Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கத் தீர்மானம்: நேற்று இன்று நாளை - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் தீர்மானம்: நேற்று இன்று நாளை - யமுனா ராஜேந்திரன்
 

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆதரித்து 25 நாடுகளும் எதிர்த்து 13 நாடுகளும் வாக்களித்திருக்கின்றன. சென்றமுறை இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்திருந்தன என்பது இங்கு சுட்டத்தக்கது. இந்த வீழ்ச்சியை சர்வதேச நாடுகளிடம் இலங்கை செல்வாக்கிழந்துவிட்டது என தயான் ஜயதிலக குறிப்பிடுகிறார். 8 நாடுகள் நடுநிலைமை வகித்திருக்கின்றன. காலம் சென்ற சாவேசின் 'இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிச' நாடான வெனிசுலா தவிர பெரும்பாலுமான இலத்தீனமெரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கின்றன. உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் புரியும் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. சென்றமுறை போலவே இந்த முறையும் நீண்ட இழுபறியின் பின் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

 

சென்ற தீர்மானத்திற்கும் இந்தத் தீர்மானத்திற்கும் இடையில் என்ன வித்தியாசம்? இடைப்பட்ட 12 மாதங்களில் இலங்கை அரசு என்ன செய்தது? ஈழவிடுதலையை ஆதரிப்பவர்கள் என்ன செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்? அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வு எனும் எதிர்மைக்கிடையில் ஈழ ஆதரவாளர்களுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையிலான நோக்கில் உள்ள வித்தியாசங்கள் என்ன? இந்த இடைப்பட்ட 12 மாதங்களில் இந்திய, இலங்கை இடதுசாரிகளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? தமிழக, இந்திய அரசியல்வாதிகளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? தமிழக அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கையிழந்த குடிமைச் சமூகம் என்னவிதமாக மாறி வந்திருக்கிறது? இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொள்ளாமல் ஐநா மனித உரிமை அவையின் இன்றைய தீர்மானத்தின் பெறுமதியை மதிப்பிடுவது என்பது சாத்தியம் இல்லை.

 

அமெரிக்காவின் சென்ற தீர்மானத்திற்கும் இந்தத் தீர்மானத்திற்கும் அதன் உள்ளடக்கத்தில் ஏதும் மாற்றமில்லை. சென்ற தீர்மானத்தினதும் இந்தத் தீர்மானத்தினதும் தொடக்கப்புள்ளியாக இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளே இருக்கின்றன. சென்ற முறை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரியிருந்தது. இந்தமுறை தீர்மானம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அபிவிருத்தி குறித்த பரிந்துரைகள் சில நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை அங்கீகரித்து, மனித உரிமை, அரசியல் தீர்வு, படைகளைவு போன்ற பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியிருக்கிறது. இடைக்காலத்தில் இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட ராணுவ விசாரணைக் குழுவை அமெரிக்காவின் தீர்மானம் பொருட்படுத்தவில்லை என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. அமெரிக்காவின் இன்றைய தீர்மானத்தின் முதல் வரைவில் இருந்த சர்வதேச விசாரணை எனும் கருத்தமைவு இறுதித் தீர்மானத்தில் இல்லாது போனது.

 

இந்த முறை சர்வதேசிய விசாரணை கோருதல் என்பது அமையும் எனும் நம்பிக்கையை புகலிட ஈழ ஆதரவாளர்கள் கொண்டிருந்தார்கள். குறிப்பாகப் பிரித்தானியப் பாராளுமன்ற அறையில் நடைபெற்ற ஈழ ஆதரவுக் கூட்டமொன்றில் பேசிய பிரித்தானிய ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சர்வதேசிய விசாரணை வேண்டும் எனக் கோரினார்கள். மனித உரிமை அவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கை தொடர்பான அறிக்கையும் சர்வதேசிய விசாரணையைக் கோரியது. இனக்கொலை எனும் சொல் அமெரிக்கத் தீர்மானம், நவநீதம்பிள்ளை அறிக்கை என இரண்டிலும் எந்தக் கட்டத்திலும் இடம்பெறவில்லை.

 

சர்வதேசிய விசாரணை எனும் சொல் நீக்கப்பட்டற்கான காரணம் இந்திய அணுகுமுறை என இந்திய அம்னஷ்டி பிரதிநிதி அனந்த பத்மநாபன் தெரிவித்தார். இதனை இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மறுத்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகளின்படி, அறிக்கையைக் கடினமானதாக ஆக்க இந்தியா 7 திருத்தங்களை முன்வைத்ததாகவும், அமெரிக்கா அதனை நிராகரித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா என இரு தரப்பிடம் இருந்தும் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்தப் பதிவுகளும் இல்லை. எனினும், இனக்கொலை என்பதினோடு சர்வதேசிய விசாரணை என்பதையும் இந்தியா ஒரு போதும் இலங்கைக்கு எதிராகச் சொல்ல விரும்பியதில்லை. சர்வதேசிய விசாரணை எனும் கருத்தாக்க நீக்கம், சொற்களை மென்மையாக்கியது போன்றன அதிக நாடுகளை தமது தீர்மானத்திற்கு ஆதரவாகத் திருப்பும் தந்திரோபாயம் என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

 

இந்த இடத்தில் நல்லிணக்க ஆணைக்குழுப் பரிந்துரைகள் இலங்கை ஆளும் தரப்பில் என்னவிதமாகப் பார்க்கப்படுகிறது என அவதானிப்பது முக்கியமானதாக இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரையில் அரசுசார்பு ஆயுதத் துணைக்குழுக்களின் மனித உரிமை மீறல்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதனையோ, அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதனையோ, ராணுவம் தொடர்பான கேள்விகளையோ, காணாமல் போனோர் தொடர்பான பரிந்துரைகளையோ இலங்கை அரசு ஒரு போதும் அங்கீகரித்து பொறுப்புக் கூறப்போவதில்லை. இத்தகைய விசாரணைகள் அரசு அல்லது அரசு சார்பு அல்லாத சுயாதீன குழுவினால் மேற்கொள்ளப்படுமானால், அதனை ஐ.நா கண்காணிப்புக் குழுவினருடன் பகிர்ந்து கொள்ளுமானால் நிச்சயமான மனித உரிமை மற்றும் மனிதாபிமான உலகச் சட்டங்களுக்கு எதிராக இலங்கை அரசு சென்றிருக்கிறது என்பது அப்போது நிதர்சனமகிவிடும்.

 

அமெரிக்கா நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்மானத்தை முன்வைத்து இதனைக் கோருகிறது. இது இலங்கை அரசு மீளமுடியாத ஒரு பொறி. ஆகவேதான் இலங்கை அரசு அதனை முழுமையாக நிராகரிக்கிறது. ஏனெனில் இலங்கை அரசு எந்த அரசியல் தீர்வையும் முன்வைக்கப்போவதில்லை. தமது படையினர் மீதான விசாரணைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை. இவ்வகையில் அரசியல் ரீதியில் முன்னைய தீர்மானத்தை விடவும் இந்த அறிக்கை, மென்சொற்களில் வைக்கப்பட்டிருந்தாலும், அழுத்தமான தொனி கொண்டது. ஒப்புக் கொண்டதை, கடப்பாடு உள்ளதை இலங்கை அரசு 12 மாதங்களில் செய்யவில்லை, அதனைச் செய், அடுத்த 12 மாதங்களில் அதனைச் செய்துகாட்டு என இன்றைய தீர்மானம் வலியுறுத்துகிறது. அவ்வகையில் இத்தீர்மானம் தனது முன்னைய பொறிமுறையை இறுக்கியிருக்கிறது.

 

புகலிட ஈழ ஆதரவாளர்களுக்கும் தமிழகத்தில் போராடிய மாணவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் தமது எதிர்பார்ப்புக்களைப் பொய்ப்பித்தாகவே இந்தத் தீர்மானம் அர்த்தம் தரும். பிரித்தானிய ஆளும்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்கள், நவநீதம்பிள்ளையின் அறிக்கை, இந்திய மத்திய அரசுக்கு திமுக கொடுத்த நெருக்கடி, அரை நூற்றாண்டின் பின் தமிழகம் எங்கும் எழுந்த மாணவர் எழுச்சி, தமிழக ஆளும் கட்சியின் தீர்மானம், அனைத்துக்கும் மேலாக அமெரிக்காவின் முன்வரைபில் இடம்பெற்ற சர்வதேச விசாரணை எனும் பதம் போன்றன சர்வதேசிய விசாரணை எனும் தீர்மானம் ஐ.நா அவையில் நிறைவேற்றப்படும் எனும் நம்பிக்கையையே அளித்திருந்தது. சர்வதேசிய அரசியல் பேரங்களில் அது நழுவிப்போனது என்பது போராடும் சக்திகளுக்கு விரக்தியையே தரமுடியும். அரசுகளுக்கு இடையிலான பேரங்களில் எந்தக் கட்டத்திலும் இனக்கொலை எனும் வார்த்தை பாவிக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

இந்தச் செயல்போக்கில் ஈழ ஆதரவாளர்கள் இனங்கண்ட மிகமுக்கியமான நல்சமிக்ஞை தமிழக மாணவர்களின் பேரெழுச்சி. இது புகலிடம், ஈழம், தமிழகம் என அனைத்து இடங்களிலும் ஒரு புத்துணர்ச்சியைக் கொண்டுவந்தது. ஜெனிவாவில் பேசிய சர்வதேசிய நாடுகளின் பிரிதிநிதிகளும் இந்தப் பேரெழுச்சியின் முக்கியத்துவத்தினை தாம் அவதானித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். 'நடந்திருப்பது இனக்கொலை. தீர்வு தமிழீழம் எனும் தனிநாடு. தேவை வெகுஜன வாக்கெடுப்பு மற்றும் சர்வதேசிய விசாரணை' என்பதனைத் தெளிவான கோரிக்கைகளாக அவர்கள் முன்வைத்தார்கள்.

 

அவர்களின் போராட்ட வடிவம் என்பது வன்முறை தவிர்ந்த அறவழியிலான, ஜனநாயக வழியிலான போராட்டம் என்பதனை அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். லயோலாக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து தன்னெழுச்சியாக தமிழகத்தில் ஆங்காங்கு எழுந்த ஒருங்கிணைக்கப்படாத மாணவர்களின் எழுச்சி, பின்னாட்களில் நகர் மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்களாக ஆனது. ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின் அரசியல் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான மாநிலம் தழுவிய அளவிலான அமைப்பு போன்றவை குறித்த விவாதங்களும் அவர்களுக்கிடையில் தோன்றிவிட்டது.

 

தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தமது அரசியல் திட்டங்களுக்குள் இவர்களைக் கொணர முயன்ற முயற்சிகள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. மக்கள் திரள் அரசியலின் பெறுபேறு என மாணவர்களின் இந்தப் பேரெழுச்சியை நாம் மதிப்பீடு செய்யலாம். தமிழகமெங்கும் அறவழியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த சூழலில் போராட்டத்தின் தார்மீக அம்சங்களைக் குழிதோண்டிப் புதைக்குமாறான சில நிகழ்வுகளும் தமிழகத்தில் நடந்தன. தமிழ் தேசிய அரசியலின் பெயரில், தமிழகத்திற்கு வருகை தந்த புத்த பிக்குகள் இருவரின் மீது சில சக்திகள் வன்முறையை ஏவிவிட்டன. அரசியல், அறம், தந்திரோபாயம் என எந்தவகையிலும் நியாயப்படுத்திட முடியாத செயலாகவே இது மதிப்பிடப்பட வேண்டும்.

 

அறவழியிலான நீண்டகாலப் போராட்டத்திற்குச் சான்றாக நம் முன் கூடங்குளம் மக்களின் போராட்டம் இருந்து கொண்டிருக்கிறது. அதுவே ஒரு நீண்ட நெடிய போராட்டத்தினை நடத்த வேண்டியிருக்கிற ஈழ ஆதரவுத் தமிழர்களுக்கும் பொருத்தமான பாதையாக இருக்கும். எமக்கு முன் இரண்டு பாதைகள்தான் உண்டு. மகிந்த ராஜபக்சேவிடம் சரணடைவது ஒரு பாதை. இன்னொரு பாதை மனிதப் பெருமிதமும் விடுலையும் தேடிய பாதை. இது கடினமான, நெடிய பயணம் போன்றொரு பாதை.

 

போராட்டம் என்பதும் அரசியல் முன்னெடுப்புகள் என்பதும் ஐ.நாவின் இன்றைய தீர்மானத்தினோடு முடிந்துபோவது இல்லை. இலங்கை அரசு இன்னும் 12 மாதங்களில் பதில் சொல்ல வேண்டும். 'நடந்திருப்பது இனக்கொலை, தேவை சர்வதேசிய விசாரணை, நாங்கள் வேண்டுவது வெகுஜன வாக்கெடுப்பு' என்பதை நாம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் கோரிக் கொண்டிருக்க வேண்டும். புதிய நிலைமைகளில் அதற்கான அரசியல் அடிப்படைகளையும், போராட்ட வழிமுறைகளையும் நாம் கண்டடைய வேண்டும். அற்கான பாதையை தமிழகத்தின் மாணவர் பேரெழுச்சி திறந்துவிட்டிருக்கிறது.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=b94c0838-72d4-43c9-a3db-d350d7021bb7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.