Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் வாக்காளர்கள் கோருவது அரசியல் மாற்றம் - த.தே.கூட்டமைப்பு சாத்தியமாக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் வாக்காளர்கள் கோருவது அரசியல் மாற்றம் - த.தே.கூட்டமைப்பு சாத்தியமாக்குமா?
[ வியாழக்கிழமை, 10 ஒக்ரோபர் 2013, 08:27 GMT ] [ நித்தியபாரதி ]


அரசியற் தீர்வொன்றுக்கான அடிப்படையாக சுயநிர்ணய ஆட்சி மற்றும் இறையாண்மையை பகிர்ந்துகொள்ளுதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மிகத் தீவிரமாகக் கோரிக்கை விடுத்துச் செயற்பட்டால், சிங்கள ஆளும் வர்க்கமும் சிறிலங்கா அரசாங்கமும் இதனை முறியடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டியிருக்கும்.

இவ்வாறு The Diplomat என்னும் ஊடகத்தில் J. S. Tissainayagam* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்ககாக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போன்று சுயநிர்ணய ஆட்சிக்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக, செப்ரெம்பர் 21 அன்று சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுயநிர்ணய ஆட்சி என்பதை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்ததற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கில் சுயநிர்யண ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு என்ன செய்யவுள்ளது என்பதை அறிவது மிகவும் முக்கியமானதாகும்.

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் 1988ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாணசபைகள் உருவாக்கப்படுவதற்கான வரைபு அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்ட போதிலும், இவ்வாண்டு செப்ரெம்பர் 21 இலேயே முதன்முதலாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டது.

மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு மாகாண சபைகளின் ஊடாக அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என சிங்கள ஆளும் அரசாங்கத்திடம் அனைத்துலக சமூகமும் இலங்கையர்களும் அழுத்தம் கொடுத்தனர். தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்புக்கள் என்பன தொடர்ந்தும் இடம்பெறுகின்ற இந்நிலையில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியல் அதிகாரப் பகிர்வுக்கு மாகாண சபைகள் மட்டும் போதியதாக காணப்படவில்லை எனவும், சிறிலங்காவில் இனப்பிரச்சினை தோன்றுவதற்கு ஒற்றையாட்சியின் கீழான அரசியல் யாப்பே காரணம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகிறது. ஒருங்கிணைந்த அரசியல் யாப்பு என்பது மத்திய அரசாங்கம் நிறைவேற்று அதிகாரத்துடன், முழுமையான அதிகாரங்களையும் கட்டுப்படுத்துவதை அனுமதிப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னரே அதிகாரப் பகிர்வு மீது சிறிலங்காவை ஆளும் தற்போதைய அரசாங்கமானது மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கியதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூற்றை மேலும் வலுப்படுத்துகிறது.

மாகாணங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது முழுமையாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொள்கின்றமை முதலாவது விடயமாகும். இரண்டாவதாக, சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது அரசியல் யாப்பை மீறிச் செயற்பட முனைகிறது. அதாவது மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என்கின்ற தீர்மானத்தை எல்லா மாகாண சபைகளின் அனுமதியுமின்றி சிறிலங்கா அரசாங்கமானது அரசியல் யாப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது.

சிறிலங்கா அரசாங்கமானது காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை முற்றுமுழுதாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு முயற்சிசெய்து வரும் நிலையில் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது என யூலை 17 அன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வேட்பாளராகப் போட்டியிட்ட சி.வி.விக்னேஸ்வரனிடம் 'டெய்லி மிறர்' ஊடகம் வினவியது.

"இதுவரையில் வடக்கு மாகாண சபைக்கென ஜனநாயக ரீதியில் எந்தவொரு நிறுவகமும் தெரிவுசெய்யப்படவில்லை. இந்நிலையில் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் மூலம் நாங்கள் வடக்கு மாகாணத்தில் ஒரு ஜனநாயக ரீதியான நிறுவகம் ஒன்றை அமைக்க எம்மை அனுமதிக்க வேண்டும். இதற்குப் பின்னர், நாங்கள் (Oliver Twist) ஒலிவர் ருவிஸ்ற் போன்று சற்றுக் கூடுதலானவற்றைக் கேட்கமுடியும்" என சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்திருந்தார்.

"சற்றுக் கூடுதலானவற்றைக் கேட்க முடியும்" என விக்னேஸ்வரன் தனது நேர்காணலில் குறிப்பிட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து குறிப்பாக வடக்கு மாகாணத் தமிழர்கள் மற்றும் பொதுவாக எல்லாத் தமிழர்களும் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதே இங்கு வினாவாகும்.

யூலை 17ல் விக்னேஸ்வரன் குறிப்பிட்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவானது தற்போது மேலும் கவனத்திற்கொள்ளப்படுகின்ற, முனைப்புப் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக, காணி தொடர்பான அனைத்துத் தீர்மானங்களையும் மத்திய அரசாங்கமே எடுக்கமுடியும் எனவும் மாகாண சபைகளுக்கு எவ்வித அதிகாரமுமில்லை எனவும் சிறிலங்கா உச்ச நீதிமன்றம் செப்ரெம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் எவ்வித பொறுப்புணர்வும் இல்லாது தனியாருக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றின் இத்தீர்மானமானது அரசாங்கத்தின் நடவடிக்கையை மேலும் ஊக்குவிப்பதாக உள்ளது. அதாவது வடக்கில் மாகாண சபையானது காணிகள் தொடர்பானத்தை எடுக்க முடியும் என்பது நடைமுறையிலிருந்தால், இதன்மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் நில அபகரிப்பானது தடைப்பட்டுவிடும் என்பதைக் கருத்திற் கொண்டே சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் இத்தகையதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் கொழும்புடன் இணைந்து அதிகாரப் பகிர்வின் மூலம் வடக்கு மாகாணத்தில் ஆட்சியை நடாத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தது. ஆனால் இது போதுமானதல்ல. தமிழ்மக்களின் பிரச்சினையானது இறையாண்மை மற்றும் சமஸ்டி நிர்வாகக் கட்டமைப்புகளை உள்ளடக்கிய அவற்றைப் பகிர்ந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டதாகும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்படும் போதே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அடிப்படைத் தீர்வு காணமுடியும்.

மூன்றாவதாக, சிறிலங்காவில் வடக்கில் தமிழ் மக்களின் மீது அரசியல் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இங்கு ஆயுதப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் மக்களின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். தமிழ் மக்கள் தற்போது பொறுமையிழந்துள்ளனர். அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அண்மையில் அதாவது ஆகஸ்ட்டில் சிறிலங்காவின் வடக்குக்கு வருகை தந்திருந்த ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவி பிள்ளையை காணாமற் போன உறவுகளின் குடும்பத்தவர்கள் சந்திப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது.

தம்மீதான சிறிலங்கா இராணுவத்தினதும், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளினதும் அடக்குமுறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தாம் தேர்ந்தெடுத்த கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுப்பார்கள். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நம்பகமான பதிலை வழங்கவேண்டியிருக்கும்.

இதேவேளையில், அரசியற் தீர்வொன்றுக்கான அடிப்படையாக சுயநிர்ணய ஆட்சி மற்றும் இறையாண்மையை பகிர்ந்துகொள்ளுதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மிகத் தீவிரமாகக் கோரிக்கை விடுத்துச் செயற்பட்டால், சிங்கள ஆளும் வர்க்கமும் சிறிலங்கா அரசாங்கமும் இதனை முறியடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டியிருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கோரிக்கையை வலுப்படுத்துவதற்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அமைதிவழிப் போராட்டங்கள் போன்றவற்றில் பொது மக்களை ஈடுபடுத்தவேண்டியிருக்கும். இதற்கு தமிழ் மக்களின் ஆதரவைப் பெறும் அதேவேளையில் கூட்டமைப்பானது அனைத்துலக சமூகத்தின் ஆதரவையும் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள அரசியற் கட்சிகளின் ஒத்துழைப்பையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறவேண்டிய தேவையுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேர்தலில் வெற்றி கொள்ள வைப்பதன் மூலம் தமக்கான மாற்றம் ஏற்படும் என்பதையும் இதற்கான காலம் தற்போது கனிந்துவிட்டது என்பதையும் வாக்காளர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான சக்திகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் மிகவும் பயனுள்ள வினைத்திறனுள்ள வகையில் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் விடிவிற்கான தலைமைத்துவத்தை வழங்கமுடியுமா அல்லது இல்லையா என்பதே தற்போதுள்ள கேள்வியாகும். இதற்கு ஒலிவர் ருவிஸ்ரை விட மிக அதிகம் கோரவேண்டும் என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.

*J. S. Tissainayagam worked in English-language national newspapers in Sri Lanka for over 25 years. He won Peter Mackler Award for Courageous and Ethical Journalism (2009) and the CPJ Press Freedom Award (2009).


http://www.puthinappalakai.com/view.php?20131010109230

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.