Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிடில் வாசிக்கும் ‘நீரோ’க்கள்

Featured Replies

cartoon-09.02.2013.jpg

 

ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்.

 

மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஜனக மகாராஜா தன் அரண்மனையில் வேதாந்தம் படித்துக் கொண்டிருந்தார்.

பிடில் வாசிக்கவில்லை என்றாலும், வேதாந்தம் படிக்கவில்லை என்றாலும் ……….. பேரினவாதம் கொழுந்துவிட்டு எரிகையில் நமது அரசியல் தலைமைகளும் அவர்களைப் போலத்தான் புதினம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது இனி அனைத்து மக்களும் பேதங்களை மறந்து வாழும் சூழல் உருவாகும் என்று சிறுபான்மையின மக்கள் மட்டுமன்றி சகோதர வாஞ்சையுள்ள சிங்கள மக்களும் எண்ணினர்.

ஆனால் அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுள்ளது பேரினவாதத்தின் கோரமுகம்.

 

இந்நாட்டின் முதலாவது சிறுபான்மையினமான தமிழர்களுக்காக போராடிய இயக்கத்தின் தலைவரையே கொன்றொழித்தாயிற்று. எனவே இனி தமிழ் மக்களை அடக்கி ஆளலாம் என்ற நிலை வந்துவிட்டது. அதுபோலவே அடுத்த சிறுபான்மை இனமாக திகழ்கின்ற முஸ்லிம்களையும் ஏதோ ஒரு வழியில் அடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்கின்றது மிகைப் பேரினவாத சக்திகள்.

தம்புள்ளைப் பள்ளிவாசலில் தொடங்கி, குருணாகல், தெஹிவளை, அனுராதபுரம், பள்ளிவாசல்கள் என பேரினவாதிகளாலும் காவியுடை தரித்தவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்ட புனிதஸ்தலங்களின் பட்டியல் நீளமானது - தொடர்ந்து நீண்டுகொண்டே செல்வது. பள்ளிவாசல்களை அகற்றுமாறு நடாத்தப்படும் போராட்டங்கள் நியாயமற்றவை என்ற சலசலப்பு சிங்கள சமூகத்திற்குள்ளேயே தோற்றம் பெற்றுவிட்டது.

 

இதனை நன்றாக உய்த்தறிந்துகொண்ட மேலாதிக்க சக்திகள் அடுத்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டுள்ளன. ‘ஹலால’; சான்றிதழும் அவ்வகையிலேயே கையாளப்படுகின்றது. சற்று நடுநிலையாக இருந்து சிந்திக்கும் சிங்கள சகோதரர்களையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு கருத்துநிலைகள் சிங்கள சமூகத்திற்குள் திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு காரியங்களையும் (நீங்கள் சொல்வது போல்) ஒரு சிறு குழுவினரே மேற்கொள்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் ?!

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் - தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற எத்தனையோ பிரதேசங்களில் வழிப்போக்கர்களாக வரும் சிங்களவர்கள் தங்கள் மத கடமையை நிறைவேற்றுவதற்கென பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு விகாரையை அல்லது அங்கிருக்கின்ற ஒரு செங்கல் தூணை அகற்றச் சொல்லி சிறுபான்மை மக்கள் சாத்வீகப் போராட்டம் நடாத்துகின்றார்கள் என எடுத்துக் கொள்வோம்.

என்ன நடக்கும்? ……….

 

அதில் பங்குபற்றியவர்கள் மட்டுமன்றி வீதியால் போனவர்கள் கூட சிறையிலடைக்கப்படுவர். ஓட்டுமொத்த சிங்கள மக்களே வீதிக்கு இறங்குவர். முஸ்லிம்களும் தமிழர்களும் இனவாதிகளாக முத்திரை குத்தப்படுவர். தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்படுவர்.

ஆனால் சுமார் 10 பள்ளிவாசல்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எதிராக இது எதுவுமே மேற்கொள்ளப்படாதது ஏன்? என்று தரம்-5 படிக்கும் சிறுவன் கேட்கின்ற கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாதுள்ளது.

 

 

இனவாத சிந்தனை

இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகியதில் இருந்து தமிழ் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவே இனவாத சக்திகள் செயற்பட்டன (சாதாரண சிங்கள மக்களல்ல).

 

அம்மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற வஞ்சகம் எப்போதும் அவர்களது மனங்களில் கனன்று கொண்டுதான் இருந்தது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது மட்டுமன்றி பிரபாகரனும் படுகொலை செய்யப்பட்டார். எனவே தமிழர்களின் போராட்டம் முடிந்து விட்டது. இனி அவர்கள் ‘பல் பிடுங்கப்பட்ட பாம்புகள்தான்’ என்ற தப்பான கணக்கு ஒன்றை சிங்கள பேரினவாதிகள் போட்டுள்ளனர்.

தமிழர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகுதான் அடுத்த சிறுபான்மை இனத்தின் பக்கம் பேரினவாதிகளும் சிங்கள அடிப்படைவாதிகளும் தமது பார்வையைத் திருப்பினர். தமிழர்கள் மீது தமது மொத்த இனவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டிருந்ததால் முஸ்லிம்களை கவனிக்க தவறிவிட்டோமே என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

 

இன்று முஸ்லிம்கள் மிகப் பெரிய வியாபாரிகளாக, செல்வந்தர்களாக, தனியுரிமை கோருமளவுக்கு அரசியல் பலம் (?) மிக்கவர்களாக முன்னேறி இருக்கின்றார்கள் என்பது அவர்களது கண்களை உறுத்தியது.

 

உடனே உஷாரானார்கள். மதவாதம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்தார்கள். போருக்குப் பின்னரான அமைதியைக் குலைத்தனர். இன்றைய முஸ்லிம் தலைமைகள் முன்பிருந்த தலைமைகளைப் போல சமூக சிந்தனை உடையவர்களல்ல என்பதும் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களைப் போல போராடும் குணம் அற்றவர்கள் என்பதையும் சிங்கள மேலாதிக்க சக்திகள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன.

ஒருவேளை, சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக (சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல) முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கினால் தமிழர்களை அடக்கியது போன்று அடக்கி ஆளலாம். அவ்வாறில்லாத பட்சத்தில் மியன்மாரை போல இனச் சுத்திகரிப்பு ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம்களை அரபு நாடுகளை நோக்கி துரத்தியடிக்கலாம் என்றும் பொது பலசேனா போன்ற மிதவாத அமைப்புக்கள் அடிமனதில் நிறைய கற்பனைகளை வைத்திருக்கின்றன.

 

பள்ளிவாசல்கள் தொழுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் கதையளப்பதைப் போல அங்கு போராட்ட குணம் போதிக்கப்படுவதில்லை. அதேபோன்று முஸ்லிம்களிடையே ஆயுதங்களும் இல்லை. போராட்ட அமைப்புக்களும் இல்லை. என்பதை சிங்கள மக்களுக்கு உரக்க எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மை மக்கள் ஆற்றிய பங்களிப்பு திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்துவதும் அவசியமாகியுள்ளது.

 

 

இனக்கலவர வரலாறு

இலங்கையில் தனிச் சிங்கள சட்டத்தின் பின்னரே இனப்பிரச்சினை ஏற்பட்டது என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இனவாத சக்திகள் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதான மேலாண்மையை வெளிப்படுத்திய ஒரு வழிமுறைதான் தனிச் சிங்கள சட்டம். தவிர, இன முரண்பாடு என்பது அதற்கு முன்னரும் இருந்துள்ளது.

 

இலங்கையின் வரலாற்றில் முதலாவது இனக்கலவரமே சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்தான் இடம்பெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் ரீதியாக முறையாக கட்டமைக்கப்பட்ட ஓர் இனக்கலவரம் என்று வர்ணிக்கப்படுகின்ற இது 1915ஆம் ஆண்டு நிகழ்ந்தேறியது.

 

இதுவிடயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தீவிரமாகச் செயற்பட்டு டி.எஸ். சேனானாயக்க, ஆர். டயஸ். பண்டாரநாயக்க, டி.எஸ். விஜேவர்தன, என். பெரேரா, ஈ.டி. தசில்வா, எச். அமரசூரிய, ஏ.எச். மொலமுற போன்ற சிங்களத் தலைவர்களை கைது செய்தனர். அப்போது, சிறுபான்மை இனத்தவரான சேர். பொன்னம்பலம் இராமநாதன் பிரித்தானியாவுக்குச் சென்று பேசி அந்த சிங்கள தலைவர்களை விடுவிக்கச் செய்தார். அவர் நாட்டுக்கு திரும்பிவந்தபோது துறைமுகத்தில் இருந்து அவரை குதிரை வண்டியில் அமர்த்தி, குதிரைகளை அகற்றிவிட்டு தாமே காலி வீதி வழியாக வீடுவரை தேரிழுத்துச் சென்றனர் சிங்கள தலைவர்கள்.

 

மறுபுறத்தில் முஸ்லிம்கள் இந்த நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய பங்களிப்புக்களை வழங்கி இருக்கின்றனர். ஏ.எம்.ஏ. அஸீஸ், ரி.பி.ஜாயா, தேசமான்ய பாக்கீர் மாக்கார், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எம்.சித்திலெப்பை, சேர் ராசீக் பரீட், டாக்டர் எம்.சி.எம். கலீல் முதல் - மறைந்த தலைவர் அஷ்ரப் வரை பெருமளவிலான பெருந்தகைகள் இந் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டுக்காக பாடுபட்டுள்ளனர்.

ஆனால், ‘மர கல மினியா’ எனும் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகத்தை தமக்கு ஏற்றாற்போல் திருபுபடுத்தி எழுதியது போலவே, மேற்சொன்ன பங்களிப்புக்களையும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் இருட்டடிப்புச் செய்துவிட்டனர்.

 

இப்போது வெளிப்படையாகவே முஸ்லிம் விரோத கருத்துக்களை மிகச் சரியாக கட்டமைக்கப்பட்ட முறையில் அடிமட்டத்தில் இருந்து புகுத்தி வருகின்றன பேரினவாத சக்திகள். இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத தம்பர அமில தேரர் போன்ற நடுநிலை கொள்கையாளர்களையும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் மூளைச்சலவை செய்வதற்கான திட்டங்களையும் தீட்டி வருகின்றன.

 

கையாலாகாத்தனம்

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு பதிலிறுப்பதும் விளக்கமளிப்பதும் உலமா சபை போன்ற அமைப்புக்களின் வேலை என்றும், அரசசார்பு போக்கை கடைப்பிடிப்பதே தமது வேலை என்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைமைகள் நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிகின்றது.

இதனைப் பார்க்கும்போது சிங்கள இனவாதிகள் பரவாயில்லை என்று சிலவேளைகளில் தோன்றுகின்றது. நியாயமோ இல்லையோ அவர்கள் தங்களது சயமத்திற்காக குரல் எழுப்புகின்றார்கள். ஆனால் நமது சிறுபான்மை தலைமைகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்பவர்கள் சிங்கள சமூகத்திற்கு எதிராக அல்ல - தமது சமூகத்தின் பக்கமுள்ள நியாயங்களை எடுத்துக் கூறுவதற்குக் கூட ஏனோ தயங்குகின்றனர். அவர்கள் உண்மைகளைப் பேசுவதையிட்டும் எதுவோ ஒரு விடயம் அவர்களைத் தடுக்கின்றது.

 

அவர்கள் பாவம்…. நாவிழந்து இருக்கின்றார்கள். இல்லாவிட்டால், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என 17 உறுப்பினர்களை கொண்ட சபையில் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.

 

சபையில் கைசேதம்

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் விஷேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளதாக சொன்னார். கிட்டத்தட்ட 10 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக 10 ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அப்போது ஆளும் தரப்பில் இருந்து முஸ்லிம் அமைச்சர் ஒருவர் எழுந்தார். ரணிலின் கருத்துக்கு அவர் பலம் சேர்ப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக எதையோ கூறுவதிலேயே குறியாக இருந்தார்.

 

 

அவ்வேளையில் சபையில் அமர்ந்திருந்த 1 பாராளுமன்ற உறுப்பினரைத் தவிர வேறெந்த முஸ்லிம் மக்கள் (?) பிரதிநிதிகளும் இவ்விடயத்தை வழிமொழிந்தோ அன்றேல் ரணிலின் தரவுகளில் இருக்கும் பிழைகளைத் திருத்தியோ சபைக்கு கூறவில்லை.

 

ரணிலின் கூற்றுக்கு மறுநாள் வியாழக்கிழமை அரசாங்கம் சபையில் பதிலளித்த போது இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது குறித்து விளக்கமளித்தார். நாட்டில் எந்தவொரு மதஸ்தலமும் இதுவரையில் தாக்கப்படவில்லை. அவ்வாறு தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை அரசாங்கம் நிராகரிப்பதாக அவர் கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு 7 நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரணில் குறிப்பிட்டவாறு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறும் சவால் விடுத்தார்.

 

அப்போது முஸ்லிம் அமைச்சர்கள் பலர் சபையில் இருக்கவில்லை என்றபோதும் பிரசன்னமாகி இருந்த எந்தவொரு முஸ்லிம் எம்.பி.யும் அரசாங்கத்தின் பதிலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

அரசாங்கம் இவ்வாறு கூற முனைவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. இந்த இந்த இடங்களில் பள்ளிவாசல்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றன என்பதை எவரும் சபைக்கு தெளிவுபடுத்தவில்லை. சிறிபால டி சில்வாவின் அறிக்கை முற்றுமுழுதாக உண்மை என்பதுபோலதான் சபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

 

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. நீதிக்கு பொறுப்பான அமைச்சர் எழுந்து உரையாற்றினார். அரசாங்கத்தின் பதிலானது தமது இணக்கத்துடனேயே தயாரிக்கப்பட்டதாகவும், தமது கருத்துக்களும் அதில் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் சபைக்கு எடுத்துரைத்தார். ‘தாக்கப்பட்டது’ என்ற சொல்லாடல் பிழை ‘அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது’ என்பதே சரி என அவர் குறிப்பிட்டிருந்தால் அதில் ஒரு நீதி இருந்திருக்கும்.

ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மேடையில் தோன்றிய அதன் தலைவர், அரசாங்க “ஆதரவுடன் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பீரங்கிப் பேச்சுக்களை பேசிவிட்டு, இன்று அவ்வாறு பள்ளிகள் எதுவும் உடைக்கப்படவில்லை என்று கூறுவதைவிட இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் காமடி ஒன்றும் இருக்க முடியாது.

 

பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களுக்கு கைமாறாக – அசுர காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால், முஸ்லிம் தலைமைகள் நியாயங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம். சிங்கள அடிப்படைவாதக்குழுக்கள் துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பிரசாரங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது மட்டுமன்றி, பள்ளிவாசல்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன என்பதை அந்த உயரிய சபையில் எடுத்துரைத்திருக்க வேண்டும் என்பதே உங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு.

ஆனாலும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை !

 

தேர்தல் முடிந்தபிறகு நீங்கள் எப்படி மக்களை மறந்து விடுகிறீர்களோ, அப்படித்தான் தேர்தல் வந்துவிட்டால் மக்கள் நீங்கள் செய்த எந்தத் துரோகத்தையும் மறந்துவிடுவார்கள். நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.

 

 

- ஷேக்ராஜா

 

http://www.virakesari.lk/article/feature.php?vid=86

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.