Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட இலங்கையில் தமிழரசு அமையுமா, அச்சப்படும் சிங்கள அரசாங்கம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட இலங்கையில் தமிழரசு அமையுமா, அச்சப்படும் சிங்கள அரசாங்கம் ?
 
இக்பால் செல்வன்
 

 



8580822754_9005f8a57d_z.jpg


இலங்கையில் நெடுங்காலமாக நடந்து வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இலங்கைத் தீவில் சமாதானம் நிலவுவதாகப் பலரும் நம்பி வந்தாலும் கூட, உண்மையான சமாதானத்தை இன்னமும் இலங்கை வாழ் மக்கள் பெறவில்லை. இலங்கைத் தீவு என்பது சிங்களம், தமிழ் பேசும் பலவித மக்கள் குழுமி வாழும் ஒரு தேசமாகும். ஒவ்வொர் பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சார, மத, மொழி மற்றும் வாழ்வியல் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. 
 
தமிழ் புலி பயங்கரவாதிகளின் தலைமையில் ஒரு தேசம் உருவாவதை பன்னாட்டு அரசுகள் விரும்பவில்லை, அத்தோடு தமிழ் புலிகள் இலங்கைத் தீவில் நீண்டதொரு சமாதானத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் எனவும் கருதினார்கள். அதனால் தமிழ் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டனர், ஆனால் வெறுமனே தமிழ் புலிகளை ஒழித்துவிட்டதால் மட்டும் சமாதானத்தை எட்ட முடியாது என்பதை ராஜபக்சே அரசாங்கமும், சிங்கள - பவுத்த இனவாதமும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். 
 
தமிழர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராஜபக்சே அரசாங்கம், தொடர்ந்து கொழும்பில் வாழும் முஸ்லிம்களைக் கூட அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதனை முஸ்லிம்கள் எதிர்ப்பார்த்தார்களா என்பது தெரியாது, ஆனால் நிச்சயம் தமிழர்கள் எதிர்ப்பார்த்த ஒன்று தான். சொல்லப் போனால் இலங்கையில் சிங்கள பேரினவாதம் ஒரு முனையிலும், இதர தமிழ் பேசும் சிறுபான்மை இனங்கள் மறு முனையிலும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். 
 
இலங்கைத் தீவில் தமிழர்கள் என எடுத்துக் கொண்டால் அவர்கள் மூன்று பெரும் தேசிய இனங்களாக ( இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், முஸ்லிம்கள் ) தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். அவர்களுக்குள் பல்வேறு சிறு பிரிவுகளும் இருக்கின்றன. இலங்கைத் தீவின் தமிழர்கள் வெவ்வேறு காலக் கட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் தென்னிந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் ஆவார்கள். ஆகையால் அவர்களுக்குள் ஒரு போதும் ஒற்றுமை என்பது எட்டப்பட்டதில்லை. 
 
ஆனால் மறுமுனையில் சிங்கள தேசத்திலும் இந்தியாவில் இருந்து குறிப்பாகத் தென்னிந்தியாவில் (அவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள்) இருந்து பல்வேறு காலக் கட்டத்தில் இலங்கையில் குடியேறிய போதும் அவர்கள் யாவரும் சிங்களவர் என்ற ஒரே கூரையின் கீழ் ஐக்கியப்பட்டுக் கொண்டார்கள். மிக அண்மையில் 18-ம் நூற்றாண்டில் குடியேறிய கரவார்கள், பரதவர்கள், செட்டிகள் கூடச் சிங்கள மயமாகிக் கொண்டனர். 
 
ஆனால் தமிழர்களோ அவ்வாறில்லை. வடக்குத் தமிழர்கள், கிழக்கு முக்குவத் தமிழர்கள், கிழக்கு தமிழ் முஸ்லிம்கள், மேற்கு தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழ் இந்திய வம்சாவளியினர், நீர்கொழும்பு கரவாத் தமிழர்கள், மேற்கு கத்தோலிக்கப் பரதவத் தமிழர்கள் என வகை வகையாகப் பிளவுப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பாதிக்கப்படும் போது மற்றவர்கள் கண்டும் காணாமல் வாழ்வதே தொடர் கதையாகி விட்டது. இவர்களில் இருந்து வரும் பெரும்பாலான அரசியல் வாதிகளும் சிங்கள பேரினவாதத்தினை எதிர்த்து பேசுவதே இல்லை. குறிப்பாக முஸ்லிம்களை சிங்கள "போது பல சேனா" போன்ற அமைப்புக்கள் அச்சுறுத்தும் போது, முஸ்லிம் அரசியல் வாதிகள் மௌனம் காத்தே வருகின்றனர். அதே போலத் தமிழர்கள் வடக்கில் ராணுவ மயமாக்கப்பட்ட சூழலில் அச்சுறுத்தலுக்குள் வாழ்கின்ற நிலையில் இதர பிரிவினர் வாய் மூடியே இருக்கின்றனர். தமிழர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி விடாமல் தடுப்பதில் தான் சிங்கள பேரினவாதம் வெற்றியடைந்துள்ளது. 
 
உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து தள்ளிப் போடப்பட்டு வந்த வடக்குத் தமிழ் மாகாணத் தேர்தலை செப்டம்பரில் நடத்த முடிவு செய்துள்ளது இலங்கை அரசு. ஆனால் அதற்கு முன்னர் மாகாண சபைகளின் அதிகாரங்களை முற்றாகப் பறிக்கும் செயலிலும், வடக்கு மாகாணத்தில் கணிசமான சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தவும் தீவிரமாக உழைத்து வருகின்றது ராஜபக்சே அரசாங்கம். 
 
அதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற பேரில் தமிழர்களின் நிலங்களை நிரந்தரமாக ராணுவத்தின் வசத்திலேயே வைத்திருக்கச் சிங்கள ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு நட்டப் பணத்தை ஈடுகொடுக்க முடிவு செய்துள்ளனர். அதாவது இந்த நிலங்கள் காலப் போக்கில் ராணுவமும், ராணுவ குடும்பங்களும் வசிக்கும் காலனிகளாக மாற்றப்படும். மண்ணின் சொந்தக் காரர்களுக்கு அடி மாட்டு விலைக் கொடுத்து அப்புறப்படுத்தும் ஏகாதிபத்திய முறையே இதுவாகும். 
 
அது மட்டுமில்லாமல் சிங்கள குடியேற்றங்கள் பலவும் வேகமாக நடந்து வருகின்றன. சிங்களவர்களை மேலதிகமாகக் குடியேற்றும் படி நிசந்தா சிறி வர்ணசிங்கை போன்ற சிங்களவாதிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். விடுதலைப் புலிகள், சிங்கள அரசுகளால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் தொகை மிகவும் குறைந்து போயுள்ள வன்னி மாவட்டங்களில் புதிய சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முறிகண்டி, முள்ளிவளை, மணலாறு, வவுனியா போன்ற பகுதிகளில் பல்வேறு சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு தமிழ் கிராமங்களில் பவுத்த கோயில்களும், சிங்களப் பெயர்களும் சூட்டப்பட்டு வருகின்றன.
 
 

sri_b.jpg


வடக்கின் மக்கள் தொகையில் 95 சதவீதம் தமிழர்கள் என்பதால் நிச்சயம் ஆளும் ராஜபக்சே அரசினால் அங்கு வெற்றியீட்ட முடியாது. கணிசமான முஸ்லிம், சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தினால் ஓரளவு வாக்குகளைப் பெற முடியும். அத்தோடு சாதி, மத ரீதியாகத் தமிழர்களைப் பிரித்து வாக்குகளைச் சேகரிக்கும் பணிகளில் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள், முன்னாள் புலிகள் தலைவர்களான கேபி, தயா மாஸ்டார் போன்றோரை அரசு பயன்படுத்தி வருகின்றது. அத்தோடு ஒற்றுமையாகத் தமிழர்களைப் பிரதிநித்துவம் படுத்த கூடிய தமிழ் தேசிய முன்னணியைப் பிளவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.  ஏற்கனவே புலம் பெயர் அமைப்புக்கள், மற்றும் வேளாளர் ஆதிக்கம் நிறைந்த சிவாஜிலிங்கம், மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனித்தனி அணியாகக் கடந்த 2010 தேர்தலை சந்தித்தன விளைவாகத் தமிழர்களின் வாக்குக் கணிசமாகப் பிளவடைந்தன. 
 
வடக்கு மாகாண தேர்தலை பன்னாட்டு அரசுகள் மிகக் கவனமாக நோக்கி இருக்கின்றன. வடக்கு மாகாண சபை தமிழர்களின் உரிமைகளை ஈடுசெய்யப் போவதில்லை என்ற போதும், அது நிச்சயம் தமிழர்களின் கோரிக்கையை முன் வைக்க ஒரு தளமாக அமையும். 
 
சிங்கள அரசாங்கம் ஏற்கனவே இலங்கையின் இதர எட்டு மாகாணங்களில் தமது கட்சி ஆட்சியை நிறுவியுள்ளது. அது மட்டுமில்லாமல் மாகாண சபை அதிகாரங்களைப் பறிக்கும் சட்ட மூலத்தை மாகாண சபைகளைக் கொண்டே முன்மொழிந்துள்ளனர். இலங்கை உள்நாட்டுப் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும், தமிழர்களுக்குச் சுயாட்சியோ, சம உரிமைகளோ தேவையில்லை எனவும் கூறி வருகின்றது. 
 
அதே சமயம் சிங்கள மக்களிடையே காணப்படும் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வளர்ச்சியின்மை போன்றவற்றைத் திசைத் திருப்ப தமிழ், முஸ்லிம்கள் மீது சிங்கள அமைப்புக்கள் ஊடாக வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இதன் மூலம் மிதவாத சிங்களவர்களைத் திசைத்திருப்பி, கடும்போக்கு பாமர சிங்களவர்களின் வாக்குகளை அள்ளும் திட்டமே இதுவாகும். ஏற்கனவே தேசத்தின் அனைத்து துறைகளிலும் ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கமே நிறைந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. 
 
ஆனால் அனைத்துக்கும் இடராக அமையப் போவது வடக்கு மாகணமே ஆகும். தொடர்ந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்டும், தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இம் மாகாணத்தில் தொடர்து தமிழ் தேசிய கூட்டமைப்பே வெற்றியீட்டும் சாத்தியமும் உள்ளது. அவ்வாறு வெற்றிப் பெறும் பட்சத்தில் சுயாட்சி வழங்குமாறு பன்னாட்டு அரசுகள் அழுத்தங்கள் கொடுக்கும், ராணுவ மயமாக்கத்தைக் குறைக்கவும், தமிழர்களின் நிலங்களை அபகரிக்கவும் அவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள். அத்தோடு புதிய சட்டங்களை நிறைவேற்றும் போது மாகாண சபையின் ஆதரவுகளைப் பெறும் பட்சத்தில் அவை தமிழர் விரோதமாக இருந்தால் நிச்சயம் வடக்கு மாகாணம் அதை நிராகரிக்கவே செய்யும். ஆனால் அதிகாரமற்ற ஒரு பொம்மை மாகாண சபை தமிழர்களை திருப்திபடுத்தப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
 
இருந்த போதும் இந்தக் காலக் கட்டத்தில் இலங்கையின் அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கும் வடக்கு மாகாண தேர்த்தல் முக்கியமானதாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் வடக்கு மாகாணத் தமிழர்கள் தமது வாழ்வியலை கட்டி எழுப்பவும், உரிமைகளைப் பெறவும் ஒரு தொடக்கப்புள்ளியாக இது அமையலாம். நிச்சயம் இத் தேர்தலில் தமிழர்கள் வெற்றியடைந்த பின்னரும் ஏமாற்றும் போக்கை சிங்கள அரசு தொடருமானால், அது நிச்சயம் மிகப் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாகத் தமிழகம் மற்றும் புலம் பெயர் நாடுகளில் உள்ள சிங்கள எதிர்ப்பு நிலைப்பாடும், சிங்களவர் மத்தியிலேயே உருவாகி வரும் ராஜபக்சே மீதான் அதிருப்தியும் இணையும் ஒரு புள்ளியில் மிகப் பெரிய மாற்றங்களை அங்கு ஏற்படுத்தும். இந்தக் காலக் கட்டத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் , தமிழர்கள் என அனைவரும் தாம் யார் பக்கம் நிற்கப் போகின்றோம் என்பதை முடிவு செய்வதும் மிக அவசியம். தம் தலையிலேயே மண்ணை வாரிப் போட மாட்டார்கள் எனவும் கருதுகின்றேன்.  தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களில் உள்ள மிதவாதிகள், புத்திமான்கள் நீண்டதொரு திட்டத்துடன் ஐக்கியப்பட்டு உழைக்க வேண்டும். குறுகிய கால பதவி, பணம் போன்றவற்றுக்கு பலியாகி பொதுமக்களின் நலன்களை சிங்கள பேரினவாதிகளிடம் அடகு வைக்கும் அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 
 
இலங்கைத் தீவில் நீண்ட சமாதானமும், மத- இனச்சார்பற்ற சட்ட சாசனமும், வடக்கில் சுயாட்சியும் கிடைக்குமா எல்லாவற்றுக்கும் காலம் ஒன்றே பதில் கூற வேண்டும். 
 



http://www.kodangi.com/2013/05/northern-province-election-and-sinhala-governments-plans.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.