அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கோப்புப்படம்
கட்டுரை தகவல்
,கிறிஸ் பார்ட்ரிட்ஜ்
பிபிசி
20 மார்ச் 2026, 09:50 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இரான் உடனான போரில் அமெரிக்கா "திட்டமிட்டபடியும்", "இலக்கின் மீதும்" சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான கால வரம்பை வழங்கவில்லை.
நேற்று செய்தியாளர்கள் வலியுறுத்திக் கேட்டபோது, "ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை." எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா தற்போது 7,000 இரானிய இலக்குகளைத் தாக்கியதாகக் கூறும் அவர், "படைகளுக்கு தாங்கள் எதை தாக்குகிறோம், ஏன் தாக்குகிறோம் என்பது பற்றிய தெளிவான உணர்வு இருக்கிறது." என்றார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எரிந்த கட்டடம்
பூமிக்கு அடியில் இரானின் ஆயுதங்கள்
பீட் ஹெக்செத் கூற்றுப்படி அமெரிக்கப் படைகளால் மட்டுமே 7,000 இரானிய இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.
குறிப்பிடத்தக்க விமானப்படை மற்றும் கடற்படை இல்லாத நிலையில், இந்த ஏவுகணைகளையும் டிரோன்களையும்தான் இரான் தன்னால் இயன்ற வழிகளில் பாதுகாக்க முயல்கிறது.
இரானின் நிலப்பரப்பு மற்றும் பல தசாப்த கால திட்டமிடல் காரணமாக, இந்த ஆயுதங்களின் இருப்பு பூமிக்கு அடியில் ஆழமாக அல்லது உண்மையில் மலைகளின் பக்கவாட்டில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன.
இந்த இலக்குகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வது கடினம், எனவேதான் இந்த வாரம் பயன்படுத்தப்பட்ட 5,000 பவுண்ட் (2,270 கிலோ) எடை கொண்ட ஜிபியு-72 மேம்பட்ட ஆழமாக ஊடுருவி செல்லும் குண்டு உட்பட பல்வேறு வகையான பங்கர்-பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பட மூலாதாரம்,USAF
படக்குறிப்பு,ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும்
உற்பத்தி அழிக்கப்பட்டாலும் தொடரும் தாக்குதல்
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், "இரானின் முழு பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தித் திறன், அந்த ஏவுகணைகளின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கும் ஒவ்வொரு நிறுவனமும், செயல்பாட்டு ரீதியாக வீழ்த்தப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன. இரான் முழுவதும் உள்ள கட்டடங்கள், வளாகங்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திக் கூடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன," என்றார்.
இந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் நிறுத்தப்பட்டாலும், எஞ்சியிருப்பவை இன்னும் ஏவப்படுவது தெளிவாகத் தெரிகிறது.
பட மூலாதாரம்,USAF
படக்குறிப்பு,பங்கர்-பஸ்டர் குண்டு
எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் உளவுத் தகவல்கள் மற்றும் விமானங்கள் மூலம், நடமாடும் ஏவுகணை ஏவுதளங்களை "தேடிக் கண்டுபிடித்து அழிப்பதிலும் கவனம் செலுத்தும்.
1991-ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில், இஸ்ரேலை அச்சுறுத்திக் கொண்டிருந்த சதாம் உசைனின் ஸ்கட் ஏவுகணைகளை அழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையின் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் மற்றும் எஃப்-16 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்தப் பணிகள் 'ஸ்கட் ஹண்டிங்' என்று அழைக்கப்பட்டன. அதே உத்திகள் இன்றும் இரானில் பயன்படுத்தப்படுகின்றன.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல்
2021-இல் பரிசோதிக்கப்பட்ட குண்டு
2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட ஜிபியு-72 குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது.
இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, "கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது." என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது.
ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cp86n3l35e1o
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.