Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாத் தீர்மான வரைவும் இனப்பிரச்சனை விவகாரமும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாத் தீர்மான வரைவும் இனப்பிரச்சனை விவகாரமும் - யதீந்திரா

[ சனிக்கிழமை, 22 மார்ச் 2014, 13:03 GMT ] [ புதினப் பணிமனை ]

ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் மூன்றாவது தீர்மான வரைவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அது தொடர்பான பல வாதப்பிரதிவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன.

தமிழ் அரசியல் வாதிகள் சிலரும், தமிழ்க் கருத்தியல் உருவாக்குனர்கள் சிலரும், மிகைபடக் கூறியளவிற்கு எதனையும் நிகழ்த்தக் கூடிய வல்லமையை அத்தீர்மான வரைவு வெளிப்படுத்தவில்லை என்பதே, தற்போதைய தமிழர் ஆதங்கத்திற்கு காரணம்.

தமிழர் ஆதங்கம் என்பது சரியான ஒன்றுதானா அல்லது இது அவர்களாகவே தங்கள் மீது வலிந்து திணித்துக்கொண்ட அதீத கற்பனைகளின் விளைவா?

குறிப்பாக புலம்பெயர் சூழலில் அமெரிக்காவின் தீர்மான வரைவு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியிருந்தது. இதற்கு பொதுநலவாய மகாநாட்டின் போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் அனைத்துலக விசாரணை தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் மற்றும் கனடிய பிரதமர், மகாநாட்டை புறக்கணித்திருந்தமை, ஆகியவற்றின் விளைவாக, அமெரிக்க தீர்மான வரைவுயானது சற்று கடுமையாகலாம் என்பதே, புலம்பெயர் தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் மீண்டும் ஒரு உள்ளக விசாரணைக்கு அழைப்புவிடும் வகையிலேயே தீர்மான வரைவு வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தீர்மான வரைவு, 2012 மற்றும் 2013ல் நிறைவேற்றப்பட்ட தீர்மான வரைவுகளிலிருந்து மேலும் ஒரு படி முன்னோக்கியதாகவே அமைந்திருக்கிறது. இதனை கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், குறித்த தீர்மான வரைவுயானது, இலங்கையில் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான திசை நோக்கிய பாதையில், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்ட நகர்வாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை எதிர்வரும் வாரங்களில் குறித்த தீர்மான வரைவை முன்மொழிந்த இணைத் தரப்பினர், விசாரணை பொறிமுறையை வலுப்படுத்தும் வகையில் மேலும் திருத்தங்களை செய்ய முன்வரவேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சருடன் இணைந்து வெளியிட்டிருப்பதற்கு ஒரு தெளிவான காரணமுண்டு. குறித்த அமெரிக்க தீர்மான வரைவில் வடக்கு மாகாணசபை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாக்களிப்பில் இடையூறுகள் இன்றியும், வன்முறைகள் இன்றியும் வடக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற்றமையை வரவேற்பதாக தீர்மான வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது அத்துடன் பரிந்துரைகளில் ஒன்றாக, 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக, வடக்கு மாகாணசபையை ஆட்சிசெய்வதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் வழங்க முன்வர வேண்டுமென்றும் கோரப்பட்டிருக்கின்றது. அமெரிக்க தீர்மான வரைவில் வடக்கு மாகாணசபை தொடர்பில், குறித்துரைக்கப்பட்டிருக்கின்ற பின்புலத்தில்தான், சம்பந்தன் மேற்படி கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

அமெரிக்க தீர்மான வரைவானது, அமெரிக்காவின் இராஜதந்திர அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். படிப்படியாக இலங்கையின் மீதான தன் அழுத்தங்களை பெருப்பித்துக் கொண்டுவரும் நோக்கிலேயே, ஒவ்வொரு தீர்மான வரைவுகளின் உள்ளடக்கமும் அமைந்திருக்கிறது. அமெரிக்க தீர்மான வரைவு என்பது அதன் உள்ளடக்கத்தில் பெரியளவில் மாற்றங்களை காட்டவில்லை. ஆனால் அந்த ஆரம்பநிலை உள்ளடக்கத்தை மெதுமெதுவாக பெருப்பித்துக் கொள்ளுமொரு உபாயத்தை கடைப்பிடித்து வருவதை காணலாம். முன்னைய இரண்டு தீர்மான வரைவுகளின் அடிப்படைகள் மாறவில்லை ஆனால் அதன் மீதான பொறுப்புக்கள் மாறியிருக்கின்றன. இதுதான் இங்கு உற்றுநோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அந்த அடிப்படையில் நோக்கினால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மான வரைவானது, மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளையின் அனைத்துலக விசாரணைக் கோரிக்கையை வரவேற்றிருப்பதுடன், அதற்கான பொறுப்பை பேரவையின் மீதே திருப்பிவிட்டிருக்கின்றது. ஆனால் அனைத்துலக விசாரணை அவசியம் என்பது கட்டாயமாக வலியுறுத்தப்படவில்லை மாறாக வரவேற்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் ஒரு மறைமுக எச்சரிக்கைiயும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை தனது போக்கில் மாற்றங்களை காண்பிக்கவில்லையாயின் அதன் விளைவாக அனைத்துலக விசாரணை ஒன்றை வலியுறுத்தவும் அமெரிக்கா தயங்கப் போவதில்லை என்பதே அந்தத் தகவல். இது பற்றி கருத்துரைத்திருக்கும் ஜக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான முன்னாள் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தாமரா குணநாயகம், குறித்த தீர்மான வரைவானது, நவிப்பிள்ளைக்கு, விசாரணையொன்றை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கியிருப்பதாகவும், அதன் உண்மையான பொருள் அனைத்துலக விசாரணை என்பதுதான் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தமிழ் அரசியல் அவதானிகள் சிலரோ, அனைத்துலகம் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

அமெரிக்க தீர்மான வரைவு என்பது, அதன் இறுதி அர்த்தத்தில் வெற்றிபெற வேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் அமெரிக்க தீர்மான வரைவில் தமிழர் என்பது எப்போதும் இரண்டாவது விடயம்தான். வெற்றிதான் முதல் விடயம்.

குறித்த தீர்மான வரைவு வெற்றிபெற வேண்டுமாயின், அதன் உள்ளடக்கத்துடன், ஆதரவு நாடுகள் அனைத்தும் உடன்பாடு காண வேண்டும். இன்று தங்களால் ஆதரிக்கப்படும் ஒன்று, நாளை, தங்களின்மீதே ஒரு பூமறங்காக திரும்பிவிடக் கூடாது என்பதில், அனைத்து நாடுகளுமே கருத்தொருமித்து இருக்கும். எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுதான், அமெரிக்க தீர்மான வரைவுயின் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே இங்கு எடுத்தோம் கவிழ்த்தோம் பாங்கில் எதனையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால் தமிழர் தரப்பில் ஒரு முக்கியமான விடயம் சுட்டிக்காட்டப்படுகிறது. அனைத்துலகசக்திகள் என்பன தங்களின் நலன்களை புறம்தள்ளி எந்தவொரு விடயத்தையும் முன்தள்ளாது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும், நமது அடிப்படையான விடயங்களை நாம் விட்டுவிடக் கூடாது. அந்த வகையில் இந்த தீர்மான வரைவு திருத்தமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் தமிழர் அரசியலை முன்னெடுப்பதில் சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும் என்பது அவ்வாறானவர்களின் வாதமாக இருக்கின்றது.

அவ்வாறானவர்கள் கூறும் விடயம் இதுதான். தற்போது அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் தமிழர் பிரச்சனை குறிப்பாக சுட்டிக்காட்டப்படவில்லை. அதாவது இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இனரீதியான பிரச்சனையொன்றிற்கு முகம்கொடுத்து வருகின்றனர் என்பது தீர்மான வரைவுயில் எங்கும் அழுத்தப்படவில்லை. தற்போது ஜ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக இருக்கின்ற நவிப்பிள்ளை ஓய்வுபெற்றுச் சென்றால், அதன் பின்னர் அப்பதவியை பொறுப்பெடுப்பவர், தற்போதைய தீர்மான வரைவுயின் அடிப்படையில்தான் விடயங்களை முன்னெடுத்துச் செல்வார். அவ்வாறானதொரு சூழலில், தமிழ் மக்களின் இனரீதியான பிரச்சனையை, அனைத்துலகம் முழுமையாகவே கைவிட்டுச் செல்லும் நிலைமை தோன்றலாம். அந்த வகையில் பார்த்தால், அது அரசாங்கத்திற்கு பாரிய வெற்றியாகவே அமையும். மகிந்த ராஜபக்சவும் அதனைத்தான் குறிப்பிட்டு வருகின்றார் - இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்றில்லை. இது மிகவும் பாரதூரமானது.

ஆனால் கூட்டமைப்பின் தலைமையோ, இன்றைய சூழலில் நாம் தேவையற்ற விவாதங்களை செய்ய முடியாது என்று குறிப்பிடுகின்றது. மேலும் அனைத்துலகம் (அமெரிக்கா) எந்த வழியைக் காட்டுகிறதோ, அந்த வழியால்தான், செல்ல வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கின்றது. இது சரியா என்பது விவாதத்திற்குரிய ஒன்றுதான்.

ஆனால் சமீப நாட்களாக அமெரிக்கா காண்பித்துவந்த இறுக்கமான நிலைப்பாட்டில் தளர்வு ஏற்பட்டதற்கு பின்னால், இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் இருப்பதாகவும் ஒரு கருத்துண்டு. இந்தியாவின் நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள முடியும் ஆனால் ஏன் அவுஸ்திரேலியா இலங்கை விடயத்தில் இத்தளவு தூரம் எதிர்மறையாக இருக்கின்றது? இத்தனைக்கும் அவுஸ்திரேலியா, அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளியுமாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் மீதான ஒரு அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளிப்பதானது அதனளவில், பின்னடைவான ஒன்றாகவே நோக்கப்படும். இலங்கையின் மீதான இந்தியப் பிடி முற்றிலுமாக தளர்ந்துவிடவும், கொழும்பு முற்றிலுமாக இந்தியாவிலிருந்து விலகிவிடுவதற்குமான சூழலை தோற்றுவித்துவிடலாம். எனவே அதனைக் கருத்தில் கொண்டு நோக்குமிடத்து அனைத்துலக விசாரணையை புறம்தள்ளுவதே, இந்தியாவிற்கு உகந்தது.

எனவே இந்தியா முடிந்தவரை, இலங்கையின் மீதான அமெரிக்காவின் மென் அழுத்தங்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, அதன் ஊடாக இலங்கையை முற்றிலுமாக சீனாவின் பக்கமாக சாய்ந்துவிடாதவாறும் ஒரு பிடியை பேணிக்கொள்ள முற்படும்.

ஆனால் இலங்கையின் மீதான அழுத்தங்களின் ஊடாக அமெரிக்கா எத்தகைய நலன்களை இலக்கு வைத்துள்ளது என்பது வேறு விடயம். அது பற்றி சில ஊகங்கள் இருந்தபோதும், அது துல்லியமற்ற ஒன்றாகவே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில், அமெரிக்காவின், இலங்கையின் மீதான எதிர்கால அழுத்தங்களில், தமிழர் விவகாரமானது, ஒரு தனித்துவமான விடயமாக நோக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் சற்று மங்கலாகவும், தெளிவற்றதாகவுமே காணப்படுகிறது,

http://www.puthinappalakai.com/view.php?20140322110187

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.