Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர்

Featured Replies

singapore_2261969f.jpg
சிங்கப்பூரின் ஒரு பகுதி
 
பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நாடு. ஆனால் அந்த நாட்டுக்குப் பெயர் கொடுத்தது ஒர் இந்திய மொழிதான். `சிங்க நகரம்’ என்ற பொருளைத் தரும் சமஸ்கிருத வார்த்தைதான் சிங்கப்பூர்.
 
எல்லாமே இருக்கும் நாடு. எதுவுமே இல்லாத நாடு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் கொடுக்கச் சொன்னால் நீங்கள் ஒரே ஒரு உதாரணம் கொடுத்தால் கூடப் போதும். சிங்கப்பூர் மேற்படி இரண்டு விளக்கங்களுக்குமே பொருந்தக் கூடிய நாடு. எப்படி என்பதைப் பிறகு பார்ப்போமே.
 
ஒரு முக்கியத் தீவு, 63 மிகச் சிறிய தீவுகள் - இவைதான் சிங்கப்பூர். சிறிய தீவுகளில் பெரும்பாலானவை மக்கள் வசிக்காதவை. தொன்மைக் காலத்தைச் சேர்ந்த பிரபல வானியல் நிபுணர் தாலமின் `சபனா’ என்று குறிப்பிட்டிருப்பது சிங்கப்பூர் பகுதியையா? இதில் சரித்திர ஆய்வாளர்களுக்குக் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது.
 
ஆனால் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன ஆவணங்கள் சிங்கப்பூர் குறித்து ஓரளவு தெளி வாகவே குறிப்பிட்டுள்ளன. `பூ லுவோ சுங்’ இதன் அர்த்தம் `தீவின் முடிவு’. மலாய் தீபகற்பத்தின் முடிவில் இருந்தது சிங்கப்பூர்.
 
மலேயா பகுதிகளில் ஒரு பிரபல நாடோடிக் கதை உண்டு. சுமத்ராவைச் சேர்ந்த (சுமத்ரா இப்போதைய இந்தோனேஷி யாவின் ஒரு பகுதி) இளவரசன் ஸ்ரீவிஜயன் பதிமூன்றாம் நூற்றாண்டில் ஒரு தீவில் காலடி வைத்தார். அங்கே அவர் முதலில் கண்டது ஒரு சிங்கத்தை, “ஆஹா, என்னவொரு மங்களமான குறி யீடு’ என்று ஆனந்தப்பட்டார். அந்தத் தீவில் மக்களைக் குடி யேற்றினார். சிங்கபுரா என்று அதற்குப் பெயரிட்டார். (ஆனால் ‘சிங்கப்பூரில் எப்போதுமே சிங் கங்கள் இருந்ததில்லையே. அவர் பார்த்தது புலியாக இருக்கலாம்’ என்று முணுமுணுக்கும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் இருக் கிறார்கள்)
 
பதினோராம் நூற்றாண்டில் சோழச் சக்ரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் விஜய சாம்ராஜ்யத்தை வெற்றிகண்ட போது சிங்கப்பூரும் சோழர்கள் வசம் வந்தது.
 
பதினான்காம் நூற்றாண்டில் சயாம் மற்றும் மஜாபாகித் பேரரசுகளுக்கிடையே சிங்கப் பூரை அடைவதற்குக் கடும் போட்டி ஏற்பட்டது. (இன்றைய தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா என்று இவற்றைத் தோராயமாகக் குறிப்பிடலாம்). மஜாபாகித் பேரரசு சிங்கப்பூரை வெற்றி கண்டது. பல வருடங்கள் அதை ஆண்டது.
 
காலப்போக்கில் சிங்கப்பூர் மலாகா சுல்தானிடம் சென்றது. இப்படிப் பலரிடம் கைமாறிய சிங்கப்பூர் 1511ல் போர்த்துகீசியர் வசப்பட்டது. இவர்கள் சிங்கப் பூரிலுள்ள அத்தனை குடியேற்றங் களையும் அழித்தனர். அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு சிங்கப் பூர் என்ற தீவே ஊர்பேர் தெரியாமல் போனது.
 
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் உலகெங்கும் கிளை பரப்பின. பிரிட்டிஷ்காரர்களின் பார்வை மலாய் பகுதியில் பட்டது. சர் ஸ்டாம்ஃபோர்டு ராஃபில்ஸ் என்பவர் மலேயா பகுதிக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
 
இவர் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1795ல் வெறும் குமாஸ்தாவாகச் சேர்ந்தவர். தன் திறமையால் பல பதவி உயர்வுகளைப் பெற்று 1805ல் பினாங்குக்கு அனுப்பப்பட்டார். ஆறு வருடங்களுக்குப் பிறகு ஜாவா பகுதியின் லெப்டினென்ட் கவர்னர் ஆனார்.
 
பினாங்கு, ஜாவா பகுதியி லுள்ள டச்சுக்காரர்களின் அதி காரத்தைக் குறைக்க வேண்டும், சீனா மற்றும் பிரிட்டிஷ் இந்தியா வுக்கான வணிகப் பாதையை தடையற்றதாக மாற்ற வேண்டும். (அப்போதுதானே சீனாவுக்கு நிறைய ஓபியத்தை ஏற்றுமதி செய்யலாம்! ஹாங்காங் சரித்திரம் நினைவுக்கு வருகிறதா?). - இவைதான் பிரிட்டிஷ் அரசால் அவருக்கு இடப்பட்ட முக்கிய கட்டளைகள்.
 
டச்சுக்காரர்களின் மீது பிரிட்டன் கோபம் கொண்டதற்கு சாம்ராஜ்யப் போட்டியைத் தவிர அந்தப் பகுதி தொடர்பான ஒரு காரணமும் இருந்தது. தங்கள் வசமிருந்த துறைமுகங்களில் பிரிட்டிஷ் கப்பல்கள் வந்து இறங்கினால் அவற்றை டச்சுக்காரர்கள் அனு மதிக்க மறுத்தார்கள். அப்படியே அனுமதித்தாலும் அதற்கு எக்கச்சக்கமான நுழைவுக் கட்டணம் தீட்டினார்கள்.
 
என்ன தீர்வு? ஸ்டாம்ஃபோர்டு தீவிரமாக யோசித்தார். மலாகா ஜலசந்தியில் புதிதாகவே ஒரு துறைமுகத்தை உருவாக்கத் தீர்மானித்தார். இதற்காக மலேயா தீபகற்பத்தின் பல பகுதிகளை ஆராய்ந்தார். சிங்கப்பூர்தான் சிறப்பான இடம் என்று முடிவெடுத் தார். இத்தனைக்கும் அது சேற்று நிலங்களும், காட்டுப் பகுதியாக வும் மிகக் குறைந்த மக்கள் தொகை யும் கொண்டதாக இருந்தது. என்றாலும் அங்கு ஒரு துறைமுகம் உருவாக்கப்பட்டால் அதனால் உண்டாகக்கூடிய நன்மைகளை தெளிவாகவே கணிக்கும் தொலை நோக்குப் பார்வை அவரிடம் இருந்தது.
 
அப்போது அந்தத் தீவை ஜோஹோர் சுல்தான் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் டச்சுக்காரர்களுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்தவர். சுல்தான் 1812ல் இறந்தார். அவரது இரண்டு மகன்களும் வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டனர். ரஃபில்ஸ் மூத்தவர் உசேனை ஆதரித்து அவரை சுல்தான் ஆக்கினார். பதிலுக்கு சிங்கப்பூரை பெற்றுக் கொண்டார். இலவசமாக அல்ல. ஆண்டு வாடகைக்குதான்.
 
அடுத்த சில வருடங்களிலேயே பிரிட்டன் தனது ஓநாய் இயல்பை வெளிக்காட்டியது. “மொத்தமாக ஒரு தொகை தந்துவிடுகிறோம். சிங்கப்பூர் எங்களுக்குத்தான்’’ என்றது. உசேன் தயங்கினார். பிரிட்டன் விடவில்லை. பலவித குறுக்கு வழிகளின் மூலம் சுல்தானை சம்மதிக்க வைத்தது. 1819 பிப்ரவரி 6 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
 
நவீன சிங்கப்பூர் பிறந்தது.
 
(இன்னும் வரும்..)
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இணையுங்கள் ஆதவன், நல்ல தகவல்கள்

  • தொடங்கியவர்

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 2

singapore_2265495h.jpg

 

மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்த நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரின் தேசியப் பண் மலாய் மொழியில்தான் உள்ளது.

 
ஆனால் இங்கு மிக அதிகமாக வசிப்பவர்கள் சீனர்கள். அடுத்த இடம்தான் மலாய் மக்களுக்கு. இவர்களின் எண்ணிக்கையில் உள்ள இடைவெளியும் மிக அதிகம். சிங்கப்பூரில் வசிப்பவர்களில் சீனர்கள் சுமார் 75 சதவிகிதம்பேர். மலாய் மக்களின் சதவிகிதம் 13 மட்டுமே. (மூன்றாமிடம் இந்தியர்களுக்கு - 9 சதவிகிதம்பேர்).
 
மலாய் தேசிய மொழியாக அங்கு இருப்பதற்குக் காரணம் அதன் வரலாறு (மட்டுமே). சிங்கப்பூரில் வசிப்பவர்கள் ஐந்தில் ஒருவருக்குக்கூட மலாய் பேசத் தெரியாது. சீன மொழி பேசுபவர்கள் 51 சதவிகிதம்பேர் உள்ளனர். மலாய் மொழி 13 சதவிகிதம், தமிழ் 7 சதவிகிதம்.
 
சிங்கப்பூரில் நான்கு ஆட்சி மொழிகள், ஆங்கிலம், மலாய், மாண்டரின் சைனிஸ், தமிழ். ஆங்கிலம்தான் முக்கிய மொழி. சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் 60 சதவிகிதம்பேர் தமிழ் பேசுபவர்கள். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களும் ஓரளவு உண்டு.
 
ஆக மிக அதிகமாக சிங்கப்பூரில் வசிப்பவர்கள் வெளிநாட்டினர்தான். (என்றாலும் ஆசியர்கள்). ஏன் இப்படி?
 
சுல்தானுக்கும் பிரிட்டனுக்கும் 1819ல் உண்டான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நவீன சிங்கப்பூர் பிறந்தபோது அங்கு நிலவரம் எப்படி என்பதைத் தொடர்ந்து அறிந்தால் புரிந்து விடும்.
 
அப்போது சிங்கப்பூரில் வசித்தவர்கள் வெறும் ஆயிரம்பேர்தான். அடுத்த ஐம்பது வருடங்களில் சிங்கப்பூரின் மக்கள் தொகை ஒரு லட்சம் என்று ஆகியது. அங்குள்ள ரப்பர் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறையபேர் வந்து சேர்ந்தனர். (இவர்களின் வாரிசுகள்தான் இப்போதைய சிங்கப்பூரின் மெஜாரிட்டி குடிமக்கள்).
 
மிகவும் பழங்காலத்தில் கூட சிங்கப்பூர் ஒரு குறிப்பிடத்தக்க வணிக கேந்திரமாக விளங்கியது. பதினான்காம் நூற்றாண்டில் சிங்கபுரா ராஜ்ஜியம் சிறப்பாகவே இருந்தது. விஜய இளவரசர் பரமேஸ்வராவின் ஆட்சியில் சிங்கப்பூர் ஒரு முக்கியமான துறைமுகம். ஆனால் பல்வேறு பண்டைய ஆதிக்க சக்திகளால் இந்தத் துறைமுகம் அழிக்கப்பட்டது.
 
பிரிட்டாஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் குத்தகைக்கு வந்த பிறகு 1819ல் மீண்டும் புத்துயிர் பெற்றது சிங்கப்பூர் துறைமுகம். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்குள் வந்திருந்தது அந்தப் பகுதி. முழுக்க, சுயநலம் காரணமாக, சிங்கப்பூரில் துறைமுகத்தை உண்டாக்கி நவீனப்படுத்தியது பிரிட்டிஷ் அரசு.
 
இந்தியா, சீனா ஆகியவற்றுடன் சிங்கப்பூர் வணிகம் தொடங்கியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அது ஒரு நுழைவுத் துறைமுகமாக ஆனது. 1867ல் சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனி ஆனது. அதாவது இதுவரை கிழக்கிந்தியக் கம்பெனியால் நிர்வகிக்கப்பட்ட அது நேரடி பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்தது. அடுத்த இரு நூற்றாண்டுகளில் மாபெரும் வானுயரக் கட்டிடங்கள் சிங்கப்பூரில் எழுந்தன.
 
1869ல் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டவுடன் சிங்கப்பூரின் மகத்துவம் மேலும் அதிகமானது. ஐரோப்பாவுக்கும், கிழக்கு ஆசியாவுக்கும் உள்ள நுழைவாயிலாக அது பயன்பட்டது. ரப்பர் மற்றும் தகரம் ஆகியவற்றை எக்கச்சக்கமாக ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதித்தது சிங்கப்பூர்.
 
வருடங்கள் நகர்ந்தன. வந்தது சிங்கப்பூர் போர். இதை ஃபால் ஆப் சிங்கப்பூர் என்றும் கூறுவார்கள். இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளின் பிடியில் இருந்த நாடுகளை ஆக்கிரமிக்க திட்டமிட்டது ஜப்பான். அந்த வகையில் சிங்கப்பூர் மீதும் அதன் கண் பதிந்தது. அதுவும் பிரிட்டிஷாரின் தென்கிழக்கு ஆசியாவின் ராணுவ அடித்தளமாக விளங்கிக் கொண்டிருந்தது சிங்கப்பூர். 1942 பிப்ரவரி 8ம் தேதி அன்று தொடங்கிய இந்தப் போர் ஒரு வாரத்துக்கு நீடித்தது.
 
வெற்றி பெற்ற ஜப்பானின் வசம் சென்றது சிங்கப்பூர். சுமார் 80,000 பிரிட்டிஷ் தரப்பு ராணுவ வீரர்கள் கைதிகளாக்கப்பட்டனர். தங்கள் சாம்ராஜ்யத்தின் மாபெரும் நஷ்டமாக இதைக் கருதுவதாக அறிக்கை வெளியிட்டார் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில்.
 
குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற படுகொலைகளைச் சொல்ல வேண்டும். அந்த மருத்துவமனையின் முழுப் பெயர் அலெக்ஸான்ட்ரா மருத்துவமனை.
 
பிப்ரவரி 14 அன்று அந்த மருத்துவமனையை அணுகியது ஜப்பானிய ராணுவம். நடைபெற இருக்கும் விபரீதத்தை உணர்ந்த பிரிட்டிஷ் தரப்பு ராணுவ அதிகாரி ஒருவர் தன் கையில் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி அவர்களை நோக்கி வந்தார். ஜப்பான் ராணுவ அதிகாரி ஒருவர் அவரைத் தன் துப்பாக்கிக் கத்தியால் சீவித் தள்ளினார். ராணுவம் முன்னேறியது. மருத்துவமனையில் இருந்த பல நோயாளிகளைக் கொன்றது. அறுவைசிகிச்சை அறையில் இருந்தவர்களையும் விட்டுவைக்கவில்லை. 200 மருத்துவமனை ஊழியர்களை அங்கிருந்து வேறிடத்துக்கு நடக்க வைத்து, காற்றுப்புகாத அறைகளில் தங்க வைத்து அடுத்த நாள் கொன்றனர்.
 
(அந்த நிகழ்வில் மறைந்து தப்பிப் பிழைத்த ப்ரைவேட் ஹெய்னெஸ் என்பவர் தன் மகளுக்கு எழுதிய கடிதம் 2008-ல் பெரும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ஜப்பானுக்கு சங்கடத்தை அளித்தது).
 
பிரிட்டன் சிங்கப்பூர் போரில் சரணடைந்தது. சரணடைந்ததை ஏற்றுக் கொள்ள ஜப்பான் நாடு விதித்த நிபந்தனைகள் அதிகமானவை.
 
(இன்னும் வரும்..)
 
  • தொடங்கியவர்

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 3

singapore_2266825f.jpg

1945-ல் பிரிட்டன்-ஜப்பானுக்கு இடையே நடைபெற்ற போரை சித்தரிக்கும் வகையில் சிங்கப்பூரின் சாங்கி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள வீரர்களின் சிலைகள்.
 

சிங்கப்பூரைத் தன் வசம் கொண்டிருந்த பிரிட்டன் ஜப்பானிடம் சரணடைந்தது. ‘தாக்குதலை நிறுத்த வேண்டுமா? அப்படியானால் இதோ என் நிபந்தனைகள்’ என்று பட்டியல் போட்டது ஜப்பான். அதில் முக்கியமானது இது.

 
சிங்கப்பூரிலுள்ள தனது அத்தனை ராணுவத்தினரையும் ராணுவத் தளவாடங்களையும் பிரிட்டன் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கப்பல்கள், விமானங்கள், ரகசிய ஆவணங்கள் எல்லாமே இவற்றில் அடக்கம். வேறு வழியின்றி பிரிட்டன் ஒத்துக் கொண்டது.
 
ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தவு டன் சிங்கப்பூர் பெயர் மாற்றம் பெற்றது. புதிய பெயர் ஷோநான்டோ. சிங்கப்பூரை ‘யோனன்’ என்று செல்லமாகவும் ஜப்பானியர்கள் அழைத்தார்கள். தெற்கின் ஜோதி என்று இதற்குப் பெயர். சிங்கப் பூரின் மகத்துவத்தை ஜப்பானி யர்கள் உணர்ந்தனர். ஆனால் அவர்கள் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான் இருந்தது. சிங்கப்பூரில் வசித்த ஆயிரக்கணக்கான சீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டனுக்கும் ஜப்பானுக்கும் 1945-ல் மீண்டும் ஒரு போர். இநத முறை ஜப்பான் சரணடைந்தது. பிரிட்டிஷ் ராணுவம் அந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்று சிங்கப்பூரில் நுழைந்தது.
 
அதற்குப் பிறகு சுதந்திரத்தை நோக்கி சிங்கப்பூர் முன்னேறியது!
 
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பிரிட்டனின் பலம் குறைந்து விட்டதாக சிங்கப்பூர்வாசிகள் கருதினார்கள். எனவே சுயாட்சி வேண்டுமென்று வலுத்துக் குரல் கொடுக்கத் தொடங்கினர். சுயாட்சி (சுதந்திரம் அல்ல) கிடைத்தது. 1946-ல் மலேயா பகுதியிலிருந்து சிங்கப்பூர் பிரிக்கப்பட்டு பிரிட்டனால் ஆட்சி செய்யப்பட்டது.
 
(இந்த இடத்தில் மலேயா, மலேசியா ஆகியவற்றுக்கிடையே உள்ள வித்தியாசத்தைச் சற்று தெளிவுபடுத்திக் கொள்வோம். 1963 செப்டம்பர் 16 வரை பிரிட்டன்வசம் இருந்த மலாய் தீபகற்பம் மலேயா என்று அழைக்கப்பட்டது. 1963-ல் பிரிட்டனின் பிடியிலிருந்து விடுபட்டதும் அது மலேசியா என்று பெயர் சூட்டிக் கொண்டது. அப்போது சிங்கப்பூரும் அதன் ஒரு பகுதி).
 
1954-ல் சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (People’s Action Party) உருவானது. அன்றிலிருந்து இன்றுவரை சிங்கப்பூர் அரசியலில் அது ஒரு தவிர்க்க முடியாத சக்தி. 1955-ல் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவானது. தொடர்ந்து இரு வருடங்களில் நடைபெற்ற தேர்தலில் 51 தொகுதிகளில் 43-ல் மக்கள் செயல் கட்சி வென்றது. இதை வழி நடத்திய லீ குவான் யூ அந்த நாட்டின் தலைவரானார்.
 
1963 செப்டம்பர் 16 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட் டவுடன் மலேசியாவுடன் மீண்டும் சேர்ந்து கொண்டது சிங்கப்பூர். அப்போது மலேயா, சபா, சரவக், சிங்கப்பூர் ஆகிய நான்கும் இணைந்து மலேசியா என்ற பொதுப் பெயரில் புதிய எல்லைகள் கொண்ட நாடாக உருவானது. ஆனால் அந்த இணைப்பு குறைந்த ஆயுள் கொண்டதாக இருந்தது. மீண்டும் தனி நாடாக வேண்டிய கட்டாயம் சிங்கப்பூருக்கு ஏற்பட்டது.
 
ஒரு நாடு சுதந்திரம் பெற்றது என்றால் அங்கு அதற்குமுன் என்ன நடந்திருக்கும்? அடக்குமுறை, அதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்று வந்த சுதந்திர இயக்கங்கள், தனக்குக் கீழ்தான் இருக்க வேண்டுமென்று ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரம், சுதந்திரமெல்லாம் கொடுக்கமாட்டேன் ஆனதைப் பார்த்துக் கொள் என்ற ஆட்சியாளர்களின் திமிர், பிறகு வேறுவழியில்லாமல் ஒரு கட்டத்தில் வேண்டாவெறுப்பாக சுதந்திரம் அளித்தல் - இவைதானே நமக்குத் தெரிந்த செயல்முறை? ஆனால் மலேசியா - சிங்கப்பூர் விஷயத்தில் நடந்ததே வேறு.
 
‘‘நீ தனியாகப் போ’’ என்று மலேசியா குரல் கொடுக்க, ‘‘ஐயோ எங்களை உங்களோடு இருக்க விடுங்கள்’’என்று சிங்கப்பூர் கெஞ்ச, நடந்தது பிரிவினை அல்ல. வெளியேற்றம்.
 
பின்னணி இதுதான். சிங்கப்பூர் இணைந்தபிறகு மலேசியா அதைக் கொஞ்சம் ஓரவஞ்சனையாகவே நடத்தியது. இணைப்பு காரணமாக பல இன மக்கள் வசித்த நாடாக மலேசியா மாறியது. ஆனால் மலாய் இன மக்களுக்கு பலவற்றிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் அதிகமாக வசித்த சீனர்கள் தாங்களும் பிறரோடு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கொடிபிடித்தனர்.
 
தவிர சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. இதை சிங்கப்பூர் எதிர்க்கத் தொடங்கியது.
 
1964-ல் இனக் கலவரங்கள் நடைபெற்றன. முகமது நபிகளின் பிறந்த நாளன்று சிங்கப்பூரிலுள்ள பதாங் என்ற பகுதியிலிருந்து கோலாங் என்ற பகுதியை நோக்கி ஓர் ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது. அதிலிருந்து ஒரு குழு தனியாகப் பிரிந்து செல்ல, காவல் துறையினர் அவர்களை ஒழுங்குபடுத்த முயற்சித்தனர். இதற்கு ஒத்துழைக்காததோடு, பிரிந்து சென்றவர்கள் காவல் துறை யினரைத் தாக்கவும் செய்தார்கள். இந்தத் தாக்குதலில், சாலையில் நடந்து கொண்டு இருந்த சீன இனத்தவர் மீதும் அடிகள் விழ, வெடித்தது கலவரம். சட்டம், ஒழுங்குப் பிரச்னை இன, மதக் கலவரமாகப் பரிணாமம் பெற்றது.
 
அவசர அவசரமாக நல்லெண்ணக் குழுக்கள் உருவாக் கப்பட்டன. பலனில்லை. மூன்றே மாதங்களில் மீண்டும் கலவரம். பின்னணியில் தூண்டிவிடும் சக்திகள் இந்தோனேஷியாவும், கம்யூனிஸ்ட்களும்தான் என்று கருதினார் மலேசிய துணைப் பிரதமர் டுன் அப்துல் ரஸாக். தவிர, ஏற்கனவே ஆட்சியாளர்களிடையே வேறு சில சந்தேக விதைகளும் முளைவிட்டிருந்தன.
 
(இன்னும் வரும்..)
 
  • தொடங்கியவர்

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 4

singapore_2267958f.jpg

சிங்கப்பூர், மலேசியாவை இணைக்கும் ஜொகூர் பாரு பாலம்.
 

சிங்கப்பூர் ரொம்பச் சின்ன பகுதி. தயாரிப்பு என்று அங்கே எதுவும் கிடையாது. தண்ணீரைக்கூட மலேசியப் பகுதியிலிருந்துதான் பெற வேண்டும் என்கிற அளவுக்கு ஏதுமற்ற பகுதி அது. என்றாலும் பொருளாதாரத்தில் குதிரைப் பாய்ச்சலுடன் முன்னேறிக் கொண்டு இருந்தது. மலேசி யாவின் அதிகார கேந்திரம் கோலா லம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு இடம் மாறிவிடுமோ என்ற அச்சம் கூட மலேசியாவின் அதிகாரவர்க் கத்துக்கு ஏற்பட்டு இருந்தது.

 
பிரதமர் தும்கு அப்துல் ரஹ்மான், ‘சிங்கப்பூர் பிரிந்து விடட்டும்’ என்று நாடாளுமன்றத் துக்கு ஆலோசனை கூறினார். ஆனால் சேர்ந்து இருக்கவே விரும்புவதாக சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூ அறிவித்தார்.
 
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 126-0 என்கிற கணக்கில் சிங்கப்பூர் பிரிந்துச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதரவு ஓட்டுகள் விழுந்தன. (சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை).
 
கண்ணீர் வழிய, ‘சிங்கப்பூர் தனி நாடாகி விட்டது’ என்று அறிவித்த லீ குவான் யூ அதன் பிரதமர் ஆனார்.
 
பின்னர் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ‘’அது என் மனதுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்த தருணம். என் வாழ்க்கை முழுவதும் மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. இருதரப்பிலும் உள்ள மக்கள் புவியியலால், பொருளாதாரத்தால், ரத்த உறவால் ஒன்றுபட்டவர்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிரிவு நேர்ந்தது மிகவும் துரதிருஷ்டமானது’’ என்றார்.
 
ஆக மலேசியாவில் இணைந்த இரண்டே வருடங்களில் சிங்கப்பூர் பிரிந்து தனி நாடானது.
 
சில வருடங்களுக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு மீண்டும் பேட்டியளித்த லீ குவான் யூ ‘மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்ததில் எனக்கு மிகவும் வருத்தம். தும்கு அப்துல் ரஹ்மான் (மலேசிய அதிபர்) மட்டும் சிங்கப்பூரை விலக்காமல் இருந்திருந்தால் மேலும் பல முன்னேற்றங்கள் நடைபெற்றிருக்கும். சிங்கப்பூரில் செய்யப்பட்ட பல சாதனைகள் மலேசியாவிலும் நடந்திருக்கும். இன வேறுபாடுகளைக் களைந்து நல்லிணக்கத்தோடு பல்வேறு இனங்களும் நடந்து கொண்டி ருப்பது சாத்தியம்தான். இப்போது மலேசியா தனித்தனியாக பிரிந்து செயல்படுவதைப் படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள் ஆகியோர் தனித் தனிப் பள்ளிகளில் தங்கள் குழந்தை களைச் சேர்ப்பதும், தனித்தனி குடியிருப்புகளில் வசிப்பதும், ஒருவரோடு ஒருவர் கலந்து பழகாமல் இருப்பதும், அண்டை வீட்டுக்காரர்கள் என்ற வகையில் எனக்கு துக்கத்தைத் தருகிறது’’ என்றார்.
 
சுதந்திரமடைந்ததும் தங்க ளுக்கு உலக நாடுகளின் அங்கீகாரம் உடனடியாகத் தேவை என்பதை உணர்ந்தது சிங்கப்பூர். ஒரு வேளை இந்தோனேசிய ராணுவம் தங்களைத் தாக்கினால்? மலேசியாவில் ஒரு பிரிவினர் சிங்கப்பூர் பிரியக் கூடாது என்று கொடி பிடித்துக்கொண்டிருந்தனர். ஒருவேளை சிங்கப்பூருக்கு மிகவும் பாதகமான நிபந்தனைகளுடன் மீண்டும் மலேசியா அதைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டால்? பதற்றத்துடன் 1965 செப்டம்பர் 21 அன்று ஐ.நா.வில் உறுப்பினர் ஆனது சிங்கப்பூர். இதற்கு உதவின மலேசிய, இந்திய, சீன அரசுகள்.பிரிவினைக் குப் பிறகும் மலேசியாவும் சிங்கப்பூரும் நட்பாகத்தான் இருக்கின்றன. ஆனால் உரசல்கள் இல்லாமல் இல்லை.
 
இயற்கை வளங்கள் இல்லாத நாடு சிங்கப்பூர். சொல்லப்போனால் போதிய அளவு நிலம் கூடக் கிடையாத தீவு நாடு. எல்லாவற்றுக்கும் (குடிநீர் உட்பட) பிற நாடுகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் என்பதால் விலைவாசி பொதுவாக அங்கு அதிகமாகவே இருக்கிறது.
 
சிங்கப்பூரைவிட மலேசியாவில் பெட்ரோலின் விலை குறைவு. பெட்ரோல் மட்டுமல்ல வேறு பல பொருட்களின் விலையும்கூட குறைவுதான். எனவே சிங்கப்பூரில் வசிப்பவர்களில் பலரும் விடுமுறை நாட்களில் மலேசியா சென்று ஷாப்பிங் செய்துவிட்டு அப்படியே தங்கள் காரின் பெட்ரோல் டாங்கை நிரப்பிக் கொண்டு வருவது வழக்கமானது. சராசரியாக இப்படி ஒரு நாளைக்கு மலேசியா சென்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் என்றானது.
 
மலேசிய அரசு இதை விரும்பவில்லை. ‘‘மலேசிய எல்லையிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எந்த பெட்ரோல் பங்க்கிலும் வெளிநாட்டுக் கார்கள் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளக் கூடாது’’ என்று அறிவித்து விட்டது. (வெளிநாடு என்று அறிவித்தாலும் முக்கிய இலக்கு சிங்கப்பூர்தான்).
 
‘‘எங்கள் மக்களிடமிருந்து பெறும் வரிப்பணத்தில்தான் பெட் ரோலுக்கு மானியம் கொடுத்து குறைந்த விலையில் விற்கிறோம். இதை எப்படி பிற நாட்டு மக்களுக்கு அளிக்க முடியும்?’’ என்பது மலேசிய நியாயம். இந்த அறிவிப்பு வந்தவுடன் வேறு பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
 
மலேசிய எல்லைப் பகுதிக்குள் சிங்கப்பூர் பதிவு எண்ணைத் தாங்கிய ஒரு கார் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டால் என்ன செய்வது? மலேசியா இதற்கும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வெளிநாட்டினருக்கென்று தனி பெட்ரோல் ஸ்டேஷன்கள். இவற்றில் பெட்ரோலின் விலை சந்தை விலையாகத்தான் இருக்கும். (அதாவது மானியம் கிடையாது). இரு சக்கர வாகனங்கள் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் தாராளம் காட்டியது மலேசியா. புதிய விதி இரு சக்கர வாகனங்களுக்குச் செல்லாது என்றது. ‘‘நாங்கள் எளியவர்களின் தோழன்’’ என்றது.
 
சிங்கப்பூர் தனி நாடாக ஓர் இனக் கலவரமும் முக்கிய காரணமாக அமைந்தது என்றோம். தனி நாடாக ஆனபிறகு அங்கு இனக் கலவரங்கள் நடைபெறவில்லையா?
 
(இன்னும் வரும்)
 
  • தொடங்கியவர்

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 5

 

singapore_2270130f.jpg

லிட்டில் இந்தியா கலவரம் | கோப்புப் படம்
 
 

சிங்கப்பூர் தனி நாடான பிறகு 1969-ல் ஒருமுறை இனக்கலவரம் நடைபெற்றது. ஆனால் இதன் தொடக்கம் உண்மையில் சிங்கப்பூரில் நடக்கவில்லை. மலேசியா நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் எதிரொலிதான் இது.

 
மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மற்றும் பெடலின் ஜெயா ஆகிய பகுதிகளில் தொடங்கியது அந்தக் கலவரம். பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மலேசியாவில் வசித்த சீனர்களுக்கும் மலாய் மக்களுக்குமிடையே கலவரம் உண்டானது. இதில் 196 பேர் இறந்தனர். அவசர நிலைச் சட்டத்தை அவசரமாக அறிமுகப்படுத்தியது மலேசிய அரசு. 1971 வரை பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது.
 
இதெல்லாம் நடந்தது மலேசியாவில்தான். ஆனால் சிங்கப்பூரிலும் சீனர்களும், மலேய மக்களும் அதிகம் இருந்ததால் அந்தக் கலவரத்தின் தாக்கம் சிங்கப்பூரிலும் வெடித்தது. ஏற்கனவே மலாய் மக்களின் தேசியக் கூட்டமைப்பு (UMNO), ‘’சிங்கப்பூரில் மலாய் இன மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். நாங்களே மண்ணின் மைந்தர்கள்’’ என்று அறிவித்திருந்தார்கள்.
 
சிங்கப்பூரில் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த சீனர்களுக்கு இது வெறுப்பைத் தந்தது. ஆனால் சிங்கப்பூரில் வசித்த மலாய் மக்களுக்கோ ‘’தாங்களே பூமி புத்திரர்கள். எனினும் தங்களது இனம் பொருளாதாரத்தில் மேம்படவில்லை’’ என்ற வருத்தம் ஆழமாகவே இருந்தது. மலேசியாவில் மலாய் இன மக்கள் சீனர்கள்மீது பல கொடுமைகளைப் புரிகிறார்கள் என்ற தகவல் சிங்கப்பூரில் பரவியது. சிங்கப்பூரின் டென்ஷன் அதிகமானது.
 
சிங்கப்பூரிலும் கலவரங்கள் வெடித்தன. காவல் துறை வேகமாகச் செயல்பட்டது. ஆனால் இந்தக் கலவரத்தில் 36 பேர் இறந்தனர். 500 பேருக்கு பலத்த காயங்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரத்தில் இந்தியர்கள் – குறிப்பாக தமிழர்கள் – பங்கு கொண்டனர்.
 
1819 காலகட்டத்தில் மலாய் மக்களைவிட இந்தியர்களின் மக்கள் தொகை சிங்கப்பூரில் அதிகமானது. அப்போது அந்த நாட்டில் வசித்த இரண்டாவது பெரும் இனம் என இந்தியர்கள் ஆயினர். 1860ல் மக்கள் தொகையில் 16 சதவிகிதம் இந்தியர்கள்தான். பின்னர் படிப்படியாகக் குறைந்து 1980ல் இது வெறும் 6.4 சதவிகிதம் என்று ஆனது. இதற்குப் பலகாரணங்கள்.
 
1970க்களில் பிரிட்டிஷ் ராணுவம் இங்கிருந்து பின்வாங்கியது. இதன் காரணமாக அதில் பணியாற்றிக் கொண்டிருந்த பல இந்திய சிப்பாய்கள் வெளியேறினர். தவிர வேலை தேடி சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தங்கள் முதிய பருவத்தில் இந்தியாவிலுள்ள தங்கள் குடும்பத்துக்குத் திரும்பினர். 1965-ல் சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்திய கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்தியர்களின் கொத்து கொத்தான குடியேற்றம் முடிவுக்கு வந்தது. மேலும் சிங்கப்பூரில் வசித்த இந்தியர்களில் கணிசமானோர் மேலை நாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்தது.
 
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் எண்பது சதவீதம் பேர் கல்வி அறிவு இல்லாதவர்கள். கூலி வேலை செய்பவர்கள். துறைமுகப்பணி, கட்டுமானப் பணி மற்றும் தனியார் கிடங்குகளில் பணிபுரிகிறார்கள்.
 
இந்தியர்கள் செரிவாக விளங்கும் சிங்கப்பூர் பகுதி ‘லிட்டில் இந்தியா’. இந்தப் பகுதி நாட்டில் சற்றுத் தள்ளி இருந்தாலும் சிங்கப்பூர் மெட்ரோ ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ரேஸ்கோர்ஸ் சாலைக்கும், செரங்கூன் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள லிட்டில் இந்தியா, சென்னை மாதிரியே காட்சியளிக்கிறது. குலோப்ஜான் கடை, மெஹந்தி கடை இவற்றுடன் பிரம்மாண்டமான முஸ்தஃபா பல்பொருள் அங்காடி 24 மணி நேரமும் திறந்துள்ளது.
 
கோமள விலாஸ், முருகன் இட்லி கடை, சரவண பவன், ஆனந்த பவன், அஞ்சப்பர் போன்ற தமிழகத்தின் பிரபல உணவகங்களை லிட்டில் இந்தியாவில் காணலாம்.
 
லிட்டில் இந்தியா பகுதி கொஞ்சம் நெருக்கமாகத்தான் இருக்கும். குறைவான வாடகையில் வீடு கிடைக்கும் என்பதால் நகரின் பிற பகுதிகளில் இருப்பவர்கள்கூட இங்கு தங்குவதுண்டு. இந்தியா, பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பகுதியில் தங்குகிறார்கள். 2013 டிசம்பர் 8 அன்று இந்தப் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு சிங்கப்பூர் அரசுக்கும், அந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்குமிடையே ஒரு பிளவை ஏற்படுத்தியது.
 
பேருந்து ஒன்றில் ஏறும்போது தமிழ்த் தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து சக்கரங்களில் மாட்டி உயிரிழந்தார். 33 வயதான சக்திவேல் என்ற இந்த இளைஞர் சிங்கப்பூரில் கட்டுமானப் பணி செய்து வந்தவர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 300 இந்தியத் தொழிலாளிகள் சாலைக் கலவரத்தில் ஈடுபட்டனர். பங்களாதேஷைச் சேர்ந்த தொழிலாளிகளும் இதற்கு ஆதரவு அளித்தனர்.
 
சிங்கப்பூர் அரசு ஒரு பெரும் போலீஸ் பட்டாளத்தை அங்கு அனுப்பியது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போதையில் இருந்தார்கள் என்றும், பீர் பாட்டில்களை தங்களை நோக்கி விசிறி எறிந்தார்கள் என்றும் காவல்துறை கூறியது. ஆம்புலன்ஸ் ஒன்றுக்குத் தீவைத்தனர் கலவரக்காரர்கள்.
 
27 பேரைக் கைது செய்தது காவல்துறை. அடுத்து வந்த நாட்களில் மேலும் 9 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர். 2014 பிப்ரவரி 10 அன்று வெளியான தீர்ப்பின்படி இவர்களில் ஒரு தொழிலாளிக்கு 15 வார சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கலவரங்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது அரசு. விபத்தில் பங்கு கொண்ட பேருந்தின் ஓட்டுனர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
 
‘’கலவரத்தில் ஈடுபட்ட அத்தனை பேரும் சட்டத்திற்கு முன் கொண்டுவரப் படுவார்கள்’’ என்ற அறிவித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங். சிங்கப்பூரில் வசித்த சீனர்கள் மற்றும், மலாய்காரர்கள் சிலர் ’’இந்தத் தமிழர்களே இப்படித்தான்’’ என்பது போன்ற விமர்சனங்களை உதிர்க்க, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசு ‘வெளிநாட்டிலிருந்து வந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் தொழிலாளிகளைப் பற்றிய எந்தவித விமர்சனமும் கூடாது’’ என்றது.
 
லிட்டில் இந்தியா பகுதியில் மது விற்பனைக்கும், மது அருந்துதலுக்கும் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை 2014 ஜூன் 24 வரை அந்தத் தடை அமலில் இருந்தது.
 
(இன்னும் வரும்..)
 
  • தொடங்கியவர்

சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 6

singapore2_2271078f.jpg

 

சிங்கப்பூர் சுதந்திரமடைந்தவுடன் புதிய நாட்டின் பிரதமர் மீண்டும் லீ குவான் யூ. (சிங்கப்பூரை ஆட்சி செய்வது பிரதமர்தான். ஆனால் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு நம் ஜனாதிபதியைவிட அதிக அதிகாரங்கள் உண்டு. அங்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது மக்கள்தான். நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது, நாட்டின் இயற்கை வளங்களைக் காப்பது போன்ற விஷயங்களில் அவருக்கு வீட்டோ அதிகாரம்கூட உண்டு. என்றாலும் பிரதமரைவிட அதிகாரங்கள் மிகக் குறைவு).

 
இவ்வளவு சின்னப் பரப்பையும், குறைவான இயற்கை வளங்களையும் கொண்ட சிங்கப்பூர் பெரிய அளவில் வளர்ந்துவிடாது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் நடந்ததே வேறு.
 
சிங்கப்பூரின் பொருளாதாரம் வெகுவேகமாக வளர்ந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் செழித்தது. ஆனால் அரசு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகளை விதித்து சமூகத்தைத் தொடர்ந்து தன் பிடியில் வைத்துக் கொண்டிருக்கிறது.
 
1990-ல் ஒரு திருப்பம். லீ குவான் யூ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், நவீன சிங்கப்பூரின் சிற்பி இவர்தான் என்பதில் வேறு கருத்துகள் இல்லை.
 
கோ சோக் டோங் என்பவர் அடுத்த பிரதமர் ஆனார். கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப் பட்டன. இருபது வருடங்களை அமெரிக்காவில் கழித்தவர் இவர். நிர்வாணப் புகைப்படங்களுக்குப் பெயர்போன ‘ப்ளே பாய்’ பத்திரிகைக்கு சிங்கப்பூரில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது டோங் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
 
அதற்காக கருத்து சுதந்திரத்துக்கு முழு மதிப்பு கொடுத்தவர் என்றும் இவரைக் கூறிவிட முடியாது. சிங்கப்பூர் அரசை எதிர்மறையாக விமர்சித்த சில தொலைக்காட்சிச் சானல்களுக்கு இவர் தடை விதித்தார். அதே சமயம் எம்.டி.வி., டிஸ்கவரி போன்ற சானல்களில் ஆசியத் தலைமையிடம் சிங்கப்பூரில்தான் அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் பாடுபட்டார். 1998-ல் பல ஆசிய நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்தது. குறைவான மக்கள் தொகை, குறைவான இயற்கை வளங்கள் ஆகியவற்றைக் கொண்ட சிங்கப்பூர் மிகவும் உழைத்தால்தான் தங்கள் வளர்ச்சி விகிதத்தைத் தொடர முடியும் என்ற நிலை உண்டானது. முக்கியமாக ஹாங்காங், சிங்கப்பூருக்கு வணிகத்தைப் பொறுத்தவரை கடும் போட்டியை அளித்தது. என்றாலும் நிலைமையை சமாளித்து எழுந்து நின்றது சிங்கப்பூர்.
 
கோ சோக் டோங் ஆட்சியில் மேலும் பல சிக்கல்கள் முளைத்தன. ஜென்மா இஸ்லாமியா என்னும் தீவிரவாத அமைப்பின் மிரட்டல்கள், 2003-ல் சார்ஸ் கொள்ளை நோய் என்று பல நெருக்கடிகள். இதைத் தொடர்ந்து 2004-ல் பிரதமரானார் லீ ஸெயின் லூங். இவர் லீ குவான் யூவின் மகன்தான். 2006-ல் நடைபெற்ற பொதுத் |தேர்தல் ஒருவிதத்தில் முக்கியமானது. பிரச்சாரம் இணையம் மூலமாக பரவலாகச் செய்யப்பட்டது. அதிகாரபூர்வ ஊடகங்களைத் தாண்டியும் மக்களை அடைய முடியும் எனும் நிலை புதிய உற்சாகத்தை உண்டாக்கியது. 84 நாடாளுமன்றத் தொகுதிகளில், 82-ஐ வென்றது மக்கள் செயல் கட்சி (பிஏபி).
 
2011 தேர்தல் வேறொரு விதத்தில் முக்கியமானது. ஆட்சி செய்த பிஏபி ‘இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. நம் நாட்டின் அடுத்த தலைமுறைத் தலைவர்களை இனம் காட்டும் தேர்தல் இது’ என்றது. சுதந்திரத்துக்குப் பிறகு அதிகமான தொகுதிகளில் போட்டி நடைபெற்றது இந்தத் தேர்தலில்தான். 87 தொகுதிகளில், 82-ல் போட்டி இருந்தது. 81 தொகுதிகளை வென்று ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றாலும் வேறொரு கட்சி (பாட்டாளிக் கட்சி) 6 இடங்களை வென்றதே சிங்கப்பூர் அரசியலில் வியப்புக்குரிய விஷயம்தான்.
 
கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட நாடு சிங்கப்பூர். தெருவில் குப்பை போடக் கூடாது. சூயிங்கத்துக்குத் தடை. தீவிர பெண்ணியக் கொள்கைகள் கொண்ட மகளிர் இதழ்களுக்கு அச்சிட அனுமதி கிடையாது. நாளிதழ்களில் ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக எதிர்கொள்ளப்படும்.
 
சிங்கப்பூர் சட்டம் என்பது பொதுவாக பிரிட்டிஷ் சட்டமுறைகளைப் பின்பற்றுகிறது. ஆனாலும் சில வித்தியாசங்கள் உண்டு. இன்னமும்கூட திருட்டு, பாலியல் வல்லுறவு போன்ற சில குற்றங்களுக்கு சவுக்கடி தண்டனை உண்டு. கொலை செய்தால் மரண தண்டனை மட்டுமே. சில வகை போதை மருந்துக் கடத்தலுக்கும் ஆபத்தான ஆயுதப் பதுக்கலுக்கும் கூட மரண தண்டனை உண்டு.
 
சிங்கப்பூரில் அதிகம் பின்பற்றப்படுவது புத்த மதம். என்றாலும் கிறிஸ்தவம், இந்து மதம், இஸ்லாம், தாவோயிஸம் போன்ற மதங்களும் கணிசமாகவே உள்ளன. சிங்கப்பூரில் உங்கள் இஷ்டத்துக்கு வீடு கட்டிக் கொள்ள முடியாது. பத்தில் ஒன்பது பேர் அரசு வீட்டு அடுக்கங்களில்தான் வசிக்கிறார்கள்.
 
1964-ல் உண்டான இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது சிங்கப்பூர் அரசு. வீட்டு வசதி வாரியம் கட்டித்தரும் அடுக்கத்தை வாங்குபவர்கள் இன விகிதப்படி இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு அடுக்குமாடிக் கட்டிடத்திலும் அனைத்து முக்கிய இனத்தவர்களும் இருக்க வேண்டும்.
 
சிங்கப்பூரின் ஜனநாயகம் கொஞ்சம் வித்தியாசமானது. அரசு மருத்துவமனைகளில்கூட பொருளாதாரத்துக்குத் தகுந்த மாதிரிதான் வசதிகள். எந்தக் கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்குரிய படுக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என்றாலும் மருத்துவ சேவைகள் ஒரே மாதிரிதான்.
 
இப்போதைக்கு சிங்கப்பூர் அரசை பயமுறுத்திக் கொண்டிருக்கும் வேறொரு விஷயம் எந்த அளவுக்கு வெளிநாட்டினரை நிரந்தரமாகத் தங்க அனுமதிப்பது என்பதுதான். சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி இனப்பெருக்க விகிதம் என்பது 1.2 சதவீதமாக இருக்கிறது. ஆனால் வேலையில் அமர்த்தப்பட வேண்டியவர்களின் விகிதமோ 2.1 ஆக இருக்கிறது. (உலகின் மிகக் குறைந்த இனப்பெருக்க நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று).
 
வேலைக்குத் தேவை என்பது ஒருபுறமிருக்க வெளிநாட்டு இளைஞர்களை அனுமதிக்காவிட்டால் சிங்கப்பூர் மக்களின் சராசரி வயது அதிகமாகிவிடும். முதியவர்களின் சதவீதம் பெருகிவிடும். என்றாலும் வணிக அளவில் மிகச் சிறந்த நல்லுறவை சிங்கப்பூர் வளர்த்து வருகிறது. உலகில் ஊழல் மிகமிகக் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் மதிப்பிடப்படுகிறது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.