியோகம் தடைபட்டதால், வேகம் குறையத் தொடங்கியதாக விமான புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ள 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'திட்டமிட்டு செய்யவில்லை, ஆனால்?' படக்குறிப்பு, எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்கிறார் அசோக் ராஜா. "ஏஏஐபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட் ஆஃப் சுவிட்ச் தொடர்பாக விமானிகள் பேசியது குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், திட்டமிட்டு இதனைச் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா. "விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு மனநல ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை" என்பது முன்பே உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் அவர், "விமானம் கிளம்புவதற்கு முன்பு அவர் எவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தாலும் எரிபொருள் உள்பட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வாய் விட்டுக் கூற வேண்டும்" எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அசோக் ராஜா, "அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கு அந்நாட்டின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA)) ஒப்புதல் வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டு போயிங் விமானத்தின் தொழில்நுட்ப பிரச்னைகள் தொடர்பான சில பரிந்துரைகளை எஃப்ஏஏ வழங்கியுள்ளது" எனக் கூறுகிறார். 2018 ஆம் ஆண்டு பரிந்துரை என்ன? '787 ட்ரீம்லைனர் விமானங்களில் எரிபொருள் கட் ஆஃப் வால்வுகளில் தொழில்நுட்ப சிக்கல்கள் வரலாம்' எனவும் அது சரியாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எஃப்ஏஏ பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அது கட்டாயம் என்பதாகக் குறிப்பிடாமல் பரிந்துரை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார் அசோக் ராஜா. "இது விதிமீறல் என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் போயிங் விமானம் தொடர்பான இந்தப் பரிந்துரையை செயல்படுத்தியிருக்கலாம்" எனக் கூறும் அசோக் ராஜா, "எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" எனக் குறிப்பிட்டார். 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்ஏஏ (FAA) அளித்துள்ள பரிந்துரையில், போயிங் நிறுவனத்துக்கு விமானத்தை இயக்குகிறவர்களிடம் இருந்து கிடைத்த அறிக்கையின்படி, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் லாக்கிங் சிஸ்டம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் (Flight deck) அமைக்கப்பட்டு, என்ஜினுக்கு எரிபொருளை வழங்கவும் துண்டிக்கவும் செய்ய விமானியால் கையாளப்படுகிறது. இதில் கவனக்குறைவு நேரிடுவதைத் தடுக்கும் வகையில் லாக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லாக்கிங் சிஸ்டம் செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? 'லாக்கிங் சிஸ்டம் சரிவர செயல்படாவிட்டால், ரன் மற்றும் கட் ஆஃப் நிலைகளுக்கு ஆகிய 2 நிலைகளுக்கு இடையே எரிபொருள் சுவிட்சை மாற்றலாம். இதில் கவனக்குறைவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனால் விமானத்தின் இயந்திரம் நிறுத்தப்படுவது போன்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்' என எஃப்ஏஏ எச்சரித்துள்ளது. 'விமான உரிமையாளர்களும் அதனை இயக்கும் விமானிகளும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை உறுதி செய்ய வேண்டும்' எனவும் எஃப்ஏஏ அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. 'ஒத்துப் போகும் அறிக்கை' 'தரையில் விமானம் இருக்கும் போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை உயர்த்தாமல் (Lift) இரண்டு நிலைகளுக்கு இடையில் நகர்த்த முடியுமா எனப் பார்க்க வேண்டும். சுவிட்சை உயர்த்தாமல் நகர்த்த முடிந்தால் லாக்கிங் சிஸ்டம் துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் என்பதால் சுவிட்சை மாற்ற வேண்டும்' எனவும் எஃப்ஏஏ தெரிவித்துள்ளது. இதனை மேற்காள் காட்டிப் பேசிய முன்னாள் விமானி அசோக் ராஜா, "இரண்டு விமானிகளுக்கு நடுவில் கட் ஆஃப் வால்வு இருக்கும். அது கைதவறி அணைக்கும் அளவுக்கு இருக்காது. அதற்கான வாய்ப்புகளே இல்லை" எனக் கூறுகிறார். "கடந்த காலங்களில் விமானத்தின் இயக்கம் முழுவதும் கைகளால் கையாளப்பட்டன. அதாவது நேரடியாக மெக்கானிக்கல் செயல்பாடு இருக்கும். தற்போது எலக்ட்ரானிக் முறையில் கையாளப்படுகின்றன" எனவும் அசோக் ராஜா குறிப்பிட்டார். எஃப்ஏஏ கூறிய பரிந்துரைகளுடன் விமான விபத்து தொடர்பான இந்திய விமான புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையும் ஒத்துப் போவதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 'பரிந்துரை தான், கட்டாயம் இல்லை' படக்குறிப்பு, விமானத்தின் மென்பொருளில் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எலக்ட்ரிகல் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.குருசாமி. "எஃப்ஏஏ கூறிய அம்சங்களில் (Special Airworthiness Information Bulletins (SAIB) 'கட்டாயம்' என இல்லாவிட்டால் அதை விமானங்களின் உரிமையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை" என்கிறார், அசோக் ராஜா. விமானத்தின் எலக்ட்ரிகல் வயர்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தன்னிச்சையாக எரிபொருள் கட் ஆஃப் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இறுதிக்கட்ட அறிக்கை வெளிவரும்போது முழு விவரங்களும் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த கோவை நேரு ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியின் பேராசிரியர் எஸ்.குருசாமி, ""இரண்டு சுவிட்சுகளும் வெவ்வேறு மின் இணைப்புகள் மூலம் செயல்படும். அப்படித் தான் விமானம் வடிமைக்கப்பட்டிருக்கும். தவறுதலாக இதை அணைப்பதற்கு வாய்ப்பில்லை. இரண்டு என்ஜின்களுக்கும் தனித்தனி எரிபொருள் அமைப்புகள் உள்ளன" என்கிறார். "ஒன்று ஆஃப் செய்யப்பட்டாலும் மற்றொன்று கட் ஆஃப் ஆக வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறும் அவர், "இதற்கு மனித தவறு காரணமா? தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது முழு அறிக்கை வரும்போது தெரியவரும்" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939eqgd9zno
-
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன்
திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிப்பு - பழ.நெடுமாறன் 13 JUL, 2025 | 12:20 PM திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் நவநாதனை எந்த காரணமும் கூறாமல் போலீஸார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். இதற்கு எதிராக திருச்சி சிறப்பு முகாமில் அவர் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை சீர்கேடு அடைந்துள்ளது. இந்த பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நவநாதனை உடனடியாக விடுவித்து மருத்துவமனையில் அனுமதிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219855
-
ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?
'நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து வரமாட்டேன்' - கேரள செவிலியரின் தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி படக்குறிப்பு, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த வருடம் ஏமன் சென்றார் பிரேமா குமாரி, உடன் சாமுவேல் ஜெரோம். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்ததாக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார் கேரள செவிலியர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், 'ப்ளட் மணி' எனப்படும் பணத்திற்கு ஈடாக மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையில் நிமிஷாவும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர். இதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று 2024 ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நிமிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நிமிஷா பிரியா குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் இதைக் கூறினார். ஆனால், இதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும், சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோமும் காணொளி நேர்காணல் மூலமாக ஜூலை 11ஆம் தேதி இரவு பிபிசி தமிழிடம் உரையாடினார்கள். படக்குறிப்பு, மகளைக் காப்பாற்றும் நம்பிக்கையில் இருக்கிறார் நிமிஷாவின் தாய் (2023இல் கேரளாவில் எடுக்கப்பட்ட கோப்புப் படம்) தண்டனை குறித்த அறிவிப்பு நிமிஷாவுக்கு சொல்லப்பட்டதா? கேள்வி: ஜூலை 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை நிமிஷாவுக்கு தெரியப்படுத்திவிட்டார்களா? இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "எனக்கு ஜூலை 7ஆம் தேதி, மரண தண்டனைக்கான தேதியை உறுதி செய்துவிட்டோம் என சனா மத்திய சிறையின் தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி கிடைத்தது. என்னிடம் சொல்வதற்கு முன்பே, நிமிஷாவுக்கும் இந்தச் செய்தியை தெரியப்படுத்திவிட்டோம் என்றே சிறை நிர்வாகம் கூறியது. நான் அப்போது தனிப்பட்ட வேலைக்காக இந்தியா வந்திருந்தேன். செய்தி கேட்டவுடன் உடனடியாக ஏமனுக்கு புறப்பட்டு வந்தேன்" என்கிறார். மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியானவுடன், ஏமனின் சனா நகரின் சிறையில் இருந்து சிறைத்துறை நிர்வாகம் மூலமாக நிமிஷா தனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாக, நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி கூறினார். "ஆனால், அதில் சமீபத்திய அறிவிப்பு குறித்து அவள் ஏதும் சொல்லவில்லை. நான் நலமோடு இருக்கிறேனா என்று மட்டுமே கேட்டிருந்தாள். நான் கவலைப்படக் கூடாது என்பதற்காக அவள் அதை சொல்லவில்லை. சாமுவேல் ஜெரோம் கூறிய பின்பே எனக்கு விவரம் தெரிந்தது." என்கிறார் பிரேமா குமாரி. கடந்தாண்டு ஏமன் சென்ற பிரேமா குமாரி, நிமிஷாவை இரண்டு முறை சிறையில் சந்தித்துள்ளார். படக்குறிப்பு, டோமி- நிமிஷா தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கேள்வி: சிறையில் முதல்முறை நிமிஷாவைப் பார்க்கும்போது என்ன பேசினீர்கள்? அந்த உணர்வு எப்படி இருந்தது? இதற்குப் பதிலளித்த பிரேமா குமாரி, "நான் 12 ஆண்டுகள் கழித்துதான் நிமிஷாவை பார்த்தேன். முதல்முறை கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பார்த்தேன். ஏப்ரல் 23, தூதரக அதிகாரிகளும் நானும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவளை பார்க்க முடியாதோ என்று கவலைக்கு உள்ளானேன். அதன் பிறகு அவளை பார்க்கும் போது அவளுடன் இரண்டு பேர் வந்தனர். ஒரே மாதிரி ஆடை அணிந்திருந்தனர். அவள் என்னை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதாள். நானும் அழுதேன். உடன் இருந்தவர்கள் அழாதீர்கள் என்று சொன்னார்கள். 12 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அவளை பார்த்தேன். நான் இறந்தால்கூட அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. தான் சந்தோஷமாக இருப்பது போல நிமிஷா என் முன் நடித்தாள்." என்று கூறினார். கேள்வி: கேரளாவில் உள்ள நிமிஷாவின் கணவர் டோமி மற்றும் நிமிஷாவின் மகளுடன் இந்த தண்டனை அறிவிப்பு குறித்து பேசினீர்களா? "டோமியுடன் பேசினேன், அப்போது என் பேத்தியும் பேசினாள். எப்போது பேசினாலுமே அம்மாவை கூப்பிட்டுதானே வருவீர்கள் என்று என்னிடம் பேத்தி கேட்பாள். அம்மாவை சிக்கீரம் கூப்பிட்டு வரவேண்டும், அம்மாவை பார்க்க ஆசையாக உள்ளது என்று சொன்னாள். நிமிஷாவிடம் பேசும் போதும் இதை சொன்னேன். 'அம்மாவை கூப்பிட்டு வருவேன் என்று சொன்னேன், அவர்கள் முன்பு நான் எப்படி போய் நிற்பேன். என்னால் திரும்பி போக முடியாது' என்று நிமிஷாவிடம் சொன்னேன்." என்று கூறினார் பிரேமா குமாரி. படக்குறிப்பு, 2015இல், ஏமனில், அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்குடன் சாமுவேல் ஜெரோம். கேள்வி: இந்த வழக்கில், இந்திய அரசின் தூதரக உதவிகள் ஏதும் கிடைத்ததா? இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "இந்த வழக்கில் தொடக்கம் முதலே இந்திய தூதரகம் உதவி வருகிறது. 2017இல் இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டபோது, உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் இருந்த இந்திய தூதரகம் செயல்படவில்லை. அப்போது ஏமனைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் தான் எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்த விஷயத்தில் நீங்கள் இந்திய அரசை அணுகவில்லை என்றால், நிமிஷாவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறாது என்று கூறினார். நான் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்கை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். உடனடியாக என்னுடன் தொலைபேசியில் அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள இந்திய தூதரக முகாம் மூலமாக ஒரு கடிதத்தை (Note Verbale) ஏமனுக்கு அனுப்பிவைத்தார். அதைக் கொண்டுபோய் ஹூத்திகளின் வெளியுறவு அமைச்சகத்திடம் கொடுத்தோம். அதன் பிறகே அல்-பைதா எனும் பகுதியிலிருந்து சனா நகரத்திற்கு நிமிஷா கொண்டுவரப்பட்டார். முறையான விசாரணைகள் நடைபெற்றது." என்றார். "வி.கே.சிங் அனுப்பிய அந்தக் கடிதம் தான் நிமிஷா இன்றுவரை உயிரோடு இருப்பதற்கு காரணம்" என்று கூறினார் சாமுவேல் ஜெரோம். தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தின் பங்கு படக்குறிப்பு, கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். கேள்வி: மஹ்தியின் குடும்பம் நிமிஷாவுக்கு மன்னிப்பு அளிக்க மறுத்துவிட்டார்களா? இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "அவர்கள் இதுவரை நிமிஷாவை மன்னிப்பதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை, சம்மதமும் தெரிவிக்கவில்லை" என்று கூறினார். கேள்வி: தொடக்கம் முதல் நீதிமன்ற விசாரணைகள் வரை, இந்த வழக்கில் மஹ்தி குடும்பத்தின் பங்கு என்ன? சாமுவேல் ஜெரோம், "மஹ்தியின் கொலை நடந்தது ஏமனின் வடக்குப் பகுதியில், ஆனால் நிமிஷா கைது செய்யப்பட்டது ஏமனின் மாரிப் எனும் பகுதியில். மாரிப் நகரின் சிறையில் இருந்த நிமிஷாவை, மீண்டும் வடக்கு ஏமனுக்கு அழைத்து வந்ததே மஹ்தியின் குடும்பம் தான். தங்கள் சொந்த வாகனத்தில் சென்று அவர்கள் அல்-பைதாவுக்கு அழைத்து வந்தனர். தெற்கு ஏமனில் நிமிஷா இருந்திருந்தால், அவருக்கு சட்டரீதியான விசாரணை நடந்திருக்காது. எனவே நிமிஷாவுக்கு நீதி விசாரணை நடந்ததற்கு மஹ்தியின் குடும்பமும் ஒரு காரணம். ஆனால் அவர்கள் நிமிஷாவை அழைத்து வந்தது வேறு நோக்கத்திற்காக." என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "மஹ்தியின் குடும்பத்தினர் 'ஒசாப்' எனும் பழங்குடி குழுவை சேர்ந்தவர்கள். அவர்களின் பூர்வீகம் சனாவுக்கு அருகில் தமார் என்ற பகுதி. ஆனால் அவர்கள் வணிகம் செய்து, வாழ்வது அல்-பைதா பகுதியில். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைக்காக வசிப்பது போல. ஸ்வாதியா எனும் பழங்குடி குழுவின் பூர்வீகம் தான் அல்-பைதா. அப்படியிருக்க அங்கு வைத்து மஹ்தி கொலை செய்யப்பட, அதற்கான பழி ஸ்வாதியா பழங்குடி மீது விழும் அபாயம் உருவானது. ஏனென்றால், ஏமனில் தங்கள் எல்லையில் வாழும் வேறொரு பழங்குடி நபர் உயிரிழந்தால், அதற்கு பூர்வீக பழங்குடி இனமே பொறுப்பு. நிமிஷா தான் குற்றவாளி என்பது அப்போது தெரியாது. இரு பழங்குடி குழுக்கள் இடையே சண்டை உருவாகும் சூழல் இருந்தது. பிறகு மஹ்தியின் குடும்பத்திற்கு உண்மை தெரிந்தவுடன், அவர்கள் தங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாரிப் நகரம் சென்று நிமிஷாவை அழைத்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு இருந்த கோபத்திற்கு, நிமிஷாவை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் நிமிஷாவை பத்திரமாக அல்-பைதாவிற்கு அழைத்து வந்தார்கள். அதன் பிறகு, நிமிஷாவை சனாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஹூத்தி வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு வந்ததும் . அதை மதித்து அனுப்பி வைத்தார்கள்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார். கேள்வி: ஏமன் நீதிமன்றங்களால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிமிஷாவை மீட்க முயற்சிப்பதற்கான காரணம் என்ன? "நிமிஷா குற்றம் செய்துள்ளார். அவருக்கான தண்டனையும் கொடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இப்போது ஷரியா சட்டத்தில் மன்னிப்பு என்ற வழி உள்ளதால் தான் நிமிஷாவைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் பதிலல்ல. நிமிஷாவுக்கு ஒரு மகள் உள்ளார், அவரது தாயார் இந்த வயதில் ஏமன் வந்து கஷ்டப்படுகிறார். மஹ்தியின் தரப்பு நியாயத்தைப் புரிந்து கொள்ளும் நாம், இவர்கள் தரப்பையும் பார்க்க வேண்டும். அதேசமயம், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு அளித்தால் மட்டுமே நிமிஷாவை மீட்க முடியும். இல்லையென்றால் அவரது தண்டனை நிறைவேற்றப்படும்" என்றார் சாமுவேல் ஜெரோம். ஏமன் மக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சனா நகரில் ஒரு மத நிகழ்விற்காக கூடியிருக்கும் ஏமன் மக்கள் (கோப்புப் படம்) கேள்வி: ஏமன் மக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த வழக்கை எவ்வாறு பார்க்கிறார்கள்? இதற்குப் பதிலளித்த சாமுவேல் ஜெரோம், "தங்கள் நாட்டு குடிமகனை கொன்றுவிட்டார் என்ற கோபத்தில் தான் ஏமன் பொதுமக்களும், ஊடகங்களும் நிமிஷாவைப் பார்க்கின்றன. அதே சமயம், நிமிஷாவைப் பற்றி நன்கு அறிந்த சிலர் அவர் காப்பாற்றப்பட வேண்டுமென நினைக்கிறார்கள்" என்றார். கேள்வி: நிமிஷாவின் தண்டனையை ஒத்திவைக்க வழியுள்ளதா? "தெரியவில்லை, இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து பாப்போம்" என்கிறார் சாமுவேல் ஜெரோம். இந்திய அரசின் தூதரக நடவடிக்கைகள் நிமிஷா பிரியாவை, தூதரக நடவடிக்கை மூலம் இந்திய அரசு மீட்க உத்தரவிடக் கோரி, 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' என்ற தன்னார்வலர் குழு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 10ஆம் தேதி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஜூலை 14-ஆம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தது. அதே நேரம், ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியிருப்பதால், வழக்கின் தன்மை மற்றும் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, மனுவின் நகலை இந்திய அட்டர்னி ஜெனரலிடம் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த வழக்கில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அது குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கோரினர். வழக்கின் பின்னணி என்ன? கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர். நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார். மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp86d21p53no
-
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?
பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் பெயர் வாங்கிக் கொடுத்த 'பெருமாள் பிச்சை' கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ். கார்த்தி - சந்தானத்துடன் இணைந்து 'அழகுராஜா' என்ற திரைப்படத்தில் நகைச்சுவையிலும் அவர் கலக்கியிருப்பார். வில்லன் கதாபாத்திரங்களில் அசத்திய சீனிவாச ராவ் இளம் வயதில் அவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பின்னாட்களில், நாடக கலையால் ஈர்க்கப்பட்ட அவர் திரையுலகிற்கு வந்தார். குணசித்திர வேடங்களில் மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர் அவர். கிராமப் புறத்தில் வாழும் நபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திய அவர், நவ நாகரிக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியும் நடிப்பில் அசத்தினார். தெலுங்கில் கிருஷ்ணா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்ற பிரபலங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் விக்ரம், விஜய், சிலம்பரசன் ஆகியோரின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 'ஆஹா! நா பெல்லண்டா' என்ற படத்தில் பிசினாரி என்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. வெங்கடேஷ் நடிப்பில் வெளியான கணேஷ் திரைப்படத்தில் அரசியல் தலைவராக நடித்திருக்கும் அவர் தெலுங்கானாவுக்கே உரித்தான தெலுங்கு பேச்சுவழக்கில் மிரட்டியிருப்பார். நகைச்சுவை உணர்வுக்காக நன்கு அறியப்பட்டவர் அவர். பட மூலாதாரம்,UGC அரசியல்வாதியாகவும் சீனிவாச ராவ் நடிப்பில் மட்டுமின்றி அவர் அரசியலிலும் ஆர்வம் செலுத்தினார். விஜயவாடா கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ஆம் ஆண்டு அவர் பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புத் திறமைக்காக பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார். நந்தி, சைமா உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற அவருக்கு 2015-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. திரையுலகினர் இரங்கல் கோட்டா சீனிவாச ராவின் திறமையான நடிப்பு குறித்து பல நேரங்களில் நடிகர்களும் இயக்குநர்களும் புகழ்வது உண்டு. மூன்று நாட்களுக்கு முன்பு ஜூலை 10 அன்று, கோட்டா சீனிவாச ராவின் பிறந்த நாளை ஒட்டி இயக்குநர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "நடிகர்கள் உங்களை சிரிக்க வைக்கலாம். சிலர் உங்களை அழ வைக்கலாம். ஆனால் கோட்டாவால் மட்டுமே உங்களை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும், அச்சப்படுத்தவும் முடியும்," என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrl90q802zo
-
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 3 13 JUL, 2025 | 10:50 AM காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். காலி தொடக்கம் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆகையினால் காலி தொடக்கம் மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219840
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
'கோலி'யாக மாறிய கில்: தனி நபர் சாதனைக்கு முன்னுரிமை தந்ததால் பெரும் விலை கொடுத்த இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரிஷப் பந்த் ரன் அவுட்டான காட்சி கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் பிபிசி தமிழுக்காக 13 ஜூலை 2025, 02:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லார்ட்ஸ் டெஸ்டில் இரு அணிகளும் மாறி மாறி உள்ளே வெளியே ஆட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு செசனில் இங்கிலாந்தின் கை ஓங்கினால் அடுத்த செசனில் இந்தியா முன்னுக்கு வருகிறது. சம பலத்துக்கு சான்று கூறும்விதமாக இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக (387) முடிந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8 முறை இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக முடிந்துள்ளன. 8–ல் 1 முறை மட்டுமே கடைசியாக பேட்டிங் செய்த அணி வென்றிருக்கிறது என்பது இந்தியாவுக்கு பாதகமான ஓர் உபரி தகவல்! அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் - பந்த் நீரும் நெருப்பும் ஒன்றாக சேர்ந்து பேட்டிங் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கேஎல் ராகுல்–பந்த் இருவரின் பார்ட்னர்ஷிப். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் பந்த்தின் காயமடைந்த விரலை குறிவைத்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வியூகம் வகுத்தார். பந்த்திற்கு எதிராக வழக்கத்துக்கு மாறாக பீல்டர்களை வளையத்துக்குள் நிற்கவைத்து அவர் தாக்குதல் தொடுத்தார். ஆர்ச்சர் வீசிய நாளின் முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகள் விளாசினாலும், பிறகு சூழலை புரிந்துகொண்டு முதல் சில ஓவர்களுக்கு பந்த் பொறுமையை கடைபிடித்தார். ஆர்ச்சரின் பந்துவீச்சில் மிகச் சொற்பமான பந்துகளையே பந்த் எதிர்கொண்டார். காயமடைந்த சக வீரருக்காக ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுல் சந்திக்க துணிந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் முதல் நாள் ஆட்டத்தில் பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட்டுக்கு போப் கை கொடுத்தது நினைவுக்கு வருகிறது. கார்ஸை கொண்டு பந்த் மீது பவுன்சர் தாக்குதல் நடத்தினார் ஸ்டோக்ஸ். அந்த பந்துகளை எதிர்கொள்ளும் போது பந்த் வலியால் அவதிப்பட்டதை பார்க்க முடிந்தது. ஆனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகம் ஒருகட்டத்தில் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. ஒருபக்கம் பந்த் தன் பாணியில் ஆவேசமாக பவுண்டரியும் சிக்ஸரும் பறக்கவிடும் போது, மறுபுறம் ராகுல் தன் கிளாஸ் என்னவென்பதை காட்டினார். இருவருடைய ஆட்டம் முழுவதும் நேரெதிரான டெக்னிக் கொண்டதாக இருந்தது. பந்த், வலியை பொருட்படுத்தாமல் முன்னும் பின்னும் நகர்ந்து பந்துவீச்சாளர்களின் லெங்த்தை குலைத்து ரன் குவித்தார். ராகுல் பந்தை நேரம் கொடுத்து உள்ளே வரவழைத்து கடைசி நொடியில் விளையாடி ரன் சேர்த்தார். புல் (pull) ஷாட் விளையாடும் முறையிலும் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. பந்த் தன் முழு பலத்தையும் கொடுத்து பவுன்சர் பந்துகளை பறக்கவிட்ட போது, ராகுல் எவ்வித சிரமமும் இன்றி மேலிருந்து கீழாக சாமர்த்தியமாக (Top to bottom) பந்தை புல் ஷாட் அடித்தார். இந்த தொடரில் டெக்னிக்கலாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ராகுல்தான் என்று சந்தேகமே இல்லாமல் சொல்ல முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல். ராகுல் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்த பென் ஸ்டோக்ஸ் உணவு இடைவேளைக்கு சில பந்துகள் மட்டும் இருந்த நிலையில் 248 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டும் இழந்து இந்தியா வலுவான நிலையில் இருந்தது. அப்போது ராகுல் 98 ரன்களுடன் எதிர்முனையில் (Non striker end) இருந்தார். Lunch–க்கு முன்பாக ராகுலுக்கு சதமடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பஷீர் பந்தில் இல்லாத ரன்னுக்கு அவசரப்பட்டு ஓடி, ஸ்டோக்ஸ் கையால் ரன் அவுட்டானார் பந்த். சதத்தை எட்டுவது என்பது ஒரு வீரருக்கு முக்கியமான ஒன்றுதான். நீண்ட நேர உழைப்பின் ஊதியம் சதம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அணியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனி நபர் சாதனைக்கு அவர்கள் முன்னுரிமை அளித்ததால் இந்தியா பெரும் விலை கொடுக்க நேரிட்டது. மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நன்றாக செட் ஆகியிருந்த பந்த் - ராகுல் ஜோடி பிரிய நேரிட்டது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் ரன் அவுட்டான காட்சி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரூட் 99 ரன்களுடன் இருக்கும் போதும் 1 ரன்னுக்கு அவசரப்படவில்லை என்பது இரு அணியினரின் முன்னுரிமைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது. ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம். இரைக்காக சிறுத்தை பதுங்குவதை போல காத்திருந்த அவர், பந்த் ஓடிய அடுத்த நொடியே விக்கெட் என்று மனதில் குறித்துக் கொண்டார் என்பது போல இருந்தது அவருடைய வேகமான த்ரோவும் அதன் பிறகான அவருடைய கொண்டாட்டமும். முழு உடற்தகுதியில் இருக்கிறாரா என்பது விவாதமான நிலையில், 100 பந்துகளுக்கு மேல் பேட்டிங்கின் போது எதிர்கொண்டு, முக்கியமான ரன் அவுட் ஒன்றை செய்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, கூடவே கேப்டன்சியும் செய்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம் கை கொடுத்த ஜடேஜா சதமடித்து அடுத்த சில பந்துகளில் கவனத்தை தொலைத்து விக்கெட்டை ராகுல் பறிகொடுத்தார். கேஎல் ராகுலுக்கு நிகரான திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் இன்று கிரிக்கெட் உலகில் மிகவும் குறைவு. ஆனாலும் முக்கியமான கட்டத்தில் சோம்பலாக விளையாடி விக்கெட்டை இழக்கும் பலவீனம் இருப்பதால்தான் அவருடைய சராசரி 40–க்கும் குறைவாக இருக்கிறது. ஒரு உச்சபட்ச பேட்ஸ்மேன் சதத்தை எட்டிய பிறகு அவ்வளவு எளிதாக விக்கெட்டை பறிகொடுக்கமாட்டார். ராகுல் விக்கெட்டுக்கு பிறகு தடுமாறிய இந்திய அணியை ஜடேஜா–நிதிஷ் ரெட்டி இணை தூக்கி நிறுத்தியது. ஒரு டெஸ்ட் போட்டியின் தலையெழுத்தை மூன்றாம் நாள் ஆட்டம்தான் தீர்மானிக்கும் என்பார்கள். இருவரில் ஒருவர் விரைவில் ஆட்டம் இழந்திருந்தாலும் இந்தியாவுக்கு பின்னடைவாக முடிந்திருக்கும். ரன்னுக்கு அழைக்கும் போது இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாதது துலக்கமாக வெளிப்பட்டது. 2, 3 முறை ரன் அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பினார்கள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் அசத்திய நிதிஷ் ரெட்டி, சரியான கால்பாடம் (Footwork) இல்லாவிட்டாலும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து விளையாடினார். ஸ்டோக்ஸ் வீசிய ஒரு அட்டகாசமான பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் ரெட்டி ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம். ஆனால், ஏனோ இந்த டெஸ்டில் இந்தியா வென்றாலும் ஜடேஜாவின் பங்களிப்பை பற்றி யாரும் பேசப்போவதில்லை. ஸ்டோக்ஸ் எந்தளவுக்கு தன் அணிக்கு பங்களிக்கிறாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவுக்கு ஜடேஜா உதவுகிறார். ஆனால் அவர் பெயர் என்றும் தலைப்பு செய்தியாக மாறுவதில்லை. ஜடேஜா–சுந்தர் பார்ட்னர்ஷிப்பின் போது, எல்லாருடைய கண்களும் சுந்தர் மீதுதான் இருந்தன. ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான டெக்னிக்கை கொண்டவர் சுந்தர். இந்திய அணி அவருக்கு இன்னும் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அதேநேரம், ஜடேஜாவின் பேட்டிங் சோடை போனது என்று சொல்லிவிட முடியாது. வேகப்பந்து வீச்சுக்கு பின்னால் செல்ல வேண்டும்; சுழற்பந்து வீச்சுக்கு முன்னால் நகர வேண்டும் என்பது பேட்டிங்கின் அடிப்படை என்பார்கள். அதை கனக்கச்சிதமாக நேற்று ஜடேஜா செய்ததை பார்க்க முடிந்தது. இப்படி சரியாக செய்வதிலேயே ஒரு மெக்கானிக்கல் தன்மை வந்து, அவருடைய பேட்டிங் வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்றுகூட சில சமயம் தோன்றுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம் சுவாரசியம் இழந்த ஆட்டம் கடைசிக் கட்டத்தில் சுந்தர் ஏன் அடித்தாடாமல் விட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒன்று ரிஸ்க் எடுத்து அடித்தாடி இருக்கலாம். இல்லை, tail ender–களை நம்பி ஸ்டிரைக் கொடுத்து கிடைக்கும் ஒன்றிரண்டு ரன்களை சேர்த்து அணி லீட் எடுக்க உதவியிருக்கலாம். கடைசி கட்டத்தில் தெளிவான திட்டத்துடன் அவர் விளையாடியது போல தெரியவில்லை. முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உயிரைக் கொடுத்து அதிவேகத்தில் பந்துவீசிய போதும் அதிர்ஷ்டம் கைகொடுக்காததால் ஆர்ச்சரால் நேற்றைய தினம் 1 விக்கெட்தான் எடுக்க முடிந்தது. இந்த இன்னிங்சில் ஒட்டுமொத்தத்தில் 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்திய அணியின் முதல் விக்கெட்டையும் (ஜெய்ஸ்வால்) கடைசி விக்கெட்டையும் (வாஷிங்டன் சுந்தர்) ஆர்ச்சர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் பஷீர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியதால் ரூட் சுழற்பந்து வீசவேண்டிய நிலை ஏற்பட்டது. காயம் இடது கையில் (Non bowling arm) என்பதால் நான்காவது இன்னிங்சில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம். நாளின் இறுதியில் இங்கிலாந்தை 2-3 ஓவர்கள் பேட்டிங் செய்ய வைத்துவிட வேண்டும் என்ற இந்தியாவின் வியூகம் பலிக்கவில்லை. பும்ராவின் முதல் ஓவரில் கிராலி தன்னுடைய முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி நேரத்தை இழுத்தடித்தார். பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராலி செயல்பட்டது போன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜாக் கிராலியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார். இந்த சேட்டைகள் எல்லாம் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான் என்ற போதும் இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்திய விதம், கோலியை நினைவூட்டியது. இந்திய அணியில் கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எதிரணியினரிடம் ஆக்ரோஷம் காட்டுவதில் விராட் கோலி பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்தினார். மைதானத்தில் கில் - கிராலி மோதிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிராமா மூன்றாவது நாளின் இறுதியில் இந்த டெஸ்டுக்கு ஒரு விறுவிறுப்பை கொண்டுவந்துள்ளது. இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் சமநிலை பெற்றிருப்பதால் இன்றைய நான்காவது நாள் ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சிறப்பாக செயல்படும் அணியின் கையே இந்த டெஸ்டில் ஓங்கும் என்று கூறலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39z3r31e3lo
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
அகமதாபாத்தில் எயார் இந்தியா பேரழிவில் சிக்கியது எப்படி? நொடிக்கு நொடி நடந்து என்ன? ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை 13 JUL, 2025 | 11:19 AM விமானம் புறப்பட்ட ஒரு நொடிக்குள், இயந்திர எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த எயார் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்து, இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகப் பதிவாகியுள்ளது. 260 உயிர்களைப் பலிகொண்ட இந்த துயரச் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தால் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, விபத்துக்கான அதிர்ச்சியூட்டும் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது: விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே, அதன் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு ஒரு நொடி இடைவெளியில் மாறியதே விபத்துக்குக் காரணம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது இந்த ஆரம்ப அறிக்கை, நிகழ்வின் ஒவ்வொரு நொடியையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது, இது விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான மிகத் துல்லியமான தகவலை அளிக்கிறது. நொடிக்கு நொடி நடந்து என்ன? காலை 11:17: எயார் இந்தியா ட்ரீம்லைனர் VT-ANB விமானம் டெல்லியில் இருந்து AI423 விமானமாக அகமதாபாத்தில் தரையிறங்குகிறது. பிற்பகல் 1:18:38: விமானம் விமான நிலையத்தின் பே 34 இல் இருந்து புறப்படுவது கவனிக்கப்படுகிறது. பிற்பகல் 1:25:15: விமான ஊழியர்கள் டாக்ஸி அனுமதி கோர, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அனுமதி அளிக்கிறது. விமானம் ரன்வே 23 நோக்கி டாக்ஸிவே R4 வழியாகச் சென்று, புறப்படுவதற்காக வரிசையில் நிற்கிறது. பிற்பகல் 1:32:03: விமானத்தின் கட்டுப்பாடு தரைக்கட்டுப்பாட்டில் இருந்து டவர் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படுகிறது. பிற்பகல் 1:37:33: புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. பிற்பகல் 1:37:37 மணி: விமானம் புறப்படத் தொடங்குகிறது. பிற்பகல் 1:38:39 மணி: விமானம் தரையிலிருந்து மேலே எழும்புகிறது. விசாரணை அதிகாரிகள், காற்று/தரை சென்சார்கள் 'ஏர் மோட்'க்கு மாறுவதைக் குறிப்பிடுகின்றனர், இது புறப்படுதலுக்கு இணக்கமானது. பிற்பகல் 1:38:42 மணி: விமானம் அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை அடைகிறது. உடனடியாகப் பிறகு, என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறுகின்றன, ஒரு வினாடி இடைவெளியில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக. "என்ஜின்களுக்கு எரிபொருள் வழங்கல் துண்டிக்கப்பட்டதால், என்ஜின் N1 மற்றும் N2 அவற்றின் புறப்படும் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின." காக்பிட் குரல் பதிவுகள் ஒரு குழப்பமான தருணத்தைப் பதிவு செய்துள்ளன: ஒரு விமானி மற்ற விமானியிடம் ஏன் எரிபொருளைத் துண்டித்தார் என்று கேட்க, மற்றொரு விமானி தான் செய்யவில்லை என்று பதிலளிக்கிறார். விமான நிலைய சிசிடிவி காட்சிகள், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஆரம்பகட்ட ஏறும் போது ராம் ஏர் டர்பைன் (RAT) வெளியேறுவதைக் காட்டுகின்றன. "விமான நிலைய சுற்றுச்சுவரைக் கடக்கும் முன் விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது," என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டது. பிற்பகல் 1:38:47 மணி: இரண்டு என்ஜின்களின் மதிப்புகளும் குறைந்தபட்ச செயலற்ற வேகத்திற்குக் கீழே குறைகின்றன. RAT இன் ஹைட்ராலிக் பம்ப் ஹைட்ராலிக் சக்தியை வழங்கத் தொடங்குகிறது. பிற்பகல் 1:38:52 மணி: என்ஜின் 1 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்ச் மீண்டும் 'கட்ஆஃப்' நிலையிலிருந்து 'ரன்' நிலைக்கு மாற்றப்படுகிறது. பிற்பகல் 1:38:56 மணி: என்ஜின் 2 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சும் இதேபோல் 'ரன்' நிலைக்கு மீட்டமைக்கப்படுகிறது. விசாரணை அறிக்கை கூறுகிறது: "விமானத்தில் இருக்கும்போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் CUTOFF இலிருந்து RUN க்கு நகர்த்தப்படும்போது, ஒவ்வொரு என்ஜினின் முழு அதிகார டிஜிட்டல் என்ஜின் கட்டுப்பாடு (FADEC) தானாகவே மறுதொடக்கம் மற்றும் உந்துவிசை மீட்பு வரிசையை நிர்வகிக்கிறது." "என்ஜின் 1 இன் மைய வேகம் குறைவது நின்று, தலைகீழாகி, மீட்சிக்கு முன்னேறத் தொடங்கியது." "என்ஜின் 2 மீண்டும் பற்றவைக்க முடிந்தது, ஆனால் மைய வேகக் குறைவை தடுக்க முடியவில்லை." பிற்பகல் 1:39:05: விமானிகளில் ஒருவர் "MAYDAY, MAYDAY, MAYDAY" என்று அவசர அழைப்பை விடுக்கிறார். பிற்பகல் 1:39:11: விமானத்தில் இருந்து தரவு பதிவு நிறுத்தப்படுகிறது. பிற்பகல் 1:44:44: விபத்து தீயணைப்பு வாகனங்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளுக்காக விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறுகின்றன. இந்த அறிக்கை, ஒரு சில நொடிகளில் எடுக்கப்பட்ட தவறான அல்லது தற்செயலான ஒரு செயல், எப்படி ஒரு பேரழிவிற்கு வழிவகுத்தது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த விபத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விரிவான விசாரணை தொடரும் நிலையில், இந்த ஆரம்ப அறிக்கை எதிர்கால விமானப் பாதுகாப்பிற்கான முக்கியமான பாடங்களை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/219848
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் - அமெரிக்காவின் தடை குறித்து ஐநா அறிக்கையாளர் Published By: RAJEEBAN 11 JUL, 2025 | 12:35 PM குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடகபதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஒன்றாக நிமிர்ந்துநிற்போம் என தெரிவித்துள்ள அவர் காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரினது கண்களும் தொடர்ந்தும் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் - உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டுதுண்டாக்கப்படும் காசா மீது இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்செஸ்கா மிடில் ஈஸ்ட் ஐயின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில் நான் யாரையோ பதற்றமடையச்செய்திருக்கின்றேன் போல தோன்றுகின்றது, நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போது காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள் ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார். காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி, பிரான்ஸ், கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும் அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/219717
-
பூமியின் சுழற்சி வேகம் குறையும் போக்கு மாறி, கடந்த 20 ஆண்டுகளில் வேகமெடுத்து சுழல்வது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 12 ஜூலை 2025, 08:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஜூலை 9-ஆம் தேதி, பூமி வழக்கத்தைவிட 1.38 மில்லி விநாடிகள் வேகமாக சுழன்றது. இதனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடித்தது. இது வரலாற்றில் பதிவான மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பன்னாட்டு பூமி சுழற்சி & குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் மேலும் அடுத்தடுத்து குறுகிய நாட்களை எதிர்பார்க்கிறார்கள். ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025- ஆகிய நாட்களில் ஒரு நாளின் நீளம் முறையே 1.388 மில்லி விநாடிகள் மற்றும் 1.4545 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும். இது கண் சிமிட்டும் நேரத்தைவிட (சுமார் 100 மில்லி விநாடிகள்) கணிசமாகக் குறைவு. 'ஒரு நாள்' என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும். நாம் பொதுவாக ஒரு நாளை 24 மணி நேரம் - அதாவது பூமி தன்னைத்தானே சுழல எடுக்கும் காலம் எனக் கருதுகிறோம். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல. வெகு தொலைவில் உள்ள விண்மீனின் கிரகம் ஒன்று 360 டிகிரி சுழன்ற பின்னர் அதே வான் நிலைக்கு திரும்ப சுமார் 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகள் ஆகும். இந்த கால அளவு 'நட்சத்திர நாள்' (Sidereal Day) என அழைக்கப்படுகிறது, இது நமது வழக்கமான 24 மணி நேரம் கொண்ட நாளை விட 4 நிமிடங்கள் குறைவாக உள்ளது. சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு (ஒரு மதியம் முதல் அடுத்த மதியம் வரை) நாம் நாளின் நீளத்தை அளந்தால், இந்த 'சூரிய நாள்' (Solar Day) வருடம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால், சூரியனுக்கு அருகில் இருக்கும் ஜனவரி மாதத்தில் வேகமாகவும், சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும் ஜூலை மாதத்தில் மெதுவாகவும் நகர்கிறது. மேலும் பூமியின் சாய்ந்த அச்சும் சூரிய நாளின் நீளத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக, உண்மையான சூரிய நாள் டிசம்பர் இறுதியில் 24 மணி 30 வினாடிகள் வரை நீளமாகவும், செப்டம்பர் நடுப்பகுதியில் 23 மணி 59 நிமிடங்கள் 38 வினாடிகள் எனக் குறுகியும் இருக்கும். நடைமுறை நேரக் கணக்கீட்டிற்காக, இந்த எல்லா மாறுபாடுகளின் சராசரியான 'சராசரி சூரிய நாளை' (Mean Solar Day) பயன்படுத்துகிறோம். இதுவே 24 மணி நேரம் (அல்லது 86,400 வினாடிகள்) என நாம் வரையறை செய்கிறோம். இதுவே நமது நாள்தோறும் பயன்படுத்தும் நேர அமைப்பின் அடிப்படையாகும். இதன் தொடர்ச்சியாகக் கடிகாரம் சரியாக 86,400 வினாடிகளைக் கடக்கும்போது ஒரு நாள் முடிந்துவிட்டது எனக் கருதுகிறோம். இதன் பொருள், 9 ஜூலை 2025 அன்று உண்மையான நாளின் நீளம் 23 மணி 59 நிமிடங்கள் 59.9985793 வினாடிகள் அல்லது 86,399.9986154 வினாடிகள் மட்டுமே இருந்தது; கடிகார நாளின் நீளமான 86,400 வினாடிகள் (24 மணி நேரம்) அல்ல. அறிவியல் பார்வையில் நாளின் நீட்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது. அன்றாட பேச்சுவார்த்தைகளில் "நாளின் நீட்சி" என்று குறிப்பிடும் போது, சூரியன் உதயமாகி அஸ்தமிக்கும் பகல் நேரம் அல்லது நமது கடிகாரங்களில் காணப்படும் 24 மணி நேரம் என புரிந்துக்கொள்கிறோம். ஆனால் பூமியின் சுழற்சியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இது நமது கிரகம் வழக்கத்தைவிட வேகமாக அல்லது மெதுவாக சுழல்வதை அளவிடும் ஒரு அலகு வரையறையாகும். பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) வெரி லாங் பேஸ்லைன் இன்டர்ஃபெரோமெட்ரி (VLBI) ரேடியோ தொலைநோக்கிகளை பயன்படுத்தி தொலைதூர ரேடியோ மூலங்களான குவாசர்களைக் கண்காணிக்கிறது. இந்த ரேடியோ மூலங்கள் வானத்தில் அதே துல்லியமான நிலைக்குத் திரும்புவதற்கான நேரத்தை அவர்கள் மிகத் துல்லியமாக அளக்கின்றனர். இதிலிருந்து பூமியின் மெய்யான சுழற்சி வேகம் கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடு யுனிவர்சல் டைம் (UT1) எனப்படும். விஞ்ஞானிகள் இந்த உண்மையான அளவீட்டை (UT1) நாம் நேரக் கணக்கீட்டில் பயன்படுத்தும் கடிகார நாளின் நீட்சியான 86,400 வினாடி நீண்ட சராசரி நாளுடன் ஒப்பிடுகின்றனர். இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, மில்லி வினாடிகளில் அளவிடப்படும் போது, அதைத்தான் விஞ்ஞானிகள் "நாளின் நீட்சி" (LOD) என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடுகின்றனர். நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது; ஒரு நாளின் நீட்சி கூடுகிறது என்பது பொருள். அதே போல எதிர்மறை மதிப்பு காணப்படும்போது, அது வேகமாக சுழல்கிறது, நாளின் நீட்சி குறைந்து விட்டது என்று பொருள். காலத்தைக் கணிக்கும் புதைபடிவங்கள் இன்றைய வானியலாளர்கள் பூமியின் சுழற்சி மாறுபாடுகளைக் கண்டறிய தொலைதூர குவாசர்களைப் பயன்படுத்தினால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுழற்சியைப் கண்டுபிடிக்க புதைபடிவ மரங்களையும் பவளப்பாறைகளையும் தொல்லுயிரி வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர். மரங்களின் அடிமரத்தில் ஆண்டுதோறும் வளரும் வருடாந்திர வளையம் போலவே, ருகோஸ் (rugose) மற்றும் ஸ்க்ளராக்டினியன் (scleractinian) போன்ற பவளங்கள் தங்கள் கால்சியம் கார்பனேட் கூடுகளில் தினசரி மற்றும் வருடாந்திர வளையங்களை உருவாக்குகின்றன. இவற்றில் தினசரி வளையங்கள் இரவு-பகல் சூரிய ஒளிச் சுழற்சியின் மாறுபாடுகளால் உருவாகின்றன. அதேநேரம், தடித்த வருடாந்திர வளையங்கள் பருவமாற்றங்களைக் காட்டுகின்றன. இந்தத் தினசரி வளையங்களை எண் தொகை செய்து ஆராய்ச்சியாளர்கள் பூமி ஒரு வருடத்தில் எத்தனை சுழற்சிகளை முடித்தது என்பதைக் கணக்கிடுகின்றனர். உதாரணமாக, மத்திய டெவோனியன் காலத்திய (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளப் புதைபடிவங்கள் வருடத்திற்கு 400 தினசரி வளையங்களைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அக்காலத்தில் பூமி வருடத்திற்கு 400 முறை சுழன்றுள்ளது. இதைவிட இளைய கார்பனிஃபெரஸ் காலத்திய (சுமார் 330 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளங்களில் வருடத்திற்கு 390 வளையங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அதாவது அன்று ஒரு வருடம் என்பது 390 நாட்கள். இது காலப்போக்கில் பூமியின் சுழற்சி வேகம் மெதுவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பூமி சுமார் 365.25 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. பூமியின் மாறும் சுழற்சியை வெளிப்படுத்தும் புராதன பதிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது. வரலாற்றாசிரியர்களும் இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் இணைந்துள்ளனர். கிமு 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த சூரிய, சந்திர கிரகணங்களின் வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்து அந்த கால பூமியின் சுழல் வேகத்தை கணக்கிட முனைந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது. நவீன கணினி மாதிரிகள் மூலம், ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகணத்தின் சரியான பாதையை மீண்டும் உருவாக்க முடிந்தது. எந்த வேகத்தில் பூமி சுழன்றால் பதிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி பாபிலோனிலிருந்து கிரகணம் புலப்பட்டிருக்கும் என கணினி மாதிரி கொண்டு ஆய்வு செய்தனர். இதன் வழியே அன்று பூமி தன்னைத்தானே சுழல எடுத்துக் கொண்ட நேரத்தை கணக்கிட முடிந்துள்ளது. இதுபோன்ற வரலாற்று ஆய்வுகளிலிருந்து இந்த வரலாற்றுக் காலப்பகுதியில் நாளின் நீட்சி (LOD) ஒரு நூற்றாண்டுக்கு சுமார் 1.74 முதல் 1.8 மில்லி வினாடிகள் வரை அதிகமாக இருந்துள்ளது என்பதாகும். அதாவது பூமி சுழலும் வேகம் குறைந்துள்ளது; நாளின் நீட்சி அதிகரித்துள்ளது. நாளின் நீட்சி அதிகரித்து வருகிறது மத்திய டெவோனியன் காலத்தில் (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), ஒரு நாள் வெறும் 22 மணி நேரம் (78,891 வினாடிகள்) மட்டுமே நீண்டிருந்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்குள் (50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), இது 23 மணி நேரமாக நீளமடைந்தது. சீன எழுத்தர்கள் விலங்கு எலும்புகளில் பொறித்த வானியல் குறிப்புகள் மற்றும் கிரகண பதிவுகளை ஆய்வு செய்த விஞ்நானிகள், கிமு 1200-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்றைய நாட்கள் 0.047 வினாடிகள் நீளமாகியுள்ளன எனக் கணக்கிட்டுள்ளனர். இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் 25 மணி நேரம் வரை நீளக்கூடும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். பூமியின் சுழற்சி நிலவின் ஈர்ப்பு விசை (tidal forces) மற்றும் பிற காரணிகளால் படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருக்கிறது என்பதே இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை. பூமியின் மாறும் சுழற்சியும் நேரத்தைச் சரிகட்டும் முறைகளும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1955இல் பிரிட்டனில் உருவாக்கப்பட்ட அணு கடிகாரம் 1960களில் உருவாக்கப்பட்ட நவீன அணு கடிகாரங்கள், நமது கிரகம் துல்லியமான நிலை வேகத்தில் சுழலவில்லை என்பதை வெளிப்படுத்தின. விஞ்ஞானிகள் தொலைதூர ரேடியோ சிக்னல்களைக் கண்காணிக்கும் போது, பூமியின் சுழற்சி வேகம் நாளுக்கு நாள் சிறிது மாறுபடுவதை கண்டறிந்தனர். பொதுவாக ஒரு நாளில், அதாவது 86,400 வினாடிகளில் ஒன்று அல்லது இரண்டு மில்லிவினாடிகள் வரை மட்டுமே மாறுபடுகின்றன என்றாலும், நமது கிரகம் சில நேரங்களில் எதிர்பாராத வகையில் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சுழல்கிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது. நாளின் நீட்சி (LOD) என அளக்கப்படும் இந்தச் சிறிய தினசரி மாறுபாடுகள் முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஆண்டுக்கணக்காகக் கூட்டிப்பார்க்கும்போது, இந்த வேறுபாடு கணிசமாக கூடிக்கொண்டே போகின்றது. சூரியனைச் சுற்றி பூமியின் 365.2422 நாள் சுற்றுப்பாதையுடன் நமது 365 நாள் காலண்டரை சீரமைக்க ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு நாளை (லீப் டே) சேர்க்கிறோம். அதேபோல், இந்த சுழற்சி மாறுபாடுகளுக்கான திருத்தமும் தேவைப்படுகிறது. இங்குதான் 'லீப் செகண்ட்' (தாவல் வினாடி) பங்களிக்கிறது. 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட லீப் செகண்ட்கள், நமது அதிநவீன அணு கடிகாரங்களை பூமியின் உண்மையான சுழற்சியுடன் ஒத்திசைக்க உதவுகின்றன. பூமியின் சுழற்சி மெதுவாகும் போது, நாள் நீட்சி கூடும்போது நாம் நேர்மறை லீப் செகண்ட் சேர்க்கிறோம். வேகமானால் (இது இதுவரை நடக்கவில்லை), எதிர்மறை லீப் செகண்ட் நீக்க வேண்டியிருக்கும். இதுவரை செய்யப்பட்ட 27 சரிசெய்தல்களும் நேர்மறை வகையைச் சேர்ந்தவையே. 2016ல் இடம்பெற்ற கடைசி சரிசெய்தல், சமீபத்திய சில தசாப்தங்களில் நமது கிரகம் சுழலும் வேகம் படிப்படியாக மெதுவாகி வருவதைக் காட்டுகிறது. பூமியின் சுழற்சி ஏன் ஒழுங்கற்று தள்ளாடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமி சுழலும் வேகம் படிப்படியாக குறைந்து தேய்ந்து, நாளின் நீட்சி கூடுதலடைந்து கொண்டே வருகின்றது. பல மில்லியன் ஆண்டுகளாக, நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் சுழற்சியை மெதுவாக்கி வருகிறது. இந்தத் தொடர்ச்சியான இழுபறி, பூமியின் சுழற்சி ஆற்றலை நிலவுக்கு மாற்றுகிறது. இதன் விளைவாக, பூமி சுழல் வேகம் படிப்படியாக குறைந்து தேய்ந்து, நாளின் நீட்சி அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதேநேரம், நிலவு வருடத்திற்கு சுமார் 3.8 செ.மீ தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வே கடந்த 30-40 ஆண்டுகளில் லீப் செகண்ட்களை (தாவல் வினாடிகள்) சேர்த்துக் கொண்டே வர வேண்டிய காரணமாக அமைந்துள்ளது. ஆனால் பூமியின் தினசரி சுழற்சி மாறுபாடுகளுக்கு என்ன காரணம்? விஞ்ஞானிகள் இரண்டு முக்கிய காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்: வானியல் மற்றும் புவியியல் காரணிகள். நிலவு பூமியை ஒரு எளிய வட்டத்தில் சுற்றுவதில்லை; அதன் பாதை சாய்ந்தும் தடுமாறியும் உள்ளது. நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை காலப்போக்கில் மாறுகிறது. அதன் ஈர்ப்பு விளைவுகள், அது பூமியின் பூமத்திய ரேகையின் வடக்கில் அல்லது தெற்கில் இருக்கும்போது மாறுபடுகின்றன. ஜூலை 9, 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025 அன்று நிகழும் "லூனார் ஸ்டாண்ட்ஸ்டில்" போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது, நிலவு பூமத்திய ரேகையிலிருந்து அதன் அதிகபட்ச தொலைவில் (ஒரு துருவத்தை நோக்கி) இருக்கும் போது, பூமியின் சுழற்சிக்கு ஒரு கூடுதல் "தள்ளுதலை" அளிக்கிறது. வியாழன் போன்ற தொலைதூர கிரகங்களும் சிறிய ஈர்ப்பு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியின் நிறை அமைப்பு மாறும்போது எல்லாம் பூமியின் சுழல்வேகம் மாறுபடும். பூமியும் ஒரு நிலையான மேடை அல்ல. 2004 சுமத்ரா பூகம்பம் போன்ற பெரும் பூகம்பங்கள், பூமியின் நிறை மறுபகிர்வு மூலம் அதன் சுழற்சியை மாற்றியமைக்கின்றன. அந்தப் பூகம்பம், பூமியின் நிறையை உள்நோக்கி மாற்றியதன் விளைவாக, நாட்களை 2.68 மைக்ரோவினாடிகள் குறைத்தது. ஒரு சுழலும் அலுவலக நாற்காலியை கொள்வோம்: அதில் அமர்ந்து சுழலும்போது உங்கள் கைகளை உடலுக்கு அருகில் கொண்டு வரும்போது மேலும் வேகமாகச் சுழல்கிறீர்கள்; கைகளை விரிக்கும்போது மெதுவாகிறீர்கள். இதே போல பூமியின் நிறை அமைப்பு மாறும்போது பூமியின் சுழல் வேகமும் மாறுபடும். பூகம்பங்கள், காற்று அல்லது கடல் நீரோட்டங்கள் மூலம் பூமியின் நிறை மறுபகிர்வு ஏற்படும்போது, பூமியும் இதேபோல் செயல்படுகிறது. வளிமண்டலமும் அதன் பங்கை வகிக்கிறது. பருவக்காற்றுகள் மற்றும் எல் நினோ போன்ற காலநிலை முறைகள், மலைகள் மற்றும் கடல்களுக்கு எதிராக மோதி, பூமியின் சுழற்சியில் கண்ணுக்குத் தெரியாத வேகத்தடை அல்லது வேகமுடுக்கிகளாகச் செயல்படுகின்றன. கடல் நீரோட்டங்கள் கூட, பெரும் நீர்ப்பகுதிகளை நகர்த்துவதன் மூலம் நமது கிரகத்தின் சுழற்சி விகிதத்தை மாற்றுகின்றன. இந்த அனைத்து சக்திகளும் சேர்ந்து, ஒவ்வொரு நாளையும் முந்தைய நாளிலிருந்து சற்று வித்தியாசமாக்குகின்றன. நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு எதிரொலிக்கும்? மனிதர்களுக்கு ஒரு மில்லிவிநாடி என்பது பொருட்டே அல்ல; கண் சிமிட்டக் கூட சுமார் 100 மில்லிவினாடிகள் தேவை. ஜூலை 9 ஆம் தேதி, பூமியின் சுழற்சி வழக்கத்தைவிட 1.38 மில்லிவினாடிகள் குறைவாக இருந்தபோது, நமது நாள் 23 மணி 59 நிமிடங்கள் மற்றும் 59.9985793 வினாடிகள் நீளமாக இருந்தது. இது மிகச் சிறிய மாற்றமாகத் தோன்றலாம்; இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்? நவீன உயர் தொழில்நுட்ப உலகில், இந்தச் சிறிய நேரப் பகுதிகள் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. வெறும் 1.38 மில்லிவிநாடிகளில், பூமத்திய ரேகையில் பூமி சுமார் 62.66 சென்டிமீட்டர் சுழல்கிறது. ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள் அல்லது விண்கலங்களின் இணைப்புக்கு, நானோ வினாடி அளவிலான துல்லியம் கூட மிக முக்கியமானது - இல்லையெனில் இலக்குகள் தவறவிடப்படும் மற்றும் பணிகள் தோல்வியடையும். நாம் தினசரி பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு இந்தத் துல்லியம் இன்னும் முக்கியமானது. ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களில் உள்ள அணு கடிகாரங்கள் நானோவினாடி (வினாடியின் பில்லியனில் ஒரு பகுதி) துல்லியத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் ஒரு மைக்ரோவினாடி பிழை கூட உங்கள் இருப்பிடத்தை 300 மீட்டர் வரை தவறாகக் காட்டலாம். ஒரு மில்லிவினாடி பிழை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் வரை வழிநடத்தல் அமைப்புகளை தவறாக வழிநடத்தும். டிஜிட்டல் உலகில், மில்லிவினாடி துல்லிய கணிப்பு மிகமிக அவசியம். கணினி வலையமைப்புகள் செயல்திறனைக் கண்காணிக்கவும் சிக்கல்களைத் தீர்க்கவும் மில்லிவினாடி நேர முத்திரைகளைப் பயன்படுத்துகின்றன. இணைய வங்கியியல் அமைப்புகள் மோசடியைத் தடுக்க ஒரு மைக்ரோவினாடி வரை பரிவர்த்தனைகளைப் பதிவு செய்கின்றன. ஆகவே, பூமியின் சுழற்சியில் மைக்ரோவிநாடிகள் அளவுக்கு ஏற்படும் சிறு மாறுபாடுகள் கூட நம் அன்றாட வாழ்க்கையில் எதிரொலிக்கக் கூடும். வானியலில் கூட, மில்லிவினாடி துடிப்புகளின் (pulsars) ஆய்வுக்குச் சரியான நேர அளவீடுகள் தேவைப்படுகின்றன. நேரத்தின் அரசியல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1999இல் நடந்த கார்கில் போர் பல ஆண்டுகளாக, இந்தியா தன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்காக (ஏவுகணை வழிகாட்டுதல் போன்றவை) அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் புவிசார் வழிகாட்டி அமைப்புகளை (ஜிபிஎஸ் போன்ற) முறைமைகளை நம்பியிருந்தது. கார்கில் போரின்போது ஒரு வல்லரசு நாடு துல்லிய சேவைகளைத் திடீரென மறுத்ததால், இந்தச் சார்பு ஆபத்தானது என்பது தெளிவானது. இந்தக் கடினமான பாடம் இந்தியாவை தனது சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி முறைமையான IRNSS (இந்தியப் பிராந்திய வழிகாட்டி செயற்கைக்கோள் முறைமை) என முன்னர் அழைக்கப்பட்ட நாவிக்-ஐ (NavIC - Navigation with Indian Constellation) உருவாக்கத் தூண்டியது. ஆனால் தற்சார்பு வழிகாட்டி முறைமையை உருவாக்குவது தனிச் சவால்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு செயற்கைக்கோளிலும் மிகத் துல்லியமான அணு கடிகாரங்கள் தேவைப்பட்டன. ஆரம்பத்தில், இஸ்ரோ மேற்கு நாடுகளிலிருந்து அணு கடிகாரங்களை இறக்குமதி செய்தது. ஆனால் பல செயற்கைக்கோள்களில் இவை தோல்வியடைந்தன. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதியெனச் சிலர் கூறுகின்றனர். இந்தத் தோல்வி இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தன்னிறைவு அடைய உறுதி பூண்ட இஸ்ரோ, அணு கடிகாரங்களை இந்தியாவிலேயே உருவாக்கும் சவாலை ஏற்றது. ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர் தலைமையில் நாட்டின் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள், சொந்தமாக ருபிடியம் அணு கடிகாரங்களை வெற்றிகரமாக உருவாக்கினர். முதல் "மேட் இன் இந்தியா" அணு கடிகாரம் 2023 மே மாதம் ஏவப்பட்ட 10வது நாவிக் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டது. அதன் பின்னர், புதிய என்விஎஸ் தொடர் நாவிக் செயற்கைக்கோள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த அணு கடிகாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. விரைவில், இந்திய கணினிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் தொலைபேசிகள், வெளிநாட்டு வழிகாட்டி மற்றும் நேர சேவைகளை நம்பாமல், இந்தச் சொந்த அணு கடிகாரங்களைப் பயன்படுத்தி தங்கள் நேரத்தை ஒத்திசைக்க்கும் அமைப்பு உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. பூமியின் சுழற்சி மர்மம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி வேகமெடுத்து சுழல்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக, பூமியின் சுழற்சி படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருந்தது, இதன் விளைவாக நமது நாட்கள் நீளமாயின. ஆனால் சமீபத்தில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்து வருகிறது. 2020 முதல், பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் நமது கிரகம் வேகமெடுத்து சுழல்வதை கவனித்துள்ளனர். உண்மையில், 1960களில் அணு கடிகாரங்கள் நேரத்தை அளவிடத் தொடங்கியதிலிருந்து, 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் மிகக் குறுகிய 28 நாட்களைப் பதிவு செய்துள்ளது. இந்த எதிர்பாராத வேகமயக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 27 முறைகளில் செய்ததுபோல் லீப் செகண்ட் சேர்ப்பதற்குப் பதிலாக, முதல் முறையாக ஒரு வினாடியை கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், பூமி ஏன் திடீரென வேகப்படுகிறது? விஞ்ஞானிகள் நமது கிரகத்தின் உருகிய இரும்பு-நிக்கல் கோர் (மையம்) பகுதியில் நிறை மறுபகிர்வு ஏற்பட்டு, சுழற்சியைப் பாதிக்கிறது எனச் சந்தேகிக்கின்றனர். எனினும், நமது உலகம் ஏன் வேகமாகச் சுழல்கிறது என்பதை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி ஏன் வேகமெடுத்து சுழல்கிறது என்பது இன்னமும் மர்மம் தான். (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm208zp2dg7o
-
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி
12 JUL, 2025 | 01:04 PM தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19) மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மகேந்திரன் சங்கீதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் கற்றல் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக பேருந்து ஒன்று தேவை என்ற அடிப்படையில் அதனை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதியை திரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அனுமதிச் சீட்டு, நன்கொடை மற்றும் அனுசரணை மூலமும் நிதி திரட்டப்படவுள்ளது. 25 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும். குறித்த இசை நிகழ்ச்சிக்கு முன் தினம் 18ம் திகதி மாலை ஆறு மணிக்கு பாடகர் ஶ்ரீநிவாசுடன் கலந்துரையாடலுக்கும் இராப்போசன விருந்து உண்பதற்கான சந்தர்ப்பத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கும் 5 ஆயிரம் ரூபாய் அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. அனைத்திலும் கிடைக்கும் வருமானமும் பேருந்து வாங்குவதற்காகவே செலவிடப்படும்.சமூகத்தில் உள்ள அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம் - என்றனர். https://www.virakesari.lk/article/219797
-
நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
நெடுந்தீவுக்கு அருகில் கவிழ்ந்த படகு.. மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் நெடுந்தீவிற்கு அருகில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு கடலில் மூழ்கியுள்ளது. எனினும் அதில் பயணித்த 12 பயணிகள் உள்ளிட்ட 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகொன்றின் பணியாளர்கள் அவதானித்து விரைந்து செயற்பட்டு சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும் ஓரிரு நிமிடங்களில் குறித்த விபத்திற்குள்ளான படகு முழுமையாக கடலில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் கடற்படையின் படகு குறித்த இடத்திற்கு விரைந்து மீட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmd09uyjg012kqp4k8duubfkx
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், சட்டமா அதிபரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 12 JUL, 2025 | 10:09 AM கடந்த 1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்படட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிவான் குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டார். அதனடிப்படையில் நில அளவைத் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், தொல்லியல் திணைக்களம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சியல் நிறுவகம் என்பன தமது ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாகச் சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முடிவுறுத்தி மன்றுக்கு திட்ட வரைபையும் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், மன்றுக்கு சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை நீதிமன்றுக்கு அறிவிப்பதற்குத் தவணையொன்றை வழங்குமாறு மன்றுக்குத் தெரிவித்திருந்தனர். அதன் பிரகாரம், 04.10.2020 இல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பிலிடப்பட்டிருந்தது. இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 11.07.2025 ஆந் திகதியாகிய இன்று குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் மற்றும் வழக்கேட்டை மிக நுணுக்கமாக ஆராய்ந்த நீதிமன்றமானது முறைப்பாட்டாளரின் முறைப்பாடானது நீதிமுறையாக அணுகப்படாமல் நிலுவையாக உள்ளமையானது நீதியின்பாற்பட்டதல்ல எனும் அடிப்படையில் குறித்த வழக்கை எதிர்வரும் 21.07.2025 க்கு தவணையிடுவதாகவும் குறித்த தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அறிவித்தல் அனுப்புமாறு கட்டளை ஆக்கியுள்ளார். குறித்த இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான முஹைமீன் காலித், முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/219782
-
நாட்டைப் பிரிக்கும் முயற்சி இன்னும் மாறவில்லை
நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்வதாக பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் இதற்காக பல்வேறு உத்திகளைத் கையாள்வதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். கொக்காவில் தாக்குதலின் 35வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார். "நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தசம புள்ளிக் கூட மாறவில்லை. இந்தியா இப்போது இலங்கைக்கு 300 பில்லியன் ரூபாய் கடன் நிவாரணம் வழங்கப் போகிறது. இலங்கை இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் டொலர்களை மீள அறவிடாமல் நமது பெரிய சகோதரர் கடன் நிவாரணம் வழங்கப் போகிறார்.... புலம்பெயர் மக்களைப் பயன்படுத்தியேனும், அப்பாவி தமிழ் மக்களைப் பயன்படுத்தியேனும், தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியேனும், நமது நாட்டை பொருளாதார ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒரு நாடாக நிலைகுலைத்து இறுதியில் 29வது இந்திய மாநிலமாக உருவாக்கி, அதன் பின்னர் கிழக்கு மற்றும் வடக்கை உடைத்த உடனேயே 30வது இந்திய மாநிலமாக உருவாக்கும் திட்டமே இடம்பெறுகின்றது" என்றார். https://adaderanatamil.lk/news/cmd09a7rk012jqp4kv7liupqu
-
பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை விஜயம்
12 JUL, 2025 | 09:51 AM பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை விஜயத்திற்குப் பின் பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் இந்தோனேசியாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இரு நாடுகளின் வருகைகளின் போதும், இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219780
-
வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி இந்த சம்பவத்தை உருவாக்கி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவர் தகவல் வழங்கியுள்ளார். அதன்படி, நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது. அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன. பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (12) மேற்கொள்ளப்படவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmczxmhxe0125qp4k3rqodadb
-
தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!
தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா! Jul 12, 2025 - 20:21 தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கையெழுத்து மற்றும் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமவுரிமை இயக்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து மட்டக்களப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இராஜேந்திரா, சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவும், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் அனைத்து இன மக்களின் உரிமையினை உறுதி செய்யும் சமவுரிமையுடைய அரசியலமைப்பினை உருவாக்கு ஆகிய கோரிக்கைகளை அடங்கியதாக இந்த கையெழுத்து போராட்டம் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வட கிழக்கில் இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளே இந்த சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இன்று வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.இன்றுவரையில் அதில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னெடுக்கப்படுகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கடந்த காலத்தில் பல வழிகளிலும் பல செயற்பாடுகளை முன்னெடுத்த அமைப்பு ஜேவிபியாகும். ஆனால் அந்த பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி இன்று 12பேரை இந்த தேசிய மக்கள் சக்தி அரசு கைது செய்துள்ளது. இந்த அரசாங்கமும் பழைய அரசுகளின் அடி பாதையிலேயே செல்கின்றது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிடுமாறு அவர்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பில் கோருகின்றேன். கடந்த தேர்தல் காலத்தில் யாழில் வைத்து வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் காணாமல்ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு நாங்களும் செயற்படுவோம் என்று கூறியவர்கள் இன்று வரையில் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. பயங்கரவாத தடை பழைய சட்டத்தினை திருத்தப்போகின்றோம், நீக்கப்போகின்றோம் என்று கூறியவர்கள் இன்று புதிய பயங்கரவாத சட்டத்தினை கொண்டு வருகின்றார்கள். கடந்த காலத்தில் ரணில், கோத்தபாய ராஜபக்ஸவின் பாதையிலேயே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான குரல்கொடுக்கவேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டார். நானும் இஸ்ரேலுக்கு எதிராக முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆனால் இந்த செயற்பாடு இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தமிழ்-முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. மக்கள் இதற்காக இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 30 வருட காலமாக வடகிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அவர்களின் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி பிரச்சினையென பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லையென்றால் கோத்தபாயவுக்கு நடைபெற்றதே உங்களுக்கும் நடக்கும்" என்றார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmd0d5cn5012nqp4knsg67frg
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
கபில்தேவை முந்திய பும்ரா: வழக்கமான பலவீனம் மீண்டும் வெளிப்பட்டதால் நெருக்கடியில் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ரா கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் கிரிக்கெட் விமர்சகர் 12 ஜூலை 2025, 03:47 GMT பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணியினருக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று நடந்தது என்ன? இந்த போட்டியில் வெற்றியை நோக்கிச் செல்கிறதா இந்திய அணி! ஒரு அலசல். கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஜோப்ரா ஆர்ச்சர், தன்னுடைய மூன்றாவது பந்திலேயே அபாயகரமான பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எடுத்து லார்ட்ஸ் மைதானத்தையே அதிரவைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதை பார்ப்பதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஒன்றுமில்லை. ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் போன பிரிட்டன் மண்ணில், ஆர்ச்சர் போன்ற முழுமையான வேகப்பந்து வீச்சாளரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவது கண்கொள்ளா காட்சி. மெதுவான வேகம் கொண்ட மைதானம் என்பதால் லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டமும் மந்தமாக தொடங்கி மந்தமாகவே முடிந்தது. கீழ்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை எடுக்க முடியாமல் தடுமாறுவது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. நல்ல டெக்னிக் தெரிந்த பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைக்கத் தெரிந்த இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசிக்கட்ட விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தவிப்பது ஆச்சர்யம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த ஜோ ரூட் கபில் தேவ் சாதனையை தகர்த்த பும்ரா ஸ்டோக்ஸ், ரூட், வோக்ஸ் என மூன்று முக்கிய விக்கெட்களை பும்ரா கைப்பற்றிய பிறகு, ஒருகட்டத்தில் 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. எட்டாவது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித்–கார்ஸ் இணைந்து 84 ரன்கள் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை உண்டாக்கினர். சிராஜ் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித் கொடுத்த சுலபமான கேட்ச்சை ராகுல் தவறிவிட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது எனலாம். 387 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை இங்கிலாந்து பதிவு செய்ததற்கு ராகுல் செய்த தவறவிட்ட வாய்ப்புதான் முக்கிய காரணம். முதல் நாளில் புரூக் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா, நேற்று ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ரா பந்தில் ஜோ ரூட் கிளீன் போல்டான காட்சி பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன. ஸ்டோக்ஸ் பவுண்டரி அடிப்பார் என்று தெரிந்தும் ஷார்ட் & வைடாக முந்தைய பந்தை வீசி செட் செய்த பும்ரா, அடுத்த பந்தை அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து உள்ளே கொண்டு வந்து இங்கிலாந்து கேப்டனின் ஆஃப் ஸ்டம்ப் தலையை பதம்பார்த்தார். அடுத்த ஓவரில் சதமடித்து பெரிய இன்னிங்ஸ் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த ரூட்டின் மிடில் ஸ்டம்ப்பை தகர்த்தார். அடுத்த பந்திலேயே வோக்ஸ் விக்கெட்டையும் காவு வாங்கினார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா lord's honours board இல் தன் பெயரை பதிவுசெய்தார். அயல் மண்ணில் அதிகமுறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகள் (Five wicket haul) கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்த கபில்தேவை(12) பும்ரா முந்தினார். பும்ரா இதுவரை 13 முறை வெளிநாட்டு மண்ணில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா போட்டுக் கொடுத்த அடித்தளத்தை பிற வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன கருண் நாயர் - ராகுல் அமைத்துக் கொடுத்த நல்ல 'ஓப்பனிங்' முதல் நாள் போலவே ஆகாஷ் தீப்பின் லைன் & லென்த் நேற்றும் சரியாக இல்லை. சிராஜ் ஒருபக்கம் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் அவருக்கு நேற்றும் அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். கடைசியாக ஜேமி ஸ்மித்–கார்ஸ் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியது ஆறுதலாக அமைந்தது. இந்திய அணி இங்கிலாந்து இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 5 பந்துகளை பயன்படுத்தியது. Bazball யுகத்தில் Dukes பந்தின் தரம் குறித்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், புதிய பந்துக்காக அம்பயர்களிடம் கேப்டன் கில் போராடியது கவனம் பெற்றுள்ளது. 10 ஓவர்களில் பஞ்சு போல மாறிவிடும் Dukes பந்துகளில் Swing & Seam செய்து விக்கெட் வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. நாசர் ஹுசைன், ஹார்மிசன் போன்றவர்கள் அடிக்கடி பந்தை மாற்றும் இந்திய அணியின் அணுகுமுறையை விமர்சித்த நிலையில், இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட், Dukes பந்துகளின் தரம் குறித்து வெளிப்படையாக விமர்சித்திருப்பது பாராட்டுக்குரியது. கருண் நாயர், தனது மறுவருகையில் நம்பிக்கை அளிக்கும்விதமாக விளையாடினாலும் பெரிய இன்னிங்ஸ் எதையும் பதிவுசெய்யவில்லை. ஆஃப் ஸ்டம்ப் லைனில் வெளியே செல்லும் பந்துகளுக்கு அவருக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் வெளிப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ளும் கருண் நாயர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்த கருண், பிரமாதமான டைமிங்குடன் (Timing) விளையாடி தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினார். அலாதியான கால்பாடம் (Footwork) இல்லையென்ற போதும், எடையை முன்னும் பின்னும் இலகுவாக மடைமாற்றி சில அழகான டிரைவ்களை கவர், ஸ்கொயர் திசைகளில் அடித்தார். கர்நாடக மண்ணின் மைந்தர்களான ராகுல், கருண் இருவரின் நேர்த்தியான ஆட்டமும் அழகிய லார்ட்ஸ் மைதானத்தில் கண்களுக்கு விருந்தளித்தது. முதலிரு டெஸ்ட்களை போலவே நல்லபடியாக செட் ஆனபிறகு, விக்கெட்டை தாரைவார்த்தது அவருக்கு நிச்சயம் வருத்தம் ஏற்படுத்திருக்கும். சாதனை படைத்த ரூட் கருண் நாயர் கேட்ச்சின் மூலம், டெஸ்டில் அதிக கேட்ச்கள் பிடித்தவர் (210) என்ற சாதனையை ரூட் படைத்தார். உலகின் தலைசிறந்த ஸ்லிப் பீல்டர்கள் அனைவரும் Ball sense கொண்டவர்களாக இருப்பார்கள். கேட்ச்சிங்கின் போது மட்டுமில்லாமல் அவர்களுடைய பேட்டிங்கிலும் அந்த ball sense எதிரொலிக்கும். மார்க் வாஹ், டிராவிட், ஜெயவர்த்தனே என நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியினர் தொடர்ச்சியாக ஸ்லிப் பிராந்தியத்தில் கேட்ச்களை கோட்டைவிடும் நிலையில், எப்படி ஸ்லிப்பில் செயல்பட வேண்டுமென ரூட் பாடமெடுத்தது போல அந்தக் கேட்ச் அமைந்தது. ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியுடன் திரும்பி வந்து, முக்கிய விக்கெட்டான கருண் நாயர் விக்கெட்டை எடுத்துள்ளது இங்கிலாந்துக்கு சாதகமான விஷயம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காத வோக்ஸ், தன்னுடைய டிரேட் மார்க் wobble seam பந்தின் மூலம் கில் விக்கெட்டை கைப்பற்றி, கடைசி நேரத்தில் ஆட்டத்தை இங்கிலாந்தின் பக்கம் திருப்பியுள்ளார். உள்ளே வரும் பந்துகளுக்கு கவனத்தை குவித்த கில், பிட்ச் ஆகி எந்தப் பக்கம் செல்லும் என்று பந்துவீச்சாளருக்கு கூட தெரியாத, wobble seam பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 5 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் பேட்டிங் சராசரி அடிவாங்கியதில் wobble seam பாணி பந்துவீச்சுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இந்தியாவின் சிராஜ் இதே பாணியில் பந்துவீசியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததற்கு ஆடுகளத்தின் மெதுவான தன்மையும் ஒரு காரணம். மெதுவான வேகம் கொண்ட மைதானத்தில் வோக்ஸ் போல வேகத்தை குறைத்து வீசுவதும் பலனளிக்கும். இந்த தொடரின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ராகுல்தான். கில் அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியாக ராகுலின் பேட்டிங் உச்சத்தில் இருக்கிறது. கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ராகுல் ரோஹித்துடன் சேர்ந்து பிரமாதமான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்ததை மறக்க முடியாது. 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசப்படும் பந்துகளையும் முன்னங்காலுக்கு சென்று ராகுல் நேர்த்தியாக தற்காப்பு ஆட்டம் விளையாடுகிறார். இந்திய அணி கில் விக்கெட்டை விரைவாக இழந்த நிலையில், இன்று பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உள்ளது. முதல் நாளில் விரலில் காயமடைந்த பந்த், கடுமையான சிரமத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். இந்திய அணி 242 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். விரலில் காயமடைந்துள்ள பந்த்துக்கு சவால் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அணி ஆர்ச்சரை கொண்டு வந்து தாக்குதல் பாணி ஆட்டம் ஆடாதது ஏன் என புரியவில்லை. பந்துவீச்சில் 50-60 ரன்களை கூடுதலாக இந்தியா விட்டுக்கொடுத்த நிலையில், மூன்றாம் நாள் முழுவதும் பேட் செய்து ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. முதல் நாளில் இரு அணிகளுக்கும் சம பலத்தில் முடிந்த ஆட்டம், இரண்டாம் நாளில் இங்கிலாந்தின் கைகளுக்கு சென்றுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyexdpn0jvo
-
நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி
மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து Published By: VISHNU 11 JUL, 2025 | 11:44 PM மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை (10) மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர். எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த தந்தை, தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த 12 வயதுடைய சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த 4 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கும் முன்னர் வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், தனது மகனின் உடலை தடவி தந்தை அஞ்சலி செலுத்தினார். குறித்த புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. https://www.virakesari.lk/article/219774
-
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
விமானிகளின் உரையாடல் ஏர் இந்தியா விமான விபத்தின் மர்மத்தை இன்னும் அதிகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூன் மாதம் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான முதல் கட்ட விசாரணையில் புலனாய்வாளர்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். விமானம் புறப்பட்ட சில வினாடிகளில், 12 ஆண்டு வயதுடைய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் திடீரென "கட்-ஆஃப்" நிலைக்கு மாறியதால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, முழுமையாக செயலிழந்தது. "கட்-ஆஃப்" செய்வது பொதுவாக விமானம் தரையிறங்கிய பிறகு மட்டுமே நடக்கும் செயல். காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம், "நீ ஏன் கட்-ஆஃப் செய்தாய்?" என்று கேட்க, அதற்கு அவர், "நான் செய்யவில்லை," என்று பதிலளிக்கிறார். இந்த குரல் பதிவு யார் கேள்வி கேட்டது, யார் பதிலளித்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை. விமானம் புறப்படும் நேரத்தில், துணை விமானி விமானத்தை இயக்க, கேப்டன் கண்காணித்துக் கொண்டிருந்தார். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மீண்டும் விமானத்தின் இயல்பான நிலைக்குத் திரும்பியதால், தானாகவே என்ஜின் மீண்டும் செயல்பட முயற்சி செய்தது. ஆனால், விபத்து நிகழ்ந்தபோது ஒரு எஞ்சின் உந்துதலை மீட்டெடுத்து வந்தது, மற்றொரு எஞ்சின் இயங்க தொடங்கியிருந்தாலும், அதன் முழு சக்தியையும் மீட்டெடுக்கவில்லை. ஏர் இந்தியா விமானம் 171, புறப்பட்ட 40 வினாடிகளுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இது இந்தியாவில் ஏற்பட்ட மிகவும் குழப்பமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விமானம் புறப்பட்டவுடன் என்ன தவறு நடந்தது என்பதை அறிய, புலனாய்வாளர்கள் இடிபாடுகளையும் காக்பிட் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஃபிளைட்ராடார்24 தரவுகளின்படி, தெளிவான வானிலையில் விமானம் 625 அடி உயரத்தை எட்டியது, ஆனால் 50 வினாடிகளில் தொடர்பை இழந்தது. சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள 15 பக்க அறிக்கை இந்த விபத்து குறித்த ஆரம்பத் தகவல்களை வழங்குகிறது. இந்திய அதிகாரிகள் தலைமையில், போயிங், ஜிஇ (General Electric), ஏர் இந்தியா, இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் பிரிட்டன் நிபுணர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணை, இந்த விமான விபத்து குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி இந்த லிவர் லாக் எரிபொருள் சுவிட்சுகள் தவறுதலாக இயக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவிட்சுகளின் இயக்கத்தை மாற்றுவதற்கு முன்பாக இதன் பாதுகாப்பு லிவரை மேல் நோக்கி இயக்கி அன்லாக் செய்ய வேண்டும். இந்த பாதுகாப்பு அம்சங்கள் 1950 முதல் பயன்பாட்டில் உள்ளன. துல்லியமான தரநிலைகளைக் கொண்ட இந்த சுவிட்சுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை. பாதுகாப்பு காப்பான்கள் (Protective guard brackets) இந்த சுவிட்சுகள் தவறுதலாக இயக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. "ஒரு கையால் ஒரே இயக்கத்தில் இரண்டு சுவிட்சுகளையும் இழுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே, இது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை," என்று பெயர் வெளியிட விரும்பாத கனடாவைச் சேர்ந்த விமான விபத்து விசாரணையாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இதனால் தான் ஏர் இந்தியா விபத்து மிகவும் தனித்துவமானதாகவும், மர்மமானதாகவும் உள்ளது. விமானிகளில் ஒருவர், வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ, எரிபொருள் சுவிட்சுகளை அணைத்திருந்தால், "ஏன் சுவிட்சுகளை ஆஃப் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது," என்று ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விமான விபத்து ஆய்வாளரும், விமான நிபுணருமான ஷான் ப்ருச்னிக்கி பிபிசியிடம் கூறுகிறார். "இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது குழப்பத்தால் ஏற்பட்டதா? ஆனால் விமானிகள் அசாதாரணமான எதையும் தெரிவிக்கவில்லை என்பதால் அதற்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. காக்பிட் அவசர சூழல்களில், விமானிகள் தவறான சுவிட்சுகளை அழுத்துவது அல்லது தவறானவற்றை தேர்வு செய்வது போன்ற சம்பவங்கள் நடக்கலாம். ஆனால், இங்கு அப்படியான எந்த அறிகுறியும் இல்லை. எரிபொருள் சுவிட்சுகள் தவறுதலாக அணைக்கப்பட்டதாகவும் எந்த விவாதமும் இல்லை. இத்தகைய பிழை, ஏதேனும் வெளிப்படையான பிரச்னை இல்லாமல் பொதுவாக நடக்காது," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆமதாபாத்தில் நெரிசலான பகுதியில் ஏர் இந்தியா விமானம் 171 மோதியது. "விமானம் பறந்த சில வினாடிகளில் எரிபொருள் சுவிட்சை ஒரு விமானி அணைத்துவிட்டார் என்பது மிகவும் கவலையளிக்கிறது" என்கிறார் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான பீட்டர் கோயல்ஸ். "காக்பிட் குரல் பதிவில் இதுவரை வெளியானவற்றை விட அதிக தகவல்கள் இருக்கலாம். 'ஏன் சுவிட்சுகளை அணைத்தாய்?' என்ற ஒற்றை வார்த்தை மட்டும் போதாது," என்று கோயல்ஸ் கூறினார். "காக்பிட்டில் யாரோ ஒருவர் எரிபொருள் வால்வுகளை மூடியிருக்கிறார் என்பதை புதிய தகவல்களின்படி அறியமுடிகிறது. ஆனால், யார் மூடியது? ஏன் மூடினார்கள்? என்பதுதான் கேள்வி. இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டு, சில வினாடிகளில் மீண்டும் இயக்கப்பட்டன. எஞ்சினை மீண்டும் இயக்க முயன்றது விமானத்தை இயக்கிய விமானியா அல்லது கண்காணித்த விமானியா? என்பது குறித்த விவரங்களை குரல் பதிவு வெளிப்படுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஏர் இந்தியா விமானம் 171 விபத்து குறித்த விசாரணையில், காக்பிட் குரல் பதிவு முக்கிய திறவுகோலாக உள்ளதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பதிவில் விமானிகளின் மைக்குகள், ரேடியோ அழைப்புகள் மற்றும் காக்பிட் சுற்றுப்புற ஒலிகள் உள்ளன, இவை விபத்தைச் சுற்றியுள்ள மர்மத்தை அவிழ்க்க உதவும். "அவர்கள் குரல்களை இன்னும் அடையாளம் காணவில்லை, இது மிகவும் முக்கியமானது. பொதுவாக, குரல் பதிவை ஆய்வு செய்யும்போது, விமானிகளை நன்கு அறிந்தவர்கள் உடன் இருந்து அதில் கேட்கும் குரல்களை,விமானிகளின் குரல்களோடு பொருத்துவார்கள். ஆனால், இப்போது வரை, எந்த விமானி எரிபொருள் சுவிட்சுகளை அணைத்து மீண்டும் இயக்கினார் என்பது தெரியவில்லை," என்று பீட்டர் கோயல்ஸ் கூறினார். தெளிவான குரல் அடையாளம், பேசியவர்களின் பெயர்களுடன் முழு காக்பிட் உரையாடல் பதிவு, மற்றும் விமானம் வாயிலில் இருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளாகும் வரையிலான அனைத்து தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் பரிந்துரைத்தபடி, காக்பிட் வீடியோ பதிவு கருவிகள் தேவை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். காக்பிட்டில் உள்ள விமானிகளின் செயல்பாடுகளை, அவர்களின் தோள்பட்டைக்கு மேலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகள், கட்-ஆஃப் சுவிட்சை யார் இயக்கினார் என்பதை காட்டியிருக்கக்கூடும். விமானம் 171-ஐ பறக்கத் தொடங்குவதற்கு முன், விமானிகளும் பணியாளர்களும் சுவாச பரிசோதனையில் (மது அருந்தியுள்ளார்களா என்ற சோதனை) தேர்ச்சி பெற்று, பறக்கத் தகுதியானவர்களாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மும்பையைச் சேர்ந்த விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முந்தைய நாள் ஆமதாபாத்துக்கு வந்து, போதுமான ஓய்வு எடுத்திருந்தனர். ஆனால், அறிக்கையில் ஒரு முக்கிய விவரத்தையும் புலனாய்வாளர்கள் ஆராய்கின்றனர். 2018 டிசம்பரில், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) ஒரு சிறப்பு விமானத் தகுதி அறிக்கை (SAIB) வெளியிட்டது. இதில், சில போயிங் 737 விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில், லாக் செய்யும் அம்சம் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்னை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டாலும், இது பாதுகாப்பற்ற நிலையாகக் கருதப்படவில்லை. போயிங் 787-8 விமானங்களிலும் இதே சுவிட்ச் வடிவமைப்பு பயன்படுத்தப்படுகிறது, இதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் VT-ANB விமானமும் அடங்கும். SAIB-ன் அறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே என்பதால், ஏர் இந்தியா பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. பட மூலாதாரம்,BLOOMBERG VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் நடந்த விமான கண்காட்சியில் ஏர் இந்தியாவால் இயக்கப்படும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் காக்பிட். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று யோசிப்பதாகக் கூறுகிறார் ப்ருச்னிக்கி . இதுகுறித்து பேசிய அவர், "அறிக்கையில் உள்ள இந்த பகுதி சரியாக என்ன சொல்கிறது? ஒரு முறை சுவிட்சை அணைத்தால், இயந்திரம் அணைந்து எரிபொருள் விநியோகம் தடைபடுமா? லாக் அம்சம் துண்டிக்கப்படும்போது, என்ன நடக்கும்? சுவிட்ச் தானாகவே 'ஆஃப்' ஆகி இயந்திரத்தை நிறுத்த முடியுமா? இது உண்மையாக இருந்தால், இது மிகவும் தீவிரமான பிரச்னை. இல்லையெனில், இதை தெளிவாக விளக்க வேண்டும்"என்கிறார். ஆனால், மற்றவர்கள் இது ஒரு இது முக்கிய பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகின்றனர். "இது FAA வெளியிட்ட ஒரு சிறிய அறிவிப்பு என்று தோன்றுகிறது, இதைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. விமானிகள், பொதுவாக விரைவாக புகார் கூறுபவர்கள், இந்த சுவிட்சுகள் குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆராய்வது நல்லதுதான் , ஆனால் இது ஒரு கவனச்சிதறலாகவும் இருக்கலாம்," என்று கோயல்ஸ் கூறுகிறார். இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) முன்னாள் புலனாய்வாளர் கேப்டன் கிஷோர் சிந்தா, விமானத்தின் மின்னணு கட்டுப்பாட்டு அலகில் ஏற்பட்ட (Electronic Control Unit) பிரச்னையால் எரிபொருள் சுவிட்சுகள் செயலிழந்திருக்கலாமா என்ற கோணத்தில் சிந்திக்கிறார் . "விமானியின் ஈடுபாடு இல்லாமல், மின்னணு கட்டுப்பாட்டு அலகு மூலம் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகளை மின்னணு முறையில் இயக்க முடியுமா? அப்படி மின்னணு முறையில் சுவிட்சுகள் செயலிழந்தால், அது மிகவும் கவலைக்குரியது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். அறிக்கையின்படி, எரிபொருள் நிரப்பும் டேங்கில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் "திருப்திகரமானவை" என்று கண்டறியப்பட்டன. முன்னதாக, இரட்டை இயந்திர செயலிழப்புக்கு எரிபொருள் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதியிருந்தனர். மேலும், முழுமையான விசாரணை நிலுவையில் உள்ளதால், இயந்திரக் கோளாறு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. "இப்போதெல்லாம், நான் 787 விமானத்தில் பறக்கும்போது, தரையிறங்கும் கியர் பின்வாங்கும் செயல்முறையை உன்னிப்பாகக் கவனிக்கிறேன். கியர் கைப்பிடியை இழுக்கும்போது, நாங்கள் ஏறக்குறைய 200 அடி (60.9 மீட்டர்) உயரத்தில் இருப்போம். முழு கியர் பின்வாங்கும் செயல்முறை சுமார் 400 அடி உயரத்தில், மொத்தம் எட்டு வினாடிகளில் முடிவடைகிறது. இது விமானத்தின் உயர் அழுத்த ஹைட்ராலிக் அமைப்பு காரணமாக சாத்தியமாகிறது."என்கிறார் ப்ருச்னிக்கி . விமானத்தை இயக்கியவர் சிந்திக்க நேரமே இல்லாமல் இருந்திருக்கலாம் என அந்த விமானி கருதுகிறார். "இரண்டு என்ஜின்களும் செயலிழந்து, விமானம் கீழே செல்லத் தொடங்கும்போது, நீங்கள் வெறுமனே அதிர்ச்சியடையவில்லை, மரத்துப் போய்விடுவீர்கள். அந்த நொடியில், தரையிறங்கும் கருவி உங்கள் கவனத்தில் இருப்பதில்லை. உங்கள் மனம் ஒரே விஷயத்தில் நிலைத்து இருக்கும். அதாவது, இந்த விமானத்தை எங்கு பாதுகாப்பாக இறக்க முடியும்? என விமானப் பாதையின் மீது தான் உங்களது கவனம் இருக்கும். ஆனால், இந்த விபத்தில், அதற்கு போதுமான உயரம் இல்லை," என்றும் அவர் விளக்கினார். விமானக் குழு நிலைமையை சரி செய்ய முயன்றது, ஆனால் எல்லாம் மிக விரைவாக நடந்துவிட்டது என்று கூறுகின்றனர் புலனாய்வாளர்கள் . "என்ஜின்கள் அணைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் இயக்கப்பட்டன. இயந்திரங்கள் உந்துதலை இழப்பதை விமானிகள் உணர்ந்தனர். முதலில் இடது என்ஜினை மீண்டும் ஆன் செய்து, பின்னர் வலது என்ஜினிலும் முயன்றிருக்கலாம்," என்று ஷான் ப்ருச்னிக்கி கூறினார். "ஆனால், வலது என்ஜின் மீண்டும் இயங்க போதுமான நேரம் கிடைக்கவில்லை, உந்துதலும் போதுமானதாக இல்லை. இறுதியில் இரண்டு என்ஜின்களும் "இயங்கும் நிலைக்கு" மாற்றப்பட்டன. ஆனால், இடது என்ஜின் முதலில் அணைக்கப்பட்டு, வலது என்ஜின் மீட்கப்படுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதால், சூழலை சரி செய்யும் முயற்சி பயனளிக்கவில்லை." என்பது ப்ருச்னிக்கியின் கூற்றாக உள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0w1rvzz11o
-
நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
12 JUL, 2025 | 05:40 PM நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் 12 பேரும் 02 பணியாளர்களும் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் அவதானித்த விரைந்து செயற்பட்டு சேசமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றி ஓரிரு நிமிடங்களில் குறித்த சுற்றுலாவிகள் படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் கடற்படையினரது படகு குறித்த இடத்திற்கு வந்து மிட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/219822
-
மன்னாரில் ஆரம்பமானது விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு
11 JUL, 2025 | 07:07 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்கள். கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு அரிய சந்திப்பாக குறித்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) காலை ஆரம்பமானது. குறித்த நிகழ்வு 2 வது நாளாக சனிக்கிழமையும் (12) இடம்பெற உள்ளது. மேலும் இம் மாநாடு பொருளாதாரம் ,கல்வி, சுற்றுச்சூழல், சமயம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஆவணப் படுத்துவதோடு இவ்விடயங்களில் பரஸ்பர புரிதலை ஏற்படுத்தி மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு முக்கிய அமர்வாக இடம்பெற்று வருகின்றது. மன்னாரில் அமைந்துள்ள விடத்தல்தீவு கிராமத்தின் சிறப்பும், பண்பாடும் மற்றும் கலை கலாசார பாரம்பரியமும் இம்மாநாட்டின் 2ஆம் நாள் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. போரின் அனர்த்தங்களினால் உருக்குலைந்து போன விடத்தல் தீவு போன்ற கிராமங்களின் பொருளாதார, சமூக கலாசார அம்சங்களை மீள்கட்டியெழுப்புவதற்கும் ஆவணப்படுத்துவதற்குமான இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மாலை அணிவிக்கப் பட்டு வாத்திய இசையுடன் நகரசபை மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். குறித்த முதல் நாள் நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உள்ளடங்களாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/219757
-
மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது; வடக்கு ஆளுநர்
11 JUL, 2025 | 04:28 PM மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் நம்புவதன் காரணமாக சுதேச மருத்துவத்தை தேடிச் செல்கின்றனர். இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (11) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் தி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலர் ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது உரையில், திணைக்களங்களுக்கு சிறப்பான பௌதீக வளம் இருந்தால் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்க முடியும். நாங்கள் அரச சேவைக்கு இணைந்து கொண்ட 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையிலான காலம் போருடனேயே இருந்தது. அந்தக் காலப் பகுதியில் பௌதீக வளங்கள் சிறப்பாக இல்லாவிட்டாலும் மக்களுக்கு திருப்திகரமான சேவையை நாம் வழங்கியிருந்தோம். எங்களுடைய சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு மிகப் பெரிய கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால் மனித வளம் இல்லாமையால் அவை இயங்காமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பௌதீக வளங்கள் இருந்தாலும் மக்களுக்கு தரமான – சிறப்பானதொரு சேவையை வழங்கினாலேயே அந்தத் திணைக்களங்களை நோக்கி மக்கள் வருவார்கள். மக்கள் எவ்வளவு விரும்பி திணைக்களங்களை நோக்கிச் செல்கின்றார்களோ அதில்தான் அந்தத் திணைக்களங்களின் வெற்றி தங்கியிருக்கின்றது. திணைக்களங்களும் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கினால்தான், அந்தத் திணைக்களங்களுக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும் என்ற உந்துததல் எங்களுக்கும் ஏற்படும். எனவே மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதுடன், நகரின் மத்தியில் திறக்கப்பட்டமையால் சித்த மருந்தகத்தை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நினைவிலிருத்தி செயற்படவேண்டும் என்றார். வடக்கு மாகாண ஆளுநரால் வளாகச் சுற்றாடலில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219751
-
கோவையில் மருத்துவ பணியில் இருந்தபோது மாணவி மரணம் - சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினர்
பட மூலாதாரம்,BADRI NARAYANAN படக்குறிப்பு, பவபூரணி கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை தனியார் மருத்துவக் கல்லுாரியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி பவபூரணி கழிவறையில் உயிரிழந்து கிடந்தது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த மரணம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, 5 நாட்களுக்குள் இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவ மாணவி மூச்சுத்திணறலால் (asphyxia) உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும், அதற்கான காரணம் குறித்து உடற்கூறு ஆய்வக முடிவுகள் வந்த பின்பே தெரியவருமென்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் படிக்க வந்த பவபூரணி நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி (வயது 29), கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரியில் மயக்க மருந்தியல் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், பவபூரணி இறந்துவிட்டதாக அவருடைய தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி சனிக்கிழமையன்று இரவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் பவபூரணி பணியாற்றி வந்ததாகவும், மறுநாள் காலை 6 மணியளவில் பணி மருத்துவர் அறையிலுள்ள கழிவறையில் இறந்து கிடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவபூரணியின் தந்தை கந்தசாமி, கூலித்தொழிலாளி. தாயார் இறந்து விட்டார். பவபூரணி மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் கடந்த 2014–2020 ஆம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். முடித்த பின்பு, அதே மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை பி.எஸ்.ஜி. கல்லுாரியில் சேர்ந்துள்ளார் என்று பவபூரணியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். பவபூரணியின் மரணம் தொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் மர்ம மரணம் என்ற பிரிவில் (CRPC 174) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் வெளிக்காயம் எதுவுமில்லை என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவருடைய உடற்கூறு மாதிரிகள், ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் பீளமேடு போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜூன், ''கழிவறைக்குச் சென்ற அவர் வெகுநேரமாக வரவில்லை என்றதும் சக மாணவிகள் சென்று பார்த்துள்ளனர். கழிவறை கதவை உடைத்துத் திறந்தபோது, அவர் உள்ளே கீழே விழுந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகில் ஒரு சிரிஞ்சும், மருந்து பாட்டிலும் இருந்துள்ளது. அவரை வெளியே கொண்டு வந்து பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. '' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,(சித்தரிப்புப் படம்) தற்கொலைக்கான முகாந்திரம் இல்லை - உறவினர்கள் பவபூரணியின் மரணம் குறித்து தங்களுக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தாங்கள் வரும் முன்பே அவரின் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதில் சந்தேகம் எழுவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பவபூரணி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கூறும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ள முகாந்திரமே இல்லை என்கின்றனர் பவபூரணியின் உறவினர்கள். பிபிசி தமிழிடம் பேசிய பவபூரணியின் சித்தப்பா கோவிந்தராஜ், ''எங்களுக்கு முதலில் தகவல் தெரிவித்த போது, பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகக் கூறினர். ஆனால் நேரில் சென்றபோது வெவ்வேறு விதமாகத் தகவல் தெரிவித்தனர். முதல் நாள் இரவு பவபூரணி, மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அவருடன் கூடவே 2 பெண் டாக்டர்கள் இருந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் பவபூரணி, கழிவறை சென்றிருக்கிறார். அதன்பின் அவர் வரவேயில்லை. வேறு ஒரு நோயாளி இரவில் வந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை என்றும், 6 மணிக்குதான் கழிவறையில் சென்று பார்த்ததாகவும் கூறினர்.'' என்றார். மேலும் தொடர்ந்த அவர், ''கழிவறையை தட்டியபோது திறக்கவில்லை என்றும், பின்னாலுள்ள கண்ணாடி வழியாக பார்த்தபோது அவர் கீழே விழுந்து கிடந்ததாகவும், அதன் பின் கதவைத் தள்ளித் திறந்ததாகவும் உடனிருந்த பெண் டாக்டர்கள் கூறினர். ஆனால் காலை 8:30 மணிக்குதான் எங்கள் அண்ணனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். நாங்கள் சென்றபோது அவர்கள் கூறிய தகவல்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கேட்டோம். அவர்கள் காண்பிக்கவில்லை.'' என்றார். பட மூலாதாரம்,NCSC.NIC.IN படக்குறிப்பு,தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுயமாக முன் வந்து விசாரணை! அதன்பின் காவல்துறையினர் அவர்களின் மொபைலில் சில காட்சிகளைக் காண்பித்தனர் என்று கூறிய கோவிந்தராஜ், அவர்கள் காண்பித்த காட்சியில் பவபூரணியும், மற்றொரு பெண்ணும் நடந்து செல்வது மட்டும்தான் தெரிந்தது என்றும், கழிவறை கதவை உடைத்தது, அவரைத் தூக்கி வந்தது, பரிசோதித்தது போன்ற எந்தக் காட்சிகளையும் காண்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதே கருத்தைத் தெரிவித்த பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன், ''முதல் நாள் இரவு 7 மணிக்கு, 'நான் டூட்டியில் இருக்கிறேன். ரூமுக்கு வந்து பேசுறேன்' என்றார். அதுதான் அவர் என்னிடம் கடைசியாகப் பேசியது. அப்போது அவர் இருந்த மனநிலைக்கு, அவர் மறுநாள் காலையில் இப்படி இறந்திருப்பது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது.'' என்றார். பவபூரணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்புவதற்கு முன்பே, இந்த மரணம் குறித்து பல்வேறு தரப்புக்கும் புகார் மனுக்கள் சென்றுள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்த பவபூரணியின் மரணம் குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை மேற்கொண்டு, இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. பவபூரணியின் மரணம் குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், ''மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய காரணம் என்னவென்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவியின் மர்மமான மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து இதுபோல் இனியொரு மரணம் நடக்காத வகையில் அதற்கேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.'' என்று கூறியுள்ளது. இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சங்கத்தின் நிர்வாகி மது, ''மருத்துவமனை நிர்வாகமும் தெளிவான காரணத்தைச் சொல்ல மறுக்கிறது. காவல்துறை சார்பிலும் சரியான தகவல்களைத் தர மறுக்கிறார்கள். அதனால்தான் இந்த விஷயம் பற்றி சமூக ஊடகத்தில் பகிரங்கமாக எங்கள் பதிவை வெளியிட்டோம். நியாயமான விசாரணை நடக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை.'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளும், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளன. இதுபோன்று உயர் கல்வி படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து மரணிப்பது பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அவர்கள் அந்த மனுக்களில் வலியுறுத்தியுள்ளனர். பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தினேஷ் ராஜா, ''எய்ம்ஸ் உட்பட பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளிலும் பட்டியலின மாணவர்கள், மாணவிகள் மர்மமான முறையில் இறப்பது தொடர்ந்து வருகிறது. இந்த மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்பதை காவல்துறை நியாயமான விசாரணையில் உறுதி செய்யவேண்டும். முக்கியமாக பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.'' என்றார். தனது சகோதரியின் மரணத்தில் தங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டுமென்று மெயில் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார் பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன். ''எனது அக்கா இரவு ஒன்றே முக்கால் மணிக்கு வார்டிலிருந்து வெளியே வந்ததாக சிசிடிவி காட்சியில் தெரிகிறது. அதன்பின் காலை 6 மணி வரை அந்த கழிவறையை யாருமே பயன்படுத்தவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. அது டாக்டருக்கான தனி அறை என்றனர். ஆனால் வேறு சில படுக்கைகளும் அதில் இருக்கின்றன. பணியில் இருக்கும் டாக்டர் பல மணி நேரமாக வராமல் இருப்பதை ஏன் யாருமே சென்று பார்க்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பத்ரி நாராயணன். தனது அக்கா விழுந்து கிடந்த கழிவறையை திறந்து பார்த்த சக மாணவியான மற்றொரு பெண் டாக்டருக்கும், தன்னுடைய அக்காவுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்ததாக அங்கிருப்பவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார் பத்ரி நாராயணன். மற்ற மாணவர்களுக்கு இருப்பது போல தனது அக்காவுக்கும் நிர்ணயிக்கப்பட்டதை விட 3 மடங்கு அதிகமான பணி அழுத்தம் இருந்த விஷயமும் தனக்குத் தெரியுமென்று கூறினார். பவபூரணி யாரையும் காதலிப்பதாகவோ, திருமணம் செய்ய விருப்பமுள்ளதாகவோ தங்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்தது இல்லை என்று அவரது கோவிந்தராஜ் கூறுகிறார் பவபூரணியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிலும் எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திடம் கருத்து கேட்க பிபிசி தமிழ் முயன்றது. இதுகுறித்து நிர்வாகத்தரப்பு பதிலை கேட்டுச் சொல்வதாக மக்கள் தொடர்பு அலுவலர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த பதிலும் தரப்படவில்லை. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், ''மாணவி விழுந்து கிடந்த கழிவறையில் அவருக்கு அருகில் இருந்த சிரிஞ்ச்சில் இருந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனையில், முதற்கட்டமாக பவபூரணியின் மரணத்துக்கு மூச்சுத்திணறலே (asphyxia) காரணமென்று தெரியவந்துள்ளது. ஆனால் மூச்சுத்திணறலுக்கு ரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான பாதிப்பு காரணமா அல்லது அவர் எடுத்த ஊசி மருந்து காரணமா என்பது தெரியவில்லை.'' என்றார். பவபூரணியின் இதயம், நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களின் மாதிரிகளும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவல் ஆணையர் சரவணசுந்தர், அது வருவதற்கு சில வாரங்களாகலாம் என்பதால் அவற்றின் முடிவு வரும் வரை இறப்புக்கான காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றும் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyz1j5jmd2o
-
ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!
11 JUL, 2025 | 02:56 PM கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219735
-
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதலின் அவசியம் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
11 JUL, 2025 | 02:30 PM செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுப்பி வைத்துள்ளது அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக நாங்கள் எழுதுகிறோம். உண்மையை வெளிக்கொணரவும், தடயவியல் நெறிமுறைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அவசர மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். 1998 ஆம் ஆண்டில், பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசாமி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது விசாரணையில் 300 முதல் 400 வரையிலான தமிழ் பொதுமக்கள் அங்கு புதைக்கப்பட்டதாக வெளிப்படுத்தினார். இதன் பின்னர் குறித்து பகுதியில் கடந்த 1999 இல் அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது அங்கு 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு 1996 ஆம் ஆண்டு காணாமல்போனவர்களது என அடையாளம் காணப்பட்டன. தடயவியல் உறுதிப்படுத்தல் இருந்தபோதிலும், வழக்குகள் தேக்கமடைந்தன, இன்றுவரை அதற்கு அர்த்தமுள்ள நீதி வழங்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி அரியாலைச் சித்துப்பாத்தி இந்துமையான புனரமைப்புப் பணிகளின் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இதனால் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அந்த இடத்தை ஒரு பாரிய மனித புதைகுழியாக அறிவித்து, நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன் படி தற்போதைய நிலையில், குழந்தைகள் உட்பட சுமார் 65 எலும்புக்கூடுகள் இரண்டு கட்டங்களாக தோண்டி எடுக்கப்பட்டன, அவற்றுடன் பாடசாலை பை, பொம்மை, வளையல்கள், செருப்புகள் மற்றும் துணித் துண்டுகள் போன்ற சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அனைத்து எலும்புக்கூடுகளும் தடயவியல் பரிசோதனைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிகள், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரச்சாரத்திற்கான தெளிவான சான்றுகளை காண்பிக்கின்றன. எந்தவொரு நிலைமாறுகால நீதி செயல்முறைக்கும் உண்மையைக் கண்டறிவது அடித்தளமாக இருக்க வேண்டும். 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர். எனவே, பின்வருவனவற்றை தாமதமின்றி செயல்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் வலியுறுத்துகிறோம்: 1.1999 மற்றும் 2025 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவை தொடர்பான சட்ட வழக்குகளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றங்களின் கீழ் ஒரே நீதித்துறை மற்றும் தடயவியல் விசாரணையாக ஒருங்கிணைக்கவும். 2. விசாரணையின் அனைத்து நிலைகளையும் மேற்பார்வையிட, தடயவியல் ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய, சுயாதீனமான, சர்வதேச அளவில் மதிக்கப்படும் தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்துதல். 3. அனைத்து இடைக்கால மற்றும் இறுதி தடயவியல் அறிக்கைகள், டி.என்.ஏ விவரங்கள் மற்றும் அடையாள முடிவுகளை வெளியிடுதல், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு அணுகலை எளிதாக்குதல். 4. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடுகின்றனர், உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. தேசிய ஒற்றுமைக்கு அவசியமான இந்தக் கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கவும். இலங்கையின் தார்மீக மற்றும் சட்டக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நோக்கி நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் இந்த நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும், அவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219730