Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயங்களைப் புரிந்துகொண்ட மனித உரிமைப் போராளி - சேரமான்

Featured Replies

வன்னியை விட்டு மக்களை முழுமையாக வெளியேற்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முடிவுரை எழுதுவதற்கு உலக வல்லாதிக்க சக்திகளின் ஆசீர்வாதத்துடன் சிங்களம் எடுத்த முயற்சிகளை விரைவுபடுத்துவதில் உருத்திரகுமாரனும், அவரது சகபாடிகளும் வகித்த பங்கு என்பது 06.01.2009 அன்று நோர்வேயிலிருந்து வன்னிக்கு கே.பியின் ஆலோசகர் எழுதிய ‘அறிவுரை’ மடலோடு முற்றுப் பெறவில்லை.

இதற்கான அழுத்தங்கள் தொடர்ச்சியாக வன்னியை நோக்கி உருத்திரகுமாரனின் சகபாடிகளால் பிரயோகிக்கப்பட்ட வண்ணமிருந்தன. இதில் முக்கிய பங்கை வகித்தோரில் உருத்திரகுமாரனின் நெருங்கிய நண்பரும், ‘றோ’ அமைப்பின் முகவரென பரவலாக மக்களால் அறியப்படுபவருமான நடராஜா இளங்கோ என்பவர் விளங்கினார். இவர் ஊடாகவும், சுவிசில் வசிக்கும் பிறிதொரு தமிழர் ஒருவர் வாயிலாகவுமே அக்காலப் பகுதியில் ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகத்துடன் கே.பி தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்.

போர்நிறுத்தத்திற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழைப்பை புறந்தள்ளிவிட்டு வன்னியை விட்டு மக்களை வெளியேற்றுவதற்கான அழுத்தங்களை வன்னி மீது பிரயோகிப்பதில் அப்பொழுது பெரும்பாலான உலக நாடுகளின் இராசதந்திரிகளும், அரசியல் தலைவர்களும் கவனம் செலுத்தினாலும்கூட இதுவிடயத்தில் ஒருமித்த கருத்தை அனைத்துலக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எல்லோரும் கொண்டிருந்தார்கள் என்று கூற முடியாது.

இதில் தனித்துவமான ஒருவராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரை குறிப்பிடலாம். தமிழக வம்சாவளியைக் கொண்ட தென்னாபிரிக்கத் தமிழரான நவநீதம்பிள்ளை அம்மையார், வெள்ளையின நிறவெறிக்கு எதிராக தென்னாபிரிக்காவில் அரசியல் வழிகளில் போராடிய ஒருவர். தென்னாபிரிக்காவின் முன்னணி சட்டவாளராக மிளிர்ந்த இவர், நீண்டகால சிறைவாசத்திற்கு நெல்சன் மண்டேலா அவர்கள் உட்படுத்தப்பட்டிருந்த பொழுது அவரதும், ஏனைய கறுப்பின அரசியல் கைதிகளினதும் சட்டபூர்வ உரிமைகளுக்காகப் போராடி வெற்றியீட்டிய பெருமைக்குரியவர்.

navanethem_pillay.jpg

தென்னாபிரிக்காவில் வெள்ளையின நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்து புதிய அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்ற பொழுது நாட்டின் உயர்நீதிமன்ற நீதியாளராக இவர் பணியேற்றார். பின்னர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் நீதியாளராகப் பணியாற்றிய இவர், றுவாண்டா இனவழிப்பை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை நீதியாளராகவும் விளங்கியிருந்தார்.

இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக குரல்கொடுத்த ஒருவர் என்ற வகையில் சிங்களத்தின் கோரப்பிடியில் ஈழத்தமிழர்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களை நன்கு அறிந்த ஒருவராகவே நவநீதம்பிள்ளை அம்மையார் திகழ்கின்றார்.

இந்த வகையில் வன்னியை விட்டு மக்களைப் பலவந்தமாக வெளியேற்றும் உலக வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சித் திட்டத்தை நவநீதம்பிள்ளை அம்மையார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுபற்றிப் பகிரங்கமாக அப்பொழுது எவ்வித கருத்துக்களையும் நவநீதம்பிள்ளை அம்மையார் வெளியிடாத பொழுதும், தன்னை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தனது நிலைப்பாட்டை அவர் தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

அதாவது, ‘வன்னியை விட்டு வெளியேற மறுக்கும் மக்களின் நியாயங்களை’ தான் புரிந்து கொள்வதாக சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் நவநீதம்பிள்ளை அம்மையார் தெளிவாக தெரியப்படுத்தியிருந்தார். இவ்வாறான கருத்தை நவநீதம்பிள்ளை அம்மையார் மட்டுமன்றி அனைத்துலக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வேறு சிலரும் கொண்டிருந்த தகவல் 2009 சனவரி மாதத்தின் நடுப்பகுதியில் வன்னியையும் எட்டியிருந்தது.

இத்தகவல் வன்னியை எட்டிய ஓரிரு நாட்களில் ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அக்காசி அவர்கள் கொழும்பில் சென்று இறங்கியிருந்தார். ஆயுதக் களைவிற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இணங்கினால் மட்டுமே வன்னிக்கு தன்னால் பயணம் செய்ய முடியும் என்று ஏற்கனவே எரிக் சுல்கைம் அவர்கள் நிபந்தனை விதித்துக் கடும் போக்கான அணுகுமுறையைக் கைக்கொள்ளத் தொடங்கிய பின்புலத்தில், 21.01.2009 அன்று கொழும்புக்குப் பயணம் செய்த அக்காசி, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உரையாடுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இச்செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாகவே விடுக்கப்பட்டது. மகிந்தருடனும், தமிழ் - சிங்கள - முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்திவிட்டு நாடு திரும்புவதே அக்காசியின் அப்போதைய கொழும்புப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலாக ஊடகங்களின் அறியப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக வந்தடைந்த இச்செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. சிங்கள தேசத்தின் அதிபராக மகிந்தர் பதவியேற்ற பின்னர் வன்னிக்குப் பயணம் செய்வதை தவிர்த்து வந்த அக்காசி, திடீரென தம்முடன் உரையாடுவதில் ஆர்வம்காட்டியமை தமிழீழ விடுதலைப் புலிகளிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பத் தவறவில்லை.

ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உரையாடாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தான் சந்திக்கப் போவதில்லை என்று அக்காசி நிபந்தனை விதித்தமை ஒரு சாதகமான சமிக்ஞையாகவே வன்னியில் பார்க்கப்பட்டது. அதிலும் போர்நிறுத்தம் தொடர்பான ஜப்பானின் நிலைப்பாட்டை நாடிபிடித்துப் பார்ப்பதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்ற அடிப்படையிலேயே அக்காசியின் வேண்டுகை வன்னியில் அணுகப்பட்டது.

இதன்படி 24.01.2009 அன்று மாலை கொழும்பு கறுவாத்தோட்டத்தில் உள்ள ஜப்பானிய தூதரகத்திலிருந்து தொலைபேசி வாயிலாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுடன் அக்காசி அவர்கள் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இருந்த பொழுதும், தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாகவே அக்காசியின் கருத்துக்கள் அமைந்திருந்தன. அதாவது, ‘மக்களின் உயிரிழப்புக்களை தவிர்ப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உண்மையான விருப்பம் இருந்தால் அவர்களை அங்கிருந்து முழுமையாக வெளியேற்றுவதற்கான ஒழுங்குகளை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்யவேண்டும்` என்பதே அக்காசியின் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் வன்னிக்கு அடிக்கடி பயணம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உறவாடிய அக்காசி, எரிக் சுல்கைமின் பாணியில் அந்தர் பல்டி அடித்ததையிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிர்ச்சியடையவில்லை என்றே கூறவேண்டும்.

f6da6d20-fdc6-464b-97db-4c2221b1beba1.jpg

அக்காசியின் கருத்தை விட தமிழீழ விடுதலைப் புலிகளை சீண்டும் வகையிலான மற்றுமொரு `அறிவுரை` மடல் ஒன்று இரண்டு நாட்களில் வன்னியை சென்றடைந்ததை இதற்கான ஒரு காரணமாகக் கொள்ளலாம். அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் அவர்களை சென்றடைந்த இவ் ‘அறிவுரை’ மடலை எழுதியவர் வேறு யாருமல்ல. உருத்திரகுமாரனின் சகபாடியும், ‘றோ’ அமைப்பின் முகவராக அறியப்படுபவருமான நடராஜா இளங்கோ அவர்களே இதனை எழுதியிருந்தார். தமிழில் எழுதப்பட்ட அம்மடலின் ஒரு பகுதி பின்வருமாறு:

“...முதல் கட்டமாக காயப்பட்டவர்களை வெளியில் எடுக்க வேண்டும். அடுத்த கட்டமாக வயோதிபர், பெண்கள், சிறுவர்களை வெளியில் எடுப்பது என்றும், இறுதியில் முழு சனத்தொகையையும் வெளியில் எடுப்பது என்றும் திட்டமிடப்படுவதாகவும், நடேசண்ணரிடம் பேசப்படுவதாகவும் கூறப்பட்டது.

மேலும், கொழும்பு இராஐதந்திர வட்டாரங்களுடன் இது பற்றிப் பேசப்படுவதாகவும் கூறப்பட்டது. இங்கு எழுகின்ற பிரச்சனை, இதனை இயக்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதே. சர்வதேச சமூகமும், இந்தியாவும், ஐ.சி.ஆர்.சியும் மக்களை வெளியில் எடுக்கவேண்டும் என்று கூறுகின்ற போது அதனை மறுப்பது இயக்கத்திற்கு மிகப் பெரிய சர்வதேசப் பின்னடைவைத் தரும்.

இது தெளிவான போர்க்குற்றம் என்று விபரிக்கப்படும். அவர்களைப் பொறுத்தவரை அந்தக் குறுகிய பிரதேசத்தில் மக்களை வைத்துக் கொண்டு போரினை நடத்த முடியாது. மக்களைத் தாக்காமல் போரிடு என்று கேட்பது சாத்தியமற்றது. எனவே, நிரந்தர போர்நிறுத்தம் அல்லது மக்கள் வெளியேறுவது என்ற இரு விடயங்கள் உள்ளன. இதில் மக்களை வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குப் போக வழிவிடுமாறு இயக்கம் கேட்கப்படுவதே சாத்தியமானது என்று அவர்கள் விவாதிக்கின்றனர்...”

வன்னியை விட்டு மக்கள் வெளியேற மறுப்பதில் உள்ள நியாயங்களை தான் புரிந்து கொள்வதாக ஜெனீவாவில் தன்னை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்திருந்த நிலையில், அதே காலப்பகுதியில் ஜெனீவாவிலிருந்து வன்னிக்கு நடராஜா இளங்கோ எழுதிய இவ் ‘அறிவுரை’ மடல், உருத்திரகுமாரன் குழுவினரின் உள்நோக்கங்களை நாம் புரிந்து கொள்வதற்கு போதுமானது என்றே கொள்ளலாம்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.