Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் அரசியல் - அமெரிக்க இந்திய காய்நகர்த்தல்களுக்கு இடையில் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியல் - அமெரிக்க இந்திய காய்நகர்த்தல்களுக்கு இடையில் - யதீந்திரா

 

கடந்த பத்தியில் ஜெனிவை முன்னிலைப்படுத்தி இடம்பெற்றுவரும் சில விடயங்களை அவதானித்திருந்தோம். இப்பத்தியில் மேலும் சில விடயங்களை உற்று நோக்குவோம். சமீபத்தில் ஒரு நண்பர் சற்று வித்தியாசமான அபிப்பிராயம் ஒன்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அது சற்று வித்தியாசமான பார்வையாக இருந்தது. அது எந்தளவிற்கு இன்றைய சூழலில் பொருத்தமாக அமையும் என்பதற்கு அப்பால், இன்றைய சூழலில் எந்தவொரு கருத்தையும் உடனடியாக நிராகரித்துவிட முடியாதவொரு சூழல் நிலவுகிறது என்னும் யதார்த்தத்தையும் நிராகரிக்க முடியவில்லை.

 

அமெரிக்கா, ஜெனிவாவில் மேற்கொண்டுவரும் நகர்வுகள் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானதல்ல, அது இந்திய அரசுக்கு எதிரானது என்றார் அந்த நண்பர். மூலோபாய ரீதியாக அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவிவருகின்ற இன்றைய சூழலில், அமெரிக்கா ஏன் இந்தியாவிற்கு நெருக்கடிகளை கொடுக்கும் நோக்கில் நடந்துகொள்ளப் போகின்றது? எனது கேள்விக்கு, அமெரிக்கா நீண்டகாலத்தில், இந்தியாவை உடைக்கப் போகின்றது என்பதே, அந்த நண்பரின் பதிலாக இருந்தது.

 

அமெரிக்க தலைமையிலான உலக அதிகார ஒழுங்கிற்கு சவால்விடக்கூடிய ஒரேயொரு நாடு சீனா என்பது இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற விடயமாகும். இந்த நிலையில் சீனாவை எதிர்கொள்ளும் ஒரு மூலோபாய உபாயமே, அமெரிக்க-இந்திய கூட்டாகும். ஏனெனில், சீனாவின் வளர்ச்சியானது அமெரிக்க மற்றும் இந்தியா ஆகிய இருதரப்பினருக்குமே அச்சுறுத்தலான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், அமெரிக்கா ஏன் இந்தியாவை உடைக்கப் போகின்றது? ஆனால் அந்த நண்பரோ, இப்படியொரு கோணத்தில் சிலர் சிந்தித்து வருவதாக குறிப்பிட்டார். தற்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்திருப்பதன் பின்னால், இந்தியாவிற்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் நோக்கமே இருப்பதாகவும், காலப்போக்கில் சோவியத் யூனியனுக்கு நிகழ்ந்ததே இந்தியாவிற்கும் நிகழும் என்று ஆணித்தரமாக கூறினார்.

 

சீனாவின் வளர்ச்சியை குறிவைத்து, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் பல்வேறு ஆய்வகங்களும் சீன எதிர்ப்புக் கருத்துக்களை உருவாக்கி வருகின்றன. அமெரிக்க நகர்வுகளுக்கு சீனா ஒரு அச்சுறுத்தலென்னும் வகையிலேயே பல அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆய்வாளர்களும் அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தனது மூலோபாய எதிரியான சீனாவை எதிர்கொள்வதற்கான, தனது மூலோபாய பங்காளியான இந்தியாவை அமெரிக்கா பலவீனப்படுத்த முயலும் என்னும் கருத்தானது சற்று விசித்திரமாகத் தோன்றினாலும், பிறிதொரு வகையில் சிந்தித்தால், இப்படியெல்லாம் அபிப்பிராயங்கள் உருக்கொள்ளும் அளவிற்கு தமிழர் அரசியல் அமெரிக்க- இந்திய காய்நகர்த்தல்களுக்கு இடையில் அகப்பட்டுக் கிடக்கின்றது என்பதையே மேற்படி உரையாடல் தெளிவுபடுத்துகின்றது. இதனை சற்று ஆழமாக பார்ப்போமானால், அமெரிக்க-இந்திய அணுகுமுறைகளைத் தாண்டி தமிழர் அரசியல் முன்னகர முடியாதவொரு நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு இடைநடுவில் கிடக்கும் அரசியலுக்கு எதிர்காலம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

 

 

 

சர்வதேச உறவுகள் என்பது இரு வழிப் பாதையைக் கொண்டது. ஒன்று முன்கதவு, மற்றையது பின்கதவு. முன்கதவு வழியான உறவுகளை அடிப்படையாகக் கொண்டே ஆய்வுகளும், விமர்சனங்களும் வெளிவருகின்றன. ஆனால் சர்வதேச உறவுகளில் ஏற்படும் தளர்வு அல்லது இறுக்கம் என்பவை பெருமளவு பின்கதவு வழியாகவே நிகழ்கின்றன. பின்கதவு வழியாக இடம்பெறும் இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப, முன்கதவு வழியாக சென்று பேச வேண்டிய விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. பின்கதவு வழியான பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு காணமுடியாவிடின் முன்கதவு வழியான உரையாடல் கடுமையானதாக அமையும். தற்போது ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் இலங்கை அரசின் மீதான அழுத்தங்கள் என்பவை ஒரு முன்கதவு வழியான பேச்சு ஆகும். ஆனால் இதனுடன் பல பின்கதவு வழியான உரையாடல்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அத்தகைய பின்கதவுப் பேச்சுக்களின் அடிப்படையில்தான், ஜெனிவா என்னும் முன்கதவு அழுத்தங்களில் இறுக்கம் அல்லது தளர்வு ஏற்படும்.

 

இங்கு முன்கதவு வழியான பேச்சுக்களின்போது சில சாணக்கியங்களும் கடைப்பிடிக்கப்படும். அதாவது, ஒரு நாடு, குறிப்பாக இலங்கை போன்ற சிறிய நாடுகள், தாம் எதற்கும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றவாறானதொரு தோற்றத்தையே காண்பிக்க முயலும். மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கை இழந்து போய்விடாதிருக்க வேண்டுமாயின், குறித்த அரசாங்கங்கள் ஒருவகை இறுக்கத்தை காண்பிப்பது அவசியம். ஆனால் பின்கதவு பேச்சுக்களில் பல்வேறு இணக்கப்பாடுகள் ஏற்பட்டிருக்கும். சிறிய அரசாங்கங்கள் இத்தகையதொரு அணுகுமுறையையே தப்பிப் பிழைப்பதற்கான ஒரு தந்திரோபாயமாக கடைப்பிடித்து வருகின்றன. இந்த இடத்தில் சுப்பிரமணிய சுவாமி, இலங்கை பிரதிநிதிகள், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக குறிப்பிட்டிருப்பதை இங்கு இணைத்து வாசிப்பது பொருத்தமாக அமையும். சுப்பிரமணிய சுவாமி போன்ற நபர்கள் வெளித்தோற்றத்தில் கோமாளித்தனமாக தங்களை காண்பித்துக் கொண்டாலும், உண்மையில் அவ்வாறானவர்கள் இரகசிய உலகின் பிரதிநிதிகள் ஆவர். இரகசிய உலகத்தின் முடிவுகளே இறுதியில் அனைத்துலக முடிவுகளாக காண்பிக்கப்படுகின்றன.

 

இந்தவகையில் பார்த்தால், தற்போது தமிழர் அரசியல் தமிழரின் கையில் இல்லை. அது யாருடைய கையில் இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்பதே ஒரு பணியாக மாறியுள்ளது. வெளித்தோற்றத்தில் தமிழர் அரசியலானது அமெரிக்காவினதும், இந்தியாவினதும் கையில் இருப்பது போன்றதொரு தோற்றமே தெரிகிறது. ஆனால் இப்பத்தியானது, தமிழர் அரசியல் அமெரிக்க-இந்திய காய்நகர்த்தல்களுக்கு இடையில் இருப்பதாகவே கணிக்கின்றது. ஆனால், இவ்வாறு இடைநடுவில் கிடப்பதானது, இறுதியில் இருபகுதி நகர்வுகளாலும் தூக்கி வீசப்படவும், அல்லது இருபகுதி நகர்வுகளாலும் மூச்சுத்திணறி உயிரிழக்கவும் கூடியதொரு நிலைமையையும் தோற்றுவிக்கலாம். இதிலிருந்து தப்ப வேண்டுமாயின், ஒன்றில் ஏதாவதொன்றை சார்ந்து அல்லது இரண்டையும் சாராது வெளியில் நிற்கும் உபாயமொன்றை நோக்கி நகர வேண்டியிருக்கும். இது குறித்து தமிழர் தலைமை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவை நோக்கிச் செல்வதானது, நீண்டகால நோக்கில் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிபீடமேற்றுவதற்கு தடையான ஒன்றாக அமையலாம் என்றவாறான ஒரு கலந்துரையாடலும் தெற்கில் சிலர் மத்தியில் இடம்பெற்று வருகின்றது. இதற்காக அவர்கள் காலம்சென்ற இராணுவ ஆய்வாளரும் விடுதலைப்புலிகளின் தலைவரால் மாமனிதர் கௌரவம் அழிக்கப்பட்டவருமான டி.சிவராம் (தராக்கி), முன்னர் எழுதிய கட்டுரையொன்றை தங்களின் வாதத்திற்கு ஆதாரமாக எடுக்க முயல்கின்றனர்.

 

சிவராம் தனது கட்டுரையில், அமெரிக்கா ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் தெற்காசியாவின் மீதான மூலோபாய ஈடுபாட்டின் காரணமாகவே தலையிட்டதாக வாதிட்டிருக்கின்றார். அந்த வாதத்தை மேற்படி நபர்கள், இன்றைய சூழலுக்கும் பொருத்தி விவாதிக்க முயல்கின்றனர். இன்றைய சூழலிலும், அமெரிக்கா தனது மூலோபாய நலன்களை அடிப்படையாகக் கொண்டே இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றதே தவிர, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி அல்ல. எனவே அமெரிக்காவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருங்கிச் செல்வது சரியான ஒன்றல்ல. அது தமிழ் மக்களுக்கு நன்மையைக் கொண்டு வராது.

 

இவ்வாறு விவாதிப்போரும் தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிந்திக்கவில்லை. மாறாக, கூட்டமைப்பு அமெரிக்காவுடன் நெருக்கிச் செல்வதான தோற்றப்பாடு, தெற்கில் ரணில் விக்கிரசிங்கவிற்கான ஆதரவை பலவீனப்படுதிவிடலாம் என்னும் அச்சத்திலேயே இவ்வாறு சிந்திக்க விளைகின்றனர். இன்னும் பல்வேறு கோணங்களில் இவ்வகை விவாதங்கள் இடம்பெற வாய்ப்புண்டு. விவாதங்களின் கருப்பொருள் எப்போதும் தமிழர்களாகவே இருக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.