Jump to content

வானமும் ஒரு தொலைநோக்கிதான்!


Recommended Posts

pvm_2427095f.jpg

பெருவிண்மீன் வெடிப்பு உருப்பெருக்கப்பட்ட படம்.
 
விண்மீன் ஒன்று வெடித்துச் சிதறும் காட்சி திரும்பத் திரும்ப அரங்கேறும் அதிசயம்!
 
‘கிரவுண்டுஹாக் டே’ என்ற திரைப்படத்தில் வருவதுபோல் அண்டவெளியிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
 
1993-ல் பில் முர்ரேயின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கிரவுண்டுஹாக் டே’. தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வானிலை அறிவிப்பாளராக இருக்கும் கதாநாயகன் மீண்டும் மீண்டும் ஒரே நாளிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார். ஹப்பிள் அண்டவெளி தொலைநோக்கியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வானியலாளர்களும் பெருவிண்மீன் வெடிப்பில் (சூப்பர்நோவா) ஒரே விண்மீன் திரும்பத் திரும்ப வெடித்துச் சிதறுவதைக் கண்டதாகச் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் ஒளியியல் (ஆப்டிக்ஸ்) கூறும் தோற்றப் பிழைதான் இது.
 
பிரபஞ்சத்தின் வேறொரு மூலையில் 900 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்த பெருவிண்மீன் அது. அண்டவெளியின் உதவியின்றி இவ்வளவு தொலைவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை ஹப்பிள் தொலைநோக்கியால் பார்க்க முடியாது. அந்த விண்மீன் வெடிப்பிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்கள் பயணிக்கும் பாதையில் சில விண்மீன் மண்டலங்கள் (கேலக்ஸி) குறுக்கிடுகின்றன. அந்த மண்டலங்களின் ஈர்ப்பு காரணமாக ஒளிக்கதிர்கள் வளைக்கப்பட்டு, பெரிதாக்கப்பட்டு அவற்றின் பல பிம்பங்கள் உருவாகியிருக்கின்றன.
 
அந்த பிம்பங்களுள் நான்கு, ‘ஐன்ஸ்டைன் சிலுவை’(ஐன்ஸ்டைன் கிராஸ்) என்று அழைக்கப்படும் நெருக்கமான தொகுப்பாகக் காட்சியளிக்கின்றன. அந்த விண்மீன் மண்டலங்களுள் ஒன்றைச் சூழ்ந்து இந்த பிம்பங்கள் காணப்படுகின்றன. விண்மீனிலிருந்து புறப்படும் ஒளிக்கதிர் ஒவ்வொன்றும் வேறுவேறு பாதை வழியாக அந்த இடத்தை வந்தடைவதால், அந்தச் சிலுவையில் உள்ள ஒவ்வொரு பிம்பமும் பெருவிண்மீன் வெடிப்பின் வேறுவேறு தருணங்களைச் சித்தரிக்கின்றன என்றே கருத வேண்டும்.
 
முதல் முறை
 
வானியலாளர்கள் ஒரே வெடிப்பைத் திரும்பத் திரும்பக் காண்பதென்பது இதுதான் முதல் முறை. இது போன்ற அரிதான நிகழ்வுகளின் தன்மையைப் புரிந்துகொள்வதில் மட்டுமல்ல, கரும்பொருள் (டார்க் மேட்டர்), பிரபஞ்சம் விரிவடையும் வேகம் போன்ற அண்டவெளிப் புதிர்களைப் பற்றிப் புரிந்துகொள்வதிலும் வானியலாளர்களுக்கு இது உதவும்.
 
ஹப்பிள் தொலைநோக்கியால் பதிவுசெய்யப்பட்ட படங்களிலிருந்து இந்தப் பெருவிண்மீன் வெடிப்பின் படங்களைக் கண்டறிந்தவர் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர் பேட்ரிக் கெல்லி. “ஆச்சரியத்தில் எனக்குப் பேச்சே வரவில்லை. நான் சற்றும் எதிர்பாராத விஷயம் இது” என்கிறார் அவர். ‘சயின்ஸ்’ என்ற அறிவியல் இதழில் கடந்த மார்ச் மாதம் இந்தப் பெருவிண்மீன் வெடிப்பைப் பற்றிய அவரது ஆய்வுக் கட்டுரை வெளியானது.
 
“ஈர்ப்புவிசையின் காரணமாக ஒளி வளைவதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். பெருவிண்மீன் வெடிப்பையும் பார்த்திருக்கிறோம். உருப்பெருக்கப்பட்ட பெருவிண்மீன் வெடிப்பையும் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரே வெடிப்பின் பல பிம்பங்களைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை” என்கிறார் வானியற்பியலாளர் ராபெர்ட் கிர்ஷ்னர்.
 
பிரபஞ்சத்தில் நிகழும் மூர்க்கமான, அரிய நிகழ்வுகளுள் பெருவிண்மீன் வெடிப்பும் ஒன்று. ஒவ்வொரு விண்மீன் மண்டலத்திலும் அநேகமாக நூற்றாண்டுக்கு ஒன்று என்ற கணக்கில்தான் பெருவிண்மீன் வெடிப்புகள் நிகழும். விண்மீன் மண்டலங்களை விட மிகவும் பிரகாசமான ஒளியை உமிழக் கூடியவை அந்த நிகழ்வுகள். இந்த நிகழ்வுகளின்போது புதிய கிரகங்கள் உருவாகத் தேவையான ஆக்ஸிஜன், தங்கம் போன்ற அடிப்படைத் தனிமங்கள் உமிழப்படுகின்றன. இந்த நிகழ்வுகளின் எச்சங்களாக நியூட்ரான் விண்மீன்களோ கருந்துளைகளோ உருவாகின்றன.
 
விண்மீன் மண்டலமே ஆடியைப் போல..
 
“குறிப்பிட்ட இந்தப் பெருவிண்மீனுக்கும் ஹப்பிள் தொலைநோக்கிக்கும் இடையே விண்மீன் மண்டலங்களின் கொத்தொன்று (கேலக்ஸி கிளஸ்டர்) இருப்பதால்தான் ஒரே பெருவிண்மீன் வெடிப்பை நாம் நான்கு முறை பார்க்கிறோம்” என்கிறார் டாக்டர் கெல்லி. அடுத்த 10 ஆண்டுகளில் வானத்தின் வேறு ஏதாவதொரு பகுதியில் இந்தப் பெருவெடிப்பின் பிம்பம் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிம்பங்கள் தோன்றும் இடைவெளிகளில் நிலவும் கால தாமதத்தைக் கணக்கிடுவதன் மூலம் பிரபஞ்சம் எந்த வேகத்தில் விரிந்துகொண்டிருக்கிறது என்பதுகுறித்த அளவீடுகளை வானியலாளர்கள் மேலும் துல்லியப்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் டாக்டர் கெல்லி. அது மட்டுமல்லாமல், பிரபஞ்சத்துக்குப் பெருமளவு நிறையையும் ஈர்ப்புவிசையையும் வழங்கும் புதிரான கரும்பொருள்குறித்துப் புரிந்துகொள்வதும் இதனால் சாத்தியமாகும் என்று சொல்கிறார் டாக்டர் கெல்லி.
 
ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்கு இன்னும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது விண்வெளி. இந்த ஆண்டின் மார்ச் 14-ல் அவருக்கு 136 வயது நிறைவடைந்திருக்கிறது. அவருடைய மகத்தான சாதனையான பொதுச்சார்பியல் கோட்பாட்டின் நூறாவது ஆண்டு இது. அண்டவெளி, காலம், ஈர்ப்புவிசை போன்றவற்றைப் பற்றிய நமது அறிவை மாற்றியமைத்த கோட்பாடு அது. அந்தக் கோட்பாட்டின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் ‘சயின்ஸ்’ இதழின் சிறப்பிதழில்தான் டாக்டர் கெல்லியின் ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.
 
பருமனான ஒருவர் உட்காரும்போது மெத்தையில் எப்படிக் குழிவு ஏற்படுகிறதோ அதேபோல் நிறையும் விசையும் அண்டவெளியின் வடிவத்தை வளைக்கின்றன என்றும் இதனால் உருவாகும் விளைவுதான் ஈர்ப்புவிசை என்றும் ஒரு கருதுகோளை ஐன்ஸ்டைன் முன்வைத்தார். ஒளியையும் ஈர்ப்புவிசை வளைத்துவிடுவதும், சூரியன் போன்ற நிறைமிகுந்த பொருளுக்கருகில் ஒளி வளைந்து செல்வதும் இதன் விளைவுதான். 1919-ம் ஆண்டு நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது ஐன்ஸ்டைனின் இந்தக் கோட்பாடு நிரூபணமானது.
 
இந்த அடிப்படையில் அண்டவெளியே தொலைநோக்கிபோல் ஆகிவிடக் கூடும். இந்த அண்டவெளி தொலைநோக்கி எப்படி இயங்கும் என்பது விண்மீன்களெல்லாம் அமைந்திருக்கும் நிலைகளைப் பொறுத்தது. ஒரு விண்மீனின் ஒளியின் பாதையில் மேற்கண்ட ‘தொலைநோக்கி’சற்றே விலகி அமைந்திருந்தால் அந்த விண்மீனின் ஒளி, வளைவுகள் போன்று தோன்றும். நேர்க்கோட்டில் அமைந்திருந்தால் ‘ஐன்ஸ்டைன் வளையம்’என்றழைக்கப்படும் ஒளிவட்ட மாக அந்தத் தொலைதூர விண்மீன் தோன்றும், அல்லது தனித்தனிப் பிம்பங்களாக ‘ஐன்ஸ்டைன் சிலுவை’போல் தோன்றும்.
 
ஹப்பிளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்
 
ஒட்டுமொத்த விண்மீன் மண்டலக் கூட்டங்களையும், விண்மீன் மண்டலக் கொத்துகளையும் தொலை நோக்கிபோல் கொண்டு அவற்றுக்கு அப்பால் மிகத் தொலைவில் இருக்கும் மங்கலான பொருட்களைப் பார்ப்பது எப்படி என்பதை வானியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த வழிமுறை இல்லை என்றால், தொலைதூரப் பொருட்களெல்லாம் காலத்தின் மூட்டத்தில் தொலைந்துபோய்விட நேரிட்டிருக்கும் அல்லவா!
 
ஹப்பிள் விஞ்ஞானிகள் இந்த உத்தியை ‘கிளாஸ்’ என்ற ஆய்வில் சமீப காலமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் விண்மீன் மண்டலக் கொத்துகளைத் துழாவி, பிரபஞ்சத்திலேயே மிகவும் நிறை கொண்டதும், ஒளியை மிக அதிக அளவில் வளைக்கவும் உருப்பெருக்கவும் கூடியதுமான விண்மீன் கொத்துகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உத்தியின் மூலம் கடந்த காலத்தை ஊடுருவிப் பார்ப்பதில் ஹப்பிள் ஏற்கெனவே கொண்டிருந்த அசாத்தியமான திறனை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், முன்னிலும் அதிக அளவில் தொலை தூரத்தைப் பார்க்கும் திறன் ஹப்பிளுக்குக் கிடைத் திருக்கிறது. பிரபஞ்சம் உருவாகி 50 கோடி ஆண்டுகளே ஆகியிருந்த காலகட்டத்தில் இருந்த விண்மீன் மண்டலத்தை இந்த உத்தியின் மூலம் பார்க்க முடிந்திருக்கிறது.
 
ஒரு விண்மீன் ஒரு முறைதான் இறக்கும். ஆனால், ஐன்ஸ்டைனின் தொலைநோக்கி மூலம், எங்கே பார்க்க வேண்டுமோ அங்கே சரியாகப் பார்த்தோமென்றால், அந்த விண்மீன் மரண ஓலமிடுவதை என்றென்றுமே காணலாம்.
 
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.