-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, சின்ன சின்ன வேலைகள் செய்து விட்டே பனர் அடித்து விளம்பரம் செய்கிறார்கள். நான் விளம்பரத்தை விட பலருக்கு அடிப்படைச் சுகாதார வசதி கிடைக்கலாம் என்ற விருப்பத்திலும் நன்கொடையாளர்களை ஈர்க்கலாம் என்ற கருதுகோளிலும் இதனை முன்வைத்தேன். படங்களை விட காணொளிக் காட்சிகளின் தாக்கம் கூடவாக இருக்கும். சதுர அடி 100 - 120 ரூபாவிற்குள் வரும் அண்ணா. (3*4=12*120=1440 ரூபா) ஆனால் எல்லோரும் சம்மதித்தால் செய்வோம். இருப்பு 200,970.67-33225=167,745.67 சதம் இன்று 23/01/2026 ரூபா 33200 வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. வங்கி மீதி சரி முன்னாலுள்ள கணக்கு பிழையாக இருந்தது, திருத்தி விட்டேன்.
-
நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு
அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு - GMOA Jan 28, 2026 - 05:40 PM வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (28) கூடியதுடன், இதன்போது மேலதிக நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் இருந்து கொள்வனவு செய்வதற்கான மருந்துச்சீட்டுகளை எழுதும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும், அரசியல் குழுக்களால் நடத்தப்படும் சுகாதார முகாம்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்தியர்கள் போதுமான அளவு இல்லாத வைத்தியசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்படும் விடுதிகள் மற்றும் பிரிவுகளின் கட்டிடப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmkxzhh7v04jlo29n50upxzrd
-
யாழ். காற்று மாசுபாடு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தின் காற்று மாசடைவு: மாநகர சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! Jan 28, 2026 - 02:31 PM யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரி, அப்பகுதியில் வசிக்கும் வைத்தியர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக 'அத தெரண' நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு அழைக்கப்பட்டது. இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், யாழ்ப்பாணப் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதன் காரணமாக அப்பகுதியில் காற்று மாசடைவு கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், தென்னிந்தியாவிலிருந்து காற்று மூலமாக அடித்து வரப்படும் கழிவுகள் காரணமாகவும் அப்பகுதியில் பாரிய காற்று மாசடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவின் தன்மையைக் காட்டும் அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்டத்தரணி, இந்தக் காற்று மாசடைவு காரணமாக நோய் நிலைமைகள் தீவிரமடையக் காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் உத்தரவிட்டது. இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள யாழ்ப்பாண மாநகர சபையால் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து ஏன் செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வாறான பிரச்சினைகளை அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடித் தீர்த்துக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இவ்வாறான விடயங்களை வழக்குகள் மூலம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkxsptxy04j8o29n1phy2xpz
-
உணவுப் பாதுகாப்பு என்பது பிள்ளைகளின் நடத்தையாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
உணவுப் பாதுகாப்பு என்பது பிள்ளைகளின் நடத்தையாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 28 Jan, 2026 | 03:24 PM உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கவழக்கங்கள் பாடசாலை பாடத்திட்டங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், அவை பிள்ளைகளின் நடத்தையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற "உணவுத் துறையில் சுழற்சிப் பொருளாதாரத் திட்டம் (2024-2027)" என்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) நிதிப் பங்களிப்பில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் 'குளோபல் கேட்வே' (Global Gateway) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கு பல தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டிருந்தது. இதன்போது, குறிப்பாகப் பாடசாலைக் கல்வியில் சுழற்சி பொருளாதாரக் கருத்துருக்களை உள்வாங்குவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், கொள்கை வகுப்பாளர்கள், இளைஞர்கள், திறன் அபிவிருத்திப் பிரிவுகள் மற்றும் முறைசார் கல்விப் பங்குதாரர்களை உள்ளடக்கிய மூன்று குழுக்களின் ஊடாக சுழற்சி பொருளாதாரத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், 2027ஆம் ஆண்டு வரை இலங்கையின் உணவுத் துறையில் நிலையான மற்றும் சுழற்சி பொருளாதார முறைகளை ஊக்குவிப்பதற்கும், அதற்கான கல்வித் தளத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்: கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல. உண்மையான கல்வி என்பது தனிமனிதனுக்குள் சமூகம் மற்றும் சூழல் மீதான பொறுப்புணர்வையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதேயாகும். குறிப்பாக, தற்காலச் சூழலில் எமக்கு மிகவும் முக்கியமானது 'சுழற்சி பொருளாதாரம்' (Circular Economy), அதாவது வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு முறைமையே ஆகும். இன்று நாம் 'Circular Economy' என அழைக்கும் இந்தக் கருத்துரு எமது முன்னோர்களுக்குப் புதிய ஒன்றல்ல. எனக்கு எனது பாட்டி நினைவுக்கு வருகின்றார். உணவு வீணாவதைக் குறைப்பதில் அவர் வியக்கத்தக்க திறமையைக் கொண்டிருந்தார். நாம் தூக்கி எறியும் பஸன் புரூட் (Passion Fruit) தோல்களிலிருந்தும் அவர் சுவையான ஜாம் மற்றும் சட்னிகளைத் தயாரித்தார். பால் போத்தல்களின் உலோக மூடிகளைக் கூட அவர் வீசுவதில்லை, அவற்றைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கும் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்குவார். இன்று சுப்பர் மார்க்கெட்களில் இலகுவாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை, அன்று அவர்கள் தமது கைகளாலேயே உருவாக்கிக்கொண்டார்கள். 'எதனையும் வீணாக்காதிருத்தல்' என்பதே அவர்களின் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. ஆயினும், இன்று காலம் மாறியுள்ளது. அன்று எமது பாட்டிமாருக்கு இவற்றைச் செய்ய நேரம் இருந்தது. இன்று பெண்கள் தொழிலுக்குச் செல்கிறார்கள், பிள்ளைகளின் பணிகளைக் கவனிக்கிறார்கள், அவர்கள் கடும் பணிச்சுமைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால், நேரமின்மை காரணமாக வீணாகிப்போன காய்கறிகளையோ அல்லது பழைய தேங்காய்த் துண்டுகளையோ காண்பது சாதாரண விடயமாக மாறியிருக்கின்றது. இது வெறும் பெண்ணின் அல்லது தாயின் பொறுப்பாக மட்டும் இருக்கக் கூடாது. ஒரு வீட்டிற்குள் இந்தப் பொறுப்புகளும் உழைப்பும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கங்கள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக அவை மாற வேண்டும். உணவைப் பரிமாறும்போது தமக்குத் தேவையான அளவை மட்டும் பெற்றுக்கொள்ளுதல், தனது தட்டைத் தானே கழுவுதல், வளங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுதல் போன்றவை வெறும் பாடங்களாக அன்றி, வாழ்க்கை முறைகளாக மாற வேண்டும். சுற்றுலாத்துறை போன்ற துறைகளுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான இந்தக் கருத்துருக்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி அமைச்சு என்ற ரீதியில் நாம் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். வெறும் அறிவை மாத்திரமன்றி, மனப்பூர்வமாகச் சூழலையும் சமூகத்தையும் நேசிக்கும் பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் கலாநிதி ஜொஹான் ஹெஸே (Dr. Johann Hesse), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் கார்மென் மொரேனோ (H. E. Carmen Moreno), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி விம்லேந்திர ஷரன் (Vimlendra Sharan) உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனம் (NIE), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237251
-
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
குரியாச்சன் என்ன ஆனார்? கோம்பை நாய்களை நடிக்க வைத்தது பற்றி பிபிசி தமிழுக்கு 'Eko' பட இயக்குநர் பேட்டி பட மூலாதாரம்,AARADYAA STUDIOS கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 28 ஜனவரி 2026, 09:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 'பிரேமம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்' என மலையாள திரைப்படங்கள் பலவும் தமிழ்நாட்டில் ரசிகர்களால் வரவேற்புப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ள சமீபத்திய மலையாளத் திரைப்படம் 'எக்கோ'. "சில சமயங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு, இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்", "சில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளி தான்", "நாயை சங்கிலி போட்டோ கூண்டிலோ வளர்க்கக் கூடாது, அதை சுதந்திரமாக வளர்க்கவேண்டும்", என திரைப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் இணையத்தில் பிரபலமாயின. மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பந்தங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, தின்ஜித் அய்யதன் இயக்கியுள்ளார். காக்ஷி: அம்மினிப்பிள்ள, கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து இது அவரது மூன்றாவது திரைப்படம். இந்தத் திரைப்படம் குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் பெரும்பாலும் முன்வைக்கப்படும் கேள்வி, 'குரியாச்சன் என்ன ஆனார்?' என்பதே. பிபிசி தமிழுக்கு இயக்குநர் தின்ஜித் அய்யதன் அளித்த பேட்டியில் 'எக்கோ' குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS படக்குறிப்பு,இயக்குநர் தின்ஜித் அய்யதன் 'எக்கோ' கதை உருவானது எப்படி? இத்திரைப்படத்திற்கு 'எக்கோ' (Eko) என பெயரிட்டது ஏன்? இதை நிறைய பேர், ஈக்கோ என சொல்கிறார்கள். இது எக்கோ (Echo) தான். அதாவது எதிரொலி அல்லது 'கர்மா', 'பூமராங்', என்பதைக் குறிப்பது போல. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது, அது நம்மை என்றாவது ஒருநாள் பின்தொடர்ந்து வரும் அல்லது அது வாழ்க்கையில் எதிரொலிக்கும் என்ற அர்த்தத்தில் தான் 'எக்கோ' என வைத்தோம். இதில் குரியாச்சன் கதாபாத்திரம் (நடிகர் சௌரப் சச்தேவா) தான் முன்னர் செய்த செயல்களின் விளைவுகளால் தான் தலைமறைவு வாழ்க்கைக்குள் செல்வார். அவரை பிற கதாபாத்திரங்கள் தேடி வருவதும் அதற்காக தான். மற்றபடி, 'Echo' என வைக்காமல் 'Eko' என தலைப்பு வைத்தது, வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக தான். இந்தக் கதை உருவானது எப்படி? பஹுல் ரமேஷ் (எக்கோ திரைப்படத்தின் கதாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர்) வீட்டிற்கு அருகில் வசித்த ஒருவர், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று, அங்கு ஒரு மலேசியப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கேரளாவிற்கு அழைத்து வந்து, வாழ்ந்து கொண்டிருந்தவர். அதிலிருந்து தான், ரமேஷுக்கு 'எக்கோ' கதை தோன்றியது. இந்தக் கதையை ரமேஷ் சொன்னபிறகு, நாய்கள் வளர்ப்பவர்கள் குறித்தும், புதிய நாய் இனங்களை தேடிச் செல்பவர்கள் குறித்தும் படித்தோம். பல நாய் இனங்கள் குறித்தும் அவற்றின் நடத்தைகள் குறித்தும் படித்தோம். அது கதை மேலும் விரிவதற்கு உதவியது. கோம்பை நாய்கள் பட மூலாதாரம்,AARADYAA STUDIOS திரைப்படத்தில் 'மலேசியாவைச் சேர்ந்த நாய்கள்' என ஒரு இனத்தைக் காட்டியிருப்பீர்கள், அவை உண்மையில் எந்த இனம்? அவை தமிழ்நாட்டின் தேனியைச் சேர்ந்த கோம்பை நாய்கள். இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களே நாய்கள் தான். மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று கதையில் சொல்லப்படுவதால், எந்த இனத்தை காட்டுவது என்ற குழப்பம் இருந்தது. நாய்களை திரையில் பார்க்கும்போது நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும், அதேசமயம் அவை வழக்கமான வெளிநாட்டு நாய்களைப் போலவும் இருக்கக்கூடாது. மற்றொரு பிரச்னை கன்டினியூட்டி (Continuity). எனவே நாய்கள் ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு நெருக்கமாகவும் தோன்ற வேண்டும். எனது நண்பரும் துணை இயக்குநருமான துரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் தான் கோம்பை நாய்கள் பற்றிச் சொன்னார். தேனிக்குச் சென்று, கோம்பை நாய் வளர்ப்பவர்களை சந்தித்து பேசி, புகைப்படங்கள் அனுப்பி வைத்தார். அப்போதே முடிவு செய்துவிட்டோம், கோம்பை நாய்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று. ஆனால், மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. ஒரு நாய்க்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கேட்டார்கள். எங்கள் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 8 கோடி தான். எனவே நாய்களுக்கு மட்டும் எங்களால் பல லட்சங்களை செலவழிக்க முடியாது. ஒருவழியாக 2 மாதங்கள் படப்பிடிப்பிற்கு ஒரு நாய்க்கு வாடகை 5000 ரூபாய் எனப் பேசி, 10 நாய்களை கொண்டு வந்தோம். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS படப்பிடிப்பில் எவ்வாறு அவற்றை சமாளித்தீர்கள்? அதற்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் குறித்து சொல்ல முடியுமா? நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர் ஒருவர் எங்களிடம் சொன்னது, 'நாட்டு நாய்கள் எனும்போது ஒன்றரை வயதிற்குள் இருந்தால் மட்டுமே அவற்றுக்கு சொல் பேச்சு கேட்டு நடக்கும் வகையில் பயிற்சி அளிக்க முடியும்.' எனவே 1 முதல் ஒன்றரை வயதிற்குள் இருக்கும் கோம்பை நாய்களையே தேர்ந்தெடுத்து 1 மாதம் முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டது. திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு நாய், மலாத்தி சேட்டத்தி கதாபாத்திரத்தை எட்டி உதைப்பது போல இருக்கும். அதற்கு நாங்கள் இரண்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்திருந்தோம். ஒருவேளை ஒரு நாய், அதைச் சரியாக செய்யவில்லை என்றால் மற்றொரு நாய் செய்யவேண்டும் என்பதற்காக. இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. சில சமயங்களில் அவை தங்களுக்குளே சண்டையிட்டுக் கொள்ளும். அவை சமாதானமடையும் வரை காத்திருந்து, பின்னர் காட்சிகளை எடுப்போம். இதெல்லாம் சவாலாகவே இருந்தது. இருப்பினும், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். பட மூலாதாரம்,Dinjith Ayyathan/Facebook 45 நாட்களில் முழு திரைப்படத்தையும் முடித்துவிட்டீர்களா? ஆமாம், அதற்கு காரணம் பட்ஜெட் தான். படத்தின் நாயகன் சந்தீப், மலையாள சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோ. 3 முதல் 5 கோடி பட்ஜெட் திரைப்படம் என்பது அவருக்கான அதிகபட்ச மார்கெட் (Market). ஆனால், இது 8 கோடி பட்ஜெட் திரைப்படம். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, செலவுகளில் மிகவும் கவனமாக இருந்தோம். அனைத்தையும் முன்பே திட்டமிட்டு செய்தோம். உங்களது முந்தைய திரைப்படம் கிஷ்கிந்தா காண்டம், இப்போது எக்கோ, இரண்டிலும் கதை நடக்கும் பகுதிகள் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும், கதை சொல்வதற்கான ஒரு கருவியாகவும் பயன்பட்டிற்கும் அல்லவா? உதாரணத்திற்கு எக்கோ-வின் இறுதிக் காட்சியில் சேட்டத்தியும் பீயூஸும் அமர்ந்து பேசும் ஒரு பாறை. ஆம், குறிப்பிட்ட நிலவியல் அமைப்புகள் ஒரு கதைக்கு பெரும் பலமாக இருக்கும். உதாரணத்திற்கு, எக்கோ திரைப்படத்திற்காக நான் தேடியது காய்ந்த புல்வெளிகள் கொண்ட ஒரு மலை. அதன் உச்சியில் குரியாச்சன்- சேட்டத்தி வீடு இருக்கும் என்பது போல. அதற்காக இடுக்கியில் ஒரு பகுதியை முடிவு செய்து, படப்பிடிப்புக்கு அங்கு சென்றபோது, மழை காரணமாக அந்த காய்ந்த புற்கள் பசுமையாக மாறியிருந்தன. வேறு வழியில்லை என படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் திரைப்படத்தில் பார்க்கும்போது அந்தப் பசுமை கதைக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதுபோல சில விஷயங்களை நாங்கள் முடிவு செய்கிறோம், சிலவற்றை இயற்கை முடிவு செய்கிறது. குரியாச்சனுக்கு என்ன ஆனது? பட மூலாதாரம்,AARADYAA STUDIOS எக்கோ திரைப்படத்தில் பல விஷயங்களை நீங்கள் நேரடியாக சொல்லவில்லை. உதாரணத்திற்கு நரேன் கதாபாத்திரம் ஏன் குரியாச்சனை தேடுகிறது? அதேபோல பல விஷயங்கள் வசனங்களாக அல்லது மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும், அல்லவா? ஆம், அதற்கு காரணம் இது குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி பற்றிய கதை மட்டுமே. அதனால் தான் அவர்கள் தொடர்பான 'பிளாஷ்பேக்' மட்டும் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கும். நரேன், வினீத், அல்லது சந்தீப் கதாபாத்திரங்களின் கதைகளைச் சொன்னால் அது அவர்களுடைய கதையாகிவிடும். அவர்கள் குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி கதையின் ஒரு அங்கம் மட்டுமே. எல்லா கதாபத்திரங்களுக்கும் ஒரு பின்கதை இருக்கும், ஆனால் அதை சொல்லி திரைப்படத்தின் மையக்கருவை சிதைக்க வேண்டாம் என நினைத்தேன். அதுமட்டுமல்லாது, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி-களின் வரவு காரணமாக மக்கள் உலகத் திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள். திரைப்படங்கள் குறித்த ரசனையும், எதிர்பார்ப்பும் மாறிவிட்டது. எனவே எதையும் நேரடியாக சொல்லவேண்டாம் என நினைத்தோம். 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என திரைப்படத்தின் இறுதிக்காட்சி குறித்து சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளை பார்த்தீர்களா? ஆமாம், பார்த்தேன். ஏஐ (AI) கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு காணொளியை மிகவும் ரசித்தேன். திரைப்படத்தின் இறுதிக்காட்சியை மட்டும் இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம் என எனக்கு முன்பே தோன்றியது. அதாவது, மலாத்தி சேட்டத்தி அந்தப் பாறையில் அமர்ந்து பைனாகுலர் மூலம், தொலைவில் உள்ள ஒரு பாறை இடுக்கைப் பார்க்கிறார். அந்த பாறை இடுக்கின் வாசலில் சில நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அது குரியாச்சன் அங்கு தான் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்திவிடும், எனவே இதை காட்சியாக வைத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், என் குழு வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். ஒருவேளை, அந்தக் காட்சியை வைத்திருந்தால், மக்கள் இன்னும் திருப்தியாக உணர்ந்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது. 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என்பதை இன்னும் சற்று தெளிவாக சொல்லியிருந்தால், இந்தத் திரைப்படம் இன்னும் அதிகமாக மக்களால் கொண்டாடப்பட்டிருக்குமோ என்றும் தோன்றியது. மலையாள சினிமா அதன் யதார்த்தமான திரைப்படங்களுக்காக இந்தியா முழுவதும் அறியப்படுகிறது. அத்தகைய திரைப்படங்கள் இங்கு அதிகம் உருவாக முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? தயாரிப்பாளர்கள் மற்றும் மக்கள் தான். ஒரு கதையைச் சொல்லும்போது, அதில் பாடல்களை சேருங்கள், இந்தக் காட்சிகளைச் சேருங்கள், இவரை வைத்து எடுக்கவேண்டாம் என்றெல்லாம் இங்கு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிபந்தனைகள் விதிப்பதில்லை. மக்களும் வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேசமயம், எல்லா திரைப்படங்களுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை தான். இருப்பினும், பிற மொழி திரைப்படத்துறைகளுடன் ஒப்பிடும்போது, 'வணிக அம்சங்கள்' தொடர்பான அழுத்தம் இங்கு குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS தமிழ் சினிமாவிலிருந்து வந்த பாராட்டுகள் தமிழ் சினிமாவிலிருந்து உங்களுக்கு பாராட்டுகள் வந்தனவா? ஆம், நடிகர் ரவி மோகன் அழைத்துப் பேசினார். தனுஷ் 'எக்கோ' திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டிருந்தார். சில இயக்குநர்களும் பேசினார்கள். கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் எக்கோ திரைப்படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. அது நிறைவேறும் என நம்புகிறேன். என் முதல் திரைப்படம் தமிழில் தான் எடுத்திருக்க வேண்டும். சில காரணங்களால் அது நடக்கவில்லை. நான் 20 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். படித்தது எல்லாம் இங்கே தான். 'கிஷ்கிந்தா காண்டம்- குரங்குகள்', 'எக்கோ- நாய்கள்', உங்கள் அடுத்த திரைப்படம்? விலங்குகளை வைத்து தான் எடுப்பேன் என்று இல்லை. கதைகள் அவ்வாறு அமைந்தன. அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9ep7g7244o
-
வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம்
பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை - வடக்குமாகாண ஆளுநர் வேதநாயகன் 28 Jan, 2026 | 04:13 PM (எம்.நியூட்டன்) போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கம். பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை. ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த துரை குடும்பத்தினருக்கு அந்தத் தாயுள்ளம் வந்திருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரம் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (28) கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: எமது மண்ணையும் மக்களையும் நினைத்து சிங்கப்பூரிலிருந்து உதவும் இவர்களது நல்ல மனதுக்கு இறைவன் இன்னும் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பான். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடம் நான் அன்பாகக் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு உதவி செய்யும் இந்தப் பரோபகாரிகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறு, இந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் நீங்கள் முன்னேறி, உங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது மாத்திரமேயாகும். இத்திட்டத்தை ஒருங்கிணைத்துச் செயற்படுத்திய ஜெயசேகரம் நன்றிகள். அவர் எதை ஆரம்பித்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றாமல் ஓயமாட்டார். கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகச் செயற்படக்கூடிய ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கின்றார் என்ற அடிப்படையில், இத்திட்டத்தின் முதல் கட்டத்துக்கு அவர் கிளிநொச்சியைத் தெரிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள், என்றார். வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 1000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 181 குடும்பங்களுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டன. இதற்காக ஒரு கோடியே 46 இலட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபா செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட உதவிகள் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், திட்ட ஏற்பாட்டாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரம், மாவட்டச் செயலகப் பதவியினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/237257
-
விசேட தேவையுடைய மாணவர்களுக்காக சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு
சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு 28 Jan, 2026 | 05:19 PM (எம்.நியூட்டன்) தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் புதன் கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கேற்ரலுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிவபூமி பாடசாலையை நாடாவெட்டி திறந்துவைத்ததுடன் படிம கல்லையூம் திறந்து வைத்தார். இதேவேளை சிவபூமி அறக்கட்டளையானது கடந்த 25 ஆண்டுகளாக அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், 2016இல் கிளிநொச்சியிலும் எமது அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டனில் வசிப்பவர்களுமாகிய வைத்திய கலாநிதி கனகசபை கதிர்காமநாதன் இரட்ணேஸ்வரி தம்பதிகள் மனமுவந்து வழங்கிய இல்லத்தைப் புனரமைத்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது. பெரிய பரப்பளவு கொண்ட தென்மராட்சித் திருநகரில் மாற்றுவலுவுடைய குழந்தைகளை மகிழ்வாய் வாழ வைக்க இந்த பீடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி கெளரவ விருந்தினர் கேன் பற்றுநோய் காப்பக தலைவர் வைத்திய கலாநிதி கமலா வைத்தியநாதன் , சாவகச்சேரி நகர சபை தவிசாளர் சிறிபிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அதிதிகள் உரையை தொடர்ந்து சிவபூமி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. https://www.virakesari.lk/article/237269
-
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் டிரம்புக்கு சொல்லும் செய்தி என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்கா இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியையும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் இறக்குமதிகள் மீது 15% வரியையும் விதித்தது. தற்போது இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் ஒரு செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தற்போது ஆக்ரோஷமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஜனவரி 24 அன்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், "ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிக்க எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகள் மறுத்துவிட்டன. ஏனெனில், அவர்கள் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பினர். யுக்ரேனுக்கு எதிரான போரில் ஐரோப்பாவே ரஷ்யாவுக்கு உதவுகிறது" என்றார். இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பாவும் வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது, ஆனால் அது நடக்கவில்லை. யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலை ஐரோப்பா தனக்கு நேர்ந்த பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இருப்பினும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்தியா மீது வரிகளை விதித்தது. கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்தார். அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இந்தியா வந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் கிறிஸ்டோஃபர் கிளேரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "மற்ற நாடுகளுக்கும் மாற்று வழிகள் உள்ளன என்பதை இந்த ஒப்பந்தம் நினைவூட்டுகிறது. அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தின் அடிப்படையில் வரி கொள்கையை வகுத்து அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அதன் அழுத்தம் பலனற்றதாகிவிடும். அமெரிக்காவின் தன்னிச்சையான போக்குக்கு உலகளாவிய எதிர்ப்பு அதிகரித்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மீதான இந்தியாவின் சார்புத்தன்மையைக் குறைக்கும் என்று பிரபல உத்தி விவகார நிபுணர் பிரம்மா செலானியும் நம்புகிறார். "விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு, பாதுகாப்புவாதம் அதிகரித்து வரும் இக்கட்டான காலத்தில், இது ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தத்தை விட முக்கியமானது" என்று செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் டிரம்பின் உத்தியை இது பலவீனப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதான இந்தியாவின் சார்பைக் குறைக்கிறது" என்றும் அவரது பதிவு கூறுகிறது. திங்களன்று இந்தியாவின் 77-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இந்திய வானில் பறப்பதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்திய வானில் அமெரிக்க விமானங்கள் மட்டுமல்ல, ரஷ்ய விமானங்களும் பறந்தன. குடியரசு தின அணிவகுப்பில் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவின் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஏனெனில், நேட்டோ அமைப்பு எஸ்-400ஐ தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகக் கருதுகிறது. தி ஹிந்து நாளிதழின் தூதரக விவகாரங்கள் பிரிவின் ஆசிரியர் சுஹாசினி ஹைதர் இது குறித்து வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், "இந்தியாவின் உத்தி சார்ந்த சுயாட்சி குடியரசு தின அணிவகுப்பில் முழுமையாக வெளிப்பட்டது. எஸ்-400 அமைப்பு, டி-90 டாங்கிகள் மற்றும் கூட்டாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட ரஷ்ய ராணுவத் தளவாடங்கள், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன" என்று கூறியிருந்தார். டிரம்ப் மற்றும் ஐரோப்பா ஆகிய இரு தரப்புமே ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறைக்க விரும்புகின்றன. ஆனால், அமெரிக்காவைப் போல இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க ஐரோப்பா வரிகளை விதிக்கவில்லை. பட மூலாதாரம்,Getty Images உத்தியாக மாறிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியைச் சேர்ந்த 'குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்' அமைப்பின் அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்தச் சங்கடங்களைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை என்றும், டிரம்ப் இதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார். "அமெரிக்காவின் ராஜீய சூழல் இப்போது பழையபடி இல்லை. டிரம்ப் நிர்வாகத்தின் கவனம் உள்நாட்டு அரசியல் மற்றும் பரிவர்த்தனை சார்ந்த உறவுகளிலேயே உள்ளது. அமெரிக்காவுடனான தனது கூட்டாண்மையைத் தொடர இந்தியா விரும்புகிறது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதிகப்படியான சார்பு ஆபத்தானது என்பதையும் இந்தியா புரிந்துகொண்டுள்ளது" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு நிலையான தன்மை இல்லை. பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் குறித்த அவரது நிலைப்பாடு அடிக்கடி மாறியுள்ளது. இது இந்தியா ஒரு நீண்ட கால உத்தியை வகுப்பதைக் கடினமாக்குகிறது" என்று குறிப்பிடுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா. அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. "ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு டிரம்பின் கொள்கைகளே ஒரு காரணமாக அமைந்தன. ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு தரப்புமே தங்களை தாராளமயமாக்கிக்கொண்டுள்ளன. இப்போது கேள்வி என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம் டிரம்பின் வரிகளின் தாக்கத்தைக் குறைக்குமா என்பதுதான்" என்கிறார். மேலும், "அமெரிக்கா ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மிகப்பெரிய சந்தை. கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வர சுமார் ஒரு வருடம் ஆகும். நிச்சயமாக, இது அமல்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் மற்றும் டிரம்பின் வரிகளால் ஏற்படும் அழுத்தம் குறையும்.'' என்றார் ''நான் டிரம்புக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என்ற உண்மையை அவர் உணர்த்தியுள்ளார். டிரம்பின் நடவடிக்கைகளால் இந்தியா ஏற்கெனவே பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது, மேலும் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது" என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா. முன்னதாக, இந்தியா ஓமன், நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் உலகம் கொந்தளிப்பில் இருக்கும் வேளையில் இது தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,@narendramodi ஒப்பந்தத்தின் தாக்கம் என்ன? அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதான தங்கள் சார்பைக் குறைக்க இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரும்புகின்றன. இதற்கு முன்பு இந்தியா தனது சந்தையை முழுமையாகத் திறக்க முன்வராத ஒரு 'பாதுகாப்புவாத' நாடாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தியா அந்த பிம்பத்திலிருந்து விடுபட்டு வருவது போல் தோன்றுகிறது. டிரம்பின் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வதும், அதே நேரத்தில் ரஷ்யாவுடன் வலுவான உறவைப் பேணுவதும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனக்குச் சாதகமான வர்த்தகத்தை மேற்கொள்வதும் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. டிரம்பின் கொள்கைகளைச் சுற்றியுள்ள "நிச்சயமற்ற சூழலில்", நாடுகள் தங்கள் கடந்த கால கசப்புகளை மறந்து ஒன்றுசேரத் தயாராகி வருவதாக, தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் தலைவர் அமிதேந்து பாலித் 'ப்ளூம்பெர்க்' செய்தியில் தெரிவித்துள்ளார். "ஏதோ ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது," என்று அவர் கூறியுள்ளார். எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாதவி அரோராவின் அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2031ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மருந்து, ஜவுளி மற்றும் ரசாயனத் துறைகளுக்கு நேரடிப் பலன் அளிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 136.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 17 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கினை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது. இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்பதாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியச் சந்தையை ஐரோப்பிய ஒன்றியம் அணுக முடியும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா 41.18 பில்லியன் டாலர் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது. அதாவது, அமெரிக்காவிடம் இருந்து வாங்கியதை விட அதிகமான பொருட்களை இந்தியா அங்கு விற்றுள்ளது. இதில் அதிருப்தி அடைந்துள்ள அதிபர் டிரம்ப், இந்த வர்த்தக உபரி அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். புளூம்பெர்க் எகனாமிக்ஸ் கணிப்பின்படி, டிரம்பின் வரி விதிப்புகளால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 52 சதவிகிதம் வரை குறையக்கூடும். டிரம்பின் வரி விதிப்பால் 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரி மோசமாகப் பாதிக்கப்படும் என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். இருப்பினும், இந்தியா தற்போது மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் இந்த இழப்பை உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஈடுசெய்யும் என்று அவர் கருதுகிறார். "ஐரோப்பிய பொருளாதாரங்கள் அமெரிக்காவை விட இந்தியாவுக்கு அதிக நன்மை பயக்கும். ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் ஜெட் என்ஜின்கள் மற்றும் தொழிற்சாலை கட்டுப்பாட்டு வால்வுகள் போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் அடங்கும். இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை மிகவும் பொதுவானவை. இதில் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற விவசாய பொருட்கள் அடங்கும். இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் ஜவுளி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் அடங்கும்" என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஐரோப்பியப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும். குறிப்பாக, ஐரோப்பிய கார்கள் மீதான வரி தற்போதுள்ள 110 சதவிகிதத்திலிருந்து படிப்படியாக 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும். இந்த சலுகை ஆண்டுக்கு அதிகபட்சமாக 2,50,000 வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இயந்திரங்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மீது இந்தியா விதித்து வரும் வரிகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் முக்கிய விவசாயப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியாவும் நியூசிலாந்தும் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தன. உலகளாவிய பொருளாதார ரீதியில் தனது எல்லையை விரிவுபடுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கான தற்போதைய ஏற்றுமதிகளில் 95 சதவிகிதப் பொருட்களுக்கு வரி நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். இதில் நிலக்கரி, ஆட்டுக்கறி மற்றும் குழந்தைகளுக்கான பால் பவுடர் வரை பல பொருட்கள் அடங்கும். குறிப்பாக, நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு இந்தியா தனது வரிச் சலுகையை வழங்கியுள்ளது. அமெரிக்க ஆப்பிள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், இந்தியா நியூசிலாந்துக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் நியூசிலாந்து வரிகளை ரத்து செய்யும். மேலும், இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் இடப்பெயர்வு விதிகளையும் அந்த நாடு எளிதாக்கும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்சனும் தொலைபேசி மூலம் உரையாடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், தற்போதைய வர்த்தக அளவு குறைவாக இருப்பதால், இது உடனடியாக இந்தியாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்துவிடாது. 2024-25 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் சுமார் 1.3 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஏற்றுமதி 711 மில்லியன் டாலராகவும், நியூசிலாந்தின் இறக்குமதி 587 மில்லியன் டாலராகவும் உள்ளது. பட மூலாதாரம்,Getty Images பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவும் பிரிட்டனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை 34 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்று பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் விஸ்கி மற்றும் ஜின் மீதான வரிகள் தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டு, பின்னர் 40 சதவிகிதமாகக் குறைக்கப்படும். மேலும், 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த கார்கள் மீதான வரிகளையும் இந்தியா 10 சதவிகிதமாகக் குறைக்கும் (குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களுக்கு மட்டும்). மறுபுறம் பிரிட்டன் ஆடை, காலணிகள் மற்றும் இறால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் பிரிட்டன் அரசாங்கத் தரவுகளின்படி, பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த வர்த்தக மதிப்பு 58 பில்லியன் டாலராக இருந்தது. இது பிரிட்டனின் 11-வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றியுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதம், இந்தியாவும் ஓமனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஓமன் சுல்தானுடன் நரேந்திர மோதி (கோப்புப் படம்) அடுத்து கனடா மற்றும் பிரேசில்? பிரேசில் அதிபர் லூலா டா சில்வா பிப்ரவரி 19 முதல் 21 வரை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவர் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது இரு நாடுகளுமே டிரம்பின் வர்த்தக வரிகளால் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. மேலும், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2p14nk3xdo
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சரி அண்ணை. சரி அண்ணை.
-
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்!
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்! Published By: Digital Desk 3 28 Jan, 2026 | 08:47 AM பிரித்தானியாவைத் தாக்கி வரும் 'சாண்ட்ரா' புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. சமர்செட் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு 'பாரிய பேரழிவுச் சம்பவம்' என அறிவிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இங்கிலாந்து முழுவதும் 95-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையும், 250-க்கும் மேற்பட்ட இடங்களில் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெவன் பகுதியில் 'ஆட்டர்' ஆறு வரலாற்றில் இல்லாத அளவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பெல்பாஸ்ட், லண்டன், மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து புறப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அயர்லாந்து கடற்பரப்பில் பலத்த காற்று வீசுவதால் படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்ததாலும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237205
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு Jan 28, 2026 - 09:39 AM கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படுவதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த 'ஈ-கேட்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmkxia6ph04ijo29ng3gttjr2
-
"கறுப்பு ஜனவரி": மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி!
"கறுப்பு ஜனவரி": மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி! Jan 27, 2026 - 10:31 PM படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் இன்று (27) மாலை தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் 'கறுப்பு ஜனவரி' மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இப்போராட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் நடைபெற்ற இடத்தில் பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது, "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்கு", "கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?", "ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து" போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் ஊடகவியலாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதன் காரணமாக, சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmkwufp9504i9o29n2gon85j2
-
சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு எதிராக கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்துகிறார்.
கனடா மீது 100% வரி விதிக்கப்படும் : சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 11:15 AM கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து கனேடிய பொருட்கள் மீதும் 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "சீனா கனடாவை உயிரோடு விழுங்கிவிடும். அந்நாட்டின் வணிகங்கள், சமூகக் கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை சீனா முற்றிலுமாக அழித்துவிடும். கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும்," என பதிவிட்டுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ட்ரம்பின் மிரட்டலுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், "வெளிநாடுகளில் இருந்து நமது பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது, நாம் நமது சொந்த நாட்டுப் பொருட்களையே வாங்க வேண்டும். ஏனைய நாடுகள் செய்வதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்கான சிறந்த வாடிக்கையாளராக நாமே இருக்க முடியும்," என காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக ஜனவரி மாதம் 16 ஆம் திகதி, கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்வதை ஆதரிப்பதாகக் கூறியிருந்த ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். சீனாவுடன் 'சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்' (Free Trade Deal) எதையும் செய்யவில்லை எனவும், சில வரி தொடர்பான சிக்கல்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டதாகவும் கனடா அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கா கிரீன்லாந்தை (Greenland) கையகப்படுத்த முயற்சிப்பதைக் கனடா பிரதமர் விமர்சித்ததைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே இந்த விரிசல் அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/236936
-
சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி மீது விசாரணை!
சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி மீது விசாரணை! Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 10:07 AM சீன இராணுவத்தின் மிக உயர்ந்த அதிகார அமைப்பான மத்திய இராணுவ ஆணைக்குழுவின் (CMC) துணைத் தலைவரும், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவருமான ஜெனரல் ஜாங் யூக்ஸியா ஊழல் மற்றும் ஒழுக்காற்று குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சீன இராணுவத்தில் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகாரமிக்க இடத்தில் ஜெனரல் ஜாங் யூக்ஸியா உள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவான 'பொலிட்பீரோ' (Politburo) உறுப்பினராகவும், நேரடிப் போர் அனுபவம் கொண்ட மிகச்சில தளபதிகளில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார். ஜாங்குடன் இணைந்து, சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் கூட்டுப் பணியாளர் பிரிவின் தலைமை அதிகாரியான லியு ஜென்லி (Liu Zhenli) என்பவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் "சட்டம் மற்றும் ஒழுக்கத்தை கடுமையாக மீறியதாக" (suspected serious violations of discipline and law) சந்தேகிக்கப்படுகிறார்கள். சீனாவில் இது பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகளைக் குறிக்கும் சொல்லாகும். சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்தி வரும் வேளையில், அதன் மிக மூத்த தளபதிகளே விசாரணைக்குட்படுத்தப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஷி ஜின்பிங் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், இராணுவத்தில் ஊழலை ஒழிக்கவும் மேற்கொண்டு வரும் அரசியல் களையெடுப்பு நடவடிக்கையின் உச்சகட்டமாக இது பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/236925
-
அரச நிர்வாக ஊழலே இலஞ்ச மனப்பாங்குக்குக் காரணம் – ரங்க திசாநாயக்க
அரச நிர்வாக ஊழலே இலஞ்ச மனப்பாங்குக்குக் காரணம் – ரங்க திசாநாயக்க Published By: Vishnu 28 Jan, 2026 | 03:51 AM (இராஜதுரை ஹஷான்) ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இன்றும் உள்ளார்கள். அது அவர்களின் தவறல்ல, அரச நிர்வாக கட்டமைப்பின் ஊழலின் வெளிப்பாடு அது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக தனிமனிதர்கள் அனைவரும் எதிரானால் நாட்டுக்கு ஆணைக்குழு அவசியமற்றது என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார். அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊழலுக்கு அனைவரும் எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் சமூககட்டமைப்பில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்துள்ளது என்பதை ஆராய வேண்டும். ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இன்றும் உள்ளார்கள். அது அவர்களின் தவறல்ல, அரச நிர்வாக கட்டமைப்பின் ஊழலின் வெளிப்பாடு அது. ஒருசில அரச நிறுவனங்களில் மேலதிகமாக பணம் பெறுவது தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்று கருதுகிறார்கள். அண்மையில் மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தோம். அப்போது அங்கு பிரதி பணிப்பாளர் நாயகத்தின் காரியாலயத்தின் அலுமாரியில் இருந்து 41 இலட்சம் ரூபாவை கைப்பற்றினோம். பெற்றுக்கொள்ளும் இலஞ்ச பணத்தை வார இறுதியில் பகிர்ந்துக்கொள்ளும் ஒருமைப்பாடு தான் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டிய தரப்பினர் ஊழலுக்கு துணைபோகும் போது சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக தனிமனிதர்கள் அனைவரும் எதிரானால் நாட்டுக்கு ஆணைக்குழு அவசியமற்றதாகும். ஒரு நிறுவனத்தில் எவரேனும் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக செயற்பட்டு தகவல் வழங்கினால் அந்த நபருக்கு எதிராக செயற்படும் போக்கு காணப்படுகிறது. புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் ஊழல் தொடர்பில் தகவல் வழங்குபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/237184