Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன நடக்கப் போகின்றது ஜெனிவாவில்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கப் போகின்றது ஜெனிவாவில்?

முத்துக்குமார்

அமெரிக்க வெளிநாட்டு அமைச்சின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கிறார். அவர் கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துவிட்டே யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். அங்கு அவர் முக்கியமாக யாழ் ஆயர் இல்லம், உதயன் பத்திரிகை அலுவலகம் என்பவற்றிற்கு சென்றதுடன் தனியார் விடுதி ஒன்றில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலனையும் சந்தித்திருக்கின்றார். சந்தித்தவர்கள் எல்லோரும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரனை வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருந்தனர்.

நிசா தேசாய் பிஸ்வாலின் நடவடிக்கைகளையும் இதற்கு முன்னர் வருகை தந்த ஸ்ரீபன் ரேப்பின் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அமெரிக்கா இந்த தடவை சற்று வலுவாக இலங்கையின் காதை திருகுவது என முடிவெடுத்துவிட்டது போலவே தெரிகின்றது. இந்த தீர்மானத்திற்கு வலிமையை சேர்ப்பதற்காகவே அமெரிக்க ராஜந்திரிகள் அடுத்தடுத்து இலங்கைக்கு பயணமாகின்றனர். தங்களினுடைய தீர்மானத்திற்கு தமிழ்த் தரப்பின் ஆதரவு உள்ளது என்பதை வெளிக்காட்டுவதே இப்பயணங்களின் நோக்கமாக இருக்கலாம். அரசியல் கட்சிகளுக்கு அப்பால் மதத் தலைவர்கள், ஊடகத்துறையினர், சிவில் சமூகத்தவர் என பலதரப்பட்டவர் மீதும் இவ் இராஜதந்திரிகள் கவனத்தைக் குவித்தமை இதனையே வெளிப்படுத்துகின்றது.

அமெரிக்கா சற்று வலுவான தீர்மானத்தை கொண்டுவரப்போகின்றது என்பது தெரிந்ததினால்தான் மதத் தலைவர்கள் கூட சர்வதேச விசாரணை தேவையென துணிந்து கூறியிருக்கின்றனர். வடமாகாண சபையும் துணிந்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அனந்தியினது பிரேரணையின் வீரியத்தை கூட்டமைப்பின் தலைமை குறைத்தாலும் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா இவ்வாறு செயற்படுவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் இருக்கலாம். அதில் முதலாவது வெட்டி ஓடுவதற்கு இங்கு இடமில்லை, பணிந்துதான் போகவேண்டும் என்பதை இலங்கைக்கு சற்று தெளிவாக வற்புறுத்துவது. தன்னுடைய அழுத்தம் தொடர்பில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. இருக்கின்ற இடத்திலிருந்து பின்நோக்கி நகர்வதை அமெரிக்க ராஜதந்திரம் ஒருபோதும் விரும்புவதில்லை. இலங்கை அரசின் வெட்டி ஓடலுக்கு இந்தத் தடவை சற்று வலுவான செய்தியை சொல்ல அது முனைகின்றது. ஆனால் இந்த முனைப்பு இலங்கையின் கழுத்தை முறிக்கும் அளவிற்கு செல்லும் என எதிர்பார்க்க முடியாது. சற்று வலிமையான காது திருகலாகத்தான் அது இருக்க முடியும். இந்தியாவைப் போல பின்நோக்கி நகர்வதற்கு நெகிழ்ந்து கொடுக்க அமெரிக்க ராஜதந்திரத்தினால் முடியாது.

இரண்டாவது, வடமாகாண சபையும் தோற்றுப்போயுள்ள நிலையில் தமிழ் அரசியலை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டுமானால் முன்நோக்கிய நகர்வுகளை காட்டியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கும் ஏற்பட்டுள்ளமையாகும். தற்போது தமிழர்கள் மத்தியில் சொந்த நிகழ்ச்சி நிரல் இல்லாத, சர்வதேச சக்திகளுக்கும் பிராந்திய சக்திக்கும் பின்னால் இழுபட்டுப்போகின்ற தலைமையே உள்ளது. சர்வதேச, பிராந்திய அழுத்தங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவுமானால் தமிழர்களின் தலைமை தமக்கென சொந்த நிகழ்ச்சி நிரலை கொண்டவர்களின் கைகளுக்கு மாறலாம். தற்போது டயஸ்போராவும் தமிழ்நாடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இல்லை. அவை தனியான நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்க முயற்சிக்கின்றன. தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தனியான நிகழ்சி நிரலுடன் நகர்கின்றது. இவற்றிற்கிடையே ஒர் இணைவு ஏற்பட்டு எதிர்காலத்தில் மாற்றுசக்தியாக அவை எழுச்சியடையலாம். சர்வதேச தீர்ப்பாய முயற்சி ஒரு வகையில் இணைவு முயற்சியே. இவ் மூன்று தரப்புகளும் இதில் பங்குபற்றியுள்ளன. இதனை சர்வதேச சக்திகளோ பிராந்திய சக்திகளோ விரும்பப் போவதில்லை.

எனவே இந்தக் காரணங்களினால் சற்று வலிமை கூடிய செயற்பாட்டை முன்னெடுப்பதை தவிர அமெரிக்காவிற்கு வேறு தெரிவு இல்லை. கழுத்து முறிப்பும் இல்லாமல் மென்மையான காது திருகலும் இல்லாமல் சற்று வலிமையான காது திருகலை இந்த தடவை எதிர்பார்க்கலாம். ஆனால் இதுவும் பண்புமாற்றமாக இல்லாமல் ஒரு அளவு மாற்றமாக இருப்பதற்கு மட்டுமே வாய்ப்புக்கள் உண்டு. குறைந்த பட்சம் 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சேர்கி மக்னிற்ஸ்கியின் சட்டத்தின் ஆட்சியும், பொறுப்புடமையும் என்ற சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்தும் அளவிற்கு அமெரிக்கா செல்லும் எனக் கூறமுடியாது. இச் சட்டத்தின் கீழ் ரஸ்யாவில் மக்னிற்ஸ்கியின் மரணத்திற்கு காரணமானவர்களை விசாரித்து அமெரிக்காவிலுள்ள அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வழிசெய்யப்பட்டது.

அமெரிக்காவினால் கொடுக்கப்படுகின்ற நெருக்கடிகளுக்கு இலங்கை அரசு எவ்வாறு முகம்கொடுக்கப் போகின்றது என்பது இன்று அனைவராலும் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகும். இலங்கை அரசிற்கு அமெரிக்கா காதை திருகும் செயற்பாட்டை மட்டும் மேற்கொள்ளும், இப்போதைக்கு கழுத்தை முறிக்கும் எல்லைக்குச் செல்லாது என்பது நன்றாகவே தெரியும். ஆட்சி மாற்றம் என்ற கனவு இருக்கும் வரை அமெரிக்கா சுற்றி சுற்றி மென் அழுத்தத்திலேயே மையம் கொண்டிருக்கும். இந்த மென் அழுத்தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப கொஞ்சம் அதிகரிக்குமே தவிர, வன் அழுத்தம் என்ற நிலைக்குப் போகாது என்பதும் தெரியும். இலங்கை அரசிற்குள்ள பிரச்சினை இந்த மென் அழுத்தம் அதிகரிப்பதை எப்படி தடுப்பது என்பதே.

இதற்கு அரசு பல வழிகளை கையாள்வது போல தெரிகின்றது. அதில் முதலாவது மேற்குலகத்தோடு சற்று சமரசம் செய்யக்கூடிய பேராசிரியர் பீரிசை மீண்டும் களம் இறக்கியுள்ளமையாகும். முன்னரைப்போல பெரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் சற்றுச் சுதந்திரமாக பேராசிரியரை செயற்பட விட்டுள்ளதுபோலவே தெரிகின்றது. அவர் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுடன் சிநேகபூர்வமான உரையாடல்களை மேற்கொள்ளுகின்றார். இந்த உரையாடலில் ஒரு வகை மன்றாட்டமே தொனிக்கின்றது. யுத்தத்தில் இருந்து மீண்டெழும் நாட்டை வீழ்த்தாதீர்கள் என்பது தான் அந்த மன்றாட்டம். இதன் ஊடாக ஒரு கால அவகாசத்திற்கு விண்ணப்பிக்கும் போக்கும் தென்படுகின்றது.

இரண்டாவது இந்தியாவை இந்தத் தடவை ஆதரவாக வாக்களிக்கச் செய்வது அல்லது குறைந்த பட்டசம் நடுநிலை வகிக்கச் செய்வது. இதற்காகவும் பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன. மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தமையும் இதில் ஒன்று தான். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தேர்தலை எதிர்நோக்கி நிற்பதால் வெளிப்படையாக இலங்கையை ஆதரிக்க தயங்குகின்றது. முன்னரைப்போல மறைமுகமாக பிரேரணையின் வீரியத்தை குறைக்கும் வழிவகைகளில் அது இறங்கலாம்.

மூன்றாவது, மனித உரிமை கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்து பிடிப்பதாகும். வழமையாக மத்திய கிழக்கு நாடுகளில் அதிக அக்கறை செலுத்திய அரசு இந்தத்தடவை ஆபிரிக்க நாடுகளில் அக்கறை செலுத்துகின்றது. ஜனாதிபதி உட்பட பலர் ஆபிரிக்க நாடுகளுக்கு பயணம் செல்கின்றனர்.

மறுபக்கத்தில் அமெரிக்கா கொடுக்கும் மென் அழுத்தத்தை இலங்கை அரசு உள்ளூர விரும்புகின்ற நிலையும் காணமுடிகின்றது. இந்த அழுத்தங்கள்தான் சிங்கள மக்களிடம் இருந்து அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை பெற உதவுகின்றது. ஜெனிவா காலம் பார்த்து மாகாணசபை தேர்தலுக்கு ஏற்பாடு செய்தமையும் இந்த தந்திரோபாயத்தின் ஒரு பகுதி தான்.

அரசாங்கத்தின் இந்த வகையான செயற்பாடு அழுத்தம் கொடுக்கும் சக்திகளுக்கு பெரும் சங்கடங்களை கொடுக்கின்றது. அழுத்தம் கொடுத்தாலும் லாபம் மகிந்த அரசாங்கத்திற்கு தான். அழுத்தம் கொடுக்காவிட்டாலும் லாபம் மகிந்த அரசாங்கத்திற்குதான்.

சர்வதேச சக்திகளும் பிராந்திய சக்தியும் தமது ஆட்சி மாற்ற நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக இருக்கும் என்பதால் தமிழ் அரசியல் மேலே வருவதை விரும்பவில்லை. போராட்டங்கள் நடாத்தப்படுவதையும் விரும்புவதில்லை. ஆனால் இவர்களது ஆட்சி மாற்றம் வெறும் கனவாக இருக்குமே தவிர ஒருபோதும் நனவாக மாறப் போவதில்லை.

சர்வதேச சக்திகள் முறிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் வெறுமனே வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த சங்கடங்களை தொடர்ச்சியாக சந்திப்பது தவிர்க்க முடியாததே.

மொத்தத்தில் அரசாங்கம் இந்த தடவையும் சிறிய சேதங்களுடன் தப்பி பிழைக்கும் என்று நினைக்கின்றேன்.

அமெரிக்க பிரேரணையின் வீரியத்தை குறைப்பதற்கு இந்தியாவால் இந்தத் தடவை முடியுமா? முடியாதா? என்பதும் இன்று பலத்த விவாதப்பொருளாகியுள்ளது. இந்தத் தடவை முன்னரை விட தடங்கல்கள் அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வரப்போகும் தேர்தல்தான் இதற்கான பிரதான காரணம். கொள்கையளவில் இந்திய மத்திய அரசிடம் எந்தவித மாற்றமும் இல்லை. அரசியல் மட்டத்திலும் சரி, அதிகாரிகள் மட்டத்திலும் சரி இந்த மாற்றங்களை தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. கொள்கையளவில் இவ் இருதரப்பும் இலங்கை அரசினைப் பாதுகாக்கவே விரும்புகின்றன. இந்தியாவின் வெளிவிவகார கொள்கை அதற்கமையவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார கொள்கையை தீர்மானிக்கும் சவுத் புளொக்கில் இந்தப் போக்கு அதிகமாக உள்ளது. வலிமையான ஆளுமைமிக்க அரசியல் தலைமை உருவானால் மட்டும் சவுத் புளொக்கில் அபிப்பிராயத்தை மீறி செயற்பட முன்வரலாம். பெரிய நாடுகளின் வெளிவிவகார கொள்கை உருவாக்கத்தில் இரண்டு போக்குகள் முக்கியமானவை. ஒன்று அவை வெளிநாட்டுக் கொள்கையை அடிக்கடி மாற்றுவதில்லை. அரசியல் தலைமையை விட அதிகாரிகள் குழுவே வெளிநாட்டு கொள்கை உருவாக்கத்தில் பெரிய பங்கு வகிக்கின்றது. ஏற்கனவே கூறியது போல ஆளுமை உள்ள, அரசியல் பலம் உள்ள தலைமை வரும்போதே இப்போக்கினை மீறி செயற்பட முடியும்.

பேராசிரியர் சிவத்தம்பி நகைச்சுவையாக கூறுவார் 'பிரபாகரன் இந்தியாவின் பிரதமராக வந்தாலும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை புலிகளுக்கு எதிராகவே இருக்கும்'

ஆனால் எல்லாவற்றையும் இறுதியில் தீர்மானிப்பது அரசியல் என்பார்கள். தமிழர்களை முதன்மைப்படுத்திய அரசியல் இந்தியாவில் மேல் எழும்பும்போது இவற்றில் மாற்றங்கள் வரலாம்.

தற்போது இரண்டு விடயங்கள் இந்திய வெளிவிவகார கொள்கைக்கு சவாலாக உள்ளன. ஒன்று இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கில் எழுச்சியடைந்த புவிசார் அரசியல்.

இரண்டாவது, ஈழத்தமிழர் தொடர்பாக தமிழகத்தில் ஏற்பட்டுவரும் எழுச்சி. இந்திய மத்திய அரசு என்றாலும் சரி அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் என்றாலும் சரி சீனாவின் உள்நுழைவை பெரிய பிரச்சனையாகவே பார்க்கின்றன.

ஆனால் ஆட்சிமாற்றம் ஒன்றின் மூலம் இந்தச் செல்வாக்கை தடுக்கவே விரும்புகின்றன. அதில் நம்பிக்கையும் கொண்டிருக்கின்றன. இந்த ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் அரசியல் இடைஞ்சலாக இருக்ககூடாது. அதனை 13 வது திருத்தத்துடன் முடக்கிவிட விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கான காலம் கனியும்வரை மென்மையான அழுத்தத்தினை தொடச்சியாகக் கொடுக்க முற்படுகின்றனர்.

இந்த மென்மையான அழுத்தம் கூட சிங்கள மக்களை அரசாங்கத்தின் பக்கம் திருப்பிவிடுகின்றது என்பதுதான் அவற்றிற்குள்ள கவலை. இதுவே சிங்கள மக்களை அரசாங்கத்தின் பக்கம் திருப்பி விடும் நிலையில், தமிழ் மக்கள் போராட்டம் நடத்தினால் மேலும் அதிகமாகிவிடும் என்பதினால்தான் போராட்டங்கள் நடாத்துவதையோ தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற வகையில் அரசியல் மேற்கொள்ளப்படுவதையோ தடுக்க முயல்கின்றன. தனக்கென சொந்த நிகழ்ச்சி நிரல் இல்லாமல் பிராந்திய சக்தியிலும், சர்வதேச சக்தியிலும் தங்கிநிற்கின்ற கூட்டமைப்பை இதற்காக பயன்படுத்துகின்றன.

இந்த சக்திகள் என்ன முயற்சிகளை செய்தாலும் நாளுக்கு நாள் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வருகின்றது. இலங்கை விரும்பினால் கூட கைவிட முடியாத நிலையில் அது வளர்ந்துள்ளது. மறுபக்கத்தில் அரசாங்கத்திற்கான சிங்கள மக்களின் ஆதரவும் வளர்ச்சியடைந்து வருகின்றது தேர்தல்களில் அரசாங்கக் கட்சி பெறுகின்ற வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கினைக் கூட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.

இந்தப்போக்கு மேலும் வளருமானால் இலங்கையைப் பாதுகாக்கின்ற வெளிநாட்டு கொள்கையை கைவிடுவதை தவிர வேறு எந்தத்தெரிவும் இந்திய மத்திய அரசிற்கு இருக்காது.

இரண்டாவது தமிழகத்தின் எழுச்சியாகும். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் இந்த எழுச்சி வெளிக்கிளம்பியுள்ளது. வளர்ச்சியடைந்த போராட்டத்தை தம்மால் பாதுகாக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வுக்கு தமிழக மக்கள் உள்ளாகியுள்ளனர். இதனால் ஈழத்தமிழர் ஆதரவு நிலை என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு பொதுக்கருத்தாக தமிழகத்தில் வளர்ந்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன - இந்த பொதுக் கருத்துக்குப் பின்னால் இழுபட்டுச் செல்லவேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது.

மத்தியஅரசு என்ன தான் தடங்கலை ஏற்படுத்தினாலும் இந்த எழுச்சி வளர்ந்து செல்கின்றதே தவிர குறைகிறதாக இல்லை. தாயக மக்களைவிட தமிழக மக்கள்தான் இன்று தாயகம் சுயநிர்ணயம் என்பவற்றில் உறுதியாக உள்ளனர். மத்திய அரசு இதனை எதிர்பார்த்தாலும் இந்த அளவுக்குப் பேரெழுச்சியாக இருக்கும் என அது நினைக்கவில்லை.

தற்போது தேர்தல் காலமாக உள்ளதால் இந்த விழிப்பு நிலை அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் நேரடியாக அமெரிக்க பிரேரணையை வீரியக் குறைப்பு செய்ய இந்திய அரசினால் முடியாது. மறைமுகமாக அதிகாரிகளைக் கொண்டு அதற்கான முயற்சிகளை செய்யலாம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=888daeb8-2a1a-46e3-afc3-604bb9095e34

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.