Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து் கவனம் செலுத்தப்படுக

Featured Replies

தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்தப்படுகிறதா?

கல்வியானது சமுதாயத்தின் கண் என்று காலங்காலமாகத் தமிழர்களால் கருதப்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவமான கல்வியின் தற்போதைய நிலையையிட்டு கவனம் செலுத்தப்படுகின்றதா? தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்று ஆராயப்படுகின்றதா என்று நோக்கின் அவ்வாறான பொறுப்பான செயல் எதுவும் தமிழ்க் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை.

தற்போதைய நிலையில் தமிழ் மொழி மூல கல்வி பாரதூரமான பின்னடைவை அடைந்துள்ளது. சமுதாயத்தின் சகல துறைகளிலும் தனது இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் அந்தஸ்தைப் பேணுவதற்கும் கல்வி மிகவும் அவசியமானது.

இலங்கை சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் வரை தமிழ்க் கல்வி நிலை சிறப்பாக இருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் முற்பகுதிகளிலிருந்து தமிழ்க் கல்விநிலை பின்னோக்கித் தள்ளப்பட்டது. அது தொடர்ந்தும் வருகின்றது.

பதியுதீன் மகமூத் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் முறை மேற்கொள்ளப்பட்டு அதன் தாக்கம் தொடர்கின்றது. தமிழ் மாணவர்களுக்குக் கல்வியில் விரக்தியேற்பட வழி கோலியது. பல்கலைக்கழகத் தரப்படுத்தல் என்பது ஒரு காரணியானது.

இலங்கையின் கல்வித் தரத்தில் முதலிடம் வகித்த யாழ்ப்பாண மாவட்டம் இன்று பலபடிகள் கீழிறக்கப்பட்டுவிட்டது. சரியாகச் சொல்வதானால் கல்வித் தரத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் ஒன்று என்ற நிலையிலுள்ளது.

யாழ்.மாவட்டத்திலிருந்து சிறந்த பல பாடசாலைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. வளப்பற்றாக்குறை பெருமளவு உள்ளது.

மலையகத் தமிழ்ப் பாடசாலைகளின் தரம் தொடர்பில் ஆராய வேண்டிய அவசியமே இல்லை. மாவட்ட ரீதியில் கல்வித் தரத்தில் முன்னணி வகிப்பதாகக் கொள்ளப்படும் கண்டி, களுத்துறை, மாத்தறை, காலி, குருநாகல், மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ்க் கல்வி என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இருந்த போதும் கணிப்பின்படி குறிப்பிட்ட மேற்படி மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலையிலே கல்வித்தரம் உயர்ந்ததாகவே நோக்கப்படுகின்றது.

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் முழு இலங்கையிலுமே தமிழ் மொழி மூலக் கல்வித் தரத்தின் வீழ்ச்சிக்கு விளக்கமாகவுள்ளது. இது பற்றி சமுதாய நோக்குடன் சிந்திக்க வேண்டும்.

இன்று கணினி, தொழில்நுட்பப் பாடங்கள், பாடசாலைகளில் கற்பிக்கும் யுகமென்று கூறப்படுகிறது. தமிழ்ப் பாடசாலைகள், இப்புதிய யுகத்தில் பிரவேசித்தவையாகக் கொள்ள முடியாது.

இலங்கையின் கல்விக் கொள்கையின் படி 14 வயது வரை கட்டாயக்கல்வி என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியென்றும் கூறப்படுகின்றது. சீருடைகளும் பாடநூல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவ்வாறிருந்தும் தமிழ் மாணவர்களின் கல்வித் தரத்தின் வீழ்ச்சிக்கான ஏது என்ன என்பது பற்றிக் கருத்துச் செலுத்த வேண்டியது சமுதாய கடமையாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவும் யுத்தம் தமிழ்க் கல்வியின் பாதிப்புக்கு ஒரு ஏதுவாகவுள்ளது. கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் நிம்மதியாகக் கல்வியில் கவனம் செலுத்தவழியில்லை.

ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோரும் கல்வியில் செலுத்த வேண்டிய கவனத்தைவிட உயிரைப் பாதுகாப்பதிலேயே கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். வளம் கொண்ட பாடசாலைகள் இல்லாதது மட்டுமல்ல சொந்த இல்லங்களிலே குடியிருக்க முடியாத நிலையில் அகதிவாழ்வு வாழ்வோரின் எண்ணிக்கையும் கல்விச்சீரழிவுக்கு வழி கோலியுள்ளது. வடக்கு, கிழக்கின் கல்வி நிலையின் தாழ்வுக்கு சமூகப் பிரச்சினைக்கு அத்திவாரமாகிவிட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாகம் செயலிழந்துள்ளதும் குறிப்பிடப்பட வேண்டிய குறைபாடாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வெளியேயுள்ள தமிழ்ப் பாடசாலைகள் நிர்வாக மட்டப் புறக்கணிப்புக்கு இலக்காகி வருவதும் வளங்கள் உரியபடி பகிர்ந்தளிப்பதில் காட்டப்படும் பாரபட்சமும், ஆசிரிய மற்றும் பௌதிக வளங்கள் திசை திருப்பப்படுவதும் பின்னடைவின் முன்னணிக் காரணிகளாக உள்ளன. தமிழ்மொழி மூலப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் வளங்கள் தமிழ்ப் பாடசாலைகளல்லாத தமிழ்மொழி மூலப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் திட்டமிட்ட கைங்கரியம் தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் கொண்டவர்கள் கல்விக் களத்தில் இல்லை. பிரதேச அரசியல், தொழிற்சங்க, சமூக அமைப்புகளும் இதில் கவனம் செலுத்துவதுமில்லை.

22 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது விதி. ஆனால், நுவரெலியா மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளில் 72 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 79 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், கிளிநொச்சி மாவட்டத்தில 105 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலேயே ஆசிரியர்கள் உள்ளனர். இதே நிலைதான் ஏனைய மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளிலும் உள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு இலட்சத்துப் பன்னிரண்டாயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். 97 தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. ஆனால், அங்கு கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பில் கணித, விஞ்ஞான பாடங்கள் கொண்ட ஒரு பாடசாலை கூட இல்லை. மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் கால்பங்கினராகவுள்ள பதுளை மாவட்டத்தின் நிலையும் அதுதான். மலையகத்தில் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் மட்டும் ஓரிரு உயர் தர வகுப்பில் கணித, விஞ்ஞான பிரிவுகள் கொண்ட பாடசாலைகள் இயங்குகின்றன. ஆனால், அவற்றிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது பற்றி பல அறிக்கைகள் வருகின்றன. மலையகத் தமிழ் மாணவர்கள் மலையகப் பல்கலைக்கழகத்தால் பயன் பெறுவார் என்று வேறு கூறுகின்றனர்.

பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெறக் கூடியதாக மாணவர்களைத் தயார் செய்ய முடியாத மலையகத் தமிழ்ப் பாடசாலைகளிலிருந்து எவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் செல்வது? மலையகத் தமிழ்ப் புத்தி ஜீவிகளும், மலையக தமிழ் அதிகாரவர்க்கமும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்று தமிழ்ப் பாடசாலைகளில் ஆரம்ப, இடை நிலை, உயர் தர வகுப்புகளில் உரிய பாடங்களைக் கற்பிக்க அப்பாடப் புலத்தில் தகைமை கொண்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மலையகத் தமிழ்ப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் பல்வேறு தடைகள் போடப்படுகின்றன.

உரிய கல்வியை வழங்காமலும், பெற முடியாது தடுத்து வருவதும் தமிழ்ர் சமுதாயத்தின் இருப்புக்கும், அந்தஸ்துக்கும், உயர்வுக்கும் கேடு விளைவிக்கும். எதிர்காலத்தில் சமுதாய ரீதியில் பாரிய தாக்கத்திற்கும் பின்னடைவுக்கும் வழி செய்யும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டிற்கும் இந் நிலை நல்ல தல்ல.

உரிய கல்வியை, உரிய காலத்தில் பெற்று உயர்வடைவதற்கு ஏற்படுத்தப்படும் தடைகள் இளம் சமுதாயத்தை திசை மாறிச் சிந்திக்கவும், செயற்படவும் வழி வகுக்கும். இன, மொழி ரீதியான புறக்கணிப்பு வளரும் சமுதாயத்தை வழி மாறிச் சென்று நாட்டிற்கே தீங்காக முடியும். இது பற்றிப் பொறுப்புள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

உயர் கல்வி பெற முடியாததால் பல்கலைக்கழக அனுமதி மட்டுமா இல்லாமற் போகின்றது? தொழில் வாய்ப்பு பெறும் சந்தர்ப்பமும் மறுக்கப்படுகின்றது.

அரசாங்க சேவையில் ஒருவர் இணைவதற்கு மொழி, கணிதம் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையான பாடங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும். மலையகத்திலிருந்து சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றி சிந்தி பெற்ற தமிழ் மாணவர்களில் நூற்றுக்கும் இரண்டு சதவீதத்தினர் கூட கணித பாடத்தில் திறமைச் சித்தி பெற்றவர்களாக இல்லை. மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் கணித பாடம் கற்பிக்க தகைமை கொண்ட ஆசிரியர்கள் இன்மை இதற்கான ஏதுவாகவுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மொழி மூலக் கல்வி ஆரம்பம் முதலே சீர்செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். தமிழ்ப்பாடசாலைகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் உட்பட சகல வளங்களும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் நிம்மதியாகக் கற்பிக்கவும், மாணவர்கள் நிம்மதியாக கற்கவும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வாக்குறுதி அரசியல் வாதிகளை நம்பிப் பயனில்லை. நமது வருங்காலச் சந்ததியின் நன்மைக்காகவும், எமது இனத்தின் இருப்பையும், உயர்வையும் நிலை நாட்டுவதற்காகவும் நமது பிள்ளைகளுக்கு உரிய கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதற்குக் கல்வி களத்தினுள்ளோரும், சமுதாய நலன் விரும்பிகளும் சிந்தித்து ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் வெறும் அறிக்கைகள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண முடியாது என்பதை உணர்ந்து ஆக்க பூர்வமாகச் சந்தித்துச் செயற்பட வேண்டும். இதுவே தமிழ்க் கல்வியைப் பின்னடைவிலிருந்து மீட்க வழிசெய்யும்.

thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.