Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கும் தெற்கும்......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அளவெட்டி பாரதி கலாமன்றத்தின் வடக்கும் தெற்கும்....

 

ஈழத்தின் நாடக வரலாற்றை படித்துப் பார்க்கும் எதிர்கால தலை முறையினர்க்கு அங்குள்ள நாடக வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து அறிய முடியாத பல சிறந்த நாடகங்கள் இருக்கின்றன. அவற்றை படிப்படியாக வெளிக் கொண்டுவர வேண்டும். அந்த முயற்சியின் ஓரங்கம் போல இக்கட்டுரை முதலில் இரண்டு  நாடகங்களைப் பற்றிப் பேசுகிறது. ஒன்று அளவெட்டி பாரதி கலாமன்றத்தின் வடக்கும் தெற்கும், இன்னொன்று வல்வை nஉறலியன்ஸ் நண்பர்களின் சாணாக்கிய சபதம். இரண்டு நாடகங்களும் திரைப்படம் போல இடைவேளைகள் கொண்ட சுமார் 3 மணி நேர நாடகங்கள்.

பொதுவாக நாடகம் வேறு சினிமா வேறு என்று கூறுவார்கள். சினிமாவின் நடிப்புச் சாயல்களை நாடக நடிகர்கள் பின்பற்றினால் அந்த நாடகத்தை பல்கலைக்கழக ஆய்வாளர் தீண்டத்தகாத ஒன்றாக புறந்தள்ளிவிடுவார்கள். அதன் மூலம் தமது தகுதியை அவர்கள் உயர்த்திக் கொள்வது வழமை. எது எப்படித் தயாரிக்கப்பட்டாலும் அது ஒரு செயல் என்று பாராட்டி அதை வளரவிட்டு மதிப்பீடு செய்வது மேலை நாட்டு மரபு. தெருச்சுவர்களில் நிறங்களால் எழுதுவது ஐரோப்பாவில் ஒரு பழக்கம், இன்று அதையே தனி நூல்களாக்கி, கலாச்சாரமாக்கி, பரிசுகள் வழங்கி, இப்போது அதற்காகவே சுவர்களைக் கட்டும் நிலையும் இங்கு உருவாகியிருக்கிறது.

 

இப்படி சினிமாவின் சாயல் இருப்பதாக நாடகங்களை புறந்தள்ளுவோர், மறு பக்கமாக நாடகம் சினிமாவில் இடம் பெற்றால் மௌமாக இருப்பார்கள். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. பழைய தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலானவை மேடை நாடகங்களை திரைப்படங்களாக தந்த முயற்சிகள்தான். சங்கரதாஸ்சுவாமிகளின் நாடகப் பாடல்களோடு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரைப்பட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஆரம்ப காலங்களில் பெரு நடிகர்களாக இருந்தவர்கள் எல்லாமே மேடை நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள்தான். ஆனால் இலங்கையில் இந்தியா போல நாடகத்தின் வரலாறு சினிமாவிற்குள்ளால் ஓடவில்லை. இலங்கையில் சினிமா வளரவில்லை, அதை வளர்ப்பதற்கான அறிவார்ந்த வேலைத்திட்டங்களோ, சமுதாயப்புரிதலோ தூரப் பார்வையோ அங்கு இருக்கவில்லை. அதனால் சினிமாவின் இடத்தை பலர் நாடகங்களால் நிறைவு செய்தார்கள். இந்த இரு நாடகங்களும் நல்ல உதாரணம், இவை சினிமாவிற்கு கிட்டிய நாடகங்களே.

 

தொடக்கத்தில் இருந்து முடிவுவரை ஒரு திரைப்படத்தைப் பார்த்தது போலவே இவற்றின் கதையோட்டமும் தயாரிப்பு முறையும் விறுவிறுப்பாக இருக்கும். ஒரு திரைப்படம் எப்படி வெள்ளிவிழா கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுமோ அதுபோல வடக்கும் தெற்கும் வெள்ளிவிழா தாண்டி நடைபெற்றது. சாணாக்கிய சபதம் மிகவும் பிரமாண்டமான நாடகம் ஆகவே பல்லாயிரக்கணக்கானோர் பார்த்த ஒரு நாடகமாக வெற்றிகண்டது. நாடகத்தை சினிமாபோல தயாரிப்பது சாதாரண விடயமில்லை.

 

நாட்டு மக்களில் எழுபது விழுக்காட்டுக்கு மேல் பேராதரவு வழங்கிய இந்த நாடகங்களைப் பற்றிப் பேசாது ஒரு சில ஆயிரம் பேரால்கூட பார்க்கப்படாத எத்தனையோ நாடகங்களை நமது நாடக நூல்கள் பெரிதும் பேசுகின்றன. அந்த நாடகங்கள் நூல்களில் மட்டும் வாழ்கின்றன. ஆனால் இந்த நாடகங்களோ மக்களின் மனங்களில் அழியாத சின்னங்களாக வாழ்கின்றன. இந்த நாடகங்களின் சிறப்பையும், அழகையும் மனதில் தாங்கி வாழும் மக்கள் அந்தத் தகவல்களை எல்லாக்காலமும் மனதில் வைத்திருக்க இயலாது. இனியாவது அவைகளை காலத்தின் தேவை கருதி பதிவில் வைத்திருப்பதும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது இக்கட்டுரை.

 

ஈழத்தமிழன் என்ன செய்தான், அவனுடைய சிறப்புக்கள் எவை என்பதை ஒல்லாந்தர்கள் மிகவும் சிறப்பாக, காலவாரியாக எழுதி வைத்திருப்பதாக இப்போது நம்மவர்கள் அறிந்து மயிர்க்கூச்செறிகிறார்கள். நமது முன்னோர் சுய புகழ்ச்சி கூடாதெனக்கருதி பதிவு செய்யாமல் விட்ட விடயங்களை எல்லாம் இப்போது நம்மை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த ஒல்லாந்தரிடமும், போத்துக்கேயரிடமும் இருக்கலாமென்று எண்ணித் தேடிப் போய்க் கொண்டிருக்கிறோம். மற்றவனிடம் நமது வரலாற்றை தேடிப்போவது தவறல்ல அது முக்கியம், ஆனால் அதை நாமே பதிவு செய்யாமல் இருந்தது ஈழத்தமிழனின் சிறப்பல்ல. ஒல்லாந்தரோ போத்துக்கேயரும் போன பின் நடிக்கப்பட்டதால் இந்த நாடகங்கள் பற்றிய தகவல்களுக்கு நமது அடுத்த தலைமுறை அங்கும் போக இயலாது.

 

வடக்கும் தெற்கும் ஓர் அரசநாடகம். இந்த நாடகத்தின் சிறப்பு மேடையில் அது காட்டிய விரைவாகும். அந்த விரைவுக்கேற்ப புலவர் சவுண்ட் என்ற ஒலியமைப்பாளர்கள் கொடுத்த பின்னணி இசை, நடிகர்களினதும், நாடக சீன் இழுப்போரினதும் மின்னல் வெட்டும் செயற்பாடுகளும், கூட்டு வேலைத்திட்டங்களும் இதன் வெற்றிக்குப் பின்னால் இருந்திருக்கிறது.

 

முதலாவது நாடகத்தின் உடை மாற்றம் முக்கிய அம்சம். பெண்ணாக நடிப்பவர் மின்னல் வேகத்தில் மாற்றும் உடைகள் அபாரமாக இருக்கும். பல உடைகளை ஒன்றின் மேலாக ஒன்றாக அணிந்திருப்பார்கள். அவற்றின் ஓரங்களில் கத்தரி முடிச்சுக்கள் இருக்கும். நடனமாடியபடியே மேடை ஓரமாகச் செல்ல, வெளியில் இருந்து ஒருவர் முடிச்சை இழுக்க திரைப்படத்தில் மாற்றுவதைவிட அதி வேகமாக உடை மாறிவிடும். ஒரு பாடலுக்கு ஐந்து விதமான வர்ண உடைகளாவது மாறும். இப்படியான அதி விரைவை நாடக மேடையில் ஏற்படுத்தும் சிந்தனையாளருக்கே ஐரோப்பாவில் அதி கூடிய வேதனமாகும்.

 

இப்படியான இரண்டு பெரும் மேலைத்தேய கலைஞர்களை டென்மார்க்கிலும், பின் இங்கிலாந்திலும் சந்தித்து உரையாடினேன். ஒரு பழைய காரை நாடக மேடையில் வைத்து பத்தே விநாடிகளில் புத்தம் புதிய காராக மாற்ற வேண்டும். இதற்காக ஒரு புதிய காருக்கு பழைய கார்போல விசேட உடை தயரித்து மூடியிருப்பார்கள். அது சேலைபோலவே தெரியாது, அதற்கான விசேட துணி இருக்கிறது. இதே வடக்கும் தெற்கும் போல கத்தரி முடிச்சுத்தான் அங்கேயும் இருந்தது. அதை இழுத்தால் ஒரே நொடியில் கார் புதிதாக மாறிவிடும். இப்படியான நாடகங்கள் அமெரிக்கா முதல் ஐரோப்பாவரை தனியான நாடகக் கலாச்சாரங்களாக பேசப்பட்டு, பாதுகாக்கப்பட்டு கோடான கோடி சம்பாதிக்கும் நாடகங்களாகவும் மாறியிருக்கின்றன.

 

ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் சொல்லப்பட வேண்டும், இந்த விடயங்களைத்தான் உள்ளடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது அறியாமை. ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒன்றைச் சொல்லத்தான் வருகிறது. அதை மதித்து போற்றி ஒழுகும் பண்பு வளர்ந்தால் சமுதாயம் சிறப்படையும் எனபது மேலைத்தேய கலைக் கலாச்சாரமாகும். நல்லவை எவையோ அவை காலத்தினால் நிற்கும், கலைகள் மீது நாம் சட்டாம் பிள்ளை வேலை பார்க்கக் கூடாது என்பதில் மேலைத்தேய சமுதாயம் உறுதியாக இருக்கிறது. அதனால் உயர்ந்து நிற்கிறது. இப்படியோர் பார்வை நம்மிடம் இல்லை என்பதே மிகப்பெரிய சோகமாகும்.

 

அன்றைய வடக்கும் தெற்கும் நாடகத்தில் நாடக மேடையின் சீனை இழுப்பவரைக் கூட இன்று நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கலைஞர் உண்மையிலேயே நடிகர்களை விட திறமைசாலியாக இருப்பார். மேடையின் சீன் மேலிருந்து சர்ர்.. ரென உருண்டு கீழே விழும். அது மூடித்திறக்கும் நேரம் ஒரேயொரு நொடிதான். நிலத்தில் வந்து மோதியவுடன் அதே வேகத்தில் எகிறி மேலே கிளம்பிவிடும். அந்த ஒரு சில நொடிகளுக்குள் உள்ளே காட்சி மாறிவிடும். நடப்பது கனவா நிஜமா என்று ரசிகர்கள் திகைக்க நேரும். இப்போது மேலை நாடுகளில் ஒரு சர்க்கஸ் குழு எப்படி விரைவாக கூட்டு வேலையாக செயற்படுமோ அதைவிட வேகமாக இவர்கள் செயற்பட்டார்கள்.

 

நாடகத்தில் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது ஸ்டன்ட் முறையில் காட்சிச்சண்டைகளை அமைத்தார்கள். திரைப்படங்களில் ஒரு சண்டைக்காட்சியை துண்டு துண்டாக உருவாக்கலாம், அதில் நடிப்பவர்கள் ஓய்வெடுத்துத் தொடரலாம். ஆனால் இந்த வடக்கும் தெற்கிலுமோ ஒரே நேரத்தில் நடித்து, சண்டையிட்டு, தூய தமிழ் வசனங்கள் பேசியபடியே பாடலுக்கும் ஆடினார்கள். மேடைச் சண்டைகளிலும் மல்யுத்தம், தீப்பந்தச் சண்டை, வாள்ச்சண்டை என்ற அத்தனை வேறுபட்ட சண்டைகளையும் ஓய்வில்லாமலே செய்து கொண்டு, நடிகனாகவும் நடித்துக் கொண்டிருப்பது உண்மையில் அபார சாதனையாகும். இதை நமது கலைஞர்கள் எழுபதுகளிலேயே நமது மண் முன்னும் கண் முன்னும் நிகழ்த்தியிருக்கிறார்கள். உலகத்தில் அமெரிக்கா முதல் கொரியா வரை எத்தனையோ நாடுகளின் நாடகக்காரர்களை சந்தித்திருக்கிறேன், உரையாடியிருக்கிறேன். அவர்களிடமெல்லாம் இந்த வடக்கும் தெற்கும் சாணாக்கிய சபதம் போன்ற நாடகங்கள் பற்றிக் கூறியிருக்கிறேன். அவர்கள் நம்மவர்கள் போல ஆத்திரப்படவில்லை ஆச்சரியப்படுகிறார்கள்.

 

இந்த நாடகங்களை ஒரு அமெரிக்க சமுதாயமோ, அல்லது ஒரு ஜப்பானிய சமுதாயமோ செய்திருந்தால் அது உலகப் புகழ் பெற்றிருக்கும். நல்லதை யார் செய்தாலும் விரைந்து பாராட்டும் பண்பு நமது உயர் கல்விக் கூடங்களில் கூட வளர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கு வடக்கும் தெற்கும் சாணாக்கிய சபதம் போன்ற நாடகங்கள் இணைக்கப்படாத ஈழத்து நாடக ஆய்வுகளே சிறந்த சாட்சியங்களாகும். எந்தவித நாடகப் பயிற்சியும் பெறாத, பட்டங்களை பெயர்களின் பின்னால் சுமக்காத, சாதாரண ஏழைத் தமிழ் குடிமக்கள் இந்தச் சாதனையை செய்திருக்கிறார்களே என்ற கோணத்தில் நாம் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். அப்படியொரு குழு வேலைத்திட்டம்  நம்மக்களிடம் இருந்திருக்கிறதே என்பதை கற்றவர்கள் அறிந்து அடையாளம் கண்டு போற்றியிருக்க வேண்டும்.

 

இன்று ஈழத்திலே போராட்டம் முக்கியமான பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. எமது மக்களின் சிறப்பு சரியாக நெறிப்படுத்தப்பட வேண்டுமானால் முதலில் எமக்கான அரசு வேண்டும். இந்த அரசுக்காக போரிலும், கலைக்களத்திலும் எந்தக் கலைஞர்கள் நிற்கிறார்கள் என்று நாம் கூர்ந்து பார்க்க வேண்டும். அன்று ஈழ மண்ணிலே ஏழைக் கலைஞர்களாக நாடகங்களை நடாத்திக் கொண்டிருந்த அதே கலைஞர்களில் பலரை இன்று போராட்டக் காலக் கலைஞர்களாகக் காண்கிறோம். தன்னுடைய பெயரல்ல முக்கியம், தனது நாடுதான் முக்கியமென இவர்கள் களத்துக் கலைஞர்களாக நிற்கிறார்கள். இதுதான் இவர்களின் சிறப்பு.

 

சிறீலங்கா அரசால் ஆரம்பகாலங்களில் கைது செய்யப்பட்டவராகவும், தேடப்படுவோராகவும் இருந்த பலர் சணாக்கிய சபதம் நாடகத்தில் நடித்திருக்கிறார்கள். நாடகத்தால் அறியப்படாத அவர்கள் அரசியல் வரலாற்றால் பெரியளவில் அறியப்பட்டிருக்கிறார்கள். அப்பொழுது நாடகம் பற்றி பேசிக்கொண்டிருந்த பல பேராசிரியர்களைச் சந்தித்து இந்த சாணாக்கிய சபதக் கலைஞர்களின் சிறப்பைச் சொல்லி அவர்களுடைய நாடகத்தைப் பற்றிப் பேசாது ஏன் உறைந்த மௌனம் காக்கிறீர்கள் என்று வேதனையுடன் கேட்டிருக்கிறேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அது கலையாத மௌனமாகவே இருந்து பின் காலமாம் பெரு வெள்ளத்தோடு கரை புரண்டு போயும் விட்டது.

 

பின் நாட்களில் சில நாடகக் கலைஞர்களின் பெயர்களை சொல்லி இவர்கள் நாடகத்தை கல்வியாகக் கற்று வந்திருக்கிறார்கள் என்று சிலர் கூறினார்கள். எது உண்மையான நாடகக் கல்வி ? தமிழ் ஈழத்தின் சின்னஞ்சிறு கிராமங்களில் வாழ்ந்து சாதனை படைத்த ஏழைக் கலைஞர்களை அறிவதும், அவர்கள் ஏற்றிய விளக்கை அணையவிடாது காப்பதற்கு செயற்பாட்டு ரீதியாக பணியாற்றுவதுமே முதலாவது நாடகக் கல்வியாகும். நாடகத்தை கல்வியாகக் கற்பது இரண்டாவது அம்சமாகும். நாடகத்தின் பிதாமகர்களெனக் கூறுபவரிடம் இந்த ஈழத்தின் பழைய நாடகங்களைப்பற்றி விசாரித்துப் பாருங்கள் பலர் மலங்க மலங்க விழிப்பார்கள். அவர்களிடம் நாடகத்தைப் படித்த பட்டமிருக்கும், ஆனால் பட்டறிவு இருக்காது. படிப்பு பாராட்டப்பட வேண்டியது, பட்டறிவு கோரப்பட வேண்டியது.

 

இந்த வடக்கும் தெற்கும், சாணாக்கியசபதம் போன்ற நாடகங்களில் நடித்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தேடிக் கண்டு பிடித்து, ஈழத்தின் நாடகங்களுக்கு ஒரு மறுமலர்ச்சி கொடுக்க வேண்டும். அவர்களுடைய தகவல்களை உரிய முறையில் வெளிக்கொணர வேண்டும். அந்தவகையில் இக்கட்டுரைத் தொடர் மேலும் பல நாடகங்கள் பற்றிய தகவல்களை தர இருக்கிறது. அடுத்த தொடரில் சாணாக்கிய சபதம் நாடகம் பற்றிய தகவல்கள் வெளிவரும்.

 

எந்த ஒரு கலைஞனின் புகழையும் இருட்டடிப்பு செய்து நாம் மட்டும் புகழுடன் வாழலாம் என்று எண்ணுவது அறியாமை. புகையைத் துணி போட்டு மறைக்க முடியாது. யார் தடுத்தாலும் சூரியன் நிற்காது இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். அன்று போலவே இன்றும் கலைஞர்களை கேலி செய்யும் இனமாகவும், இருட்டடிப்பு செய்யும் இனமாகவுமே நாம் இருந்து வருகிறோம். புலம்பெயர் நாடுகளில் இந்த நிலையில் மாற்றங்கள் எதுவும் பெரிதாக நடைபெற்றுவிடவில்லை. இந்த அவலத்தை நாம் தவிர்த்து நல்லபடியாக சிந்திப்பது மிக அவசியம்.

 

மீண்டும் கோடை விடுமுறைக்குப் பின் சந்திப்போம். அதுவரை நம்பிக்கைகளுடன்

கி.செ.துரை  16.07.06

http://www.alaveddy.ch/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.