Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள தேசத்தின் வன்முறை குறைந்தபாடில்லை - அனலை நிதிஸ் ச. குமாரன்

Featured Replies

ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசு, இன்று முன்னிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது. விசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கி, கைதிகளை அடித்துக் கொல்லும் நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள் செய்கிறார்கள். நூறு முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்குமளவு தமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது.

சிங்கள அரச பயங்கரவாதத்தின் குகைக்குள் இருந்து கொண்டு மூச்சுவிடும் தமிழ் அரசியல்வாதிகளினால் வெளிப்படையான எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. மறைமுகமாக சில இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளையே தமிழ் அரசியல்வாதிகள் (தமிழ்த் தேசிய முன்னணி அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்) செய்து வருகின்றனர். சிங்கள அரசு செய்யும் எந்தவொரு வன்முறைகளையும் கண்டித்தால் அடுத்த கணமே அவர்களுக்கும் மரண அச்சுறுத்தல்கள் விடப்படுகின்றன. இப்படியான தோல்வியுற்ற நாட்டிலேயே தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் (அன்றாடம் செத்துப் பிழைத்து வாழ்கிறார்கள்).

அன்று ஆயுதப் போருக்கு எண்ணெய் ஊத்தி பத்திவைக்கப்பட்ட சிறைக்கைதிகளின் கொலைகள் (குட்டிமணி, ஜெகன் மற்றும் தங்கத்துரை உட்பட 35 அரசியல் கைதிகள்) மீண்டும் மகிந்தாவின் ஆட்சிக்காலத்தில் உருப்பெற்றுள்ளது. ஐந்தாம் கட்ட ஈழப் போரை ஆரம்பிக்க தூண்டுகிறது மகிந்தாவின் அரசு போலும். அப்பாவிகளை பணயக் கைதிகளாக வைத்து அரசியல் நடத்தும் சிங்கள அரசியல்வாதிகள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்குப் பதில் நாட்டை குட்டிச்சுவராக்கவே முனைகிறார்கள். சிறிலங்காவில் இனவாதத்திற்கு இடமில்லையென்று கூறிவிட்டு இனவாதத்தை விதைக்கும் மகிந்தா போன்ற அரசியல்வாதிகளினால் சிங்கள மக்களுக்கும் அமைதியான வாழ்வு கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மை.

தமிழர்கள் மீது ஏவப்படும் தொடர் வன்முறை.

போர் ஓய்ந்த காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறுபட்ட இன்னல்களை தமிழ் மக்கள் அனுபவிக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரதேசங்களை புனரமைப்பதாகக் கூறிவிட்டு அவர்களின் இடங்களை சிங்கள மயமாக்கும் திட்டமே நடைமுறையில் இருக்கிறது. மகிந்தாவின் புதல்வரே தமிழ் மக்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் புரோகிதர் வேலையைச் செய்வதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது இங்கு குறிப்பிடத்தக்கது. வெளியேறும் தமிழ் மக்களிடம் பணத்தை மட்டும் வாங்காமல், அவர்களுடைய சொத்துக்களையும் பெற்ற பின்னர் சிங்கள மக்களை குடியேற்றும் வேலையையும் பகிரங்கமாக செய்கிறார்.

இரவோடு இரவாக பல்லாயிரம் சிங்கள மக்கள் தமிழர்களின் பூர்வீகக் காணிகளில் குடியமர்த்தப்படுகிறார்கள். இதுபோன்ற வக்கிரப் போக்குடைய அரச பயங்கரவாதச் செயற்பாட்டை யாரும் கேட்க முடியாத சூழ்நிலையை உண்டுபண்ணி வைத்துள்ளது சிங்கள அரசு. வெளிநாடு இராஜதந்திரிகளுக்கு விருந்துகள் அளித்து தமிழ் மக்களுக்கே அனைத்து புனரமைப்பு வேலைகளையும் குறிப்பாக தமிழர் பகுதிகளில் செய்வதாக பொய்யான தகவல்களை அளித்துவிட்டு சிங்களக் குடும்பங்களை தமிழர் நிலங்களில் குடியமர்த்தும் வேலைகளே நடைபெறுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் குடும்பத் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு சகோதர்களை அனுமதியின்றி உள்பிரவேசித்த சிங்களப் படையினர் தாக்கி, நான்கு பிள்ளைகளின் தந்தையை கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை உண்டுபண்ணியது.இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி தமிழர் பகுதிகளில் நடைபெறுகிறது. கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அன்றாடம் தமிழர்கள் சந்திக்கும் நிகழ்வுகளாகிவிட்டது.

தமிழ் அரசியல்கைதிகளை அன்றாடம் சித்திரவதை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. பயங்கரவாதத்தின் விளைவே தமிழ் இளைஞனின் மரணமென ஜக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கைதிகள் கோரிக்கையை வைத்துத்தான் பணயம் வைத்தார்களே தவிர, யாரையும் தாக்கியதாக தெரிவிக்கப்படவில்லை. எனவே கையாலாகாத கைதிகளை படுமோசமாக்தாக்கியதன் விளைவே கைதிகள் வைத்தியசாலைகளுக்கும்வேறு சிறைச்சாலைகளுக்கும்மாற்றப்பட்டதுவாகும்." இச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.

உலகத் தமிழர்களை உசுப்பிவிட்ட சிங்களம்

சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பேச்சுக்கு அச்சுறுத்தல் விட்டது மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் சீண்டிவிட்டது சிங்களம். நூறு முள்ளிவாய்க்கால்களைவிரும்புகிறாரா சம்பந்தனென்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேட்டது சம்பந்தனுக்கு எச்சரிக்கை விடுவது மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்தது. தமிழகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படத் தொடங்கியவுடன் சற்று கலங்கியது சிங்களம். இதனை அடக்க வேண்டுமாயின் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் பலனளிக்கும் என்று கருதியது சிங்கள பயங்கரவாத அரசு போலும்.

“சம்பந்தனின் கருத்துகள் எம்மைச் சீண்டுவதாக உள்ளது. ஒரு முள்ளிவாய்க்கால் போதும் என்று கருதுகிறோம். இன்னும் 100 முள்ளிவாய்க்கால்கள் அவருக்குத் தேவையா? அத்தகைய நிலையை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கக் கூடாது” என்று கூறியிருந்தார் சம்பிக்க ரணவக்க. இக்கருத்தைக் கண்டித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதினார் (இவர் கடிதம் எழுதுவதில் வல்லவர்). பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) நிறுவனர் ராமதாஸ், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

சிங்கள அமைச்சரின் கருத்துக்கும் அதன் பின்னர் வெளிவந்த தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளின் எதிர்ப்புக்கும், இந்தியாவின் முன்னணி ஆங்கில ஊடகங்கள் பலவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.முக்கியஇந்திய ஆங்கில நாளேடுகள் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே இதுநாள் வரை எழுதி வந்துள்ளன. ஒரு சில தமிழ் பத்திரிகைகளைத் தவிர பல தமிழ் மொழிப் பத்திரிகைகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்டுரைகளையும், செய்திகளையும் தற்போது வெளியிட்டு வருகின்றன.

மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி அனுப்பிய கடிதத்தில் எழுதியதாவது, “ஆத்திரத்துடன் கூடிய இந்த பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு செல்வதுடன், மனிதநேயத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க அவ அரசை அறிவுரைக்க வேண்டும். ஐ.நா. சபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்க வேண்டும்" என்று கருணாநிதி வலியுறுத்தி எழுதியிருந்தார்.

சிறிலங்காவின் அமைச்சரின் பேச்சின் அடிப்படையில் சிறிலங்கா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கை ஐ.நா. மூலம் தொடர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இது தொடர்பாக பழ. நெடுமாறன் தெரிவிக்கையில், “ராஜபட்சவிலிருந்து அவருடைய அமைச்சர்கள் வரை உச்சக்கட்ட இனவெறியுடன் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். ஐ.நா. சபை இந்தப் பிரச்னையில் தலையிட உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் வலியுறுத்த வேண்டும்." இது தொடர்பாக தொல். திருமாவளவன் கூறுகையில், “தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியிருக்கும் அந்த அமைச்சரை இந்திய அரசும், தமிழக அரசும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

இந்தப் பேச்சைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தும்." துப்பாக்கிகளின் ஓசைகள் ஓய்ந்தாலும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் ஓய்ந்தபாடில்லை. அன்றாடம் தமிழர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து நடைப்பிணங்களாகவே வாழ்கிறார்கள். நாதியற்ற தமிழனுக்காக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்கிற காரணத்தினால் ஆட்டம் போடுகிறது சிங்களம். இரண்டு கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடொன்று, எட்டுக் கோடி தமிழ் மக்கள் 35-மைல்களுக்கு அப்பால் இருப்பதைப் பார்த்தும் சேட்டை விடுகிறார்கள் என்றால் நிச்சயம் இவ் எச்சரிக்கை தமிழ் நாட்டை நோக்கியே அமைந்துள்ளது. இதுவரை உறங்கியது போதும், கிழந்தெழும்பும் காலம் வந்துவிட்டது என்பதனை உணர்ந்தாவது தமிழகத் தமிழர்கள் சிங்களத்துக்கு எதிராக படை திரட்டினால் சிங்களம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.