Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்…., உன் வீரச்சாவும் அதன் பின்பான தமிழர் வரலாறும்! vijasanNovember 27, 2015ஈழம், மாவீரர் நாள், வீரவரலாறு, eelamaravar Post navigation Previous Next http://www.eelamview.com/wp-content/uploads/2015/11/praba-heros-day-2.jpg ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர். அப்போது ஓரிரு வாரங்களுக்கு முன்னர்தான் சீலன் புலேந்திரனின் காயங்களுக்கு மருந்து (பெத்தடீன், சொசியின்) வாங்க பணத்துக்காக எத்தனையோ வீடுகள் ஏறி, இறங்கி ஏமாறி ஏமாற்றப்பட்டு ஒரு வழியாக 3200ரூபா பிடித்து சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை கொடுத்து வண்டியேற்றி, அண்ணையிட்டை தமிழ்நாட்டுக்கு அனுப்பி காலை மாலை இரவு வெள்ளாப்புறம் என்று பேதமின்றி விழித்தபடி திரிந்து கொஞ்சம் ஓய்வாக உணரும்பொழுதில் சங்கருக்கு காயம்… உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் ஆனால் சீலன், புலேந்திரனின் காயங்கள் போலில்லாமல் இது கொஞ்சம் வித்தியாசம். சீலன், புலேந்திரனுக்கு ரிபீட்டர் வெடி.பல சிறிய சன்னங்கள் புகுந்த காயம். சங்கருக்கு தானியங்கி துப்பாக்கி காயம். படுக்கையில் இரத்தம் இழந்து சோர்ந்து கிடந்தாலும் அரைகுறை நினைவுகளில் கதைத்தபடி இருந்த சங்கர் அந்த நேரத்திலும் இயக்கத்தின் ஆயுதம் பற்றியும் இனி செய்ய வேண்டியதுகள் பற்றியும் ஏதேதோ கதைத்தபடி. சீலன் காயப்பட்ட பிறகு அமைப்பின் தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக சங்கரை தலைவர் தெரிவு செய்திருந்ததால் சங்கரின் பொறுப்புகள் அதிகம்.அந்த நேரத்தில் தாக்குதற்பிரிவு பொறுப்பு என்பது தலைவருக்கு அடுத்தபடியாக அமைப்பின் தளபதி போன்ற ஒரு பொறுப்பு. தலைவர் சில போராளிகள் பற்றி அதிகம் யோசிக்காமல் நித்திரை கொள்ள கூடியதாக இருந்தது என்றால் அது சங்கர், சீலன், புலேந்திரன், பண்டிதர் போன்றவர்களையே சொல்லலாம். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் சுயமாக முடிவெடுத்து எந்த நிலைமையையும் சமாளிக்ககூடியவர்கள் என்று தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தது இவர்கள்மீது. காயத்துடன் அணுங்கியபடி இருந்த சங்கரை பார்த்தபோது ஈரச் சாக்கு ஒன்றால் இதயத்தை அழுத்தி மூடியதுபோல ஒரு இனம்புரியாத கவலை மனசை நோகச்செய்தது. அடுத்த ஓட்டத்துக்கு தயரானோம். சீலன், புலேந்திரன் காயமடைந்தபோது சங்கர் ஓடித்திரிந்தது போல இம்முறை லாலா ரஞ்சன் அந்த இடத்துக்கு வந்தான். சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை இம்முறையும் அழைப்பது சாத்தியம் இல்லை. ஆனாலும் முதலுதவியும் வலியில் இருந்து நிவாரணம் பெறும் சிகிச்சையும் மிக அவசரமாக சங்கருக்கு தேவைப்பட்டது. அதே பெத்தடீன்,சொசியின் ஊசிகள்,காயம் தொற்று ஏற்படாமல் மருந்துகள். இம்முறையும் பணத்துக்கு தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக கையை காலை பிடித்து ஏற்பாடாச்சு. அடுத்து சங்கரை மதுரைக்கு கொண்டு போகவேணும். தலைவர் அங்கு ஒரு வழக்கின் பிணையில் நின்றிருந்த நேரம். மதுரைகாவல் நிலையத்தில் கையெழுத்து, மாலை 6 மணிக்கு பிறகு குறித்த முகவரியில் நின்றாக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன். இருபத்திஏழு நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 27 1982) சீலன் புலேந்திரன் காயமடைந்தபோது, சரஸ்வதி பூசையில் மூன்று பேருக்கு காயம் என்று மதுரைக்கு தந்தி ஒன்றை தபால்நிலையத்தில் இருந்து அனுப்ப வந்த சங்கரின் காயம்பற்றி இம்முறை அனுப்ப வேண்டிய நிலை. மதுரையில் பொன்னம்மான்,கிட்டு போன்றவர்கள் தலைவருக்கு அருகிலேயே இருக்கிறார்கள். சங்கரை அனுப்பினால் எப்படியும் நல்ல சிகிச்சை கிடைத்துவிடும் என்பதில் நம்பிக்கை இருந்தது.சங்கரின் காயம் ஒன்றும் உயிர் உறுப்புகளை சேதமடைய வைத்திருக்கவில்லை என்பது ஒரு ஆறதலாக இருந்தது. எப்படி கடல்தாண்டி அனுப்புவது. பின்பொருநாள் பெரும்கடல்படையை,பெரும் பெரும் ஆற்றலான கடல்சார் வீரர்களை கொண்டு வளர்ந்த எங்கள் அமைப்பிடம் அப்போது கடல் தாண்ட எதுவுமே இல்லை. வெளி இணைப்பு இயந்திரம், படகு, படகு செலுத்துபவர் என்று ஏராளம்.இவை எல்லாம் ஏற்பாடு செய்தாலும்கூட படகு கடல் தாண்டி கோடிக்கரைக்கு போக பெற்றோல் வேண்டும்.பணத்துக்கு எங்கே போவது… பண்டிதர் தான் படகு எரிபொருளுக்கு பணத்துக்கு அலைந்து பிடிப்பேன் என்றான். ஒரு படகுசெலுத்துபவரை ஏற்பாடு செய்யும்படி லாலாவுக்கும் எனக்கும் சொன்னான். நிறைய இடங்களில் ஏமாற்றம்.ஏதாவது சாக்கு போக்குகள்தான்.ஒரு படகுசெலுத்துபரை இறுதியாக அணுகி கெஞ்சி மண்டாடி நிலைமை சொல்லி சம்மதிக்க வைத்தோம். அவரை யாழ் சென்ரல் கல்லூரி மைதானத்தடிக்கு மாலை 3மணிக்கு வரச்சொல்லி லாலா நானும் காத்திருந்தோம்.சந்திக்க நேரமும் இடமும் சொல்லி காத்திருப்பது அந்த நேரத்தில் மிகமிக ஆபத்தான வேலை. அப்போது சிங்களபடையில் பிரிகேடியர் (பின்னர் மேஜர் ஜெனரல்)பொறுப்பில் இருந்த சரத்முனசிங்க தலைமையில் ஒரு பெரும் புலனாய்வு பிரிவு தாயகம் எங்கும் தன் வலையை அகல விரித்திருந்த நேரமது. படகோட்டி வரும்வழியில் பிடிபட்டால் எப்படியும் கூட்டிக்கொண்டுவருவார் என்ற ஆயத்தத்துடனேயே காத்திருக்க பழகி விட்டிருந்தோம்.மைதானத்தின் ஒரு முனையில் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் லாலா மறுமுனையில் நான். மாலை 6மணிவரை படகோட்டி வரவில்லை.எல்லாம் ஏற்பாடாகியும் படகை செலுத்த ஒருவர் தேவை என்று அலைந்து இன்னுமொருவரை ஏற்பாடு செய்து நவம்பர் 24 சங்கரை அனுப்பும்போது அவனின் காயமும் அவனின் அணுங்கலும் நோவும் அதிகமாகி விட்டிருந்தன. சங்கருடன் சென்ற போராளி சங்கரை கோடிக்கரையில் இறக்கி அங்கு ஒரு வீட்டில் படுக்கவைத்துவிட்டு பேரூந்துபிடித்து மதுரைக்கு போய் விடயத்தை சொல்லி அழைத்து வரும்போது நவம்பர் 25 மாலை ஆகிவிட்டிருந்தது. மதுரைக்கு சங்கரை கொண்டுபோகும்போதே ஓரளவுக்கு நிலைமை கடினமாக இருந்தது.காயத்தை மூடி தைத்தபோது அதற்குள் ஏற்பட்ட தொற்று அவனின் உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது. மதுரையின் ஒரு சின்னஞ்சிறிய தனியார் மருத்துவஅறைக்குள் சங்கரின் இறுதி கணங்கள் ஆரம்பமாகின. மிக கடினமான இறுக்கமான கணங்கள் அவையாக இருந்தது என்று பின்பொருநாள் நாடுதிரும்பிய கிட்டு சொல்லியிருந்தான். காப்பாற்ற ஏதேனும் வழி தேடி தலைவர் ஏங்கிய பொழுதுகள் அவை.நோவும் அணுங்கலும் உடல் முழுதும் தொற்றிவிட்ட காயதொற்றும் சங்கரை வாட்டிய போதும் அவன் தாயகவிடுதலை, அமைப்பின் அடுத்த கட்டம்,தலைவரின் பங்கு, தலைவர்மீதான விசுவாசம் மரியாதை என்று ஏதேதோ கதைத்தபடியே இருந்தானாம். அவனுடன் இறுதிகாலங்களில் வெடிகுண்டு, வெடிமருந்துகலவை என்று எப்போதும் ஒரு விஞ்ஞான சோதனை நடாத்தி கொண்டிருந்த அப்பையா அண்ணையும் அவனருகில். அவன் நேசித்த பெருந்தலைவன், அவன் கூடப்பழகி உயிராக இருந்த தோழர்கள் என்று எல்லோரும் சுற்றி இருக்க அவனின் இறுதிமூச்சுகள் வெளிவரத்தொடங்கின. நிலைமையினை உணர்ந்த தலைவர் கிட்டுவை அழைத்து சங்கரை கிட்டுவின் மடியில் தலைவைக்க விட்டு அந்த அறையில் சங்கரையே உற்றுப்பார்த்தபடி. ஒருபொழுதில் 17வயது இளைஞனாக கப்டன் பண்டிதரால்(பண்டிதர்,சங்கர்,பழனி(குமரப்பாவுடன் வீரச்சாவடைந்தவர்) ஐடியா வாசு எல்லோரும் ஒரு வகுப்பு சிதம்பராவில்) தன்னிடம் அழைத்துவரப்பட்ட போராளி இப்போது தன் 21வயதில் இறுதிமூச்சை விட்டுக்கொண்டு தாயககனவுடன் சாவுக்குள் நுழைகின்றானே என்ற துயர் அவருக்கு. இரவும் பகலும் பிரியாவிடை சொல்லிடும் ஒரு பொழுதில் நவம்பர் 27ல் சங்கர்,சுரேஸ் என்ற பெயர்களால் அமைப்புக்குள் அழைக்கப்பட்ட எங்கள் உயிர்த்தோழன் வீரச்சாவை தழுவி கொள்கின்றான். ஓங்கி அழவும் முடியாது.பாடைகட்டி ஊர்வலமாக கொண்டு எரியூட்டவும் முடியாது. மதுரை அடங்கிய ஒரு பின்னிரவு பொழுதில் இரவு 11மணிக்கு பின்னர் ஒரு பத்துக்கும் உட்பட்டவர்கள் (இயக்கஉறுப்பினர்கள், இயக்க ஆதரவாளர்கள்) சங்கரை கொண்டுசென்று மயானம் ஒன்றில் கிடத்தி சங்கருக்கு அவனின் பிரியமான தோழமை அப்பையா கையால் தீயிட நெருப்புக்குள் மறைந்துபோனான். சங்கரின் வீரச்சாவுச்சேதி தாயகத்தின் போராளிகளுக்கு மறுநாளே அறிவிக்கப்பட்டது. ஆனால் எவரும் இதனை பற்றி மூச்சுவிடக்கூடாது என்றும் அறிவிக்கும் சாதக நிலைமை ஒன்று ஏற்படும்போது தலைமை அறிக்கும் என்பதும் அந்த செய்தியுடனே இணைந்து. அடுத்த கட்டமாக சங்கரின் புகைப்படம் எதுவுமே அமைப்பிடம் இல்லை. அவன் மரணப்படுக்கையில் கிடந்த நேரத்தில் எடுத்த படம் ஒன்றுதான் அமைப்பிடம் இருந்தது. சங்கரின் மைத்தனரான தாடி என்பரிடம் கம்பர்மலையில் சங்கரின் சில பாஸ்போர்ட் அளவு படங்கள் இருக்கின்றன என்பதை முன்னமே சங்கர் சொல்லி இருந்தான். சங்கரின் மைத்துனனான தாடி என்பவரிடம் கம்பர்மலைக்கு சென்று நானும் பண்டிதரும் இன்னுமொரு ஆதரவாளரும் சென்று சங்கரை பயிற்சிக்காக லெபனான் அனுப்புவதற்கு அவனுக்கு பாஸ்போர்ட் எடுக்கவேணும் அவனின் பாஸ்போர்ட் புகைப்படம் அவனின் வீட்டில் இருக்கு அதனை எடுத்து தரும்படி கேட்டோம். ஏன் சங்கரையே கூட்டிக்கொண்டு போய் புகைப்பட ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம்தானே என்று சங்கரின் மைத்துனன் தாடி திரும்ப எங்களை கேட்டபோது எதுவுமே சொல்ல வரவில்லை. ஆனாலும் சுதாகரித்து பதில் சொல்லி அவனிடம் சங்கரின் புகைப்பபடங்களை வாங்கி கொண்டுவந்து அவன் தலைமறைந்ததும் சைக்கிளை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு சங்கரின் புகைப்படத்தை பார்த்து பண்டிதர் கேவிகேவி அழுததது வாழ்வின் இறுதி கணம்வரைக்கும் மறைந்துபோகாது. எப்டியானவன் சங்கர்,எல்லா வேலைகளையும் மிக இலகுவாக,மிகமிக வேகமாக பழகி செய்ய கூடியவன். பண்ணையில் புளியங்குளத்தில் நெல்லு சூடு அடிப்பது என்றாலும் அதனையும அழகாக ஆறதலாக நிதானமாக சிதறாமல் செய்வான் சங்கர்.ஒரு உடுப்பு போடுவது என்றாலும் அவனின் கவனம் அதில் இருக்கும். எல்லாவற்றிலும் மேலாக எந்தவொரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாத அந்த பொழுதுகளில் குண்டுகள், செய்வதும் அதனை பொருத்துவதும் சங்கருக்கு கைவந்த கலை. சங்கரும் அப்பையா அண்ணையும் இணைந்து செய்த பார்சல் வெடிகுண்டுகள் இருபது அந்தநேரம் சிங்களதேசத்தை அலறி அடித்து நித்திரை குலைய வைத்தது.(அது புங்கங்குளத்தில் புகையிரத தபால்பெட்டிக்குள் வெடித்தாலும்கூட) சங்கர் எப்போதும் அமைப்பை மக்கள்மத்தியில் பரவலாக கொண்டு போகவேணும் என்ற பெரும் முயற்சியில் திரிந்தபடியே இருப்பான். இதற்காகவே நிறைய படிப்பான். உண்மை மனிதனின் கதை,அதிகாலையின் அமைதியில் போன்ற போர்க்கால இலக்கியங்களை மட்டும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒரு வரலாற்று பின்ணணியுடன் பார்க்கும் ஒரு பார்வையை தரும் அரசியல் புத்தகங்களையும் அவன் விரும்பி படிப்பான். எல்லாவற்றிலும் பார்க்க அவன் ஓய்வற்ற ஒரு உழைப்பாளன். ஓய்வு என்பதே அவன் களைத்து தூங்கும்பொழுது மட்டுமே. விடிந்தால் அவனின் நாள் எத்தனை சந்திப்புகள், முன்னெடுப்புகள், முயற்சிகள், வேலைகள் என்று ஓடும். அவனது சைக்கிளும் அவனுக்கு ஈடுகொடுத்து உழைக்கும். அவன் வீரச்சாவடைவதற்கு சரியாக ஒருமாதம் முன்பு அக்டோபர் 27ம்திகதி சாகவச்சேரி சிறீலங்கா சாவல்நிலைய தகர்ப்பு தாக்குதலில் ஒரு பகுதிக்கு சங்கரையே சீலன் தாக்குதற்பொறுப்பாக நியமித்திருந்தான். அப்போது அமைப்பிடம் இருந்த ஆயுதங்களில் ஆகக்கூடிய வலுவுள்ளதான கெக்ளர் அன்ட் கொச் ஜி3 சங்கரிடமே அந்த தாக்குதலில். சிங்களபேரினவாதம் தமிழர் தாயகத்தை அடிமைப்படுத்தி ஆளுவதன் ஒரு அடையாளமாக விளங்குவது சிங்களதலைநகருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பெருந்தெரு ஏ9 ஆகும். அந்த பெருவீதியில் ஒரு தமிழ் இளைஞன் தானியங்கி துப்பாக்கியுடன் நின்றிருந்த முதல் பொழுதின் பெருமை சங்கருக்கு உரியது. அது சிங்களதேசத்து இனிவரப்போகும் காலத்தில் இவனைப்போல ஆயிரம் ஆயிரம் தமிழ் மனிதர்கள் ஆயுதங்களுடன் எழுந்துவருவர் என்ற செய்தியை அப்போது சொல்லாமல் சொல்லிற்று. சங்கர் என்ற அந்த வீரனின் சாவு உடனடியாக இயக்கத்தை ஒரு உலுப்பு உலுப்பி விட்டிருந்தாலும்கூட தலைவரும், ஏனைய போராளிகளும் சங்கரின் மரணத்தின் மூலம் முன்னர் இருந்ததைவிட பல்மடங்கு அதிகமான உறுதியும் வேகமும் கொண்டனர். காயம் ஆறி தாயகம் திரும்பி சீலன், புலேந்திரனிலும் இதனை காணக்கூடியதாக இருந்தது. அதனை போலவே சங்கரை அவனின் இறுதி கணத்தில் தன் மடிமீது வைத்திருந்த கிட்டுவுக்குள் சங்கர் வீரச்சாவு மலையளவு உறுதியையும், பொறுப்பையும் கொடுத்திருந்ததை பின்பொருநாள் அவன் பொலிகை கடற்கரையில் 1983ஆரம்பத்தில் வந்து இறங்கியபோது உணரமுடிந்தது. சங்கரின் போராட்ட வாழ்வு தமிழீழ விடுதலை வரலாற்றை பல படிகள் பல பரிமாணங்கள் உயர்த்தி செல்ல வைத்தது போலவே அவனின் முதற்சாவு இனி எந்த கணத்திலும் தளரோம். எந்த நிலையிலும் தாயகஇலட்சியத்தை கைவிடோம் என்ற ஓர்மத்தை போராளிகளுள் இறக்கிவிட்டு சென்றது. அவன் மரணித்து ஒரு வருடத்துக்கு பின்னர் தாயகசுவர்கள் எங்கும் சங்கரின் வீரமரண செய்தியை எழுதி சங்கரின் வீட்டுக்கு சென்று அவன் எரிந்து எஞ்சிய சாம்பல் அடங்கிய செம்பையும், அவனின் மரணப்படுக்கை புகைப்படத்தையும் கொடுத்து திரும்பும்போது அவனுடன் உலாவிய அந்த தெருக்கள், சைக்கிளில் அவனுடன் திரிந்த ஒழுங்கைகள் எல்லாம் அவனது முகமாக தெரிந்தது.தாயகம் முழுதும். அவன் இறுதியாக படித்துக்கொண்டிருந்த ” ஒரு உண்மை மனிதனின் கதை ” என்ற ருஸ்ய போர்க்கால பெரும் இலக்கியமொன்றின் நாயகன் அலக்ஸெய் போல கால்களை இழந்து காடுகளுள் ஊர்ந்து மனோதைரியத்துடன், சாப்பாடு இன்றி பனியை கரைத்து குடித்து முகாம்திரும்பி தன் கால்களை இழந்தபின்பும் செயற்கைகால் பொருத்தி போர்விமானம் ஏறியது போலவே காயத்துடன், நினைவு மங்க மங்க இரத்தம் வழிய ஓடிவந்து அமைப்பின் ஆயுதத்தை ஒப்படைத்து வீழ்ந்த சங்கர் இனிவரும் எந்த காலத்திலும் தமிழர் நினைவெங்கும் நிறைந்திருப்பான். அவனையும் அவனுடைய பாதையில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் தமிழர்களின் இனிவரும் எந்தவொரு சமூக அரசியல் மாற்றத்தினதும் மூல இயங்குசக்திகளாக வழிகாட்டுவர். ச.ச.முத்து https://eelamaravar.wordpress.com/2015/11/27/heros-day-8/
  2. ஈழத்து இசைப்பரப்பில் தவிர்க்க முடியாத ஆனால் ஆர்ப்பாட்டமில்லா ஆளுமை பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன ஓரிரு நாட்களுக்குள்ளே அவர் மறைந்த நாள் வந்தது. நெஞ்சம் கனக்கிறது. "பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது" அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் காலத்தாலும் அழிக்க முடியாதது. அவை பற்றி விரைவில் பதிவிடுவேன். அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய இசைப் பணிகளில் சிலவற்றைத் தகவலுக்காக இங்கே பதிவிடுகிறேன். 1.இந்திய அமைதிப் படை ஆக்கிரமித்திருந்த 80களின் இறுதியில் சுய முயற்சியாக விடுதலைப் பாடல் தொகுப்பு. (இதன் தலைப்பு நினைவிலில்லை) 2. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த"ஓ.... மரணித்த வீரனே" பாடல் சில மாற்றங்களுடன் மீள் ஒளிப்பதிவு. 3.1994 இல் "பிஞ்சுமனம்" திரைப்படத்திற்கு இசையமைப்பு. இது தான் அவர் இசையமைத்த முதல் திரைப்படம். 4. 1995இல் கலைண்பாட்டுக் கழகம்- மகளிர் பிரிவு தயாரித்து வெளியிட்ட இவர் இசையமைத்த "நெருப்பு நிலவுகள்" இசைப் பாடல் தொகுப்பு. 5. 1995இல் "திசைகள் வெளிக்கும்" திரைப்படத்திறகு் இசையமைத்தமை. ஆம். அருமையான மனிதர். அமைதியில் உறங்கட்டும்...! "ஈழத்துத் திரைத்துறையின் அஞ்சலிகள்" ---> Kesavarajan Navaratnam ()
  3. தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர், இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர். பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார். தாயகத்தில் தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம் திரைப்படத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் எண்ணதத்தில் உருவான பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற உருக்கமான பாடலுக்கும், திசைகள் வெளிக்கும் என்கின்ற பெண்களின் பிரச்சினைகள் குறித்துப்பேசும் படத்துக்கான இசையினையும் ரமணன் அவர்களே வழங்கியிருந்தார். அத்துடன் போராட்டகாலப்பகுதியில் தாயகத்தில் மகளிர் அணியினரின் இசை உருவாக்கங்களிலும் இவருக்கு பெரும்பங்குண்டு. ஈழத்தின் மூத்த கவிஞர் முருகையன் அவர்கள் யாத்த மாவீரர் யாரோ என்றால் என்கின்ற பாடல், ஆதிலட்சுமி சிவகுமாரின் புதுயுகம் ஒன்று படைத்திடவேண்டும் புறப்பட்டு வா தோழி என்கின்ற பாடல், கவிஞர் வேலணையூர் சுரேசின் முல்லைமண் எங்களின் வசமாச்சு என்கின்ற பாடல் உட்பட ஏராளமான பாடல்கள் இவரின் இசையில் மலர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சிறப்புமிக்க இசைத்திறனால் தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தவர். இறுதிவரை விடுதலைதாகத்தை தன் நெஞ்சிற்குள் சுமந்திருந்தவர். இத்தகைய சிறப்புகளும், நுண்திறனும், பற்றும் கொண்டுவாழ்ந்த றமணன் அவர்களின் இழப்பு என்றும் ஈடுசெய்ய முடியாததாகும். இவரின் இழப்பினால் துயரடைந்து கலங்கும் இவரின் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள், அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் நாமும் இவருக்கு எமது இறுதி வணக்கத்தை கொள்கின்றோம். https://www.pathivu.com/2018/08/ramanan_14.html
  4. யாரிந்த அல்பிரட்துரையப்பா?….. – பகுதி 7 ’அல்பிரட் தங்கராசா துரையப்பா’ ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அழிக்கமுடியாத பெயர். தமிழ்ஈழத்தின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணநகரத்தினை நவீனமயப்படுத்துவதிலும் அழகுபடுத்துவதிலும் முழுப்பங்கினை வகித்தவர். யாழ்ப்பாணநகரத்தின் பல இடங்களிலும் காணப்படும் தமிழ்ச்சான்றோர்களின் அழகுமிகு சிலைகளும் நகரத்தின் நடுவே உயர்ந்து நிற்கும் திராவிட சிற்பக்கலையுடன் கூடிய நவீனசந்தைக் கட்டிடம் உட்பட யாழ்ப்பாணத்தின் பொதுவிளையாட்டரங்கான ‘யாழ் துரையப்பா ஸ்ரேடியம்’ மற்றும் திறந்தவெளி அரங்கு என்பவற்றை நிர்மாணித்த பெருமைக்குரிய நகரமுதல்வர் இவரேயாவர். அத்துடன் வரலாற்றுசிறப்புமிக்க யாழ்ப்பாண பொதுநூலகத்தை முதன்முதல் திறந்துவைத்த முதல்வரும் இவர்தான். இவருடைய காலத்தில் தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. 1960 மார்ச் மற்றும் யூலை மாதங்களில் நடந்த பொதுத்தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு தமிழ்க்காங்கிரஸ் தலைவரான ஜி.ஜி எனப்பட்ட காங்கேசர் பொன்னம்பலத்தை தோற்கடித்து யாழ்ப்பாண தொகுதியின் பாராளுமன்றஉறுப்பினராக பதவி வகித்தவர். இளம்சட்டத்தரணியான இவர் சுயேட்சையாக போட்டியிட்டே இராணிவழக்குரைஞரும் மிகப்புகழ்பெற்ற குற்றவியல் சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தை மட்டுமல்ல அன்று வீசிய தமிழரசுக்கட்சி அலையிலும் அதன்வேட்பாளரான கதிரவேற்பிள்ளையையும் ஒருங்கே தோற்க்கடித்த தனிநபர் என்ற பெருமைக்குரியவர். துரையப்பாவின் மனைவி ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மருமகள் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 1960 மார்ச் 19 இல் முதன்முதலாக யாழ்ப்பாணத்தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட இவர் அன்று சிறுபான்மை பலத்துடன் இருந்த டட்லிசெனநாயக்காவின் ஜக்கியதேசியக்கட்சிக்கு ஆதரவுவழங்கினார். இதன்மூலம் மார்ச்23 ஜக்கிய தேசியக்கட்சியை ஆளுங்கட்சியாகவும் டட்லிசெனநாயக்காவை பிரதமராக்கவும் வழிவகுத்தார். அதாவது தனது ஒற்றைவாக்கினாலே ஒரு அரசாங்கத்தையே அமைக்க முன நின்ற King Maker இவர் என அன்று போற்றப்பட்டார். ஆனால் அடுத்த மாதமே 1960 ஏப்ரல் 22ந் திகதி நடைபெற்ற டட்லி செனநாயக்காவின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் சிம்மாசனப் பிரசங்கத்தின்போது தமிழரசுக்கட்சியுடன் இணைந்து டட்லியின் அரசுக்கெதிராக வாக்களித்தார். இதன்மூலம் டட்லி அரசாங்கத்தை தோற்க்கடிக்க இவரும் காரணமானார். மீண்டும் 1960 யூலைமாதம் நடந்த 5வது பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். இம்முறை முதன்முறையாக அரசியலுக்கு வந்தவர்தான் பண்டாரநாயக்காவின் விதவை மனைவியான ஸ்ரீறிமாவே பண்டாரநாயக்கா ஆவர். 1960யூலையில் உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீறிமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றுக்கொண்டார். அன்று ஸ்ரீறிமாவோவிற்கு தனதுஆதரவை வழங்கியதன் மூலம் அவரது நண்பராகவும் அவரது தீவிரவிசுவாசியாகவும் துரையப்பா மாறினார். 1961இல் தமிழினத்தின் பெயரால் தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட யாழ்கச்சேரி சத்தியாக்கிரக போராட்டத்திலும் தனதுதொண்டர்களுடன் இவர் கலந்துகொண்டார். 1960 யூலை முதல் 1975 யூலை 27இல் தான் இறக்கும்வரை அக்கட்சி யினதும் ஸ்ரீறிமாவோவினது உண்மையான தோழமையுடன் அவரின் ஆதரவாளராக விளங்கினார். இந்நிலையில் 1970மே மாதம் 27ந்திகதி நடந்த 7வது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டார். எனினும் வெறுமனே இரட்டை இலக்கமான 56 வாக்குகள் வித்தியாசத்தில் அன்றைய தமிழரசுக்கட்சி வேட்பாளரான F.X.மார்ட்டினிடம் வெற்றிவாய்பை இழந்தார். எனினும் பிரதானவேட்பாளரும் தன்னுடன் தீராப்பகை கொண்டிருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று மீண்டும் தனது மக்கள் ஆதரவினை நிருபித்தார். 1970மே பொதுத்தேர்தல் யாழ்ப்பாணதொகுதி முடிவுகள் வாக்காளர்தொகை 34.865 கு.ஓ.மார்ட்டின் (தமிழரசுக்கட்சி) 8848 அல்பிரட் துரையப்பா (சுயேட்சை) 8792 ஜி.ஜி.பொன்னம்பலம் (தமிழ்க்காங்கிரஸ்) 7222 மொத்தவாக்குகள் 24.938 மேலதிகவாக்குகள் 756 இந்துப் பல்கலைக்கழகத்திற்காக வாதாடிய ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கு எதிராக கத்தோலிக்கரான மார்ட்டினை நிறுத்துவதன் மூலம் 1965 – 1970இல் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வாக்குகளை மதரீதியாக பிரிக்கவும் 1960 – 1965வரை பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திரு.அல்பிரட்துரையப்பாவின் வெற்றிவாய்பை தடுக்கவும் என இரட்டைநோக்குடன் தமிழரசுக்கட்சி முற்பட்டது. இதற்காக யாழ்ப்பாணத்தில் என்றுமேயில்லாத மதரீதியானதும் சமூகரீதியுமான காழ்ப்புணர்வுகளை மார்ட்டினின் நியமனம் மூலம் அம்மக்களிடையே ஏற்படுத்த முயன்றது. இதற்கான விலையை அடுத்துவந்த ஒருவருடத்திலேயே அவர்கள் கொடுக்கநேர்ந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அமைத்த குடியரசு அரசியல் நிர்ணயசபையை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைய பகிஸ்கரிக்கமறுத்த F.X.மார்ட்டினை 15.7.1971இல் இவர்களே கட்சியை விட்டு வெளியேற்ற நேர்ந்தது. வேலியில்போன ஓணானை மடியில் கட்டிய கதையாக இச்செய்தி அன்று வர்ணிக்கப்பட்டது. இதே மார்ட்டின் 1972மே22இல் ஸ்ரீலங்காவின் முதலாவது குடியரசு அரசியல்அமைப்புக்கு ஆதரவளித்த தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் நல்லூர் அருளம்பலம் வட்டுக்கோட்டை தியாகராசா யாழ்ப்பாண நியமனஉறுப்பினர் MC சுப்பிரமணியம் நியமனஉறுப்பினர் குமாரசூரியர் மட்டக்களப்பு இரண்டாவது உறுப்பினர் இராஜன்செல்வநாயகம் என்பவர்களுடன் இணைந்ததன் மூலம் தமிழரசுக்கட்சியின் முகத்தில் கரிபூசினார். இவர்களிற்கு எதிராக துரோகிப்பட்டங்களை சூட்டிய அன்றைய தமிழரசுக்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்களும் மேற்படி அரசியலமைப்பிற்கு ஆதரவாக பின்நாட்களில் சத்தியப்பிரமாணம் எடுத்து பாராளுமன்றம் சென்றமை ஈழத்தமிழர்க ளின் வரலாற்றில் நாம்காணும் மாபெரும் துரோகத்தனமாகும். 1970பொதுத்தேர்தலில்; தனது பதவியை மயிரிழையில் தவறவிட்ட துரையப்பா உடனடியாக கிடைத்த சந்தர்ப்பத்தில் யாழ் மாநகரசபை நிர்வாகசபை உறுப்பினரானார். அப்பொழுது முதல்வராகவிருந்த திரு நாகராஜா முன்னால் முதல்வாரன துரைராசாவுடனான போட்டியினால்; தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தனக்கிருந்த பொதுமக்கள மற்றும் ஏனையமாநகரசபை உறுப்பினர்களின் பலத்த ஆதரவுடன் 22.04.1971 யாழ்மாநகர முதல்வரானார். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர முதல்வராக இவர் பதவியேற்றதும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் யாழ்ப்பாண மாநகரம் மிளிர்ந்துகொண்டது. இக்காலத்தில்தான் ‘சைக்கிள்பிறக்கிராசி’ என பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட இவர் காலைமுதல் நண்பகல்வரை யாழ் நீதிமன்றத்தில் ஏழைமக்களிற்காக இலவசமாக வழக்காடுவதிலும் பிற்பகலில் மாநகரசபை மேயருக்கான தனது கடமைகளையும் மேற்கொள்ளலானார். வீதியோரங்களில் நிறுத்தப்படும் வாகனங் களிற்கான கட்டணம் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் அறவிடப்பட்டது இக்காலத்தில்தான். இதன்பின்பே கொழும்பிலும் இம்முறை அமுலிற்குவந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் மாநகரசபைக்கான வருமானத்தை சமயோசிதமாக உயர்த்திய இவர் மறுபுறம் யாழ்நகரை அழகுபடுத்துவதிலும் அதிககரிசனை காட்டினார். இவருடைய அன்றைய நிர்வாகத்திறனை பின்னையநாட்களில் SMG என அழைக்கப்பட்ட பத்திரிகையாசிரியரான கோபாலரத்தினம் தனது அனுபவங்களினை தொகுத்து எழுதிய ‘பத்திரிகைத்துறையில் அரை நூற்றாண்டு’ என்னும் நுலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘அல்பிரட் தங்கராசா துரையப்பா கெட்டிக்காரமேயர் என்று பெயர்எடுத்தவர். இவரையார் பாராளுமன்றம் போவதற்கு தேர்தலில் போட்டியிடச்சொன்னார்கள் என யாழ்ப்பாணமக்களே பேசிக்கொண்ட காலமுமிருந்தது.’ இவ்வாறு வசீகரமுள்ள யாழ்ப்பாண மேயராகவே இவர் அன்று விளங்கினார். இக்காலத்தில் யாழ் கூட்டுறவு சங்கத்தலைவராகவும் துரையப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் யாழ்ப்பாணநகரத்தின் இருபெரும் பதவிகளை சமகாலத்தில் வகிக்கும் வாய்ப்பைப்பெற்றார். எனினும் சாதாரணமனிதரும் அணுகக்கூடிய சாமானிய மனிதராகவே இவர் நடந்தகொண்டார். இதனால் யாழ்நகரத்தில் வசித்த மக்களின் அபிமானத்தைப்பெற்ற மக்கள்மேயராக இவர் அன்று விளங்கினார். இவர் சுடப்பட்டார் என அறிந்தவுடன் ஆவேசத்துடன் யாழ் வைத்திசாலையை முற்றுகையிட்ட மக்களின்மூலம் இவரது மக்கள்அதரவு பகிரங்கமானது. யாழ் மாநகரமேயர் என்கிற வகையிலும் தனிப்பட்டமுறையிலும் பல சிறப்புகளுடன் நடமாடிய துரையப்பா இரண்டுபாரம்பரிய தமிழ்க்கட்சிகளின் இடைவிடாத நெருக்குதல் காரணமாக புகலிடம்தேடியோ அல்லது தனது விசுவாசமான நட்பு பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்தோ ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகினார். அன்றைய தபால்தந்திஅமைச்சர் செல்லையாகுமாரசூரியருடன் போட்டி போட்டுக் கோண்டு அக்கட்சியை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் அதிககரிசனை காட்டினார்;. தன்னை எவ்விதகட்சி அடிப்படையுமில்லாமல் பாராளுமன்றஉறுப்பினராகவும் மாநகரசபை உறுப்பின ராகவும் சுயேட்சையாகவே மக்கள் தெரிவுசெய்தனர். என்பதை மறந்து தமிழர்விரோத செயல்களினை முன்னிறுத்திய இனவாத ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு இவர் வழங்கியஆதரவு பெரும்பாலான தமிழ்மக்களின் சீற்றத்திற்குள்ளாகியது. நகரமுதல்வர் அல்லது கட்சியின் நீண்டகால ஆதரவாளர் என்பதால் ஸ்ரீறிமாவோவின் அரசாங்ககட்சியுடனும் அதன் உயர்மட்டத் தலைவர்களுடனான இவருடைய தொடர்புகளும் இவ்வாறான செயல்களும்; சாதாரணமானவையே. ஆனால் இவரோ மேயர் என்ற பதவியை ஏற்பதற்கு முன்பிருந்தே கொழும்பிலிருந்து வரும் மந்திரிகளையும் அதிகாரிகளையும் இவற்றிற்கு மேலாக திருப்திப்படுத்தமுற்பட்டார். இதற்காக குறிப்பிட்ட சிலநடனதாரகைகளையும் பயன்படுத்த முற்ப்பட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இதனைவிட இவரது சகஉறுப்பினர்களில் ஒருவர் யாழ் நகரசண்டியனாகவும் தன்னினச்சேர்க்கையாளராகவும் யாழ்ப்பாண மக்களால் இனம் காணப்பட்டார். 1970 தேர்தல்காலங்களில்; தன்னை இடைவிடாது தாக்கிய தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையை பழிதீர்கமுயன்றார். தமிழரசுக்கட்சியின் தலைசிறந்த பேச்சாளராக விளங்கி கருத்துவேற்றுமை கொண்டு அதிலிருந்து விலகிய புதுமைலோலன் என்ற கந்தசாமியை ஆசிரியராகக் கொண்டு ‘அலையோசை’ பத்திரிகையை வெளியிடலானார். இதன்மூலம் தமிழரசுக் கட்சியினரையும் குறிப்பாககூறினால் தனிப்பட்டரீதியில் அதன் தளபதியென புகழ்ந்துரைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும் அவர் குடும்பஉறுப்பினர்க ளையும் இப்பத்திரிகை தரம்தாழ்ந்து தாக்கியதாக இன்றும் பலர் கூறுகின்றனர். தமிழ்மாணவரின் உயர்கல்வியினை சிதைக்கும்நோக்கில் இனரீதியான தரப்படுத்தல்கொள்கையினை சட்டமாக்கியது ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகும். அக்கட்சிக்கு தீவிரஆதரவளித்தமை ஒருபுறமும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் குந்தகம் விளைவித்து அதன்மூலம் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தமுற்பட்டமையும் இவர்மீதான குற்றச்சாட்டு களாகியது. இக்காரணிகளால் தமிழ்மொழி அல்லது தமிழர் எனும் இனப்பற்றின் ஊடாக தமிழ் மாணவருக்கு எதிரான தரப்படுத்தல் கண்டு உருவாகிய தீவிரவாத அமைப்பான தமிழ்மாணவர் பேரவையின் முதன் நிலைக்குறியாக துரையப்பா இனம்காணப்பட்டார். இதன்காரணமாக 1971மார்ச் அவருடைய காரிலும் 1972ஆகஸ்டில் அவருடையகாணிவேலும் 1972 டிசம்பரில் கொய்யாத் தோட்டவீட்டிலுமாக மாணவர்பேரவையினரால் அவர் குறிவைக்கப்பட்டார். இத்தனை குண்டுத்தாக்குதலிலும் அதிஸ்டவசமாக உயிhதப்பிக்கொண்டார். எனினும் தனதுநிலையை மாற்றிக் கொள்ளாமல் மேலும் மேலும் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான தனது ஆதரவை நல்கிவந்தார். 1973 மார்ச் 12இல் சத்தியசீலனின் கைதுடன் ஓய்விற்குவந்த மாணவர் பேரவையின் செயற்பாடுகளின் பின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாணக்கிளை அலுவலகத்தை அன்றைய சுகாதாரஅமைச்சரும் அப்புத்தளை பாராளுமன்ற உறுப்பினரான W.A.P ஆரியதாஸாவினை அழைத்து திறந்துவைத்தார். இதன்மூலம் தனது சிங்கள அரசவிசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். 1974 ஜனவரி 10ந்திகதி இரவு தமிழாராய்சி மகாநாட்டில் சிங்கள இனவெறியன் சந்திரசேகரா என்ற பொலிஸ் அதிகாரியின் தான் தோன்றித்தனமான செயற்பாட்டினால் விளைந்த அசம்பாவிதங்களிற்கு இவர் துணைபோனதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. மேற்படிகாரணிகளால் துரையப்பா அழிக்கப்படவேண்டியவர் என்பது பெரும்பான்மையான குடாநாட்டுமக்களினது விருப்பமாகியது.சந்திரசேகரா யாழப்பாணத் தைவிட்டு மாறிச்சென்றிருந்த நிலையில்; 1975 மார்ச்சில் இல் ஈழம் திரும்பியிருந்த தலைவர் பிரபாகரன் எண்ணத்தில் உதித்த கருதுகோளான ‘எதிரியைவிட துரோகியே ஆபத்தானவன்’ என்பதற்கிணங்க யாழ்ப்பாண மேயராகவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகவும் விளங்கிய துரையப்பாவின் வாழ்வு ‘வல்வெட்டித்துறை’ யில் இருந்து வந்த இருவரினால் முடித்துவைக்கப்பட்டது. இவ்வாறே தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ‘துரையப்பாவின் முடிவு’ முதன்மையாகியது. முற்றும்
  5. போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 6 யாழ் பஸ் நிலையத்தில் வேண்டிவந்த மேலாடை அட்டையில் TNT என எழுதி வைத்துவிட்டு துரையப்பாவின் காரின் வரவை எதிர்பார்த்து தொடர்ந்தும் ஆவலுடன் இவர்கள் காத்திருந்தனர். இவர்களின் காத்திருப்பு வீண்போகவில்லை நண்பகல் கடந்து ஏறத்தாள 1.05 மணியளவில் வீதியில் நின்ற கிருபாகரன் கார்வருகிறது எனக்கூறினார். முன்திட்டமிட்ட படியே தலைவரும் கலாபதியும் துரையப்பாவை தாக்க தயாராகினர். பொன்னாலை வீதியில் கோவிலின் வலதுபுறமாக வேகமாக வந்தகாரின் முன் ஆசனத்தில் சாரதிக்கு அருகாமையில் துரையப்பா அமர்ந்திருந்தார். அவருக்கு பின்புறமாக யாழ் மாநகரசபை உறுப்பினர்களில் ஒருவரான இராஜரட்ணமும் சாரதிக்கு பின்புறமாக யாழ் பலநோக்கு கூட்டுறவுசங்க அதிகாரிகளில் ஒருவரான யோகநாதனும் அமர்ந்திருந்தனர். வீதியின் இடதுபுறமாக அமைந்திருந்த கோவிலின் முன்பாக சிறிது தூரத்தில் கார் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட காரில் இருந்து இறங்கிய துரையப்பா தனது நிமிர்ந்த நடையுடன் கோவிலை நோக்கி நடக்கமுற்பட்டார் இந்நிலையில் வீதியின் வலதுபுறமிருந்து மடத்திலிருந்து தலைவர்பிரபாகரன் துரையப்பாவை நோக்கி கலாபதி பின்தொடர வீதியின் குறுக்காக விரைவாக நடக்கத்தொடங்கினார். துரையப்பா காரில் இருந்து இறங்கி நடக்கத்தொடங்கவும் அவரைநோக்கிய நிலையில் இரண்டு இளைஞர்கள் வேகமாக முன்வருவதைக் கண்ட சாரதி சிவனு என்னநினைத்தாரோ? காரிலிருந்து இறங்கமுற்பட்டார். வேகமாக வீதியை கடந்து கொண்டிருந்த தலைவரின் கரத்திலிருந்த துப்பாக்கி உடனடியாக சாரதியைநோக்கி எச்சரிக்கை வேட்டைத்தீர்த்த அதேகணத்தில் துரையப்பாவை நோக்கித் திரும்பியது. காருக்குமுன்பாக மூன்றுநான்கு காலடிகளை எடுத்து முன்நடந்து வந்திருந்த துரையப்பா இவைகளைக்கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளும்முன்னரே வீதியை விரைவாகக் கடந்து நேர்நின்ற தலைவரின் கரத்திலிருந்த 38ம்இலக்க ரக கைத்துப்பாக்கி ஆவேசத்துடன் முழுமையாக சீறியது. கணப்பொழுது சுதாகரித்துக்கொண்ட துரையப்பா பின்புறம் திரும்பி ஓடமுற்பட்டார். ஆனால் அதற்கிடையில் திட்டமிட்டபடி காரின் பின்புறத்திற்கு கலாபதி வந்திருந்தார். ஒருபுறம் சுவர் மறுபுறம் கார் முன்னால் பிரபாகரன் பின்னால் கலாபதி எத்திசையும் ஓடமுடியாத இறுதி முற்றுகை மரணபயம் கண்களை கவ்விக்கொள்ள காரின் இடதுபுறமாக முன்கதவேரம் குனிந்துகொண்ட துரையப்பா பதுங்கமுயன்றார். துரையப்பாவிற்கு பின்புறமாக காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இராஜரட்ணம் சாவகசமாக இறங்கி துரையப்பாவை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அவ்வேளையில் காருக்கு முன்பாக வலது புறமிருந்து இரண்டு இளைஞர்கள் வேகமாக வருவதையும் வந்தவர்களில் ஒருவர் காருக்கு முன்பாக நேராக வந்து துரையப்பாவை சுடுவதையும் கண்டார். அதேநேரம் மற்றவர் காரைச்சுற்றி வருவதையும் கண்டார் உடனே தனக்கு அருகாமையில் வந்த அவரின் கையை வேகமாக எட்டிப்பிடித்தார். பாவம் அவர் துரையப்பாவை இலக்காகக் கொண்டு காரின் முன்நடந்து தாக்கிய தலைவரையும் காருக்கு பின்புறம் ஓடிவர முயன்ற துரையப்பாவையும் ஒருகணம் ஏறிட்டுப்பார்த்த கலாபதி முன்னின்றவர் தனது கையைப்பிடித்ததும் வேகமாக தனது கையை இழுத்தவாறே துப்பாக்கியின் விசையை இழுத்தார். இழுத்தகையினால் வேகமாக சுட்டதனால் இலக்குத்தவறிய இரண்டு குண்டுகள் எதிரே இருந்த பழைய சுவற்றில் பாய்ந்தன. இவர் சுதாகரித்துக்கொண்ட நிலையில் மூன்றாவது குண்டு இராஜரட்ணத்தின் கையில்பாய்ந்தது. குண்டு பாய்ததும் இராஜரட்ணம் கோவிலை நோக்கி ஓடினார். இராஜரெட்ணம் ஓடியதும் கலாபதியின் பார்வை துரையப்பாவை நோக்கித்திரும்பியது. தலைவரின் கரத்திலிருந்து சினத்தோடு புறப்பட்டகுண்டுகளின் ஆற்றாமை கண்டு பின்வாங்கி ஓடிவரமுயன்ற துரையப்பா கலாபதியை பார்த்ததும் பின்புறமும் தப்பியோட வழியின்றி முன்கூறியவாறு அப்படியே காரின் முன்கதவோரம் பதுங்கமுயன்றார். அப்பொழுதும் குண்டுகள் அவரை ஊடுருவிப்பாய்ந்தன. அந்நிலையில் நிமிர்ந்த துரையப்பா அப்படியே காருக்கு முன்பாக சில அடிகள் நடந்துவந்தார் அப்பொழுதே அவர் உயிர் பிரிந்திருக்க வேண்டும் தலைவர் பிரபாகரனின் கால்களிற்கு சிலஅடிகள் முன்பாக முகம்கவிழ மண்ணில் வீழ்ந்தார். விழுந்தவேகத்தில் எகிறித்திரும்பிய அவரது உடல் ஆகாயத்தைப் பார்த்தபடி நீட்டிநிமிர்ந்து அடங்கிப் போனது. ஏற்கெனவே காரின் பின்சீட்டில் சாரதிக்கு பின்புறத்திலிருந்த யோகநாதன் இறங்கி ஓடிவிட்டிருந்தார். நடந்த அனைத்தையும் முன்னிருந்து பார்த்து உயிர்ப்பயத்தில் செய்வதறியாது உறைந்திருந்த சாரதி ஜவகர்சிவனை தம்மிடமிருந்த வெற்றுத்துப்பாக்கியை காட்டிமிரட்டிய கிருபாகரனும் பற்றிக்கும் முன்திட்டமிட்டபடியே காரிலேறி தயாராகவிருந்தனர். இவர்களின் நோக்கமெல்லாம் துரையப்பா ஆதலால் ஓடியவர்களை தொடர்ந்துதாக்கவோ அல்லது துரத்தவோ முனையவில்லை. இதனால் விழுந்துகிடந்த துரையப்பாவை கலாபதி மீண்டும் சுடமுயன்றார். ஆனால் துப்பாக்கி வெடிக்கவில்லை. இவர்களால் உருவாக்கப்பட்ட குண்டுகளாதலால் பழைய அத்துப்பாக்கியில் எஞ்சியிருந்த இறுதிக்குண்டு எங்கோ தடக்கிவிட்டது. இந்நேரத்தில் காரின் பின் கதவைத் திறந்து வைத்திருந்த தலைவர் ‘எல்லாம் முடிந்தது ஓடிவா’ எனக் கூப்பிட்டார். இறுதியாக தலைவருக்கு அருகாமையில் காரின் பின்சீட்டில் கலாபதி ஏறி அமரவும் துரையப்பாவின் வெள்ளைநிற போஜே 404 கார் பொன்னாலை கீரிமலை வீதியில் வேகமாக ஓடத்தெடங்கியது. இவையெல்லாமே சமகாலத்தில் ஒருசிலகணங்களில் நடந்துமுடிந்தது. முன்திட்டமிட்டபடி ஆயக்கிளி வராமையினால் அனுபவமற்ற பற்குணமே காரை செலுத்திக்கொண்டிருந்தார். அவருக்கு அருகாமையில் கிருபாகரன் அமர்ந்திருந்தார். அவ்விடத்தைவிட்டு விரைவாக தப்பிச்செல்வதே இவர்களது நோக்கமாயிருந்தது. இதனால் மிகப்பதற்றத்துடன் பற்குணம் காணப்பட்டார். ஆனால் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடன் சூழலைக்கண்காணித்து செயற்படும் தலைவர்பிரபாகரன் திடீரென ஜீப் என கூறினார். எதிரே நீண்டு கிடந்த வீதியின் கண்ணிற்கு எட்டிய மறு அந்தத்தில் மிகச் சிறிதாக ஜீப்பின் வரவு தெரிந்தது. ஜீப் என தலைவர் கூறியதும் பற்குணம் ஜீப்பை பார்த்தாரோ இல்லையோ மேலும் பதட்டமுற்று காரின் பிரேக்கையும் கிளச்சையும் சேர்த்து மிதித்துவிட்டார் போலும். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தகார் இரண்டு தடவைகள் தன்னைத்தானே சுற்றியபடி அருகிலிருந்த வயலுக்குள் பின்புறமாக இறங்கியது. எதிர்பாராத இந்நிகழ்வால் அதிர்ச்சி யடைந்த அனைவரும் காரைவிட்டு இறங்கி ஓடினர் ஓடியஇவர்கள் எங்கு போகின்றோம்? எவ்வளவு தூரம் போகின்றோம்? எனத் தெரியாமலே தோட்டங்கள் வயல்கள் சிறு ஒழுங்கைகள் ஊடாக ஓடியும் நடந்தும் விரைவாக சென்றனர். இவ்வாறு சென்ற பொழுது கிருபாகரனின் தந்தையின் நண்பரொருவரை சந்தித்தனர். அவரிடம் உரையாடிய வேளையிலேயே தாம்வந்து சேர்ந்தவிடம் சித்தங்கேணி என்பதைப்புரிந்து கொண்டனர்.மேலும் வேகமாக நகர்வுகளை மேற்கொண்ட அவர்கள் கண்ணில் தென்பட்ட முதல் பஸ்சிலேறி சுன்னாகம் பஸ்நிலையத்திற்கு வந்துசேர்ந்தனர். அங்கிருந்து யாழ்நகருக்கான 769ஆம் இலக்கபஸ்சில் பயணம்செய்து இடையே இணுவிலில் பற்றிக்கும் கிருபாகரனும் இறங்கிக் கொள்ள தலைவரும் கலாபதியும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர். அப்பொழுது நேரம் பிற்பகல் 6மணியை தொட்டிருந்தது. பஸ்சிலும் பஸ் நிலையத்திலும்; ‘துரையப்பாவை சுட்டாச்சு’ என ஏதோ எதிர்பார்த்த நிகழ்சி நடந்து விட்டதுபோல் துரையப்பா கொலை பற்றியே எங்கும் பேச்சாக காணப்பட்டது. அடுத்தநாள் பத்திரிகைமூலமே தாம் காரைவிட்டு ஓடிய இடம் கீரிமலைக்கு அண்மையில் உள்ள கருகம்பனை என்பதையும் எதிரேவந்த ஜீப்பில் யாழ்ப்பாண பொலிஸ் அதிபரான ஜே.டீ.எம்.ஆரியசிங்கா தனது குடும்பத்தினருடனும் வேறு சில உயரதிகாரிகளுடன் சேந்தான்குளத்தில் இருந்து வந்து கொண்டிருந்ததையும் போராளிகள் அறிந்துகொண்டனர். 1971 மார்ச் 11ந்திகதி யாழ் மெயின்வீதி பிறிமியர்கபே டிஸ்கோஅரங்க திறப்புவிழாவின் போது மாணவர்பேரவையின் பொன்.சிவகுமாரன் மற்றும் பொன்.சத்தியசீலனால் வைக்கப்பட்ட குண்டில் அதிஸ்டவசமாக உயிர் தப்பியவர். மீண்டும் 1972 டிசம்பர் 19இல் கொய்யாத்தோட்டத்தில் அமைந்திருந்த இவரது வீட்டின்மீது மாணவர்பேரவையைச் சேர்ந்த திசைவீரசிங்கம் மற்றும் இராஜன் போன்றோர் குண்டுவீசியபோது வீட்டில் இல்லாததால் துரையப்பா தப்பித்துக்கெண்டார். 1973- 1974 காலப்பகுதிகளில் குறிப்பாக பொன்.சிவகுமாரனின் தியாகமரணத்தின்பின் தனது மரணபயத்தை அகற்றி சாதாரணமாக உலாவந்தவர். பொன்.சிவகுமாரனின் ஒருவருட நினைவுதினமும் ஒருமாதமும் கடந்திருந்த நிலையில் அவரைப்போலவே ஆயுதப்போரில் நம்பிக்கை கொண்டு அதனையே தமது வழியாக வரித்துக் கொண்ட தேசியத்தலைவர் பிரபாகரனும் அவரது நண்பனும் முதன்நிலைப் போராளியுமான கலாபதியும் துரையப்பாவின் துரோகப் பயணத்திற்கு முடிவு கட்டினர். துரையப்பாவின் மரணச்செய்தி குடாநாட்டில் அங்குமிங்குமாக ஓடும் ஊவுடீ பஸ்பிரயாணிகள் மூலம் பலஇடங்களிற்கும் எடுத்துச்செல்லப்பட்டு துரிதகெதியில் எங்கும்பரவியது. மதியம் 1.05இற்கு துரையப்பா சுடப்பட்ட செய்தி வல்வெட்டித்துறைக்கு மதியம் 2.30இற்கு தெரிந்துவிட்டது. எதிர்பார்த்து நின்ற நண்பர்களும் வல்வெட்டித்துறை சனசமூகநிலையத்தில் இருந்த சிவகுமாரனின் படத்தினை வணங்கியதுடன் அக்காலத்தில் வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்திருந்த ‘கலாநிதி ஸ்ரோர்’ கடையில் வாங்கிய இனிப்புகளையும் குளிர்பானங்களையும் மக்களிற்கு வழங்கி மகிழ்ந்தனர். விடயம் அறிந்தமக்களும் தாமும் அம்மகிழ்ச்சியில் கலந்து கொண்டு சந்தோசஆரவாரம் புரிந்து தமது மகிழ்வினை வெளிக்காட்டினர். ஒருமனிதனின் இறப்பில் ஏனையமனிதர்கள் மகிழ்படைவது மனிதநேயமற்றதே. இதில் சந்தேகமில்லை. ஆனால் துரையப்பாவின் முடிவு தனி ஒருவனின் இறப்பல்ல. அதனை ஈழத்தமிழரின் விடுதலைப்போர் வரலாற்றின் பிறப்பென்றே கொள்ளலாம். அதுவரை ஈழத்தாயின் வயிற்றில் கருவாகி உயிராகி அங்காங்கே உதைத்துக்கொண்டிருந்த ஆயதப்போராட்டம் என்னும் குழந்தை துரையப்பா மீது தீர்க்கப்பட்ட வேட்டொலிகளுடன் தாயின் கருப்பையை கிழித்துக்கொண்டு வரும் குழந்தையைப்போல் தமிழ்ஈழ மண்ணில் தவழ ஆரம்பித்தது. மனிதயேமற்ற சிங்கள அரசுகளினால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ்மக்களின் ஆன்மாவின்மீது வஞ்சினம்கொண்ட அன்றையஇளைஞர்களினால் செய்துகொள்ளப்பட்ட உறுதிமொழியின் அடையாளம்தான் துரையப்பாவின் மரணம். 27.07.1975மாலை 06.00 மணிக்கு இலங்கை வானொலிச் செய்தி யிலும் 06.30மணிக்கு தமிழ்நாடு மாநிலச்செய்தியிலும் துரையப்பாவின் மரணம் செய்தியாக்கப்பட்டது. திருச்சி பொன்நகரில் அமைந்திருந்த போராளிகளின் தளத்தில் கூடியிருந்த போராட்டமுன்னோடிகளிடையே ஆயுதக்குழுவின் முதல்தலைவரான பெரியசோதி கூறினார் ‘யாரும் இனி ஊகங்களை கதைக்காதீர்கள். ஆம் துரையப்பாவின் மரணத்தின்பின் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போர் ஊகங்களின்றி உறுதியானநிலையில் பிரபாகரன் காட்டியவழியில் வேகமாக நகரத்தொடங்கியது.
  6. போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5 துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்த குமிழ்முனைப் பேனாவினால் T.N.T என எழுதிவிட்டு அதனைமேலும் அழகுபடுத்தும் முயற்சியில் கலாபதி ஈடுபட்டிருந்தார். T.N.T என்பது ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற தமிழ்ப்பதத்தினை நேரிடையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்பதால் உருவாகும் TAMIL NEW TIGERS என்பதன் முதலெழுத்துக்கள் இணைந்த குறியீடாகும். 1974 இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பி பிரபாகரன் சந்தித்துக் கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ. இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்த இடமாக கொண்ட இவர் 04.05.1926 இல் பிறந்திருந்தார். அரச ஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனி அரசு வேண்டும் என்பதற்காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் தீவிர அகிம்சைப் போராளியாக முன்முகம் காட்டிய இவர் 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர்சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு.ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். அத்துடன் 1965இல் அதன் இணைப்பொதுச் செயலாளராக கடமையாற்றினார். தமிழரசுக்கட்சியின் தீவிரம் போதாது என கொள்கைரீதியாக முரண்பட்டு 1969இல் திரு எ. நவரத்தினத்தால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்சுயாட்சிக்கழகத்தில் இணைந்து அதன் தீவிர விசுவாசியாகவும் விளங்கினார்;. 1970இன் இறுதியில் தோன்றி தமிழ்இன உணர்வுடன் இளைஞர்களை ஆயுதப்போரிற்கு அணிதிரட்டிய தமிழ்மாணவர் பேரவையினருக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைப்புரிந்து வந்தார். 1972இன் இறுதியில் தமிழ் நாட்டுத்தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியா சென்றிருந்த தமிழர்கூட்டணியின் அன்றையதலைவரான செல்வநாயகம் தளபதி அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு முன்பாகவே அங்குசென்று அவர்களின் பயண ஏற்பாட்டை புரிந்த செயல் வீரர் இவராவர். 1973 தை 15இல் நடந்த மண்கும்பான் குண்டுவெடிப்பு முயற்சியைதொடர்ந்து மாணவர் பேரவையின் தலைவர்; சத்தியசீலன் உட்பட அதன் பெரும்பாலான அங்கத்தவர்களும் அவர்களிற்கு ஆதரவளித்த பலரும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வகையில் பொட்டாசியம் என்னும் இராசயனப்பொருளை மாணவர் பேரவையினருக்கு கொழும்பில் இருந்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவரையும் கைதுசெய்ய பொலிசார் தேடியலைந்தனர். இதனால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற இராசரத்தினம் அங்கேயே தங்கநேர்ந்தது. தான்சார்ந்த கட்சியினரால் கைவிடப்பட்டு ஆஸ்துமாநோயினால் வருந்திய நிலையில் மிகுந்த பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் சென்னையில் வாழ்ந்த இவர் திரு இரா. ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி போன்றவர்களின் தயவில் தனது காலத்தைக் கழித்துவந்தார். ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தில் நாட்டம்கொண்ட குழுவினர்கள் பலரும் 1972ஆம் ஆண்டின் பல்வேறு நிலைகளைக் கடந்து 1973 — 1974 இன் இறுதிக் காலப்பகுதிகளில் சென்னையிலேயே கழிக்கநேர்ந்தது. 1974ஆகஸ்டில் பெரியசோதி தங்கத்துரை நடேசுதாஸன் என்பவர்களுடன் வேதாரணியத்திலிருந்து சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் கோடம்பாக்கத்திலேயே தங்கியிருந்தார். ஒரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் பல்வேறுகுழுக்களாக பிரிந்து செயல்பட்டதை கண்ட வயதிலும் அனுபவத்திலும் மூத்த இராசரெத்தினம் மிகுந்த வேதனைப்பட்டார். இதனால் ஈழவிடுதலைக்காக போராடமுன்வந்த எல்லோரையும் இணைத்து தனியான ஒரு விடுதலைப்படையை உருவாக்க வேண்டுமென்ற நன் நோக்கில் சென்னையில் தங்கியிருந்த இளைஞர்களிடம் தனது பரப்புரையை மேற்கொண்டுவந்தார். தமிழரின்படைக்கு தனியான நிறம் உடை கொண்டதான இராணுவக் கட்டமைப்பை பற்றியும் தனது நோக்கில் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களை சேர்க்கவேண்டுமென்ற தனது உள்ளக்கிடக்கைகளையும் மேற்படி இளைஞர்களிடம் விதைக்கமுயன்றார். இதனைவிட இனவிடுதலை சம்பந்தமான பலநூல்களை படித்தும் சேகரித்தும் அவைபற்றி மேற்படி இளைஞர்களிடம் கூறிவந்தார். The History of Thamiraparni எனும் ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் நூலொன்றையும் இக்காலத்தில் இவர் எழுதிவந்தார். (இவரது மறைவின்பின் இப்புத்தகம் இரா.ஜனார்தனத்தினால் வெளியிடப்பட்டது) இதன்மூலம் இலங்கையின் அல்லது ஈழத்தின் புரதானபெயரான ‘தாமிரபரணி’ என்ற பெயரை இவர் உள்வாங்கிக்கொண்டுள்ளார் எனலாம். ஏனேனில் 1974யூன் 1ந்திகதி தான் வாசித்ததாக தனதுடயரியில் இவர் குறிப்பிட்டிருக்கும் Notices of South India From Magesthens To Mahun என்னும் நூலில் ஈழத்தின் மூத்தகுடியினர் தமிழர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் இருந்ததாகவும் அதைக்கண்டு தான் மகிழ்வடைவதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு Magesthens (மொகஸ்தனிஸ்) என குறிப்பிடப்பட்டுள்ளவர் கிறிஸ்துவிற்குமுன் மூன்றாம்நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரகுப்தமௌரியரின் அரசசபையில் கிரேக்கதூதராக இருந்தவர். கிரேக்க மொழியில் இவர் எழுதிய அக்காலகுறிப்புகளில் இலங்கையை ‘தப்ரபேன்’ எனக் குறித்துள்ளார். இதனையே பாளிமொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் ‘தம்பபண்ணி’ என குறிப்பிடுகின்றமையும் இங்கே நோக்கத்தக்கது. ஈழம் என முழுமையான பெயரைக் குறிப்பிடும் தமிழ்இலக்கிய சான்று கிபி இரண்டாம்நூற்றாண்டில் கரிகாலன் காலத்தில் எழுதப்பட்ட ‘பட்டினப்பாலை’ எனும் நுலாகும். மேற்படியுள்ள பலகாரணிகளால் ஈழம் என்பதன் முந்தைய பெயரான தாமிரபரணி என்னும் பெயரை ஈழத் தமிழர்களின் தனிநாட்டிற்கான பெயராக திரு.ஆ. இராசரத்தினம் எடுத்துக் கொண்டார். ‘புலி’ என்பது தமிழர்களின் அரசவம்சத்தில் முதன்மையானவர்களாக கருதப்படும் சோழர்களின் இலச்சினையாகும். இத்தகைய தாமிரபரணி மற்றும் புலி எனும் கருத்துப் பொதிந்த சொற்களை இணைத்து ‘தாமிரபரணி புதிய புலிகள்’ என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார். இவர் தனது 1974செப்டெம்பர் 04ந் திகதிக்கான நாட்குறிப்பில் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும்பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளார்த்தத்தை விளக்கித் தங்கத்திடம் கூறினேன். எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தங்கம் எனக்குறிப்பிடப்படுபவர் யாரிடமும் மனம் கோளாமல் நடப்பவரும் தங்கண்ணா என தலைவர் பிரபாகரனினால்; அழைக்கப்பட்ட போராட்ட முன்னோடியான ‘தங்கத்துரையாகும். தாமிரபரணி அல்லது தாமிரபர்ணி புதிய புலிகள் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்ககுறியீடு; T.N.T என்பதேயாகும். 1974ஆகஸ்டில் சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் இராசரத்தினமும் மனம்திறந்த நட்புடன் ஆளையால் புரிந்துகொண்டு பழகிவந்தனர். தந்தைமகன் போன்ற வயதுடன் காணப்பட்ட இவர்கள் தமது பசிபட்டினியை மறந்து கன்னிமாரா நூல்நிலையத்தில் பலமணிநேரங்களை செலவிட்டனர். ஈழத்தமிழர்களிற்கான விடிவு தனிநாடு தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உலகவரலாறு இந்தியவரலாறு இலங்கை வரலாறு எனப் பலவரலாற்று நூல்களில் மூழ்கிய இவர்கள் அங்கிருந்தே தமக்கான மாற்று (இயக்க)ப் பெயர்களையும் இக்காலத்தில் தேடிக்கொண்டனர். தலைவர் தனது பெயராக சோழமன்னன ‘கரிகாலன்’ என்பதையும் இராசரத்தினம் ஈழமன்னன் எல்லாளன் (ஈழாளன்) என்பதனையும் தமது மாற்றுப்பெயர்களாக வகுத்துக் கொண்டனர். இத்தகைய இவரின் தனிநாடு பற்றிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட தலைவரின் மனத்திலும் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்றபெயர் விருப்பத்திற்குரியதாகியது. ஏனெனின் எப்பொழுதும் தீவிரவாத செயற்பாடுகளில் முன்னின்ற தலைவரால் நேசிக்கப்பட்ட வெடிமருந்தின் பெயரும் T.N.T என்பதாகும். மேற்படி இரண்டு பெயர்களும் எவ்விதமாறு பாடுமின்றி T.N.T எனவருவதனால் தலைவரால் இப்பெயர் பெரிதும் விரும்பப் பட்டது. இதன்வழியில் தமிழின உணர்வில் உந்தப்பட்டு வழிநடந்த தலைவர்; பிரபாகரன் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத இயக்கத்தை உருவாக்கியபோது தாமிரபரணி என்னும் பிரதேசத்தின் பெயரால் தியாகி இராசரத்தினத்தால் உருவாக்கப்பட்ட பெயரினை அவரின் மனம் கோணாமல் அப்படியே ஆங்கிலத்தில் T.N.T என்பதன் உருவமும் சிதைவுறாமல் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என இனத்தின் பெயரால் தான் உருவாக்கிய இயக்கத்திற்கு பெயராக்கிக்கொண்டார். இதனையே துரையப்பாவை எதிர்பார்த்து தவைர் பிரபாகரனுடன் காத்திருந்த முதன்நிலைப் போராளியான கலாபதி T.N.T என எழுதிவைத்தார். T.N.T என்ற பெயரினை அப்பழுக்கின்றி முன்மொழிந்த இராசரெத்தினம் அப்பெயர்கொண்ட அமைப்பினால் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். என்பதை அறிந்து மகிழ்வடைந்த நிலையில் 19.08.1975 இல் ஆஸ்துமா நோயின் தாக்கத்தால் சென்னையில் இயற்கையெய்தினார். சென்னையில் பரிதாபத்திற்கு உரியவராக வாழ்ந்த அவரை தமிழ்நாடு சென்ற வேளைகளிலெல்லாம் சந்திக்க மறுத்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள் தியாகவாழ்வு வாழந்த அவர் மறைந்தபின் ‘ஈழத்து நேதாஜி’ எனப்பட்டமளித்து தமக்குரிமை கொண்டாடினர். மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழஙகிய இராசரத்தினத்தை 1990இல் அவருடைய சொந்த இடமான சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழ்ஈழத்தின் முதலாவது ‘மாமனிதர்’என பட்டமளித்து தலைவர் பிரபாகரன் பெருமைப்படுத்தினார்.
  7. போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 4 1975யூலை 20திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதியாக துரையப்பாவின் நடமாட்டங்களை கிருபாகரன் உறுதிசெய்தநிலையில் அடுத்துவரும் 27.7.1975 ஞாயிற்றுக்கிழமை அன்று துரையப்பாவின் மீதானதாக்குதலை நடத்துவது எனத்தீர்மானித்தார். இந்நிலையில் அடிக்கடி கலாபதியையும் நண்பனையும் சந்தித்து தாக்குதலிற்கான திட்டங்களை வகுக்கஆரம்பித்தார். இவ்வாறு ஒருநாள் தலைவரும் கலாபதியும் நெற்கொழு மைதானத்திற்கு அருகாமையில் தாம்செய்யப்போகும் தாக்குதலைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் சிலநாட்களிற்கு முன்பாக விளக்கமறியலில் இருந்து விடுதலையாகி ஊருக்கு வந்திருந்த குட்டிமணி அவ்விடத்திற்கு வந்தார். எதிர்பாராமல் இவர்களிருவரையும் கண்டவுடன் ‘கள்ளப்பயல்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்திருக்கிறியள் என்னமோ ஆ…..ஆ’ என நகைச் சுவையுடன் கூறியவாறு சென்றார். பாம்பின்கால் பாம்பு அறியுமல்லவா!….யூலை 27ந்திகதி காலை 8மணிக்கு யாழ்பஸ்நிலையத்தில் கிருபா கரனையும பற்றிக்iயும் சந்திப்பதாக கூறிவிட்டு 26.07.1975 சனிக்கிழமை நண்பகலுக்கு சற்றுப்பின்னாக வல்வெட்டித்துறைக்கு வந்த தலைவர் கலாபதியிடம் தனது திட்டத்தைக்கூறி அடுத்தநாள் தாம்நடத்த இருந்த தாக்குதலிற்கான இறுதித்தயாரிப்பு வேலைகளில் இறங்கினார். பலநாட்கள காத்திருந்த இலக்குத்தயார் ஆனால் தாக்குதலிற்குத் தேவையான குண்டுகள்தான் போதாது. ஆனால் கலாபதியின் தொழில்நுட்பத் திறமையில் தலைவர்பிரபாகரன் எப்பொழுதும் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். தாம்முன்னரே கொள்வனவு செய்துவைத்திருந்த 38ம் இலக்க ரக துப்பாக்கிக்கான வெற்றுக்குண்டுகளினை நிரப்பி அவைகளைக்கொண்டே துரையப்பாவைத் தாக்கும் முடிவினை இருவரும் செயற்படுத்த முனைந்தனர். அதற்கேற்ப தம்மிடம் இருந்தபழைய வேட்டைத்துப்பாக்கிக் குண்டுகளின் உள்ளீடுகளான வெடிமருந்துகளினை 38இலக்க கைத்துப்பாக்கி குண்டுகளில் நிரப்புவதன் மூலம் அவைகளை பாவிக்கக்கூடிய குண்டுகளாக மாற்றமுடியும் என நம்பினர்.யாழ்ப்பாணக்குடாநாடே அன்று இரவு அமைதியாக உறங்கிக் கிடந்தது. ஆனால் தலைவரும் கலாபதியும் நண்பனும் மட்டுமல்ல காத்தலிங்கம் மகேந்திரதாஸ் என்ற ஆயக்கிளியும்கூட அந்த இரவு உறங்கவில்லை. ஏனெனின் ஆயக்கிளியின் பொறுப்பிலிருந்த காணியின் கார்கராஜ் உடன் இணைந்திருந்த அறையிலேயே பிரபாகரனும் கலாபதியும் அடுத்தநாள் தாக்குதலுக்கான குண்டினைத தயார்செய்து கொண்டிருந்தனர். விளாம்பத்தையென முன்அத்தியாயங்களில் விபரிக்கப்பட்ட காணியின் வடக்குப் பகுதியினை ஆயக்கிளியின் சகோதரன் முருகுப்பிள்ளை விலைகொடுத்து வாங்கியிருந்தார். அதற்குரிய சுற்றுமதிலை அமைத்ததுடன் கார்க்கராஜ் உடன்கூடிய ஒருஅறையையும் அவ்விடத்தில் அமைத்து தனது சகோதரனா னான ஆயக்கிளியிடம் அக்காணியை ஒப்படைத்திருந்தார். இதனால் ஆயக்கிளியின் நண்பர்களும் மற்றும் பல இளைஞர்களும் சுதந்திரமாக தமது பொழுதுகளை கழிப்பதற்காக அவ்விடத்தில் கூடுவர். சில இளைஞர்கள் இரவில் அங்கேயே படுத்துஉறங்குவதும் உண்டு. மேற்படி இடத்தினையே அன்றைய இரவில் துப்பாக்கிக்குண்டுள் தயாரிப்பதற்காக தலைவரும் கலாபதியும் நண்பனும் பயன்படுத்திக்கொண்டனர். தாக்குதலின் பின் துரையப்பாவின் காரினைப் பயன்படுத்தி அவ்விடத்தைவிட்டு தப்பிச் செல்வதே இவர்களின் திட்டங்களிலொன்றாகும். ஆனால் பிரபாகரனுக்கோ அல்லது கலாபதிக்கோ கார் ஓட்டத்தெரியாதிருந்தது. பற்றிக் இன்னமும் பழக்கநிலையிலேயே இருந்தார். ஆனால் ஆயக்கிளி இவரைவிட முன் அனுபவமுள்ள சாரதியாக காணப்பட்டார். இதன் காரணமாக அடுத்தநாள் தாம் செய்யப்போகும் தாக்குதலில் ஆயக்கிளி யையும் இவர்கள் தம்முடன் இணைத்துக்கொண்டிருந்தனர். முன்பு ஒருதாக்குதல் முன் முயற்சிக்காக வல்வெட்டித்துறை ‘ஈஸ்வரி நகை மாளிகை’ உரிமையாளரான புவனேஸ்வரராஜாவுடைய காரினை கையகப்படுத்தி யாழப்பாணம் கொண்டுசெல்ல முயன்றனர் அப்பொழுதும் ஆயக்கிளியே சாரதியாக நியமிக்கப்பட்டிருந்தார். பலாலி இராணுவமுகாமிற்கு அண்மையில் பெற்றோல் போதாமையினால் கார் நின்றுவிடவே நள்ளிரவு வேளையிலும் சிறுதுதூரம் தள்ளிச்சென்றபின்னர் வசாவிளான் வீதியில் அக்காரினை சமயோசிதமாக இவர்கள் கை விட்டுச்சென்றிருந்;தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இம்முறையும் கார் ஓட்டுவதில் ஆயக்கிளிக்கு ஒருசிக்கல் காணப்பட்டது. பழைய சோமசெற் காரைமட்டுமே இலாவகமாக ஓட்டத்தெரிந்த ஆயக்கிளிக்கு துரையப்பாவின் புத்தம் புதிய போஜோ 404 காரில் கியர் எங்கிருக்கும் என்பதே தெரியாது. இதனால் தமக்கு எப்பொழுதும் உதவக்கூடிய ‘பவன்’ என்னும் அயலிலிருந்த நண்பனிடம் போஜோ ரக காரினை எவ்வாறு இயக்குவது எனும் ஆலோசனைகளையும் கேட்டுப்பெற்றுக்கொண்டனர். இரவிரவாக தம்மிடம் இருந்த 12வெற்றுக்குண்டுகளையும் புதிய குண்டுகளாக உருமாற்றி இரண்டு கைத்துப்பாக்கிகளிலும் ஆறு ஆறாக நிரப்பிக் கொண்டனர். சிறுகச்சிறுக மிகநுணுக்கமாக குண்டுகளினை நிரப்பிமுடித்து பின்னிரவில் உறங்கமுயன்றபோதும் தலைவராலும் கலாபதியாலும் உறங்கமுடியவில்லை. விடிந்ததும் தாம் நடத்தப்போகும் ‘துரோகத்தினை துடைக்கும்’ செயலினைச்சுற்றியே அவர்களின் சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தன. உறங்காதஇரவு விடிந்ததும் காலை ஆறுமணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வல்வெட்டி வன்னிச்சிஅம்மன் கோவிலடிக்கு இருவரும் நடந்துவந்தனர். இவர்கள் இரவு இருந்த ஆயக்கிளியின் காணியில் இருந்து மிகக் கிட்டிய தூரத்திலேயே வல்வெட்டித்துறை ஆலடிபஸ்தரிப்பிடம் அமைந்தி ருந்தது. இப்பஸ்தரிப்பிடத்துடன் இணைந்தே தலைவர் பிரபாகரனுடைய வீடும் காணப்பட்டது. ஆனால் ஆலடிபஸ்தரிப்பிடத்தில் மட்டுமல்ல வல்வெட்டித்துறையின் வேறு எந்த பஸ்தரிப்பிடத்திலும் இவர்கள் பஸ்சிற்காக காத்திருக்கமுடியாது. ஏனெனின் இவ்வாறு காத்திருக்கும் வேளையில் ஒருவரை ஒருவர் நன்கு அறிமுகமான ஊர் மக்களின் பார்வையில் சிக்கிவிடலாம் அதன்மூலம் எங்கு செல்கின்றீர்கள்? எனும் கேள்வி எழும் என்பதாலேயே ஒருமைலிற்கு அதிகமானதூரத்திற்கு இவர்கள் அன்று நடந்து சென்றிருந்தனர். 1972இன் ஆரம்பம்முதல் மாணவர்பேரவையின் செயற்பாடுகளில் அதிக ஈடுபாட்டுடன் செயற்படத்தொடங்கிய பொழுதே பிரபாகரன் வல்வெட்டித்துறை என்ற சுயவட்டத்திற்கு வெளியே வரத்தொடங்கினார். அப்பொழுதே ஊரின் சனநடமாட்டமுள்ள பகுதிகளைத்தவிர்த்தும் ஊருக்கு வெளியே இருந்தும் தனது பயணங்களை மேற்கொள்வதில் அவர் திடமாயிருந்தார். அதுபோலவே அன்றும் வல்வெட்டி வன்னிச்சிஅம்மன் கோவிலடிக்குவந்து அங்கிருந்தே யாழ்ப்பாண பஸ்நிலையம் செல்ல முடிவெடுத்தார். இவர்கள் பஸ்நிலையம் வந்து ஒருபஸ் சென்றபின்பும் இவர்களைத் தொடர்ந்து தன்னுடைய காணியைப்பூட்டிவிட்டு வருவதாகக்கூறிய ஆயக்கிளி இன்னும் வந்து சேரவில்லை. மேலும் ஒருபஸ் சென்றபின்னும் ஆயக்கிளி வராமல் போகவே முன்வைத்தகாலை பின்வைக்கமனமின்றி அடுத்துவந்த 751 இலக்கபஸ்சின் மூலமாக காலை எட்டுமணியளவில் யாழ்நகரம் வந்துசேர்ந்தனர். இவர்கள் பஸ்நிலையத்திற்குவந்த சிறிதுநேரத்திலேயே முன் திட்டமிட்டவாறு கிருபாகரனும் பற்றிக்கும் இவர்களை வந்து சந்தித்தனர். தேவையின்றி நேரத்தைக் கடத்தாமல் பஸ்நிலையத்திற்கு எதிரிலிருந்த ‘அம்பாள் கபே’ என்னும் உணவுச்சாலையில் நால்வரும் காலைஉணவாக இடியப்பம் உண்டனர். நண்பகல் 12மணிக்கு துரையப்பா கோவிலிற்கு வருவதால் அதற்குமுன்பாக அவ்விடத்திற்கு சென்றுவிடவிரும்பினர். அதற்கேற்றாப்போல் பொன்னாலை செல்லும் பஸ்நிலையத்திற்குச்சென்று தமக்குரிய பஸ்சின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். பஸ்சிற்காக காத்திருந்த இவ்வேளையில் இவர்களிடம் இருந்துபிரிந்துசென்ற கிருபாகரன் பஸ்நிலையத்திற்கு அண்மையில் இருந்த ஆடைவிற்பனை நிலையத்திற்கு சென்று மேலாடை(சேட்) மடித்துவரும் கடதாசிஅட்டை ஒன்றைப்பெற்றுவந்தார். கழிவென குப்பையில்ப்போடும் அந்தஅட்டையை யாரோ தேடிவந்ததை அறிந்த அவ்வியாபாரிக்கும் சிறுஆசை துளிர்விட்டது போலும். எறியும் அந்த அட்டையை 25சதவிலைக்கு கிருபாகரனிடம் கொடுத்திருந்தார். பாவம் அந்த அப்பாவி காலைநேரத்தில் ஏதோ வெற்றிகரமாக தனது வியாபாரத்தை தொடங்கியதாக எண்ணி மகிழ்வடைந்திருப்பார். ஆனால் அந்தஅட்டையை வேண்டுபவர் யார்? எதற்காக வெண்டுகின்றார் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது. ஆனால் செப்டெம்பர் மாதத்தில் நடந்த பஸ்தியாம்பிள்ளையின் விசாரணையின் போதுதான் அந்த ஈனச்செயலிற்கான விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது. தமதுதிட்டங்கள் ஒவ்வொன்றையும் நிரையாக செயற்படுத்திய அவர்கள் முற்பகல் பதினொருமணியளவில் ஊர்காவற்துறை கீரிமலை பிரதானவீதியில் அமைந்திருந்த பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலடிக்கு வந்துசேர்ந்தனர். என்றும் போலவே அன்றும் கோவிலும் கோவில்சுற்றாடலும் அமைதியாக காணப்பட்டன. கடலை சோடா என சிறுவியாபாரம் செய்யும் கண்ணகை (கண்மணி) என்ற மூதாட்டிஒருவரின் சிறுவிற்பனைச்சாலையைத் தவிர வேறெவ்வித விற்பனைச்சாலைகளும் அங்கிருக்கவில்லை. இடையிடையே கோவிலுக்கு வந்துபோவோர் தவிர வேறு எவ்வித சனநடமாட்டமுமின்றி அப்பகுதி அமைதியாக காணப்பட்டது. கோவிலின் முன்வீதியின் இடதுபுறம் தேர்க்கொட்டகையுடன் கூடிய தேர்மூட்டியும் வலதுபுறம் வைரவரின் வழிபாட்டிடமும் அமைந்திருந்தன. கோவிலின்; நேரெதிரே வடக்குநோக்கிய வீதியின் வலதுபுறமாக காணப்பட்ட சிறியமடத்தில் நால்வரும் ஆவலுடன் காத்திருந்தனர். இவர்களில் கிருபாகரன் மட்டும் வரப்போகும் காரினை எதிர்பார்த்து இடையிடையே வீதியில் அங்குமிங்குமாக நடைபோட்டுக்கொண்டிருந்தார். நண்பகல் 12மணியளவில் கார்வரும் நேரமாதலால் அனைவரும் பரபரப்பாகினர். ஆயினும் இவர்கள் எதிர்பார்த்ததுபோல் கார் வரவில்லை. எத்தனைமணிநேரம் காத்திருந்தாலும் தமது நோக்கத்தை நிறைவேற்றாமல் அன்று திரும்புவதில்லை என்னும் உறுதியுடன் கார்வரும் தென்மேற்குத் திசையில் வைத்தவிழிவைத்தவாறு பார்த்திருந்தனர். நண்பகல் வெய்யில் வேறு கொதித்துக்கொண்டிருந்தது. காலையில் சாப்பிட்ட உணவின் பின் யாரும் எதையும் சாப்பிடவில்லை ஆனால் யாருக்கும் பசிக்கவில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் துரையப்பாவின் காரைப் பார்ப்பதிலேயும் அவரைத்தாக்கும் சிந்தனையிலுமே கழிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் வீதியில் நடமாடிக்கொண்டிருந்த கிருபாகரன் என்ன நினைத்தாரோ தலைவரிடம் அனுமதி பெற்றதுடன் பற்றிக்கையும் உடனiழைத்துக் கொண்டு கோவில்வீதிக்குச் சென்றார். அங்கு கடலை மற்றும் சோடா எனபவற்;றை விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியிடம் இருவரும் சோடா வேண்டிக்குடித்துவிட்டு காரின்வரவை எதிர்பார்த்து அசையாமல் காத்திருக்கும் பிரபாகரனுக்கும் கலாபதிக்கும் சோடா கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் இவர்களிருவரின் தாகமெல்லாம் துரையப்பாவைத் தாக்குவதிலேயே இருந்ததனால் சிரத்தையின்றிக் குடித்துவிட்டு தமது நோக்கத்தினை நிறைவேற்றும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
  8. போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 3 1970 – 1977 காலப்பகுதியில நாட்டினைத் தன்னிறைவு நோக்கிய பாதையில் கொண்டுசெலுத்திய சிறிமாவோ பண்டாரநாயக்கா என்.எம்.பெரேரா ஹெக்டர் ஹொப்பேக்கடுவா போன்றோர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பலபொருட்களிற்கும் தடைவிதித்திருந்தனர். அதையும்மீறி இறக்குமதி செய்யமுற்படும் பொருட்களிற்கு அதிகவரியினை விதித்து உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவித்துவந்தனர். இதனால் அரிசிபோன்ற அத்தியாவசியப்பொருட்களிற்கே பெரும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொருட்களைப் பங்கீடுசெய்வதற்காக நாட்டின் பலபகுதிகளிலும் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வளர்தெடுக்கப்பட்டிருந்தன. இவைகள் கூட்டுறவுசங்கம் என்ற பெயரில் அரசதாபனங்கள் போன்று செயற்பட்டன. அன்றைய பொருளாதார நிலையில் வங்கிகளைவிட அதிகளவு பணம் பரிமாறும் நிறுவனங்களாக இவைவிளங்கின. குறிப்பாக கூறினால் யாழ்ப்பாண குடாநாட்டில் பணம்புரளும் ஸ்தாபனங்களாக இவையேவிளங்கின. இதனைவிட நகரங்களிலிருந்த வங்கிகளைப்போலன்றி சிறுசிறுகிராமங்களில்கூட இவைகள் கிளைவிட்டு பரவியிருந்தன. இதனால் ஒவ்வொருகிளையிலும் சேரும்பணத்தினை திரட்டி தாய்ச்சங்கத்தில் ஒப்படைக்கும் பணியிலும் சிலர் நியமிக்கப்பட்டு இருந்தனர். வங்கிகளில்சேர வைப்பிலிடப்படும் இத்தொகைப்பணம் கொழும்பில் அரச மற்றும் கூட்டுத்தாபனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களின் விலைக்குமாற்றாக வழங்கப்படும். இப்பணம் சிறுசிறு உற்பத்தியாளர்கட்கு அவ்வப்பகுதி கூட்டுறவுசங்கங்களின் மூலம் கடனாகவும் வழங்கப்படுவதுமுண்டு. இவ்வகையில் 1970 ஆரம்பகாலங்களில் உருவாகிய போராளிக்குழுக்களின் பார்வையில் இவை இலகுவாக சிக்கிக்கொண்டன. 1973இல் வல்வெட்டித்துறை கெருடாவில்வீதியில் வைத்து பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட 36.000 ரூபாயும் 1974 நவம்பர் மாதத்தில் தெல்லிப்பளை கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான பணம் 107000.00 ரூபாய் மற்றும் காசோலைகளும் இளைஞர்களினால் பறித்தெடுக்கப்பட்டிருந்தன. இதுபோலவே 1975மே மாத இறுதியில் அளவெட்டி கூட்டுறவுச்சங்கத்திற்கு உரிய சுமார் 37.000 ஆயிரம்ரூபாய் பிரபாகரன் தலைமயிலான ‘புதிய தமிழ்ப்புலிகள்’ மற்றும் செட்டி குழுவினரால் பறித்தெடுக்கப்பட்டது. இத்தாக்குதல் நிகழ்விற்கான தரவுகள் பற்றிக்கால் எடுக்கப்பட்டன. அதேபோல் இந்த முன்முயற்சிக்கான கார் சாவகச்சேரியில் இருந்து பிரபாகரன் கலாபதி பற்றிக் அவருடைய நண்பனான இன்பம் என்போரால் பறித்து வரப்பட்டிருந்தது. திருநெல்வேலியில் அனுபவமிக்க செட்டிசாரதியாக அமர்ந்து கொள்ள அதுவரைசாரதியாக இருந்த பற்றிக் வேவுக்காரராக மாற்றப்பட்டு வெற்றிகரமான இப்பணப்பறிப்பு நடைபெற்றது. இவ்வாறு திரட்டப்பெற்ற பணத்தினைவைத்து துரையப்பாவை குறிவைப்பதில் தலைவர்பிரபாகரன் திட்டங்களை வகுக்க முற்;ப்பட்டார். ஆனால் செட்டியுடைய எண்ணமெல்லாம் மேலும் பணத்தினை தேடுவதாகவே அமைந்திருந்தது. செட்டியை தம்முடன் இணைத்துக்காள்ள மறுத்த பெரிய சோதி மற்றும் தங்கத்துரையின் கூற்றுக்கள் உண்மையானநிலையில் செட்டியுடன் கருத்து வேறுபாடுகொண்;ட தலைவர்பிரபாகரனும் பிரிந்து தனியாக செயற்படவாரம்பித்தார். அளவெட்டிபணப்பறிப்பு சம்பவத்தின்பின் செட்டியுடன் முரண்பட்ட இன்பம் இக்குழுவினரிடமிருந்து ஏற்கெனவே பிரிந்துசென்றிருந்தார். ஆனால் மனந்தளராத தலைவர் தொடர்ந்தும் துரையைப்பாவையே தனது முதல்க்குறியாக கொண்டு செயற்படலானார். தான் அறிந்தகாலம் முதல் தலைவர் பிரபாகரனின் தீர்க்கமான குணத்தை புரிந்துகொண்டிருந்த செட்டி ஒருசில நாட்களிலேயே தன்தவறை உணர்ந்து கொண்டார் போலும் தானாகவே தலைவரைத் தேடிவந்து கெருடாவில் கந்iசாமி கோவிலடியில் அவரைச்சந்தித்து சமரசம் செய்துகொண்டார். இவ்வாறு செட்டி மீண்டும் இணைந்து செயலாற்ற சம்மதம் தெரிவித்த ஒருசிலநாட்களில் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார். குற்றச்செயல்களைப் புரிவதில் பிரியமும் அசாதரண துணிச்சலும் கொண்டவர் செட்டி ஆவார். எனினும் தலைவர்பிரபாகரனிடம் நிரம்பியிருந்த தமிழினத்திற்கான வேட்கையையும் அதற்காக அவர் வகுத்துக்கொண்ட தீர்க்கமான பாதையையும் பிரபாகரனுடைய திடமான போராட்டவெறியினையும் இனங்கண்ட ஒருவராகவே ஆரம்பத்தில் காணப்பட்டார். எனினும் பழக்கதோசமும் பொலிசாரின் தொடரான நெருக்குதலும் காரணமாக இறுதியில் பொலிசாரின் உளவாளியாக மாற்றமடைந்தார். இதனால் 1981 மார்ச் 16 இல் குட்டிமணியுடன் சென்ற தலைவர் பிரபாகரனினால் அவரது பிறப்பிடமான கல்வியங்காட்டிலேயே செட்டி சுட்டுக்கொல்லப்பட்டார். தனபாலசிங்கம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவரை யு ளுழுடுனுஐநுசு’ளு ஏநுசுளுஐழுN என்னும் நூலில் அதன் ஆசிரியரான முன்னால் குருநகர் இராணுவமுகாம் பொறுப்பதிகாரியும் ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் பேச்சாளருமான சரத்முனசிங்கா Pழடiஉந ஐகெழசஅயவெ ஆகவே தனது நுலின் 251வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளமை இங்கே சுட்டிக் காட்டத்தக்கது. முதலாவது இலக்கை செயல்ப்படுத்துவதற்கு முன்பாகவே செட்டி கைதுசெய்யப்பட்டதால் அவரிடம் இருந்த அளவெட்டிப்பணத்தின் கணிசமான பகுதி போராட்டத்திற்கு பயன்படாது போயிற்று. அத்துடன் இவர்களிடமிருந்த ஒரேயொரு 4.05 துப்பாக்கியுடனேயே செட்டி கைது செய்யப்பட்டிருந்தார். செட்டி கைது செய்யப்பட்டதால் புகலிடம்தேடிய அவரது நண்பனான பற்றிக் வேறு வழியின்றி தலைவருடன் ஒட்டிக்கொண்டார். தலைவர்பிரபாகரன் தன்னிடமிருந்த பணத்தில் எதையும் வியாபாரமாகக் கொள்ளும் பற்றிக் மூலமாக இரண்டு கைத்துப்பாக்கிகளை கொள்வனவுசெய்தார். சுப்பிரமணியம் பற்குணராசா என்ற இயற்பெயரையுடைய இவர் பற்குணம் எனவும் அழைக் கப்பட்டார். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த கெக்கிராவை செல்லையாவின் கடையில் பற்றிக் ஊழியராக இருந்தவர். கெக்கிராவை உட்பட மேலும் பலஇடங்களில் மதுபானவிற்பனைநிலையம் மற்றும் பலசரக்கு கடைகளையும் வெற்றிகரமாக நடத்திவந்தவர் செல்லையா ஆவார். செல்லையாவின் வாடிக்கையாளரான ஒருபொலிசாரின் உதவியினால் பிரபாகரனின் ஆலோசனையை முன் யோசனையாக ஏற்றுக்கொண்டு இரண்டாம் உலகமகாயுத்த காலத்திற்குரிய 38 இலக்கரக இரண்டு ரிவோல்வர் வகையான கைத்துப்பாக்கிகளையும் அவற்றுக்குரிய இரண்டு குண்டுகளினையும் பன்னிரண்டு வெற்றுத்தோட்டாக்களினையும் பற்றிக் கொள்வனவு செய்திருந்தார். தலைவர்பிரபாகரனின் வழிகாட்டலில் வெறுமனே இரண்டுகைத்துப்பாக்கிகள் இரண்டுகுண்டுகளுடனும் முதன்நிலைப் போராளியான கலாபதியும் நண்பனும் செட்டியின் நண்பனான பற்றிக் ஆகிய நால்வரும் துரையப்பாவின் மீதான தாக்குதல் முயற்சிக்கு முன்னுரிமை அளித்து செயற்படமுனைந்தனர். ஆனால் வல்வெட்டித்துறையிலே வாழ்ந்த முன்னைய மூவருக்கோ யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே பணியாற்றி வாழ்ந்த நாலாமவரான பற்றிக் இவர்களில் யாருக்குமே துரையப்பாவை தெரியாது. இதுபோலவே அவரது நடமாட்டங்களைப் பற்றிய எவ்விததகவல்களும் உடனடியாக இவர்களிற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் யூலைமாத ஆரம்பநாட்களில் தலைவருடன் இந்தியாவில் அறிமுகமாயிருந்த கிருபாகரன் தலைவர் பிரபாகரனைச்சந்தித்து அந்த அரிய தகவலைக் கூறினார். பழம்நழுவி பாலில்விழுவது எனும் சொற்றொடருக்கு இசைந்தவாறு அமைந்த அத்தகவல் யாழ்மேயர் அல்பிரட் துரையப்பா ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் மானிப்பாய் அந்தோனியார் கோவில் என்பவற்றிற்கு வழிபாட்டிற்காக செல்பவர் என்பதுடன் கத்தோலிக்கரானபோதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலிற்கும் தவறாது செல்கின்றார் என்பதேயாகும். மேற்கூறிய தகவலை கிருபாகரன் உறுதிப்படுத்தியதும் தலைவர் தனது அடுத்தநகர்விற்கு தயாரானார். ஏனெனின் கிருபாகரன் துரையப்பாவின் வசிப்பிடமான கொய்யாத்தோட்டத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த அரியாலையை சொந்த இடமாகக் கொண்டிருந்தவர். இதனால் துரையப்பாவை நன்கு தெரிந்திருந்தார். தலைமறைவாக இந்தியாவில் இருந்தகாலத்திலும் 1974 ஒக்டோபரில் துரையப்பாவின் மரியாதைக்குரிய ‘பிரதமர்’ ஸ்ரீறிமாவே பண்டாரநாயக்காவின் இந்தியவருகையை எதிர்த்து சென்னையில் அமைந்திருந்த சிறிலங்கா தூதுவராலயத்தையும் இராஜரட்ணம் ஸ்ரேடியத்திற்கு அண்மையில் இருந்த பௌத்தகோயிலையும் கிருபாகரனும் நண்பர்களும் குண்டுவைத்து தகர்க்கமுயற்சித்தனர். இதற்காக கைதுசெய்யப்பட்ட இவருக்கும் இவரது நண்பர்களிற்கும் எதிராக சென்னை நீமன்றத்தில் குற்றம்சாட்டப் பெற்றிருந்தது இவ்வழக்கின் விசாரணைக்காலங்களில் கோடம்பாக்கத்தில் வாழ்ந்திருந்த பெரியசோதி நடேசுதாசன் குலம் என்பவர்களுடன் தலைவரும் நடந்து சென்றே மேற்படி வழக்கினைப் பார்த்திருந்தார். அத்துடன் துரையப்பாவின்மீது தனிப்பட்டவன்மத்தை முன்னிறுத்திய காண்டீபன் அமிர்தலிங்கமும் அவரது நண்பனான கிருபாகரனும் தொடர்ச்சியாக துரையப்பாவை தாக்குவதற்கு தருணம்பார்த்து செயலாற்றிவந்தனர். மேற்படிவிடயங்களை நன்கு தெரிந்திருந்த தலைவர் பிரபாகரனும் மீண்டும் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் துரையப்பாவின் மேற்படி நடவடிக்கையை உறுதிசெய்தபின் தொடர்ந்துவரும் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலடியில் வைத்து துரையப்பாவைத் தாக்கலாம் எனமுடிவு செய்தார். ஏனெனில் கிருபாகரனின் தகவலின் அடிப்படையில் துரையப்பாவை வேறுபலரும் குறிவைத்து இருப்பதால் மானிப்பாயிலும் அவ்வாறனவர்களில் சிலர் துரை யப்பாவின் வருகைக்காக காத்திருக்கக்கூடும் என எதிர்பார்தார். இதனைவிட மக்கள் செல்வாக்குப் பெற்ற துரையப்பாவை பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் தாக்குவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியும் என்பதையும் தீர்க்கதரிசனமாக தலைவர் முடிவுசெய்தார். காரணம் துரையப்பாவை ஆரம்பத்தில் தீர்துக்கட்டமுயன்ற பொன்.சிவ குமாரனை இறுதியில் பிடிக்கத்துரத்தியவர்கள் பொதுமக்கள்தான் என்பதையும் இதனாலேயே பொலிசாரின் முற்றுகைக்குள் சிவகுமாரன் அகப்பட்டு சயனைட் உட்கொண்டு வீரமரணமடைந்நதும் பகிரங்கரகசியம் ஆகும்.
  9. போராட்டப் பாதையில் புகுந்த புலிகளும், விழுந்த துரையப்பாவும் - பகுதி 2 போராட்டமுன்னோடிகள் மற்றும் மாணவர் பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய போராட்டக்குழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவெடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச் மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவநாளினூடாக இலங்கை திரும்பியிருந்தார். 1974காலப்பகுதியில் கைக்குண்டுகள் செய்வதிலும் துப்பாக்கிகள் சேகரிப்பதிலும் ஆர்வம்கொண்ட கலாபதி குழுவினரைப்பற்றி சென்னையில் வாழ்ந்த காலத்தில் அறிந்துகொண்டார். தனது அறைநண்பனும் ‘பந்தடியாதோர் சங்கம்’ என்னும் கழகத்தில் கலாபதியுடன் இணைந்திருந்த குலேந்திரசிகாமணி கூறிய விபரங்களின் அடிப்படையில் கலாபதியையும் நண்பனையும் தொடர்புகொண்டு அவர்களை தன்னுடன் இணைப்பதன் மூலம் ஈழத்தமிழரின் உரிமைகளிற்காகவும் விடுதலைக்காகவும் இடைவிடாது சலிப்பின்றி போராடக்கூடிய புதியபோராளிக் குழுவை உருவாக்கமுடியும் எனநம்பினார். ஆனால் தானே ஊருக்குள் சென்று கலாபதியையோ அல்லது வேறு யாரையுமோ சந்திப்பது தன்னைப்பற்றித் தெரிந்த ஏனையவர்களிற்கு தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திவிடும் என்பதை புரிந்து கொண்டார்;. இதனால 1973இல் கெருடாவில் புதுவீட்டுச்சந்தியில் குட்டிமணியின் நண்பன இராசா என அழைக்கப்பட்ட பரமேஸ்வரனின் வீட்டில் தான் தலைமறைவாக இருந்தகாலத்தில் தன்னுடன் நட்புடன் பழகிய நாதனை கலாபதியுடன் தொடர்பு ஏற்படுத்தும் கருவியாக பயன்படுத்திஇருந்தார். ஆனால் முன்பின் அறிமுகமற்ற நிலையில் கலாபதியை அடையாளம் தெரியாமல் வேறு யாரையும் நாதன் அணுகி விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கையாக கலாபதி மற்றும் நண்பனுடைய பெயர்களை எழுதிச்செல்லுமாறு கூறியிருந்தார் கலாபதிகுழுவினரை பெறுத்தவரையில் கலாபதியின்தந்தை வெடிபொருட்களை கையாள்வதிலும் கைக்குண்டு களத்தயாரிப்பதிலும் நிபுணத்துவம் வாயந்;த ‘மில்கார பாலசுப்பிரமணியமா கும்’. இதன்மூலம் தந்தையிடமிருந்து சிறுவயதிலேயே அவ்வித்தைகளை கலாபதியும் சகோதரர்களும் கற்றுக்கொண்டிருந்தனர். ஒருமுறை இவர்களால் விளையாட்டாக தயாரிக்கப்பட்டு வீட்டுஅலுமாரியின்கீழ் குண்டொன்று வைக்கப்பட்டிருந்தது. வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த இவர்களது தாயாரின் துடைப்பத்தில் தட்டுப்பட்டு அதுவெடித்ததனால் தாயார்தனது வலதுகையில் நான்கு விரல்களினை இழந்திருந்தார். இவ்வாறு வெடிமருந்துகளை கையாள்வதில் நன்கு பரிச்சயமுள்ளவராகவே கலாபதி எப்பொழுதும் காணப்பட்டார். இவரிடம் காணப்பட்ட இத்தகைய தொழில் நுட்பஇரகசியமும் இவைகளின் மீதான இவருடைய தீராதகாதலும் பொதுவாகவே அன்றைய வல்வெட்டித்துறை இளைஞர்களிடையே ஏற்படும் சிங்களப்படையினரை தாக்கவேண்டும் என்ற உணர்விற்கு வடிகாலாய் அமைந்தது. கலாபதியும் அவருடைய பாடசாலைத்தோழர்கள் சிலரும் குறிப்பாக இவருடையவீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்தவர்களான 1986இல் கடற்படையி னருடனான மோதலில் வீரமரணமடைந்த ‘ரகீம்’ என அழைக்கப்பட்ட வா.த. கிருஸ்ணமூர்த்தியும் மற்றைய பெயர்குறிப்பிடாத நண்பனும் சின்னச்சோதி நடேசுதாஸன் குழுவினரால் மோகனிடம் ஒப்படைத்துசெல்லப்பட்ட கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டதுடன் அதற்கான குண்டுகளை தாமே தயாரித்து ஊறணி பொலிகண்டிக்கு இடைப்பட்ட கடற்கரையோரம் நடமாடும் இராணுவத்தி னரைத்தாக்கும் முயற்சியில் ஒருநாள்முழுக்க காத்திருந்து அன்று இராணுவம் வராமையால் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இதுபோலவே அந்நாட்களில் வல்வெட்டித்துறை தெணியம்பையில் வாழ்ந்திருந்த சிவநேசன் என்ற சிதம்பராக் கல்லூரி அதிபர் கல்விஅமைச்சின் செயலாளர் ‘துடாவை’i யை அழைத்து தேனீர்விருந்து வைக்கமுயன்றார். இதன்காரணமாக அவரது வீட்டிற்கு குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்திலும் இக்குழுவினரின் பெயரே அன்றுபிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதுபோலவே தியாகி பொன். சிவகுமா ரனும் தனது ஆயுதத்தேவையைமுன்னிட்டு தனதுநண்பன் பட்டுமூலம் இவர்களை ஒருமுறை அணுகியிருநதார். இந்தநிலையிலேயே குலம் மூலம் இவர்களின் செயல்களையும் இவர்களின் எதிர்காலஎண்ணங்களையும் புரிந்துகொண்ட தம்பி எனும் பிரபாகரனும் தொடர்ந்து சலிப்பின்றி போராடக்கூடிய குழுவைப்பற்றி சிந்தித்தபோதே இவர்களை உள்வாங்கி ஈழத்தமிழருக்கான ஆயுதப் போராட்டக்குழுவை உருவாக்கமுடியும் என நம்பியிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே கலாபதியும் நண்பனும் பிரபாகரனின் தலைமையில் இணைந்து செயலாற்றமுன்வந்தனர். அக்கணத்திலேயே அதாவது 1975 சித்திரை மாதம் பிரபாகரனின் தலைமையில் முதன்முதலாக ‘புதிய தமிழ்ப்புலிகள்’ இயக்கம் தனது வரலாற்றுப்பிறப்பை எடுத்தது. அதுவரை ‘தம்பி’ என அழைக்கப்பட்டுவந்த பிரபாகரனும் ‘தலைவர்’ பிரபாகரனாக அன்று முதல் மாற்றமடைந்தார். கருத்துநிலையில் இருந்த தமிழ்ஈழத்தை களத்தில் காணும் முனைப்புடனும் பெருநம்பிக்கையுடனும் இவர்கள் தமது அடுத்தகட்ட நகர்வினைத் தொடங்கினர். இவ்வாறு தலைவர் பிரபாகரனினால் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட முதலாவது போராளியாக கலாபதி தமிழீழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிக்கப்படுகின்றார். 1975 ஏப்ரலில் கலாபதியையும் நண்பனையும் தன்னுடன் இணைத்து புதியபுலிகள் இயக்கத்தை உருவாக்கிய தலைவர்பிரபாகரன் அன்றுமுதல் ஈழத் தமிழர்களின் ஆயதப்போராட்டத்தை தலைமையேற்றுக்கொண்டார். பத்துவருடத்தில்; 1985 ஏப்ரலில்; தளபதி கிட்;டு நடத்;திய யாழ் பொலிஸ் நிலைய தாக்குதல் மற்றும் மாத்தையாவினால் மேற்கொள்ளப்பட்ட கிளிநொச்சி பொலிஸ்நிலைய முற்றுகை என்பவற்றுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் பெரும்பகுதிகளையும் வன்னிப்பெரு நிலத்தின் பலபகுதிகளையும் தமது இறமையுள்ள தளப்பிரதேசமாக பிரபாகரன்; தலைமையிலான விடுதலைப்புலிகள் மீட்டெடுத்துக்கொண்டமை ஈழத்தமிழரின் வரலாற்றில் பெரும்சாதனையாக என்றும் குறிப்பிடத்தக்கதாகும். ஒருபோராட்டக்குழுவானது வளர்ச்சிகண்டு பல்கிப்பெருமளவிலான போராளி களை உள்வாங்கும்பொழுது தலைமையின் அல்லது தளபதியினுடைய கட்டளை க்கு கீழ்படியும் இராணுவமனநிலையுள்ள போராளிகளை பயிற்;சியின் மூலம் உருவாக்கமுடியும். ஆனால் புனிதஇலட்சியத்தை வரித்துக்கொண்டு சகல வளங்களும் நிரம்பிய ஒருஅரசிற்கெதிராக போராடமுற்படும் ஒரு தனியான முதன் நிலைப்போராளி தன்போன்ற அல்லது தன்னுடன் மனமிசைந்து இயங்கக்கூடிய இரண்டாவதுநபரை தேடிக்கொள்வது மிகமிக கடினமானதாகும். முன்அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து இது எப்பொழுதும் சாத்தியமாவதில்லை. தன்னைச்சூழ இருக்கும் நண்பர்களிடமிருந்தோ அல்லது உறவினரிடமிருந்தே இவ்வரியசெயலை செய்ய முடியும். ஏனெனில் தான் சொல்வதை செய்யக்கூடியவராகவும் இன்னும் கூறினால் தன்மனதின் எண்ணவோட்டங்களை புரிந்துகொண்டு அதற்கு இசைந்து செயலாற்றக்கூடியவராகவும் இரண்டாம்நபர் அமையவேண்டும். இவ்வாறுசரியாக அமைந்தாலே செயல்ரீதியாக போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். இவ்வகையில் தலைவர் பிரபாகரனது தெரிவானது மிகச்சரியானதாகவே அமைந்தது வரலாறு கண்ட உண்மையாகும்.’ இதன்பின் தொடர்ந்துவந்த சிலவாரங்கள் இவ்வாறான பலசந்திப்புகள் வல்வெட்டித்துறை சிவன்கோவில் தெற்குவீதியிலும் தீருவில் வயலோ ரங்களிலும் நெற்கொழுமைதானத்திலும் இவைகளின் அயலிலும் தொடர்ந்தன. இவ்வாறு சந்திக்கும்நேரங்களில் புதிய போராளிக்குழுவை அமைப்பதிலும் அதன் எதிர்கால செயற்திட்டங்களை வகுப்பதிலும் தனது பேரவாவை வெளிப்படுத்தியதுடன் அதற்கான பெயரையும் பெயருக்கான காரணத்தையும் இவர்களிற்கு தலைவர் விளக்கமாக கூறிவரலானார். கலாபதி குழுவினரிடமிருந்த கைத்துப்பாக்கி போலவே தலைவர்பிரபாகரன் தனது தற்பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியும் அதிஸ்டவசமாக 4.05இலக்க வகையைச் சேர்ந்திருந்தது. இதனால் கலாபதியால் கட்டப்பெற்ற துப்பாக்கிக் குண்டுகளை அதற்கும் பாவிக்கக்கூடியதாகவிருந்தது. அத்துப்பாக்கி மூலம் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டின் பின்புறம் மக்கள் நடமாட்டமற்றிருந்த இடத்திலிருந்த பனையொன்றில் சந்தர்பம் கிடைக்கும் நேரங்களில் துப்பாக்கிசுடும் பயிற்சியினையும் இவர்கள் மேற்கொண்டனர். தனது முதலாவது குறி பலரால் குறிவைக்கப்பட்டும் சிங்களஅரசின் ஆதரவா ளராகவும் அமைப்பாளராகவும் தொடர்ந்து செயற்படும் ‘அல்பிரட் துரையப்பா’ என்பதனையும் இக்காலங்களில் அடிக்கடி பிரபாகரன் வலியுறுத்தினார். அத்துடன் தான் அறிந்த காலம் முதல் எதையாவது செய்து கொண்டிருக்கும் செட்டியையும் இணைத்து தமது கட்டதாக்குதல் நகர்வினை விரைவில் முன்னெடுப்பதாகவும் கூறினார். அவர்கூறியது போலவே தலைவரும் கலாபதியும் ஏப்ரல் மாத இறுதியில் சுதுமலைக்கு சென்று செட்டியின் நண்பனான’ பற்றிக் உடைய வீட்டில் தலைமறைவாக இருந்த செட்டியுடன் தமதுஅடுத்தகட்ட நகர்வினைப்பற்றி விவாதித்தனர். அன்று அவர்களிலிருந்த சூழ்நிலையில் நிதிஎன்பதே எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்பதை புரிந்துகொண்டனர். ஏனெனில் நிதி இருந்தாலே தமது எதிர்காலத் தேவைக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்யமுடியும் என்பதை பர்pபூரணமாக உணர்ந்துகொண்டனர். இதனால் தமது முதலாவது செயல்முறையாக நிதித் தேவையினை பூர்த்திசெய்யும் வழிவகைகளைப்பற்றி ஆராயமுற்பட்டனர். இறுதியில் உடனடி நிதித்தேவைக்காக அளவெட்டி பலநோக்குகூட்டுறவுச் சங்கத்தின் நிதியைப்பறித்தெடுக்கலாம் என முடிவாயிற்று. எனினும் தலைவர் பிரபாகரனின் முதன்நிலைக்குறியான துரையப்பாவை தொடர்ந்து கண்காணிக்கவும் முயன்றனர்.
  10. தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது. முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே. மூல வலைத்தளம்: அறியில்லை மூல எழுத்தாளர்: வர்ணகுலத்தான் 1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் என்பதனைவிட எல்லோரும் எல்லோருக்கும் உறவினர்கள் என்பதே சரியானதாகும். இந்நிலையில் அயற்கிராமத்தைச்சேர்ந்த நாதன் பெயரை எழுதிக்கொண்டு வந்து தன்னை அழைத்தது கலாபதி எதிர்பாராத ஒன்றே! நல்லவேளை நாதன் பெயரை எழுதிக்கொண்டு வரும்வேளையில் கலாபதி வீட்டுவாசலிலேயே நின்றிருந்தமையால் எவ்வித ஆள்மாறாட்டமுமின்றி இருவரும் சந்தித்துக்கொண்டனர். நாதன் கூறியசெய்தியோ மீண்டும் ஆச்சரியத்தை அல்ல பேராச்சரியத்தையே கலாபதிக்கு கொடுத்தது. காரணம் தங்களைக் கையுடன் கூட்டிவரச் சொன்ன நபர் ‘பிரபாகரன்’ என்பதைக் கேட்டால் யாருக்குத்தான் ஆச்சரியமாக அமையாதுவிடும். ஆம் இன்றுமட்டுமல்ல அன்றும்கூட அவரைத் தெரியாதவர்களிற்கு சாதாரண இளைஞராக காட்சியளித்த தேசியத்தலைவருடைய செயல்கள் அவரைத் தெரிந்த ஊரவர்களிற்கும் உறவினர்களிற்கும் அசாதரணமாகவும் வியப்பிற்கு உரியதாகவும் அமைந்திருந்தன. 1970 – 1972 காலப்பகுதிகளில் சிங்களஇனவெறி அரசிற்கெதிராக கொடும்பாவி பஸ்எரிப்பு குண்டுவீச்சு எனப்பல தீவிரவாதச்சம்பவங்களில் ஈடுபட்டு இறுதியாக வல்வெட்டித்துறை நெற்கொழுவில் நடந்;த கைக்குண்டுத் தயாரிப்பு விபத்தில் முடியவே படுகாயமடைந்தநிலையில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து இந்தியாவிற்குச்சென்ற சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் குட்டிமணி தங்கத்துரை என்னும் தன்னைவிட வயதில் கூடிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டவர் பிரபாகரன் என்பதும் அவ்வாறு மூத்தோருடன் இணைந்து செயல்ப்பட்டதால் ‘தம்பி’ என்ற அழைபெயரால் வல்வெட்டித்துறை சமூகத்தில் அன்புடன் இவர் அழைக்கப்பட்டதும் கலாபதிக்கு தெரிந்ததே! இதனைவிட காயமடைந்தவர்கள் தப்பிச்செல்வதற்கு கலாபதியுடைய உறவினரான சித்திரம் என்பவரே படகினை ஏற்பாடுசெய்ததும் கலாபதியுடைய மூத்தசகோதரன் சிறிபதியும் இந்த ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டதும் கலாபதிக்கு நன்குதெரிந்தே இருந்தது..1972அக்டோபர் 05இல் நடந்த இக்குண்டு வெடிப்பின் பின் கடந்த இரண்டு வருடங்க ளிற்கு மேலாக இக்குழுவில் இருந்த குட்டிமணியைத்தவிர வேறுயாரையும் ஊர்ப்பக்கங்களில் அதிகமாக காணமுடிவதில்லை. இதன்தொடராக சில காலங் களின் முன்பு டைனமெற் என்ற வெடிபொருளை வெடிக்கச்செய்யும் கெற்பு எனும் பொருளினை கடல்மார்க்கமாக கொண்டு வரும்பொழுது அவை எதிர்பாராமல் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியது. இதனைத் தொடர்ந்த விசாரணைகளின் பின்பு இந்தியஇலங்கைப் பொலிசாரினால் திருச்சியில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு தென்னிலங்கையின் ஏதே ஒரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கலாபதி அறிந்தேஇருந்தார். இந்நிலையில் இத்தீவிரவாதக் குழுவைச்சேர்ந்த பிரபாகரன் தன்னையும் தனதுநண்பனையும் அழைத்துவரச் சொன்னதாக அறிந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது! எனினும் பிரபாகரன் அழைத்து வரச்சொன்னதாக நாதன் சொன்னதும் ஏன்? என விளக்கம் கேட்காமலேயே நாதன் எழுதிக்கொண்டு வந்த அடுத்த பெயருக்குரிய நண்பனின் வீட்டிற்குச்சென்று அவனையும் அழைத்தனர். குறிக்கப்படும் இந்நண்பன் சிலகாலத்திற்கு முன்பு மேற்குறிப்பிட்ட போராளிகளால் இந்தியாவின் வேதாரணியத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்திற்கு சென்று ‘தம்பி’பிரபாகரன் உட்பட அனைவரையும் சந்தித்து திரும்பியிருந்தார். இப்போது மூவரும் கதைத்துக்கொண்டு பிரபாகரனை சந்திக்கச் சென்றனர். பிரபாகரனும் கலாபதியும் 1968இல் பொன்னம்பலம் மாஸ்டர் வீட்டில் ஒன்றாகப்படிக்கும் காலத்திலேயே அறிமுகமானவர்கள் என்பதால் கலாபதிக்கு பிரபாகரன் புதியவர் அல்ல என்;பது இங்கே குறிப்பிடத்தக்கது. நெற்கொழு வைரவர்கோவில்வரை இவர்கள் நடந்துவரும் பொழுது அங்கிருந்த வாசிகசாலையில் தமக்காக பிரபாகரன் காத்துநிற்பதைக் கண்டனர். இவர்களைக்கண்டதும் வெளியேவந்த பிரபாகரனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். நண்பகலான அவ்வேளையில் தனது கடமை முடிந்தது என நாதன் இவர்களைவிட்டு பிரிந்துசென்றார். அருகிலிருந்த மைதானம்வரை தொடர்ந்து நடந்துவந்த மூவரும் அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டனர். நடந்துவந்த களைப்புத்தீர இவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் பிரபாகரன் தான் இவர்களை அழைத்தகாரணத்தை கூறத் தொடங்கினார். இரண்டு வருடங்கள் தமிழ்நாட்டில் பெரியசோதி தங்கத்துரை சின்னச்சோதி நடேசுதாசன் எனும் முன்னோடிகளுடன இருந்துவிட்டு தான் இப்பொழுது தனியாகவே ஊருக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் காலம்கனியட்டும் என காத்திருப்பது போல் தோன்றுவதால் இவ்வாறான முடிவிற்கு தான் வந்துள்ளதையும் நியாயப்படுத்திய அவர் ஓய்வின்றி எதையாவது செய்ய வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். 1974ஆம் ஆண்டில் கலாபதியும் அவர் குழுவினரும் மேற்கொண்ட தீவிரவாத முயற்சிகளைக்கேள்விப்பட்டே அவர்களினைத்தான் சந்திக்கவிரும்பிய காரணம் என்பதையும் விளக்கமாக கூறினார். தொடர்ந்து இனத்தின் அடிப்படையில் தேவையின்றி அப்பாவிமக்களை அநாவசியமாக தாக்கும் அரசபடைகளிற்கு எதிராக எதையாவது செய்யவேண்டுமெனவும் அதற்காக அவர்களை தன்னுடன் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 1967இல் வல்வெட்டித்துறை சந்தியில் அரசபடைகள் பொதுமக்களிற்கு எதிராக தாக்குதலைநடத்தியது. அத்தாக்குதலில் அப்பாவியான சிவஞானசுந்தரம் கொல்லப்பட்டார். இதுபோன்ற மிலேச்சத்தனமான தேவையற்ற தாக்குதல்களை கண்டும் கேள்விப்பட்டும் சிறுவனானபிரபாகரன் வேதனை யுற்றார். இதனால் தாக்கப்படும் மக்களிற்காக வேதனைப்பட்ட இவர் சிங்களப்படைகளின் மீது வெறுப்புக்கொண்டார். 1968இல் தனது பதின்நான்கு வயதில் இருந்தே தீவிரவாத போராட்ட உணர்வுடன் செயற்பட்டவர் பிரபாகரன். சிறுவயதிலிருந்தே மாயாவியின் சாகஸக்கதைகளைப் படிப்பதிலும் அவற்றைசேகரிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அதற்கேற்றாப்போல் அக்காலத்தில் கெற்றப்போல் சகிதம் எந்நேரமும் உலாவரும் இவர் தனது பாடசாலைத்தோழர்களுடன் ஒருகுழுவை அமைத்து அதற்கு ‘காட்டுஎல்லைப்படை’ என பெயரும் சூட்டியிருந்தார். (தகவல் சுரேஸ்குமார்;) அதேநேரத்தில் தனதுவீட்டிற்கு அருகாமையில் விளாம்பத்தை காணியுடன் அமைந்திருந்த இடிந்து சிதிலமான ஓதுவார் வீட்டினுள் தன்னைவிட மூத்தவர்களான நடேசுதாசன் ஜெயபால் பாலி மோகன் என்பவர்களுடன் இணைந்து பெற்றோல்க்குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டார். (காலநதிக்கரையில் மீளநினைக்கின்றேன். 1994 ஏப்ரல் மேமாத வெளிச்சம் இதழ்) 1969களில் வேணுகோபால்ஆசிரியர் ஊட்டிய தமிழரின்சுயாட்சிக் கொள்கையினால் உந்தப்பட்டு அவருடன்திரிந்தார். அதேவேளை தனது பாடசாலைத் தோழர்களான சுரேஸ்குமார் குமாரதேவன் என்பவர்களுடன் இணைந்து நெற்கொழு கோழிப் பண்ணையில் சின்னச்சோதியிடம் உடற்பயிற்சி மற்றும் சைனாபுட்டிங் என அழைக்கப்பட்ட சீன தற்பாதுகாப்பு முறைகளையும் பயின்றுகெண்டார். 1970டிசம்பரில் கபொத சாதாரணபரீட்சைக்கு முதன்முதலாக தேற்றியஅவர்; பரீட்சைக்கு முன்பாகவே தமிழ் மாணவர் பேரவையுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். 1971ஜனவரிமாதத்தில் வல்வெட்டித்துறை வேம்படியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டின் வருகையை எதிர்த்;து பதியுதீன் உடைய கொடும்பாவி கட்டியதுடன் போராட்டப்பாதையில் நேரடியாக களம் இறங்கினார். இவ்வேளையில் இனஉணர்வில் வல்வெட்டித்துறையில் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்கூட்டணியின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மார்ச் மாத முதல்வாரத்தில் வல்வெட்டித்துறையில் நடந்த Nஆபெரேரா வருகைக்கெதிரான புறக்கணிப்புப் போரில் முன்னின்றார். 1972ஆரம்பம்முதலே மாணவர்பேரவை மற்றும் தமிழர்கூட்டணியின் போராட்டப் பாதையில் தனது தீவிரப்போக்கை வளர்த்துக்கொண்டதுடன் குடியரசு அரசியல்யாப்பிற்கு எதிராக தனது இளவயதுத்தோழர்களை இணைத்து 1972 மே 22 குடியரசுநாள் பகிஸ்கரிப்பு மற்றும் தொண்டைமானாறு பஸ்எரிப்பு (1972 மே 22 இரவு) என்பவற்றை வெற்றிகரமாக செய்துமுடித்தார். அத்துடன் மாணவர் பேரவையினால் நடத்தப்பெற்ற துரையப்பாவின் காணிவேல் குண்டு வெடிப்பை திசைவீரசிங்கத்துடன் இணைந்து (1972செப்டெம்பர்23) நடத்தினார். இக்காலத்தில் குலம் உதயணன் நடேஸ் போன்றோருடன் வல்வெட்டித்துறையின் சிலம்ப வல்லுனரான பிரபுவிடம் தமிழரின் உடற்பயிற்சிக்கலையான தெண்டா சிலம்பம் என்பவற்றையும் கற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே இவர் போராட்ட முன்னோடிகளுடன் இணைந்த நெற்கொழு குண்டுவிபத்து (1972அக்டோபர்05) நடைபெற்றது. இக்காலத்திலேயே வல்வெட்டித்துறைக்கு வெளியேயான தனது தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார். செட்டி ரமேஸ் சிவராசா மற்றும் கண்ணாடி எனும் பத்மநாதன் என்பவர்களுடன் அறிமுகமாகிய இவர் அவர்களுடன் இணைந்து தாக்குதல் முன்னேற்பாடாக கல்வியங்காட்டில் வாழ்ந்த சிங்களடொக்டர் ஒருவரின் காரினைக் கடத்தியதடன் (1972டிசம்பர்24) பொலிசாரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக அக்காரினை எரித்தது உட்பட வேறுபல நிதித்திரட்டல் செயற்பாடுகளிலும் பங்குபற்றியிருந்தார். 1973ஜனவரி14இல் சாவகச்சேரியில் சத்தியசீலனை சந்திப்பதற்காக மோகனுடன் சென்ற இடத்தில் சிவகுமாரனுடன் அறிமுகமாகிக்கொண்டார். அடுத்தநாள் வேலணைக்கு வந்த குமாரசூரியருக்கு கறுப்புக்கொடி காட்ட முடியாது தோல்வியுடன் ஊர்திரும்பிய வேளையில் தான்கலந்துகொள்ளும் இறுதியான அகிம்சைப்போர் இதுவென தன்னுடன்வந்த நண்பனான இந்திரலிங்கத்திற்கு உறுதியாகக்கூறினார். அன்று நடந்த மண்கும்பான் குண்டுத்தாக்குதல் முயற்சி யினைத் தொடர்ந்து மாணவர் பேரவையினர் மீதான காவல்துறையினரின் தீவிரவேட்டையில் சிறிசபாரத்தினத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் 23மார்ச் இரவில் பஸ்தியாம்பிள்ளையிடமிருந்து சமயோசிதமாக தப்பிக்கொண்டார். 42நாட்களின் பின் மோகனுடன் வேதாரணியம் சென்று தனது முன்னோடிகளுடன் இணைந்து கொண்டார். இவர்களுடன் ஏறத்தாள இரண்டு வருடங்கள் வேதாரணியம் திருச்சி, சென்னை என்னும் இடங்களில் கழித்திருந்தார்.இவ்வாறு போராட்ட முன்னோடிகள் மற்றும் மாணவர் பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய ஒருகுழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவேடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவத்தினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.
  11. மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள்:
  12. அன்பார்ந்த தமிழீழ மக்களே, பல பத்தாண்டுகளாக சிங்களவரிடம் அடிவாங்கி ஓடிக்கொண்டிருந்த எம் தேசத்தை நிப்பாட்டி, திருப்பி அடிக்கக் கற்றுக்கொடுத்து, தமிழருக்கு சமமாக சிங்களவரையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி எம்மினத்தையே தலை நிமிர்ந்து நடக்க வைத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மே 18/19 அன்று முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் பரப்பில் சிங்கள வன்வளைப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரிற்கு எதிரான இறுதி ஆயுதவழிப் போரின் ஒடுவில் சமரில் வீரச்சாவடைந்து ஆகுதியானார். அன்னாருக்கு தனியாட்களாக, ஆங்காங்கே சுடர்கள் ஏற்றப்பட்டிருப்பினும் பெருமளவு மக்கள் ஒன்று கூடி ஒருகாலும் சுடர் ஏற்றப்பட்டது நடைபெற்றதில்லை. எனினும், இம்முறை அவ்வாறான நிகழ்வொன்று நடைபெறவுள்ளது என்பதை அறியாதோருக்கு அறியத் தருகிறேன். அன்னாருக்கு கடந்த 15 ஆண்டுகளாக உரிய முறையில் வீரவணக்கம் செய்யப்படாத நிலையில் எதிர்வரும் மே 18ம் திகதி அன்று ஐரோப்பிய நேரம் பகல் 14 மணிக்கு டென்மார்க்கில் தலைவரின் தம்பியின் மகனால் உரிய முறையில் வீரவணக்கம்/ இறுதிச் செய்கை நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். அதற்கு நானும் ஒத்தாசை வழங்குகிறேன் என்பதோடு அதற்கு எனது முழு ஆதரவையும் நல்குகிறேன். இதற்கு எம்மக்களும் ஆதரவை வழங்கி தலைவரினதும் குடும்பத்தினரினதும் ஆன்மா சாந்தி அடைய வேண்டுங்கள் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன். நடைபெறுமிடம்: paladspassagen, ved analaeget 12C, 7100 Vejle, Denmark ஒருவேளை, எதிர்பாராத காரணங்களால், அது நிறுத்தப்பட்டாலும் யாழில் என்னால் அது சரியாக மே 18 அன்று மேற்கொள்ளப்படும் என்பதை பறைந்துகொள்கிறேன். நன்றி, இங்ஙனம், நன்னிச் சோழன். "தமிழீழம் தமிழர் தாகம்" "எங்கள் தலைவன் போல் இன்றைக்கும் நேற்றைக்கும் நாளைக்கும் எவனும் இல்லை! எரிமலை மூச்சுக்கும் எழும்புயல் வீச்சுக்கும் ஏதடா எல்லை?"
  13. புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட வரலாறு என்பது பொறுப்புகள். பதவிகளைக் கடந்த உறுதி தளராத நேர்மையும், தன் அடக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்வியல் சகாப்தம். யாழ்.மாவட்டம்அரியாலையைச்சேர்ந்தநாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளைக்கும் கனகாம்பிகைக்கும் மகனாக 05.04.1956 ஆம் ஆண்டு பிறந்து குகநேசன் எனும் பெயருடன் வளர்ந்தார். உயர்தரத்தில் விஞ்ஞானபாடரீதியாக நல்ல பெறுபேற்றைப் பெற்றும் சிங்களத் தரப்படுத்தல் மூலம் சிங்களவர் அதே பெறுபேறில் சித்தியடைய அதே பெறுபேறுள்ள தான் தரப்படுத்தல் என்ற போர்வையில் புறக்கணிக்ப்பட்டதை கண்டித்து இனி சிங்களவர்களது இந்த பாடத்திட்டத்தைப் படிக்கமாட்டேன் என மறுத்து தனது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தபோது பெற்றோரின் வற்புறுத்தலில் தாயகத்தைவிட்டு 1980 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து யேர்மனியில் தஞ்சமடைந்தார். அங்கு சென்ற காலத்திலேயே தனது விடுதலைக்கான பணியினை ஆரம்பித்து அன்றைய இக்கட்டான நெருக்கடி நிறைந்த சூழ்நிலைகளில் எந்தவித பயமும் இன்றி விடுதலைப் போராட்டத்திற்கான நிதி திரட்டுதல். விடுதலைப் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கிலான பரப்புரைப் பணிகளையும் துணிச்சலுடன் முன்னெடுத்தார். அன்றைய காலத்தில் யேர்மனியில் சிறிலங்கா கைக்கூலிகளினாலும் மாற்றுக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிலை நிறுத்தியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். இதன் விளைவாக யேர்மனிய அரசால் கைது செய்யப்படும் அளவிற்கு இவரது செயற்பாடுகள் மிகக் காத்திரமானதாக அமையப் பெற்றிருந்தது. பின்னர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாததால் சிறையிலிருந்து விடுவித்த போது யேர்மனிய அரசு இவருக்கு வழங்கிய 8000 டொச்மார்க்குகளை அமைப்பின் செயற்பாடுகளுக்கு வழங்கினார் என்பது வரலாறு. 1992ம் ஆண்டு தமிழீழம் திரும்பிய புதியவன் மாஸ்டருக்கு இயக்கத்தில் நேரடிப் பணிகள் காத்திருந்த போதும் அவர் இயக்கத்திடம் வைத்த பிரதான கோரிக்கை தான் இயக்கத்தின் அடிப்படைப் பயிற்சியினை எடுக்கவேண்டும் என்பதாகும். அவரது வயது முதிர்ச்சியை கருத்திற்கொண்ட இயக்கம். அவர் ஒரு முழுமையான போராளியாக அடிப்படைப் பயிற்சி இன்றியே பணியாற்றலாம் என்றபோதும் அவர் அடிப்படைப் பயிற்சி எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக நின்று பயிற்சியினை எடுத்து இதயபூமி 1 எனப் பெயரிடப்பட்ட மணலாறு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையிலும் பங்குபற்றினார். கராத்தேயில் கறுப்புப் பட்டியைப் பெற்றிருந்த புதியவன் மாஸ்டர் என்றுமே இயக்கப் பயிற்சிகளில் சளைத்தவர் அல்ல. புதியவன் மாஸ்டரின் வெளிநாட்டு நிர்வாக அனுபவத்தை தமிழீழத்தில் பயன்படுத்த விரும்பிய இயக்கம். அவரை மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பில் செயலாற்ற வழிவகை செய்தது. அரசியல் செயற்பாடுகளையும் சண்டைக் களங்களையும் எதிர்கொள்ளும் ஒரு போராளியே முழுமை பெறுகின்றான் என்ற அடிப்படையில் போரையும் அரசியலையும் போராளிகள் மத்தியில் அனுபவப் படங்களாக்கிப் போராளிகளைப் புடம்போட்டு வளர்க்கும் அனைத்துலகத் தொடர்பகக் கட்டமைப்பில் எதற்கும் தயங்காத போராளியாகத் தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் பொறுப்புகளையும் சண்டைக் களத்திலும் சரி அரசியல், நிர்வாகப் பணிகளிலும் சரி நேர்மையாகச் செய்து முடிப்பவரே புதியவன் மாஸ்டர். 1992 இல் அடிப்படைப் பயிற்சியை முடித்து வந்த புதியவன் மாஸ்டர் நந்தவனத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றார். நந்தவனம் என்பது தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து மீண்டும் தமிழீழம் வருவோருக்கான வதிவிட அனுமதியை வழங்குவது முதற்கொண்டு அவர்களுக்கான பலதரப்பட்ட தேவைகளையும் நிறைவாக்கிக் கொடுத்து. புலம்பெயர் தமிழர்களின் உறவுப் பாலமாகச் செயலாற்றி நின்ற செயலகமாகும். இத்தகைய நந்தவனத்தின் அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து அதியுயர்ந்த பொறுப்புகள் வரையில் பலவிதமான செயற்பாடுகளையும் மிகத் திறம்படச் செய்த போராளிகளில் முன்னுதாரணமான ஒருவர் புதியவன் மாஸ்டர். அவர் செயலாற்ற ஆரம்பித்த காலம் முதல் 2009 மே 18 வரையில் நந்தவனக் கட்டுமானத்தின் செயற்பாடுகளிலும் வளர்ச்ச்சியிலும் விரிவாக்கத்திலும் நற்பணிகளிலும் புதியவன் மாஸ்டரின் பங்களிப்பென்பது தவிர்க்கமுடியாது பின்னிப்பிணைந்திருக்கும் மகத்துவம் மிக்கது. மண்கிண்டி மலைத் தாக்குதலின் பின்னர் நிர்வாகப் பணிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த புதியவன் மாஸ்டருக்கு 1996 இன் பின்னர் இடையிடையே குட்டிசிறி மோட்டர் படையணியின் சண்டைக் களங்களுக்குச் சென்றுவர வாய்ப்புகள் கிடைத்தபோதும், 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவு பரந்தன் கள முனைப்பகுதியில் கனரக கிட்டு ஆட்டிலறிப் படையணியில் மொங்கன் எனப் பெயரிடப்பட்ட ஆயுதத்தில் சண்டையிடும் வாய்ப்புக்கிட்டியது. அதனையும் தனக்கே உரிய பாணியில் திறம்படச் செய்தவர் பின்னைய நாட்களில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்லறிப் படையணியில் 130MM ஆட்டிலறி போன்ற பல வகையான ஆட்லறிகளை எதிரிக்கு எதிராக ஏவிச் சண்டையிடும் சமர்க்களப் பணிகளை மிகத்துணிவுடன் செய்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் தாயகக் கட்டுமானம் என்பது நந்தவனம், ஆவணக்காப்பகம், மாவீரர் படிப்பகம், இராசன் அச்சகம், அறிவியல் கல்லூரி, அரசறிவியல் கல்லூரி, ஊடக மையம், தொண்டு நிறுவனம், சுற்றுலா விடுதிகள், தொலைத்தொடர்பு நிலையங்கள் எனப் பல கட்டுமானங்களைக் கொண்டது. இக்கட்டுமானங்கள் பலவும் லெப். கேணல் தரப் போராளிகள் பலரினால் நிர்வகிக்கப்பட்டன. இவ்வாறான கட்டுமானங்கள் பலவற்றிலும் அனைத்துலகத் தொடர்பகத்தின் மூத்த போராளிகளில் ஒருவரான புதியவன் மாஸ்டர் செயல் திறன் மிக்க போராளியாகவும், இடைநிலைப் பொறுப்பாளராகவும், ஆவணக் காப்பகம் போன்ற சிலவற்றின் பொறுப்பாளராகவும் செயலாற்றிய காத்திரம் மிக்க பொறுப்பாளர். 1992ம் ஆண்டு தமிழீழம் வந்த புதியவன் மாஸ்டருக்கு அவரது வயது முதிர்ச்சியின் காரணமாக ஒருசில ஆண்டுகளிலேயே இயக்கத்தின் ஏற்பாட்டில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. திருமண இணையராகி இருவரும் இணைந்து வயதுவந்த போராளிகளுக்கான திருமண ஏற்பாடுகளைச் சிறப்புடன் செய்துவைப்பதற்குப் புதியவன் மாஸ்டர் ஆற்றிய பங்கென்பதும் அவரது விடுதலை வரலாற்றின் இன்னொரு அத்தியாயமே. விடுதலைக்காக அயராது உழைத்ததன் விளைவாக இவர்களுக்கு குழந்தை வாய்ப்புகள் பலதடவைகள் வந்து கரைந்து போயிற்று. இத்தகைய சூழலில் இயக்கத்தினதும் குடும்ப உறுப்பினர்களினதும் சகபோராளிகளினதும் நண்பர்களினதும் அன்புரிமை கலந்த வேண்டுதல்களுக்கு அமைய செயற்பட்டு அன்புக்குழந்தைச் செல்வத்தினை பெற்றெடுத்தனர். குழந்தை பிறந்து சில ஆண்டுகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் இறுதிநாள் வந்தது. போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இராணுவத்திடம் சரணடைகின்றனர். குழந்தையும் கையுமாகப் போராளி. மனைவி மற்றும் சக போராளிகள் பலரும் தணியாத விடுதலை மீதான தாகத்தைச் சுமந்தபடி கையறு நிலையில் விடுதலைக்காகப் போராட மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரும் என்ற நம்பிக்கையுடன் சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தனர். வாழ்வின் எல்லா இடங்களிலும் தன்னை மறைத்துத் தன் மனைவியை முன்னிறுத்திய புனிதப் போராளி புதியவன் மாஸ்டர் தனது மனைவியால் மகனைப் பாதுகாக்க முடியும் என்ற பூராண நம்பிக்கையுடனும், என்றுமே போராளிகளின் மனதைப் புண்படுத்தாத புதியவன் மாஸ்டர் இராணுவத்திடம் சரணடையத் தீர்மானித்துவிட்ட சக போராளிகளின் மனம் புண்படாத படியும் அவர்களிடம் அவர்களுக்கு ஏற்றவாறான கதைகள் சொல்லிவிட்டு போர்க்களம் நோக்கிப் போகின்றார். ஆம்! அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. எப்போதுமே எவர்மனதையும் புண்படுத்திவிடாது விடுதலைக்காய் அப்பழுக்கின்றி செயலாற்றிய உறுதியின் வடிவமாகிய அந்த உத்தம வீரர், வாழ்வின் எல்லாக் கால கட்டங்களிலும் சலசலப்புக்காட்டாது தளராத உறுதியுடனும் தன்னடக்கத்துடனும் வாழ்ந்தது போன்றே இறுதிக் கணத்திலும் அப்படியே உறுதியின் வடிவமாகி 18 மே 2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். எம் நினைவெல்லாம் நிறைந்த புதியவன் மாஸ்டர் இன்று எம்முன்னே விடுதலையின் வித்தாகி, தமிழீழத்தின் வீர வரலாறாகி நிற்கின்றார். நன்றி சூரியப்புதல்வர்கள் -2023 https://thaarakam.net/news/70226046-07e7-4efc-9a34-aeade4aa04e3
  14. லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவின் களமுனை ஆசிரியர் பயிற்சிநெறி நிறைவு விழாவின் போது போராளிகளுக்கு தலைவர் மாமா பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கிறார் 23/08/2005 விழாவின் தொடக்கத்தின் போது மாவீரர்களின் படங்களுக்கு தலைவர் மாமா மலர்மாலை அணிவித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.