Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த சிந்தனை : சில குறிப்புகள் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிந்தனை : சில குறிப்புகள் - யமுனா ராஜேந்திரன்

11 நவம்பர் 2012

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரும் இன்னாள் ‘மல்ட்டி மில்லியருமான’ டோனி பிளேரை கால்சராய் அணிந்த மார்கரட் தாட்சர் எனச் சொல்வது உண்டு. தொழிற்கட்சியை ‘அரைவாசி கன்ர்வேடிவ்’ கட்சியாக மாற்றியதால்தான் டோனி பிளேரை அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். அது எப்படி? தொழிற்கட்சியில் தொழற்சங்க இயக்கத்தின் செல்வாக்கை அவர் இல்லாது செய்தார். கன்சர்வேடிவ் கட்சியின் நிறவாத இனவாத குடியேற்றக் கொள்கையினை அவர் ஏற்றார். கன்சர்வேடிவ் கட்சியினை விடவும் மோசமான ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையை அவர் ஏற்றார். தொழிற்கட்சியை அரைவாசி கன்சர்வேடிவ் கட்சி ஆக்கியதின் மூலம் கன்சர்வேடிவ் கட்சியினை அவர் கலகலக்க வைத்தார்.

பழமைவாதிகளின் ஆதரவு அனைத்தையும் அவர் தமதாக்கிக் கொண்டார். ஈராக் பேரழிவு ஆயுதங்கள் தொடர்பாக உலகுக்குப் பொய் சொல்லி ஜோர்ஜ் புஸ்சடன் சேர்ந்து ஐந்து இலட்சம் குழந்தைகளையும் பட்டினி போட்டு மருத்துவ வசதியில்லாது கொலை செய்தார்.

இந்த அரசியலுக்கு இலங்கையில் இட்ட பெயர்தான் மகிந்த சிந்தனை.

மகிந்த சிந்தனை என்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் மிக இழிந்த வடிவம். பதவிகளையும் அது தரும் அதிகார சுகத்தினையும் அது தரும் நிதிசார்ந்த ஆதாரங்களையும் முன்வைத்து ஒரு அரசியல் அமைப்பைக் கட்டுவதும், அந்த அமைப்பைத் தனது குடும்ப அதிகாரமாக உத்தரவாதப்படுத்திக் கொள்வதும்தான் மகிந்த சிந்தனை.

மத்தியில் இரு தமிழ் அமைச்சர்கள், தமிழ் அரசியல் ஆலோசகர் ஒருவர், வடக்கின் எதிர்கால முதலமைச்சர் கனவில் விடப்பட்டிருக்கும் முன்னாள் புலிகளின் தலைவர் ஒருவர் என இவர்களது அரசியல் என்ன? இலங்கை அரசு நிறுவனம் தொடர்பாக, அதிகாரப் பரவல் தொடர்பாக, கோதபாயவின் 13வது சட்டத் திருத்த நிராகரிப்பு தொடர்பாக இவர்களது அரசியல் என்ன? பூஜ்யமே இவர்களது அரசியல். அதிகார சுகத்தினாலும் பதவி சுகத்தினாலும்தான் அது சார்ந்த நிதி சார்ந்த நிம்மதியினாலும் மகிந்த ராஜபக்சே இவர்களை அடித்திருக்கிறார்.

அதிகாரத்தின் வலிமையை அது தரும் சுகந்தத்தின் வாசனையை மிக நன்கு அறிந்தவர் மகிந்த ராஜபக்சே.

இது மகிந்த சிந்தனையின் ஒரு கூறு. மகிந்த சிந்தனையின் பிரதான கூறும் இதுதான்.

முஸ்லீம் அரசிலையும் அரசியல்வாதிகளையும் அவர் இதே அடிப்படையில்தான் கையாள்கிறார். மத்தியிலும் மாகாணத்திலும் பதவிகள், அதிகார சுகம் போன்றவற்றின் விலைதான் முஸ்லீம் காங்கிரஸ் திவிநெகும சட்டத்திற்கு ஆதரவாக அளித்த வாக்குகள்.

மகிந்த அரசின் அதிகாரபூர்வப் பேச்சாளர் ஒரு முறை அறிவித்தார் : அரசின் கதவுகள் திறந்தே இருக்கிறது, எவரும் வரலாம், போகலாம். கம்யூனிஸ்ட்டுகள், தமிழ் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், சிங்கள பௌத்த பாசிஸ்ட்டுகள் என அனைவரும் அரசக்குள் வரலாம, போகலாம் என்றார் அவர்.

டோனி பிளேரின் அதே தந்திரம்.

சிங்கள பௌத்த பாசிசத்தின் குரலாக இருக்கிறார் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய. இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளை இந்தியப் பாராளுமன்றத்தின் தனக்கு ஆதரவாகத் திருப்ப முயற்சி செய்ய வேண்டுமா? மகிந்த ராஜபக்சே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் டி. யூ. குணசேகராவை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களிடம் பேசச் செய்வார். கியூபாவுக்கு தத்துவம் படித்த இடதுசாரி தாயன் ஜயதிலகவை அனுப்புவார்.

ஓரே சமயத்தில் ஒருவர் பௌத்த சிங்கள இனவாதியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரியாகவும், தமிழினக் காவலராகவும், இஸ்லாமியரின் காவலனாகவும் இருக்க முடியுமா? தமது குடும்ப அதகாரத்தையும் அது தரும் நிதி ஆதாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதுதான் நோக்கம் என்றால் அது முடியும்.

இன்னொன்றும் இதனால் ஆகும். சிங்கள பௌத்த இனவாத பாசிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களின் ‘தனித்துவ அரசியலை’ இதனால் இல்லாது செய்வதோடு இவர்களது வாக்கு வங்கிகள் அனைத்தையும் தன்னை நோக்கித் திருப்ப இதனால் ஆகும். அரசியல் இலட்சியங்கள், கோட்பாடுகள், இலக்குகள் அனைத்தையும் சிதறடித்து அந்த இடத்தில் பதவி சுகத்தையம் அதிகார வாசனையையும் நிதியாதார போதையையும் மாற்றாக முன்வைக்க முடியும்.

ஜாதிக ஹெல உறுமயாவுக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான கேவலமான விவாதத்தை இப்படியல்லாமல் வேறு எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

இலங்கையில் ஜனநாயகம்தான் நிலவுகிறது என்பதற்கான ஆதரமாக இதனை மகிந்த ராஜபக்சே முன்வைக்கலாம். பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் கொழும்பில் கூடிய வேளையில் தமது கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருந்த கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தை ஜனநாயக நடவடிக்கை என வரவேற்றார் ராஜபக்சே. அடுத்துச் சொன்னார் : கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் ஆர்ப்பாட்டமெல்லாம் செய்யக் கூடாது, போராட்டமெல்லாம் செய்யக் கூடாது, என்னோடு பேச வரவேண்டும் என்றார் மகிந்த.

இதுதான் மகிந்த சிந்தனை.

மகிந்த சிந்தனை என்பது அரசியல்வாதிகளை இரைக்கு அலையும் வேட்டை நாய்களாக உருவகித்திருக்கிறது. பதவி, அதிகாரம், அது தரும் நிதியாதாரம் என்பதுவே மகிந்த சிந்தனை கொண்டிருக்கும் இரை. அதனை தத்தமது மக்களின் அடிப்படை வாழ்வு குறித்துக் கவலைப்படாத தமிழ் அரசியல்வாதிகள், இஸ்லாமிய அரசியல்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், சிங்கள இனவாதிகள் என பதவி, அதிகாரம், அது தரும் நிதியாதாரம் குறித்த சுகம்தேடிய அனைவருக்கும் மகிந்த ராஜபக்சே கச்சிதமாகப் பகிர்ந்து அளித்திருக்கிறார்.

வேட்டை நாய்கள் தமக்குள் அடித்துக்கொண்டாலும் அதற்கு இரை சரியாப் போடப்படுமானால் அவைகள் தன் பின்னால் வாலைச் சுருட்டிக்கொண்டு வரும் எனும் பாராளுமன்ற ஜனநாயக மந்திரம் அறிந்த சிந்தனையாளர் மகிந்த ராஜபக்சே. இலங்கை அரசியலில் கோட்பாடு, இலட்சியம், நாடு குறித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் சக்திகள் என்பன பரிமாணம் பெறாமல் மகிந்த ராஜபக்சேவுக்கு மாற்று என்பது சாத்தியமில்லை.

இதுவே இன்றைய நிலைமையில் மகிந்த சிந்தனைக்கு உள்ள வலிமை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85307/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.