Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் அழுத்தமும் அசைய மறுக்கும் ஆப்கானும் - விவேகன்

Featured Replies

அமெரிக்கக் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலுடன் ஆப்கானுக்குள் நுழைந்துகொண்ட அமெரிக்கா, இப்போது அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலைக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை 2001ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகள் அகற்றின. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களில் தொடர்புடைய அல்-ஹைடா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டியே ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது.

அதன்பின்னர் அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிபர் ஹமீட் கர்சாய் தலைமையில் தற்போது அங்கு ஆட்சி நடந்து வருகிறது. பாதுகாப்புக்கு அங்கு நேட்டோப் படைகள் முகாமிட்டு இருந்தாலும், தலிபான்கள் இன்றுவரை தொடர்ந்தும் தாக்குதல் நடத்தியே வருகின்றனர். அவர்களின் பலம் ஆப்கானைக் கடந்து இப்போது பாகிஸ்தான் வரை வியாபித்துள்ளது.

Page%2016-2%20afkan%201.jpg

“ஆப்கானிஸ்தானில் தாங்கள் மிக விரைவில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி” என்று கடந்த மாதம் தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸைபுல்லாஹ் முஜாஹ்த் பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது. ‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களது அணுகுமுறை கடுமையாக இருக்கும்’ என்று கூறியுள்ள அவர், ‘2001ம் ஆண்டு தாங்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னர், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தபோது இருந்ததைவிட தங்களது நடவடிக்கையில் சில மாறுதல்கள் இருக்கும்’ என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே தமது கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களை, ‘போலித் தேர்தல்கள்’ என வர்ணித்து, ‘அதில் பங்குபெறும் எந்த அரசியல் தலைவர்களுடனும் தங்களுக்குத் தொடர்புகள் இருக்காது’ என்றும் கூறியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிலைகொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோப் படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வெளியேறவுள்ளன. நேட்டோப் படைகளின் கடந்த பன்னிரு ஆண்டு நடவடிக்கையால் அல்-ஹைடா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசமா பின்லேடனை அழிக்க முடிந்துள்ளபோதும், அல்-ஹைடாவையோ அல்லது ஆப்கானின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய பலம்பொருந்திய தலிபான்களையோ முற்றாக அழிக்கமுடியவில்லை. கடந்த வாரம் கூட தலிபான்களின் தாக்குதலில் இரண்டு அமெரிக்கப்படையினர் கிழக்கு ஆப்கானிஸ்தானின் காபிசா மாகாணத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இன்னமும் அங்கு 47 ஆயிரம் அமெரிக்கப்படையினர் நிலைகொண்டுள்ளபோதும், தலிபான்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் அங்கு தமது நடவடிக்கைகளைக்கூட நேட்டோப் படையினர் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

ஆப்கானில் தமது நடவடிக்கையை நிறுத்தினாலும் அங்கிருந்து தமது படைகளை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் அமெரிக்காவிற்கு இல்லை. குறிப்பிட்டளவான அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலைநிறுத்திவைக்கவே அதிபர் பராக் ஒபமா விரும்புகின்றார். ஆனால், அவர்களது விருப்பத்திற்கு உடன்பட ஆப்கான் அரசு தயாராக இல்லை. ஏற்கனவே நேட்டோப் படைகளின் விடயத்தில் பொது மக்களின் எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில், தலிபான்களின் எதிர்ப்பும் அதிகரித்து வருகின்றது. தலிபான்களின் எதிர்ப்பைக் குறைப்பதற்கு அதிபர் ஹமீட் கர்சாய் விரும்புகின்றார். அவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட ஆப்கானிஸ்தான் அமைதி உயர்மட்ட சபை ஒன்றையும் கர்சாய் அமைத்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தைகள் துபாய் நாட்டில் அண்மையில் நடைபெற்றன. அதில் அரசு அதிகாரிகளும், தலிபான் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

Page%2016-2%20afkan%202.jpg

இந்தப் பேச்சுக்கள் எந்தளவிற்கு வெற்றியளித்தது என்பது தெரியவராதபோதும், கடும்நிலையில் இருக்கும் தலிபான்களை சற்று இறங்கிவர வைத்துள்ளதாக கருதப்படுகின்றது. காரணம் ஏப்ரல் 5ம் திகதி நடைபெறவுள்ள ஆப்கான் தேர்தலில் தலிபான்களையும் பங்கேற்க வைத்து ஆட்சியில் அவர்களுக்கும் அதிகாரத்தை வழங்க கர்சாய் இணங்கியுள்ளார். இந்நிலையில்தான் தாங்கள் மிக விரைவில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று தலிபான்கள் தற்போது கூறிவரும் செய்தியாகப் பார்க்கப்படுகின்றது.

எனவேதான், மீண்டும் தலிபான்கள் அதிகாரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக தற்போதைய அதிபருடன் இறுக்கமான ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்ள அமெரிக்கா கடுமையாக முயல்கின்றது. கடும் அழுத்தங்களை இதற்காக கர்சாய் மீது அமெரிக்கா பிரயோகிக்கின்றது. ஆரம்பத்தில் இந்த உடன்படிக்கைக்கு ஹமீட் கர்சாயும் உடன்பட்டிருந்தார். ஆப்கானிலிருந்து நேட்டோப் படைகள் முற்றிலுமாக வெளியேற முடிவு செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தபோது, அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தார். ஆனால், அந்த ஒப்பந்தம் பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்கப் படையை ஆப்கானில் நிரந்தரமாக நிலைகொள்ள வைக்கப்போகின்றது என்பதை தெரிந்ததன் பின்னர், அந்த ஒப்பந்தத்தில் கையப்பமிட கர்சாய் ஒத்துழைக்கவில்லை.

ஒபமா வழங்கிய உறுதிப்படி இந்த ஆண்டு இறுதியுடன் நேட்டோப் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், அமெரிக்கப் படைகள் தாங்கள் நிலைகொண்ட எந்த நாட்டில் இருந்தும் அவ்வளவு இலகுவாக வெளியேறியதில்லை என்பது வரலாறு. ஆப்கானிலும் தொடர்ந்து நிலைகொள்ளவே அமெரிக்கா விரும்புகின்றது. 2017ம் ஆண்டு வரையில் சுமார் 10 ஆயிரம் அமெரிக்கப் படையினரை வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. அதற்காக பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள முயன்று வருகின்றார்கள். ஆனால் அதற்கான உடன்பாட்டில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் கையெழுத்திடாமல் காலம் கடத்தி வருகிறார். காரணம் தலிபான்களை அவர் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அமெரிக்கப் படையினர் இருக்கும்போதே, தலிபான்களின் கை ஓங்கிவருகின்றது. அமெரிக்கப்படை வெளியேறியதன் பின்னர் அவர்களின் பலம் மேலும் அதிகரிக்கும். அது தங்கள் இருப்புக்கே ஆபத்தாக அமையும் என்பதை கர்சாய் அறியாமலில்லை. எனவேதான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதைவிட, தலிபான்களுடன் சமாதானம் பேசுவது சிறந்ததென கர்சாய் எண்ணுகின்றார். ஆனால், பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஆப்கான் அதிபர் கர்சாயை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒப்பந்தத்தில் ஆப்கானைக் கையப்பமிட வைக்க அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு தமது நட்புநாடான இந்தியாவிடமும் அமெரிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அழுத்தங்களுக்கு மத்தியில்தான் தலிபான்களுடன் பேச்சுக்களை கர்சாய் முன்னெடுத்து வருகின்றார். தலிபான்களுடனான பேச்சுக்களையடுத்து கர்சாய் மிகப்பெரிய நடவடிக்கையன்றையும் முன்னெடுத்துள்ளார். அது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலிபான்களை விடுவிப்பதாகும். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த நடவடிக்கையை கர்சாய் முன்னெடுத்திருக்கின்றார். 

ஆப்கான் பக்ராம் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள சிறப்புச் சிறையில் அமெரிக்காவினால் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 88 கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவுசெய்தது. ஆனால் அந்தக் கைதிகளை விடுவிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா போர்க்கொடி உயர்த்தியது. அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இவர்கள், சமீபத்தில்தான் ஆப்கன் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து சிறைக்காவலில்தான் வைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியே ஆப்கான் வசம் ஒப்படைத்தது. ஆனால் அந்தக் கைதிகளை தொடர்ந்து சிறையில் வைப்பதற்கு வலுவான ஆதாரம் ஏதும் இல்லை என்று ஆப்கான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் பக்ராம் சிறப்பு சிறையில் இருந்து 65 கைதிகள் கடந்த 13ம் திகதி அதிரடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஆப்கான் அரசு அவர்களை விடுதலை செய்திருப்பது இரு தரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. காரணம் விடுவிக்கப்பட்ட கைதிகள் அமெரிக்கப் படைகளுக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்தியவர்கள். சுமார் 32 நேட்டோ படையினர் இவர்களால் உயிரிழந்ததாகவும், 23 ஆப்கன் படையினர் இவர்களால் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இவர்கள் விடுதலை செய்யப்பட்டால் மீண்டும் படையினர் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் எச்சரித்தது. ஆனால், ‘சிறைச்சாலைகள்தான் தலிபான் தீவிரவாதிகளை உருவாக்குகின்றன’ என்றும் ‘சிறையில் இருக்கும் கைதிகள் நாட்டையே வெறுக்கும் அளவுக்கு துன்புறுத்தப்படுகின்றனர்’ என்றும் காரணம் குறிப்பிட்ட கர்சாய் அவர்களை விடுவித்துள்ளார்.

ஆப்கான் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பக்ராம் சிறையில் இருந்து 65 கைதிகளை விடுவிக்க ஆப்கான் அரசு எடுத்த முடிவு மிகவும் வருந்தத்தக்கது’ என்று கூறியுள்ளது. ‘அவர்கள் செய்த பயங்கர குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஆப்கான் சட்டத்தின்கீழ் பரிசீலிக்கப்படவேண்டும். அவர்கள் ஒவ்வொருவர் மீதான வழக்கையும் ஆராயவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் ஒருபோதும் தீவிரமாக ஆராயப்படவில்லை. விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆப்கான் படைகள் மீது தாக்குதல் நடத்தியபோது காயம் அடைந்து பிடிபட்டவர். மற்றவர்கள் துப்பாக்கிகள், எறிகணைகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் சாதனங்களுடன் பிடிபட்டவர்கள். இப்போது அவர்களை விடுவித்துள்ள நிலையில், அந்த முடிவால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு ஆப்கான்தான் பொறுப்பேற்க வேண்டும். விடுவிக்கப்பட்டுள்ள கைதிகள் மேலும் வன்முறை, தீவிரவாத செயல்களில் ஈடுபடாத வண்ணம் பார்த்துக்கொள்ள முயற்சி எடுப்பதை ஆப்கான் உறுதி செய்ய வேண்டும். அவர்களை நீதியின் முன்பாக நிறுத்தவும் வேண்டும்’ என்றும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இதேவேளை, ‘விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் போரில் குதித்தால் அவர்கள் அமெரிக்காவின் எதிரிகள் ஆகி விடுவார்கள் என்று எச்சரித்துள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பை, அதன்பின்னர் அவர்கள் தமது சட்டப்பூர்வமான குறியாகி விடுவார்கள்’ என்றும்  எச்சரித்துள்ளார். இதேவேளை, இந்தக் கைதிகள் விடுதலை அமெரிக்க நாடாளுமன்றத்திலும் கடும் புயலை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் நிலைமை இவ்வாறிருக்க,  அமெரிக்காவுக்கு ஆப்கான் தலிபான்கள் எச்சரிக்கை ஒன்றைத் தற்போது விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் விரட்டியடிக்கப்பட்ட 25வது ஆண்டு நினைவாக இந்த எச்சரிக்கையை அவர்கள் விடுத்திருக்கின்றனர். அதில், ‘25 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும்’ என்று கூறியுள்ளனர்.

அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய காலகட்டம் அது. அப்போது ஆப்கானிஸ்தானுடன் சோவியத் ரஷ்யா ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஒன்றரை இலட்சம் சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தனர். சோவியத் படையை ஆப்கானில் இருந்து விரட்டியடிக்க அமெரிக்கா உதவியது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத்படைகள், 1989ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டனர். இதன் 25வது ஆண்டு விழா ஆப்கானிஸ்தானில் கடந்த 15ம் திகதி கொண்டாடப்பட்டது.

இந்த நினைவுநாளை முன்னிட்டு தலிபான்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் செய்தித்தொடர்பாளர் காரி யூசுப் அகமதி கையெழுத்திட்ட இந்த அறிக்கையில், சோவியத் படைகளை ‘முஜாகிதீன் வீரர்கள்’ துரத்தியடித்ததைப் போல அமெரிக்கப் படைகளையும் ஆப்கான் துரத்தியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டில் இருந்து சோவியத் படைகள் தப்பி ஓடின. அதே விதியைத்தான் இன்றைக்கு அமெரிக்காவும் சந்திக்கப்போகிறது. அந்தக் காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்பட்ட அதே கதியை இன்றைய அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவுக்கு நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம். நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை (சோவியத் ரஷ்யா) உலக வரைபடத்தில் இருந்தே நீக்கி விட்டோம். ‘அல்லா’ விரும்பினால், இதே நிலைதான் உங்களுக்கு ஏற்படும்’ என்று தமது எச்சரிக்கையில் கூறியுள்ளனர்.

ஆனால் எதற்கும் வளைந்துகொடுக்காத அமெரிக்கா தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயத்தொடங்கியிருக்கும். கர்சாயுடன் ஒப்பந்தம் சரிவராது என்பதை உணர்ந்துகொண்டுள்ள அமெரிக்கா தனது அடுத்தகட்ட காய் நகர்த்தல்களையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகக் கூறும் அரசியல் அவதானிகள், வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை இலக்குவைத்து அவர்களை இலக்குவைத்து அமெரிக்கா நகர்த்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதாவது, கர்சாய் வெளியேறிய பிறகு உடன்பாட்டை செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் அமெரிக்கா இப்போது காய்களை நகர்த்திவருகின்றது.

இதில் வெற்றி பெறப்போவது யார்..? அமெரிக்காவா.., தலிபான்களா...? பொருத்திருந்து பார்ப்போம்.

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/38664/64//d,fullart.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.