Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோணரைப் போல கட்டை விரலைக் காணிக்கையாக கேட்கிறாராம் சம்பந்தன்! - ஹக்கீம் சொல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
rauff-hakkem-200-news.jpg

கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ் தேசியத் தலைமைகள் தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி வருகின்றன. நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்றபோது, மிகவும் பக்குவமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றபோது தமிழ் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் காட்டமாக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

   

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மத்தியில் ஆலங்குடா ‘பீ’ முகாம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

சமகாலத்தில் சுவாரஸ்யமான சில விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வட,கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினரான முஸ்லிம்கள் பற்றிய பிரஸ்தாபம் குறித்து எமது மக்கள் மிகவும் ஆதங்கத்தோடு இருக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் இயக்கமென்ற அடிப்படையில் அண்மைக்காலமாக, நடந்து வருகின்ற சில விடயங்களைப் பற்றி எங்களுக்கே வியப்பாக இருக்கின்றது. எதற்காக இவ்வாறு நாங்கள் விமர்சிக்கப்படுகின்றோம்?

 

ஏன் தமிழ் தேசியத் தலைமைகள் கொஞ்சம் தாறுமாறாகக் காட்டமாக பேசி வருகின்றன என்பதில் எனக்கு இன்னும் சரியாக தெளிவில்லை. இவ்வளவு நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்ற போது மிகவும் பக்குவமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்ற போது தமிழ் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஏதோவோர் ஆற்றாமையின் காரணமாக காட்டமாக இருக்கின்றன என்ற கவலை எங்களுக்கு உள்ளது. அவை ஆற்றாமையின் வெளிப்பாடாக இருக்கலாம் என எங்களை நாங்களே சமாளித்துக் கொள்கின்றோம்.

 

ஏன் அந்த ஆற்றாமை ஏற்பட்டது என்பதற்கு அவர்களிடத்திலே தான் விளக்கம் கோர வேண்டும். குறிப்பாக அண்மையில் எழுந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில், முஸ்லிம் காங்கிரஸ் அந்த முதலமைச்சர் பதவியை பெற்றிருக்கின்றது என்ற நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவரான நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக ஒன்றைச் சொல்லியிருப்பதை இன்றும் கூட நான் பார்த்தேன்.

 

அண்ணன் சம்பந்தன் கூட வழக்கமாக அவரது உரைகளில் காணப்படும் தமிழ்-முஸ்லிம் உறவு குறித்த அம்சங்களை குறித்து, மிக காட்டமான, விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைப்பது குறித்து நாம் வேறெதுவுமல்ல, வேதனையடைகின்றோம். இந்த விரிசல் வேண்டுமென்றே ஏதாவது அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுகின்றதா? அடுத்து வரும் தேர்தலை மையமாக வைத்து தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இவ்வாறு பேசுகின்றனரா? என்று யோசித்தாலும் கூட அவ்வாறு அவர்கள் நடந்து கொள்வதனால் என்ன நன்மை கிடைக்கப்போகின்றது என்று எங்களுக்குப் புரியவில்லை.

 

முதலமைச்சர் விவகாரத்தில் இவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டு விட்டதா? முதலமைச்சர் விவகாரத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். சில நியாயங்களை நாங்கள் பேச வேண்டும். வெறும் அறிக்கை விடுவதில் பயனில்லை. அவர்கள் விடும் அறிக்கைளுக்கு மாற்று அறிக்கை விடுவதைக் கூட நான் தவிர்த்துக் கொண்டு வருகின்றேன்.

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மண்ணைச் சேர்ந்த உங்கள் மத்தியில் நான் இதனைக் கூற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்போடு முட்டி மோதிக் கொண்டு அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, கிழக்கு மாகாணத்திலும், கண்டி, கொழுமபு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுகின்ற தலைமையொன்றல்ல. முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களையும் மனதில் கொண்டு தான் நான் பேச வேண்டும்.

 

எனவே, எனது வார்த்தைகளில் பக்குவம் பேணப்பட வேண்டும். நேர்மையும் தூர நோக்கும், சாணக்கியமும் இருக்க வேண்டும். ஆனால், இவை எவையுமே இன்று தமிழ் தேசிக் கூட்டமைப்பினரின் பேச்சுக்களில் தென்படவில்லை என்றுதான் நான் இன்று இந்த விடயத்தை நோக்குகின்றேன். ஏனென்றால், இந்த கரைதுறைப்பற்று தேர்தலை எடுத்தாலும், இதற்கு முன்னர் நடந்த வட மாகாண சபைத் தேர்தலை எடுத்தாலும், பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலை எடுத்தாலும் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் சேர்ந்திருந்து அமைச்சுப் பதவிகளை அனுபவித்தோம் என்பதைக் குத்திக் காட்டிப் பேசுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், அந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாங்கள் இரண்டறக் கலக்காது தனித்துப் போட்டியிட்டதன் உள் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

மஹிந்த அரசின் வற்புறுத்தல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்தும் எமது தனித்துவத்தை தக்க வைத்துக் கொண்டு போராடினோம் என்பதை குறைந்த பட்சம் அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸுக்கு ஒரு தனியான கொள்கை இருக்கின்றது. எங்களை சோரம் போனவர்களாக பார்க்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், நாங்கள் அமைச்சுப் பதவிகளுக்கு சோரம் போன கூட்டத்தினரல்ல, அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு வந்த கூட்டத்தினர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் ஆட்சிகளை மாற்றிக் காட்டியிருக்கின்றோம். இந்த நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் அமைச்சர் ஒருவர் மூன்று முறை பதவியை விட்டு வெளியேறியதை காட்ட முடியுமா என நான் கேட்கின்றேன். இதைப்பற்றி நான் தமிழ் பேசும் தலைமைகளிடம் கேட்க விரும்புகின்றேன். அவர்கள் எங்களை கடிந்து பேசுகின்றார்கள் என்பதற்காக நான் அவ்வாறு நடந்து கொள்ள விரும்பவில்லை. எங்களது அரசியல் நேர்மையென்பது முக்கியமானது.

 

நீங்கள் நினைக்கின்ற மாதிரி நாங்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதும் பிழையான விடயமாகும்.முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கு எந்த முடிவை மேற்கொள்ள வேண்டும். என்பதை தலைமை தான் தீர்மானிக்க வேண்டும். எமது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் இழுக்கின்ற பக்கம் எல்லாம் நாங்கள்போக வேண்டும் என்ற ஒரு நியதி கிடையாது. நாங்கள் தவறான முடிவெடுத்திருக்கலாம் அந்த தவறை நினைத்து நாங்கள் வருந்தியிருக்கலாம்.

 

கிழக்கு மாகாண சபை முடிவுற்ற தறுவாயில் அந்த முடிவை எடுப்பதற்கு சில நியாயங்கள் இருந்தன. அதிகாரத்தைக் கண்டு எங்களில் சிலர் அள்ளுண்டு சோரம் போகின்ற நிலைமை இருந்தது. முதலமைச்சர் பதவிக்காலத்தின் முதல் பகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நஜீப் ஏ. மஜீதிற்கு கொடுத்து விட்டு, எங்களது பங்கை அனுபவிப்பதற்கான கட்டம் வந்த போது தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் எங்களுக்கு கிடைக்க இருந்த முதலமைச்சர் பதவியைப் பறித்துத் தங்களுக்குத் தர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிடிவாதமாக இருந்தனர்.

 

ஆனால் எங்களைப் பொறுத்தவரை தலைமையின் அங்கீகாரத்துடன் தான் எல்லாம் நடக்கின்றன என்ற நம்பிக்கையில் அவர்களோடு நாங்கள் சில உடன்பாடுகளுக்கு வந்தோம். உடன்பாடுகளை நாம் நிச்சயமாக கௌரவிப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டிய அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து, கிழக்கில் எமது தலைமையில் ஒரு தேசிய அரசாங்கம் அமைந்தது என்ற பெருமையை நிலைநாட்டுவோம். இன்னும் பக்குவம் தவறி எடுத்தெறிந்து பேசுகின்ற நிலைமை தொடர்வது மிகவும் வேதனைக்குரியது.

 

ஏனென்றால் அண்ணன் சம்பந்தன் மூத்த அரசியல்வாதி அவரோடு என்னை ஒப்பிடுவது மலைக்கும், மடுவுக்குமுள்ள வித்தியாசம். அவரிடமிருந்து படிக்க வேண்டியவை நிறை உள்ளன. அவரை நான் நொந்து கொள்ள விரும்பவில்லை. நான் அவரை விமர்சிப்பதன் மூலம் என்னை நான் உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. அந்த மூத்த அரசியல் தலைமைக்கு முழுமையாக மதிப்பளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

 

இந்த நிலையில் அண்ணன் சம்பந்தனை எங்களது குருவாகத்தான் நான் பார்க்கின்றேன். இந்த இடத்தில் மஹாபாரதத்தில் வருகின்ற ஓர் உதாரணத்தைக் கூறிக் காட்ட விரும்புகின்றேன். இந்த முதலமைச்சர் பதவியை அண்ணன் சம்பந்தன் தங்களுக்கு தர வேண்டுமெனக் கேட்பதை மஹாபாரதத்தில் வருகின்ற ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டுக் காட்ட நான் விரும்புகின்றேன். அது அவ்வளவு தூரம் எங்களது கட்சியையும், அரசியலையும் பாதிக்கும் என்கின்ற நிலையிலேயே இதனைக்கூறுகின்றேன்.

 

அது என்ன சம்பவம் என்றால், மஹாபாரதத்தில் ஏகலைவனின் குரு துரோணரைப்பற்றி அதனைப் படித்தவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தனது பயிற்சியை வில் வித்தையில் தனது சிஷ்யனான ஏகலைவனுக்கு வழங்கிய துரோணாச்சாரியார் ஏகலைவனிடம் கேட்டது வேறெதையுமல்ல,“உனது கட்டை விரலை வெட்டித் தா?” என்று கேட்கிறார். கட்டை விரலை வெட்டினால் வில் வித்தையில் ஏகலைவனால் நீடிக்க முடியாது. அவ்வாறு துரோணாச்சாரியார் கட்டை விரலை ஏகலைவனிடம் கேட்டதற்குச் சமமாகத்தான் முதலமைச்சர் பதவியை அண்ணன் சம்பந்தன் கேட்கின்றார் என்ற அளவிற்கு எங்களது உணர்வுகள் இருந்தன.

 

முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் இந்தக் கட்டத்தில் முதலமைச்சர் பதவியை நாங்கள் கிழக்கில் பறிகொடுத்திருந்தால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்போம். அது எங்களுக்கு வாக்களித்த மக்களும், எங்களுக்கு எதிராக இயங்குகின்றவர்களும் எங்களைத் தூற்றுவதற்கு வாய்ப்பாகப் போய்விடும். அரசியலில் மூத்தவராக இருப்பதால் அண்ணன் சம்பந்தனை நான் குருவாகப் பார்க்கின்றேன். வில் வித்தை கற்றுக் கொடுத்து விட்டு கட்டை விரலை கேட்பது போலத்தான் அண்ணன் சம்பந்தன், இந்தச் சந்தர்ப்பத்தில் கிழக்கின் முதலமைச்சர் பதவியை கேட்பது அமைகின்றது. இதற்கப்பால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நீண்ட, நெடிய பயணத்தை நாங்கள் தொடர வேண்டியிருக்கின்றது. என்றார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=126831&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.