Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிகின்றதா? - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

தமிழ் மக்களின் கலாசாரத்தையும் பண்பாடு - பழக்க வழக்கங்களையும் மிக மோசமாகப் பின்னடைய வைப்பதற்கான யுத்தம் ஒன்று இன்று தமிழர் தாயகப் பகுதியில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த யுத்தம் நீண்ட காலத் திட்டமிடல்களுடன் செயற்படுத்தப்படுகின்றது. தமிழ் இளைஞர், யுவதிகளின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் அவர்களின் போராட்ட உணர்வையும் சுதந்திர வேட்கைகளையும் திசை திருப்புவதற்காகவே இந்த கலாசாரப் பிறழ்வு யுத்தம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் கலாசாரம் சீரழிந்துவிட்டது என்றும் யாழ்ப்பாணம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது என்றும் உலகம் பூராகவும் கதை பரப்பப்படுகிறது. யாழ்ப்பாணம் ஏதோ குட்டிச்சுவராகிவிட்டது என்ற தோரணையில் சில இணையத் தளங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனை உலகம் பூராவும் உள்ள தமிழ் மக்கள் தினமும் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகளை வாசிக்கும்போது எங்கள் உள்ளம் வெடிக்கின்றது.

இந்த யுத்தத்தின் மையப் புள்ளிகளாக சிறீலங்காவிலிருந்து இயங்குகின்ற சில தமிழ் இணையத்தளங்கள் செயற்படுகின்றன. குறிப்பாக இந்த இணையத்தளங்கள் அரச ஆதரவுபெற்ற இணையத் தளங்களாகவும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களிடம் நிதி பெற்றுக்கொண்டு இயங்குகின்ற இணையத் தளங்களாகவும் உள்ளன. யாழ் குடாநாட்டில் நடைபெறுகின்ற சாதாரண சம்பவங்களையும் பெரிய சம்பவங்களாக மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம் இவை தங்கள் இணையத் தளங்களை பிரபலமடைய வைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளன.

ஆபாசம் மற்றும் பாலியல் சார் செயற்பாடுகள் இளைய தலைமுறையைக் கவரும் என்பதால் அந்த ஆயுதத்தையே அவை பயன்படுத்துகின்றன. உலகிலுள்ள ஒவ்வொரு இனங்களுக்குள்ளும் தமிழினம் தனக்கெனத் தனியான கலாசாரங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு தமிழ் மகனிலும் இந்தப் பண்பாட்டுக் கோலங்களை அவதானிக்க முடியும். இந்தப் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாப்பதற்காக தமிழினம் தனது உயிரைக் கொடுத்த வரலாறுகளும் உண்டு.

Jaffna%2002.jpg

தமிழினம் வெறுமனே நிலத்துக்காக மட்டும் இதுவரை போராடவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற போராட்டமானது மண்மீட்புக்கானது மட்டுமல்ல. கல்வியும் மொழியும் பண்பாடும் நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்று எமது தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போல தமிழ் மக்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமே கடந்த 30 வருடங்களாக இடம்பெற்றது.

யுத்தத்துடன் மட்டும் நின்றுவிடாமல் சம காலத்திலேயே எமது அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் தேசியத் தலைவர் முனைப்புடன் செயற்பட்டார். அதற்காக பல அமைப்புகளை உருவாக்கி அவற்றைத் திறம்படச் செயற்படுத்தியிருந்தார். இது சர்வதேச ரீதியாக எமது இனத்தின் பெருமையைப் பறைசாற்றியிருந்தது.

ஆனால் இன்று எமது தமிழினத்தின் கலாசாரத்தை திட்டமிட்டுச் சீரழிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகின்றது. சிறீலங்கா அரசாங்கத்தினாலும் அவர்களுடன் சேர்ந்து இயங்குகின்ற சில ஒட்டுண்ணிகளாலுமே இந்தச் சீரழிவு தொடர்பான செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. கலாசார ரீதியான பிறழ்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் தமிழினத்தின் சுதந்திரக் குரலை அடக்கலாமென்று இவர்கள் கனவு காண்கிறார்கள். மேலும் தமிழினம் கடைகெட்ட இனம்.

இவர்கள் உலக மாற்றங்களையும் நாகரீக வளர்ச்சிகளையும் எட்டவில்லை. மனித இனம் என்ற மாயத் தோற்றத்துக்குள்ளேயே வாழ்கிறார்கள் என்பதை பறைசாற்றுவதன் மூலம் உலகில் தமிழினத்தின் இருப்பை இல்லாதொழிக்க முற்படுகின்றனர். சிறீலங்கா அரசினதும் அதன் அடிவருடிகளினதும் இந்தச் சதித் திட்டங்களுக்கு இணையத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை, இந்தச் சதித் திட்டங்களை அறியாத யாழ் குடாநாட்டிலுள்ள சில பத்திரிகைகளும் இந்தச் செயல்களுக்குத் துணைபோகின்ற மனம் வருந்தத்தக்க செயலில் ஈடுபடுகின்றன.

இணையங்களும் பத்திரிகைகளும் கூறுவதைப் போல யாழ் குடாநாடு ஒன்றும் கெட்டுப்போகவுமில்லை குட்டிச்சுவராகவுமில்லை. எமது தமிழ்ப் பண்பாடு கலாசாரம் இங்கே தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இதனை யாரும் மறுக்க முடியாது. அதற்காக சில பிறழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவில்லையென்று நாம் கூற வரவில்லை. அதனை மூடி மறைக்கவுமில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனத்தொகை முன்னரை விட சற்று அதிகரித்திருக்கின்றது. இதனைவிட இங்கே இப்போது கட்டுப்பாடுகள் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி அதிகாரம் இங்கே இருந்த போது தமிழீழ சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்பட்டன. எவர் குற்றம் செய்தாலும் பாரபட்சமற்ற முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனால் அப்போது அதிகளவான பாரிய குற்றச் செயல்களோ பாலியல் வல்லுறவுகள் உள்ளிட்ட கலாசாரப் பிறழ்வுகளோ இடம்பெறவில்லை.

ஆனால், தற்போது சிறீலங்கா காவல்துறையினரின் சட்டதிட்டங்களே தமிழீழம் எங்கணும் அமுல்படுத்தப்படுகின்றன. இவர்களின் செயற்பாடுகள் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதேயழிய அவர்களுக்குத் தண்டனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதல்ல. சிறீலங்காவின் சட்டப் புத்தகத்தில் பல ஓட்டைகள் உள்ளன. குற்றம் செய்த எவரும் இந்த ஓட்டைகளுடாக வெளியே வர முடியுமேயழிய உரிய தண்டனை அனுபவிக்க முடியாது.

இதனாலேயே சிறீலங்காவில் இன்றுவரை குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலை தோற்றம் பெற்றிருக்கிறது. இதனால் யாழ் குடாநாட்டிலும் சில பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், கணவனின்றி குழந்தை பெற்றுக்கொள்ளல் போன்ற சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனை எவருமே மறைக்க முடியாது.

அதற்காக இணையத் தளங்கள் கூறுவதைப் போன்ற அளவிற்கு யாழ் குடாநாட்டின் கலாசாரம் சீரழியவில்லை. சிறீலங்கா அரசின் திட்டமிட்ட பரப்புரைகளுக்காக, அவர்களின் பணத்திலும் அவர்களின் ஆசிர்வாதங்களுடனும் இயங்குகின்ற இந்த இணையத் தளங்கள் கூறுகின்ற கதைகளை வைத்து யாழ் குடாநாட்டின் கலாசாரம் சீரழிந்து விட்டதென்று யாரும் முடிவெடுத்துவிடாதீர்கள்.

சிறியதொரு சம்பவம் நடைபெற்றாலும் இணையத்தளங்கள் அதை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிடுகின்றன. அது உலகம் பூராகவும் பரவுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணம் சங்கானையில் 45 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார். இவர் உயிரிழந்தவுடன் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தி என்னவென்றால், குறித்த பெண் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டபோதே உயிரிழந்தார் என்பதாகும்.

அவரின் பெயர், முகவரி உட்பட அனைத்து விடயங்களையும் குறிப்பிட்டு இவரின் கணவர் வெளி

நாட்டில் வசிக்கின்ற நிலையில் இவர் தனியார் மருத்துவமனையன்றில் கருக்கலைப்பு செய்தபோதே உயிரிழப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் குறித்த பெண், வயிற்றிலிருந்த கட்டியொன்றுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரின் கணவர் வெளிநாடொன்றில் வசிக்கிறார்.

இவருக்கு 20 வயதில் ஒரு மகள் உட்பட மேலும் இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது பிள்ளைகள் சகிதம் வெளிநாட்டிலுள்ள கணவரிடம் சென்ற மேற்படி பெண் ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்துவிட்டு வந்த நிலையிலேயே வயிற்றிலிருந்த கட்டிக்குச் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தார். இதனை ஊதிப் பெருக்க வைத்த இணையத்தளங்கள், குறித்த பெண் கலாசாரச் சீரழிவில் ஈடுபட்டார் என்றும் இதனாலேயே வயிற்றில் குழந்தை உருவாகி கருக்கலைப்புச் செய்த போது உயிரிழந்தார் என்றும் கதையைப் பரப்பின.

இதேபோன்று இணையத் தளங்கள் வெளியிடுகின்ற பல தகவல்களை இங்கே எடுத்துக்கூற முடியும். இவ்வாறான தவறான தகவல்கள் மூலம் தமிழினத்தின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கொச்சைப்படுத்துவதற்கு முற்படுகின்ற பிரகிருதிகளை புலம்பெயர் தமிழ் மக்கள் அடையாளம் காணவேண்டும். அதேவேளை எமது தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் ஆணிவேரை அழியாமல் பாதுகாப்பதற்கும் புலம்பெயர் சமூகம் முன்வர வேண்டும். தாங்கள் சார்ந்த நாடுகளில் எமது இனத்தின் பெருமைகளைப் பாதுகாப்பதுடன் பறைசாற்றவும் வேண்டும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.