Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் நேற்றிரவு வீடு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில், அறுவர் கொண்ட கும்பல் வன்முறைக்காக வந்து, இருவர் வெளியே நின்ற நிலையில் நால்வர் கொண்ட கும்பல் உள்ளே வந்து எனது 5 வயது மகளின் வயிற்றில் தாக்கினர். எனது சகோதரி பிள்ளைக்கு பாலூட்டிக் கொண்டு இருந்தவேளை அவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதிக்கப்பட்ட எனது சகோதரன் மீதும் தாக்குதல் நடத்தினர். எனது மகனான சிறுவனது தொண்டையை பிடித்து திருகினர். இவ்வாறு அட்டகாசம் செய்ததுடன் வேலியின் தகரம் மற்றும் கதிரை என்பவற்றை உடைத்தனர். எமது மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளி விழுத்தினர். பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான எனது சகோதரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எமக்கு இந்த அநீதி இழைத்தவர்களை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எமக்கான நீதிக்கு மேல் அதிகாரிகளை நாட வேண்டி ஏற்படும் என்றார். https://thinakkural.lk/article/309005
  2. 02 SEP, 2024 | 01:38 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் இறந்ததை அடுத்து இப்போது 38 பேர் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரபல ஊடக நிறுவனங்களின் உரிமையாளரான திலித் ஜயவீர, பிலாட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மூத்த இடதுசாரி தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய, முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர் நுவான் போபகே மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் ஏனைய குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள். முக்கியமான போட்டியாளர்களாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவும், பிரேமதாசவும், திசாநாயக்கவுமே இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகளைப் பெறக்கூடியவர்களாக நாமல் ராஜபக்சவையும், திலித் ஜயவீரவையும் எதிர்பார்க்கலாம். ஆனால், சில வேட்பாளர்கள் விசேட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். வேறு சிலர் இரகசிய காரணங்களுக்காக " போலி " வேட்பாளர்களாக நிற்கிறார்கள். சிலர் விளம்பரம் தேடுபவர்கள். ஜனாதிபதி தேர்தலில் எந்த விதத்திலும் தங்களால் வெற்றபெறமுடியாது என்பது பல வேட்பாளர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் பிரத்தியேகமான நோக்கங்களுக்காக அல்லது ஏதோ ஒரு செய்தியைக் கூறுவதற்காக போட்டியிடுகிறார்கள். அத்தகையவர்களில் ஒருவரான அரியநேத்திரன் சங்கு சின்னத்தின் கீழ் ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். 69 வயதான முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் நிற்கிறார். சிவில் சமூக அமைப்புக்களையும் சில தமிழ் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அவரை ஆதரிக்கிறது. அரியம் என்று பொதுவாக அழைக்கப்படும் அரியநேத்திரன் தமிழ் ஊடகங்களில் ' தமிழ் பொதுவேட்பாளர் ' என்று வர்ணிக்கப்படுகிறார். பெரிய சர்ச்சை தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருப்பது பெரியதொரு சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இலங்கை தமிழர்கள் நாட்டின் சனத்தொகையில் 11.1 சதவீதத்தினர் மாத்திரமே. தமிழ் வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்பது வெளிப்படையானது. அதனால் தமிழ் பொதுவேட்பாளர் திட்டம் கேலிக்குரியது என்றும் அநாவசியமானது என்றும் பல தமிழர்கள் அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவேட்பாளர் திட்டத்தின் ஆதரவாளர்கள் தங்களது குறிக்கோள் தேர்தலில் வெற்றிபெறுவது அல்ல என்று கூறி அந்த அபிப்பிராயத்தை மறுதலிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் பொதுவேட்பாளர் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழ் தேசியப்பிரச்சினையை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கவனத்துக்கு கொண்டுவருவார் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல் மற்றும் முறைமை மாற்றம் மீதே கவனம் செலுத்தப்படுகிறது என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இலங்கை்தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரத்தியேகமான பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன, முக்கியத்துவமற்றவையாக நோக்கப்படுகின்றன அல்லது கவனிக்காமல் விடப்படுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அதனால் தமிழ் மக்களின் மனக்குறைகள் இன்னமும் தீர்த்துவைக்கப்படவில்லை என்பதையும் அபிலாசைகளுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட சகலருக்கும் தமிழ் நினைவுபடுத்துவார் என்று அவர்கள் கூறுகிறார்கள். கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கே தமிழர்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்றும் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனால் இந்த தடவை தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு செய்தியை கூறமுடியும் என்று வாதிடப்படுகிறது. தவிரவும், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவருக்கு வாக்குகளை திரட்டுவது தமிழர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் பெருமளவுக்கு மேம்படுத்த உதவும் என்பதுடன் தமிழர்கள் மேலும பிளவுபட்டுப்போவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இதை ஒரு வகையான சர்வஜன வாக்கெடுப்பாக காண்பிக்கமுடியும் என்பது தமிழ் வேட்பாளர் திட்டத்தின் ஆதரவாளர்களில் சிலர் வலியுறுத்துகின்ற இன்னொரு கருத்து. தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகளை சமஷ்டி அடிப்படையிலான இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றுக்கான தமிழ் தேசிய அபிலாசைக்கு ஆதரவானவை என்று வியாக்கியானப்படுத்த முடியும் என்பது ஒரு மிதவாதப் போக்கிலான கருத்தாக இருக்கிறது. அதேவேளை, அவருக்கு கிடைக்கின்ற வாக்குகள் சுயநிர்ணயம், தேசியம், தாயகம் என்ற மூன்று கோட்பாடுகளையும் மீள வலியுறுத்தும் எனபது தீவிரவாத போக்கிலான கருத்தாக இருக்கிறது. தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக இல்லாதவர்கள் இந்த வாதங்களை மறுதலிக்கிறார்கள். வெற்றிபெறும் வாய்ப்பை அறவே கொண்டிராத ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதை விடவும் வெற்றிபெறும் வாய்ப்பைக் கொண்ட பிரதான ' சிங்கள ' வேட்பாளர்களில் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடியது சாத்தியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனால் தமிழ் பொதுவேட்பாளர் திட்டம் பயனற்ற ஒரு செயற்பாடு என்று அவர்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் 1952 ஆம் ஆண்டில் இருந்தே பாராளுமன்ற தேர்தல்களில் சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு ஏற்பாடு ஒன்றுக்கு ஆதரவாகவே தொடர்ச்சியாக வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்றும் அதனால் மீண்டும் அதை நிரூபிப்பதற்கு 2024 ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தவேண்டியது தேவையில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி தேர்தல் கடந்தகாலத் தேர்தல்களில் இருந்து வேறுபட்டது என்றும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். மூன்று பிரதான வேட்பாளர்களும் பெருமளவு அதிகாரப் பகிர்வுக்கு அல்லது மேம்பட்ட அதிகாரப் பரவலாக்கத்துக்கு இணக்கத்தை தெரிவிக்கக்கூடிய தன்மையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படும் வரை காத்திருந்து அவர்களுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து சிந்தித்திருந்தால் அது நல்லதாக இருந்திருக்கும். மேலும், தமிழ் பொதுவேட்பாளர் தனது அரசியல் கோரிக்கைகளை நியாயப்படுத்தி வலுவூட்டுவதற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வாக்குகளில் குறைந்தபட்சம் ஐம்பது சதவீதமானவற்றை பெறவேண்டும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். தற்போதைய பின்புலத்தில் அது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. அத்துடன் கிழக்கில் தமிழர்கள் தனியான பெரிய சமூகமாக மாத்திரமே இருக்கிறார்கள். முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் சேர்த்தால் தமிழர்கள் சிறுபான்மையினரே. அதனால் வாக்களிப்பு முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறுபானமையினர் என்பதை வெளிக்காட்டி வடக்கு - கிழக்கு இணைப்புக்கான நியாயத்தை மலினப்படுத்திவிடக் கூடும். 'தமிழ் பொதுவேட்பாளர் ' என்ற விபரிப்பு செல்லுபடியற்றது என்றும் வாதிடப்படுகிறது. அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் கொண்ட ஒரு குழு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை பிரேரித்த போதிலும், அதை எதிர்க்கும் வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் குழுக்களும் இருக்கின்றன. சில தமிழ் கட்சிகள் குறிப்பிட்ட ஒரு ' சிங்கள ' வேட்பாளரை ஆதரிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் சுயேச்சை தமிழ் வேட்பாளர் 'தமிழ் பொதுவேட்பாளர்' என்ற பெயருக்கு உரித்துடையவரல்ல என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். பின்னணியும் வரலாறும் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற இன்றைய பின்புலத்தில் இந்த கட்டுரை அந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்துகிறது இந்த தமிழ் வேட்பாளர் திட்டத்தின் விளைவுகளை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு அதன் வரலாற்றையும் பின்புலத்தையும் ஓரளவுக்கு சுருக்கமாக ஆராய்வது அவசியமானதாகும். 2009 மே மாதம் தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவத்தோல்வி தெற்காசியாவின் மிகவும் நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவந்தது. அது தமிழ் தேர்தல் அரசியலில் புதிய கட்டம் ஒன்றை திறந்துவிட்டது. 2010 ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சிகள் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பொது எதிரணி வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை களமிறக்கின. அந்த நேரத்தில் இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் சேர்ந்த தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் அணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கியது. அதில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. தமிழ் தேசிய கூட்டயைப்பும் பொன்சேகாவை ஆதரித்தது. சிவாஜிலிங்கம் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்ததை ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கடுமையாக எதிர்த்தார். போரின் இறுதிக்கட்டத்தில் தமழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ராஜபக்சவும் பொன்சேகாவும் பொறுப்பு என்பதால் இருவரையுமே எதிர்க்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார். பொன்சேகாவை ஆதரிப்பதற்கு பதிலாக தமிழ்க்கட்சிகள் தனியான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று சிவாஜிலிங்கம் யோசனையை முன்வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டம் சிவாஜியின் யோசனையை நிராகரித்தது. அதனால் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் சுபாவத்தைக் கொண்ட அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தன்னை தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்று காட்சிப்படுத்திய அவர் ஒரு சிங்கள வேட்பாளருக்கு பதிலாக தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுவே பொதுத்தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கோட்பாட்டின் தொடக்கமாகும். சிவாஜிலிங்கம் 9662 வாக்குகளை மாத்திரம் பெற்ற பரிதாபத்தைக் காணக்கூடியதாக இருந்தது. 2019 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டார். பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது கோட்டாபய செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று சிவாஜிலிங்கம் மீண்டும் யோசனையை முன்வைத்தார். அந்த பொதுவேட்பாளர் திட்டத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் அதை எவரும் கவனத்தில் எடுக்கவில்லை. சளைக்காத சிவாஜிலிங்கம் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்தார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட அவர் தமிழ் கட்சிகளினதும் தமிழ் மக்களினதும் ஆதரவை நாடினார். மீண்டும் படுதோல்வி கண்ட அவருக்கு 12, 256 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தினால் இலங்கை தமிழ் மக்கள் கவரப்படவில்லை என்பதை சிவாஜிலிங்கத்தின் இ்ரட்டைத் தோல்வி வெளிக்காட்டியது. அதனால் அந்த கோட்பாடு வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் போடப்படும் என்றே தோன்றியது. ஆனால் ஒரு மூத்த அரசியல் தலைவரின் முயற்சியின் விளைவாக புத்துயிர் பெற்றது. சுரேஷ் பிரேமச்சந்திரன் சுரேஷ் பிரேமச்சந்திரன் / சுரேஷ் என்று அறியப்படும் கந்தையா பிரேமச்சந்திரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்எல்.எவ்.) செயலாளர் நாயகம் / தலைவர். அவர் முதலில் 1989 தொடக்கம் 1994 வரையும் பிறகு 2001 தொடக்கம் 2005 வரையும் பாராளுமன்ற உறூப்பினராக இருந்தார். பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு தேவையான விருப்பு வாக்குகளைப் பெறத்தவறியதால் சுரேஷ் கடந்த ஒன்பது வருடங்களாக பாராளுமன்றத்துக்கு செல்லமுடியவில்லை. 2001 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாபக கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2016 ஆம் ஆண்டில் அதிலிருந்து வெளியேறியது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை மீண்டும் ஒரு பெரியளவில் முன்னெடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரனே. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே அவர் அதைச் செய்யத் தொடங்கினார். சுரேஷ் பெரும் முயற்சி எடுத்தபோதிலும், செல்வாக்குமிக்க ஊடக உரிமையாளர் ஒருவர் சம்பந்தப்படும்வரை அந்த கோட்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைக்கவில்லை. எஸ்.எஸ். குகநாதன் அல்லது குகன் என்று அறியப்படும் சபாபதி சுப்பையா குகநாதன் யாழ்நகரை தளமாகக் கொண்ட டான் ரி.வி. மற்றும் ஈழநாடு பத்திரிகையை நடத்தும் ஏ.எஸ்.கே குழுமத்தின் உரிமையாளராவார். பல தசாப்தகாலா அனுபவத்தைக் கொண்ட ஒரு நீண்டகால பத்திரிகையாளரான குகநாதன் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஆதரிக்கத் தொடங்கினார். தமிழ் வேட்பாளர் கோட்பாட்டை மேம்படுத்தும் செய்திகளும் ஆசிரிய தலையங்கங்களும் கிரமமாகவும் திட்டமிட்ட முறையிலும் அவரது பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. இந்த கோட்பாட்டுக்கு ஆதரவாக தொலைக்காட்சியில் பல நேர்காணர்களும் விவாதங்களும் ஔிபரப்பாகின. மேலும் குகநாதன் அந்த திட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதற்காக பல்வேறு தமிழ் நகரங்களில் பல பொதுக் கூட்டங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் நிதியுதவியையும் செய்தார். நாளடைவில் பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதும் பல அரசியல் ஆய்வாளர்களும் தங்களது எழுத்துக்கள் மூலமும் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலமும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்த திட்டத்தை ஆதரிப்பதாகவும் அதற்காக பணத்தை வழங்குவதாகவும் வதந்திகளும் கிளம்பின. அதற்கு பிறகு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தொடர்ச்சியாக பல கருத்தரங்குகளும் கலந்தாலோசனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. அவற்றில் பல சிவில் சமூக அமைப்புக்கள் பங்குபற்றின. தமிழ் அரசியல் கட்சிகள் இன்னொரு மட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும் ஈடுபாடு காட்டத் தொடங்கின. முன்னர் கூறப்பட்டதைப் போன்று தமிழ் பொதுவேட்பாளர் திட்டத் தை மேம்படுத்துவதில் முன்னோடியாகச் செயற்பட்ட அரசியல் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ். தான். பிறகு ஏனைய கட்சிகளும் ஆர்வம் காட்டின. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிலவிய உள்நெருக்கடி ரெலோவும் தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (புளொட்) தனிவழி செல்வதற்கு வழிவகுத்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் சேர்ந்து இவ்விரு கட்சிகளும் வேறு இரு கட்சிகளும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்தன. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சி தனிமைப்படுத்தப்பட்டது. தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்துக்கு மேலும் தமிழ் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. மொத்தமாக ஏழு அரசியல் கட்சிகள் அந்த திட்டத்தை ஆதரித்தன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமீழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியவையே அந்த கட்சிகளாகும். மறுபுறத்தில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு 81 தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இது 'தமிழ் தேசிய பொதுச்சபை' என்று அழைக்கப்பட்டது. செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு இந்த பொதுச்சபை நிறைவேற்றுக்குழு ஒன்றையும் ஆலோசனைக்குழு ஒன்றையும் அமைத்தது. பொதுக் கட்டமைப்பு அதற்கு பிறகு தமிழ் மக்கள் பொதுச்சபையும் முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு அரசியல் கட்சிகளும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு செயல்முறை ஏற்பாட்டுக்கு வந்தன. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு அமைக்கப்பட்டது. அந்த கட்டமைப்புக்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர்பீடம் இருக்கிறது. அதில் ஏழு பேர் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகவும் ஏழு பேர் அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருந்தனர். என்.ஸ்ரீகாந்தா, டி. சித்தார்த்தன், எஸ். பிரேமச்சந்திரன், எஸ். அடைக்கலநாதன், சி.வி. விக்னேஸ்வரன், ரி.வேந்தன் மற்றும் பி.ஐங்கரநேசன் ஆகியோரே அந்த அரசியல் தலைவர்களாவர். கே.ரி. கணேசலிங்கம், செல்வின் மரியாம்பிள்ளை, சி. யோதிலிங்கம், ஏ. யதீந்திரா, கே. நிலாந்தன், ரி. வசந்தராஜா மற்றும் ஆர். விக்னேஸ்வரன் ஆகியோரே சிவில் சமூகப் பிரதிநிதிகளாவர். உயர்பீடத்தின் பதினான்கு உறுப்பினர்களில் பத்துப்பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய நான்கு பேரும் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அரியநேத்திரன் என்ற அரியம் அதற்கு பிறகு பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் ஒரு நூறு பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதாக தகவறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இது பிறகு 46 பெயர்களைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறியது. அதற்கு பிறகு இது ஏழு பெயர்களைக் கொண்ட குறுகிய பட்டியலாக சுருங்கியது. இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழ் பொது வேட்பாளராக அரியம் என்ற பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டார். பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு முன்வருமாறு அணுகப்பட்டவர்களில் பலர் அதற்கு மறுத்த காரணத்தினால் தெரிவுச் செயன்முறை பெரும் சிக்கலானதாக இருந்ததாக தமிழ் சிவில் வட்டாரங்கள் மூலம் அறியவந்தது. வேறு சந்தர்ப்பங்களில் சிலரை பொதுவேட்பாளராக பரிசீலிப்பதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இருந்து அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆட்சேபனை வந்தது. தெரிவு செய்யப்படும் வேட்பாளர் அடுத்த இரு வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் போடடியிடக்கூடாது; அவர் தான் போட்டியிடுகின்ற சின்னத்தை பிறகு பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் பெரிய நெருக்குதலை ஏற்படுத்தியது. பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான முயற்சியும் வெற்றிபெறவில்லை. வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு அரியநேத்திரனுக்கு அனுகூலமாக மூன்று முக்கிய காரணிகள் அமைந்தன. முதலாவது அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பெருமளவில் தமிழர்கள் மத்தியில் ஐக்கியத்தை ஊக்கப்படுவத்துவதற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை விடவும் கிழக்கு மாகாண வேட்பாளர் ஒருவரை களமிறக்கவேண்டியது முக்கியமானதாக இருந்தது. இரண்டாவது தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அரியநேத்திரன் உறுதியளித்திருக்கிறார். இனிமேல் எந்தொரு தேர்தலிலும் தான் வேட்பாளராக நிற்கப்போவதில்லை என்று அவர் கூறினார். மூன்றாவது அவர் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தகுதியைக் கொண்டவராக இருந்தார். தமிழ் அரசியல் கட்சிகள் அவற்றின் சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பநற்கு தயங்கியதால் புதியதொரு சின்னத்தின் கீழ் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேவைப்பட்டார். தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிடுவது வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் வாக்குகளைக் குறிவைக்கும் சிங்கள வேட்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது சாத்தியம். அவர்களுக்கு செல்லக்கூடிய வாக்குகள் இப்போது அரியநேத்திரனுக்கு போகலாம். ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். புளொட், ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். ரெலோவும், புளொட்டும் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியதற்கான காரணங்கள் இருவருக்கும் விரிவாக கூறப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிளாந்துறையில் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி பிறந்த அரியநேத்திரன் கொக்கட்டிச்சோலையில் அமைந்திருக்கும் மிகவும் பிரபல்யமான ' தான்தோன்றீஸ்வரர் ' சிவன் கோவிலின் மரபுவழியான அறங்காவலர்களாக இருந்துவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அரியம் என்று பிரபல்யமாக அறியப்படும் அவர் ஆற்றல்மிகு எழுத்தாளரும் தமிழ்ப் பேச்சாளருமாவார். பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் விடுதலை புலிகளானால் வெளியிடப்பட்ட ' தமிழ் அலை ' பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். தற்போது கொழும்பில் இருந்து வெளியாகும் ' தமிழன் ' பத்திரிகையில் அரசியல் பத்தியொன்றை அரியம் எழுதிவருகிறார். அவர் 2004 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராக பாராளுமன்றப் பிரவேசம் செய்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் 35,337 வாக்குகளைப் பெற்றார். மட்டக்களப்பு உறுப்பினராக 2010 பாராளுமன்ற தேர்தலிலும் தெரிவான அவருக்கு16,504 வாக்குகள் கிடைத்தன. 2015 பாராளுமன்ற தேர்தலில் தெரிவாவதற்கு அவருக்கு போதுமான விருப்பு வாக்குகள் கிடைக்கவில்லை 2020 பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இயங்கிவரும் அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினராக இருந்துவருகிறார். தமிழரசு கட்சியின் சர்ச்சை தமிழ் பொதுவேட்பாளர் தற்போது தனது கட்சிக்குள் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சி.வி.கே. சிவஞானம், எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் போன்றவர்கள் பொதுவேட்பாளர் திட்டத்தை எதிர்க்கின்ற அதேவேளை மாவை சேனாதிராஜா, ஜ. சிறீநேசன், சிவஞானம் சிறீதரன் போன்றோர் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். தமிழரசு கட்சி எந்த வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரதான வேட்பாளர்களுடன் பேச்ச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு சுமந்திரனுக்கு அதிகாரமளித்தது. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரா குமார திசாநாயக்க போன்ற வேட்பாளர்களுடன் ஏன் நாமல் ராஜபக்சவுடனும் கூட அவர் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தார். பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அவர் கட்சிக்கு அறிவித்து வந்தார். பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆழமாக ஆராய்ந்து இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஜனாதிபதி தேர்தலில் 'வெற்றிபெறுபவருடன்' நிற்கவேணடும் என்று தமிழரசு கட்சி உறுதியாக இருந்தது. கட்சி இறுதித் தீர்மானத்தை எடுத்திராத நிலையில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு அரியநேத்திரன் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தார். இது விடயத்தில் அவரை சிறீதரன் போன்றவர்கள் வெளிப்படையாக ஆதரித்தார்கள். இது தொடர்பாக அரியநேத்திரனிடம் இருந்து தமிழரசு கட்சி ஒரு விளக்கத்தைக் கோரியது. கட்சியின் கொள்கை வகுக்கும் மத்திய செயற்குழு உறுப்புரிமையில் இருந்து அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டார். தமிழ் வேட்பாளர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் உறுப்பினர்கள் ஈடுபடுக்கூடாது என்றும் கட்சி தடை பிறப்பித்தது. ஏற்கெனவே பிளவடைந்திருக்கும் தமிழரசு கட்சி இந்த விவகாரம் தொடர்பில் பாரிய பிளவை நோக்கிச் செல்கின்றது போன்று தெரிகிறது. இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் கூடிய தமிழரசு கட்டியின் மத்திய செயற்குழு ஏகமனதாக மூன்று தீர்மானங்களை எடுத்ததாக சுமந்திரன் செய்தியாளர்கள் மகாநாட்டில் அறிவித்தார். தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதில்லை; அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவேண்டும்; தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழரசு கட்சி ஆதரிக்கும் என்பவையே அந்த தீர்மானங்களாகும். சங்குக்கு வாக்குகள் அதேவேளை, அரியநேத்திரன் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அவரது பிரசாரப் பயணம் யாழ்ப்பாணக்குடா நாட்டில் பொலிகண்டியில் ஆரம்பித்து அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கில் சகல மாவட்டங்கள் ஊடாகவும் அவர் பயணம் செய்வார். அரியத்தின் பிரசாரத்தின் தொனிப்பொருள் ' நமக்காக நாம் ' என்பதாகும். தான் தமிழ்த் தேசியத்தின் ஒரு சின்னம் மாத்திரமே, ஒரு தலைவர் அல்ல என்று அவர் கூறுகிறார். அரியநேத்திரனின் அழைப்புக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறு செவிசாய்ப்பார்கள் என்பது செப்டெம்பர் 21 ஆம் திகதி தெரிந்துவிடும். தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களித்தால் தமிழ் அரசியல் செல்நெறியில் ஒரு தீவிரவாத திருப்பத்தை அது ஏற்படுத்திவிடக்கூடும். தமிழர்கள் அவருக்கு குறைந்தளவில் வாக்களித்தால் அது தமிழ்த் தேசியவாதக் கோட்பாட்டினை பலவீனமடையச் செய்துவிடலாம். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் இறுதியில் தோல்வியடையப் போகிறவர்கள் தமிழ் மக்களே என்று தோன்றுகிறது. https://www.virakesari.lk/article/192632
  3. Published By: VISHNU 02 SEP, 2024 | 03:20 AM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர். சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். ரணில் எமது கொள்கைகளுடன் இணங்கவில்லை தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்தை சிறந்த நகர்வாக பார்க்கிறேன். நான் சஜித்தை சந்தித்து பேசவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. பொய் வாக்குறுதிகளை நான் வழங்கமாட்டேன். ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். செனட் சபை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு இளைஞர் யுவதிகளுடனான எனது உறவு தனித்துவமானது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு பதில் அளிப்பேன். முஸ்லிம்களின் உடல் தகன விவகாரத்தில் மன்னிப்பு கோருகிறோம். இந்தியா, சீனாவுடன் நட்பு ரீதியான உறவை பேணுவேன். மோடியுடன் எனக்கு சிறந்த உறவுள்ளது. அப்பா என்னை அடித்ததில்லை, ஆனால் தவறு செய்தால் திட்டுவார் சகல இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர். சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர். ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவற்றை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு கேள்வி: ஜனாதிபதி தேர்தல் களம் தற்போது எப்படி இருக்கிறது? பதில்: எமது பிரச்சார செயல்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. நாம் மிக முக்கியமாக கிராமத்துக்குள்ளேயே தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்தி இருக்கிறோம். அனுராதபுரத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். அதன் பின்னர் நாம் அதிகளவு கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்கிறோம். எமது பலம் அங்கேதான் இருக்கிறது. இம்முறை தேர்தலில் செலவுகளுக்கான ஒரு வரையறையும் காணப்படுகிறது. அடுத்த வாரத்திலிருந்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம். கேள்வி: அரசியல் தேர்தல் களத்தில் எவ்வாறான நிலைமையை உணருகிறீர்கள்? பதில்: மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர். எமக்கு வாக்களிக்க விரும்புகின்றனர். சிலர் நேரடியாக ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் வேறு வழிகளில் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் மெளனமாக இருக்கின்றனர். கேள்வி: மக்கள் உங்களை சந்திக்கும்போது என்ன உங்களிடம் கேட்கின்றனர் ? பதில்: நாட்டின் இன்றைய பொருளாதார பிரச்சனை மக்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கிறது. வரிசை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது, மின்வெட்டு இல்லை என்று கூறப்பட்ட போதிலும் மக்கள் உள்ளக ரீதியில் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே வரிசையுகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. மக்களின் நுகர்வு குறைவடைந்து இருக்கிறது. மக்களிடம் பணம் இல்லை. அன்றாடம் தொழில் செய்கின்றவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களே சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி மாத சம்பளம் பெறுகின்றவர்களுக்கு வரியை செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். கிராமிய வங்கிகளுடாக அவர்களை பலப்படுத்துவது அவசியம். அங்கிருந்து சந்தையை உருவாக்க வேண்டும். அடுத்ததாக முதலீட்டாளர்களை ஊக்குவித்து தொழில்களை உருவாக்குவது அவசியம். கேள்வி: இந்த தேர்தலில் பொருளாதாரம் தான் முக்கியமான பேசு பொருளாக இருக்கிறதா ? பதில்: எந்த தேர்தலிலும் பொருளாதாரம் தான் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்கும். பொருளாதாரத்தை பலப்படுத்துவது மட்டுமின்றி பொருளாதாரத்தை சுயாதீனமாக்க வேண்டும். இன்னொரு நாட்டிடம் நாம் பொருளாதாரத்திற்கு தங்கி இருந்தால் அங்கு சுயாதீனம் இல்லை. அதற்கு நாம் தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். கேள்வி: உங்கள் பார்வையில் கோட்டா ராஜபக்சவுக்கு என்ன நடந்தது? பதில்: கோட்டாபய அரசாங்கத்தில் பல நல்ல விடயங்கள் நடைபெற்றன. ஆனால் கோட்டா அரசாங்கம் தவறு இழைத்தது எங்கு என்று பார்க்க வேண்டும். எரிபொருள் வரிசை மற்றும் மின்வெட்டு ஆகிய இரண்டு விடயங்களில் தான் கோட்டா நெருக்கடியை சந்தித்தார். மின்வெட்டுக்கு காரணம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவாமையாகும். மேலும் கொரோனா நெருக்கடியும் வந்தது. ஆனால் இந்த இவ்வாறான எந்த பிரச்சனையும் இல்லாத பங்களாதேஷுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதே? எனவே கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர் என்பது நன்றாக தெரிகிறது. கேள்வி: 38 வயதில் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா? பதில்: அரசியல் பயணம் தொடர்கிறது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் எண்ணி இருக்கவில்லை. பொறுப்பு கிடைக்கும்போது அதனை ஏற்க வேண்டும். அரசியல்வாதிக்கு அந்த பண்பு இருப்பது அவசியம். நான் சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். நெருக்கடி நேரத்தில் களமிறங்க வேண்டும். நாடு நன்றாக இருக்கும் போது நான் அரசியல் ரீதியாக நன்றாக பிரபலமடைந்திருக்கும் போது பொறுப்பை ஏற்பதில் பயனில்லை. இவ்வாறான நெருக்கடி நேரத்தில் எம்மை போன்ற இளைஞர்கள் நவீன சிந்தனைகளை கொண்டவர்கள் களத்துக்கு வருவது அவசியம். அந்த வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் மரபுரீதியிலிருந்து வெளியே செல்வேன். என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. இந்த நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன். சகல இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள். ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர். சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர். ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன். கேள்வி: ரணில் விக்ரமசிங்கவை நெருக்கடி நேரத்தில் ஜனாதிபதியாக கொண்டு வந்தீர்கள். இரண்டு வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாமே? பதில்: இங்கு நீண்டகால விடயத்தையா அல்லது குறுகிய கால விடயத்தையா பார்க்க வேண்டும் என்பதே கேள்வியாகும். தற்போது எமக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. தற்போது சஜித் அநுர ரணில் ஆகிய மூன்று வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்தை பார்க்கும்போது அங்கு வளர்ச்சிக்கான இடமில்லை. 2029 ஆம் ஆண்டில் கடன் செலுத்த ஆரம்பிக்கும்போது மீண்டும் பிரச்சனை ஏற்படும். எனவே அவற்றை ஆராய்ந்துவிட்டே போட்டியிட தீர்மானித்தோம். கேள்வி: மஹிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் ரணிலை ஆதரிக்கலாம் என்று கூறியபோதும் நாமல் ராஜபக்ஷ அதனை எதிர்த்தபதாக கூறப்படுகிறது. அது உண்மையா? பதில்: அது ஒரு பொய்யான தகவல். நாங்கள் ஆரம்பத்தில் அனைவரும் ரணிலுக்கு ஆதரவு வழங்கினோம். நிபந்தனையற்ற வகையில் நாம் ஆதரவு வழங்கினோம். அவர் கொண்டு வந்த சில சட்டங்களை எமது கொள்கைகளுக்கு முரணானவை. எமது கொள்கைகளுக்கு இணங்குகின்ற ஒரு வேட்பாளருக்கே ஆதரவு வழங்க வேண்டும். நாம் தற்போதைய ஜனாதிபதிக்கு முதலீடுகளை ஊக்குவிக்குமாறும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறும் கூறினோம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத சட்டங்களை கொண்டு வர வேண்டாம் என்று கூறினோம். ஆனால் அவற்றுக்கு அவர் செவிமடுக்கவில்லை. கேள்வி: கலாச்சாரத்துக்கு எதிரான வகையில் கொண்டு வந்த சட்டம் என்ன? பதில்: ஓரின சேர்க்கை சட்டமூலத்தை குறிப்பிடலாம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் கொண்டுவரக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்த தரப்பினர் கலாச்சாரத்தில் இருந்து ஒதுக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்டத்தில் உரிமை கிடைத்தாலும் நாட்டின் கலாச்சாரத்தில் அவர்களுக்கு உரிமை கிடைக்காமல் போய்விடும். கேள்வி: நீங்கள் களமிறங்க எடுத்த முடிவுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கின்ற ஆதரவு குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா? பதில்: இல்லை அப்படி இல்லை. எனது வாக்குகள் ரணிலுக்கு செல்லவில்லை. சென்றால் தானே பிரச்சினை வரும். அதனால் நான் போட்டியிடுவதால் ரணிலுக்கு எந்தபிரச்சினையும் இல்லை. கேள்வி: தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு? பதில்: ஒரு பக்கத்தில் அதனை நான் சிறந்த ஒரு விடயமாக பார்க்கிறேன். காரணம் இந்த நாட்டில் எவரும் எந்தவொரு இனத்தவரும் ஜனாதிபதியாகலாம் என்ற ஒரு சூழல் உருவாகிறது. அரசியலமைப்பில் உள்ள விடயம் பிரயோகப்படுத்தப்படுகிறது. சிறந்த ஆரம்பமாக இதனை நான் பார்க்கிறேன். எனது கட்சியிலும் தமிழ் தலைவர்கள் உருவாகுவார்கள். எனது கட்சியிலும் தமிழர்கள் தலைமைத்துவ பதவிக்கும் வருவார்கள் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் சஜித்தை சந்தித்து நீங்கள் பேசியதாக கூறப்படுவது? பதில்: அது ஒரு பொய்யான தகவல். நான் அவரை சந்தித்து பேசவில்லை. கேள்வி: அப்படியானால் இந்த வதந்தி எங்கிருந்து உருவாகின்றது? பதில்: ராஜபக்ஷமார் எல்லோருடனும் நல்ல உறவை பேணுகின்றனர். மேலும் தேர்தல் காரணமாக இந்த கதை உருவாகி இருக்கலாம். கேள்வி: உங்களை தவிர்த்து பிரதான மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன ? பதில்: இந்த மூவருக்கும் ஒரே கொள்கையே காணப்படுகிறது. அனுராவின் விஞ்ஞாபகனம் ரணிலின் விஞ்ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. கேள்வி: உங்களுடன் இளம் அமைச்சர்கள் அதிகளவு இருந்தார்கள். அவர்களுக்கு உங்கள் அரசாங்கத்தில் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இன்று உங்களுடன் இல்லை. இதனை எப்படி பார்க்கிறீர்கள்? பதில்: இதுதான் அரசியல். சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அங்கு இருக்கின்றனர் என்பதற்காக அங்கே தான் இருக்கின்றார்களா என்று யாருக்கும் தெரியாது. கேள்வி: அவர்களுடன் உங்களுக்கு எதிர்கால பயணம் இருக்குமா? பதில்: கொள்கை பதில் கொள்கை அடிப்படையில் பிரச்சனை இல்லாவிடில் பயணம் இருக்கும். கேள்வி: 13-வது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறுகின்றீர்கள். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவே முடியாது என்று கூறுகின்றீர்கள். ஏனைய வேட்பாளர்கள் அது தொடர்பாக எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் பாராளுமன்றத்தில் ஆராயலாம் என்று கூறுகின்றனர். ஆனால் நீங்கள் ஏன் இவ்வாறு கடினமான ஒரு போக்கை இந்த விடயத்தில் கையாளுகின்றீர்கள்? பதில்: இந்த நாட்டில் பதவிக்கு வந்த எட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமார்களும் இந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்கவில்லை. இரண்டு ஜனாதிபதிகள் அதனை வழங்குவதாக கூறிறே அதிகாரத்துக்கு வந்தனர். ஆனால் வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் அதனை வழங்கவில்லை. எனவே இதனை அடுத்த வருடத்தில் வழங்க முடியும் என்று தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு கூற முடியும்? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு நாட்டில் ஒரு பகுதி மக்கள் எதிரிக்கின்றனர். அதனை வழங்கினால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும் என்ற நிலைமையுள்ளது. இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனர். நான் உண்மையை மட்டுமே கூறுவேன். வழங்க முடியாது என்றால் முடியாது என்பதனை தெளிவாக திட்டவட்டமாக உண்மையை கூறுகிறேன். தமிழ் இளைஞர்களும் நான் இவ்வாறு உண்மையை கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று கூறுகின்ற நான் எனது முதலாவது தேர்தல் அலுவலகத்தை முல்லைத்தீவில் அமைத்தேன். கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? பதில்: அரசியல்வாதிகளுக்கு தான் இந்த அரசியல் பிரச்சனை இருக்கின்றது. மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவதில்லை. பொலிஸ் அதிகாரத்தை வழங்கி விட்டதும் மக்களின் வயிறு நிறைந்து விடுமா? கேள்வி: அப்படி என்றால் நீங்கள் ஜனாதிபதியானால் மாகாண சபை முறை இருக்காதா? பதில்: மாகாண சபை முறை இருக்கும். நான் ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் உடனடியாக நடத்துவேன். வரலாற்றில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்று கூறிய எவரும் உரிய நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச முதல் முதலாக வடக்கில் தேர்தலை நடத்தினார். வடக்கில் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான் தெற்கிலும் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர். எனவே நாம் இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே கோணத்தில் ஆராய வேண்டும். இவற்றுக்கு இரண்டு தீர்வுகள் இல்லை. ஒரே தீர்வு தான் இருக்கிறது. தெற்கில் இளைஞர்களுக்கு கிடைக்கின்ற சகல உரிமைகளும் சந்தர்ப்பங்களும் வடக்கில் கிழக்கில் இருக்கின்ற இளைஞர்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன். பொய் வாக்குறுதிகளை வழங்க முடியாது. புதிய தலைவரான என்னிடம் புதிய விடயங்களை மக்கள் எதிர்பார்க்கலாம். கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் சமஷடி கோரிக்கையை முன்வைக்கின்றனவே? பதில்: இது ஒரு அரசியல் தீர்மானமாக இருக்கிறது. அதற்காகத்தான் மைத்திராபாலவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். அப்போது கூட இதனை பெற முடியாமல் போய்விட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதெனில் அது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். அது ஜனாதிபதியின் பொறுப்பல்ல. நிறைவேற்று அதிகாரம் முறை மற்றும் தேர்தல் முறையை ஒன்றாகவே மாற்றவேண்டும். ஜனாதிபதி தேர்தல் மேடையில் அது தொடர்பாக வாக்குறுதி வழங்குவதில் அர்த்தமில்லை. கேள்வி: செனட் சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? பதில்: இந்த விடயங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தலாம். அதற்கு எமது கதவுகள் திறந்து இருக்கின்றன. அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ தீர்மானிக்க முடியாது. இதனை ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானிக்க முடியாது. கேள்வி: வடக்கில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இளைஞர் யுதிகளுடன் உங்களுக்கு கடந்த காலங்களில் சிறந்த தொடர்பு இருந்தது. அந்த தொடர்பு இன்னும் இருக்கிறதா? பதில்: இன்னும் சிறப்பாக இருக்கின்றது. கடந்த சில வருடங்களில் அங்கு எனது பிரசன்னம் குறைவாக இருந்தது. ஆனால் அவர்களுடனான எனது உறவு சிறப்பாகவே தொடர்கிறத. அவர்களது நிகழ்வுகள் பிறந்த நாள் நிகழ்வுகள் வீட்டு நிகழ்வுகளுக்கு நான் அடிக்கடி சென்று வருவேன். தற்போது தேர்தல் காலத்தில் நிச்சயமாக நான் அங்கு செல்வேன். அங்கு கூட்டங்களை நடத்துவேன். அங்குள்ள இளைஞர்களுடன் எனது உறவு அரசியல் ரீதியானதல்ல. அது தனிப்பட்ட உறவாகவே காணப்படுகிறது. அதிகமானோருக்கு இது தெரியாது. கேள்வி: 2009 இல் யுத்தம் நிறைவடைந்தது. ஆனால் இன்னும் காணாமல் போனோர் பிரச்சனை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை நீங்கள் எப்படி கையாள்வீர்கள்? பதில்: காணாமல் போனோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும். தொடர்ந்து காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஒரு பதில் வழங்க வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்துவிடுவேன். கேள்வி: கொரோனா காத்தில் முஸ்லிம் மக்களின் சடலங்ளை தகனம் செய்த விடயம் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்தது. அந்த நேரத்தில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தது? பதில்: அது தனிப்பட்ட ரீதியில் எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ குழு வழங்கிய ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழிநடத்தியது. கேள்வி: நீங்கள் அப்போதே அவ்வாறு கருதுனீர்களா? பதில்: எந்த நேரத்தில் அவ்வாறு நான் சிந்திக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் நாட்டு மக்களை பாதுகாப்பதே பிரதான தேவையாக இருந்தது. நிபுணத்துவ ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்பதே சகலரதும் கருத்தாக இருந்தது. ஆனால் சிறிது காலம் செல்லும்போது இந்த நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழி நடத்துகிறது என்பதை புரிந்துகொண்டோம். போராட்டக் களத்தில் முஸ்லிம் மக்கள் கோட்டாவுக்கு எதிராக உடல் தகன விவகாரத்தில் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தபோது அருகில் அதற்கு ஆலோசனை வழங்கிய நிபுணத்துவகுழு உறுப்பினர்களும் பதாதைகளை பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இது உபாய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். கேள்வி: இந்த நேர்காணல் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்? பதில்: இது நாங்கள் தனிப்பட்ட ரீதியாக எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ ஆலோசனை பேரில் செய்யப்பட்ட விடயம். மக்களின் பாதுகாப்புக்காக இது செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவு காரணமாக மக்கள் காயப்பட்டிருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம். உடல் தகன விவகாரம் மற்றும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவுகள் காரணமாக யாராவது காயப்பட்டிருந்தால் கவலை அடைந்திருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம். கேள்வி: இந்தியா சீனாவுடனான உங்கள் வெளிவிவகார கொள்கை எப்படி இருக்கும்? பதில்: நான் இரண்டு நாடுகளுடனும் நட்பு ரீதியான ஒரு கொள்கையை முன்னெடுப்பேன். நட்புரீ மற்றும் அருகாமை நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மற்றும் அணிசேரா கொள்கையை நான் பின்பற்றுவேன். எமது அபிவிருத்திக்கு முதலீடுகளுக்கு மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்த இரண்டு நாடுகளும் மிக முக்கியத்துவமானவையாகும். ஆனால் இன்னும் ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு எமது நாட்டை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன். கேள்வி: இந்தியா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்வதாக கூறப்படுகிறதே? பதில்: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கரிசனை கொள்வோம். கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் என்று ரீதியில் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ? பதில்: தமிழ் பேசும் மக்களின் கலாசாரங்களை விழுமியங்களை பாரம்பரியங்களை நான் காப்பாற்றுவேன். மதங்களை காப்பாற்றுவேன். யுத்த காலத்திலும் கொரோனா காலத்திலும் கூட நாங்கள் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்தினோம். பொய் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன். பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் சிக்க வேண்டாம் என்று நான் கூறுகிறேன். 30 - 40 வருடங்கள் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து விட்டீர்கள். எனது தந்தையும் 13 பிளஸ் என்ற விடயத்தை முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. அவற்றில் பாடங்களைக் கற்றுத்தான் நான் இந்த நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன். வரலாற்று ரீதியான பாடங்கள் நிகழ்வுகளில் இருந்து பாடங்களை கற்று நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன். கேள்வி: மஹிந்த ராஜபக்சவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான உறவு எவ்வாறானது? பதில்: அது மிகவும் நெருக்கமான உறவு. தந்தை என்ற ரீதியில் அவர் என்னை வழி நடத்துகிறார். எனது பிரச்சாரத்தில் முன்னணியில் அவர் தான் இருக்கிறார். தவறு செய்தால் திட்டுவார். ஆனால் ஒருபோதும் என்னை அடித்ததில்லை. ஆலோசனை வழங்குவார். ஆனால் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார். கேள்வி: நீங்கள் ஜனாதிபதி தேர்தல் தேர்தலில் களமிறங்குவதற்கு தந்தை ஆரம்பத்தில் விரும்பினாரா? பதில்: கட்சியும் தந்தையும் பசிலும் எடுத்து ஒரு முடிவே இதுவாகும். கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நான் போட்டியிடவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். கேள்வி: நீங்கள் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் உங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்களுடன் மீண்டும் பேசினார்களா ? பதில்: அவர்கள் இன்னும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். அங்கிருந்தும் சிலர் எனக்கு உதவி செய்கின்றனர். சிலர் வருவார்கள். சிலர் அங்கிருந்து எனக்கு உதவி செய்வார்கள். கேள்வி: இந்திய பிரதமர் மோடியுடனான உங்கள் எத்தகையது? பதில்: அது கொள்கை ரீதியாக ஏற்பட்ட பிணைப்பினால் ஏற்பட்ட உறவு. இந்திய பிரதமர் மோடியும் மதங்களை கலாசாரங்களை மதிப்பவர். அவர் அசைவம் உண்ண மாட்டார். இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை மதிப்பவர். அந்த வழியிலேயே நானும் பயணிக்கிறேன். இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாம் இருவரும் சந்திக்கும் போது பரஸ்பரம் அக்கறை உள்ள விடயங்கள் தொடர்பாக பேசுவோம். கேள்வி: இந்திய பிரதமர் மோடி உங்களை சந்திக்கும்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்த்து விடுங்கள், அதனை ஏன் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறாரா? பதில்: இந்திய பிரதமர் மற்றும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் ஏனைய நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் தங்களது பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவே கவனம் செலுத்துவார்கள். கேள்வி: பிரசார காலத்தில் உங்கள் பிள்ளைகளுடன் இருக்கின்ற சந்தர்ப்பங்களை இழக்கின்றீர்களா? பதில்: நான் எங்கிருந்தாலும் அவர்களுடன் வீடியோ தொடர்பை ஏற்படுத்தி பேசி விடுவேன். வீட்டில் இருக்கும்போது அவர்களுடன் நெருக்கமாக இருப்பேன். https://www.virakesari.lk/article/192602
  4. பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு, கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் கப்பலும், அதில் இருந்த டயானா சிலையும். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா மோரெல் மற்றும் அலிசன் பிரான்சிஸ் பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் என்றவுடன் நினைவுக்கு வருவது கப்பலின் கூர்மையான முன் பகுதி, அதிலுள்ள உலோக பிடிமானங்களே. அந்த இடத்தில் ஜாக் ? ரோஸ் ஜோடி நிற்பது போன்ற திரைப்படக் காட்சிகள் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அந்த உலோக பிடிமானங்கள் தற்போது உடைந்து கீழே விழுந்துள்ளன. புதிய ஆய்வுகள், டைட்டானிக் கப்பல் மெல்லமெல்ல சேதமடைந்ததன் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. அதன் பிடிமானங்களில் பெரும்பாலானவை உடைந்து கடலின் கீழ் தளத்தில் உள்ளன. பிரபலமான திரைப்படக் காட்சியின் மூலம் ரோஸ் - ஜாக் ஜோடி இந்த பிடிமானங்களை மக்கள் மனதில் இருந்து நீங்காத ஒன்றாக்கி விட்டது. இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற ரோபோ ஆய்வுகள், அந்த பிடிமானங்களை கப்பல் இழந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடலடியில் கப்பல் கிடந்ததன் விளைவாக எப்படி அதன் பாகங்கள் சிதைந்து உருமாறி வருகின்றன என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன. 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அட்லாண்டிக் பெருங்கடலில் கன்னிப் பயணத்தை மேற்கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் ஒரு பெரிய பனிப்பாறையின் மீது மோதியதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர். “டைட்டானிக் கப்பலின் முன் பகுதி மிகவும் பிரபலமானது. பாப் கலாசாரத்தில் இந்த தருணங்கள் எல்லாம் இருக்கின்றன- கப்பல் சிதைவு பற்றி யோசிக்கும் போது அது தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது அது அதே நிலையில் இல்லை” என்கிறார், இந்த புதிய தேடல்களை நடத்திய ஆர்.எம்.எஸ் டைட்டானிக் நிறுவனத்தின் இயக்குநர் தோமசினா ரே. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதோ ஒரு சமயத்தில் 4.5 மீட்டர் நீளமான இந்த பிடிமானங்கள் கீழே விழுந்திருக்கலாம் என்று ஆய்வுக்குழு கருதுகிறது. 2022-ம் ஆண்டு ஆழ்கடல் வரைபட நிறுவனமான மெகலன் மற்றும் ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான அட்லாண்டிக் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் போது கிடைத்தப் படங்களில் பிடிமானங்கள் கப்பலில் இருப்பது தெரிந்தது. எனினும் அப்போதே அவை சிதைய தொடங்கியிருந்தன. “ஒரு கட்டத்தில் கம்பிகள் உதிர தொடங்கி கீழே விழுந்துவிட்டன.” என்கிறார் தோமசினா ரே. பட மூலாதாரம்,RMS TITANIC INC படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலின் முன்பகுதி (2010 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்கள் ஒப்பீடு) பட மூலாதாரம்,RMS TITANIC INC படக்குறிப்பு, கப்பலின் முன் பகுதியில் உள்ள பிடிமானங்கள் உடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆய்வில் கிடைத்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்கள் ஆர்.எ. எஸ் டைட்டானிக் நிறுவனம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆய்வை மேற்கொண்டது. தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இரண்டு கருவிகள் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களையும் 24 மணி நேர உயர்தர காட்சிகளையும் எடுத்தன. அவை 800 மீட்டர் இடைவெளியில் கிடக்கும் கப்பலின் முன் பகுதியையும் பின் பகுதியையும் அதை சுற்றியிருக்கும் பொருட்களையும் படம் பிடித்தன. இந்த காட்சிகளை கவனமாக ஆராய்ந்து வரும் நிறுவனம் , கப்பல் சிதைந்த இடத்தின் துல்லிய தகவல்களை கொண்டு டிஜிட்டல் 3டி ஸ்கேனை உருவாக்கும். வரும் மாதங்களில் மேலும் பல புகைப்படங்கள் வெளிவரும். பட மூலாதாரம்,RMS TITANIC INC படக்குறிப்பு, கடல் தரையில் கப்பலுக்கு அருகில் பிடிமானங்கள் விழுந்து கிடக்கின்றன. 112 ஆண்டுகளாக ஆழ்கடலில் கிடக்கும் வெண்கல சிலை பட மூலாதாரம்,RMS TITANIC INC படக்குறிப்பு, கப்பலின் முதல் வகுப்பு ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்த “வெர்சைல்ஸின் டயானா” என்ற வெண்கல சிலை. இந்த ஆய்வுக் குழு மற்றொரு பொருளையும் கண்டுபிடித்துள்ளது. 1986ம் ஆண்டு “வெர்சைல்ஸின் டயானா” என்ற வெண்கல சிலையை ராபர் பல்லார்ட் புகைப்படம் எடுத்திருந்தார். 1985-ம் ஆண்டில் டைட்டானிக்கின் சிதைவுகளை கண்டுபிடித்திருந்தவர் அவர். ஆனால் அந்த சிலை குறிப்பாக எந்த இடத்தில் இருந்தது என்று தெரியாததால், அதன் பிறகு வேறு எவராலும் அந்த சிலையை காண முடியவில்லை. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழிவுகளுக்கு இடையில் முகம் மேலே தெரியும் வகையில் அந்த சிலை இருந்தது. “வைக்கோல் போரில் குண்டூசியை தேடுவது போல் இருந்தது. மீண்டும் இந்த ஆண்டு அந்த சிலையை கண்டுபிடித்தது மிகவும் முக்கியமானது” என்கிறார் டைட்டானிக் ஆய்வாளர் மற்றும் விட்னஸ் டைட்டானிக் வலையொலியின் தொகுப்பாளர் ஜேம்ஸ் பெனகா. டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது இந்த சிலை. “முதல் வகுப்பு ஓய்வறை தான் கப்பலில் இருந்த மிகவும் அழகான அறை. அந்த அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது இந்த வெண்கல சிலை” என்கிறார் அவர். “டைட்டானிக் இரண்டாக பிளவுப்பட்ட போது, அந்த ஓய்வறையும் பிளவுபட்டது. அப்போது ஏற்பட்ட சேதத்தில் சிதைவுகளின் இருளுக்குள் டயானா சிலை சிக்கிக் கொண்டது” என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1912ம் ஆண்டு பனிப்பாறையின் மீது மோதியதில் டைடானிக் கப்பலில் இருந்த 1500 பேர் உயிரிழந்தனர். ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்துக்கு மட்டுமே கப்பலின் பாகங்களை மீட்கும் உரிமையும் அதன் சிதைவுகளை அகற்றும் சட்டப்பூர்வ உரிமையும் உள்ளது. கப்பலின் சிதைவுகளிலிருந்து கடந்த பல ஆண்டுகளில் இந்த நிறுவனம் பல ஆயிரக்கணக்கான பொருட்களை மீட்டுள்ளது. இதில் ஒரு பகுதி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மேலும் பல பொருட்களை மீட்பதற்கு மீண்டும் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். அப்போது டயானா சிலையை மேலே எடுத்து வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் பலர் கப்பலின் சிதைவுகள் இருக்கும் இடத்தை கல்லறையாக கருதுகின்றனர். அந்த இடத்தை தொடக் கூடாது என்று நினைக்கின்றனர். “டயானா சிலையை மீண்டும் கண்டுபிடித்தது, டைட்டானிக் சிதைவிடத்தை தொடக் கூடாது என்று கூறுபவர்களுக்கான சரியான பதிலாகும்” என்கிறார் பென்கா. “எல்லோராலும் பார்த்து ரசிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டிய ஒரு கலைப் பொருள் டயானா சிலை. அந்த சிலை கடலுக்கு அடியில் கும்மிருட்டில் 112 ஆண்டுகளாக கிடக்கிறது. என்னால் அதை கடலுக்கு அடியில் ஒரு போதும் விட முடியாது” என்றார் . https://www.bbc.com/tamil/articles/ce387zq8wleo
  5. வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் 30 பேர் சுட்டுக்கொலை - ஜனாதிபதி கிம் வழங்கிய தண்டனை 04 SEP, 2024 | 04:33 PM வடகொரியாவில் 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு காரணமான மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளார் என நியுயோர்க் போஸ்ட்செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் கடந்த கோடைகாலத்தில் தீடிரென நிகழ்ந்த இயற்கை அனர்த்தம் காரணமாக 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 20 முதல் 30 பேருக்கு எதிராக ஊழல் மற்றும் வேலையில் அலட்சியம் குறித்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அரசதொலைக்காட்சியான சோசன் தெரிவித்துள்ளது. மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 20 முதல் 30 ஊழியர்கள் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதியே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். எனினும் இந்த தகவலை சுயாதீன வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை. கொல்லப்பட்ட அதிகாரிகள் யார் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை எனினும், வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து பதவி நீக்கப்பட்டவர்களில் முக்கிய அதிகாரிகள் சிலர் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் தலை எப்போது துண்டிக்கப்படும் என தெரியாத நிலையிலிருந்தனர் என முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்தள்ளார். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த மாதம் பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளகட்டியெழுப்ப பல மாதங்களாகும் என தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/192843 மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க முடியுமா?!
  6. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் அதிக் அகமதின் நெருங்கிய நண்பரின் வீட்டில் 'புல்டோசர் நடவடிக்கை' (கோப்பு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடு மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவைய், கே.வி.விஸ்வநாத் அடங்கிய அமர்வு கடுமையான கேள்விகளை எழுப்பியது. திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது மாநில அரசுகளின் புல்டோசர் நடவடிக்கை குறித்து அந்த அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?”என்று நீதிபதி பி.ஆர்.கவைய் கேள்வி எழுப்பினார். மேலும் “ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் அவரது வீட்டை இடிக்க முடியாது” என்றும் நீதிபதி கவைய் தெரிவித்தார். உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ’வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக எந்த கட்டடத்தையும் இடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். “நீண்ட காலத்திற்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் மாநிலத்தில் புல்டோசர் நடவடிக்கை என்று கூறப்படும் செயலானது தொழில்முறை குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு எதிரானது என்று உத்தரபிரதேச முதல்வர் அலுவலகத்தின் ட்வீட் கூறுகிறது. இந்த ட்வீட் 2022 ஜூன் மாதம் பதிவிடப்பட்டது. உத்தரபிரதேசத்தின் 'புல்டோசர் நடவடிக்கை’ உத்தரபிரதேசத்தில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது கிரிமினல் வழக்குகளில் வீட்டு உரிமையாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவரும்போது அவர்களின் வீடுகள் மீது இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜாவேத் முகமது - 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இஸ்லாமிய சமூகம் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஜாவேத் என்ற மனித உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டார். பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு தொலைக்காட்சி சேனலில் நடந்த விவாதத்தில் முகமது நபி குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக நூபுர் ஷர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் (பிடிஏ) ஜாவேத் முகமதின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்தது. இந்த வீடு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்தது. ஆனால், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தால் இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜாவேத் முகமது அல்ல அவரது மனைவி பர்வீன் ஃபாத்திமா என்றும், இந்த வீடு அவரது பெற்றோரின் திருமண பரிசாக அவருக்கு வழங்கப்பட்டது என்றும் ஜாவேத் முகமதின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். உத்தரபிரதேசத்தில் யோகி அரசின் இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டனர். அதே நேரத்தில், 'குற்றவாளிகள்/மாஃபியாக்கள் மீது புல்டோசர் நடவடிக்கை தொடரும்' என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்திருந்தார். ஹாஜி ரஸா - உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஹாஜி ரஸாவின் நான்கு மாடி வணிக வளாகத்தின் மீது சில நாட்களுக்கு முன்பு புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோதிக்கு எதிராக ஹாஜி ரஸா ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிக் அகமது- உத்தரபிரதேசத்தின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான அதிக் அகமதின் நெருங்கிய உறவினர்கள் பலரின் வீடுகள் 2023 ஆம் ஆண்டு மாரச் மாதம், புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. முன்னதாக பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று பிரயாக்ராஜில் உமேஷ் பால் படுகொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலையில் முக்கிய சாட்சியாக உமேஷ் பால் இருந்தார். உமேஷ் பால் கொலைக்குப் பிறகு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ’மாநிலத்தில் மாஃபியாவை வேரறுப்பேன்’ என்று கூறியிருந்தார். 2004 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை செய்யப்பட்ட பின்னர் 2007 ஆம் ஆண்டு மாயாவதி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அவரது அரசும் அதிக் அகமது மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, உத்திரபிரதேசத்தில் சாங்லியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் விகாஸ் துபே- 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் விகாஸ் துபேயின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது. விகாஸ் துபே மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முன்னதாக விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்வதற்காக கான்பூர் ஊரக மாவட்டத்தின் பிக்ரு கிராமத்திற்கு காவல் துறை சென்றது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 காவலர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து விகாஸ் துபே தலைமறைவானார். பின்னர் அவரது வீட்டின் ஒரு பகுதி புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. "எனக்கு மற்ற மாநிலங்களைப் பற்றி தெரியாது. ஆனால் உத்திரபிரதேசத்தில் யோகியின் அரசு, மாஃபியாக்களின் பட்டியலை முதலில் தயாரித்தது. அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு எதிராக ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,” என்று உத்தரபிரதேசத்தின் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் பாண்டே கூறினார். "மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு ஏற்கனவே செய்து விட்டது. எனவே புல்டோசர் நடவடிக்கைக்கும், ஒரு நபர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உ.பி அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்,” என்றார் அவர். உத்திரபிரதேசத்தில் மட்டுமின்றி, சமீப ஆண்டுகளில் நாட்டின் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல புல்டோசர் நடவடிக்கைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. ”2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் ஒரு ’தண்டனையாக’ புல்டோசர் மூலம் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன,” என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான 'அம்னஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. அவை - அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி. இந்த வழக்குகள் பலவற்றில் சட்ட ரீதியான நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஜாவேத் அகமதின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது, அது அவரது மனைவி பெயரில் இருந்தது பின்னர் தெரியவந்தது. மற்ற மாநிலங்களிலும் ‘புல்டோசர் நடவடிக்கை’ பின்னர் புல்டோசர் நடவடிக்கை மத்தியப் பிரதேசத்திலும் நடந்தது. அதன்பிறகு, அப்போதைய மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை சமூக வலைதளங்களில் சிலர் 'புல்டோசர் மாமா' என்று அழைக்கத் தொடங்கினர். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பகிரங்கமாக, “கலெக்டர்கள், எஸ்பி, ஐஜி அனைவரும் கவனமாக கேளுங்கள்... இந்த புல்டோசர்கள் எப்போது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கேளுங்கள், சகோதரி மற்றும் மகளை தவறான கண்ணுடன் பார்க்கும் குண்டர்களை தாக்குவதற்கு இதை பயன்படுத்தவும்,” என்றார். மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளஹான் ஆட்சியில் தொடங்கிய இந்த நடவடிக்கை அவருக்கு அடுத்தும் தொடர்ந்தது. ஹாஜி ஷாஜாத் அலி- மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் கடந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போலீஸாரிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க வந்த மக்கள் காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஹாஜி ஷாஜாத் அலி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹாஜி ஷாஜாத் வீட்டின் மீது புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி இம்ரான் பிரதாப்கரி சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார். "இது நியாயமா? மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நிர்வாகம் ஹாஜி ஷாஜாத்தின் வீட்டை இடித்தது மட்டுமின்றி, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் புல்டோசர்கள் அடித்து நொறுக்கின," என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல், மத்திய பிரதேசத்தின் ரீவாவில், 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், பங்கஜ் திரிபாதி என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. பங்கஜ் திரிபாதி ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதும் செய்யப்பட்டார். இது குறித்து அப்போதைய மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தனது ட்விட்டர் பதிவில், “மத்திய பிரதேச மண்ணில் பெண்களுக்கு எதிராக கொடுமை செய்பவர்கள் யாரும் தப்ப மாட்டார்கள்” என்று பதிவிட்டிருந்தார். பங்கஜ் திரிபாதியின் வீட்டு கட்டுமானத்தில் ஏதேனும் சட்ட விதிகள் மீறப்பட்டதா இல்லையா என்பது குறித்து இந்த ட்வீட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஜஹாங்கிர்புரி- தலைநகர் டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுமன் ஜெயந்தியையொட்டி வன்முறை ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, வன்முறை நடந்த இடத்தில் புல்டோசர்களைக் கொண்டு டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அடுத்த நாளே இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் சல்மான் குர்ஷித் முழு குடும்பத்தையும் தண்டிப்பது எப்படி சரி? கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது என்றும் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் ஃபிரண்ட்லைன் என்ற ஆங்கில நாளிதழின் அறிக்கை தெரிவிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கை பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவரது முழு குடும்பமும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது போன்ற வழக்குகள் குறித்து கடந்த திங்கள்கிழமை கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், மகனின் தவறுக்காக தந்தையின் வீட்டை இடிப்பது சரியல்ல என்றும் கூறியுள்ளது. "சமீப காலமாக புல்டோசர் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது உண்மைதான். முன்பு போலீஸ் ஜப்தி நடவடிக்கைகளை செய்து வந்தது,” என்று ராஜேஷ் பாண்டே குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgw0z4pv4eo
  7. கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்தில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷை (Sandeep Ghosh) சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் (Sanjay Roy) என்பவரை காவல்துறையினர் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்திருந்தனர். தொடர் விசாரணை அத்தோடு, சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட போது மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) உட்பட ஏழு பேரிடமும் மற்றும் சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சிபிஐக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் எழுந்த பலதரப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் சந்தீப் கோஷிடம் 18 நாட்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டதுடன் இரண்டு முறை உண்மை கண்டறியுடம் சோதணையும் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் ஒரு நிரபராதி எனவும், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் அத்தோடு சிலரால் திட்டமிட்டு தான் குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இருப்பினும், அவருக்கு சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக DNA மற்றும் தடயவியல் அறிக்ககைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட விசாரணை இதனடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி குறித்த சம்பவத்துடன் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவராத நிலையில் தற்போது சந்தீப் கோஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரங்களில் சந்தீப் கோஷின் வீடுகள் உட்பட 16 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், இரண்டு வார கால விசாரணைகளின் பின்பு நிதி முறைக்கேடு விவகாரத்திலும் மற்றும் அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை விற்பனை செய்தல் போன்ற குற்றசாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதற்கு முன்னாள் சந்தீப் கோஷ் மருத்துவ சங்கத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/kolkata-doctor-case-1725388448#google_vignette
  8. கெஹெலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 02:37 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவை மீண்டும் ஒத்தி வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம், இந்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உரிய தீர்மானத்தை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 03ஆம் திகதி வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192831
  9. மிருசுவிலில் 8 பேர் கொலை; சுனில் ரத்னாயக்கவின் பொதுமன்னிப்பு விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு யாழ். மிருசுவில் பகுதியில் 8 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி அம்பிகா சற்குணநாதன் ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட மனுவில் எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. https://thinakkural.lk/article/308990
  10. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா(Mongolia) நாட்டிற்கு ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்(Vladimir Putin) சென்றுள்ளார். ரஷ்யா - உக்ரைன் (ukraine)இடையே போர் நீடித்து வருகிறது. இப்போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் (netherland)உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. புடின் மீது கைது பிடியாணை அந்த வழக்கில் புடின் மீது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புடின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புடினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று மங்கோலியா சென்றுள்ளார். மங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நிலையில் புடினின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடினை அந்நாட்டு ஜனாதிபதி உக்னங்இன் குர்ரில்சுக் நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். https://ibctamil.com/article/putin-will-be-arrested-international-sensation-1725397308#google_vignette
  11. Published By: DIGITAL DESK 7 04 SEP, 2024 | 05:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். விசா விநியோகம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவை மீறி செயற்படுவதே இதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்கு வரிசையில் மக்கள் இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். எமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு இருந்து வரும் தடைகள் தொடர்பில் சுற்றுலா பயணிகள் தங்களின் முகப்புத்தகங்கள் ஊடாக தகவல் வெளியிட்டு வருகின்றனர். இது எமது நாட்டின் கெளரவத்துக்கு பாதிப்பாகும். விசா விநியோகத்தில் இடம்பெற்றுவரும் பாரிய மோசடி தொடர்பில் உயர் நீதிமன்றில் நாங்கள் தொடுத்த வழக்கு காரணமாக, நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு தடை உத்தரவொன்றை வழங்கி இருக்கிறது. என்றாலும் நீதிமன்ற உத்தரவையும் கண்டுகொள்ளாது இன்னும் அந்த முறைப்படியே விசா விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதேநேரம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் செயற்படாமல் இருப்பதற்கான நியாயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் விடயத்துக்கு பொறுப்பானவர்கள் தாங்கள் ஆரம்பித்த இந்த விடயத்தை எப்படியாவு தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவரை உதாசீனம் செய்து செயற்படுவதனாலே இந்த பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகும். அதனால் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். எனவே விசா விநியாேகம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்பட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/192850
  12. ஏட்டு ஏகாம்பரம் இருக்க பயமேன்!! அந்தப் பொடியன் பாவம் என்ன பிடுங்குப்பாடோ! நாங்க அவங்க குடும்பத்தை வைச்சு......
  13. முன்னாள் வைத்திய அட்சகர் முகநூல் செயலிழந்திருந்தது விடுதிக்கு முன்னால் அவரது கார் இந்த மூன்றையும் வைத்து தலையங்கத்தில் வைத்தியரின் பெயரை சேர்த்துவிட்டேன். ஆனால் ஐ.பி.சி தமிழில் விபரமாகப் போட்டுள்ளனர். சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் நுழைந்த விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை (M. Thambirasa) செப்டம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பி தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதான மு.தம்பிராசாவை செப்டம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைத்தியசாலை விடுதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரிவித்து காவல்துறையினருக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி காவல்துறையினர் வைத்தியசாலை விடுதி அறைக்கு வெளியே வைத்தியரை அழைத்த போதும், வைத்தியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விடுதி அறையை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இந்தநிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அங்கு சென்ற காவல்துறையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அடக்குமுறை இதனையடுத்து சம்பவ இடத்தில் நின்ற மு.தம்பிராசாவையும் காணொளியை எடுக்க முயன்ற இருவரையும் என மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் மூவரையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் ஏனைய இருவரையும் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ramanathan-archuna-fake-news-viral-accusation-1725412486
  14. Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 01:31 PM யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அந்தவகையில் இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/192821
  15. சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில் Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 11:19 AM சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொலைபேசி மற்றும் முகநூல் என்பன நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு திடீரென செயலிழந்திருந்ததுடன், வைத்தியசாலை விடுதிக்கு முன்னால் அவரது கார் தரித்து நின்றமையாலும் பல்வேறு விதமான சந்தேகங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக எழுப்பட்டிருந்தது. வைத்தியரை காணவில்லை எனவும் சாவகச்சேரி பொலிஸாருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டன. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்திருந்தனர். அந்நிலையில் யூடியூபர் இருவர் உள்ளிட்ட மூவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து காணொளிகளை எடுத்ததுடன், சமூக வலைத்தளங்களில் நேரலையில், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை தெரிவித்ததுடன், தவறான தகவல்களையும் பரப்ப முற்பட்ட நிலையில் மூவரையும் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று இருந்தனர். அதேவேளை, விடுதிக்குள் வைத்தியர் இருந்த நிலையில் பொலிஸார், கதவை தட்டி வைத்தியரை வெளியே அழைத்த வேளை, வைத்தியர் பதில் எதுவும் கூறாததால், கதவினை உடைக்க முயற்சித்த வேளை, வெளியே வந்த வைத்தியர், எதற்காக விடுதிக்குள் வந்தீர்கள் என பொலிஸாருடன் தர்க்கப்பட்டு கொண்டார். அதனால் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து வெளியேறி இருந்தனர். அந்நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய வேளை யூடியூபர்ஸ் இருவரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர், கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்த போது சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுக்கப்பட்டிருந்த நிலையிலையே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192811
  16. பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, 'நெவர் ஹேவ் ஐ எவர்' எனும் நெட்ஃபிளிக்ஸ் தொடரில் தேவி எனும் பெண் தான் விரும்பும் ஆணிடம் போனில் காதலை வெளிப்படுத்தாமலேயே இருப்பார் கட்டுரை தகவல் எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாய், யாஸ்மின் ரூஃபோவிடமிருந்து உங்களுக்கு வாய்ஸ் மெயில் (குரல் பதிவு) வந்திருக்கிறது. அதை கேட்க மாட்டேன் என்றோ அல்லது பின்னர் அழைக்கிறேன் என்றோ தயவுசெய்து மெசேஜ் அனுப்பாதீர்கள். துரதிருஷ்டவசமாக நான் அப்படி மெசேஜ் அனுப்பப் போவதில்லை. ஆனால், பெரும்பாலான ஜென் Z மற்றும் மில்லினியல் (Millennial) தலைமுறையினரை போன்று, நானும் அப்படி மெசேஜ் அனுப்ப விரும்புகிறேனா? நிச்சயமாக. (1980களின் முற்பகுதியில் துவங்கி 1990களின் பிற்பகுதி வரை பிறந்தவர்கள் மில்லினியல் என அழைக்கப்படுகின்றனர். இந்த தலைமுறையினருக்குப் பிறகு பிறந்தவர்களை Z தலைமுறையினர் என்று அழைக்கப்படுவர்.) 18 முதல் 34 வயதுடையவர்களில் கால்பகுதி மக்கள், தங்களுக்கு வரும் போன் அழைப்புகளை ஏற்பதில்லை என, சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. போன் அழைப்புகளை தாங்கள் புறக்கணிப்பதாகவும், மெசேஜ் மூலம் பதில் அளிப்பதாகவும் தங்களுக்கு தெரிந்த எண்ணாக இல்லையென்றால் அதுகுறித்து இணையத்தில் தேடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முந்தைய தலைமுறையினருடன் முரண் யுஸ்விட்ச் (Uswitch) நிறுவனம் 2,000 பேரிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், 18-34 வயதுடைய 70% பேர், போன் அழைப்புக்கு மெசேஜ் மூலம் பதில் அனுப்புவதையே தாங்கள் விரும்புவதாக கூறியுள்ளனர். முந்தைய தலைமுறையினருக்கு போனில் பேசுவது சாதாரணமான விஷயம். என்னுடைய பெற்றோர் தங்களின் பதின்பருவத்தில் தன்னுடைய உடன்பிறந்தோரிடம் வீட்டின் தாழ்வாரத்தில் தொலைபேசியில் சண்டையிட்டதை, அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் அப்போது கேட்டது. பட மூலாதாரம்,YASMIN RUFO படக்குறிப்பு, நான் 1990களின் பிற்பகுதியில் வேலை தொடர்பானவற்றுக்கு மட்டுமே தொலைபேசியை பயன்படுத்தினேன் அதற்கு முரணாக, என்னுடைய பதின்பருவம் மெசேஜ் அனுப்புவதிலேயே கழிந்தது. என்னுடைய 13-வது பிறந்தநாளில், இளஞ்சிவப்பு நிற ஃபிலிப் மாடல் நோக்கியாவை அன்பளிப்பாக பெற்றபோது, மெசேஜ் அனுப்புவதில் எனக்கு தீவிர ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து ஒவ்வொரு மாலையும் என் நண்பர்களுக்கு 160-எழுத்துகள் கொண்ட மெசேஜை அனுப்ப நேரம் செலவிடுவேன். தேவையில்லாத இடைவெளி, எழுத்துக்களை எல்லாம் நீக்கி, ஜி.சி.ஹெச்.க்யூ (அரசாங்க தகவல் தொடர்புகள் தலைமையகம்) கூட புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருக்கும் வகையில் அந்த மெசேஜ் குழப்பமானதாக இருக்கும். ஒரு மெசேஜுக்கு 10பி (10 பென்ஸ் பிரிட்டிஷ் நாணயம்) எனும்போது, 161 எழுத்துகளுக்கு மேல் அனுப்ப நான் நினைக்கவில்லை. 2009-ல் மொபைலில் ஒருவரை அழைக்க செலவு மிகவும் அதிகமாகும். “மாலை முழுதும் உன் நண்பர்களுடன் கிசுகிசுக்க இந்த போனை உனக்கு நாங்கள் தரவில்லை,” என, என்னுடைய மாதாந்திர போன் கட்டணத்தைப் பார்த்த பின்னர் என் பெற்றோர் எனக்கு நினைவூட்டுவர். மெசேஜ்கள் மட்டுமே அனுப்பும் தலைமுறையினர் உருவாகினர். மொபைல் போன் அழைப்புகள் அவசரகாலத்திற்கு மட்டுமே என்றானது, தாத்தா-பாட்டிகளிடம் பேசுவதற்கு தொலைபேசியில் எப்போதாவது மட்டுமே அழைக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2024-ல் கான்பரன்ஸ் அழைப்பு (கூட்டாக பலருக்கும் போன் செய்வது) தேவையில்லாதது என சராசரி பெண்கள் நிச்சயம் நினைத்திருப்பர் இளம்வயதினர் போனில் பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவில்லை என்பதால் அவர்கள் இவ்வாறு இருப்பதாக, டாக்டர் எலெனா டூரோனி தெரிவித்தார். “போனில் பேசுவது இப்போது வழக்கமில்லை என்பதால் அது வித்தியாசமாக தெரிகிறது” என்கிறார் அவர். இதனால் தங்களுடைய போன் ஒலிக்கும்போது (35 வயதுக்குட்பட்டோர் சத்தமான ரிங்டோனை வைத்துக்கொள்வதில்லை என்பதால், செல்போனில் லைட் எரியும்போது,) இளம் வயதினர், மோசமானது ஏதோ நடந்துவிட்டதாக அச்சப்படுகின்றனர். அழைப்புகளை ஏன் ஏற்பதில்லை? யுஸ்விட்ச் கருத்துக்கணிப்பில் பேசிய பாதிக்கும் மேற்பட்ட இளம்வயதினர், எதிர்பாராத அழைப்புகள் மோசமான செய்தியாகத்தான் இருக்கக்கூடும் என தாங்கள் நினைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். மனநல தெரபி வழங்கிவரும் எலோய்ஸ் ஸ்கின்னர், செல்போன் அழைப்புகள் குறித்த பயம், “மோசமான ஏதோவொன்று குறித்த அச்ச உணர்விலிருந்து வருவதாக” தெரிவித்தார். “நம்முடைய பரபரப்பான வாழ்க்கை மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்படாத வேலைநேரம் காரணமாக, வெறுமனே பேசுவதற்காக போனில் அழைப்பதற்கு நமக்கு நேரம் இல்லை. முன்பெல்லாம், போன் அழைப்புகள் முக்கியமான செய்தியை கூறுவதற்கான ஒன்றாக இருந்தது, அவை பெரும்பாலும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும்.” “அதுதான் காரணம்,” என்கிறார் 26 வயதான ஜேக் லாங்லி. “மோசடியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் யாராவது அழைப்பார்கள் என்பதால்,” தானும் தெரியாதவர்களின் அழைப்புகளை ஏற்பதில்லை என்கிறார் அவர். “முறையான அழைப்புகள் எது என்பதை சல்லடை போட்டு தேடுவதற்கு பதிலாக, அந்த அழைப்புகளை ஏற்காமல் இருப்பது எளிதானது.” பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, ஹார்ட்ஸ்டாப்பர் தொடரில் நிக் மற்றும் சார்லி இருவரும் மெசேஜ் செய்யும் தலைமுறையை சேர்ந்தவர்கள் போனில் பேசுவதில்லை என்பது, இளம் வயதினர் நண்பர்களுடன் தொடர்பில் இல்லை என அர்த்தமில்லை. சாதாரண மெசேஜ்கள், மீம்கள், வதந்திகள், கிசுகிசுக்கள் மற்றும் குரல் பதிவுகள் என, எங்களுடைய குரூப் சேட்-கள் நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த உரையாடல்களில் பல இப்போது சமூக ஊடகங்களில் நடக்கின்றன, குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்களில் மெசேஜ்களுடன் படங்கள், மீம்களை பகிர முடியும் என்பதால் அவற்றை பெரும்பாலும் விரும்புகின்றனர். வாய்ஸ் மெசேஜில் ஆர்வம் போன் அழைப்புகள் வேண்டாம் என்பதை ஏற்றுக்கொள்ளும் இளம் வயதினர், வாய்ஸ் மெசேஜ் தொடர்பான கருத்தில் இருவேறு கருத்துகளை கொண்டுள்ளனர். யுஸ்விட்ச் புள்ளிவிவரத்தில் 18-34 வயதுக்குட்பட்ட 37% பேர், வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை தொடர்புக்கான தங்களின் விருப்ப தேர்வாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனுடன் ஒப்பிடுகையில், 35-54 வயதுக்குட்பட்டவர்களில் 1 சதவிகித பேர் மட்டுமே அழைப்புகளுக்கு பதிலாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதை தேர்ந்தெடுக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாய்ஸ் மெசேஜ் ஜென் z தலைமுறையில் ஒன்று உங்களுக்கு அதிகம் பிடிக்கலாம் அல்லது அதிக வெறுப்பை ஏற்படுத்தலாம் “வாய்ஸ் நோட் அனுப்புவது போனில் பேசுவது போன்றுதான், ஆனால் அதைவிட சிறப்பானது,” என்கிறார் 19 வயது மாணவர் சூசி ஜோன்ஸ். “உங்களுடைய நண்பரின் குரலை எந்தவித அழுத்தமும் இல்லாமல், இன்னும் தன்மையாக அவருடன் தொடர்புகொள்ள இதில் முடியும்”. ஆனால், தங்கள் வாழ்க்கை குறித்து நண்பர்கள் அனுப்பும் ஐந்து நிமிட வாய்ஸ் நோட்டை கேட்பது வலிமிகுந்தது, ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்து, “லைக்” (like) அல்லது “உம்” (uhm) போன்ற வார்த்தைகளே இருக்கும். அந்த ஒட்டுமொத்த செய்தியையும் இரண்டு மெசேஜ்களில் சொல்லிவிட முடியும். மெசேஜ்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் இளம்வயதினரை தங்களுடைய வேகத்தில் இன்னும் சிந்தித்து, பதில்களை அனுப்ப அனுமதிக்கின்றன. பணியிடங்களில் பிரச்னை ஆனால், போன் அழைப்புகள் குறித்த பயம், உங்களின் பணி வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும்? வழக்கறிஞரும் கண்டென்ட் கிரியேட்டருமான 31 வயது ஹென்றி நெல்சன்-கேஸ்-யின் மில்லினியல்கள் குறித்த தொடர் வீடியோக்களுடன் வேதனையான விதத்தில் அதிகம் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகின்றன. அதில், வேலை தொடர்பாக பலருக்கும் மின்னஞ்சல் அனுப்புவதில் ஏற்படும் பதட்டம், அதிக நேரம் வேலை செய்வதை தன்மையுடன் மறுத்தல், போன் அழைப்பை தவிர்ப்பதற்கு எதையும் செய்யும் பணியாளர் ஆகியனவும் அடங்கும். “உடனடியாக அழைப்பை ஏற்க வேண்டும் என்ற அழுத்தம், உரையாடுவதில் ஏற்படும் பதட்டம், சங்கடம், பதில்கள் இல்லாமல் இருப்பது,” ஆகியவை போன் அழைப்புகளை வெறுக்க வைப்பதாக அவர் கூறுகிறார். “அதிகளவில் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதாகவும் அதிகளவு நெருக்கத்தை கோருவதாகவும் போன் அழைப்புகள் உள்ளன. மாறாக, மெசேஜ்கள் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தொடர்புகொள்ள அனுமதிக்கும்,” என டாக்டர் டூரோனி விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, க்ளூலஸ் திரைப்படத்தில் சேர் மற்றும் டியோன் இருவர் மட்டுமே போனில் கூலாக பேசிக்கொள்வர் வேலை நேரத்தில் அழைப்புகளை ஏற்பதை தான் தவிர்ப்பதாக கூறும் 27 வயதான வழக்கறிஞர் துஞ்சா ரெலிக், “அந்த அழைப்புகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும், உங்கள் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தும்” என்கிறார். ‘இதை ஒரு மின்னஞ்சலாக அனுப்பியிருக்கலாம்’ என்பது போன்ற உணர்வு இது என்கிறார், ஸ்கின்னர். “நேரம் குறித்த சிந்தனை அதிகரித்திருப்பதால், ஒருவர் போனில் அழைக்கும்போது மறுமுனையில் இருப்பவர் அந்நாளை நிறுத்திவிட்டு, அந்த உரையாடலில் கவனம் செலுத்த வேண்டும், இது பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளவர்களுக்கு கடினமாக இருக்கிறது.” என்கிறார் அவர். 64 வயதான தொழிலதிபர் ஜேம்ஸ் ஹோல்டன், தன்னுடைய இளம்வயது பணியாளர்கள் அரிதாகவே போன் அழைப்புகளை ஏற்பதாக கூறுகிறார். “அதற்கு பதிலாக அவர்கள் தாங்கள் வேலையில் இருப்பதாக வழக்கமான மெசேஜ்களை அனுப்புவார்கள். அல்லது என்னுடைய அழைப்பை வேறு அழைப்புக்கு (call divert) மாற்றிவிடுவார்கள், அதனால் அவர்களை அழைக்கவே முடியாது”. “அவர்களிடம் தப்பிப்பதற்கான காரணங்கள் எப்போதும் இருக்கும். என்னுடைய செல்போன் சைலண்டில் இருந்ததால் பார்க்கவில்லை அல்லது பின்னர் அழைக்க மறந்துவிட்டேன் என கூறுவார்கள்.” தொடர்புகொள்வதில் தெளிவான இடைவெளி இருப்பதாலும், பணியாளர்கள் மெசேஜ்கள் அனுப்புவதில் சௌகரியமாக இருந்தால் அவர்களுடைய விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும் என்பதாலும் அவற்றிற்கு தகவமைத்துக்கொள்ள நினைப்பதாக அவர் கூறினார். ஆனால், பேசாமல் இருப்பது மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு விருப்பம் கொள்வதன் மூலம், திட்டமிடப்படாத மற்றும் அதிகாரபூர்வமற்ற உரையாடல்களை மேற்கொள்வதற்கான திறனை நாம் இழக்கிறோமா? இதே போக்கு தொடர்ந்தால், “நெருக்கம் அல்லது தொடர்பை நாம் இழந்துவிடுவோம்” என்கிறார் ஸ்கின்னர். “நாம் பேச்சின் மூலம் தொடர்புகொள்ளும்போது உணர்வுரீதியாகவும் தொழில் அல்லது தனிப்பட்ட ரீதியாகவும் அதிக ஒழுங்குடன் இருக்கிறோம்” என்கிறார் அவர். “இந்த இணைப்பு, குறிப்பாக பணியிடங்களில் அதிக நிறைவை தரும்.” 25 வயதான பல்பொருள் அங்காடியின் பகுதி மேலாளரான சியாரா பிராடி, “பணியில் என்னுடைய மூத்த அதிகாரிகள் என்னை போனில் அழைத்தால் அது எனக்குப் பிடிக்கும், அதை நான் ஊக்குவிக்கிறேன்” என்கிறார். “அது மிகவும் சிந்திக்கும்விதத்தில் இருக்கும். ஏனெனில், அதற்கு நிறைய முயற்சி எடுக்க வேண்டும். அதன்மூலம், உங்களின் மேலாளர் உங்களின் வேலையை மதிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.” என்கிறார் அவர் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நாட்களில் தன் சக பணியாளர்களுடன் போனில் பேசுவதை அவர் விரும்புகிறார். “அச்சமயங்களில் தனிமையாக இருக்கும், அதனால் தொடர்பில் இருப்பது நன்றாக இருக்கும்.” இந்த புதிய போக்கு, இந்த தலைமுறையினர் கடந்த தலைமுறையை போல் அல்லாமல் எல்லாவற்றுக்கும் எளிதில் வருத்தம் கொள்வதாக கூறப்படுவதற்கு மேலும் ஓர் உதாரணமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், ஒன்றுக்கு தகவமைத்துக் கொள்வதில்தான் இது இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் ஃபேக்ஸிலிருந்து மின்னஞ்சலுக்கு மாறினர். அதன்மூலம், தொடர்புகொள்வது இன்னும் எளிதானது. இப்போது மெசேஜ் அனுப்புவதன் வலிமையை நாம் அங்கீகரித்து, 1990களில் எப்படி ஃபேக்ஸ் இயந்திரங்களை கைவிட்டோமோ, அதேபோன்று 2024-ல் நாம் போன் அழைப்புகளை கைவிட வேண்டிய நேரமிது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gey3wgze8o
  17. அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு; அரசாங்கம் அரச ஊழியர்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது - பவ்ரல் விசனம் 04 SEP, 2024 | 01:11 PM அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கு முன்னதாக அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் தெரிவித்துள்ளது. அமைச்சரவை எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் குறித்து நான் முரண்படவில்லை, எனினும் இந்த மூன்று தீர்மானங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் இவை பாரதூரமானவை என அவர் தெரிவித்துள்ளார். இந்த வார அமைச்சரவைகூட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கும், வரிகளை குறைப்பதற்கும் உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான வேட்பு மனுக்களை இரத்துச்செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தபால்மூல வாக்களிப்பிற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் வெளியான இந்த அறிவிப்பு 14 மில்லியன் அரசாங்க ஊழியர்களை கவருவதற்கான முயற்சி என அவர் தெரிவித்துள்ளார். சில மாதங்களிற்கு முன்னரே அரசாங்கம் ஒரு சதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வை வழங்கும் அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? உத்தேச சம்பள அதிகரிப்பை வழங்குவது என்றால் அரசாங்கத்திற்கு மாதமொன்றிற்கு 20 மில்லியன் தேவை என தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியாராச்சி இவ்வாறான அறிவிப்புகள் மூலம் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்ற முயல்கின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192824
  18. மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ. 1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் 04 SEP, 2024 | 03:05 PM தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மீனவர்கள் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மீதமுள்ள 10 மீனவர்கள் தொடர்பான வழக்கு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வரும்போது அவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்களை ஒடுக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வங்கக்கடலில் மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை 6 மாதங்கள், ஓராண்டு என சிறையில் அடைப்பது, கோடிக்கணக்கில் தண்டம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அண்மைக்காலமாக இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பலமுறை நான் குறிப்பிட்டதைப்போல இது தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் நடவடிக்கை தான். இதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி தண்டம் விதிக்கும் சட்டத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழகத்தில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி இப்போது சிறை தண்டனை மற்றும் அபராதத்தை விதிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது. ஒரு மீனவர் தொடர்ந்து ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களின் குடும்பம் பொருளாதார அடிப்படையில் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்? மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ. 1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும். வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பது தான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைதுசெய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக – இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், இவவாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://www.virakesari.lk/article/192833 முதலில் பேராசை கொண்டு கடல் வளத்தை சூறையாடுவதை அவர்கள் கைவிட வேண்டும் என்பதை தாழ்மையாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
  19. பாராலிம்பிக்: தமிழக வீராங்கனைகள் ஒரே விளையாட்டில் வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தல் பட மூலாதாரம்,@THULASIMATHI11/ANI படக்குறிப்பு, பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டின் துளசிமதி (இடது) மற்றும் மனிஷா (வலது) 3 செப்டெம்பர் 2024 பாரிஸில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாராலிம்பிக் 2024’ போட்டிகளில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் (SU5) தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்றுள்ளனர். எஸ்யூ 5 (SU5) பிரிவில் திருவள்ளூரைச் சேர்ந்த மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனையான மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் (SH6) பிரிவில் ஓசூரைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவனும் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இவர்களை தவிர நிதேஷ்குமார் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ‘என்னுடைய சிறந்த விளையாட்டு இதுவல்ல’ காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 22 வயதான துளசிமதி முருகேசன் வென்று கொடுத்தது 'பாராலிம்பிக் 2024' போட்டிகளில் இந்தியாவுக்கான நான்காவது வெள்ளிப் பதக்கம் ஆகும். நேற்று (02.09.2024) நடந்த எஸ்யூ5 பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங் கியூ ஷியாவை எதிர்கொண்டார் துளசிமதி. எஸ்யூ5 (SU5) என்பது கைகளில் பாதிப்பு கொண்டவர்களுக்கான பாராலிம்பிக் பிரிவாகும் இறுதிப்போட்டியில் துளசிமதி கடுமையாகப் போராடிய போதும், 21-17, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் யாங் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் துளசிமதிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. போட்டிக்கு பிறகு பேசிய துளசிமதி, “வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும் என்னுடைய சிறந்த விளையாட்டை நான் ஆடவில்லை என்று சற்று வருத்தமாகவும் இருக்கிறது” என்றார். முன்னதாக, இதே பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸை எதிர்கொண்டார் துளசிமதி முருகேசன். அதில் வெற்றி பெற்று தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் துளசிமதி. பட மூலாதாரம்,@THULASIMATHI11 படக்குறிப்பு, துளசிமதி தற்போது கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார் (கோப்புப் படம்) துளசிமதி தனது ஐந்தாவது வயதிலிருந்து விளையாட்டில் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். கூலி தொழிலாளியின் மகளான அவர், முதலில் வீட்டருகில் உள்ள சிறு மைதானத்தில் விளையாடத் தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் தடகளப் போட்டிகளில் ஆர்வம் காட்டிய அவர், பிறகு பேட்மிண்டன் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். ஆரம்ப நாட்களில் அவரது சகோதரி கிருத்திகா அவருக்கு பேட்மிண்டனில் இணையராக இருந்துள்ளார். துளசிமதி தற்போது கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். அவருக்கு பிறக்கும் போதே இடது கை உருமாறியும் பலவீனமாகவும் இருந்துள்ளது. இதனால் அவரால் இடது கையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இடது கை கட்டை விரலையும் துளசிமதி இழந்துள்ளார். சமீபத்தில் விபத்து ஒன்றில் அவர் சிக்கியதால், இடது கையை மேலும் பயன்படுத்த முடியாமல் போனது. அவரது கைகள் மரத்து போய், தசைகள் பலவீனமடைந்தன. ஒற்றைக் கையால் பேட்மிண்டன் ஆடியே இந்தியாவுக்கான பதக்கத்தை துளசிமதி வென்றுள்ளார். துளசிமதிக்கு, அவரது தந்தை முருகேசன் வறுமையை பொருட்படுத்தாது, தளராமல் தொடர்ந்து உறுதுணையாக இருந்துள்ளார். விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்ட அவரது தொடர் முயற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள், பாரா விளையாட்டுகளில் துளசிமதி பயிற்சி பெறுவதற்கு உதவின. துளசிமதியின் முதல் பயிற்றுநர் அவரது தந்தையே. 2023ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் சர்வதேசப் போட்டியில் உலக நம்பர் 1 வீராங்கனைகளை தோற்கடித்திருந்தார். இரட்டையர் SL3-SU5 பிரிவில் மானசி ஜோஷியுடன் இணைந்து பாராலிம்பிக் சாம்பியன்களாக இருந்த இந்தோனேஷிய இணையை தோற்கடித்தார். அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் நிதேஷ் குமாருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். துளசிமதி, 2023ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். ‘என்னுடைய கோபத்தை எல்லாம் ஆட்டத்தில் காட்டினேன்’ பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, மனிஷா, பேட்மிண்டன் உலக அமைப்பின் ‘2022ஆம் ஆண்டின் சிறந்த பாரா வீராங்கனை’ பட்டம் வென்றவர் (கோப்புப் படம்) பாரிஸ் பாராலிம்பிக்ஸ்- 2024 போட்டியில், பேட்மிண்டன் (எஸ்யூ5) பெண்கள் ஒற்றையர் பிரிவின் வெண்கலத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனை காத்திரன் ரோசன்க்ரென்-ஐ எதிர்கொண்ட மனிஷா ராமதாஸ், 21- 12, 21- 8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். போட்டிக்குப் பிறகு பேசிய மனிஷா, “என்னுடைய கோபத்தை எல்லாம் களத்தில் காட்டினேன். எனினும் எனக்கு இது போதாது. அடுத்த நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து எனது பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன்” என்றார். தமிழ்நாட்டின் திருவள்ளூரைச் சேர்ந்த 19 வயதான மனிஷா, சிறுவயதில் எர்ப்’ஸ் பால்ஸியால் (Erb's palsy- நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக கைகள் செயலிழந்து போவது) பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மனிஷாவின் வலது கை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. பதினொன்றாம் வயது முதல் மணிஷாவின் விளையாட்டுப் பயணம் தொடங்கியது. அவ்வப்போது ஏற்படும் தீவிர வலிகளையும் தாண்டி விளையாடி வந்த அவர் மாநில பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றது பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. 2022 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஜப்பானில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022இல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். பேட்மிண்டன் உலக அமைப்பின் ‘2022ஆம் ஆண்டின் சிறந்த பாரா வீராங்கனை’ என்ற பட்டம் வென்றார். பாரா அல்லாத பேட்மிண்டன் போட்டிகளில் தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்றுள்ள மனிஷா, வணிகவியல் பட்டப்படிப்பு மாணவியாக இருக்கிறார். Twitter பதிவை கடந்து செல்ல Congratulations, Thulasimathi Murugesan, on your remarkable silver medal at the #Paralympics2024! Your dedication, resilience, and unyielding spirit inspire millions. We are incredibly proud of you!@Thulasimathi11 pic.twitter.com/nHLnq0bJV8 — M.K.Stalin (@mkstalin) September 2, 2024 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள துளசிமதி மற்றும் மனிஷாவை பிரமர் நரேந்திர மோதியும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பாராட்டியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cn5r9zd5051o
  20. தான் பதவிக்கு வந்தால் செய்வேன் என்கிறார்! பெரும்பாலும் தேர்தல் கால வாக்குறுதி தான், மற்றவர்கள் கரிசனை கொள்ளாத செய்யவேண்டிய பணியை செய்வேன் என்கிறார்! பொறுத்திருந்து பார்ப்போம்.
  21. 04 SEP, 2024 | 12:19 PM கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலத்தைநிறைவேற்ற ஏதுவாக 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அழைப்பு விடுத்தது. பாலியல் வன்கொடுமை தடுப்பு அபராஜிதா மசோதாவை மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கட்டக் அம்மாநில சட்டப்பேரவையின் முதல்நாள் சிறப்பு அமர்வின்போது அறிமுகம் செய்தார். அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டமூலம் ஒருமனதாக நிறைவேறியது. ‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் சட்டமூலம் 2024 (மேற்குவங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்)’ என்ற தலைப்பில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழக்க நேரும்பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்கு கள் மீதான விசாரணை ஆரம்ப அறிக்கை 21 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதம் விதிப்பதும் இந்த புதிய சட்ட மசோதாவில் அடங்கும். குடிமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும்இ குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களை சட்டத்தின் முன் முழு வலிமையுடன் சந்திப்பதை உறுதி செய்வதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா மாநிலத்தின் உறுதிப்பாட்டுக்கு ஒரு சான்றாகும் என்று வரைவு குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192818
  22. 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான திகதி மற்றும் மைதானத்தை அறிவித்தது ஐ.சி.சி ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் இறுதி நாளில் மழை, புயல் உள்ளிட்ட பேரிடர்கள் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் ஜூன் 16 ஆம் திகதி “ரிசர்வ் டே” வாக கருதப்பட்டு போட்டி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் -2025 இறுதிப் போட்டி முதல்முறையாக இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்டனில் நடந்த அதேவேளை, தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்நிலையில்,2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடந்த இரண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் முறையே வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியிருந்தன. உலக தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. தற்போதைய தரவரிசையின் படி இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. நியூசிலாந்து அணி 3வது இடத்திலும், இங்கிலாந்து 4 வது இடத்திலும் உள்ளது. இலங்கை 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6வது இடத்திலும், பங்களாதேஷ் 7வது இடத்திலும் உள்ளது. அதேநேரம், ஒட்டுமொத்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 58 ஆட்டங்களில் விளையாடி அதில் 29 போட்டிகளில் வெற்றிபெற்று அதிக வெற்றிகளை பெற்ற அணியாக சாதனை படைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்காக ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் அலர்டிஸ் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கிரிக்கெட் கலண்டரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும் ஜெப் அலர்டிஸ் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/308955

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.