Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையிலிருந்து வெகுதொலைவில் ஜனாதிபதி்; நாட்டில் நல்லிணக்கம் எவ்விதம் சாத்தியமாகும்?

Featured Replies

உண்மையிலிருந்து வெகுதொலைவில் ஜனாதிபதி்; நாட்டில் நல்லிணக்கம் எவ்விதம் சாத்தியமாகும்?

 

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடனும், ஐக்கியத்துடனும் வாழ்வதாகவும், தாம் நாட்டைப் பிரிக்கும் சதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவரது கருத்து தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும், உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பதாகவும்மே உணரமுடிகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் ஈ.சரவணபவன்.

 

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


நாம் இப்போது அந்நிய சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது,இதிலிருந்து விடுபட்டு இனங்களுக்கிடையேயான தேசிய நல்லிணக்கத்தின் மூலமும் அபிவிருத்தியின் மூலமுமே நாட்டைக் கட்டியெழுப்பமுடியும். இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடனும், ஐக்கியத்துடனும் வாழ்வதாகவும், தாம் நாட்டைப் பிரிக்கும் சதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என இலங்கையின் 65வது சுதந்திரதின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

 

 

ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் சுதந்திரதின உரையென்பது அந்த நாட்டின் செல்வழிப்பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஆனால், இலங்கை ஜனாதிபதியின் உரை தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும், உண்மையிலிருந்து வெகு தொலைவில் நிற்பதாகவுமே உணரமுடிகிறது.


இலங்கை அமைச்சரவை அந்தஸ்த்தில் உள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா ஒரு விழாவில் பேசும் போது ‘‘தமிழ்தேசியக் கூட்டமைப்பு உரிமை, உரிமை எனக் கூச்சலிட்டுக் கொண்டு, இருப்பதையும் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறாகள்’’ எனத் தெரிவித்திருந்தார். இருப்பவற்றையும் பறிகொடுக்கிறார்கள் என்பதன் மூலம் இருப்பவையும் பறிக்கப்படுகின்றன என்ற உண்மையை அவர் ஒப்புக் கொள்கிறார்.

 

இருப்பவற்றைப் பறிக்கும் அரசியலில் அவரும் ஒரு பங்காளி என்பதையும், 18வது திருத்தச் சட்டம், ‘திவிநெகும’ சட்டம் என்பவற்கு ஆதரவு வழங்கி பறிப்பவர்களுக்கு கரம் கொடுப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றே கூறவேண்டும்.

 

தேசிய நல்லிணக்கத்தின் மூலமும் ஸ்திரமான அபிவிருத்தி மூலமுமே அந்நிய சக்திகளின் சவால்களை முறியடிக்க முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஜனாதிபதி தலைமை வகிக்கும் அரசால் மேற்கொள்ளப்படும் தேசிய நல்லிணக்கத்திற்கு விரோதமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளே அந்நிய சக்திகளின் தலையீட்டுக்கு காரணமாகின்றன என்பதை ஜனாதிபதியே உணர்ந்துகொள்ளவேண்டும்.


இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பனவாகவும், சாதாரண இயல்பு வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்குவதாகவுமே அமைகிறது. இந்த நிலையில் எங்கனம் நாட்டில் தேசிய நல்லிணக்கம் உருவாக முடியும்?

 

ஜனாதிபதியின் பேச்சு காற்றில் கரைந்து போகுமுன்பே வலிகாமம் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள் படையினரால் இடித்து அழிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் பல ஆயிரம் ஹெட்டேயர் காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு முட்கம்பி வேலியிடப்பட்டுள்ளன.


இது பற்றிக் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் வர்ணகுலசூரிய, இலங்கையில் எங்குமே உயர்பாதுகாப்பு வலயம் இல்லையெனவும், 2000 ஹெக்டேயர் காணியில் மட்டும் வடக்கில் படைமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரவுக்கு காணி தேவைப்பட்டால் முறைப்படி கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் படையினரால் எந்த ஒரு வீடும் அழிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதுதான் ஆட்சியாளர்களின் நலிலிணக்கம்.


இத்தகைய அத்துமீறல்களை வெளிக்கொண்டுவரும் ஊடகங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன. உதயன் பத்திரிகை அலுவலகம் பல முறை தாக்கப்பட்டதும், பல பணியாளர்கள் கொல்லப்பட்டதும், பிரதமஆசிரியர், செய்திஆசிரியர் உட்படப் பல பணியாளர்களைக் கொலைசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் வடக்கில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறையைத் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளன.

 

கொலை, கொலைமுயற்சி, தாக்குதல், தீயிடல் எனப் பலவித வன்முறைகள் ஊடகங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள போதும் அதற்கு காரணமான எவரும் கைது செய்யப்படவுமில்லை தண்டிக்கப்படவுமில்லை.


எங்கும் பரவலாகப் படை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தும், பொலிஸாருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தும் ஏன் இத்தகைய வன்முறைகள் தடுக்கப்படவில்லை?

 

இப்படியாக தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடரப்படுவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தைச் சீகுலைக்கும் சக்திகள் எவை? அவர்களுக்கு பின்னணியில் நிற்பவர்கள் யா? என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்று வடமாகாணசபையின் ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடபகுதியின் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க என வடமாகாணத்தின் ஒவ்வொரு முனையிலும் தங்கள் அதிகாரக் கரங்களை விரித்திருக்கும் இவர்களே, இக் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் கடப்பாடுடையவர்கள்.


இவகள் வடக்கில் இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒரு சிவில் நிர்வாகத்தையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் சிப்பாய்களாகவே அரச அதிகாரிகளையும், அரச பணியாளர்களையும் கையாள்கின்றனர். இதனால் இன்று வடக்கில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பிரதேச சபைகளின் தலைவர்களோ, உறுப்பினர்களோ எவரும் மதிக்கப்படுவதில்லை. அபிவிருத்தி தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்படும் திட்டங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள் எப்படி அபிவிருத்தியில் பங்கு கொள்ள முடியும்?


வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியுடன் ஒட்டியிருக்கும் இளம் செயலாளரின் செயற்பாடுகள், இராணுவ சர்வாதிகாரிகளின் வேலை முறை போல் அமைந்திருப்பதாகப் பல முனைகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளுநரைத் திருப்திப்படுத்தும் வகையிலும் ஈ.பி.டி.பி.தலைமையகத்திலிருந்து வரும் கட்டளைகளுக்கு அமையவுமே அவரின் செயற்பாடுகள் தொடர்வதாகவும் கருத்துகள் பலமாக நிலவி வருகின்றன.

 

இதன் காரணமாகப் பல அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறைப்படி செய்ய முடியாமல் திணறுகின்றனர். சில நெருக்குதல்களுக்கு அடிபணிவதா அல்லது சட்டப்படி வேலை செய்வதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில் தடுமாறுகின்றனர். இத்தகைய நிலையில் சில அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டனர். இன்னும் சிலர் இடமாற்றம் பெற்றுச் சென்று விட்டனர். தொலை தூரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டால் பிள்ளைகளின் கல்வி போன்ற விடயங்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற அச்சத்தில் பல அதிகாரிகள் மனம் புழுங்கியவாறே சொல்பவற்றைச் செய்து வருகின்றனர்.


அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றுக்குக்  அழைக்கப்படுபவர்களின் பட்டியல், ஈ.பி.டி.பி தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சில அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அடிப்படையில் பொது நிர்வாக சேவை அதிகாரிகளோ, பணியாளர்களோ, அரச அதிபருக்குக் கட்டுப்பட்டவர்கள். அரச அதிபரை விட வேறு எவரும் அவர்களுக்குக் கட்டளையிட முடியாது. ஆனால், இன்று அரச அதிகாரிகள் பல முனைகளில் நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


நேமையாகவும் துணிவுடனும் பணியாற்றும் சில உதவி அரச அதிபர்கள் பலவித நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபைகள் கூட சரியாகச் செயற்பட முடியவில்லை. அவர்களின் வேலைத்திட்டங்களுக்குப் பிரதேசசபை செயலர்களால் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

 

இன்று ஆளுநரையும், சில அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் முகமாக முறை மீறல்களில் ஈடுபடும் எந்த ஒரு அதிகாரியும் நாளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கையில் ஆட்சி அதிகாரம் வரும்போது பதில் சொல்லியாக வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்க விரும்புகிறோம். இப்படியான ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாகம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுவதை அனுமதிக்கும் ஜனாதிபதி, தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ்வாதாக எப்படிக் கூற முடியும்?


வடக்கின் இயல்பு வாழ்வைச் சீர்குலைப்பதில் இன்னுமொரு முக்கிய பாத்திரம் வகிப்பவர் வடபகுதியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க.

 

இவரது அதிகாரத்தில் பாடசாலை விழாக்கள் உட்பட இங்கு நடைபெறும் ஒவ்வொரு வைபவத்திலும் இராணுவப் பிரசன்னம் எழுதப்படாத சட்டமாக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்கள் மாவீரருக்கு அஞ்சலி செலுத்த எடுத்த முயற்சிகள் தொடர்பாகவும், அவர்களின் கைதுகள், விடுதலை தொடர்பாகவும் தளபதி தான் ஒரு சிவில் அதிகாரி போன்று கருத்துகளை வெளியிட்டார். அது மட்டுமின்றி பல்கலைக் கழக மாணவர்கள் பிரச்சினையில் அரசியல்வாதிகள் தலையீடு செய்வதாகக் கண்டனமும் வெளியிட்டார்.

 

நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். எமக்கெனச் சில சிறப்புரிமைகள் உண்டு. எமது மக்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் அங்கு நாம் நிற்க வேண்டியது எமது கடமை. எம்மை விமர்சிக்க எந்த ஒரு அரச பணியாளர்களுக்கும் அதிகாரம் கிடையாது என்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இலங்கை இராணுவம் பாதுகாப்புப்படை என்ற வகையில் மக்களைப் பாதுகாக்கும் முகமாக, இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்படும் மர்மக் கொலைகள், தாக்குதல்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்தவும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டால் அதனை வரவேற்க முடியும்.

 

அரச இயந்திரமும், அரச அதிகாரிகளும், அரச படையினரும், அரசுடன் இணைந்துள்ள அரசியல்வாதிகளும் தொடந்து தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களின் நிம்மதியையும், அமைதியையும் குலைக்கும் போது, தேசிய நல்லிணக்கம் உருவாக முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.-என்றுள்ளது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=622911829512271348

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.