Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரியாத தேவதையால் தீர்வுகளை எட்ட முடியுமா? - எரிக் சூல்ஹைம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத தேவதையால் தீர்வுகளை எட்ட முடியுமா?

எரிக் சூல்ஹைம் (தமிழாக்கம்: ரூபன் சிவராஜா)

315561cf-5b06-4ae5-9b5c-84a8263a8a411.jp

'தெரியாத தேவதையால்' தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான சிறப்புத் தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் 'The hindu' இதழின் இணையத்தளத்தில், 15.01.15 வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.

புதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது தமிழர்களுடனும் முஸ்லிம்களுடனுமான நல்லிணக்கமாகும். ஆனால், ஜனாதிபதி சிறிசேன அரசாங்கத்தால் உடனடியாக செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் நிறையவே உள்ளன. தமிழர்களின் மொழி உரிமை மீள் நிலைநாட்டப்படலாம். இராணுத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட பகுதியின் சில பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றலாம். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம். இந்திய கூட்டாட்சி மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடிய அதிகாரப்பகிர்வு முறைமையை நோக்கி இலங்கை செல்லக்கூடும்.

இறுதிக்கட்டப் போரின்போது நடந்தேறிய மோசமான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான கொலைகள் ஆகிய சொல்லொணா அவலங்களுக்குப் பொறுப்புக்கூறுவதை வலியுறுத்தி அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகளாவிய மனித உரிமைச் சமூகமும் புலம்பெயர் தமிழர்களும் இந்த விவகாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பார்கள். ஆனால், அனைத்துலக சக்திகள் புதிய அரசாங்கத்திற்குச் சற்றுக் கால அவகாசம் வழங்க வேண்டும். சிங்கள மக்களின் கருத்துகளை அறிய முன்னர், பொறுப்புக்கூறல் விவகாரத்தை முன்னகர்த்த முடியுமென எதிர்பார்க்க முடியாது. சர்பியா, சிலி போன்ற நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் நோக்குகையில், பொறுப்புக்கூறல் என்பது துரதிஸ்ரவசமாக காலம் எடுக்கும் விவகாரமாகும். ஆனால், முடிவில் அது வந்து சேரும் என இந்தக் கட்டுரையில் எரிக் சூல்ஹைம் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையின் முழமையான தமிழாக்கம்:

மைத்திரிபால சிறிசேனா இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் எவரேனும் பந்தயம் கட்டியிருப்பார்களேயானால், அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பர். மகிந்த ராஜபக்ச மீண்டும் வென்று தனது குடும்ப ஆட்சியைப் பலப்படுத்தும் நிலை நீடிக்குமென பெரும்பாலான அனைத்துலக ஆய்வாளர்கள் நம்பினர். தனக்குச் சாதகமான தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரச வளங்கள் அனைத்தும் மகிந்தவினால் கட்டுப்படுத்தப்பட்டது. தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மக்களை ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கான பேரூந்துகள் பயன்படுத்தப்பட்டன. அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் வாயிலாக (Pravda -பாணி) பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு இணைந்ததாக அப்பட்டமான பொய்கள் பரப்பப்பட்டன. தேர்தல் நாளன்று கூட இவ்வாறான பிரச்சாரங்கள் இடம்பெற்றன. தமிழ் மக்களைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரிய பொய்யான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

சிறிலங்காவின் பொருளாதாரம் ஓரளவு செழிப்பாக உள்ளது. விடுதலைப் புலிகளுடனான நீண்ட போரை மிக மோசமான முறையில் முடிவுக்குக் கொண்டுவந்த ராஜபக்ச, சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் தற்போதும் புகழ்மிக்கவராகவே விளங்குகின்றார். ஆனால், 'பொறுத்திருந்து பாருங்கள், பொது எதிரணி வெல்வதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றது' என இலங்கையிலிருந்து பல குரல்கள் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தன.

இலங்கையின் வெற்றி:

சிறிசேனவிற்கான வெற்றியென்பது சிறிலங்காவிற்கான மிகப்பெரிய வெற்றி. அரசியல் அரங்கில் எங்கும் காணக்கிடைக்காத பரந்த அளவிலானதொரு கூட்டணிக்குச் சிறிசேன தலைமை தாங்கினார். அக்கூட்டணியில் இடதுசாரிக் கட்சியான ஜேவிபி, வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆதரவும் இருந்தது. கடும்போக்கு பௌத்த சிங்களவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் அதில் இடம்பெற்றிருந்தது. இரண்டு முக்கிய தலைவர்களான சந்திரிகா மற்றும் ரணில் ஆகியோர் கிறிக்கெற் நட்சத்திரங்களுடனும், விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை முன்னெடுத்த ஜெனரல் சரத் பொன்சேகாவுடனும் கைகோர்த்தனர்.

315561cf-5b06-4ae5-9b5c-84a8263a8a414.jp

சிவில் நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் துணிச்சலுடன் செயற்படத் தவறியிருப்பின் இந்த வெற்றி சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இராணுவ மற்றும் காவல்துறை தலைமைகள் இறுதிநேரத்தில் ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்கும் முடிவினை எடுத்தமையினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத் தலைவர், அரசகட்டுப்பாட்டுத் தொலைக்காட்சி ஊடகத்திற்கு நேரடியாகச் சென்று, பொய்யாகப் பரப்பப்பட்ட தகவல்களை மீளப்பெறுமாறும், தொடர்ச்சியாக பொய்களைப் பரப்புவதை நிறுத்துமாறும் எச்சரித்ததாகக் கூறப்படுகின்றது. இந்திய கூட்டாட்சி மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடிய அதிகாரப்பகிர்வு முறைமையை நோக்கி இலங்கை செல்லக்கூடும்.

அனைத்துலக அரசியல் அரங்கின் உயர்மட்டங்களில் அறியப்படாத ஒருவர் சிறிசேன. ஆனால், அவர் முக்கிய தகமைகளைக் கொண்டிருகின்றார். நேர்மையானவராகவும் கடும் உழைப்பாளியாகவும் பரவலாக அவர் பார்க்கப்படுகின்றார். சிறந்த சுகாதார அமைச்சராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசுவாசியாகவும் பார்க்கப்படுகின்றார். அனுபவசாலியும் தூரநோக்குப் பார்வையுடைய அரசியல்வாதியுமான ரணில் விக்கிரமசிங்கவை சிறிசேன அவர்கள் பிரதமராக நியமித்திருக்கின்றார். சிறிசேன சிங்கள இதயபூமியான பொலநறுவையைப் பூர்வீகமாகக் கொண்டவர். பௌத்தத்தின் மீது பற்றுக்கொண்டவராகவும் கிராமிய வேர்களையும் கொண்டிருக்கின்றமை இவரை முதல்தர நம்பிக்கைக்குரியவராக ஆக்குகின்றது. இது மிக முக்கியமானது. ஏனெனில் சிங்கள மக்கள் மத்தியில் ஆழ வேரூன்றிய ஒரு தலைவருக்கு தமிழ் மக்களுடன் உண்மையான இணக்கப்பாடுகளை எட்டுவது இலகுவாக அமையக்கூடும்.

இந்தத் தேர்தல் வெற்றி இலங்கைத்தீவின் அனைத்து சிறுபான்மை மக்களினாலுமே சாத்தியமாகியுள்ளது. 160 தேர்தல் மாவட்டங்களில் 90இல் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். அந்த அடிப்படையில் கிட்டத்தட்ட அனைத்துச் சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களிலும் அவர் முதலிடத்தில் உள்ளார். சிங்கள வாக்குகளில் 55 விழுக்காட்டினை மகிந்த பெற்றுள்ளார். ஆனால், 80 விழுக்காடு வரையான தமிழ் வாக்குகளையும், பெரும் அளவிலான முஸ்லிம் வாக்குகளையும், ராஜபச்ச சிங்கள மக்கள் மத்தியில் பெற்ற பெருமளவு வாக்குகளுக்கு ஈடாக்கி, சிறிசேனவிற்கான சமப்படுத்தல் நிகழ்ந்துள்ளது.

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் இது திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏனெனில், கடந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட வன்முறைகள் மகிந்த ராஜபக்சவினால் தூண்டப்பட்டவை அல்லது குறைந்தபட்சம் அவர்களைப் பாதுகாக்கவேனும் அவரால் முடியவில்லை என்பதாகும். தேர்தல் புறக்கணிப்பினைக் கோரிய புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் பாரியதொரு பின்னடைவாகும். தமிழ் மக்கள் தமது சொந்தக்காலில் நின்று தீர்மானம் எடுத்துள்ளனர். பெருமளவில் திரண்டு வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட அனைவரும் 'தெரியாத தேவதையான' சிறிசேனவை தெரிவு செய்துள்ளார்கள். 'தெரிந்த பிசாசு' ராஜபக்சவிற்குப் பதிலாக. ('தெரியாத தேவதை', 'தெரிந்த பிசாசு' - இந்த ஒப்பீடு தேர்தல் பிரச்சாரத்தின் போது மகிந்த ராஜபக்சவினால் கூறப்பட்ட கூற்று)

கரடுமுரடான எதிர்காலம்

சிறிசேனவினாலும் ரணில் விக்கிரமசிங்கவினாலும் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியுமா? எதிர்காலத்திற்கான பாதை கரடுமுரடாகத்தான் இருக்கின்றது. தற்போதைய நாடாளுமன்றத்துடன் இயங்குவதென்பது உடனடிப் பிரச்சினையாகும். ஜனநாயக மறுசீரமைப்பிற்கான 100 நாள் காலக்கெடு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தற்போதைய நாடாளுமன்றத்துடன் செயற்பட முடியாதுபோனால் புதிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு நிகழ்கையில் நாடு ஒரு புதிய தேர்தல் அலைக்குள் இழுத்துச்செல்லப்படுவதோடு, முரண்பாடுகளும் கூர்மையடையும்.

இது நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்கும், அனைவரையும் உள்வாங்கிய வளர்ச்சிப் பாதையில் நாட்டை இட்டுச்செல்வதற்கும் எப்போதாவது கிடைக்கக்கூடியதொரு அரிய வாய்ப்பு. வெற்றிபெற்றிருக்கின்ற கூட்டணியில் கொம்யூனிஸ்ட்டுகள், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபட்ட பரந்த பார்வைகளைக் கொண்டிருக்கும் தாராளவாதிகள் உள்ளனர். தமிழர் பிரச்சினை மற்றும் மீளிணக்கம் என்று வரும்போது, இந்த வானவில் கூட்டணி வேறுபட்ட கருத்துநிலைகளைக் கொண்டுள்ளது. இதன் தட்டில் மூன்று வேறுபட்ட உணவு வகைகள் உள்ளன. அவற்றினது சிக்கல்தன்மை அடிப்படையில் இவ்வாறு வரிசைப்படுத்தலாம்: ஜனநாயக மீளமைப்பு, அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிய மேம்பாடு மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என அவை வகைப்படுகின்றன.

ஜனநாயக மீளுருவாக்கம் உடனடி வெற்றியைத் தருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தென்படுகிறது. இலங்கையில் ஜனநாயகம் எத்தகு ஆழ வேரோடியுள்ளதென்பதை அண்மைய தேர்தல் நிரூபித்துள்ளது. நீதித்துறை, மத்திய வங்கி, படைத்துறை, காவல்துறை ஆகியவற்றை அரசியல்வாதிகளிடமிருந்து பிரித்தெடுத்து, சுயாதீனமாக்கும் மறுசீரமைப்பினை உருவாக்குதன் மூலம் ஜனநாயகத்தை பலப்படுத்தமுடியும். முற்றிலும் மகிந்த ராஜபக்ச மீது கொண்டிருந்த விசுவாசத்தினால் தூதுவர்களாகவும் நீதிபதிகளாகவும் பதவிவகிப்பவர்கள் உரிய தகமையுடையவர்களால் பிரதியீடு செய்யப்படுவர். ஊடகத் தணிக்கைகள் நீக்கப்பட்டு, ஆட்சியாளர்களை விமர்சிக்கவும், ஊழலை அம்பலப்படுத்தவும் ஊடகவியலாளர்களுக்குரிய சுதந்திரம் வழங்கப்படும் நிலை உருவாகும். சித்திரவதைக் கூடங்கள் மூடப்படும். மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்கிய தனிப்பட்ட பாதுகாப்பு இயந்திரம் கலைக்கப்படும். ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழர்கள் இரவில் காணமல் போவது நிகழாதிருக்கும்.

தெற்காசியாவின் செல்வந்த நாடுகளில் இலங்கை ஒன்றாக விளங்குகின்றது. அதேவேளை வெளிநாட்டுச் சுற்றுலாத்துறை, மீன்பிடி, கப்பல் கட்டுமானம் மற்றும் கணினித் தொழில்நுட்பத்துறையில் மேலும் முதலீடுகளை அதிகரிப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் நிறையவே உள்ளன. பொருளாதார வளர்ச்சி 7-8விழுக்காடாக உயர்ந்த நிலையிலுள்ளது. நன்கு படித்த-கடும் உழைப்புமிக்க மக்களைக் கொண்டுள்ளது. ஆனால் அனைத்து சிறுபான்மை இனக்குழுமங்களுக்கும் நன்மை விளையக்கூடிய, அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியைக் காண்பதென்பது மிகப்பெரும் சவாலாக இருக்கப்போகின்றது. சுற்றுலாப்பயணிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். பூமிப்பந்தில் மிக வெற்றிகரமான பொருளாதார நிலையிலுள்ள புலம்பெயர் சமூகமாக தமிழர்கள் பார்க்கப்படுகின்றனர். புலம்பெயர் தமிழர்கள் மருத்துவர்களாகவும், தொழில் வல்லுனர்களாகவும் உள்ளனர். அவர்களால் முதலீட்டில் பங்களிக்கவும் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கவும் முடியும்

புதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது தமிழர்களுடனும் முஸ்லிம்களுடனுமான நல்லிணக்கமாகும். ஆனால் ஜனாதிபதி சிறிசேன நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்குரியதும் இலங்கை மக்களை ஆக்கிரமித்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டடையவும் செயல்முறை ஒன்றினைத் தொடங்க முடியும். உடனடியாக செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் நிறையவே உள்ளன. தமிழர்களின் மொழி உரிமை மீள நிலைநாட்டப்படலாம். இராணுத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடபகுதியின் சில பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றலாம். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மீதான படுகொலை போன்ற மிக மோசமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கலாம். இறுதிக்கட்டப் போரின் போது நடந்தேறிய மோசமான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான கொலைகள் ஆகிய சொல்லொணா அவலங்களுக்குப் பொறுப்புக்கூறுவதை வலியுறுத்தி அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகளாவிய மனித உரிமைச் சமூகமும் புலம்பெயர் தமிழர்களும் இந்த விவகாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பார்கள். ஆனால் அனைத்துலக சக்திகள் புதிய அரசாங்கத்திற்குச் சற்றுக் கால அவகாசம் கொடுக்க வேண்டும். சிங்கள மக்களின் கருத்துகளை அறிய முன்னர், பொறுப்புக்கூறல் விவகாரத்தை முன்னகர்த்த முடியுமென எதிர்பார்க்க முடியாது. சர்பியா, சிலி போன்ற நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் நோக்குகையில், பொறுப்புக்கூறல் என்பது துரதிஸ்ரவசமாக காலம் எடுக்கும் விவகாரமாகும். ஆனால் முடிவில் அது வந்து சேரும்.

தற்போதய புதிய ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விவகாரங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் எனலாம். ஆனபோதும் புதியதொரு வெளியுறவுக் கொள்கையையும் எதிர்பார்க்க முடியும். புதிய வெளியுறவு மையத்தின் தலைமையகமாக தொடர்ந்தும் டெல்லி விளங்கும். சீனாவுடன் பாரிய அளவிலான நன்மை பயக்கும் பொருளாதார உறவினைச் சிறிசேன நிச்சயம் தொடர்ந்தும் பேணுவார். உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சார்ந்த துறைகளில் சீனாவின் முதலீடுகள் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்படும். ஆனால் இனி சீனா மட்டுமே இலங்கையின் நட்புசக்தியாக இருக்க மாட்டாது. சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் தனது முதலாவது அரசமுறைப் பயணமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா செல்லவுள்ளார். யாராலும் 'அழைக்கப்படாத' மகிந்த ராஜபக்சவிற்கு மாறாக, சிறிசேனவையும் ரணில் விக்கிரமசிங்கவையும் வெள்ளை மாளிகையிலும் ஐரோப்பிய தலைநகரங்களிலும் வெகுவிரைவில் பார்க்கலாம். இறுதியில் 'தெரியாத தேவதை – மைத்திரிபால சிறிசேனாவுக்கு' இலங்கை மக்கள் வாக்களித்துள்ளனர். அனைவரின் ஆதரவுடனும் அவர் இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மனிதராக ஆகக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

http://www.thehindu.com/opinion/op-ed/can-the-unknown-angel-deliver/article6789564.ece

*****

'தெரியாத தேவதையால்' தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான சிறப்புத் தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் 'The hindu' ஊடகத்தின் இணையத்தளத்தில், 15.01.15 வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. எரிக் சூல்ஹைம், 2005 – 2012 வரை நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் சூழல்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். 2013இலிருந்து அனைத்துலக பொருளாதார கூட்டுச் செயற்பாட்டுக்கும் அபிவிருத்திக்குமான (OECD) அமைப்பின் ஓர் அலகாகவுள்ள அபிவிருத்தி செயற்குழவின் தலைவராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=315561cf-5b06-4ae5-9b5c-84a8263a8a41

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.