Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டப் புத்தகங்களுக்குள் தூங்கும் தமிழின் நிர்வாக அந்தஸ்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டப் புத்தகங்களுக்குள் தூங்கும் தமிழின் நிர்வாக அந்தஸ்து

த.மனோகரன்

இலங்கையின் இனமுறுகல் இன்று பூதாகரமாகத் திகழ்ந்து பல அழிவுகளுக்கு அடிப்படையாக அமைந்து, தமிழ்மொழி உரிமைக்கு மறுப்புத் தெரிவித்து தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தமை என்பது வரலாறு. 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள அரச கரும மொழிச்சட்டத்தை எதிர்க்கத் தலைப்பட்ட தமிழினம் இன்று தனிநாடு என்ற கோட்பாடு வரை வந்து விட்டது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதைச் சிந்திப்பது அவசியமாகும்.

ஓர் இனத்தின் இருப்புக்கு, வாழ்வின் உறுதிக்கு, மொழியுரிமை கட்டாயமானது, அவசியமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஓர் இனத்தின் மொழியுரிமை பறிக்கப்படும் போது அவ்வினம் வாழும் நாட்டின் இரண்டாம் தரப்பிரஜைகளாக, நாட்டிற்கு உரிமையற்ற அந்நியராகக் கணிக்கப்படுகின்றனர் என்பதே யதார்த்தம். ஒரு மொழி பேசும் சமூகத்தை இன்னுமொரு வலிமை வாய்ந்த சமூகம் அடக்கி ஒடுக்கின்றது என்பதும் இவ்வாறான செயல் மூலம் தெளிவு செய்யப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட, மொழியுரிமை மறுக்கப்பட்ட சமுதாயம் வேதனையும் விரக்தியும் அடைவது தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைத் தூண்டி, சிறுபான்மை இன வெறுப்பை ஊட்டி நடத்தப்படும் அரசியல் நாடகம், ஜனநாயகம், பெரும்பான்மை, மக்களாட்சி என்ற போர்வையில் மறைக்கப்பட்டு விடுகின்றன.

அன்றுவிட்ட தவறு விரும்பியோ, விரும்பாமலோ இன்று சீர் செய்யப்பட்டுள்ளது. ஆம், தனிச்சிங்களச் சட்டம் இன்று தூக்கி வீசப்பட்டு தமிழும் அரச கரும மொழியாக இன்று சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், நடைமுறையில் தமிழ் நிர்வாக மொழியாகச் செயற்படுத்தப்படாது சட்டப் புத்தகங்களுக்குள் தூங்கும் அவலம் தொடர்கின்றது.

பேரினவாத அரசாங்கங்கள் கூட தமிழ்மொழிக்கு விரும்பியோ, விரும்பாமலோ தமிழ்மொழியை அரச கரும மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் ஏற்று அங்கீகரித்துவிட்ட நிலையில் தமிழ் மக்களோ, தமிழ் அரசியல் சமூகப் பிரமுகர்களோ தமிழ்மொழியின் உரிமை பற்றிச் சிந்திப்பதாயுமில்லை, செயற்படுவதாயுமில்லை.

தமிழ்மொழியின் உரிமை என்றால் என்ன? தமிழ் மக்கள் தமது அன்றாட கடமைகளையும் அரசாங்கத் தொடர்புகளையும் தமிழ் மொழியில் எவ்விதத் தடையுமின்றி ஆற்றும், ஆற்றிக் கொள்ளும் உரிமையாகும். இதற்கான ஒழுங்குகள், வசதிகள் சரியாகச் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி பொறுப்புள்ள எவரும் அக்கறை செலுத்துவதாயில்லை.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் படி நாடு முழுவதற்குமான அரசாங்க மொழிகளாகச் சிங்களமும் தமிழும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதன்மை நிர்வாக மொழியாகத் தமிழும், ஏனைய மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச் சிங்களமும் அரசியலமைப்பின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள சிறுபான்மை மொழி பேசுவோரை மையமாக வைத்து அவர்களது எண்ணிக்கையையும் கவனத்திற் கொண்டு அரசியலமைப்பின் 22(1) பந்தியின் கீழ் குறிப்பிட்ட செயலகப் பிரிவுகளில் தமிழ் அல்லது சிங்களத்தையும் நிர்வாக மொழியாக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவில் 12.5 வீதத்திற்கு அதாவது, எட்டில் ஒரு பங்கினருக்கு மேல் குறிப்பிட்ட சிறுபான்மை மொழி பேசுவோர் வாழ்ந்தால் அப் பிரதேச செயலகப் பிரிவில் குறிப்பிட்ட சிறுபான்மை மொழியும் நிர்வாக மொழியாக இருப்பதற்கு ஜனாதிபதி வர்த்தமானிப் பிரகடனத்தின் மூலம் வழிவகை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இச் சட்டவிதி நடைமுறைக்கு வந்தவுடனேயே வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் வாழும் பிரதேச செயலக பிரிவுகளில் சிங்களம் நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வெளியேயுள்ள மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகள் கருத்திற் கொள்ளப்படவில்லை. தமிழுக்கு நிர்வாக அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இருப்பினும், காலம் கடந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதிய 1105/25 இலக்கம் கொண்ட அதி விசேட வர்த்தமானி மூலம் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா, வலப்பனை, ஹங்குரங்கெத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலுமாக மொத்தம் பன்னிரண்டு பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ்மொழியும் நிர்வாக மொழியாக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2001 பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதிய 1171/15 இலக்கம் கொண்ட அதி விசேட வர்த்தமானி மூலம் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திம்பிரிகஸ்யாய, கொழும்பு ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளின் நிர்வாக மொழியாகத் தமிழ் பிரகடனப்படுத்தப்பட்டது.

அவ்வாறே 2003 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி மூலம் பதுளை மாவட்டத்தின் லுணுகல, வெலிமடை, பதுளை, சொரணதோட்டை ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளும் தமிழ்மொழியும் நிர்வாக அந்தஸ்துடைய பிரதேச செயலக பிரிவுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன் புத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு தமிழ் மொழி நிர்வாக மொழி அந்தஸ்து கொண்ட பிரதேச செயலக பிரிவுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் பேசும் மக்கள் மூன்றில் ஒன்றுக்கும் அதிகமாகவுள்ள மேற்குறிப்பிட்ட இருபத்தொன்பது பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ்மொழிக்கு சட்டபூர்வ நிர்வாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு விதியின் படி எட்டிலொரு பங்குக்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாழும் பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ் மொழியை நிர்வாக மொழியாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால், அதுபற்றி எவரும் சிந்திக்கவில்லை.

தமிழ் மொழியை நிர்வாக அந்தஸ்துள்ள பிரதேச செயலக பிரிவுகளாக பிரகடனம் செய்யும் தகைமை கொண்ட செயலக பிரிவுகளாக கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை, கொலன்னாவஆகிய பிரதேச செயலக பிரிவுகளுமாக மொத்தம் இருபத்தொன்பது பிரதேச செயலக பிரிவுகள் உள்ளன.

குறிப்பிட்ட இருபத்தொன்பது செயலக பிரிவுகளில் தமிழ்மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட சட்டத்தில் இடமிருந்தும் அதுபற்றி எவரது கவனமும் ஈர்க்கப்படவில்லை.

எது எவ்வாறிருந்த போதும், நாட்டின் எந்த மூலையில் இருப்பினும், அவர் சிங்களவரோ, தமிழரோ என்ற பாகுபாடின்றி அவரவர் தமது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத் தொடர்புகளையும் தமது மொழியில் ஆற்றும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டு அதற்கான வழிமுறை செய்யப்பட்டால் மட்டுமே அரசியல் நாகரிகம் பேணப்படும். நாட்டில் நிலவும் அவலங்களுக்கு நிரந்தர முடிவு காணப்படும்.

தமிழ் மக்களின் மொழியுரிமையைச் செயற்படுத்த வெளிநாட்டு மத்தியஸ்தமோ, எவருடனாவது பேச்சுவார்த்தை நடத்தவோ வேண்டிய எந்தத் தேவையுமில்லை.

சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்மொழி உரிமையை முறைப்படி அமுல் செய்ய எந்தவொரு தமிழ் குழுவுடனோ, தமிழ் அரசியல் கட்சியுடனோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை.

அரசாங்கம் தமிழ் மக்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்பதால் அவர்களது மொழியுரிமையைத் தானே அமுல்படுத்த வேண்டும். அதுவே முறையானது, ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது, செய்யப்பட வேண்டியது. அரசாங்கம் இப் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றினால் தமிழ் மக்களுக்கு நாட்டின் மீது, தமது எதிர்கால நலனில், இருப்பில் நம்பிக்கை ஏற்படும்.

ஆனால், இன்றைய நிலை என்ன? தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களில் கூட தமிழ்மொழியைப் பயன்படுத்த முடிவதில்லை. போதிய தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிப்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை. தமிழ்மொழியை நடைமுறையில் பயன்படுத்த வழியின்றி உள்ளமை, பெயரளவில் சட்டப்புத்தகங்களில் எழுதி வைத்துவிட்டு மனமின்றி அவற்றை செயற்படுத்தாமலிருப்பது போன்றேயுள்ளது.

மறுக்கப்பட்ட மொழியுரிமையில் கிடைத்ததையாவது உரிய முறையில் பெற்றுக் கொள்ள தமிழ் மக்கள் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியுள்ளனர். தடைகளை அகற்ற ஆட்சியாளரும், தகர்த்தெறிய தமிழ் அரசியல், சமூக அமைப்புகளும் செயற்பட வேண்டும். செய்வார்களா?

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.