Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்று அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உள்ள தடைகளும் வாய்ப்புகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் உள்ள தடைகளும் வாய்ப்புகளும்

முத்துக்குமார்

மாற்று அரசியல் இயக்கம் ஒன்று தமிழ் மக்களுக்கு தேவையாக உள்ள போதும் அதனை கட்டி எழுப்புவதில் பல தடைகளும் காணப்படுகின்றன.

அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளாகும். கூட்டமைப்பு - அரசாங்கம், இந்தியா, சர்வதேச சக்திகள் என்பவற்றிற்கு தலையினையும், தமிழ் மக்களுக்கு வாலையும் காட்ட முற்படுகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்றுகின்ற அமைப்பாக தன்னைக் காட்டுகின்றது.

தேர்தல் காலங்களில் இந்த வெளிப்படுத்துகை அதி உச்சநிலைக்குச் சென்று விடுகின்றது. இதனால் தான் 'பிரபாகரன் மாவீரன்' என வடமாகாணசபைத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் புலிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என சம்பந்தன் கூற முன்வரவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் பிராந்திய சர்வதேச சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக புலிகளுக்கும் தங்களிற்கும் தொடர்பில்லை என தலையில் அடித்து சத்தியம் செய்ய முற்படுகின்றது.

இந்த இரட்டை தன்மை கூட்டமைப்பின் இருப்பிற்கு அவசியம் என்பதால் தான் இரண்டையும் பின்பற்ற முயல்கின்றது. இங்கும் கூட கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு கூட்டமைப்பின் தலைமை முன்வைக்கின்ற நிலைப்பாடுதான். சர்வதேசம் அதனைத்தான் கவனத்தில் கொள்ளும். இந்த நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தமிழரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளை கைவிட்டு 13 ஆவது திருத்தத்திற்குள் அதனை முடக்குவதுதான் அந் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டை முன்வைப்பதற்கு மக்கள் பலம் ஒன்று தேவைப்படுகின்றது. இதனால் தான் தேர்தல் காலங்களில் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைப்பதாக கூட்டமைப்பின் இரண்டாம் மட்டத்தவர்கள் பிரச்சாரம் செய்யும்போது தலைமை மௌனமாகிவிடுகின்றது. இங்கு கூட்டமைப்பின் தலைமை என்பது சம்பந்தன் தான். வேண்டுமானால் அதற்கு துணை நிற்பவர்களாக சுமந்திரனையும், விக்னேஸ்வரனையும் குறிப்பிடலாம். ஏனையவர்களுக்கு தீர்மானம் எடுப்பதில் எந்த பங்கும் கிடையாது.

இந்த வேசம் காட்டும் அரசியலினால் மாற்று அரசியல் இயக்க சக்திகள் மக்கள் தளத்தினை கைப்பற்றுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஐக்கியம் என்ற கோசமும் மாற்று அரசியல் இயக்க செயற்பாட்டாளர்களை அரசாங்கத்தின் ஆட்கள் என முத்திரை குத்துவதும், அவர்கள் வளர்வதில் தடங்கல்களை ஏற்படுத்துகின்றது. ஒரு தரப்பினை மட்டும் ஆதரிக்கின்ற மக்களின் மரபு ரீதியான மனோநிலையும் சிரமங்களை ஏற்பத்துகின்றது. இதைவிட முக்கிய சந்தர்ப்பங்களில் மாற்றுச் சக்தி ஏதாவது போராட்டத்தை தொடக்க முற்பட்டால் தானும் போராட்டத்தை நடாத்த அழைப்பு விடுக்கின்றது. மாற்றுச் சக்தி போராட்டங்களை நடாத்தும்போது ஒரு சில நபர்கள் மட்டும் கலந்து கொண்டு புகைப்படமெடுத்து அதனை தான் நடாத்தும் போராட்டமாக காட்ட முற்படுகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நடாத்திய பல போராட்டங்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே போராட்டத்தை நடாத்த அழைப்பு விடுத்து அச் சந்தர்ப்பத்தை முடக்கிவிடுகின்றது மாவிட்டபுரப் போராட்டம் இந்த வகையில் தான் இடம்பெற்றது.

நான் முன்னர் கூறியது போல பிரதான தடை கூட்டமைப்புத்தான். இவற்றைவிட வேறும் பல தடைகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது அரச பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் ஆகும். உளவுப் பிரிவினரின் கெடுபிடிகளே அதிகமாக உள்ளன.

தளத்தில் இன்று மாற்று அரசியல் இயக்கமாக தொழில்படுவது கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தான். இந்த முன்னணியுடன் இணைய முற்படும் இளைஞர்கள் உளவுப்பிரிவினரால் மிரட்டப்படுகின்றனர். இதனால் உங்கள் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் இணைந்து செயற்பட பயமாக உள்ளது என பலர் நேரடியாகவே கூறியிருக்கின்றனர். புலிகளின் தொடர்ச்சியாக மக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரை பார்க்க முற்படுவதும் இதற்கு காரணம்.

இரண்டாவது, பிராந்திய சர்வதேச சக்திகள் ஒரு மாற்று அரசியல் இயக்கம் வளர விரும்பாமையாகும். இச் சக்திகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை 13வது திருத்தத்திற்குள்ளே முடக்க விரும்புவதனாலும், தமது இலக்கான ஆட்சி மாற்றத்திற்கு மாற்று அரசியல் இயக்கம் தடையாக இருக்கும் என்பதனாலும், கூட்டமைப்பு போல தங்களது பொம்மை இயக்கமாக மாற்று அரசியல் இயக்கம் இருக்காது என்பதனாலும், மாற்று அரசியல் இயக்கமொன்று வளர்வதை விரும்பவில்லை. இவை பல்வேறு வழிகளிலும் மாற்று அரசியல் இயக்கம் வளர்வதற்குத் தடைகளைப் போட்டு வருவதுடன் கூட்டமைப்பினை ஊதிப்பெருப்பித்தும் காட்ட முற்படுகின்றன.

மூன்றாவது கொழும்பினை மையமாக கொண்ட தமிழ் மேட்டுக்குடி, தமிழர் அரசியலில் மேல் நிலைக்கு வருகின்றமையாகும். இந்த மேட்டுக்குடி எப்போதும் சமசர அரசியலிலேயே நாட்டம் கொண்டது. போராட்ட அரசியலுக்கு அதன் வர்க்கக்குணாம்சம் ஒரு போதும் இடம் கொடுப்பதில்லை. கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் சல்லாபம் செய்யும் கூட்டம் தான் இது.

ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரும் தமிழ் அரசியலில் இக்கூட்டம் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. ஆயுதப்போராட்ட காலத்தில் இச்சக்திகளினால் தமிழ் அரசியலுக்குள் நுழையவே முடியவில்லை. கொழும்பில் இருந்துகொண்டு இக் கூட்டம் ஆயுதப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் செயற்பாட்டிலேயே இறங்கியிருந்தது. புலிகள் இயக்கம் பற்றிய பிழையான தோற்றத்தினை சர்வதேச சமூகத்திற்கு இவையும் இணைந்து கொடுத்திருந்தன. இந்த கூட்டம் தமிழ் அரசியலில் இருந்து அகற்றப்பட்ட பின்னர்தான் சாதாரண மக்களில் இருந்து அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் உருவாகினர்.

இன்று ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்டபின் இக் கூட்டம் மீண்டும் மேல் நிலைக்கு வந்துள்ளது. மக்களும் இவர்களின் கல்வி, குடும்ப அந்தஸ்து காரணமாக ஆதரவளிக்க முற்படுகின்றனர். முதல் நாள் தீர்மானித்து அடுத்த நாள் தலைவராகும் நிலையும் ஏற்படுகின்றது. இவர்கள் வரும்போது தனியாக வராமல் மேட்டுக்குடியையும் கூடவே கொண்டுவருகின்றனர். எந்த வித உழைப்போ அர்ப்பணமோ, இழப்போ இல்லாமல் சுமந்திரனும், விக்னேஸ்வரனும் இவ்வாறு தான் தலைவர்களாக வரமுடிந்தது.

நான்காவது புவிசார் அரசியலில் முன்னேறிய பிரிவினருக்குகூட தெளிவுகள் இல்லாமையாகும். இலங்கையை மையமாக வைத்து ஒரு புவிசார் அரசியல் போட்டி நடைபெறுகின்றது. அந்த அரசியலில் தமிழ் மக்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் சர்வதேச அரசியலில் தமிழ் அரசியலுக்கு இடமுண்டு. நாமும் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று எந்தத் தெளிவும் முன்னேறிய பிரிவினரிடம் கிடையாது. சாதாரண மக்களிடம் இவ் விடயம் பூச்சியம் தான். உண்மையில் புவிசார் அரசியல் தான் தமிழ் அரசியலை இன்றைய நிலையிலாவது தக்கவைக்க உதவுகின்றது என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. கூட்டமைப்பு ஒரு பொம்மையாகச் செயற்படுவதும் இப் புவிசார் அரசியலினால் தான் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.

ஐந்தாவது தமிழ் ஊடகங்களின் ஒத்துழைப்பின்மையாகும். அவை ஓடும் குதிரையில் தான் பந்தயம் கட்ட முயற்சிக்கின்றன. மாற்று அரசியல் சக்திகளினது கருத்துக்களுக்கு ஒரு சிறிய இடத்தைக்கூட கொடுப்பதில்லை இது விடயத்தில் ஊடகத்திற்குரிய ஜனநாயக விழுமியங்களை ஐந்து வீதம் கூட பின்பற்றுவதில்லை. தினக்குரல் ஊடகம் நேரடியாகவே உங்களது கருத்துக்களை பிரசுரிக்க மாட்டோம் என மாற்று அரசியல் இயக்கத்திற்குக் கூறியிருந்தது.

இந்தியாவின் செல்வாக்கும் தமிழ் ஊடகங்களில் இருக்கின்றது. மாற்று அரசியலில் மாற்று அரசியல் கருத்துக்கு இடம் கொடுக்காதீர்கள் என அது கூறியிருக்கலாம். மக்களுக்கு எது தேவை என்பதை மக்கள் தீர்மானிப்பதைவிட ஊடகங்களின் ஆசிரியபீடம் தீர்மானிப்பது தான் மிகவும் சோகமானது.

வரலாறு அரசியற் செயற்பாட்டாளர்களுக்கு வெறுமனே தடைகளை மட்டும் கொடுப்பதில்லை. மாறாக வாய்ப்புக்களையும் கொடுக்கின்றது. மாற்று அரசியல் இயக்கத்திற்கும் பல வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அதில் முதலாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் பின்நோக்கிய அரசியல் நகர்த்துகையும் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புக்களுமாகும். நான் முன்னரே கூறியது போல கூட்டமைப்பு 40களிற்கு தமிழ் அரசியலை நகர்த்தப் பார்க்கின்றது. 50களில் கூட வலுவான சமஸ்டிக் கோரிக்கை இருந்தது. ஒற்றையாட்சிக்குள் வெறும் நிர்வாகப் பரவலாக்கலை மட்டும் கொண்ட மாகாணசபை முறையை ஏற்றிருப்பது, 40களிற்கு அரசியலை நகர்த்திச் செல்லும் செயற்பாடே. 40களில் ஒற்றையாட்சிக்குள் தீர்வைத் தேடுகின்ற அரசியலையே தமிழர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இந்த பின்நகர்த்துகைக்காக பல்வேறு காட்டிக்கொடுப்புகளிலும் கூட்டமைப்பு ஈடுபட்டுவருகின்றது. சம்பந்தன் சிங்கக்கொடி ஏற்றியமை, வடக்கு - கிழக்குப் பிரிப்பினை ஏற்று மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டமை, ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் எடுத்தமை, கணவன் - மனைவி உறவிற்குள் தமிழ்நாடு தலையிடத் தேவையில்லை என விக்னேஸ்வரன் அறிக்கை விட்டமை, இந்தியப்பிரதமர் பொதுநலவாய மாநாட்டிற்கு செல்லக்கூடாது என தமிழ் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கையில் இந்தியப் பிரதமரை இலங்கைவருமாறு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியமை எல்லாம் மாபெரும் காட்டிக்கொடுப்புகளேயாகும்.

தமிழ் மக்கள் நீண்ட காலத்திற்கு இந்த காட்டிக் கொடுப்புக்களை அனுமதிக்கப்போவதில்லை. கூட்டமைப்பு நினைப்பது போல தமிழ் அரசியலை விழுத்துவதற்கு தமிழ்த் தேசியம், மேல் மண்ணில் வேர்விட்ட மரமல்ல.

இரண்டாது இலங்கை அரசு மேற்கொள்ளும் பச்சை ஆக்கிரமிப்புகளாகும். அது பேரின ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலை கிழக்கிற்கு மட்டுமல்ல வடக்கிற்கும் நகர்த்தியிருக்கின்றது. ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையினை அரங்கேற்றுகின்றது. கூட்டமைப்பு மாகாணசபை முறையினை தக்கவைப்பதற்காக இந்த கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு எதிராக முறையான போராட்டம் எவற்றையும் நடாத்தப்போவதில்லை.

கூட்டமைப்பின் கீழ் மட்டம் இது தொடர்பாக அறிக்கைவிட்டுக்கொண்டிருந்தாலும் தலைமை இதனை கணக்கெடுப்பதில்லை. தலைமை இதனை உள்ளுர விரும்பவும் கூடும்.

ஏனெனில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படைக்கோரிக்கைகள் தமிழ் அரசியலை விட்டு அகன்றுவிடவேண்டும் என்றே அது விரும்புகின்றது. அரசின் ஆக்கிரமிப்புக்கள் வெற்றிபெறுமானால் அக்கொள்கைகளுக்கான தேவையே இல்லாமல் போய்விடும்.

மாற்று அரசியல் இயக்கம் இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் மனங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.

மூன்றாவது தமிழ்நாட்டின் எழுச்சியாகும். தமிழ் நாட்டில் இன்று எந்த அரசியல் சக்திகளும், தமிழ்நாடு காங்கிரஸ் உட்பட, தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக இல்லை. தமிழக மக்களிடம் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாக பொதுக்கருத்து ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம். இந்த பொதுக்கருத்தினை மீறிச் செயற்படும் துணிவு எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லை. தமிழக மக்களைப் பொறுத்தவரையில் வளர்ச்சியடைந்த இந்தப் போராட்டத்தை நம்மால் பாதுகாக்கமுடியவில்லை என்ற குற்றவுணர்வுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இலங்கைத் தமிழர்களைவிடவும் தமிழ்த்தேசிய அரசியலில் உறுதியாக நிற்கின்றனர்.

ஜெனிவாவில் இந்தியா இலங்கை அரசிற்கு எதிராக வாக்களித்தமையும், மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கும் தமிழக மக்களே காரணம்.

இந்த எழுச்சி மாற்று அரசியல் இயக்கத்திற்கு ஒரு துணைப்பலத்தினை வழங்கும்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=77c1fd15-9f1e-4a4c-932f-b216f32450a2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.