Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல

Featured Replies

பௌசர் -

Fauzwr_CI.jpg

பௌசர் -

மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல -

கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆளும் அரசாங்க கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என அக்கட்சித் தலைமை எடுத்துள்ள அரசியல் தீர்மானம் முஸ்லீம்,தமிழ் அரசியல் வெளியில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படு த்தியுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது.

முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைக்காகவும்,சமூக பாதுகாப்பினை வலுப்படுத்தி உறுதிப்படுத்து வதற்காகவும் ஸ்தாபன மயமான இவ்வியக்கம், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை வழிப்படுத்தும் வரை,முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கத்தின் இடத்தினை இலங்கை முஸ்லிம்களுக்குள் ஓரளவு பூர்த்தி செய்கின்ற அரசியல்பண்புகளுடனும் தனது அரசியல் போக்கினை முன்னெடுத்து வந்திருக்கிறது.

அஷ்ரப் அவர்களின் அகால மறைவின்பின் நீடித்த உட்கட்சி அரசியல் முரண்பாடுகளினால் ,காலத்திற்கு காலம் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சிதறுண்டு பல்வேறு குட்டிகுட்டி தலைமைகளின் கீழும்,பிராந்தியத் தலைமைகளின் கீழும் பல அரசியல் கட்சிகளாக மாறின. பேரியல் அஷ்ரப் தலைமையில் தேசிய ஐக்கிய முன்னணி,அதாஉல்லா தலமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் தலைமையிலான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என கட்சிகளின் அடையாளங்களும் தலைவர்களின் பெயர்களும் அதிகரித்தன.என்னதான் கட்சி பல்வேறு அணிகளாகப் பிரிந்தாலும், முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் தலைமையாக முஸ்லிம் காங்கிரஸ் நீடித்ததற்கு அதனுடைய ஸ்தாபன பெறுமானமும்,அக்கட்சி உருவானதன் தேவையும் நோக்கமும் பின்புலமாக இருந்து வந்துள்ளன.

முஸ்லீம் காங்கிரஸ் தலைவராக ஹக்கீம் தேர்ந்தேடுக்கப்பட்டபின்,அவர் கட்சியை வழிநடாத்தி எடுத்து வந்துள்ள அரசியல் முடிவுகள் ,முஸ்லீம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் இயக்கம் எடுக்க வேண்டிய தெளிவான முடிவுகள்,செயன்முறைகளுக்கு மாற்றாகவும், முரணாகவுமே பல்வேறு சந்தர்ப்பங்களில் இருந்து வந்துள்ளன. (நோர்வேயின் சமாதான பேச்சுவார்த்தை தொடக்கம் இன்றைய அரசியல் முடிவு வரை) இந்த முடிவுகளுக்கு ஹக்கீம் மட்டும் காரணம் என அவர் மீது குற்றம் சாட்ட முடியாது.

அக,புற நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் சூழலும், முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது . இதில் பிரதானமாக ஆளும் அதிகாரவர்க்கம் முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு , கட்சி கட்டுப்பாட்டினையும் மீறி ஆளும் வர்க்கத்தின் முடிவுகளை ஆதரிக்கின்ற போது அமைச்சர்,பிரதி அமைச்சர் பதவிகளையும் ,அந்தஸ்து சொகுசுகளையும் வழங்க தயாரா இருந்தமை,இருக்கின்றமை மிக முக்கிய காரணமாக விளங்குகிறது.

முஸ்லிம் சமூகத்திற்குள்ளான அக நிலைமைகளில் முஸ்லீம் மக்களில் ஒரு சாரார் அமைச்சுப் பதவி பெற்று வருகின்றவர்களின் பின்னால், ஊர் அபிவிருத்தி, தனிப்பட்ட நலன்களை முன்வைத்து அவர்களை ஆதரிக்கவும் அணிதிரளவும் உள்ள சமூக வாய்ப்பும் அங்கீகாரமும். முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பிரிந்து சென்றால் முஸ்லிம்களின் குறுநில மன்னராகி விடலாம் என்பது நீடிக்கின்ற அரசியல் சூழல்.இரண்டாவது ஹக்கீம் கட்சி தலைவரானதன் பின் கட்சிமுடிவுகளை எடுக்க அவரை வழிப்படுத்துகின்ற மறைகரங்களின் திணிப்பும் செல்வாக்கும்.,முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களால் எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு அரசியல் முடிவுகளிலும் இந்த விடயங்கள் தாக்கம் செலுத்தி வருகின்றன .

இன்றைய மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், முஸ்லிம் மக்களின் தேசிய இன உரிமைகளையோ, அவர்களுக்கான சமத்துவ இருப்புக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக் கூடிய அரசாங்கம் அல்ல என்பது பகிரங்கமாக தெரிந்த உண்மைதான். ஒரு படி மேலாக இந்த அரசாங்கத்தினுள் அமைச்சர்களாக ,பிரதி அமைச்சர்களாக பதவி வகிக்கின்ற முஸ்லிம் மக்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரிந்ததே. ஆனாலும் ஆளும்வர்க்க அதிகாரத்தின் ருசி நன்கு தெரிந்தவர்களாக முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் இன்று உள்ளனர்.

பாராளுமன்றத்தில் உள்ள பதினாறு முஸ்லிம் உறுப்பினர்களில் பதின்நான்கு பேர், ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்களே. அரசாங்கத்திற்கு யார் கூடிய விசுவாசத்தினை காட்டமுடியும் என்ற சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருப் பவர்களாகவும், யாரை கவிழ்த்து முழு அதிகாரத்தினை பெறலாம் என சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கக் கூடிய காய்நகர்த்தலில் கைதேர்ந்தவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.

முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை பிரதானப்படுத்தாது,முஸ்லிம் மக்களின் விடயத்தில் அரசாங்கத்தின் எதிர்மறையான நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்ளாது, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்தமைக்கான காரணமாக சொல்லப்படுவது, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்க கட்சி பட்டியலில் தேர்தல் கேட்காது,வேறு முடிவினை எடுக்கின்ற சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியாகயுள்ள மூன்று பேர் அமைச்சுப் பதவிக்காக அரசாங்கத்தினை ஆதரிக்க தயாராக இருந்தமைதான், முஸ்லிம் காங்கிரஸ் இந்த முடிவினை நோக்கி தள்ளியமைக்கான பொறுப்பும் பொறியும் என சொல்கிறார்கள்.

இப்படியான ஒரு சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று எடுத்துள்ள அரசியல் முடிவினை கேள்விக்குட் படுத்துபவர்களும், இம்முடிவில் அதிருப்தி கொள்ளும் பிரிவினர் தொடர்பாகவே இங்கு எனது கவனத்தினை குவிக்க விரும்புகின்றேன். இவர்கள் முஸ்லிம்களுக்கான அரசியல் சமூக உரிமைகளில் அக்கறை கொண்டோராகவும், இவை தொடர்பில் அரசியல் பிரஞ்ஞை மிக்கவர்களாக இருப்பதுடன், இன்றைய அரசியல் நிலைமைகளில் தேசிய முஸ்லிம் அரசியல் இயக்கத்தின் தேவையை நன்குணர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

முதலாவது பிரிவினர் முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைமையாக ஹக்கிமையும் நம்பிக் கொண்டிருப்பவர்களாகும். முஸ்லிம்களுக்குள் பல கட்சிகளும். சிறுசிறு அரசியல் தலைமைகள் உருவான போதும், பல தவறான முடிவுகள் கட்சித் தலைமையால் எடுக்கப்பட்ட போதும் , தனிப்பட்ட நலன்களை அடைய வாய்ப்பிருந்தும், முஸ்லிம் காங்கிரசுடன் இவர்கள் இதுவரை இருப்பது, முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரசை இவர்கள் பார்ப்பதும், அதற்கான தேவை முஸ்லிம்களுக்குள் மேலும் வலுப்பெற்று இருப்பதினாலுமாகும்.

முஸ்லிம் மக்களுக்குள் இருக்கும் இன்னுமொரு சிறு தொகைப் பிரிவினர் முஸ்லிம்களுக்குள் தொழில்படுகின்ற எந்த கட்சிகளையும் சாராது, இவைகளில் நம்பிக்கை இழந்து முஸ்லிம்களுக்கான பலம்மிக்க அரசியல் இயக்கத்தின் தேவைக்காக காத்து இருக்கின்றனர். இவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாடுகள் மீது அதிருப்தி கொண்ட,ஆனால் வேறு முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க முன்வராதவர்கள். இவ்விரு பிரிவினர்களையும் முஸ்லிம் காங்கிரசின் இந்த முடிவு பாதித்திருக்கிறது. முதலாவது பிரிவினரை அதிர்ச்சி கலந்த தாக்கத்துடனும்,இரண்டாவது பிரிவினரை எதிர்பார்த்ததுதான் என்கிற அளவிலுமாக...

மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், முஸ்லிம் மக்களின் அரசியல் சமூக இருப்பு ஆளும் அதிகார வர்க்கத்தால் கேள்விக்குட்படுத்தப்படுகின்ற போது, அதே ஆளும் வர்க்கத்துடன் முற்று முழுதான சரணாகதித் தன்மையுடன் தேர்தல் கூட்டணிக்கு செல்வது என்பது ,ஒரு தேசிய அரசியல் இயக்கத்திற்கும், சாதாரண அரசியல் கட்சிகளுக்கு மிடையேயான அரசியல் பண்பு, அரசியல் இலக்கு வேறுபாட்டினை காண முடியாத ஒத்த தன்மையினை இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியுள்ளமை முஸ்லிம் காங்கிரசுக்குள் இருப்பவர்களை சிந்திக்க வைத்துள்ளது. அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் தலைமையிலான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகளுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையேயான வேறுபாட்டினை தேசிய அரசியல் எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் காண முடியாத தோற்றம் இப்பிரிவினரை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது என துணிந்து சொல்லமுடியும்.

மறைந்த அஹமது லெப்பையால் ஒரு பாலர்பாடசாலை கட்டிடத்தில் உருவாக்கப்பட்டு மறைந்த அஷ்ரப் அவர்களால் வழிநடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் இயக்கமான முஸ்லிம் காங்கிரசை, ஹக்கிம் பாராளுமன்ற ,மாகாணசபை அதிகாரத்திற்கான ஒரு சாதரணமான அரசியல் கட்சியாக மாற்றி,தேசிய அரசியல் இயக்கத்திற்கான அதன் அரசியல்பண்பை முடித்து வைத்துள்ளார் என்றே நானும் கருதுகிறேன்.

இனிவரும் காலத்தில் இக்கட்சியும் முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண அரசியல் கட்சியே. இக்கட்சியின் பண்பும் நோக்கும் மாறாத வரை இக்கட்சியை ஒரு தேசிய அரசியல் இயக்கமாக சித்தரிப்பது அரசியல் குருடர்களின் நிலைக்கு ஒப்பானது.முஸ்லிம்களின் தேசிய அரசியல் உரிமையில் அக்கறையும் அர்ப்பணிப்பும் கொண்ட முஸ்லிம் மக்கள் பிரிவினர் மிக மோசமாக கைவிடப்பட்டுள்ளனர்.அவர்களின் பாத்திரமும் பங்களிப்பும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவின் பின் மிகப் பொறுப்பு வாய்ந்ததாகவும் மாறி உள்ளது.

கட்டுரையாளர் பௌசரின் கருத்துக்கு பதில் கருத்துகளோ கட்டுரைகளோ ஆரோக்கியமான வகையில் எமக்கு அனுப்பி வைக்கப்படும் இடத்து இதனை ஒரு விவாதமாக முன்னெடுக்கத் தயாராக இருக்கிறோம். எமது மின்அஞ்சல் முகவரி

radiokuru@yahoo.com

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80331/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.